17 ஜனவரி 2012

ச்சே, சோ, ச்சை!



யாரையாவது நமக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்களைப் பற்றி நினைக்கும்போதே 'ச்சே இவனா? இவன் சங்காத்தமே வேணாம்' என்ற சலிப்பு நம் மனதில் எழும். அதேபோல் யாருடைய பேச்சையாவது கேட்க விருப்பமில்லை என்றால் 'ச்சை இவனும் இவன் பேச்சும்' என்று கூற தோன்றும்.



இந்த இரண்டு வசவு சொற்களும் (எழுத்துக்கள் என்பதுதான் சரி) வருகிற அதே அகர வரிசையில் வருகிற எழுத்தையே தன்னுடைய பெயராக வைத்திருப்பவர் 'சோ' என்கிற ராமசாமி! எத்தனை பொருத்தம்!



இவர் தன் திருவாயை திறந்தாலே 'ச்சை' என்றோ 'ச்சே' என்றோ சொல்ல தோன்றுவது இயற்கைதானே!



அவருடைய பத்திரிகையான 'துக்ளக்' - அவருடைய பெயருக்கு ஏற்ற பெயர்தான் அவருடைய பத்திரிகைக்கும் - சார்பாக சென்னையில் நடைபெற்ற விழாவில் தன் திருவாய் மலர்ந்திருக்கிறார். இந்த அற்புத சொற்பொழிவை மீண்டும்  மறுஒளிபரப்பு செய்து தங்களுடைய கட்டுக்கடங்கா மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது அம்மையாரின் தொலைக்காட்சி!



அவர் பேசும்போது, அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒருவேளை தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் வேறு எந்த கட்சியையாவது ஆதரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் பிரதமர் பதவிக்கு அம்மையாரை பரிந்துரைக்க வேண்டுமாம். ஏனாம்? அம்மையாருக்கு ஐந்து மொழிகள் தெரியுமாம். இது தேசிய ஒருமைப்பாட்டுக்கு மிகவும் உதவுமாம். மேலும், எதையும் படித்தவுடனே புரிந்துக்கொள்ளக் கூடிய திறமையும் உண்டாம்.



இந்த இரண்டு தகுதிகளையும் ஒருங்கே கொண்ட தலைவர் இந்திய தேசிய அரசியலிலேயே அம்மையாரை விட்டால் யார் இருக்க முடியும்? மேலும், அடுத்த பிரதமரை நிர்ணயிக்கக் கூடிய அளவுக்கு அவருடைய கட்சியும் கூடை நிறைய பாராளுமன்ற இடங்களை பெற்றிருக்கும் என்பது நிச்சயமாம். ஆகவே அவரை விட்டால் பிரதமராக மிகவும் தகுதி வாய்ந்த தலைவர் வேறு யாரும் இருக்க முடியுமா என்பதுதான் சோ அவர்களின் வாதம்.



இதை படித்ததும் எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய வீட்டில் வேலை செய்து வந்த ஒரு House Maid - பச்சையாக சொல்ல வேண்டுமென்றால் 'வேலைக்காரி'யின் நினைவு வருகிறது. நான் குடியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பில் சுமார் நாற்பது குடியிருப்புகள். அது ஒரு குட்டி பாரதம் என்று கூட கூறலாம். நாட்டிலுள்ள பெரும்பாலான மொழி பேசுகின்றவர்கள் குடியிருந்தனர். அதில் பலருடைய வீட்டில் பணியாற்றிய அந்த பெண்ணும் நாளடைவில் ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் சரளமாக பேச தெரிந்து வைத்திருந்தாள், ஆங்கிலத்தை தவிர. 'இந்த இங்கிலீசுதாங்க பேச வரமாட்டேங்கிது.. சொன்னா பிரியுது...ஆனா பேசினா தஸ்சு, புஸ்சுன்னு காத்துதான் வருது. அது மட்டும் வந்துருச்சின்னா..' என்று இழுப்பாள். எட்டாவது வரை படித்திருந்ததால் எதையும் கோடி காட்டினால் போதும் 'டக்' என்று புரிந்துக்கொள்வாள். வேலையில் படு சுட்டி!



நம்முடைய சோவின் கூற்றுப்படி அவளும் ஒருவழியில் பிரதமராக தகுதி உள்ளவர்தான்!!



