13 ஜூன் 2011

சமச்சீர் கல்வியும் ஜெயலலிதாவும்.

சமச்சீர் கல்வி என்ற தத்துவம் ஜெயலலிதா போன்ற மேல்குடி மக்களுக்கு நிச்சயம் ஒவ்வாது என்பது தெரிந்ததே. சேரியில் வசிக்கும் குப்பனுக்கும் மாளிகையில் வசிக்கும் குமாருக்கும் ஒரே தரத்திலான கல்வியா என கேட்கத் தோன்றும்.  மேலும் இவர் 
மூதாதை ராஜாஜி வழிவந்த வம்சத்தை சார்ந்தவராயிற்றே. வண்ணான் மகன் வண்ணானாகவும் தோட்டி மகன் தோட்டியாகவும் நாவிதன் மகன் நாவிதனாகவும்தான் வரவேண்டும் என்று குலத்தொழிலின் மகத்துவத்தை எடுத்துரைத்தவரை சார்ந்தவர்களால் வேறு எப்படி சிந்திக்க முடியும்?

பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுனர்களைக் கொண்ட குழுக்களை அமைத்து தமிழகத்தை மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலுள்ள கல்வி நிலையங்களில் பயன்பாட்டிலுள்ள பாடத்திட்டங்களை அலசி, ஆராய்ந்து வடிவமைக்கப்பட்டு பிறகு மாணவ மற்றும் ஆசிரிய சமுதாயங்களுடைய ஒப்புதல் உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களின் ஒப்புதல் என அனைத்தையும் கடந்து தமிழக அமைச்சரவையின் ஒப்புதலுடன் கடந்த ஆண்டு முதலாம் மற்றும் ஆறாம் வகுப்புகளில் அறிமுகப்படுத்தப்பட்டு அனைத்து தரப்பினருடைய ஏகோபித்த (சாதி, சமூக மற்றும் பணத்தாசை போன்ற வெறிகளுக்கு ஆளான ஒரு சில பள்ளி நிர்வாகங்கள், அறிவுஜீவிகளேன் தங்களை வரித்துக்கொண்ட சில ஆசிரியர்களை தவிர்த்து)ஆதரவையும் பெற்ற சமச்சீர் கல்வி திட்டத்தை எவ்வித குழுக்களின் அடிப்படை ஆய்வும் இல்லாமல் ஒரே நாளில் புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சரவை ஒத்திவைக்கிறோம் என்ற சாக்கில் மறுத்திருக்கிறது.
பாடத்திட்டங்கள் உலகதரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் ஆகவே ஓராண்டுக்கு ஒத்தி வைக்கிறோம் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பே. அப்படியானால் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் இத்திட்டத்தை ஒட்டுமொத்தமாக குறை கூறி வாதிட்டதை என்ன சொல்வது? அவருடைய வாதத்தை கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகளும் கூட எதிர்த்தனவே. இருப்பினும் சமச்சீர் கல்வியை ஆதரித்து முழக்கமிட்டு வந்த நடிகர் வாய் மூடி இருக்க காரணம் வேறு. அவரை விட்டுத்தள்ளுவோம்.

முந்தைய தமிழக அரசு முடிவு செய்த பாடத்திட்டங்களில் என்ன குறைபாடுகள் இருப்பினும் அவற்றை இயன்றவரையிலும் சரிசெய்து அறிமுகப்படுத்துவதை விட்டுவிட்டு தரமே இல்லை என ஒட்டுமொத்தமாக ஒதுக்குவது நியாயமான காரணமாக தென்படவில்லை, இதற்கு உண்மையான காரணம் என்ன என்று உயர்நீதிமன்றம் கேட்டதே அதற்கு மேடத்தின் பதில் என்ன?

அப்படியானால் முந்தைய அரசு நியமித்த குழுக்கள் அனைத்துமே தரமற்றவைகளா? அவர்கள் முடிவு செய்த பாடத்திட்டங்களில் இன்னின்ன குறைபாடுகள் உள்ளன என உயர்நீதி மன்றத்தில் நீங்கள் பட்டியலிட்டிருந்தால் ஒருவேளை அதை ஏற்று நீதிமன்றம் உங்களுடைய முடிவுக்கு பச்சைக் கொடி காட்டியிருக்குமே? அதை ஏன் உங்களால் செய்ய முடியவில்லை?

