03 மார்ச் 2011

தேர்தல் 2011 - அஇஅதிமுக தேதிமுக கூட்டணி

தேர்தல் 2011 - அஇஅதிமுக தேதிமுக கூட்டணி

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முயன்று தோல்வியுற்ற நடிகர் விஜயகாந்த் இந்த தேர்தலில் அஇஅதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் தவறில்லை என்று இப்போது முடிவு செய்திருக்கிறார். அவருடைய தற்போதைய ஒரே குறிக்கோள் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதுதான். ஊழல் இல்லாத ஆட்சியை என்னால் மட்டுமே தரமுடியும் என்று நேற்றுவரை கோஷமிட்டுக்கொண்டிருந்தவர் வருமானத்திற்கு மீறி சொத்து குவித்த வழக்கில் தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கும் தலைவியுடன் கூட்டு சேர்வது இன்றைய அரசியல் விநோதங்களில் ஒன்று.

தமிழகத்தில் நடைபெற்ற கடந்த சட்டமன்ற தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் பெரும்பான்மை இடங்களில் தேதிமுக பெற்ற வாக்குகளை சம்பந்தப்பட்ட தொகுதியில் இரண்டாவதாக வந்திருந்த அஇஅதிமுக கூட்டணியின் வேட்பாளருடைய வாக்குகளுடன் சேர்த்து கணக்கிட்டால் வெற்றிபெற்றவர் நிச்சயம் தோற்றிருப்பார் என்கிறது இந்து தினத்தாளில் இன்று வெளியாகியுள்ள ஒரு ஆய்வறிக்கை.

உண்மைதான். அதுமட்டுமல்லாமல் பல தொகுதிகளில் பாமகவை, ஏன் சில தொகுதிகளில் அஇஅதிமுகவையும் கூட மூன்றாம் இடத்துக்கு தேதிமுக தள்ளியதும் உண்மை.

ஆனால் அந்த இரண்டு தேர்தல்களிலும் தேதிமுகவுக்கு கிடைத்த வாக்குகளில் பெரும்பாலானவை இரண்டு திராவிட கட்சிகள் மீதும் வெறுப்பு கொண்டவர்கள் மற்றும் நடுநிலையாளர்கள், குறிப்பாக படித்த இளைஞர்களின் வாக்கு என்பதை மறுக்கவியலாது. என்னைப் போன்ற உண்மையான காங்கிரஸ்காரர்கள் தங்களுடைய கட்சியினர் மீதே வெறுப்புகொண்டு அதை வெளிக்காட்ட அளித்த வாக்குகளும் இதில் அடக்கம். ஆகவேதான் இரண்டு தேர்தல்களிலும் எந்த ஒரு தொகுதியையும் (ஒரேயொரு சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்றாலும் நடிகர் சட்டமன்ற கூட்டங்களுக்கே எத்தனை நாள் சென்றிருந்தார், என்ன பேசினார் என்பது அவருக்கு வாக்களித்த தொகுதி வாக்காளர்களை கேட்டால் தெரியும்!) கைப்பற்றவில்லை என்றாலும் தன்னுடைய கட்சி தனித்து நிற்பதையே வாக்காளர்கள் விரும்புகின்றனர் என்பது தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன என அறிக்கைவிட்டார் நடிகர்! அவருடைய அறிக்கையில் ஓரளவு உண்மையும் இருந்ததாக அப்போது நான் உணர்ந்தேன்.

ஆனால் ஊழலை ஊழலுக்கு பெயர்பெற்றவரால்தான் ஒழிக்க முடியும் என நினைத்தாரோ என்னவோ தங்களுடைய இரு கட்சிகளுக்கும் பொதுவான எதிரியான திமுகவை ஒழிக்க அஇஅதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் தவறில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அவருடைய இந்த முடிவுக்கு இது மட்டும்தான் காரணமா அல்லது தமிழக அரசின் சில முடிவுகளால் தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட இழப்புகளுக்கு வஞ்சம் தீர்க்க இது ஒன்றுதான் வழி என்று நினைத்தாரா என்பதை காலம்தான் பதிலளிக்கும்.

தேர்தல் காலத்தில் கூட்டணி அமைத்து மக்களை சந்திப்பதில் தவறேதும் இல்லை. கொள்கை அளவில் இருதுருவங்களாக செயல்படும் பல கட்சிகள் தேர்தல் காலங்களில் தொகுதி உடன்பாடு வைத்துக்கொள்வதும் தேர்தலுக்குப் பிறகு தங்கள் வழியில் செல்வதும் அல்லது விடுதலை சிறுத்தைகள், பாமகவினரைப் போன்று தேர்தல் முடிந்த உடனேயே கூட்டணியிலிருந்து விலகி எதிர் அணியினருடன் சேர்ந்துக்கொள்வதும் சகஜம்தான். தேர்தல் தியதி அறிவிக்கப்படும்வரையிலும் வசைமாரி பொழிந்துக்கொள்வதும் தியதி அறிவிக்கப்பட்டவுடன் எந்த கூட்டணி அதிக தொகுதிகள் தருகின்றனரோ அந்த கூட்டணியில் இணைந்துக்கொள்வதும் தமிழகத்தில் மிக, மிக சகஜமாகிவிட்ட கூத்து.

