திறப்பு விழாவுக்கு இன்னும் சரியாக பத்து நாட்களே மீதமிருந்தன.
அன்று முதல் வேலையாக அச்சகத்திற்குச் சென்று அழைப்பிதழ்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன்.
அதற்குப் பிறகு செய்யவேண்டிய காரியங்களை காலையில் எழுந்தவுடனே ஒரு மணி நேரம் செலவழித்து குறித்துக்கொண்டேன்.. திறப்புவிழாவுக்கு வேண்டி வாங்கிச் சேர்க்க வேண்டிய எல்லா பொருட்களையும் பட்டியலிட்டு என்னுடைய மனைவியிடம் கொடுத்து சரிபார்த்துக்கொண்டேன்.
இன்னும் இரண்டு நாட்களில் என்னுடைய துணை மேலாளர், காசாளர், குமாஸ்தா மற்றும் சிப்பந்தி முதலானோர் பணியில் சேர வந்துவிடுவர்.
அவர்கள் வந்து சேர்ந்ததும் யாருக்கு என்ன பணி கொடுக்க வேண்டும் என்பதையும் அதற்கு முன்பே தீர்மானிக்க வேண்டும் என்பதையும் குறித்து வைத்துக்கொண்டேன்.
காலைச் சிற்றுண்டி முடிந்ததும் என்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அச்சகத்தை சென்றடைந்தேன்..
என்னுடைய அழைப்புதழ்களும், அதற்குண்டான உறைகளும் தயாராக இருந்தன. அழைப்பிதழ் அச்சடிப்பதற்கான தொகையைக் கொடுக்கும்போது அச்சக மேலாளராகவிருந்த பாதிரியாருக்கு முதல் அழைப்பிதழை அவருடைய பெயரை எழுதி நீட்டினேன்..
‘என்ன ஜோசப் முதல் அழைப்பு யாராவது முக்கியமான ஆளுக்கு கொடுக்கறத விட்டுட்டு..’என்று புன்னகையுடன் அதைப் பெற்றுக்கொள்ள தயங்கியவரிடம், ‘என்ன ஃபாதர் நீங்க? இந்த மாதிரி ஃபார்மாலிட்டியெல்லாம் நான் பாக்கறதே இல்லை..’ என்றேன்.
பிறகு அங்கிருந்து புறப்பட்டு நேரே விழா நாயகர் ஆயரின் இல்லம் சென்று என்னை அறிமுகப்படுத்திய பாதிரியாரைச் சந்தித்து மாதிரி பார்க்க ஒரு அழைப்பிதழை அவரிடம் கொடுத்தேன். பிறகு தஞ்சையை சுற்றிலும் உள்ள பாதிரியார் நண்பர்களுடைய விலாசங்களைக் கேட்டு பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினேன்..
அடுத்தது நாயக்கர் அலுவலகம்..
அவரிடம் அவருடைய நண்பர்கள் குழாமின் விலாச பட்டியலை தயாரித்து வைக்கும்படி கேட்டுக்கொண்டு.. நேரே சேட் அலுவலகம் சென்று அதையே அவரிடம் கேட்டுக்கொண்டேன்..
பிறகு, நேரே என் அலுவலகம் சென்றேன்..
நான் சென்ற நேரத்தில் மின்சார வேலை நடந்துக்கொண்டிருந்தது என் கட்டட உரிமையாளரின் மூத்த சகோதரர் கூடவே நின்று மேற்பார்வைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
என்னைப் பார்த்ததும் புன்னகையுடன் என்னை நோக்கி வந்தார். ‘சார் நீங்க சொன்னா மாதிரியே முன்னால கடையில தளம் போடற வேலை முடிஞ்சிருச்சி.. உடைஞ்சிருந்த கவுண்டர கூட ரிமூவ் பண்ணி தச்சர் பட்டறக்கு அனுப்பிட்டேன்.. நாம நினைச்சா மாதிரி பெருசா டாமேஜ் ஒன்னும் ஆவலை.. முன்னாலருக்கற லாமினேஷன் ஷீட் மட்டும்தான் டாமேஜ் ஆயிருக்கு.. மர வேலை அதிகமா தேவையிருக்காதுன்னு தச்சரே சொல்லிட்டார். அநேகமா இன்னும் ஒரு நாலு நாளைல வேல முடிஞ்சிரும்..’