ஏனெனில் அதுவல்ல காரணம். திமுகவையும் கலைஞரையும் புகழ்பாடி ஒரு சில பாடங்கள் சேர்க்கப்பட்டிருந்தால் அதையும் நீக்கிவிட உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளீர்கள்.

உங்களுடைய மனுவை அனுமதிக்காமல் தள்ளுபடி செய்துவிடும் என எதிர்பார்த்தேன்... ஏனோ தெரியவில்லை உச்சநீதிமன்றம் அதை விசாரனைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. ஆனால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடையுத்தரவு பிறப்பிக்காமல் இருந்தால் நல்லது. ஒருவேளை மனுவை விசாரிக்கும் சாக்கில் உங்களுடைய அரசு எடுத்த முடிவை குறுக்கு விசாரணை என்ற பெயரில் கடுமையாக விமர்சிக்க உத்தேசித்துள்ளதோ என்னவோ.. இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

ஆனால் என்னைப் போன்றோர்கள் மனதில் சமச்சீர் கல்வி என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் பாடத்திட்டங்கள் மாநகராட்சி மற்றும் அரசு/அரசின் உதவியுடன் நடத்தப்படும் பெரும்பாலான பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தரத்தை எந்த அளவுக்கு உயர்த்த முடியும் என்ற ஐயப்பாடு இருந்ததென்னவோ உண்மைதான். நானே அறிமுக நிலையில் இந்த திட்டத்தை எதிர்த்து பதிவுகள் எழுதியுள்ளேன். ஏனெனில் அடிமட்ட மாணவனுடைய தரத்தை உயர்த்துகிறோம் என்று கூறிவிட்டு இன்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுடைய தரத்தை குறைத்துவிடுவார்களோ என்று அச்சம் இத்தகைய பள்ளிகளில் பயிலும் மாணவர்களுடைய பெற்றோர்கள் மனதில் இல்லாமல் இல்லை. ஆனால் சமச்சீர் கல்வியின் திட்டத்தின் அடிப்படை நோக்கம் எல்லோருக்கும் கல்வி என்பது மட்டுமல்லாமல் எல்லோருக்கும் ஒரே கல்வி என்பதால் இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது தமிழகத்தில் பயிலும் அனைத்து மாணவர்களுடைய தரமும் ஒரே சீராக இருக்குமே என்ற எண்ணத்தில்தான் நானும் இந்த திட்டத்தை அறிமுக நிலையில் எதிர்த்தவர்களும் எங்களுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டோம்.

எனக்கு தெரிந்தவரை சிபிஎஸ்சி பாடத்திட்டத்தோடு மெட்றிக்குலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டங்கள் அமுலில் இருப்பது தமிழகத்தில் மட்டும்தான். கர்நாடகா, ஆந்திரா,கேரளா ஏன் மஹாராஷ்டிராவிலும் கூட சிபிஎஸ்சியை விட்டால் மற்ற அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம்தான் அமுலில் உள்ளன. ஆனால் இந்த பாடத்திட்டங்கள் சிபிஎஸ்சி, மெட்றிக் மற்றும் ஆங்கிலோ இந்திய பள்ளிகளில் அமுலில் உள்ள பாடத்திட்டங்களை விட பல வகைகளில் சற்று தரம் குறைந்தவையே என்பதும் உண்மை. ஆனால் இந்த குறைபாட்டை  நாளடைவில் சரிசெய்து அனைத்து மாணவர்களும் கல்வியில் ஒரே தரம் உள்ளவர்களாக உருவாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக இத்தகைய சமச்சீர் கல்வி திட்டத்தை பின்பற்றுவது அவசியமாகிறது. இது தமிழகத்தில் மட்டுமல்லாமல் நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் அமுல்படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்.

ஆகவே அறிமுக நிலையிலுள்ள இந்த திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒத்திப்போடுவது பிறகு முழுவதுமாக கைவிடுவது என்கிற பாணியில் சிந்திக்காமல் உச்சநீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வந்தாலும் இத்திட்டத்தை இவ்வாண்டிலேயே அனைத்து வகுப்புகளிலும் அமுல்படுத்துவதுதான் மேடத்திற்கு அழகு சேர்ப்பதாக இருக்கும். அதை விட்டுவிட்டு நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்தான் என்ற வீம்பில் திட்டத்தை அமுல்படுத்த தவறினால் மேடம் இனியும் மாறவே இல்லை என்று சிலர் கூறுவது உண்மைதான் என்றாகிவிடும்.

