25 ஜனவரி 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 23

அவர் என்னுடைய மேலாள நண்பரைக் கண்டதும் கோபத்துடன் தெலுங்கில் சரமாரியாக வசைபாடத் துவங்கிவிட்டார். எனக்கும் தெலுங்கு சுமாராக தெரியும் என்றாலும் அவர் கடகடவென பொரிந்து தள்ளியது முழுவதுமாக விளங்காவிட்டாலும் அவர்கள் இருவரிடையிலும் ஏதோ மனஸ்தாபம் இருக்கிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

அடடா.. ஆரம்பமே சரியில்லையே என்று நினைத்தேன்.

இவரை சந்தித்து இவர் நிதியறிக்கை தயாரித்து அளித்திருந்த வாடிக்கையாளர்களெல்லாம் ஏன் வங்கியிலிருந்து பெற்றிருந்த கடனை அடைக்க மறுக்கிறார்கள் என்று கேட்பதுடன் கடன்க்ளை கால தாமதமில்லாமல் வசூலிக்க அவருடைய உதவியைக் கோரலாம் என்ற நினைப்பில் அங்கு சென்ற எனக்கு அது நிறைவேறாது போலிருக்கிறதே என்றிருந்தது.

அவர் பேசி முடித்ததும் எங்கே என்னுடைய மேலாளர் பதிலுக்கு பேசுவாரோ என்று நினைத்த நான் எனக்கருகில் நின்றிருந்த அவருடைய கரத்தைப் பற்றி அழுத்தி பதில் பேசாதீர்கள் என்று குறிப்பால் உணர்த்தினேன்.

நல்லவேளை. அவர் மவுனம் காத்ததுடன் என்னை அறிமுகப்படுத்தி இவர்தான் உங்களை சந்திக்க விரும்பினார் என்று கூறினார்.

தன்னுடைய அவசரபுத்தியை உணர்ந்த தணிக்கையாளர் என்னைப் பார்த்து அசடு வழிந்தார். ‘சாரி சார்.. நான் ஒங்கள அவமானப்படுத்தணுங்கற நோக்கத்துல அப்படி பேசல.’ என்றவாறு எங்களை வரவேற்று இருக்கையை அளித்தார்.

நாங்களிருவரும் வரும் வழியில் அவரைப் பற்றி மேலாளர் சற்று அதிகபட்சமோ என்று நினைக்கும் வகையில் இருந்தது அவருடைய பேச்சு. அதாவது குசலம் விசாரித்து முடிக்கும் வரை.

அவர் அறிமுகப்படுத்தியிருந்த வாடிக்கையாளர்களைப் பற்றி நான் கேட்கத் துவங்கியதுமே அவருடைய பேச்சில் நிறைய மாறுதல் தெரிந்தது.

‘இங்க பாருங்க சார். நான் ஒரு ப்ராக்டிசிங் ஆடிட்டர். என்கிட்ட நிறயை பேர் வருவாங்க. அவங்களுக்கு பால்ன்ஸ் ஷீட் போட்டுக் குடுக்கறது என் தொழில். அதோட என் ஜாப் முடிஞ்சிருது. எனக்கு இங்க நிறைய பேர தெரியும். அதுல ஒருத்தர்தான் ஒங்க மேனேஜர். அவர் திரும்பத் திரும்ப வற்புறுத்தி கேட்டுக்கிட்டதால நான் எங்கிட்ட வந்த சில பேரை ஒங்க பேங்குக்கு அறிமுகப்படுத்தினேன். அவங்க எதுக்கு லோன் வாங்குனாங்க, எவ்வளவு லோன் வாங்குனாங்க அப்படீன்னுல்லாம் எனக்கு தெரியாது.’ என்றார் கூலாக.