‘கேக்கறதுக்கு சந்தோஷமா இருக்கு சார்.’ என்றேன். ‘அப்புறம் சார், நாளை மறுநாள் நம்ம அசிஸ்டெண்ட் மானேஜரும், மத்த ஸ்டாஃபும் வந்துருவாங்க. அதுக்குள்ள எலெக்ட்ரிக் வேலை முடிஞ்சிரணும். ராத்திரி வேணும்னாலும் இருந்து முடிச்சி கொடுத்துட்டா பரவால்லை.. ஏன்னா இன்னும் ரெண்டு மூனு நாளைக்கு எனக்கு இன்விடேஷன் கொடுக்கற வேலை இருக்கு.. அதனால என்னால வந்து பார்த்துக்க முடியாது சார். அப்புறம் மேல முகப்புல நேம் போர்ட் ஃபிக்ஸ் பண்றதுக்கு உள்பக்கமா ரெண்டு குட்டி மேடை அமைச்சித்தரணும்..’
நான் மூச்சு விடாமல் பேசி முடிக்கும்வரை பொறுமையாய் இருந்தவர் நான் முடித்ததும், ‘ஒன்னுத்துக்கும் கவலைப்படாதீங்க சார். எங்கிட்ட பொறுப்பை விட்டுட்டு நீங்க பாட்டுக்கு ஆளுங்கள இன்வைட் பண்ற வேலைய பாருங்க.. வயரிங் வேலை இன்னைக்கி பகலுக்குள்ளயே முடிஞ்சிரும்.. நீங்க ஃபிட்டிங்குக்கு மட்டும் கடையில சொல்லிட்டு போயிருங்க.. நம்ம எல்க்ட்ரிஷியன்கிட்ட குடுக்க சொல்லிட்டு போய்ட்டா போறும் சார். மத்தத எல்லாம் நான் பார்த்துக்கறேன்.’ என்றார்.
அவர் கூறியபடியே திறப்புவிழாவுக்கான எல்லா வேலைகளையும் அவரும் அவருடைய மகனும் அவருடைய பணியாட்களும் எனக்கு எவ்வித சிரமுமில்லாமல் அழகாக செய்துக்கொடுத்தார்கள்.
தஞ்சையில் நான் சந்தித்த முக்கிய புள்ளிகள், வர்த்தகர்கள், ரோட்டரி மற்றும் லயன் க்ளப் அங்கத்தினர்கள் எல்லோருடைய பெயரையும் நான் அவ்வப்போது என்னுடைய நாட்குறிப்பில் குறித்துவைத்திருந்தது மிகவும் வசதியாயிருந்தது.
இப்போது உள்ளதுபோல் கணினி வசதி இல்லாத காலமாயிற்றே. நாட்குறிப்பில் குறித்துவைத்திருந்த பெயர்களை திருச்சியிலிருந்து லாக்கர் பெட்டகத்துடன் வந்திருந்த புத்தம்புது கோத்ரெஜ் தட்டெழுத்து இயந்திரத்தை திறந்து நேரடியாக அழைப்பிதழ் உறையில் அடிக்க ஆரம்பித்தேன்.
அச்சக பாதிரியார் கூறியது நினைவுக்கு வர முதலில் தஞ்சை ஆயருடைய பெயருக்கு முதல் உறை, அடுத்து நான் சென்று சந்தித்த பண்ணையார் துவங்கி எல்லோர் பெயரையும் தட்டச்சு செய்து முடித்தபோது மாலையாகிப் போயிருந்தது.
சரி இன்றைக்கு இதுபோதும் என்று நிறுத்திவிட்டு எழுந்தேன். அலுவலகத்தைவிட்டு வெளியேறி சாலையில் நிறுத்தி வைத்திருந்த என்னுடைய வாகனத்தை நெருங்கியபோது அதே சாலையில் இருந்த ஒரு வங்கி மேலாளர் என்னை நோக்கி வந்து, ‘என்ன சார் ஓப்பனிங் வேலையெல்லாம் ரொம்ப ஜரூரா நடக்குது போலருக்கு. எங்க ஆஃபீஸ் பக்கமே வரமாட்டேங்கறீங்க?’ என்றார் புன்னகையுடன்...
அவர் கூறியது உண்மைதான். என்னுடைய வேலைகளுக்கிடையில் என்னுடைய சக வங்கி மேலாளர்களுடனான தொடர்பு கடந்த ஒரு மாதமாக அறவே நின்று போயிருந்தது.