10 ஜூன் 2011

மு.க. என்ன செய்யப் போகிறார்?


இன்று பிற்பகல் திமுகவின் உயர்மட்டக் குழு கூடி அவசர ஆலோசனை செய்யவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது?

இந்த அவசரக் கூட்டம் எதற்காக?

சில நாளேடுகள் திமுக தன்னுடைய மத்திய அமைச்சர்களை அமைச்சரவையிலிருந்து விலக்கிக் கொள்ளக் கூடும் என்கின்றன. அது அவர்களுடைய ஊகம் மட்டுமல்ல, விருப்பமும் கூட. மாநிலத்தில் ஆட்சியை இழந்த திமுக மத்தியிலும் ஆட்சியில் இல்லையென்றால் அது மக்கள் மனதிலிருந்து அறவே அழிந்து ஒழிந்து போகும், போக வேண்டும் என்பது இத்தகைய பத்திரிகைகளின் ஆவல்.

அந்த ஆவலை, எதிர்பார்ப்பை நிறைவேற்றி வைக்கப் போகிறாரா மு.க? இதைத்தான் சமீபத்தில் 'கூடா நட்பு தீதாய் முடியும்' என சூசகமாக கூறினாரா? அவருடைய அன்பு மகள் கனிமொழி இருமுறை முன்ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு இருக்கும் அவல நிலைக்கு மத்தியில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ்தான் மறைமுக காரணம் என்று அவர் கருதும் சூழலில் அவருக்கு அத்தகைய நட்பே வேண்டாம் என முடிவெடுக்க வாய்ப்புள்ளது. அவருடைய இப்போதைய மனநிலையிலிருக்கும் எவராலும் அப்படித்தான் முடிவெடுக்க முடியும் என்பதில் ஐயமில்லை. ஆனால்
அத்தகைய முடிவு அது எந்த வகையில் அவருடைய கட்சிக்கு பலனளிக்கப் போகிறது என்பதை விட எப்படியெல்லாம் மேலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதையும் சிந்தித்துப் பார்த்தால் நல்லது என கருதுகிறேன்.

அமைச்சரவையிலிருந்து விலகிக்கொள்ளலாம் என அவர் முடிவெடுக்க வேறொரு காரணமும் உண்டு. மத்திய அமைச்சர் திருத்தி அல்லது மாற்றி
அமைக்க வாய்ப்புள்ளது என பிரதமர் அவர்கள் சமீபத்தில் கூறினார். அத்தகைய சூழலில் தற்போது ஊழல் புகாரில் சிக்கியுள்ள தயாநிதி
மட்டுமல்லாமல் திமுகவை சார்ந்த வேறு அமைச்சர்களும் கூட பதவியை பறிகொடுக்கலாம் என தெரிகிறது. அப்படியொரு சூழல் ஏற்படுவதை
தவிர்க்க நாமாகவே அமைச்சரவையிலிருந்து விலகிக்கொண்டால் என்ன என்றும் முக நினைத்திருக்கலாம்.

காரணம் எதுவானாலும் அத்தகையதொரு முடிவு கட்சிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதையும் முகவும் கட்சியும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பது திமுக பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வந்த கொள்கை. ஆனால் மாநிலத்தில்
ஆட்சியில் இல்லாத சமயத்தில்தான் மத்தியில் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை மறந்ததன் விளைவுதான் இன்றைய திமுகவின் இழிநிலைக்கு முக்கிய காரணம்.

மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காலத்தில் மத்தியிலுள்ள கூட்டாட்சியில் அங்கத்தினராக இருக்கும் பட்சத்தில் நாட்டின் ஒட்டுமொத்த நிலையை கருதி மத்தியிலுள்ள கூட்டணியரசு எடுக்கும் சில முடிவுகள் தாங்கள் ஆட்சியிலிருக்கும் மாநிலத்திற்கு எதிரானதாக இருக்க
வாய்ப்புள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த ஐந்தாண்டுகளில் அடிக்கடி உயர்த்தப் பட்ட பெட்ரோல் விலை, சிங்கள அரசுக்கு சாதகமாக
மத்திய அரசு எடுத்த பல முடிவுகள், தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டபோதும் அந்த நாட்டுடனான பொருளாதார உறவில் விரிசல் ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற கவலையில் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருந்த நிலை.... இத்தகைய முடிவுகளுக்கு திமுக காரணம் இல்லை என்றாலும் மத்திய கூட்டணியில் இருந்ததால் பகிரங்கமாக எதிர்க்க முடியாத சூழல்....இன்று ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசு தைரியமாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுகிறதென்றால் அதற்கு மத்தியிலுள்ள ஆட்சியில் தங்களுக்கு பங்கில்லை என்கிற துணிவால்தான். இல்லையென்றால் மேடமும் வாயை மூடிக்கொண்டுதான் இருந்திருப்பார்!

