ஆனா மெம்பர்ஸ் ஒரு சின்ன ரிக்வெஸ்ட் வச்சிருக்காங்க சார் என்றார் சேட்.
‘சொல்லுங்க சார்.’ என்றேன்.
‘இப்போ எங்க Private Financiers சங்கத்துல மெம்பர்சா இருக்கறவங்கள்ல சுமார் 50 பேர் தான் ஹ¤ண்டி மேல ஆக்டிவா ஃபைனான்ஸ் பண்ணிக்கிட்டிருக்காங்க சார். அவங்கள்ல தஞ்சாவூர் டவுண்ல மட்டும் சுமார் 40 பேர் இருக்காங்க. ஏறக்குறைய இவங்க எல்லாருக்குமே பேங்க்ஸ்ல லிமிட் இருந்திச்சி. போன நாலஞ்சு வருஷமா நேஷலனைஸ்ட் பேங்க்ஸ் இந்த ஃபெசிலிட்டியை நிறுத்திட்டாங்க. தனியார் பேங்க்லயும் சில பேங்க்லதான் இந்த ஃபெசிலிட்டி இருக்குது. இருந்தாலும் அவங்களுக்கு ஃபண்ட்ஸ் constraints வரும்போதெல்லாம் எங்களோட ஃபெசிலிட்டியத்தான் முதல்ல குறைக்கிறாங்க சார். அதனால உங்களோட ப்ராஞ்ச் துவங்கற நேரத்துல நீங்க எங்க மெம்பர்ஸ் எல்லாருக்கும் இல்லாட்டியும் மேஜர் பிசினஸ் டர்னோவர் பண்றவங்களுக்கு லிமிட்ஸ் குடுக்கணும்னு எதிர்ப்பார்க்கிறாங்க.’
அவர் கேட்டது நியாயம்தான் என்று எனக்குப்பட்டது. மேலும் கிளையை ஆரம்பித்த முதல் வருடத்திலேயே லாபம் காட்ட வேண்டும் என்றால் இது போன்ற வர்த்தகத்தில் ஈடுபட்டால் மட்டுமே அது சாத்தியமாகும்.
அத்துடன் சென்னை, மும்பைப் போன்ற கிளைகளில் நான் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்திருந்ததால் அவர் கூறிய வணிகத்தைப் பற்றி நான் நன்றாகவே அறிந்திருந்தேன். அவர்கள் ஹுண்டிகளுக்கு மேல் அவர்களுடைய வாடிக்கையாளர்களுக்கு கடனளித்தவுடன் அந்த ஹ¤ண்டிகளை டிஸ்சார்ஜ் செய்து வங்கிகளுக்கு சமர்ப்பிப்பார்கள். வங்கிகள் அந்த ஹ¤ண்டிகளை ஈடாக வைத்துக் கொண்டு அவர்களுக்கு கடன் வழங்குவது வழக்கம். அதாவது refinance என்போமே, அதுபோல்.
அத்தகைய வணிகர்களுக்கு கடன் அளிப்பது மிகவும் பாதுகாப்பானது. நான் முன்பு பணியாற்றிய கிளைகளில் கொடுக்கப்பட்ட பல லட்சக் கணக்கான கடன் தொகை எந்தவித சிரமமுமில்லாமல் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய கடன்களுக்கு அதிகபட்ச வட்டியும் விதிக்க முடியும்.
ஆகவே இவர்களுக்கு கடன் அளிப்பதென்பது அத்தனை சிரமமாயிருக்காது என்று நினைத்தேன். ஆனால் அது என்னுடைய அதிகாரத்திற்குட்படாதது. ஆகையால் அவருக்கு சரி சார் என்று உடனடியாக என்னால் பதில் அளிக்க முடியுமா என்று யோசித்தேன்.
‘என்ன சார் யோசிக்கிறீங்க?’ என்றவரைப் பார்த்தேன்.
‘யோசனை ஒன்றுமில்லை சார். அது என்னுடைய கிளை மேலாளர் அதிகாரத்திற்குள்ள வராது. அநேகமா அது எங்க ஜி.எம், இல்லன்னா சேர்மன் அதிகாரத்துக்குள்ள வர்ற ஃபைலாயிருக்கும். அதனால உங்களுக்கு உடனே சரின்னு பதில் சொல்ல முடியாது. ஆனா நிச்சயம் எங்க எச்.ஓ விலருந்து சாங்ஷன் வாங்குறது அவ்வளவு கஷ்டமா இருக்காதுன்னு நினைக்கிறேன்.’ என்றேன்.
