19 நவம்பர் 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 17

எம்.ஜி.ஆரை பற்றி எழுதியது போதும் என்று நினைக்கிறேன்..

இனி நம்ம விஷயத்த பாத்துக்கிட்டு போவோம்..

வங்கிகளுடைய தலையாய தொழில் வாடிக்கையாளர்களிடமிருந்து சேமிப்பு தொகைகளைப் பெறுவதும் அவற்றை லாபகரமான வழிகளிலே தேவைப்படுவோருக்கு கடனாய் கொடுப்பதுமே.. (Accepting and Lending Money)

வட்டியாய் கிடைக்கின்ற தொகையிலிருந்து வட்டியாய் கொடுத்த தொகை போக (Interest received minus Interest paid) கிடைக்கும் தொகைதான் வங்கிகளுக்கு கிடைக்கும் லாபம். அதிலிருந்துதான் அவர்களுடைய எல்லா இதர செலவுகளையும் (Administrative expenses) பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதற்காக வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் எல்லா சேமிப்பு பணத்தையும் கடனாய் கொடுத்துவிட முடியாது..

வாடிக்கையாளரிகளிடமிருந்து வட்டிக்கு பெறப்படும் தொகையில் (நூறு ரூபாய் என்று வைத்துக்கொள்வோம்) அதிக பட்சம் 60% இருந்து 70% வரையே கடனாய் வழங்க முடியும். மீதமுள்ள தொகையில் 5% வரை ரொக்கமாக ரிசர்வ் வங்கியில்(Cash Reserve)வைத்திருக்க வேண்டும். மீதியை (25%)மத்திய, மாநில அரசுகளின் கடன் பத்திரங்களிலில்(Govt. Bonds) முதலீடு செய்ய வேண்டும் (Liquid Securities)

இந்த நிபந்தனைக்கு என்ன காரணம்?

வங்கிகள் கொடுக்கும் கடனெல்லாம் முழுவதுமாக திரும்பி வராது என்பதை என்னுடைய நேற்றைய பதிவில் கோடிட்டு காட்டியிருந்தேன். நூறு பேருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு லட்சம் கடன் கொடுத்ததில் வட்டியுடன் திருப்பி அடைக்கப்பட்டது சுமார் பத்து சதவிகிதமேயாகும். அப்படி திரும்பி வாரா கடனைத்தான் வங்கி பாஷையில் என்.பி.ஏ (Non performing assets) என்கிறோம்.

அப்படி ஒரு வங்கியின் பெருமளவு கடன்கள் வாராக்கடன்களாகி அவ்வங்கியின் வாடிக்கையாளர்களுடைய சேமிப்பை திருப்பித்தர முடியாத நிலைக்கு தள்ளப்படுமானால் அவ்வங்கி அரசாங்க கடன் பத்திரங்களை விற்று பணமாக்கி அவர்களுடைய சேமிப்பை திருப்பித்தர வேண்டும்என்பது நம் நாட்டில் உள்ள எல்லா வங்கிகளுக்கும் உள்ள ஒரு பொதுவான நியதி.

நல்ல கடன்களில் (Performing Assets) இருந்து கிடைக்கப் பெறும் வட்டித்தொகையைக் கொண்டே இதுபோன்ற வாரா கடன்களை எழுதி தள்ளுகின்றன வங்கிகள். இப்படி ஆண்டுதோறும் தள்ளுபடி செய்யப்படும் கடன் தொகை ஆயிரம் கோடிகளை தாண்டுகிறது என்கிறது நம் ரிசர்வ் வங்கியின் ஒரு அறிக்கை!

வாரா கடன்களின் பின்னணி என்ன?