மேலும், நாட்டின் மிகப் பெரிய ஊழலில் திமுக அமைச்சர்களில் சிலர் சிக்கிக்கொண்டதற்கு முழு காரணமே மத்தியில் கட்சியின் சார்பில்
அமைச்சர்களாக இருந்த ஒரு சிலரின் அரசியல் மற்றும் மேலாண்மை (Management) முதிர்வின்மையே காரணம். குறிப்பாக ராஜா. அவர் சட்டம்
படித்தவர்தான் என்றாலும் நாட்டின் மிகப் பெரிய தொழிலதிபர்கள் ஒருசிலர் மற்றும் அரசியல் தரகர்கள் சிலரின் வியாபார/அரசியல் தந்திர
வலையில் சிக்கி அவர்களுக்கு சாதகமாக முடிவெடுக்கக் வேண்டிய கட்டாயத்திற்குள்ளானார் என்றால் அதற்கு அவருடைய அனுபவமின்மையும்
ஒரு காரணம். எங்களுக்கு சாதகமாக நீங்கள் முடிவெடுங்கள்...கலைஞர் தொலைகாட்சியில் முதலீடு செய்கின்ற சாக்கில் உங்களுக்கும்
உங்களுடைய தலைவருக்கும் வேண்டிய தொகையை நாங்கள் தருகிறோம் என்பதுபோன்ற ஆசை வார்த்தைகளை நம்பி அவரும் வீழ்ந்து
கட்சியையும் வீழ்த்திவிட்டார். அதற்கு ஒத்து போன கனிமொழிக்கும் இத்தகைய அனுபவின்மையே காரணம்... திருடுபவனை விட கையும் களவுமாய் சிக்கிக்கொள்பவனுக்குத்தான் தண்டனையின் வீரியம் அதிகம் தெரியும்.... அதைத்தான் கனிமொழி இப்போது அனுபவித்து படித்துக்கொண்டுள்ளார்...இனி திருடுவார்... ஆனால் சிக்கிக்கொள்ள மாட்டார்... தற்போதைய தமிழக முதல்வரைப் போல....

என்னுடைய வங்கியிலும் கூட முதல் முதலாக மேலாளர் பதவிக்கு உயர்த்தப்படுபவர்கள் முதலில் மிகச் சிறிய கிராம கிளைகளில்
அமர்த்தப்படுவார்கள். மும்பை, கொல்கொத்தா, தில்லி போன்ற பெரு நகரங்களில் கிளை மேலாளராக பணிபுரிய திறமை மட்டுமே ஒருவருக்கு
போதாது. தொழிலில், வணிகத்தில் அனுபவம் மிகுந்த அதிபர்கள், முதலாளிகளின் வசிய வலையில் சிக்காமல் இருக்கக் கூடிய அனுபவமும் (work experience and maturity) மேலாளர்களுக்கு மிகவும் தேவை என்பதை அனுபவ பூர்வமாக உயர் அதிகாரிகள் அறிந்திருப்பதால்தான் தங்களைப்
போன்றே புதியவர்களும் இத்தகைய வலையில் சிக்கி சீரழிந்துபோய்விடக் கூடாது என்று கருதி கிராம, நகர கிளைகளில் தகுந்த அனுபவம் பெற்ற
பிறகே பெருநகர கிளைகளில் மேலாளர்களாக அமர்த்துவார்கள்.

