அடுத்த இரண்டு நாட்களில் என்னுடைய கிளைக்கு மாற்றப்பட்ட ஊழியர்கள் அனைவரும் வந்து பணியில் சேர திறப்புவிழா வேலைகள் சூடு பிடித்தன.
ஒரு வாடகை வாகனத்தைப் பிடித்துக் கொண்டு நானும் என்னுடைய உதவி மேலாளரும் மிகவும் முக்கியமான நபர்களுக்கு அழைப்பிதழை நேரில் சென்று கொடுத்து அழைத்தோம்.
பண்ணையாரின் வீட்டுக்கு மட்டும் அவருடைய வேண்டுகோளுக்கு இணங்கி என் மனைவி, மகளுடன் சென்று அழைப்பிதழைக் கொடுத்தேன்.
‘எல்லாருமிருந்தும் அனாதையா...’ என்ற அவருடைய வேதனை நிறைந்த வார்த்தைகள் அவரைச் சந்தித்ததுமே மீண்டும் என் நினைவுக்கு வந்தன.
என்னையும் என் மனைவியையும் யாரோ நெருங்கிய உறவினர்களை வரவேற்பதுபோல் வரவேற்று உபசரித்தார். என் மகளை தன்னுடைய சொந்த பேத்தியைப் போல் தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சினார். சாதாரணமாகவே எல்லோருடன் ஒட்டிக்கொள்ளும் என் மகளும் அவர் அழைத்ததுமே கையை விரித்து அவர் மேல் தொற்றிக்கொள்ள நான் அவருடைய தோப்பில் தங்கியிருந்த சுமார் இரண்டு மணி நேரமும் அவர் எங்கள் இருவரையும் மறந்துவிட்டு அவளை தூக்கிக்கொண்டு தோப்பு முழுவதும் சுற்றி வந்தார்.
அவருடைய வளர்ப்பு மகளும் என் மனைவியும் சடுதி நேரத்தில் நெருங்கிய தோழிகளாகிப் போனார்கள். நான் தான் தனியாய் போனேன்!
எங்களை வழியனுப்பும் நேரம் வந்தபோது என் மகள் அவரைப் பற்றிக்கொண்டு எங்களிடம் வர மறுக்கும் அளவுக்கு அவர்கள் இருவரும் ஒன்றிப்போனது என் மனைவிக்கு ஆச்சரியமாக இருந்தது.
நான் எத்தனைத் தடுத்தும் கேளாமல் என் மகளை நான் கொண்டு வருகிறேன் என்பது தெரிந்தவுடன் தஞ்சைக்கு ஆளனுப்பி வாங்கி வைத்திருந்த வெள்ளி கொலுசைப் பரிசாக அளித்தார்.
‘சார் நீங்க கண்டிப்பா விழாவுக்கு வரணும்.’ என்று நான் அவரை மீண்டும் அழைத்தபோது, ‘என்ன தம்பி நீங்க? அது என் குடும்பத்துல நடக்கற விழா மாதிரி.. கண்டிப்பா வரேன்..’ என்றவர் என் மனைவியைப் பார்த்து, ‘அம்மா நீங்க அடிக்கடி வரணும்..’ என்றார்.
பிறகு, அவர் என் கைகளைப் பற்றிக்கொண்டு, ‘தம்பி, என்னை வெறும் உங்க பேங்கோட கஸ்டமரா பாக்காதீங்க.. உங்க பொண்ண தூக்கிக்கிட்டு அடிக்கடி வரணும்..’ என்றார்.
நான் அவருக்கு என்ன மறுபடி அளிப்பதென தெரியாமல் சிறிது நேரம் உணர்ச்சிவசப்பட்டு நின்றேன். ‘கண்டிப்பா சார்..’ என்று புறப்பட்டேன்.