வங்கிகளில் இருந்து கடனாக பெற்ற தொகையை தங்களுடைய நியாயமான, நன்கு பழக்கமுள்ள, வணிகத்தில் (Trade) முதலீடு செய்யாமல் தங்களுக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத வணிகத்தில் அல்லது தொழிலில் (Industry) முதலீடு செய்து முழுப்பணத்தையும் - அதாவது தங்களுடைய முதலீடு மற்றும் வங்கிகளிலிருந்து கடனாய் பெற்ற கடன் - இழந்துவிட்டு நடு வீதிக்கு வந்த வணிகர்கள், தொழிலதிபர்கள் எத்தனையோ பேர்.

என்னுடைய வங்கி மேலாளர் அனுபவத்தில் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களைப் பார்த்திருக்கிறேன். பலருக்கு கடனளித்து உதவியும் செய்திருக்கிறேன். அவர்களுள் பலரும் கடனாய் கிடைத்ததை தங்களுடைய வணிகத்தில் முடக்கி கணிசமான லாபம் ஈட்டி அதீத வளர்ச்சி பெற்றுள்ளனர். வேறு சிலர் நான் மேலே கூறியுள்ளதுபோல் வகைதெரியாமல் வணிகம் செய்து மஞ்சள் கடுதாசி (Insolvency) கொடுக்கும் அளவுக்கு நலிந்துபோயிருக்கின்றனர் என்பதையும் மறுக்கவியலாது.

இன்றைய பதிவில் என்னுடைய கிளையிலிருந்து (கடந்த ஐந்தாறு பதிவுகளில் குறிப்பிட்டிருந்த கிளை) கடன் பெற சைக்கிளில் வந்த ஒருவர் இன்று (அதாவது கடந்த 25 ஆண்டுகளுக்குள்) நினைத்து பார்க்கவியலாத அளவுக்கு வளர்ந்து தமிழ்நாட்டில் சுமார் ஐந்து இடங்களில் கிளைகளைக் கொண்ட நிறுவனத்தின் உரிமையாளராக இருப்பவரைப் பற்றி பார்ப்போம்.

அவரைப் பற்றி நல்லவற்றையே நான் எழுத உத்தேசித்தாலும் அவருடைய பெயரை வெளியிடுவது நல்லதல்ல என்றே நினைக்கிறேன். அவர் சார்ந்த சமூகத்தை குறிக்க ‘நாடார்’ என்று குறிப்பிடுகிறேன். அவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்தவர்..

இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி சென்னை வந்து அன்று சென்னையில் வீட்டு பொருட்களை, முக்கியமாக ரேடியோ மற்றும் டிரான்சிஸ்டர் போன்றவற்றை தவணை முறையில் விற்பதில் ஒரு மாபெரும் புரட்சியை செய்த வி.ஜி.பி நிறுவனத்தில் பில் கலெக்டராக - அதாவது தவணைத் தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கும் வேலை - பணியில் சேர்ந்தார்.

பணியில் சேர்ந்த ஓரிரு வருடங்களிலேயே அதைச் சார்ந்த வணிகத்தின் நெளிவு சுளிவுகளையெல்லாம் கற்றுக்கொண்டு சென்னை சூளை மேடு பகுதியில் 25 ச.அடிக்கும் குறைவான பரப்பளவுள்ள ஒரு சிறிய கடையை வாடகைக்கு எடுத்து வி.ஜி.பி சகோதரர்களுடைய பாணியில் இரண்டு ரேடியோ, நான்கைந்து டிரான்சிஸ்டர்கள், இரண்டு ஸ்டீல் கட்டில்கள், சில மடக்கு நாற்காலிகள் என வணிகத்தை துவக்கினார்.

இந்நிலையில் என்னுடைய கிளையின் வாடிக்கையாளர்களுள் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வணிகக் கணக்கு (Current Account) துவங்குவதற்காக என்னை அணுகினார்.

(இதில் வேடிக்கையென்னவென்றால் அன்று இவரை அறிமுகப்படுத்தியவரும் இதே தொழிலில் சுமார் நான்காண்டுகாலம் ஓரளவுக்கு வெற்றி கண்டிருந்தவர்தான். ஆனால அவர் இன்றும் ஏறத்தாழ அதே நிலையில்தான் இருக்கிறார்.)