தென்னிந்திய மொழிகளில் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்துடன் ஆங்கிலத்திலும் சரளமாக பேசக் கூடிய நடிக, நடிகைகள் இன்றைய தமிழ் திரையுலகில் பலர் இருக்காங்க சோ சார்! ஏன் ஒருவேளை நம்ம மன்சூர் அலி கானுக்கு கூட இது தெரிஞ்சிருக்கலாம். அவருக்கும் ஏற்கனவே தேர்தல்ல நின்னு ஜெயிக்கலன்னாலும் தோத்த அனுபவம் இருக்கே!



அம்மையாரும் ஒரு காலத்தில் நடிகையாக இருந்தவர்தானே? பிறப்பால் கன்னடர், பிழைப்புக்காக தமிழ் நாட்டுக்கு வந்தவர். பணத்திற்காக தெலுங்கிலும், மலையாளத்திலும் நடித்திருப்பார்.பத்தாவது வரை ஆங்கில பள்ளியில் படித்தவர். ஐந்து மொழிகளிலும் பேசுவதற்கு இந்த அனுபவம் போதுமே.



பல மொழிகளில் பேசக் கூடிய திறமை மட்டுமே ஒருவருக்கு ஒரு நாட்டின் பிரதமராக தகுதியை ஏற்படுத்தி விடுமா? அதை விட வேடிக்கை, அம்மையார் எதையும் சொன்னவுடன் புரிந்துக்கொள்ளக் கூடியவர் என்றதுதான். அதுவும் அத்வானி, மோடி ஆகியோரை வைத்துக்கொண்டே இப்படி பேசுவது உண்மையிலேயே சத்யராஜ் 'லொள்ளை' விட கொஞ்சம் ஓவர்தான்.



இந்த வயசுல இவருக்கு அம்மையாருக்கு இந்த அளவுக்கு ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியம் என்ன? ஒரே இனம், குலம், கோத்திரம் என்பதாலா?



முதலில் அம்மையார் தமிழகத்தை நாட்டின் முன்னனி மாநிலமாக்கட்டும். பிறகு பிரதமர் பதவியைப் பற்றி யோசிக்கலாம். இதே போல் 2001-2006ல் சிந்தித்ததன் விளைவு அனைவரும் அறிந்ததுதானே.



அம்மையாருக்கு ஒரு வேண்டுகோள். இம்மாதிரியான கோமாளிகள் பேச்சை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிடுவதுதான் நல்லது. சு.சாமியை நம்பி நட்டாற்றில் இறங்கிய அனுபவம் இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவரையும் விட கோமாளிதான் இந்த ச்சே, சோ, ச்சை ரா.சாமி! இரண்டு பேருமே 'சாமி'கள்தான் என்பதே போதும் இவர்களை நம்பி ஆற்றில் இறங்கலாகாது என்பதற்கு!!



******************

12 கருத்துகள்:

  1. உங்கள் மையக் கருத்தில் எனக்கு கருத்து இல்லை, ஆனால் தகுதி அடிப்படை என்று குறிப்பிடும் போது கருணாநிதிக்கும் ஜெவிற்கும் பெரிய அளவில் வேறுபாடு இல்லை.

    ஜெ வெறும் நடிகை என்ற தகுதியை மட்டுமே வைத்திருந்து ஒரு முறைக்கு மேல் அவரால் முதல்வர் பதவியில் நீடித்திருக்க முடியாது.

    வழக்கம் போன்ற பொதுப் புத்தியில் ஒரு நடிகையால் நாடாளமுடியுமா ? என்ற கேள்வியின் எள்ளலாகத்தான் உங்கள் பதிவைப் பார்க்கிறேன்.

    சோ ஜெவை புகழ்வது அவருடைய பார்பனிய நிலைப்பாடு என்பது புரிகிறது, ஆனால் ஜெவின் தகுதி பற்றிய கேள்விகள் எந்தவிதமான நிலைப்பாடாக இருக்கும் என்று சொல்லுங்கள்.

    ஒரு வேளை ஜெவுக்கு பிரமதராகும் வாய்ப்புக் கிடைத்தால் நாமெல்லாம் நாட்டை விட்டு ஓடிவிடுவோமா ?

    :)

    பதிலளிநீக்கு
  2. ஒரு வேளை ஜெவுக்கு பிரமதராகும் வாய்ப்புக் கிடைத்தால் நாமெல்லாம் நாட்டை விட்டு ஓடிவிடுவோமா ?//

    நிச்சயம் மாட்டோம். ஒரு நாட்டின் பிரதமர் பதவிக்கு தகுதியானவை இவைதான் என்று எதையும் வரையறுக்க முடியாதுதான். ஆனால் பன்மொழி புலமை ஒருவருக்கு இருக்கிறது என்பதை மட்டுமே ஒரு தகுதியாக் கொள்ள முடியுமா என்ன?

