02 ஏப்ரல் 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 45

வெளி வேலைகளில் சாமர்த்தியத்துடன் செயல்படுவதில் அவருக்கு நிகர் அவரேதான்.

என்னுடைய முந்தைய மேலாளருடைய பதவிக்காலத்தில் அவர் அதிக அளவிலான கடன்களை வழங்கியிருந்தார் என்று ஏற்கனவே கூறியிருந்தேன்.

அதில் பெரும்பாலானவர்கள் கிளைக்கு முற்றிலும் புதியவர்கள்.

சாதாரணமாக அப்போதெல்லாம் ஒருவருக்கு கடன் வழங்குவதற்கு முன்பு அவரை எங்களுடைய கிளையில் சேமிப்பு அல்லது வணிக கணக்கு வைத்திருப்பவர்களோ அல்லது தங்களுடைய வணிகத்திற்கு கடன் பெற்றிருப்பவர்களோ அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும் என்பது நியதி.

ஆனால் இன்றைய நிலவரம் வேறு. எல்லா வங்கிகளுமே தங்களுக்குள் போட்டிப் போட்டுக்கொண்டு கடன் வழங்குவதில் மும்முரமாயிருக்கும் காலக்கட்டத்தில் கடன் பெறுவதற்கு வங்கிக்கு வாடிக்கையாளர்கள் நடையாய் நடந்துக்கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. அதாவது ஆங்கிலத்தில் sellers' market ஆக இருந்த வங்கி வர்த்தகம் இப்போது buyer's marketஆக மாறியிருக்கிறது என்றால் மிகையல்ல.

குறிப்பாக புதிய தலைமுறை வங்கிகளின் வருகைக்குப் பிறகு கடன் வேண்டுமா, கடன் வேண்டுமா என தொலைபேசியில் வாடிக்கையாளர்களை தொல்லை செய்யும் காலம் வந்திருக்கிறது!

அப்போது கிளைக்கோ அல்லது கிளை மேலாளருக்கோ அறிமுகமில்லாத எந்த ஒரு வாடிக்கையாளருக்கும் கடன் வழங்கலாகாது என்பது முக்கிய நியதிகளுள் ஒன்றாயிருந்தது.

அதை சரிவர கடைப்பிடிக்கும் பொறுப்பு கிளை மேலாளருக்கு. அவரே பொறுப்பில்லாமல் நடந்துக்கொள்ள தீர்மானித்தால் அவரை தட்டிக் கேட்க கடமைப்பட்டவர்கள் கிளையிலுள்ள மற்ற அதிகாரிகள்தான். ஆனால் மேலாளரைப் பார்த்து பயந்து நடுங்கும் ஜூனியர் அதிகாரிகள் இருக்கும் கிளையில் மேலாளர் வைத்ததுதான் சட்டம்.

முந்தைய மேலாளருடைய பதவிக்காலத்தில் கிளையின் நிலைமை அப்படித்தான் இருந்தது.

அவருக்கு குறுகிய காலத்தில் அதிக அளவில் வணிகம் செய்து தன்னுடைய பெயரை பிரபலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்க வேண்டும். இதற்கு முக்கிய காரணம் ஒரே நேரத்தில் பதவி உயர்வுபெற்ற அதிகாரிகள் நடுவில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அதீத ஆர்வம்தான்.

அதிகார முக்கோனத்தில் மேலே செல்லச் செல்ல இட நெருக்கடி இருக்கும் அல்லவா? உதாரணத்திற்கு, ஒரு வங்கியில் கடை நிலை அதிகாரிகளின் எண்ணிக்கை ஆயிரம் என்றால் உச்சத்தில் இருக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவாகவே இருக்கும். எங்களுடைய வங்கியும் அதற்கு விதிவிலக்கல்ல. கடைநிலையிலிருந்து உச்ச நிலை (முதல்வர் நீங்கலாக) வரையுள்ள அதிகார நிலைகளின் எண்ணிக்கை (hierarchical levels) எட்டு (Gr. I to Gr.VIII). (என்னுடைய தற்போதைய நிலை Gr.VI).