வரும் வழியில் என் மனைவி அவரைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். ‘நீங்க அவர பார்த்துட்டு வந்து சொன்னப்ப கூட உங்களுக்கு வேற வேலை இல்லீங்க, உங்க கஸ்டமர நா எதுக்கு வந்து பாக்கணும்னு கேட்டேன். ஆனா அந்த பொண்ணோட ஒரு அரை மணி நேரம் பேசினதுல அந்த ஐயா மனசுல எவ்வளவு வேதனை, சோகம் இருக்குங்கறத புரிஞ்சிக்கிட்டேங்க.. எவ்வளவு பணம், காசு இருந்து என்ன பிரயோசனம்? பக்கத்துலருந்து பாக்கறதுக்கு ஆளுங்க இல்லாம.... எவ்வளவு பெரிய வீடு.. ஆனா எல்லா ரூம்லயும் நூலாம்படை பிடிச்சி.. ஒரு மாதிரி பேய் வீடு மாதிரி..’
உண்மைதான். பணம், காசு உறவுகளுக்கு ஈடாகுமா?
***
அடுத்த நாளும் அதற்கடுத்த நாளும் நான் அழைப்பிதழ் வினியோகிக்கும் வேலையில் மூழ்கிப்போக என் அலுவலர்கள் மீதமுள்ள வேலைகளை உரிமையாளரின் உதவியுடன் செவ்வனே செய்து முடிக்க..
கிளை திறப்பு விழாவுக்கு தயாரானோம்..
திறப்பு விழா தினத்திற்கு முந்தைய நாள் காலையில் என்னுடைய வங்கியின் பொது மேலாளரும், என்னுடைய வட்டார மேலாளரும் கோவையிலிருந்து காரில் வந்து சேர்ந்தனர்.
அதற்கு முந்தைய நாள் நான் ஆயரின் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்திக்க அனுமதி பெற்றிருந்ததால் நாங்கள் மூவரும் அவரை நேரில் கண்டு அழைக்கச் சென்றபோது உடனே அவரைக் சந்திக்க முடிந்தது.
அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே என்னுடைய பொது மேலாளருக்கு அவருடைய எளிமையும், அடக்கமான, அமைதியான பேச்சும் மிகவும் பிடித்துப்போனது. ஆயருக்கும் என் பொது மேலாளருடைய பணிவான பேச்சு பிடித்துப் போக நாங்கள் கேட்காமலேயே அவர் முதல் நாளன்று தஞ்சை மறை மாவட்டத்தின் சேவை மைய கணக்கை என் வங்கியில் திறப்பதாக அறிவித்தார்!
தஞ்சையை சுற்றிலுமிருந்த சுமார் இருபத்தைந்து கிராமங்களில் ஆயர் அவர்களின் தலைமையில் இயங்கி வந்த சேவை மையங்களின் பொறுப்பில் நடைபெற்று வந்த பல்வேறு நலத்திட்டங்களுக்கு தேவையான தொகை இக்கணக்கு வழியாகத்தான் மேலை நாடுகளிலிருந்து வந்துக்கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தபோது என்னுடைய பொது மேலாளர் மிகவும் சந்தோஷத்துடன், ‘thank you so much your Lordship.’ என்றார்.
அவர் பதிலுக்கு மென்மையான புன்னகையுடன், ‘Do you know your Manager is the first Catholic branch Manager in this town? எங்களுடைய சந்தோஷத்தை தெரிவிக்கவே இந்த முயற்சி. அத்துடன் என்னை சந்திக்க வந்த முதல் சந்திப்பிலேயே என்னுடைய சேவை மையங்கள் வழியாக நாங்கள் நடத்தும் எல்லா நலத்திட்டங்களுக்கும் உதவுவதாக இவர் வாக்களித்ததாக என்னுடைய உதவியாளர் கூறியபோது அப்போதே இந்த கணக்கை உங்களுடைய வங்கியில் திறப்பது என்று முடிவெடுத்தேன்.. As you increase your assistance to our service activities I assure you, you would get more and more funds..’ என்றார்.