அவர் உடனே வாயெல்லாம் பல்லாக ‘அது போதும் சார். நீங்க நினைச்சா செய்யலாம். என்னோட மெட்றாஸ் ஃப்ரெண்ட் நீங்க ----- பிராஞ்சில இருந்தப்ப செஞ்ச உதவியப்பத்தி ஏற்கனவே சொல்லியிருக்கார் சார். அதனாலத்தான் கேட்டேன். தப்பா நினைச்சிக்காதீங்க.’ என்றார்.
ஆமாங்க, குடுத்தா நல்ல மேனேஜர். இல்லன்னா கொஞ்ச நேரத்துக்கு முன்னால செட்டியார் பாஷையில சொல்லணும்னா ‘தராதரம் தெரியாதவர்’ என்று சொல்வீர்கள் என்று நினைத்துக் கொண்டேன்.
‘சார் நம்ம கூட பொறந்தவங்க ரெண்டு பேர் நம்ம வீட்டுக்கு அடுத்தாப்பலத்தான் இருக்காங்க. ஒருத்தர் ஹ¤ண்டி பிசினசோட என்ஃபீல்டு பைக் டீலராயிருக்கார். இன்னொருத்தர் நம்ம பிசினஸ்தான். ஆனா பெரிய லெவல்ல செய்யறார். கொஞ்ச முன்னால பாத்தீங்களே செட்டியார், அவர மாதிரி ஆளுங்களுக்கு ஷார்ட் டர்ம் ஃபைனான்ஸ் பண்றவர். அவர் கிட்ட எப்பவுமே லிக்விட் கேஷ் இருக்கும். அத உங்க பேங்கல போடச் சொல்றேன். அப்புறம் நம்ம ரோட்டரி க்ளப் மெம்பர்ஸ். ஒருத்தர் ரெண்டு பேரத் தவிர எல்லாருமே பெரிய பிசினஸ் பண்றவங்கதான். ஆனா எல்லாருக்குமே ஏதாவது ஒரு பேங்கோட டீலிங்ஸ் இருக்கும். உடனே உங்களுக்கு ஹெல்ப் பண்ணாட்டாலும் நான் சொன்னா நாளடைவில கண்டிப்பா செய்வாங்க.’
நான் நன்றியுடன், ‘அது போதும் சார்.’ என்றேன்.
‘அப்புறம் எனக்குத் தெரிஞ்ச லாயர்ஸ் ரெண்டு மூனு பேர் இருக்காங்க. தஞ்சாவூர்ல செட்டில்மெண்ட் கேஸ்கள் நாளுக்கு ரெண்டு மூனு க்ளியர் ஆவும். பரம்பரை பரம்பரையா ஒன்னா ஒத்துமையா இருந்து விவசாயம், பிசினஸ்னு பண்ணிக்கிட்டிருந்த குடும்பங்கள் எல்லாம் இப்போ கொஞ்ச காலமா சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட சொத்துகள பிரிச்சிக்கிடறாங்க. அந்த சமயத்துல பாகம் பிரிக்கும்போது substantial பணம் கைமாறும். அந்த கஸ்டமர்ங்கள கரெக்டான சமயத்துல நீங்க வக்கீல்ங்க வழியாவே அப்ரோச் பண்ணா டெப்பாசிட் கிடைக்கறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு சார். அப்புறம் அக்கம்பக்க கிராமத்துலருக்கற பண்ணையார், மிராசுதார்ங்க.. தஞ்சாவூர் சுத்தியும் பேங்குகளுக்கு நிறைய வாய்ப்புங்க இருக்கு ஜோசப் சார். சரியான மீடியேட்டர் வழியா போனா லட்சம், லட்சமா பிடிக்கலாம். என்ன, கொஞ்சம் கஷ்டம் பாக்காம ஓடணும்.. அவ்வளவு தான்.’ என்று டெப்பாசிட் மொபிலைசேஷன் சாதுரியங்களைப் பற்றி ஒரு குட்டி லெக்சரே அடித்தார்.
