12 ஏப்ரல் 2011

என் வாக்கு யாருக்கு, ஏன்?

முதலில் இந்த கட்டுரைக்கு 'என் கணிப்பு' என்று தலைப்பிடலாம் என்று நினைத்தேன். ஆனால் கருத்துக் கணிப்புகளுக்கு தடையுள்ளதே என்பது நினைவுக்கு வந்தது. இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஏதோ இப்போதுதான் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்துவதுபோன்றல்லவா இப்போதைய தேர்தல் கமிஷன் இத்தகைய தடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது? ஆகவே நான் என்னுடைய அனுமானங்களை கணிப்பு என்று எழுதப்போக கமிஷன் என்னையும் 'சஸ்பெண்டோ' ஏன், கைதோ செய்துவிட்டால்? (நல்லவேளையாக சஸ்பெண்ட் செய்ய நான் அரசு ஊழியன் இல்லை.. ஓய்வுபெற்ற, வேலையற்ற பேர்வழி!!).

மற்றவர்கள் யாருக்கு வாக்களிக்கப்போகிறார்கள் என்பதை ஓரிரு விழுக்காடு வாக்காளகர்களை விசாரித்துவிட்டு அதன் அடிப்படையில் ஒட்டுமொத்த வாக்காளர்களும் இவர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று கணித அடிப்படையில் 'கணிப்பு' என்ற பெயரில் தங்களுக்கு வேண்டப்பட்ட கட்சிகள்தான் இம்முறை வெற்றியடையும் என்கிற பம்மாத்து வேலைதான் (களவாணித்தனம் என்று எழுத மனம் வரவில்லை) இந்த கருத்துக்கணிப்புகள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துக்கொண்டிருக்கும் சமயத்திலேயே அஇஅதிமுக கூட்டணி பெருவாரியான இடங்களை கைப்பற்றிவிட்டதுபோன்றதொரு மாய சூழலை வடமாநில தொலைக்காட்சி நிறுவனங்கள் உருவாக்க அதை நம்பி தில்லி ஆறு நட்சத்திர விடுதி ஒன்றின் ஒரு சொகுசு தளத்தையே புக் செய்துவிட்டு தலைவி ஏமாந்து நின்றதை நான் பார்த்ததுதானே.

வாக்காளர்களுடைய மனதை எடைபோட, அதுவும் தமிழக வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் கணிப்பதற்கு 'கணித' அறிவு போதாது. அவர்களுடைய மனநிலையை அறிந்துக்கொள்ளக் கூடிய சூட்சுமம் தெரிந்திருக்க வேண்டும். அந்த கலை இன்றைய 'கணித மேதை'களுக்கு அது கைவரப்போவதில்லை. ஆகவே தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் முடிந்தபிறகு புற்றீசல் போன்று வரப்போகின்ற கணிப்புகளையும் நம்பத் தேவையில்லை. வருகின்ற மே மாதம் 13ம் தேதி நள்ளிரவு அல்லது 14ம் தேதி விடியற்காலைவரை காத்திருக்க வேண்டியதுதான் ஒரே வழி.

ஆனால் என்னுடைய ஓட்டு யாருக்கு என்பதை தெரிவிக்கக் கூடிய உரிமை எனக்கு உண்டு அல்லவா?

நானும் என்னுடைய குடும்பமும் பரம்பரை, பரம்பரையாகவே காங்கிரசுக்குத்தான் வாக்களித்திருக்கிறோம் என்பதை பலமுறை கூறியுள்ளேன். அந்த கட்சியின் வேட்பாளர் என்னுடைய தொகுதியில் நிற்கவில்லையென்றால் அந்த கட்சி சார்ந்திருக்கும் கூட்டணி எதுவோ அந்த கட்சியின் வேட்பாளருக்குத்தான் வாக்களித்து வந்திருக்கிறோம். ஆனால் எங்களுடைய துரதிர்ஷ்டம் நான் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு ஒரே வருடத்தில் இரண்டு முறை என்னுடைய குடியிருப்பை மாற்ற வேண்டி வந்ததால் இம்முறை எனக்கு வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. என்னுடைய முந்தைய விலாசத்தில் என்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தும், பட்டியல் வெளிவந்ததும் என்னுடைய விலாச மாற்ற விண்ணப்பத்தை அடுத்திருந்த முனிசிபல் அலுவலகத்தில் சமர்ப்பித்திருந்தும் வழக்கம்போல அரசு இயந்திரம் தனக்கே உரிய தாமதத்துடன் இயங்கி என்னை 'வாக்கு' அற்றவனாக ஆக்கிவிட்டது!