ஆனால் இரண்டு திராவிடக் கட்சிகளுமே ஊழலின் பிறப்பிடங்கள் ஆகவே தமிழகத்தை அந்த கட்சிகளின் பிடியிலிருந்து காப்பாற்றவே நான் அவதாரம் எடுத்திருக்கிறேன் என்றெல்லாம் கூறிவந்த ஒருவர் அத்தகைய கட்சிகள் ஒன்றுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் அளவுக்கு தன்னுடைய கொள்கையிலிருந்து இறங்கி வந்திருப்பது வியப்பை அளிக்கிறது.

கொள்கை அளவில் மாறுபடும் இரு கட்சிகள் தேர்தலுக்காக இணைந்து செயல்படுவதே சற்று சிரமம்தான். தலைவர்கள் இணைந்தாலும் தொண்டர்கள் அத்தனை எளிதாக பகைமையை மறந்து இணைந்து தேர்தல் பணியாற்றுவது அதை விட சிரமம். ஆனால் தனிப்பட்ட முறையில் ஒரே மாதிரியான (அதாவது தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும், தன்னுடைய சொல்லுக்கு மறுசொல் இல்லை, தன்னை சுற்றியுள்ள அனைவருமே ஆமாம் சாமிகளாக இருக்க வேண்டும் என்ற) குணாதிசயங்கள் கொண்ட இரு தலைவர்கள் இணைந்து செயல்பட முடியுமா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வது சுமுகமாக நடந்து முடிந்தாலும் தேர்தல் தியதிவரையிலும் கூட இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இல்லாமல் இருக்குமா என்பது சந்தேகமே. பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவது யாருடைய வீட்டில் அல்லது அலுவலகத்தில் என்பதில் கூட கருத்து ஒவ்வாமை இருக்க வாய்ப்புள்ளது. அதன் பிறகு பிரச்சாரம்... இருவரும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய முடியுமா? எதிரில் நிற்பவரை பொசுக்கிவிடக்கூடிய அளவுக்கு நெருப்பு நீரோடையாக பொங்கி பீறிவரும் தலைவியின் பேச்சுக்கு தட்டித்தடுமாறும் தலைவரின் பேச்சு ஈடுகொடுக்க முடியுமா? அல்லது எடுபடத்தான் செய்யுமா?

அதுவும் போகட்டும். தேர்தலில் வெற்றிபெற்றாகிவிட்டது என்றே வைத்துக்கொள்வோம். அஇஅதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றிபெற்று தேதிமுக ஓரிரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றால் (இதை உறுதி செய்ய தலைவி தன்னுடைய தொண்டர்களுக்கு நிச்சயம் கட்டளையிட்டிருப்பார்) தலைவி நடிகரை சீந்துவாரா என்ன? இதில் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் நடிகர் மருத்துவர் ஐயாவிடம் கேட்டு தெரிந்துக்கொள்வது நல்லது.

நடிகருக்கு ஒரு கோரிக்கை: எந்த ஒரு சூழலிலும் அஇஅதிமுக நீங்கள் அறிவித்த ஊழலற்ற ஆட்சியை தரப்போவதில்லை. தலைவி விரும்பினாலும் அவருடைய தோழியும் சுற்றியுள்ள சில்லறை தலைவர்களும் ஊழலை விடப்போவதில்லை. ஆகவே இப்போதே ஆட்சியைப் பிடிப்பதைப் பற்றி கவலைப்படாமல் கட்சியை வளர்ப்பதில் முனையுங்கள். இம்முறையும் தனித்து நின்று உங்களுடைய இடத்தை தக்கவைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.

அதையும் மீறி திமுகவை வீழ்த்துவதுதான் இன்றைய தேவை என்ற முடிவுடன் விருப்பமில்லாத ஒரு கூட்டணியில் நுழைவது என்று முடிவெடுக்கும் பட்சத்தில் எதிர்கொள்ளவிருக்கும் அவமானங்களை தாங்கிக்கொள்ளக் கூடிய மனவுறுதியை அளிக்க உங்கள் குலதெய்வத்தை வேண்டிக்கொள்ளுங்கள்.

இந்த கூட்டனியில் தலைவி வீசியெறியும் எலும்புத்துண்டுகளுக்காக ஏங்கி நிற்கும் மதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகளின் நிலை... பரிதாபம்! அவர்களுக்கும் திமுக என்கிற ஒரு பொது எதிரி இருப்பதால்தானே அனைத்து அவமானங்களையும் பொறுத்துக்கொள்ள முடிகிறது?

ஆகவே இந்த கூட்டணியை திமுக எதிர் அணி என்று குறிப்பிட்டாலும் தவறில்லை என்று கருதுகிறேன்.

தொடரும்...

1 கருத்து:

  1. //(அதாவது தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும், தன்னுடைய சொல்லுக்கு மறுசொல் இல்லை, தன்னை சுற்றியுள்ள அனைவருமே ஆமாம் சாமிகளாக இருக்க வேண்டும் என்ற//

    டி.பி.ஆர் சார், இவர்கள் இருவரும் பரவாயில்லை வெளிப்படையாக தாங்கள் செய்வதை காமிக்கிறார்கள். ஆனால் தி.மு.க தலைமை இதைவிட மோசமான குணங்களை கொண்டுள்ளது என்பதை இனியும் மறுக்க/மறைக்க முடியாது.

    ஜனநாயகம் என்ற வார்த்தையை கொச்சை படுத்திய கட்சி தி.மு.க

    பதிலளிநீக்கு