மேலும்... இத்தகைய மாபெரும் ஊழலுக்கு திமுக மட்டுமே பொறுப்பு என்கிற வாதத்தையும் என்னால் ஏற்கவே முடியவில்லை. ஏனெனெலில் ஹிந்து தினத்தாள் ராஜாவுக்கும், பிரதமருக்கும் இடையே எழுதப்பட்ட பல கடிதங்களை வெளியிட்டிருந்தது. அதன்படி ராஜா மற்றும் அவருடைய
அமைச்சரகம் எடுத்த ஒவ்வொரு முடிவுக்கும் பிரதமர் மட்டுமல்லாமல் மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழுவும் (GoM) முழு பொறுப்பு
ஏற்கவேண்டும். பிரதமர் தனிப்பட்ட முறையில் நாணயஸ்தன், நேர்மையானவர் என்று கூறிக்கொள்வதில் பெருமையில்லை தன் கண் எதிரே
நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு ஊழலை, முறை கேட்டை, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தக் கூடிய ஒரு செயலை கண்டும் காணாதவாறு இருந்ததன்
மூலம் ஒரு accomplice என்கிற நிலைக்கு உள்ளாகிறார். ராஜாவுக்கும் அவருடைய அதிகாரிகளுக்கும் சிறை என்றால் குறைந்தபட்சம் பிரதமருக்கும்
மூத்த அமைச்சர்களுக்கும் பதவி இழப்பாவது ஏற்பட வேண்டும்.. அதுதான் நியாயம்.

இந்த காரணத்திற்காகவே திமுக அமைச்சரவையிலிருந்து விலகாமல் பிரதமருக்கும் சோனியாவுக்கும் ராஜாவின் முடிவுகளுக்கு பங்கு உண்டு
என்பதை உரத்தக் குரலில் கூற வேண்டும். அரசியல் ரீதியாக அவர்களுடன் ஒத்துழையாமல் இருக்க வேண்டும். வேறு வழியின்றி பதவி விலகுவது
என்று தீர்மானிக்கும்பட்சத்தில் அரசுக்கு அளித்துவரும் ஆதரவையும் ஒருசேர விலக்கிக்கொள்ள வேண்டும். அமைச்சரவையில் பங்கில்லை ஆனால்
ஆதரவு வெளியிலிருந்து என்பதுபோன்ற அங்கும் இல்லை இங்கும் இல்லை என்பதுபோன்ற முடிவு எடுப்பதால் திமுகவுக்கு எவ்வித நன்மையும்
இல்லை.

இறுதியாக ஒன்று. இனியும் கனிமொழி, ராஜா போன்றவர்கள் நிரபராதிகள் என்கிற பத்தாம்பசலி போக்கை முக கைவிட்டுவிட வேண்டும்.
இருவருமே ஒருவேளை போதிய ஆதாரங்கள் இல்லை என்று உச்சநீதிமன்றத்தால் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படலாம்... டான்சி வழக்கில் ஜெயலலிதா தன் மனசாட்சிக்கு எதிராக தன்னுடைய கையொப்பத்தை தன்னுடையதல்ல என்று கூறியதால்தான் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவர் குற்றவாளி என்பது அவருக்கும் தெரியும் உச்சநீதிமன்றத்திற்கும் தெரியும். அதுபோன்று கலைஞர் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்ட தொகையில் கனிமொழியை சம்மந்தப்படுத்த எந்த ஆவணங்களும் இல்லை என்கிற அடிப்படையில் கனிமொழி விடுவிக்கப்பட வாய்ப்புண்டு. அதுபோன்றே ராஜா எடுத்த முடிவுகளால் மத்திய அரசுக்கு இத்தனை லட்சம் கோடி இழப்பு என்ற வாதத்தை மெய்ப்பிக்க சிபிஐயிடம் எவ்வித ஆவண ஆதாரமும் இல்லை... மத்திய அரசே இழப்பு ஏதும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் மீண்டும் கூறவும் வாய்ப்புள்ளது. அத்தகைய சூழலில் ராஜாவை விடுவிப்பதை தவிர வேறு வழியிருக்காது. ஆயினும் இருவருக்குமே தெரியும் தாங்கள் குற்றவாளிகள்தான் என்பது தெளிவாக தெரியும்...

எனவே இனியும் என் மகள் நிரபராதி, திமுகவை அழித்தொழிக்க காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை சதித்திட்டம் தீட்டப்படுகிறது என்றெல்லாம் முக புலம்புவதை தவிர்த்து இந்த சிக்கலில் இருந்து கட்சியை மீட்க என்ன வழி என்பதை ஆய்ந்து முடிவெடுக்க வேண்டும்.