என்னுடைய மேலாளருக்கு கோபம் பயங்கரமாக வந்தது. அவரை சகட்டு மேனிக்கு தெலுங்கில் வசைபாடத் துவங்கினார். அவருக்கு வந்த கோபம் நியாயமானதாக எனக்கு தோன்றினாலும் கோபப்படுவதில் எந்த பயனும் விளையப்போவதில்லை என்பதை உணர்ந்த நான், ‘சார் நீங்க இப்படி சொல்லி முடிச்சிட முடியாது. ஒருத்தர் ரெண்டு பேருன்னா நீங்க சொல்றத ஒத்துக்கலாம். ஆனா நீங்க சுமார் இருபது பேருக்கும் மேல ரெக்கமெண்ட் பண்ணியிருக்கறதா எங்க பேங்க்லருக்கற ரெக்கார்ட்ஸலருந்து தெரியுது. அதுல ஒருத்தர், ரெண்டு பேர் லோன திருப்பிக் கட்டலைன்னாக் கூட பரவாயில்லை. இருபது பேர்ல நாலஞ்சி பேர் குட சரியா கட்டறதில்ல. அதுமட்டுமில்லாம எங்க மேனேஜர் சொல்றபடி பார்த்தா அதுல நிறைய பேர் லோன் அப்ளிகேஷன்ல குடுத்துருக்கற அட்றஸ்லையே இப்ப இல்லையாம். அதனால..’

நான் கூற வந்ததை முடிக்க விடாமல் கோபத்துடன் இடைமறித்தார் அவர். ‘அதனால? என்ன சார் மிரட்டறீங்களா? இவங்களுக்கு லோன் இவ்வளவு குடுங்கன்னு நான் யாருக்கும் ரெக்கமெண்ட் பண்ணலை. அது என்னோட வேலையும் இல்லை. லோன் குடுக்கறதும் அத ரிக்கவர் பண்றதும் ஒங்க வேலை. ஒங்க மேனேஜர் லோன் கேட்டு வந்தவங்களோட அட்றச சரியா விசாரிச்சிட்டு லோன் குடுத்துருக்கணும். இல்ல லோன சரிவர கட்டாம இருந்ததுமே அவங்கள போய் பாத்துருக்கணும். அதுக்கு அவர மட்டும் குத்தம் சொல்ல முடியாது சார். இதோ ஒக்காந்திருக்காரே இவருக்கு சொந்த ஊருக்கு வரணும். அதுக்காக யார் யாரையோ காக்கா புடிச்சி வந்து ஒரு வருசம் கூட் ஆகாத பழைய மேனேஜர டிரான்ஸ்ஃபர் பண்ண வச்சிட்டார். சரி சொந்த ஊருக்கு வந்துட்டமே பழைய மேனேஜர் நம்ம ஃப்ரெண்டுதானேன்னு நினைச்சி அவர் குடுத்த லோனையெல்லாம் ரிக்கவர் பண்ணிருக்கலாமில்ல? அதையும் செய்யாம சும்மா வர்றவங்க போறவங்கக் கிட்டயெல்லாம் என்னை பத்தி மட்டமா சொல்லி என் பேர கெடுத்ததுமில்லாம நான் இருபது வருஷமா பிசினஸ் பண்ணிக்கிட்டிருந்த இடத்துலருந்தே நா காலி பண்ற மாதிரி பண்ணவர் சார் இவர். அந்த பில்டிங் ஓனர் இவர் அப்பாக்கிட்ட படிச்சவராம். அத வச்சிக்கிட்டு அவர மிரட்டி என்னெ காலி பண்ண வச்சி என் பிராக்டிசையே கெடுத்தவர்.. இந்த லோனெல்லாம் திரும்பி வராம போனதுக்கு இவர்தான் காரணம்.’

என் செவிகளையே நம்பமுடியாமல் நான் அமர்ந்திருக்க என்னுடைய மேலாளர் என் முன்னரே அவரை சட்டையைப் பிடித்து அடிக்க போய்விட்டார். இதைக் கண்டு அவருடைய பணியாளர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து என்னுடைய நண்பரை தாக்க முயல அவரை அதிலிருந்து விடுவித்து மீட்டு வருவதற்குள் போதும், போதும் என்றாகிவிட்டது.

அங்கிருந்து திரும்பி வரும் வழியில் ‘பாத்தீங்களா சார் இந்த ஃப்ராடு பேசறத. இதிலருந்தே தெரியல இவனும் நம்ம மேனேசரும் சேர்ந்துதான் இத செஞ்சிருக்காங்கன்னு?’ என்ற என் மேலாளரை என்ன சொல்வதென தெரியாமல் அமர்ந்திருந்தேன்.

