09 டிசம்பர் 2011

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு 3

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால் நாட்டிலுள்ள சிறு மற்றும் நடுத்தர சில்லறை வணிகர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழக்க வாய்ப்புள்ளது என்பதுதான் இந்த திட்டத்தை எதிர்க்கும் பலருடைய வாதம்.




இது எந்த அளவுக்கு உண்மை?



அன்னிய முதலீட்டுடன் இந்தியாவில் நுழைய விழையும் மேலை நாட்டு நிறுவனங்களால் வால்மார்ட்,டெஸ்கோ,மெட்ரோ தங்களுடைய முதன்மை நுகர்வோர்களாக கருதப்படுபவர்கள் நடுத்தர மற்றும் நடுத்தரத்திற்கும் மேலுள்ள நுகர்வோர்களும் மேல்தட்டு மக்கள் எனப்படும் வசதிபடைத்த நுகர்வோர்களே தவிர இன்று நாட்டில் கிராம மற்றும் சிறு நகரங்களில் செயல்பட்டு வரும் தெருமுனை கடைகளை நம்பி வாழும் நடுத்தரத்திற்கும் சற்று கீழுள்ள அல்லது வறுமை கோட்டுக்கு கீழேயுள்ள வறிய நுகர்வோர்களை அல்ல.



அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் நுழைய விரும்புவது பொது சேவை செய்வதற்காக அல்ல என்பதும் உண்மை. அவர்களுக்கு சமீப காலங்களில் தாராளமாக செலவு செய்ய விரும்பும், உபரி வருமானமுள்ள நடுத்தரத்திற்கு மேலுள்ள மற்றும் பணக்கார நுகர்வோர்களுடைய வசம் இருக்கும் உபரி வருமானத்தை ஈர்ப்பதன் மூலம் தங்களுடைய வணிகத்தை பெருமளவு பெருக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதால்தான் எப்படியாவது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் முதலீடு செய்ய வேண்டும் என முன்வருகின்றனர்.



அப்படி நுழைந்தவர்கள்தான் கோக்கோ கோலா, பெப்சி, கெண்டக்கி சிக்கன், மெக்டனோல்ட்,ஆதிதாஸ், ரீபோக்,சோனி போன்ற நிறுவனங்கள். அவர்கள் தங்களுடைய பெயரிலேயே கடைகளை திறக்க இன்றைய விதிமுறைகள் தடுப்பதால் இந்திய நிறுவனங்களுடைய இணைந்தனர். ஆக, இதுவும் ஒருமுறையில் அன்னிய முதலீடுதான். அதாவது மறைமுக முதலீடு.



அப்போதெல்லாம் வாய் மூடி மவுனம் காத்த இன்றைய எதிர்க்கட்சிகள் இப்போது ஏன் கூப்பாடு போடுகின்றன என்பதும் இந்த உத்தியை ஆதரிப்பவர்களுடைய கேள்வி.



தங்களுடைய முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என்று கூறிவந்த காங்கிரஸ் நாடாளுமன்றத்தை நடத்த முடியாமல் போனதால் வேறு வழியின்றி இதை தாற்காலிகமாக நிறுத்தி வைப்பதென தீர்மானித்துள்ளது.



இதனால் தாங்கள் ஏதோ பெரிதாக சாதித்துவிட்டதாக கருதும் எதிர்க்கட்சிகள் இதை முழுவதுமாக கைவிட வேண்டும் என்றும் கூறி வருகின்றன என்றாலும் அவர்களுடைய உண்மையான நோக்கம் அதுவல்ல. தமிழக முதல்வர் கூறியுள்ளதுபோன்று மைனாரிட்டி அரசை நடத்திவரும் காங்கிரஸ் எப்படி தங்களை கலந்தாலோசிக்காமல் இப்படியொரு முடிவை எடுக்கலாம் என்பதுதான். இது வெறும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கிடையிலுள்ள ஈகோ பிரச்சினையே தவிர இந்திய வணிகர்கள் மீதுள்ள பாசத்தாலோ அக்கறையாலோ அல்ல என்பது நாளடைவில் தெரிய வரும்.



அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால் நாட்டுக்கு நல்லதல்ல என்றால் எதற்காக ஆசிய நாடுகளான சீனா, தைவான், மலேசிய போன்ற நாடுகள் இதை தாராளமாக அனுமதித்துள்ளன என்பது காங்கிரசின் கேள்வி. இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் பதிலளிக்காமல் சமாளிக்கின்றன.



இன்று நாட்டில் விலைவாசி உயர்வு விகிதத்தை (Inflation rate) மிகவும் பாதிப்பது உணவுப் பொருட்கள்தான் என்றால் மிகையல்ல. இதற்கு முக்கிய காரணம் விவசாயப் பொருட்கள் நேரடியாக நுகர்வோரை சென்றடைய விடாமல் தடுக்கும் இடைத்தரகர்கள்.



உதாரணத்திற்கு நான் வசிக்கும் சென்னை புறநகர் பகுதியான ஆவடியை எடுத்துக்கொள்கிறேன். இந்த நகராட்சி சென்னையிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இங்கு சென்னையிலும் கூட காணமுடியாத பெரிய காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சில்லறை காய்கறி கடைகள் மார்க்கெட்டிற்கு உள்ளும் வெளியிலும் இயங்கி வருகின்றன. இதற்கு நேர் எதிரிலில் இப்போதும் வீசை கணக்கில் காய்கறிகளை மொத்த விலைக்கு விற்கும் ஒரு சந்தையும் உள்ளது. இது ஆவடியை சுற்றிலும் அமைந்துள்ள கிராமங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்களுடைய விளை பொருட்களை நேரடியாக சிறு வியாபாரிகளுக்கு விற்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இங்கு நடப்பது அதுவல்ல. இங்கு கடை வைத்திருக்கும் இடைத்தரகர்கள் லாரிகளில் ஏற்றி வரும் காய்கறிகளை இடைமறித்து மொத்தமாக பேரம் பேசி வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதை காணலாம்.



இதே பகுதியில் தனியார் நடுத்தும் நடுத்தர வணிக கடைகள் இரண்டும், பொன்னு ஸ்டோர்ஸ் எனப்படும் ஐந்து மாடி வணிக வளாகமும், ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடையும் அமைந்துள்ளது.



மொத்த சந்தையில் வீசை கணக்கில் சிறு வியாபாரிகளுக்கு விற்கப்படும் விலையை காட்டிலும் ஒரு கிலோவுக்கு நான்கிலிருந்து ஐந்து ரூபாய் குறைவாக ரிலையன்ஸ் நிறுவனத்தால் விற்க முடிகிறது என்றால் இதன் பொருள் என்ன? ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்தே மொத்தமாக கொள்முதல் செய்வதால் அவர்களுடைய லாபத்தையும் சேர்த்தாலும் சந்தை விலையை விடவும் குறைவாக விற்க முடிகிறது.



ரிலையன்ஸ், ஃபுட் வேர்ல்ட் போன்ற நிறுவனங்களால் இந்த விலைக்கு விற்க முடிகிறதென்றால் இவர்களை விட பன்மடங்கு பொருளாதார பலமும் நிர்வாக திறனும் கொண்ட பன்னாட்டு நிறுவனங்களால் எவ்வளவு மலிவாக பொருட்களை வழங்க முடியும்? உணவுபொருட்களின் தட்டுப்பாட்டுக்கும் விலை உயர்வுக்கும் முக்கியமாக காரணமாக விளங்கும் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க பன்னாட்டு நிறுவனங்களால் மட்டுமே முடியும்.



தொடரும்...







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக