அதுமட்டுமா? லாட்ஜ் ரூமுக்குள்ள வாடகைக்கு அறைகள் எடுப்பவர் கவனத்திற்கு என்று சட்டமடித்து ஒரு அறிக்கை வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்களே.. அதே போன்ற ஒரு பட்டியலை அடுத்த நாளே வீட்டுக்காரம்மாள் என் மனைவியிடம் வாசித்தபோது..
இந்த பழைய ஜெனரேஷனுக்கும் புதிய ஜெனரேஷனுக்கும் ஒரு போதும் ஒத்துப்போகாது என்பார்களே அப்படித்தான் இருந்தது திருமணம் முடிந்து மூன்றே வருடங்கள் ஆகியிருந்த எங்களுக்கும் முப்பது வருடங்களுக்கு மேல் ஆகியிருந்த எங்களுடைய வீட்டுக்காரர்களுக்கும்.
அத்துடன் அவர் உயர் அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்ததால் வீட்டில் குடியிருப்பவரையும் அவருடைய அதிகாரத்திற்குக் கீழ் பணிபுரிபவர்கள் என்று நினைத்துவிட்டார்போலிருந்தது அவருடைய நடவடிக்கைகள்!
நான் அவருடைய வீட்டில் குடிபுகுந்த அன்றே இரவே எங்கள் இருவரையும் அவர்கள் குடியிருந்த கீழ் வீட்டுக்கு அழைத்து ஒரு பழைய காலத்து, ஆனால் துலக்கி பளபளப்பாயிருந்த பித்தளைச் செம்பில் வெல்லக் காப்பி ஒன்றைக் கொடுத்து (பாப்பாவுக்கு பால் மட்டும். அவர்கள் வீட்டிலேயே ஐந்தாறு கொழுத்த பசுக்கள் இருந்தன.. அவர்கள் வீட்டில் குடியிருப்பவர்கள் கண்டிப்பாய் காலையில் அரை லிட்டர் (குறைந்த பட்சம்) மாலையில் அரை லிட்டர் பசும்பால் வாங்கியாக வேண்டும் என்பது அவர் இட்ட பல நியதிகளில் ஒன்று) பேச்சைத் துவக்கினார்கள்.
ஆரம்ப குசலங்களுக்குப் பிறகு வீட்டுக்காரர் தொண்டையைக் கனைத்துக்கொண்டு ஆரம்பித்தார்..
‘நாங்க வீட்டை வாடகைக்கு கொடுத்துத்தான் ஜீவிக்கணும்னு இல்லைன்னு உங்களுக்கு தெரியும்தானே?’
நான் பதிலளிக்காமல் என் மனைவியைப் பார்த்தேன். பிறகு, ‘ஒங்க வீட்டையும் தோட்டத்தையும் பார்த்தாலே தெரியுதே சார்.’ என்றேன்.
அவர் பெருமையுடன் தன் மனைவியைப் பார்த்தார். அவருடைய மனைவியின் முகமும் பெருமையில் விகசித்தது.
‘You are right. நாங்க ரெண்டு பேருமே பரம்பரையா பணக்கார குடும்பத்துல வர்றவங்க.. இந்த வீடு நான் சர்வீஸ்லருக்கும்போதே கட்டுனது. சுமார் நாப்பது வருஷம் இருக்கும். (அதான் வீட்டு முகப்புலய 1939ன்னு எழுதி வச்சிருக்கீங்களே.. என்று நினைத்துக்கொண்டேன்.) ஒவ்வொரு செங்கலும் பார்த்து, பார்த்து கட்டுனது (அவர் எலெக்ட்ரிக் பொறியாளர் என்று சொன்னதாக ஞாபகம்!). அதனால அதுல ஒரு சின்ன கீறல் விழுந்தாக் கூட என் ஒடம்புல விழுந்தா மாதிரி இருக்கும்.. (அதாவது ஆணி கீணி அடிக்காதீங்கடான்னு மரியாதையா சொல்றார்!)..
இந்த எடத்துல ஒன்னு சொல்லிக்கணும்.. இல்லன்னா அப்புறம் மறந்துரும்..
நான் அவருடைய வீட்டில் குடியிருந்த சமயத்தில்தான் இலங்கையில் ரூபவாஹினி தொலைக்காட்சி ஒளிபரப்பு துவங்கப்பட்டது. அதே சமயத்தில் இந்தியாவில் ஆசிய தடகளப் போட்டியும் நடந்தது. அப்போது நம் மத்திய அரசு பெருந்தன்மையுடன் SKD எனப்படும் அசெம்ப்ளி செய்யப்பட்ட கலர் தொலைக்காட்சிப் பெட்டிகளை இறக்குமதி செய்து விற்க அனுமதியளித்தது. எல்லோரும் அவர்களுக்கு வேண்டிய தொ.கா. பெட்டிக்கு முன் பதிவு செய்யவேண்டும்.
நான் எனக்காக ஒன்றும் என் மூத்த மைத்துனருக்காக ஒன்றும் (அவர் க்ரீக் கப்பலில் பணியாற்றிக்கொண்டிருந்தார்) முன்பதிவு செய்து நான் குறிப்பிட்ட வீட்டில் இருந்தபோதுதான் டெலிவரி கிடைத்தது.
ரூபவாஹினி ஒளிபரப்பு திருச்சி, தஞ்சை போன்ற பகுதிகளில் தெளிவாகத் தெரிவதாக எனக்கு தொ.கா.பெட்டியை விற்றவர் கூறினார் (அவரும் என் கிளையின் வாடிக்கையாளர்தான்). ஆனால் சுமார் இருபதடி உயர ஆண்டெனா பொருத்த வேண்டியிருந்தது. சரி, ஆனை வாங்கிட்டு அம்பாரம் வாங்க தயங்குவானேன் என்று நினைத்து அவரிடமே வந்து பொருத்தித் தாருங்கள் என்று கூறினேன். அவருடைய பணியாள் ஒருவர் இருபதட நீள, கனத்த இரும்பு கம்பத்தை ஒரு வண்டியில் போட்டு எடுத்துக்கொண்டு என்னுடைய வீட்டு வாசலில் மூடப்பட்டிருந்த இரும்பு கேட்டில் அதே இரும்புக் கம்பத்தால் லேசாக தட்டி ஒலியெழுப்பி இருக்கிறார். நான் அப்போது அலுவலகத்தில் இருந்தேன். என் மனைவியிடம் ஏற்கனவே தொலைப்பேசியில் இன்னார் வருவார், அவரை ஆண்டெனா பொருத்த அனுமதிக்கும்படி கூறியிருந்தேன்.
அப்போதே அவர், ‘ஏங்க, நீங்க பாட்டுக்கும் ஆண்டெனா அடிக்கறேன் அம்பாரம் தூக்கறேன்னு ஆள அனுப்பிச்சிட்டு (தூத்துக்குடி பாஷையில் என் மனைவி இவ்வாறு கேலியாக இடக்கு செய்யும்போதெல்லாம் திருமணமான ஆரம்பத்தில் எனக்கு வேடிக்கையாக இருக்கும்.. போகப்போக பழகிவிட்டது) நம்ம வீட்டுக்காரர்கிட்ட யார் மாட்டிக்கிட்டு முளிக்கிறது? அவரே நாம வந்த முதல் நாளே ஆணியே அடிக்கக்கூடாதுன்னார்.. நீங்க என்னடான்னா இருபதடியில ஆண்டெனா அடிக்கப் போறேங்கறீங்க? என்னவோ.. நீங்களாச்சு உங்க வீட்டுக்காரராச்சு.. அவர் ஏதாச்சும் சொன்னா நா ஒன்னும் போய் கேக்க மாட்டேன்.’ என்றார் ஜகா வாங்கினார்.
நான், ‘அதெல்லாம் ஆண்டெனா அடிக்க வந்தவர் பாத்துக்குவார். வீட்டுக்காரர் ஏதாச்சும் சொன்னார்னா பாத்துக்கலாம்.’ என்ற அசட்டு தைரியத்துடன் கடை ஊழியரை அனுப்பி வைத்தேன். எனக்கு டி.வி பெட்டியை விற்றவருக்கு என் வீட்டுக்காரரை நன்றாகத் தெரியும் போலிருக்கிறது. ‘அவரு ஆணியே அடிக்கக் கூடாதும்பாரே சார்? நம்ம ஃப்ரெண்டு ஒருத்தர் குடிபோய்ட்டு அவரோட தொல்லை தாங்க முடியாம மூனே மாசத்துல ஓடிப்போய்ட்டாரே.. என்னமோ நீங்க சொல்றீங்களேன்னு ஆள அனுப்பறேன். அவர் அடிக்க சம்மதிச்சதுக்கப்புறம் ஆண்டெனாவுக்கு காச வாங்கிக்குறேன்..’ என்றார். அவருடைய வர்த்தகத்திற்கு கடனுதவி அளித்த மேலாளராயிற்றே என்று பரிதாபப்பட்டார் போலிருக்கிறது.
சரி விஷயத்துக்கு வருவோம்..
ஆண்டெனா கம்பத்தைப் பார்த்தவுடனே என்னுடைய வீட்டுக்காரர் கேட்டைத் திறக்காமலே, ‘இந்த வீடு இல்லை’ என்று அவரை உள்ளே விட மறுத்திருக்கிறார்.
‘சார் இந்த வீட்ல பொருத்தித் தரச்சொல்லி இந்த ஐயாதான் சொல்லியனுப்பினார்’ என்று என் பெயர் பொறிக்கப்பட்ட அட்டையை அவர் வீட்டுக்காரரிடம் கொடுத்திருக்கிறார்.
அவர் உடனே, ‘அப்படியா? இங்கயே இரு.. அவருக்கென்ன தைரியம்? சொல்லாம கொள்ளாம இவ்வளவு பெரிய ஆண்டெனா அடிக்கறேன்னு உங்கிட்ட கொடுத்தனுப்பியிருக்காரு..’ என்று நேரே கோபத்துடன் வீட்டுக்குள் சென்று என்னை தொலைப்பேசியில் அழைத்து, ‘என்ன ஜோசப் உங்க மனசுல என்ன நினைச்சிக்கிட்டிருக்கீங்க?’ என்றார் நான் ஒலிவாங்கியை எடுத்தவுடன்.
நான் பதிலுக்கு, ‘சார் டி.வி வாங்கியாச்சி. ஆண்டெனா அடிக்கக் கூடாதுன்னா எப்படி சார்? உங்க வீட்டுக்கு ஏதாச்சும் ஆச்சின்னா நான் போகும்போது ரிப்பேர் பண்ணிக் குடுத்தடறேன். சரி அப்படியும் நீங்க சம்மதிக்கலேன்னா, என்ன சார் இந்த மாதிரி வீட்ட எனக்கு புடிச்சிக் குடுத்தீங்களேன்னு போய் உங்க பாதிரியார் நண்பர்கிட்ட சொல்லிக்கறேன்.. ஏன்னா அவர் சொல்லித்தான் உங்க வீட்டுக்கு வந்தேன். அவர் உங்களப்பத்தி முன்னமே சொல்லியிருந்தார்னா நிச்சயம் உங்க வீட்டுக்கு வந்தே இருக்க மாட்டேன்..’ என்றேன் சூடாக, வருவது வரட்டும் என்ற நினைப்பில்.
அவர் நான் இப்படி பேசுவேன் என்று எதிர்பார்க்கவில்லை போலிருக்கிறது. அதற்கும் காரணம் இருக்கிறது. அவரும் என்னைப் போலவே கத்தோலிக்க கிறிஸ்துவர். நான் சென்றுக்கொண்டிருந்த மறை மாவட்ட தலைமை தேவாலயமான தூய இருதய ஆண்டவர் தேவாலய பங்கைச் சார்ந்தவர்தான் அவரும். அத்துடன் அவர் பங்கு பேரவைத் தலைவர். அவர் மிகவும் நல்லவர், அடக்கமும் பொறுமையுள்ளவர், தானதர்மம் செய்வதில் (எச்சிக் கையால கூட ஈ ஓட்டமாட்டான் என்பார்களே அந்த ரகத்தைச்சார்ந்தவர் அவர் என்பது நான் அனுபவத்தில் கண்ட உண்மை. அது வேற விஷயம்) வல்லவர் என்றெல்லாம் என்னுடைய பங்குக் குரு அவர் தலைமையேற்று நடத்திய ஒரு விழாவில் அவரை வரவேற்று பேசியிருப்பது எனக்கு தெரியும் என்பது அவருக்கும் தெரியும்.
இந்த சூழ்நிலையில் நான் போய் அவரைப் பற்றி ஆயரின் இல்லத்தில் பணிபுரிந்த, அதுவும் ஆயருக்கு காரியதரிசியாக இருந்த பாதிரியார் ஒருவரிடம் சொன்னால் அவருடைய இமேஜ் என்னாவது என்று நினைத்திருப்பார் போல் தெரிகிறது. நான் அப்பாதிரியாரிடம் போய் முறையிடுவேன் என்றதும் அப்படியே அடங்கிப் போய், ‘இல்ல மிஸ்டர் ஜோசப், நான் சொல்ல வந்ததை நீங்க முழுசா கேக்கலை.. என் கிட்ட ஒரு வார்த்தை காலையிலேயே சொல்லியிருக்கலாமேன்னுதான் நான் கேக்க வந்தேன்.’ என்று பின்வாங்கினார்.
நான் உடனே, ‘தப்புத்தான் சார். மன்னிச்சிருங்க.’ என்றேன்.
உடனடியாக நான் என் தவறை ஒத்துக்கொள்ளவே அவர் சமாதானமாகி சரி என்று வைத்துவிட்டார்.
ஆனால் ஆண்டெனா அடிக்கச் சென்றவர் வீட்டுக்காரர் மேல் இருந்த கோபத்தில் சற்று வலுவுடன் மொட்டை மாடி சுற்றுச்சுவரில் ஓட்டையிட, சுவரின் ஒரு பகுதி அப்படியே பிளந்து சுமார் இருபதடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தது.. நல்ல வேளை, அது விழுந்த நேரத்தில் எப்போதும் பகல் நேரத்தில் அங்கு படுத்து உறங்கிக்கொண்டிருக்கும் வேலையாள் சற்று முன்னர்தான் எழுந்து பால் கறக்க சென்றிருக்கிறார்.
அதைப் பார்த்த வீட்டுக்காரர், ஆண்டெனா அடிக்க சென்றவரின் ஜாதிப் பெயரை சொல்லி அடிக்கப் போக அவன் ஆத்திரத்தில் அவரை திருப்பியடிக்கப் போக ஒரே களேபரமாகி என் மனைவி என்னை அழைத்து, ‘உடனே ஓடி வாங்க. வீட்டுக்காரர் இங்க ஒரே பெரளி பண்றார்’ என்றாள்.
நான் உடனே என்னுடைய கட்டிட உரிமையாளரின் மூத்த சகோதரரை அழைத்துக்கொண்டு செல்லலாம் என்று நினைத்து அவரிடம் சென்று விஷயத்தைக் கூறினேன். அவருக்கும் என் வீட்டுக்காரரை நன்றாக தெரிந்திருந்தது, ‘என்ன சார்? என்கிட்ட ஒரு வார்த்தை இவர் வீட்டுக்குத்தான் போப்போறேன்னு சொல்லக்கூடாதா? வேணாம்னு தடுத்திருப்பேனே.. அவர் போற மாட்டுவண்டிக்குக் குறுக்காலக்கூட இந்த ஜாதிப்பசங்க வரக்கூடாதுன்னு நினைக்கிறவர் அவர்.. அவர் வீட்டுக்குள்ள போயி இவனுங்க அவரவே அடிக்கப்போனா என்னாவறது? இந்நேரம் அவர் போலீசுக்கு போன் பண்ணாலும் பண்ணியிருப்பார். நான் சொல்லிப் பாக்கறேன்.’ என்று கூறிவிட்டு என்னுடன் புறப்பட்டு வந்தார்.
நாங்களிருவரும் சென்றடைந்த நேரத்தில் என்னுடைய வீட்டுக்காரர் அதீத கோபத்தில் முகமெல்லாம் சிவந்து ரெஸ்ட்லெஸ்சாகக் காணப்பட்டார். ஆனால் என்னுடன் வந்த பாயின் ஒரு சமயோசித செய்கையால் அவருடைய கோபம் அடங்கி பிரச்சினையை அடுத்த அரை மணி நேரத்தில் சுமுகமாக முடிக்க முடிந்தது.
தொடரும்..
வாங்க ராஜ்,
பதிலளிநீக்குஅது சாதாரண ஆண்டெனா இல்ல ராஜ். மொட்டை மாடியிலருந்து இருபதடி கம்பத்துல சுமார் எட்டை நீளத்தில இருக்கும். சென்னை தூர்தர்ஷனுக்கு நீளமாவும், ரூபவாஹினிக்கு குட்டையாவும் பதினாறு எலிமெண்டோட பாக்கறதுக்கே என்னவோ டிவி டவர் மாதிரி இருக்கும்.
அது காத்துல ஆடாம இருக்கறதுக்கும் நாலா பக்கமும் கம்பி வச்சி இழுத்து மாடி கைப்பிடி சுவர்ல கட்டணும். இருபதடி கம்பத்த நிறுத்தறதுக்கு கைப்பிடி சுவரோட ஒரு பக்கத்துல இருந்து மறுபக்கம் வரைக்கு துளைச்சி கனமான யூ க்ளாம்ப் ஃபிக்ஸ் பண்ணி போல்ட் போட்டு முடுக்கணும். அப்பத்தான் ஆடாம நிக்கும். அப்புறம் இருபதடி உயரத்துலருக்கற ஆண்டெனா திசை மாறிருச்சினா கீழ இருந்தே கரெக்ட் பண்றதுக்கு ஒரு சின்ன மோட்டார் கம்பத்துல நம்ம கை எட்டற உயரத்துல ஃபிக்ஸ் பண்ணணும். அதுலருக்க லீவர வச்சி ஈசியா ஆண்டெனாவ அட்ஜஸ்ட் பண்ணலாம். ஆண்டெனா கொஞ்சம் திரும்பனா போறும் ஒரே புள்ளியா விழும்.. இண்ட்ரெஸ்டிங்கா பார்த்துக்கிட்டிருக்கறப்ப பார்த்து ஆண்டெனா கோச்சிக்கும்..
இப்போ டெஸ்க்டாப் வச்சி, கேபிள்ல டிஜிட்டல் ஒளிபரப்ப பாக்கறவங்களுக்கு அந்த காலத்துல நாங்க பட்டபாடு புரியாது..
வெளிக்கிழமை ராத்திர ஒலியும் ஒளியும் போடற நேரத்துல ரோடே காலியாயிரும்.. அப்புறம் சனிக்கிழமை தமிழ் படம் (க.வெ.தான்).. செவ்வாய்கிழமை டிராமா..அதெல்லாம் ஒரு காலம்..
எட்டை நீளத்தில இருக்கும்.//
பதிலளிநீக்குசாரி ராஜ், எட்டடி நீளத்துலன்னு இருக்கணும்.
நீங்க அன்னைக்கே வேற வீடு பாக்கத் தொடங்கீருக்கனும். இன்னைக்கு ஆன்டெனா...நாளைக்கு ஆடு கள்வானிம்பாரு....தேவையா இதெல்லாம். அதுலயும் சதிப் பேரைச் சொல்லி கேலியும் கின்டலும் பன்றவரு.....ஆண்டவா....