நானும் என்னுடன் வந்த என்னுடைய இரண்டு உயர் அதிகாரிகளும் அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு புறப்பட்டோம்.
அதற்குப் பிறகு நேராக நாயக்கர், சேட் மற்றும் செட்டியார் உட்பட்ட சில முக்கியமான ரோட்டரி மற்றும் லயன் க்ளப் அங்கத்தினர்களுடைய அலுவலகங்களுக்குச் சென்று அழைப்பிதழைக் கொடுத்தோம்.
மாலையானதும் என்னுடைய உயர் அதிகாரிகள் என்னிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு கோவையிலிருந்து வந்த வாடிக்கையாளருடன் அவர்களுக்கென ஏற்பாடு செய்திருந்த ஃபார்ம் ஹவுசுக்கு சென்று விட நானும் என் கிளை பணியாளர்களும் நள்ளிரவு வரை நாளைய திறப்பு விழா ஏற்பாடுகளைக் கவனித்துவிட்டு அவரவர் வீடுகளுக்கு திரும்பினோம்.
நாளை திறப்புவிழா..
என்னுடைய இரண்டாவது கிளை திறப்பு தினம்.
சென்னையில் நான் திறந்த கிளை திறப்பு விழாவுக்கு முந்தின நாள் வரை ஏற்பாடுகளை நிறைவுற செய்து முடிக்க முடியாமல் அரசியல் கட்சித் தொண்டர்களின் இடையூறும் அதனால் ஏற்பட்ட மனக் கஷ்டங்களும்..
இவை ஏதும் இல்லாமல் தஞ்சைக் கிளையின் திறப்புவிழா ஏற்பாடுகளை எல்லாம் திருப்திகரமாக முடித்துவிட்டு ஒரு சந்தோஷமான மனநிலையுடன் இருந்தேன்..
அடுத்த நாளும் அப்படியே அமையவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கொண்டு வீடு திரும்பி நிம்மதியாக உறங்கினேன்..
தொடரும்..
ஐயா அவர்களுக்கு,
பதிலளிநீக்குஎளிய எதிர் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். அவசியம் கலந்து கொள்ளவும்.
http://pithatralgal.blogspot.com/2006/02/41.html
விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் ! ( Back in Time)
பதிலளிநீக்குமக்கள்திலகம் விழாவில் 'மக்களால்' பிரச்னையானது. ஆயர் திறக்கும் விழாவில் இறையருள் அன்றோ நிறைந்திருக்கும்.
வாங்க ராஜ்,
பதிலளிநீக்குக்ளூவா? நாளைக்கு சொல்றேன்..
வாங்க சிபி,
பதிலளிநீக்குநிச்சயமா வரேன்.. நன்றி.
வாங்க மணியன்,
பதிலளிநீக்குஆயர் திறக்கும் விழாவில் இறையருள் அன்றோ நிறைந்திருக்கும். //
நீங்களே சொல்லிட்டீங்க..
ஜோசப் சார்,
பதிலளிநீக்குதிறப்பு விழா சிறப்பாக நடந்திருக்கும் என நம்புகிறேன் .சீக்கிரம் அடுத்த பதிவு..
அப்புறம்,இந்த popup பின்னூட்டப் பெட்டி திறப்பதற்கு நிறைய நேரமாகிறது.மற்ற பதிவுகளைப் போல popup இல்லாமல் இருக்க முடியாதா?
வாங்க ஜோ,
பதிலளிநீக்குஇந்த popup பின்னூட்டப் பெட்டி திறப்பதற்கு நிறைய நேரமாகிறது.மற்ற பதிவுகளைப் போல popup இல்லாமல் இருக்க முடியாதா? //
செஞ்சிட்டேன்..
THIRAPPU VIZHA INIDHU NADANTHERA
பதிலளிநீக்குULAM NIRAINDHA VAZHTHUKKAL
வாங்க சிவஞானம்ஜி,
பதிலளிநீக்குஉங்களுடைய வாழ்த்துக்கு நன்றி!