இந்த முக்கோனத்தில் மேலே செல்ல செல்ல அதிகாரிகளின் எண்ணிக்கையும் குறைந்துக்கொண்டே செல்லும். சுருங்கக் கூறினால் பதவியில் உயரக்கூடிய வாய்ப்பும் குறைந்துக்கொண்டே செல்லும். ஆகவேதான் மேலே செல்ல செல்ல அதிகாரிகளுக்குள்ளே போட்டியும் பொறாமையும் பெருகிக் கொண்டே செல்கிறது.

ஒரு மேலாளரின் திறமை அவருடைய கிளையின் வணிக அளவை வைத்துமட்டும் கணிக்கப்படுவதில்லை. அதனுடைய தரம், அதன் மூலம் வங்கிக்கு கிடைத்த மற்றும் கிடைக்கக் கூடிய லாபம் என பலவற்றையும் கருத்தில்கொண்டே கணிக்கப்படுகிறது. அத்துடன் ஒருவருக்கு அடுத்த உயர் பதவிக்கான தகுதியை கணிக்கும் சமயத்தில் அவருடைய முந்தைய பதவிக்காலம் முழுவதையும் கணக்கில் எடுத்துக்கொள்வதும் வழக்கம். நான்கு கிளைகளில் மேலாளராக இருந்து இரண்டு கிளைகளில் மிக நன்றாகவும் மீதமுள்ள கிளைகளில் படுமோசமாகவும் பணியாற்றியிருப்பவரை விட தன் பொருப்பிலிருந்த எல்லா கிளைகளிலுமே சமச்சீரான அளவில் செயல்படும் மேலாளருக்கே பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதுண்டு. அவருடைய ஒட்டுமொத்த (overall) சாதனைகளைக் கணக்கில் கொண்டே அவருடைய பதவி உயர்வுக்கான மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன.

இதையறியாத பல மேலாளர்களும் தங்களுக்கு கிடைத்த முதல் வாய்ப்பிலேயே தங்களுடைய ஒட்டுமொத்த திறமையையும் காட்டிவிட வேண்டும் என்ற நினைப்பில் செயல்பட்டு அக்கிளையிலேயே தங்களுடைய மேலாளர் தகுதியையும் இழந்துவிடுவதைப் பார்த்திருக்கிறேன்.

சரி விஷயத்துக்கு வருவோம். என்னுடைய முந்தைய மேலாளருடைய அதீத ஆர்வத்துக்கு உறுதுணையாயிருந்தவர் நேற்றைய பதிவில் நான் குறிப்பிட்டிருந்த சிப்பந்தி.

சாதாரணமாக வங்கியில் கணக்கு துவங்க விழையும் ஒருவரை வங்கியில் ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தேன். அப்படி ஒருவர் கிடைக்காத பட்சத்தில் அவர் தற்சமயம் கணக்கு வைத்துள்ள வங்கி மேலாளருடைய அறிமுகக் கடிதம் கொண்டுவரவேண்டும்.

ஆனால் கிளையின் வணிகத்தை விரைவில் பெருக்க நினைக்கும் ஒரு மேலாளர் அவரே முன்வந்து எனக்கு இவரை தெரியும் (known to me) என்று வாடிக்கையாளரின் விண்ணப்பத்தில் ஒப்பிடுவாரானால் அது போதுமானது என்ற சலுகை (discretion) மேலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. சாதாரணமாக இச்சலுகை புதிதாக திறக்கப்படும் கிளை மேலாளர்களைக் கருத்தில்கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஏனெனில் நம்முடைய கிளையே புதிதாக இருக்கும்போது அதில் கணக்கு துவங்க விழையும் வாடிக்கையாளருக்கு அறிமுகம் கேட்பதில் அர்த்தமில்லையல்லவா?