தணிக்கையாளரின் கூற்றை மேலோட்டமாகப் பார்த்தால் அவர் கூறியதில் பொறுப்பற்றத் தன்மை தெரிந்தாலும் அவரை முழுவதுமாக குறை கூறவும் முடியாத நிலை. அவர் வாதிட்டதுபோல சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களை வங்கிக்கு அவர் அறிமுகப்படுத்தியதற்கு எவ்வித ஆதாரமும் இருக்கவில்லை, அவர்கள் எல்லோரும் சமர்ப்பித்திருந்த நிதியறிக்கைகளை இவர் தயாரித்தளித்திருந்தைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அவருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக ஆதாரங்கள் இல்லை.

அப்படிப்பட்ட சூழலில் அவரை விரோதித்துக்கொள்ளாமல் அவர் மூலமாக கடனை வசூலிப்பதை விட்டுவிட்டு அவரைப் பற்றி பிற வாடிக்கையாளர்களிடம் தரக்குறைவாக பேசுவதும் அவர் தன்னுடைய தொழிலை செய்யவிடாமல் அவருடைய இடத்திலிருந்து வெளியேற்ற முனைவதும் ஒரு வங்கி அதிகாரி செய்யக் கூடியக் காரியமல்லவே என்று நினைத்தேன்.

அதன் காரணமாக தன்னுடைய தொழிலே பாதிக்கப்பட்டுவிட்டதென தணிக்கையாளர் புகார் கூறுவதிலிருந்த நியாயமும் எனக்கு புலப்பட்டது.

மேலாளருக்கும் தணிக்கையாளருக்கும் இடையிலிருந்த தனிப்பட்ட விரோதம் இறுதியில் முந்தைய மேலாளர் வழங்கியிருந்த அனைத்து கடன்களுமே வசூலிக்கப்படாமல் நிலுவையில் நின்றுவிட வாய்ப்புள்ளதே என்றும் நினைத்தேன்.

என்னதான் என்னுடைய மேலாளர் அதே நகரத்தைச் சார்ந்தவர் என்றாலும் அவரை விடவும் செல்வாக்குள்ளவராகத்தான் தணிக்கையாளர் இருப்பார் என்பது உண்மையல்லவா? அதுவும் சுமார் இருபது வருடங்களுக்கும் கூடுதலாக தொழில் செய்துக்கொண்டிருக்கும் ஒருவருக்கும் வணிகம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கிடையில் நல்ல மதிப்பும் மரியாதையும் இருக்க வேண்டுமே.

அவர் நினைத்தால் வங்கியைப் பற்றியும் இப்போதுள்ள மேலாளரைப் பற்றியும் அவர்கள் மத்தியில் ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்திவிட முடியுமே. அதுவரை வழங்கியிருந்த கடன்களை வசூலிக்க முடியாமல் போவதுடன் மேற்கொண்டு புதிதாக கடன் வழங்குவதும் தடைப்பட்டுவிட வாய்ப்புள்ளதே.

இதுபோன்ற கவலைகள் என்னை வாட்டியெடுக்க என்னுடைய மேலாளரோ தன்னுடைய செயலின் தீவிரத்தை உணராதவர்போல் அலட்சியத்துடன் என்னருகில் அமர்ந்திருந்தார். இவரை உடனே மாற்றாவிட்டால் வங்கியின் வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று என்னுடைய வட்டார மேலாளருக்கு பரிந்துரைத்தால், ‘என்ன இது எங்க போனாலும் டிபிஆருக்கு இதே பொழப்பாப் போச்சே’ என்று அவர் நினைத்தால்?

இவ்வாறெல்லாம் கவலைப் படுவதைத் தவிர்த்து இதற்கு என்னதான் மாற்று என்று ஆலோசிப்பதுதான் நல்லதென நினைத்தேன்.