    அரசியல் முதிர்வே இல்லாத ஒருவர் - அதாவது தன்னுடைய அரசியல் எதிரிகளை எல்லாம் தன்னுடைய தனிப்பட்ட எதிரியாக(personal enemey)பார்க்கும் ஒருவர், முந்தைய ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக பல நல்ல திட்டங்களையும் கிடப்பில் போடும் அல்லது ஒதுக்கி தள்ளும் ஒருவர், தன்னுடனேயே வசித்து வந்த ஒருவர் தமிழகத்தையே சூறையாடிக்கொண்டிருக்கிறார் என்று சுமார் இருபதாண்டு காலம் கழித்து கண்டுணரக்கூடிய ஒருவர்.....

    இத்தகைய குணாதிசயங்களைக் கொண்ட ஒருவர் பிரதமராக தகுதியற்றவர் என்பது என்னுடைய மட்டுமல்ல அரசியல் சாராத பலருடைய வாதமும் கூட...

    பதிலளிநீக்கு
  3. So,இவரு சசிகலா விவகாரம் மட்டும் பேசமாட்டேன்னு ஆரம்பத்துலயே சொல்லிருவாராம்.நாம கேக்கக் கூடாதாம் :))

    ச்சே,சோ,ச்சை - ரொம்ப சரி.

    பதிலளிநீக்கு
  4. //அரசியல் முதிர்வே இல்லாத ஒருவர் - அதாவது தன்னுடைய அரசியல் எதிரிகளை எல்லாம் தன்னுடைய தனிப்பட்ட எதிரியாக(personal enemey)பார்க்கும் ஒருவர், //

    மன்மோகன் சிங்கிற்கு அதெல்லாம் உண்டு என்று நம்பும் உங்கள் நேர்மை எனக்கு புடிச்சிருக்கு.

    :)

    பதிலளிநீக்கு
  5. //இருபதாண்டு காலம் கழித்து கண்டுணரக்கூடிய ஒருவர்.....//

    இருபது ஆண்டுகாலம் கழித்து இலங்கைத் தமிழர்களை விடுதலை புலி ஒழிப்பு என்ற பெயரில் பழிவாங்கியவர்களை நேர்மையான ஆட்சியாளர்கள் என்று நினைக்கிறீர்களா ?

    பதிலளிநீக்கு
  6. மன்மோகன் சிங்கிற்கு அதெல்லாம் உண்டு என்று நம்பும் உங்கள் நேர்மை எனக்கு புடிச்சிருக்கு.//

    மன்மோகன் சிங் ஒரு ineffective PMதான் ஒப்புக்கொள்கிறேன். எதிலும் உடனே துணிந்து முடிவெடுக்க முடியாதவர், சோனியாவை எதிர்க்க துணிவில்லாதவர், சக அமைச்சர்களை அடக்கி ஆளும் ஆளுமை திறனில்லாதவர்... இப்படி அவருடைய ஆளுமை குறைபாட்டைப் பற்றி கூறிக்கொண்டே போகலாம்... ஆகவேதான் இதுவரை இல்லாத அளவுக்கு நாடாளுமன்றத்தைக் கூட ஒழுங்காக நடத்திச்செல்ல முடியாமல் ஒரு ஆளுங்கட்சி தடுமாறுகிறது.. ஆனால் அம்மையாரின் குறைபாடாக நான் குறிப்பிட்டிருந்தவை மன்மோகன் சிங்கிற்கு இருப்பதாக நிச்சயம் நான் கருதவில்லை...

    பதிலளிநீக்கு
  7. இருபது ஆண்டுகாலம் கழித்து இலங்கைத் தமிழர்களை விடுதலை புலி ஒழிப்பு என்ற பெயரில் பழிவாங்கியவர்களை நேர்மையான ஆட்சியாளர்கள் என்று நினைக்கிறீர்களா ?//

    இதையொரு பழிவாங்கும் படலமாக நான் ஒருபோதும் கருதியதில்லை. மேலும் சிங்கள இனவெறியர்களின் செயல்பாட்டுக்கு இந்தியா ஒருபோதும் தார்மீக பொறுப்பேற்க முடியாது என்பதும் என்னுடைய கருத்து. இதில் நான் பல பதிவுலக நண்பர்களிடமிருந்து முரண்படலாம்.. ஆனால் அதுதான் உண்மை.