‘சாரி சார். ஒத்த ஆளா எல்லா வேலையையும் பாக்க வேண்டியிருக்குதா, நேரமே போதலை.. அதனாலதான் நம்ம மேனேஜர்ஸ் யாரையுமே பாக்க முடியாம போயிருச்சி. அப்புறம்.. என்ன விசேஷம் சார்?’ என்றேன்.
‘நம்ம பேங்கர்ஸ் க்ளப் மீட்டிங் இன்னைக்கி ஈவ்னிங் காஸ்மோபாலிட்டன் க்ளப்ல அரேஞ்ச் பண்ணியிருக்கோம். நம்ம டிஸ்ட்ரிக்ட் மாஜிஸ்ட்ரேட் அட்ரஸ் பண்றார். உங்கள இன்வைட் பண்றதுக்கு உங்க ஃபோன் ட்ரை பண்ணேன். அடிச்சிக்கிட்டே இருந்தது. யாரும் எடுக்கலை.’
‘ஆஃபீஸ் ஃபோனும் இப்போதைக்கு வீட்லதான் இருக்கு சார். இன்னும் ரெண்டு மூனு நாளைல இங்க ஷிஃப்ட் பண்ணிருவேன். கவுண்டர் வேலையெல்லாம் முடியட்டும்னு பார்த்தேன். மீட்டிங்குக்கு கண்டிப்பா வந்திடறேன்.’ என்று கூறிவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றேன்.
பேங்கர்ஸ் க்ளப் என்பது எல்லா ஊர்களிலும் உண்டு. அந்த ஊரில் இயங்கும் எல்லா வங்கிகளுடைய மேலாளர்களும் அதில் அங்கத்தினர்களாக இருப்பர்.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை அங்கத்தினர்கள் கூடி பொதுவான பிரச்சினைகளைக் குறித்து ஆலோசனை நடத்த இந்த அமைப்பு மிகவும் உதவியாக இருந்தது.
இக்கூட்டங்களில் மிகவும் முக்கியமாக விவாதிக்கப்படும் விஷயம் யார், யார் எந்தெந்த வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றியுள்ளார்கள் என்பதுதான். அத்துடன் சில வாடிக்கையாளர்கள் ஒரே நிறுவனத்தின் பேரில் பல வங்கிகளில் ஒரு வங்கிக்குத் தெரியாமல் வேறு வங்கியில் கடன் பெற முயல்வதுண்டு. சென்னையைப் போன்ற பெரு நகரங்களில்தான் இத்தகைய தில்லுமுல்லுகள் அதிகம் நடக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் தஞ்சை போன்ற சிறு நகரங்களிலும் இத்தகைய வாடிக்கையாளர்கள் இருப்பது இவ்வமைப்பின் கூட்டங்களில் சிலவற்றில் பங்கேற்றதும்தான் எனக்கு தெரிய வந்தது. மேலும் இத்தகைய கூட்டங்களில் சட்டம், வர்த்தகம், தொழில் சம்பந்தப்பட்டவர்களைப் சிறப்புரையாற்ற அழைப்பதும் வழக்கம்.
அன்றைய மாலை நடந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றிய தஞ்சை மாவட்ட மாஜிஸ்ட்ரேட் ஒரு சுவையான விஷயத்தை அன்று எடுத்துரைத்தார்.
கும்பகோணத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவருக்கெதிராக ஒரு வங்கி தொடுத்த வழக்கைப் பற்றி அவர் பேசியதைக் கேட்டபோது அங்கிருந்த எல்லோருமே அசந்துப் போனோம்.
குறிப்பிட்ட வணிகர் கும்பகோணத்தில் இருந்த தன்னுடைய மொத்த பல்பொருள் அங்காடியின் கிளையொன்றை தஞ்சையில் திறப்பதற்காக தஞ்சையிலிருந்த ஒரு அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்றில் கடனுதவி பெற்று கிளையையும் துவங்கி சுமார் ஒரு வருடம் கழித்துத்தான் அப்படி ஒரு கிளையே கிளையே தஞ்சையில் துவக்கப்படவில்லையென்று கிளை மேலாளருக்குத் தெரிந்ததாம்!
சரி, கும்பகோணத்திலாவது அவருக்கு மொத்த அங்காடி இருக்கிறதா என்றால் அதுவும் இல்லையாம்!