நாம் வந்திருந்த நோக்கத்தை முதலில் நிறைவேற்றுவோம். அதுமட்டும்தான் நம்முடைய உடனடி நோக்கம் என்று எனக்கு நானே கூறிக்கொண்டு கிளைக்குத் திரும்பியதும் மேலாளருடன் அன்று இரவு வெகு நேரம்வரை அமர்ந்து முந்தைய மேலாளர் வழங்கியிருந்த அனைத்து கடன்கள் சம்பந்தப்பட்ட கோப்புகளையும் முழுவதுமாக படித்து குறிப்பெடுத்தேன்.

இறுதியில் தணிக்கையாளரை மட்டுமே குறை சொல்லிப் பயனில்லை என்பது தெளிவாக விளங்க முந்தைய மேலாளரின் அவசரபுத்தியும் அவரைத் தொடர்ந்து வந்த மேலாளரின் அலட்சியப் போக்குமே பெரும்பாலான கடன்கள் நிலுவையில் நிற்பதற்கு முக்கிய காரணம் என்பதை உணர்ந்தேன்.

ஆனால் இதை அவரிடம் எடுத்துரைத்தால் தேவையில்லாத வாக்குவாதத்தைத் தவிர ஒன்றும் நடக்கப்போவதில்லை என்பதை உணர்ந்த நான் அவருடைய வழியிலேயே சென்று என்னுடைய ஆய்வை முடித்துக்கொண்டு பிறகு என்ன நடவடிக்கையைப் பரிந்துரைப்பதென முடிவு செய்யலாம் என்று தீர்மானித்தேன்.

‘என்ன சார் இப்ப தெரியுதா அந்த ஆடிட்டர் என்ன ஃப்ராடுன்னு? நியாயமா பார்த்தா அந்தாள் மேல க்ரிமினல் கம்ப்ளெய்ண்ட் குடுக்கணும் சார். நா வந்து சார்ஜ் எடுத்த முதல் வாரத்திலேயே இதத்தான் நான் நம்ம ஜோனல் மேனேஜருக்கு ரெக்கமெண்ட் பண்ணேன். ஆனா அவர்தான் வேணாம்னுட்டார். அதுக்கப்புறம்தான் நானும் நமக்கென்னன்னு சும்மா இருந்துட்டேன். அந்த ஆத்திரத்துலதான் அந்த ஆடிட்டர் முன்னெ இருந்த இடத்துலருந்து வெக்கேட் பண்ண வச்சேன்.’ என்று எகத்தாளமாக பேசிய மேலாளரை என்ன செய்தாலும் தகும் என்று தோன்றினாலும் அதைப் பொருட்படுத்தாமல், ‘சரி சார். அதப்பத்தி பேசறத விட்டுட்டு இனி என்ன செய்யலாம்னு பார்ப்போம்.’ என்றேன்.

‘நீங்களே சொல்லுங்க சார்.' என்றார் அவர் ஏதோ தனக்கு இதில் சம்பந்தமில்லை என்பது போல..

அவரை என்ன செய்தால் தகும் என்ற யோசனையில் அவரையே பார்த்தேன்..

'நாளை காலையிலருந்து முதல் வேலையா இந்த லிஸ்ட்ல இருக்கற எல்லா வாடிக்கையாளர்களையும் சந்திக்கிறோம். அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க.' என்றவாறு எழுந்து நின்றேன்.

'அவங்க யாருமே அந்த அட்றஸ்ல இருக்க மாட்டாங்களே சார்?' என்றார் அவர் பதற்றத்துடன்.

'பரவாயில்லை.. I just want to confirm that they are not there.' என்றவாறு வெளியேறினேன்..

தொடரும்.

3 கருத்துகள்:

  1. வாங்க நாடோடி,

    ஆஹா... கெளம்பிட்ட்டீங்களா? //

    பின்னே, வேற வழி?

    பதிலளிநீக்கு
  2. After 9th Jan, I have read all your blogs today only in shared PCs because blogs are filtered(censored) in our Co.

    பதிலளிநீக்கு
  3. After 9th Jan, I have read all your blogs today only in shared PCs because blogs are filtered(censored) in our Co. //

    Lucky that my blog has not been subjected to any censorship!

    Thanks Siva..

    பதிலளிநீக்கு