    பதிலளிநீக்கு
  8. மத்தியில் ஆளுங்கட்சி தலைவர்களும் எதிர்க்கட்சி தலைவர்களும் கைகுலுக்கிக் கொள்கிறார்கள். ஒரே மேடையில் அமர்ந்திருக்கிறார்கள். இந்த நிலை தமிழ்நாட்டில் இல்லையே. ஜெ. வந்தபிறகுதான் தமிழ்நாட்டில் அரசியல் நாகரீகம் என்பதே இல்லாமல் போய்விட்டது.

    பதிலளிநீக்கு
  9. மத்தியில் ஆளுங்கட்சி தலைவர்களும் எதிர்க்கட்சி தலைவர்களும் கைகுலுக்கிக் கொள்கிறார்கள். ஒரே மேடையில் அமர்ந்திருக்கிறார்கள். இந்த நிலை தமிழ்நாட்டில் இல்லையே.//

    மிகச் சரியாக சொன்னீர்கள். ஆனால் இந்த விஷயத்தில் முகவும் விதிவிலக்கல்ல. ஜெ விஷயத்தில் அவரும் அப்படித்தான் நடந்துக்கொண்டு வருகிறார்.

    பதிலளிநீக்கு
  10. தன் வீட்டில் நடந்தவைகளையே தனக்கு தெரியாது என்று சொல்கிறவர் /தான் போட்ட கையேழ்த்தையே இல்லை என்று
    மறுத்தவர் .கவர்னர் சென்னாரெட்டி என் கையை பிடித்து இழுத்தார் என்று எழுவது
    வயது முதியவரை பற்றி நாகூசாமல் சொன்னவர் .சட்ட சபையில் தன் உடையை தானே கலைத்து கொண்டு துரைமுருகன் சேலையை இழுத்தார் என்று நாடகமாடியவர் .விரிவு அஞ்சி இத்துடன் போதும் .இதெல்லாம் கோவி கண்ணன் பார்வையில் மிக பெரிய தகுதிதான் கோவியார் வாழ்க

    பதிலளிநீக்கு
  11. //இதெல்லாம் கோவி கண்ணன் பார்வையில் மிக பெரிய தகுதிதான் கோவியார் வாழ்க//

    பிரச்சனை பிராடு யார் கருணாநிதியா ஜெ வா என்பது அல்ல. பிரதமர் ஆகும் தகுதி பற்றியது. கருணாநிதியின் மூன்று முறை முதல்வராக ஆன வயதை விட ஜெ மூன்று முறை முதல்வரானதற்கு எடுத்துக் கொண்ட வயது குறைவு தான். மேலும் ஜெ அரசியல் பின்புலம் எம்ஜிஆர் தவிர்த்து வேறு யாரும் கிடையாது.

    இப்ப உள்ள பிரதமருக்கு இருக்கும் தகுதியைவிட ஜெ தகுதியானவர் தான். நீங்கள் வேண்டுமானால் ஸ்டாலினுக்கு அந்த தகுதி இருக்கு என்று சொல்லுங்களேன். முதலில் கருணாநிதி முதல்வர் வேட்பாளருக்கு வழிவிடட்டும் பிறகு பிரதமர் ஆவது பற்றிப் பேசலாம்.

    நான் இங்கே ஜெவுக்கு சான்றிதழ் வழங்கவில்லை, அதையெல்லாம் மக்கள் கொடுத்து தான் மூன்றாம் முறை முதல்வர் ஆகி இருக்கிறார். வேண்டுமானால் மக்கள் சோத்தால் அடித்தப் பிண்டங்கள் என்று கருணாநிதி பாணியில் வசனம் பேசுங்கள்

    பதிலளிநீக்கு
  12. //மேலும் சிங்கள இனவெறியர்களின் செயல்பாட்டுக்கு இந்தியா ஒருபோதும் தார்மீக பொறுப்பேற்க முடியாது என்பதும் என்னுடைய கருத்து. //
    அன்புள்ள டிபிஆர் அவர்களுக்கு,
    வங்க தேசம் உருவாகியதில் இந்தியாவின் பங்கினைப் பற்றித் தங்கள் கருத்தைத் தயவுசெய்து எழுதுங்கள்

    பதிலளிநீக்கு