ஆனால் இச்சலுகையை என்னுடைய முந்தைய மேலாளரைப் போன்றவர்களும் உபயோகித்துக்கொள்வார்கள். அப்படிப்பட்ட வாடிக்கையாளர்களை தங்களுக்கு உண்மையிலேயே முழுமையாக தெரிந்திருக்கவில்லையென்றாலும் ஒரு அசட்டு துணிச்சலில் இப்படி செய்வார்கள். ஆனால் சில புத்திசாலி மேலாளர்கள் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுடைய பூர்வீகத்தை அக்கம்பக்கத்தில் விசாரித்து தெரிந்துக்கொண்ட பிறகே கடன் வழங்குவார்கள்.

அதற்கு அவர்கள் பயன்படுத்துவது கிளையிலுள்ள சிப்பந்திகளைத்தான். பெரும்பாலான கிளைகளில் நீண்ட காலம் பணியாற்றுபவர்கள் இத்தகைய சிப்பந்திகள்தான். அத்துடன் பெரும்பாலான சிப்பந்திகள் கிளை அமைந்திருக்கும் இடத்திலேயே நிரந்தரமாக வசிப்பவர்கள் என்பதும் இதற்கு காரணம். நான் குறிப்பிட்ட சிப்பந்தி கேரள மாநிலத்தைச் சார்ந்தவர் என்றாலும் கிளை அமைந்திருந்த இடத்திற்கு மிக அருகாமையிலேயே பத்து பதினைந்து வருடங்களாக குடியிருந்தவர் என்பதால் அவருடைய உதவி என்னுடைய முந்தைய மேலாளருக்கு மிகவும் தேவைப்பட்டிருந்தது.

மேலும் என்னுடைய சிப்பந்திக்கு அலுவலகத்திற்கு வெளியுலுள்ள அலுவல்களில் அதிக நாட்டம் இருந்ததாலும் ஒவ்வொரு வாடிக்கையாளரைப் பற்றிய விவரங்களை திரட்டுவதற்கு 'இவ்வளவு' என்று அவருக்கு அவர் வழங்குவதாக உறுதியளித்திருந்ததால் நம்முடைய சிப்பந்தி மிகவும் மகிழ்ச்சியுடன் அதிலேயே குறியாயிருந்திருக்கிறார்.

அவருடைய திறமை மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்த மேலாளர் வாடிக்கையாளர்களைப் பற்றி அவர் திரட்டியவைகளை சரிபார்க்காமலே கடன் வழங்கியதன் விளைவை அவர் பிறகு அனுபவித்தார் என்பது வேறு விஷயம்.

ஆனால் வங்கிக்கு வெளி காரியங்களில் ஈடுபடுவதிலேயே குறியாயிருந்த நம்முடைய சிப்பந்திக்கு உள் வேலைகளில் அறவே ஈடுபாடில்லாமல் போனதற்கும் இதுவே காரணம் என்பதை நாளடைவில்தான் நான் உணர்ந்தேன்.

ஆகவே அவருக்கு அலுவலகத்திற்குள் ஒரு வேலையும் செய்ய ஓடாது. ஒரு restless ஆசாமி என்பார்களே அந்த ரகம். அலுவலகத்தினுள் தொடர்ந்து ஒரு அரைநாள் இருக்கச் செய்துவிட்டால் நிச்சயம் யாருடனாவது வம்பு வளர்த்துவிடுவார். யாராவது இந்த புத்தகத்தைக் கொண்டா என்றால் அதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத புத்தகத்தைக் கொண்டுவந்துவிட்டு 'சார் நீங்க இதைத்தான் கேட்டீங்க' என்று சாதிப்பார்.

என் கிளையிலிருந்த பெரும்பாலான குமாஸ்தா மற்றும் அதிகாரிகளை விட வயதில் மூத்தவர் என்பதால் எல்லோருமே அவரை 'சேட்டா' என்றுதான் அழைப்பது வழக்கம். அத்துடன் அவரை அதட்டி வேலை வாங்கவும் இளம் வயது குமாஸ்தாக்களுக்கும் அதிலும் குறிப்பாக பெண் குமாஸ்தாக்களுக்கு தயக்கமாக இருக்கும்.