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை, தன்னுடைய இரு மகன்களுக்கும் புதிய பதவிகளை (ஒருவருக்கு துணை முதல்வர் பதவி மற்றவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சர் பதவியாம்!) மட்டுமே பெற்று தந்திருக்கிறார் என்கிற அம்மையாரின் வாதத்தையோ அல்லது தன்னுடைய திருமண மண்டபம் பறிபோனதே என்கிற ஆதங்கத்தில் ஊழல் மன்னர் கலைஞர் என்கிற வெத்துவேட்டு நடிகரின் வாதத்தையோ என்னால் ஏற்க முடியவில்லை.

கலைஞரின் தலைமையிலுள்ள ஆட்சி என்னைப் போன்ற நடுத்தர மற்றும் உயர்நடுத்தர நகரவாசிகளுக்கு என்ன செய்ததோ இல்லையோ கீழ்நடுத்தர மற்றும் வருமைக்கோட்டுக்கு கீழுள்ளவர்களுக்கு என்ன செய்யவில்லை? இதுவரை இல்லாத அளவுக்கு அரசு கருவூலத்தில் இருந்து அவர்களுக்கு இலவச திட்டங்கள் என்ற பெயரில் தாரைவார்த்தது எத்தனை கோடிகள்? அது அனைத்தும் மக்கள் வரிப்பணம்தான் என்றாலும் அதை அனுபவித்தவர்கள் எவரும் வரி செலுத்துபவர்கள் இல்லை என்பதை மறந்துவிட முடியவில்லை. உள்ளவர்களிடமிருந்து எடுத்து இல்லாதவர்களுக்கு அளிப்பதுதான் அரசு திட்டங்கள். அதுவும் ஏழை எளியவர்களுக்கென்று கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு நிறைவேற்றிய பல இலவச திட்டங்கள் அதற்கு ஒரு படி மேலே சென்று ஏழை எளியவர்களுக்கு பல வசதிகளை செய்துக்கொடுத்துள்ளது இன்றைய அரசு. இதில் ஒன்றைக் கூட அம்மையாரின் பத்தாண்டு கால ஆட்சியில் செய்ததில்லை. கடந்த 2006 தமிழக தேர்தலில் திமுக இத்தகைய திட்டங்களை தேர்தல் அறிக்கையில் பட்டியலிட்டபோது இது சாத்தியமில்லை என்று எள்ளி நகையாடியவர்தானே இவர்?

ஆக இந்த ஒரு நல்ல காரியத்துக்காகவே திமுகவுக்கும் அவற்றை நிறைவேற்ற நிதியுதவி அளித்த மத்திய அரசு கூட்டணியின் மூத்த உறுப்பினரான காங்கிரசுக்கும் என்னுடைய ஓட்டு, இம்முறையும்.

மற்றபடி ஊழல் மலிந்துபோய் தமிழகத்தையே 2G மூலம் தலைகுணிய வைத்துவிட்டாரே கலைஞர் அவரை எப்படி மீண்டும் தெரிவு செய்வது என்றால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் அவரை புறக்கணியுங்கள் என்பதுதான் என்னுடைய பதில்.

சட்டமன்ற தேர்தல் நடப்பது தமிழகத்தை யார் ஆளவேண்டும் என்பதற்காக, அதில் மத்தியில் நடந்தவற்றைப் பற்றி சிந்திப்பதில் பலனில்லை. இன்று தமிழக கிராமப்புறத்திலுள்ள வாக்காளர்கள்தான் அதிக அளவில் வாக்களிக்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு எங்களுக்கு என்ன செய்யப்போகிறது என்ற கவலைதானே தவிர 2Gயில் யார் எத்தனை கோடி சுருட்டினார்கள் என்ற கவலை இல்லை. அத்தகைய கவலை இன்று ஊடகங்களில் எழுதிக்கொண்டிருக்கின்ற படித்த மேதைகளுக்குத்தான். கடந்தமுறை நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழர்களை முன் வைத்து இந்த கூட்டணியை தோற்கடிக்கவேண்டும் என்று அணல் பறக்க எழுதிய கூட்டம்தானே இது. மக்களின் அன்றாட பிரச்சினைகள் முன்பு அடிபட்டுபோகிற பிரச்சினைகளை அவர்கள் முன் வைப்பதில் என்ன பயன்?