நம்முடைய வாடிக்கையாளர் ‘நாடாருக்கு’ வங்கியில் ஒரு வணிகக் கணக்கை துவக்க தேவையான குறைந்த பட்ச தொகையான ரூ.300/- கூட தொடர்ந்து கணக்கில் நிறுத்த (Maintain) வசதியில்லை அப்போது . பிறகு ஏன் கணக்கை துவக்க வேண்டும் என்கிறீர்களா?

சில்லரை வணிகம் செய்யும் ஒவ்வொருவரும்(Retail Traders) அவர்களுக்கு தேவையான பொருட்களை மொத்த வணிகத்தில் ஈடுபட்டிருப்பவரிடமிருந்தே (Wholesale Traders) தங்கள் வணிகத்துக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்வர். பொதுவாக இரண்டு, மூன்று வாரங்களுக்குள் கொள்முதல் செய்த பொருட்களின் மதிப்பை செலுத்திவிட வேண்டும் என்ற நிபந்தனையிலேயே இப்பொருட்கள் இவர்களுக்கு விற்கப்படும்.

பெரும்பாலான Wholesale Traders காசோலை வழியாகவே கொடுக்கல் வாங்கல்களை செய்ய விரும்புவர். ஆகவேதான் வேறு வழியில்லாமல் நம்முடைய ‘நாடார்’ என்னுடைய கிளையில் ஒரு கணக்கை துவக்க விரும்பினார்.

நானும் அவருடைய பொருளாதார நிலைமையைப் புரிந்துகொண்டு என்னுடைய வங்கியின் சட்டதிட்டங்களை தளர்த்தி அவர் கணக்கைத் திறக்க உதவினேன்.



தொடரும்.

13 கருத்துகள்:

  1. பெயரில்லா11:51 AM

    இந்த பதிவும் ரொம்ப informative ஆ இருக்கு சார்.

    உங்க தொடரை முடிக்கறப்போ நாங்களும் வங்கிகளுடைய செயல்பாட்டைப் பத்தி நல்லா தெரிஞ்சவங்களா இருப்போம்னு நம்புறோம்.

    வாழ்த்துக்கள் ஜோசப் சார். தொடர்ந்து எழுதுங்க.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா11:54 AM

    நீங்க சொன்னதுதான் சரி..

    அரசியல்வாதிகள பத்தி தெரிஞ்சிக்கிட்டு நாங்க என்ன பண்றது? நம்ம விஷயத்த பாத்துக்கிட்டு போவோம்னு சொன்னது கரெக்ட். இந்த மாதிரி விஷயங்கள பேசறதவிட உங்க தினசரி அனுபவங்களஎழுதுங்க. இந்த மாதிரி வாழ்க்கையில வெற்றியடைஞ்சவங்களோடஎக்ஸ்பீரியன்ஸ்தான் எங்களபோலருக்கற ஆளுங்களுக்கு தேவை. இதுமாதிரி எழுதுங்க.எல்லாரும் படிப்பாங்க. உப்யோகமாவும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா11:56 AM

    This Post is beautiful.

    Being an experienced man I think you can teach us several things about banking.

    Please continue. I am eager to know more about how banks function.

    பதிலளிநீக்கு
  4. நன்றி சம்பத்.
    என்னுடைய தொடர் அப்படி ஒரு சூழலை உருவாக்கும் என்றால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.
    என்னுடைய இந்த தொடர் என்னுடைய அனுபவங்களை மாத்திரம் எழுதும் தளமாக உபயோகிக்காமல் உங்களைப் போன்ற இளைஞர்களுக்கும் பயன் பெறும் விதத்தில் எழுதவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அதில் என்னால் முடிந்தவரை கவனமாயிருப்பேன்.

