10 மார்ச் 2008

விவசாயக் கடன் தள்ளுபடி - விளைவுகள்

'குழந்தைகள், ஏட்டில் கணக்கை தவறாக எழுதினால் அதை அழித்து மாற்றிவிடுகிறோம். நோட்டில் கணக்கை தவறாக எழுதினால் ரப்பர் வைத்து அழித்து விடுகிறோம். அதே மாதிரி, விவசாயிகளின் கடன்களை ஒரு முறை அழித்துவிட்டு, அவர்களுக்கு புதுவாழ்வு தரக்கூடாதா?'

இது மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் கேள்வி.

விவசாயிகளுக்கு புதுவாழ்வு தரவேண்டும் மத்திய அரசு நினைப்பதில் தவறேதும் இல்லை. அதுவும் தேர்தல் நெருங்கும்போது.

ஆனால் ரூ.60000/- கோடி சுமையை வங்கிகளின் தலையில் சுமத்த வேண்டுமா என்பதுதான் கேள்வி.

புதுவாழ்வு தர நினைப்பது அரசு. ஆகவே அதற்கு தேவையான தொகையையும் பட்ஜெட்டில் ஒதுக்கியிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் வங்கிகளை நீங்கள் வழங்கிய கடனை உங்கள் புத்தகங்களிலிருந்து ரப்பர் கொண்டு அழித்துவிடுங்கள் என்றால் அது ஒரு பொறுப்பற்ற செயல் என்றே சொல்ல தோன்றுகிறது.

1980-90களில் லோன் மேளா நடத்தில சீரழிந்துப்போன வங்கிகளின் - குறிப்பாக இந்தியன் வங்கி போன்ற அரசு வங்கிகள் - முதலீட்டை மேம்படுத்த அரசே மான்யமாக ஆயிரம் கோடிக்கும் மேலாக ஒதுக்க வேண்டியிருந்ததை சிதம்பரம் அவர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. வாராக் கடனை எழுதி தள்ளி தங்களுடைய முழு முதலீட்டையுமே இழந்து நின்ற அரசு வங்கிகள் ஒன்று, இரண்டில்லை. க்டந்த பத்து ஆண்டுகளில் இதுவரை சுமார் ரூ.20000/- கோடிக்கு மேலாக அரசு வங்கிகளின் முதலீட்டை வலுப்படுத்த மத்திய அரசு ஒதுக்க வேண்டி வந்ததையும் சிதம்பரம் மறந்திருக்க வாய்ப்பில்லை.

அப்படியிருந்தும் இப்போது எழுதி தள்ளவேண்டிய ரூ.60000/- கோடி கடனை வங்கிகள் மீது சுமத்துவது எந்த அளவுக்கு புத்திசாலித்தனம் என்று விளங்கவில்லை.

எழுதித் தள்ளுவது என முடிவெடுத்துவிட்டு அதற்கு என்ன செய்யலாம் என்று இனிமேல்தான் திட்டமிடவேண்டும் என்றும் சிதம்பரம் அவர்கள் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது.

இவருடைய அறிவிப்பு வந்ததிலிருந்தே பங்கு சந்தையில் வங்கிகளின் பங்கு மதிப்பு குறைந்துகொண்டே போகிறது. சரியாக திட்டமிடாமல் அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் தாங்கள் ஈட்டவிருக்கும் லாபத்திலிருந்து குறிப்பிட்ட விழுக்காடுவரை வங்கிகள் இந்த தள்ளுபடியை எழுதித்தள்ளலாம் (writeoff)என்பது போன்ற முடிவை அரசு எடுக்குமானால் அதன் விளைவு மிகவும் மோசமாக இருக்கும். அத்தகைய 'எழுதித்தள்ளுவதற்கு' வருமான வரி விலக்கு என்ற ஒரு சலுகையையும் வங்கிகளுக்கு அரசு அளிக்க முன்வரலாம். ஆனால் அதுவும் ஒரு அரசுக்கு ஒருவகையில் இழப்பே.

எப்படியோ, கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதைதான் இதுவும்.