பதிலளிநீக்குவாங்க ராகவன்,
பதிலளிநீக்குநீங்க அன்னைக்கே வேற வீடு பாக்கத் தொடங்கீருக்கனும்//
ரொம்ப கரெக்ட்..
என்னைக் கேட்டா அந்த வீட்டுக்கு போயே இருக்கக்கூடாது.. முன்னால இருந்த வீட்டுக்காரரு எவ்வளவு தங்கமானவரு தெரியுமா? அவர வேதனைப் படவச்சிட்டு வந்தோம்ல அதான் இப்ப அனுபவிக்கிறோம்னு என் ஒய்ஃப்கிட்ட அடிக்கடி சொல்வேன்.
சார்,
பதிலளிநீக்குநீங்க சொல்ற ஆண்டென்னாவும் புரியுது.. அருளானந்த நகர், ஹாஸ்பிடல வாசல்ன்னோன யாரைச் சொல்றீங்கன்னும் ஓரளவுக்கு புரியுதுன்னு நினைக்கிறேன். :P
ஆனா, பேர் சொல்லப்போறதில்லை. இந்தப் பதிவப் படிச்சதும், எஸ்.வீ. சேகரோட 'ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது' ஏனோ நியாபகதுக்கு வந்து தொலைக்குது. :)))
வாங்க இராமநாதன்,
பதிலளிநீக்குஆஸ்பிடல் வாசல்ல இல்ல.. கொஞ்சம் தள்ளி கிழக்கே..
பேர் சொல்லாம இருக்கறதுதான் நல்லது..
ஆனா அவர் இறந்துபோய் பதினஞ்சி வருஷத்துக்கு மேலாவுது..
உங்க வீட்டு அம்மா கிட்டே, இதுக்குதான் இந்த வீடு வேண்டாம்னு சொன்னேன்னு சொல்லி டோஸ் வாங்கி கிட்டீங்களா?
பதிலளிநீக்குஎங்க வீட்டுல டீவி வாங்கின புதுசுல தெருவே ஒலியும் ஒளியும் பார்க்க ரேழி எனப்படும் ஹாலில் நிறைந்துவிடும். முறுக்கு சீடை விற்காத குறைதான். நாங்கள் வெளியில் சென்றாலும் பக்கத்து வீட்டில் சாவி கொடுத்துவிட்டுதான் செல்ல வேண்டும்.
பதிலளிநீக்குஇதனால் எனக்கு கிரிகெட்டில் ரெண்டு அவுட் உண்டு என்பது வேறு விஷயம். :)
வாங்க இ.கொத்தனார்,
பதிலளிநீக்குயாரு நானா.. நாந்தான் டோஸ் வுடுற ஆளு.. ஆங்.. ஐயோ, எங்க வீட்டம்மா வராங்க.. வுடு ஜுட்..
எங்க வீட்டுல டீவி வாங்கின புதுசுல தெருவே ஒலியும் ஒளியும் பார்க்க ரேழி எனப்படும் ஹாலில் நிறைந்துவிடும். முறுக்கு சீடை விற்காத குறைதான். //
பதிலளிநீக்குநல்ல வேளை எனக்கந்த அனுபவம் இல்லை. ஆனால் என் மாமனார் வீட்டில் பார்த்திருக்கிறேன்..
என் கடைசி மைத்துனன், அப்போது அவருக்கு சுமார் 12 வயதிருக்கும், வரும் குழந்தைகளிடம் டேய் ஆளுக்கு பத்து காசு வெட்டணும் இல்லன்னா விடமாட்டேன் என்று கறந்துவிடுவார். எதுக்கு? கமர்கெட், சாக்லேட்டுக்குத்தான்..
அது ஒரு காலம். இப்ப பாருங்க எந்த வீட்லதான் இல்ல.. அது இல்லன்னாத்தான் அதிசயம்!