வழக்கு நீதிமன்றத்தில் வந்து வாத பிரதிவாதங்கள் முடிவடையும் தறுவாயில் சம்பந்தப்பட்ட கிளை மேலாளரை சாட்சியம் கூற வங்கி அழைத்தபோது எதிர்தரப்பு வழக்கறிஞர் அவரைப் பார்த்து கேட்ட முதல் கேள்விக்கே பதிலளிக்க முடியாமல் நின்றாராம் அவர்.
வழக்கறிஞர் அப்படி என்ன கேள்வி கேட்டிருப்பார் என்று ஊகிக்க முடிகிறதா என்றார் உரையாற்றியவர். அங்கு குழுமியிருந்த அனைத்து மேலாளர்களும் என்னவாயிருக்கும் என்று விழித்தோம்.
பிறகு அவரே கூறினார். கேள்வி இதுதான் ‘உங்களுடைய வங்கியில் கடன் பெற்ற நபர் இந்த அறையில் இருக்கிறாரா என்று பார்த்துச் சொல்லுங்களேன்.’
வங்கி மேலாளர் அறையை சுற்றி பார்த்துவிட்டு இல்லை என்றார். அதாவது, எதிர்தரப்பு வழக்கறிஞரின் இருக்கைக்கு அருகிலேயே அமர்ந்திருந்த வாடிக்கையாளரை, அதாவது வழக்கு தொடுக்கப்பட்ட வாடிக்கையாளரையே வழக்கு தொடுத்த வங்கி மேலாளரால் அடையாளம் காட்ட முடியவில்லை!
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றார் அவர். வங்கியில் கடன் பெற வந்த வாடிக்கையாளரைச் சந்தித்த மேலாளர் அதற்குப் பிறகு அவரைச் சந்திக்கவேயில்லை. அவர் திறப்பதாய் இருந்த கிளையின் முழுவிலாசமும் அவருடைய கடன் விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தும் வங்கியின் தரப்பிலிருந்து யாருமே அவ்விலாசம் உண்மையானதா என்றோ அல்லது அவ்விலாசத்தில் அத்தகைய கிளை திறக்கப்படவுள்ளதா என்றும் விசாரிக்கவில்லை. சரி, கடன் தொகை கொடுத்தப் பிறகாவது யாராவது அவரைச் சென்று சந்தித்திருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.. அதுமட்டுமா? அவர் தன்னுடைய கடன் கணக்கை (Overdraft account) சரிவர நடத்துகிறாரா (Operate) என்று வங்கி மேலாளரோ அல்லது சம்பந்தப்பட்ட இலாக்கா அதிகாரியோ கவனித்திருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. கடன் வழங்கப்பட்டு சுமார் ஒன்பது மாதம் கழித்து மத்திய அலுவலகத்திலிருந்து தணிக்கை செய்ய வந்த ஆய்வாளர்கள் கடன் கணக்கில் எந்தவித வரவு செலவும் இல்லாததைக் கண்டுப்பிடித்து மேலாளருடைய கவனத்திற்குக் கொண்டு சென்றபோதுதான் அவருக்கே விஷயம் தெரிய வந்ததாம்!
‘கடன் தொகை எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? ஐந்து லட்சம்! இது எவ்வளவு பெரிய தொகை? நீங்கள் பொது மக்களின் பணத்தை கையாளும் பொறுப்பில் உள்ளவர்கள் என்பதை மறந்துவிட்டு இப்படி பொறுப்பில்லாமல் நடந்துக்கொள்ளலாமா?’ என்ற தர்மசங்கடமான கேள்விகளை அவர் தொடுத்தபோது அங்கத்தினர் அனைவரும் வெட்கித்தலைகுனிய வேண்டியிருந்தது.
தொடரும்
வாங்க ராஜ்,
பதிலளிநீக்குஇருபத்தைந்து வருடங்களுக்கு முன் ஐந்து லட்சம் என்பது இன்றைக்கு சுமார் ஐம்பது லட்சத்துக்கு சமம்.
ஆனால் இன்றும் எத்தனை, எத்தனை கோடிகள் வங்கி அதிகாரிகளின் அலட்சியப்போக்கின் காரணமாக விழலுக்கு இறைத்த நீராய் போகின்றன என்று தெரியுமா? இதை நான் இந்த தொடரில் எழுத முடியாது ஆனால் நிச்சயம் சூரியன் தொடர் நாவலில் எழுதுவேன்.. அதாவது நிஜப் பெயர்களை மறைத்து..