    பதிலளிநீக்கு
  5. Thankyou so much Sankar.

    It is really heartening to note that you would like to know more about the functioning of the Banks in India.

    I would only be happy to write more about what we do.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா12:44 PM

    ஜோசப் சார்

    உங்கள மாதிரி மானேஜரை நான் பிசினஸ் தொடங்கினப்போ சந்திச்சிருந்தா நானும் இன்னைக்கி பெரிய ஆளா இருப்பேன்.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா12:48 PM

    அவர் சார்ந்த சமூகத்தை குறிக்க ‘நாடார்’ என்று குறிப்பிடுகிறேன். அவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்தவர்./

    The people from the Nadar community are well known for their business acumen.

    இன்னைக்கி பாண்டி பஜார், ரங்கநாதன் பகுதிகளில் இருக்கற பல வியாபார ஸ்தலங்களும் அவர்களுடையதுதானே. அவர்கள் மேலும் மேலும் வெற்றியடைவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.அவர்களிடமுள்ள கடின உழைப்பும் சிக்கனமும் இருந்தால் யார் வேண்டுமானால் வணிகத்தில் வெற்றியடையலாம்.

    நல்ல பதிவு சார்.

    பதிலளிநீக்கு
  8. ஜோசப் சார்,
    வங்கி நடவடிக்கைகள் பற்றிய உங்கள் அனுபவ பகிர்வு ,என்னுடைய பணியோடு தொடர்புடையதால் ,தனிப்பட்ட முறையிலும் எனக்கு மிகவும் பயனுள்ளது .உங்கள் அனுபவங்கள் மூலம் கற்றுக்கொள்ள தயாராகிவிட்டேன் .தொடருங்கள் .நன்றி!

    பதிலளிநீக்கு
  9. நன்றி ஜோ.

    உங்களுடைய பணியில் நீங்கள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா2:14 PM

    இப்படி ஆண்டுதோறும் தள்ளுபடி செய்யப்படும் கடன் தொகை ஆயிரம் கோடிகளை தாண்டுகிறது என்கிறது நம் ரிசர்வ் வங்கியின் ஒரு அறிக்கை!

    இன்னா சார் இது அநியாயம்?

    நாங்கல்லாம் வெளிநாட்டுலருந்து உழைச்சி அனுப்பற பணமெல்லாம் இப்படியா நாசமா போறது?

    நான் போன தடவை ஊருக்கு வந்தப்போ ஒரு வீடு வாங்கறதுக்கு கடன் கேட்டப்ப நீங்க வெறும் காண்ட்ராக்ட் ஒர்க்கர்தான் பெர்மனென்ட் ஒர்க்கருக்குத்தான் லோன்லாம் குடுப்போம்னார் எங்க ஊர் மேனேஜர்? ஒழுங்கானவங்களுக்கு லோன் கேட்டா குடுக்காதீங்க.. இப்படி வாராக்கடன குடுத்துக்கிட்டே இருந்தா நாடு நல்லா உருப்பட்ரும்..
    என்னமோ போங்க..

    இருந்தாலும் உண்மையை இவ்வளவு தெளிவா எழுதுனதுக்கு நன்றி சார்..

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா2:50 PM

    வாரா கடன்களின் பின்னணி என்ன?

    சரியான மதிப்பீடு (Assessment) இல்லாமல் கடன் வழங்கப்படுவதும் ஒரு காரணம் தானே?

    தவறாக எடுத்துக்கொள்ளாவிட்டால் ஒன்று சொல்கிறேன். பெரும்பாலான வங்கி மேலாளர்கள் கடன் அளிக்கும்போது கடன் பெறுபவர்களின் திறமையை (ability to do business and generate profit) விட அவர்களுடைய பொருளாதார மதிப்பையும் (Financial Worth) கடனுக்கு பின்புலமாய் இருக்கக்கூடிய சொத்தையும்தான் (Security) பார்க்கிறார்கள்.
    என் போன்ற இளைஞர்களிடம் திறமையிருக்கிறது. இருந்தென்ன பயன்? ஜாமீன் கொடுக்க ஆட்களோ, பணயம் வைக்க சொத்தோ இல்லையே? நான் எத்தனை வங்கி படிகளில் ஏறி இறங்கியிருக்கிறேன் தெரியுமா? ஒருவரும் உதவ முன் வராததால் இதோ கடல் கடந்து வந்து வேலை செய்துகொண்டிருக்கிறேன்.