அதுபோன்ற பிரச்சினைதான் இந்த 2G பிரச்சினையும். அதைவிடவும் திமுகவின் வெற்றியை பாதிக்கக் கூடிய பிரச்சினைகள் பல உள்ளன. விலைவாசி உயர்வு (அதில் பெட்ரோல் விலையுயர்வை பற்றி பாமரன் கவலைப்படப் போவதில்லை), மின் தட்டுப்பாடு, நகரவாசிகளை அன்றாடம் பாதிக்கின்ற பழுதடைந்த சாலைகள் (சென்னைவாசிகளுடைய நிலமை எவ்வளவோ மேல்).... இவைகளை முன்வைத்து அம்மையாரோ அல்லது அவருடைய கூட்டணி தலைவர்களோ அவற்றை முழுமையாக தீர்த்துவிடுவோம் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதை விடுத்து கலைஞரும் அவருடைய குடும்பத்தாரும் கோடி, கோடியாக சுருட்டுகின்றனர் என்று ஒப்பாரி வைப்பதை கேட்டு, கேட்டு மக்களுக்கு வெறுப்புத்தான் வந்திருக்கும். இதை கிலோ கணக்கில் தங்க நகைகள், நூற்றுக் கணக்கில் காலணிகள், ஒரு அறை முழுவதும் 'சூட்கேஸ்கள்' என தன்னுடைய வீட்டில் அடுக்கி வைத்திருந்தவர் பேசினால் எப்படி எடுபடும்? இரு நூறு நபர்கள் தங்கக் கூடிய போயஸ் கார்டன் மாளிகையில் அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் 'உடன் பிறவா சகோதரி மற்றும் அவருடைய குடும்பத்தாருடன் ராஜபோக வாழ்க்கை அனுபவிக்கும் ஒருவர் சென்னை கோபாலபுரத்தில் எவ்வித வசதிகளும் இல்லாத, நடுத்தரவாசிகள் வாழும் பகுதியில் எவ்வித பந்தாவும் இல்லாமல் கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் கலைஞரை கோடி கோடியாய் சுருட்டுகிறார் என்றால்..... அந்த வீட்டையும் தன்னுடைய காலத்திற்குப் பிறகு ஏழை எளியவர்களுக்கென எழுதி வைத்தவர் கலைஞர். அவர் சுருட்டுவதாக கூறுகின்ற கோடிகள் அவர் எங்கு பதுக்கி வைத்திருப்பார் என எண்ண தோன்றுகிறதல்லவா?

இன்றை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் அரசியலில் பரவி இருப்பது ஊழல். அது இந்தியாவில் சற்று கூடுதல்தான். ஏனெனில் இங்கு கையூட்டு கொடுப்பதையே தவறு என்று உணராத மக்கள் இருப்பதுதான். பிறப்பு சான்றிதழிலிருந்து மரண சான்றிதழ் வரை ஒரு 'தொகை'யை கொடுத்துவிட்டு சான்றிதழை விரைவில் பெற்றுக்கொள்வதில் தவறில்லை என்று கருதும் மக்கள் வசிக்கும் சூழலில் கையூட்டு வாங்கும் பழக்கத்தை எப்படி ஒழிக்க முடியும்? அரசியல்வாதிகளை விட்டுவிடுங்கள், இந்திய மருத்துவ கழகத்தின் மெத்தப் படித்த தலைவரே ஆயிரம் கோடி வரை ரொக்கமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்ததைத்தான் சமீபத்தில் கண்டோமே. அவர் வளர்ந்த குடும்ப சூழலும், அவர் படித்த பட்டமும், ஆற்றிய மருத்துவ சேவைகளும் அவரை ஊழலில் இருந்து மீட்கவில்லையே. இன்று அரசு அதிகாரிகளில் 90 விழுக்காட்டுக்கு குறையாமல் இத்தகையோர்தாமே. பிறப்பிலிருந்தே ரத்தத்தில் ஊறிப்போயுள்ள இந்த 'கொடுக்கும்' மற்றும் 'வாங்கும்' பழக்கம் இன்றோ அல்லது நாளையோ மறையப் போவதில்லை.

ஆகவே எதிர்வரும் தேர்தலில் கூட்டணி கட்சிகளை தெரிவு செய்வது ஊழலின் அடிப்படையில் மட்டும் இருக்கலாகாது என்பதுதான் என்னுடைய வாதம். கடந்த ஐந்தாண்டு காலத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் தமிழகத்தில் இப்போதுள்ள இரு முக்கிய திராவிட தலைவர்களான கலைஞர் மற்றும் ஜெயலலிதா ஆகியவர்களுடைய கடந்த கால ஆட்சி திறனை கணித்து வாக்களிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

அந்த அடிப்படையில் ஆட்சித் திறன், எந்த பிரச்சினையையும் பதறாமல் அணுகும் திறன், அனைத்து இனத்தவரையும் முக்கியமாக சிறுபான்மையினரையும் அணைத்து செல்கின்ற திறன், மத்தியிலுள்ள ஆட்சியாளர்களுடன் இணைந்து செயலாற்றுகின்ற திறண் ஆகியவற்றின் அடிப்படையில் கணிப்பிடுகையில் என்னுடைய ஓட்டு நிச்சயம் கலைஞர் தலைமையிலான கூட்டணிக்குத்தான்.