என்னுடைய தலைமைக் குமாஸ்தா ஒரு தனி ராசாங்கம் நடத்தி வந்திருந்தார் என்றால் சிப்பந்தி ஒரு குட்டி ராசாங்கத்தை நடத்தி வந்தார் என்று சொல்லலாம்.

தொடரும்..

9 கருத்துகள்:

  1. பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆள்பவன் ஆண்டவன் என்று சொல்வார் கண்ணதாசன். அது போல ஒரு வங்கிக் கிளைக்குள்ளே எத்தனை ராஜ்ஜியங்கள். அடடா! அரசாளும் ஆசை ஆண்டிக்கும் உண்டு என்பது உண்மை போலும்.

    பதிலளிநீக்கு
  2. //என்னுடைய தலைமைக் குமாஸ்தா ஒரு தனி ராசாங்கம் நடத்தி வந்திருந்தார் என்றால் சிப்பந்தி ஒரு குட்டி ராசாங்கத்தை நடத்தி வந்தார் என்று சொல்லலாம்.
    //

    சமஸ்தான ஆட்சிகளா?

    பதிலளிநீக்கு
  3. வாங்க ராகவன்,

    அது போல ஒரு வங்கிக் கிளைக்குள்ளே எத்தனை ராஜ்ஜியங்கள். //

    நாலு பேர் இருக்கற வீட்டுக்குள்ளயே குட்டி ராஜாங்கங்கள் இருக்கறப்போ நாற்பது பேர் சேர்ந்து வேல செய்யற ஆஃபீஸ்ல இருக்காதா என்ன?

    அடடா! அரசாளும் ஆசை ஆண்டிக்கும் உண்டு என்பது உண்மை போலும். //

    ஆண்டிக்குத்தாங்க அந்த ஆசையே வரும்.. :)

    பதிலளிநீக்கு
  4. வாங்க துளசி,


    சமஸ்தான ஆட்சிகளா? //

    அப்படியும் வச்சிக்கலாம்:)))

    பதிலளிநீக்கு
  5. ஜிரா வின் பின்னூட்டத்திற்கு ஜோஸப்
    பதில்:

    //ஆண்டிக்குதாங்க அந்த ஆசையே
    வரும்//

    முத்தான கருத்து!

    பதிலளிநீக்கு
  6. <----
    என்னுடைய முந்தைய மேலாளருடைய அதீத ஆர்வத்துக்கு உறுதுணையாயிருந்தவர் நேற்றைய பதிவில் நான் குறிப்பிட்டிருந்த சிப்பந்தி.
    --->
    அதானே பார்த்தேன், இந்த சிப்பந்தி இங்க எங்கே வந்தார் என்று குழம்பிக்கொண்டிருந்தேன்.
    <-----
    ஒவ்வொரு வாடிக்கையாளரைப் பற்றிய விவரங்களை திரட்டுவதற்கு 'இவ்வளவு' என்று அவருக்கு அவர் வழங்குவதாக உறுதியளித்திருந்ததால்
    --->
    முந்தைய மேலாளர் எங்கிருந்து அந்தப் பணத்தைக் கொடுப்பார்?

    பதிலளிநீக்கு
  7. வாங்க ஜி!

    முத்தான கருத்தா? நா சும்மா தமாஷா சொன்னேன்..

    ஆனா அத நீங்க வழிமொழியறப்போ அதுலயும் உண்மையிருக்கேன்னு நினைக்கத் தோனுது..

    பதிலளிநீக்கு
  8. வாங்க சிவா,

    முந்தைய மேலாளர் எங்கிருந்து அந்தப் பணத்தைக் கொடுப்பார்? //

    இப்படியெல்லாம் வெளிப்படையா கேட்டா என்னத்த சொல்றது? 'அதுல' இருந்துதான்னு சொல்ல முடியுமா?

    பதிலளிநீக்கு
  9. <----
    இப்படியெல்லாம் வெளிப்படையா கேட்டா என்னத்த சொல்றது? 'அதுல' இருந்துதான்னு சொல்ல முடியுமா?
    --->
    எதுக்கும் நிச்சயப்படுத்திகிடத்தான்.
    -)))

    பதிலளிநீக்கு