    இதற்கென்ன சொல்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  12. நான் போன தடவை ஊருக்கு வந்தப்போ ஒரு வீடு வாங்கறதுக்கு கடன் கேட்டப்ப நீங்க வெறும் காண்ட்ராக்ட் ஒர்க்கர்தான் பெர்மனென்ட் ஒர்க்கருக்குத்தான் லோன்லாம் குடுப்போம்னார் எங்க ஊர் மேனேஜர்? //

    உங்களுடைய பெயரை போடாவிட்டாலும் உங்களுடைய வாதம் நியாயமானதாய் தெரிந்ததால் பதிலளிக்கிறேன்.

    உங்களுடைய மேலாளர் கூறியதில் தவறேதுமில்லை. அதுதான் எல்லா வங்கிகளிலும் உள்ள நியதி.

    நீங்கள் நல்லவராயிருக்கலாம்.. ஆனால் உங்களால் கடனை, அதுவும் வீட்டுக்கடன் குறைந்த பட்சம் பதினைந்து ஆண்டுகள்வரை செல்லக்கூடியவை, உங்களால் திருப்பித்தர முடியும் என்பதற்கு ஆதாரம் உங்களுடைய மாதாந்திர வருமானம்தான். அதற்கு நீங்கள் ஒரு நிரந்தர வேலையில் இருக்கவேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாதல்லவா?

    பதிலளிநீக்கு
  13. சரியான மதிப்பீடு (Assessment) இல்லாமல் கடன் வழங்கப்படுவதும் ஒரு காரணம் தானே?//


    நீங்கள் கூறுவது ஓரளவுக்கு சரிதான். இல்லையென்று மறுப்பதற்கில்லை.

    பெரும்பாலான வங்கி மேலாளர்கள் கடன் அளிக்கும்போது கடன் பெறுபவர்களின் திறமையை (ability to do business and generate profit) விட அவர்களுடைய பொருளாதார மதிப்பையும் (Financial Worth) கடனுக்கு பின்புலமாய் இருக்கக்கூடிய சொத்தையும்தான் (Security) பார்க்கிறார்கள்.//

    இதுவும் ஓரளவுக்கு சரிதான். ஆனால் நீங்கள் வங்கியின் தரப்பிலிருந்து பாருங்கள்.

    கடன் பெற வங்கியை அணுகுபவர்கள் எல்லோருக்கும் கடன் வழங்குவது சாத்தியமல்ல. வங்கிகள் தங்களை நாடி வருபவர்களுள் மிகவும் தகுதியுள்ளவர்களை தேர்ந்தெடுத்துத்தான் கடன் வழங்க முடியும்.

    ஒரு வணிகத்தையோ அல்லது தொழிலையோ திறம்பட நிர்வகித்து லாபம் ஈட்டுவதற்கு திறமை மட்டுமே போறாது. பண பலமும் வேண்டும்.எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய இது மிகவும் உதவும்.

    அப்படியும் தொழில் நஷ்டப்பட்டு வழங்கப்படும் கடன் தொகை வாரா கடனாகும் பட்சத்தில் முடிந்த மட்டும் வசூலிக்க அடகு வைக்கப்பட்ட சொத்து மிகவும் உதவியாய் இருக்குமே என்பதால்தான் வங்கிகள் அசையா சொத்துக்களை ஈடாக கேட்கின்றன.

    பதிலளிநீக்கு