கூட்டணி அமைப்பதிலும் அவர்களை அரவணைத்து செல்வதிலும் நிதானத்தை இழந்து செயல்பட்டதை வைத்து பார்க்கையில் மீண்டும் ஆட்சி செய்யக்கூடிய மனப்பக்குவம் அம்மையாருக்கு வரவில்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

***************

8 கருத்துகள்:

  1. //கூட்டணி அமைப்பதிலும் அவர்களை அரவணைத்து செல்வதிலும் நிதானத்தை இழந்து செயல்பட்டதை வைத்து பார்க்கையில் மீண்டும் ஆட்சி செய்யக்கூடிய மனப்பக்குவம் அம்மையாருக்கு வரவில்லை. // உண்மை.

    பதிலளிநீக்கு
  2. கலைஞருக்கு மாற்று செயலலிதா அல்ல.

    ஆர்வக்கோளாறினால் தவறு செய்யக்காத்திருக்கும் இளைய தலைமுறைக்கு அறிவுரை கூறும் அருமையான கட்டுரை.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ராபின். உங்களைப் போன்றே தமிழக வாக்காளர்களில் பெரும்பாலோனோர் சிந்திக்க துவங்கியுள்ளனர்.

    பதிலளிநீக்கு
  4. கலைஞருக்கு மாற்று செயலலிதா அல்ல.//

    மிகச் சரியாக சொன்னீர்கள் அருள். நன்றி.

    பதிலளிநீக்கு
  5. //பிறப்பு சான்றிதழிலிருந்து//

    அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ்கள் தற்சமயம் ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே வழங்கப்படுகின்றன

    இது தவிர அந்த தாய்-தந்தை வறுமை கோட்டிற்கு கீழ் இருந்தால் அவர்களுக்கு மாநில அரசின் உதவியாக 6000 ரூபாயும் வழங்கப்படுகிறது (இது 1000 ரூபாய் காசோலைகளாக (7ஆம மாதம் முதல் குழந்தை பிறந்து 3 மாதங்கள் வரை மாதன் ஒன்று விதம் ஆறு காசோலைகளாக) வழங்கப்படுகிறது)

    இது தவிர மத்திய அரசின் உதவியாக ரூபாய் 500 பண அஞ்சல் (மணிஆர்டர்) மூலம் அந்த தாயின் முகவரிக்கு நேரடியாக அனுப்பபடும்

    இந்த 6000 தமிழகத்தில் மட்டும் தான்
    500 அனைத்து மாநிலங்களிலும் உள்ளது

    ---

    மருத்துவமனையில் / ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுவது கடந்த சில ஆண்டுகளாகத்தான்

    இந்த திட்டத்தின் நோக்கமே குழந்தையின் தாய் தந்தை அலைகழிக்கப்படக்கூடாது என்பது தான்

    --

    என் கேள்வி

    இந்த திட்டத்தில் சான்றிதழ் ஊழல் இல்லாமல் வழங்கப்படுகிறதா அல்லது இங்கும் ஊழல் நடக்கிறதா

    பதிலளிநீக்கு
  6. //கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துக்கொண்டிருக்கும் சமயத்திலேயே அஇஅதிமுக கூட்டணி பெருவாரியான இடங்களை கைப்பற்றிவிட்டதுபோன்றதொரு மாய சூழலை வடமாநில தொலைக்காட்சி நிறுவனங்கள் உருவாக்க //

    அதாவது பரவாயில்லை

    2004ல் துனை பிரதமர் என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டது நினைவு இருக்கிறதா

    பதிலளிநீக்கு
  7. இந்த திட்டத்தில் சான்றிதழ் ஊழல் இல்லாமல் வழங்கப்படுகிறதா அல்லது இங்கும் ஊழல் நடக்கிறதா?

    நடந்தாலும் நடக்கலாம். கடவுளுக்கே வெளிச்சம்!

    பதிலளிநீக்கு
  8. 2004ல் துனை பிரதமர் என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டது நினைவு இருக்கிறதா//

    ஆமாம். அந்த ஆபத்திலிருந்து நம்மை காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி!

    நேற்றைய Head Lines Today/Marg கருத்து கணிப்பில் மீண்டும் திமுக வெற்றி பெறும் என்று வந்துள்ளதை பார்த்தீர்களா?

    பதிலளிநீக்கு