எனக்கு அவருடைய பேச்சைக் கேட்க, கேட்க ஆச்சரியமாக இருந்தது. அவர் மேல் ஒரு தனி மரியாதையும் ஏற்பட்டது. நான் தஞ்சையிலிருந்த சமயத்தில் இவருடைய சமயோசித யோசனையால் என்னால் மற்றெந்த கிளைகளிலும் சாதிக்க முடியாதவைகளைச் சாதிக்க முடிந்தது என்றால் மிகையாகாது.
அந்தக் கிளையில் இரண்டு வருடங்களில் நான் வங்கி வர்த்தகத்தில் சாதித்த முன்னேற்ற விகிதத்தை மும்பை போன்ற பெரு நகரங்களில் நான் மேலாளராக பணிபுரிந்த சமயத்திலும் அடைய முடியவில்லை. தஞ்சை ஒரு சிறு நகரமாக இருந்தாலும் அங்கு பணப்புழக்கத்திற்கு எந்த குறைவும் இருக்கவில்லை. முக்கியமாக விவசாயத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடத்தில்.
நான் அங்கு பணிபுரிந்த காலத்தில் என்னுடைய மிக மதிப்பு மிக்க வாடிக்கையாளர்கள் பெரும்பாலோனோர் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் என்பது உண்மை! விவசாயிகள் பார்ப்பதற்குத்தான் எளிமையாக, ஏன் ஏழைகள் போலக்கூட இருப்பார்கள். ஆனால் அவர்களிடம்தான் செல்வம் கொழித்திருந்தது!
ஆனால் ஒன்று. அவர்களிடம் பேசி வங்கிக் கிளைக்குக் கொண்டு வருவதற்குள் போறும், போறும் என்று கிவிடும். ஆனால் ஒரு கணக்கைத் துவக்க வைத்துவிட்டால் போதும் அப்புறம் அதில் இடப்படும் தொகைகளைப் பார்த்தால் அசந்து போய்விடுவீர்கள்!
சிக்கனத்திற்கு பேர்போன அவர்களுடைய சேமிப்பை நம்பித்தான் இன்னமும் பல்லாயிரக் கணக்கான வங்கிகள் கிராமங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
அவர் பண்ணையார் என்றதும் தான் எனக்கு ‘என்னுடைய’ பண்ணையாரைப் பற்றி நினைவு வந்தது. வீட்டிற்கு திரும்பியதும் அவரை தொலைப்பேசியில் அழைத்து இன்னும் இரண்டு நாட்களில் அழைப்பிதழுடன் அவரை சந்திக்க வருவதாக தெரிவிக்க வேண்டும் என்று நினைவில் குறித்துக் கொண்டேன்.
பிறகு சிறிது நேரம் சேட்டுடன் உரையாடிக் கொண்டிருந்து விட்டு புறப்பட்டேன்.
வீடு திரும்பும் வழியில் தஞ்சாவூரிலிருந்து இரண்டு மூன்று கிலோமீட்டர் தூரம் வரைக் கடந்துபோதுதான் என் கிளை உரிமையாளரை வந்து பார்ப்பதாக கூறியது நினைவுக்கு வந்தது.
சரி பார்த்துவிட்டுப் போகலாம் என்று நினைத்து என்னுடைய வாகனத்தைத் திருப்பினேன். அப்போது, ‘ஜோசப் சார்’ என்று என்னை யாரோ அழைப்பது கேட்டது.
வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்தேன். சற்றுத் தொலைவில் வேறொரு வாகனத்தை சரிபார்த்துக் கொண்டிருந்தார் என்னுடைய வாகன மெக்கானிக் என்னைப் பார்த்து கைகளை அசைப்பது தெரிந்தது.
அட! அன்று காவல் நிலையத்தில் பார்த்ததுதான். அப்புறம் எனக்கும் என் வாகனத்துக்கு அவருடைய சேவை தேவைப்படாததால் அவரை அதற்குப் பிறகு சந்திக்கவே வாய்ப்பிருக்கவில்லை.
என் வாகனத்தை அவருக்கருகில் நிறுத்திவிட்டு, ‘என்னங்க எப்படி இருக்கீங்க?’ என்றேன்.
அதுவரை அவர் பழுது பார்த்துக் கொண்டிருந்த வாகனத்தில் இருந்து சற்று தள்ளி நின்றுக் கொண்டிருந்த வாகனத்தின் உரிமையாளர் என் குரலைக் கேட்டு திரும்பிப் பார்த்தார்.
என்னைக் கண்டதும், ‘ஹலோ சார். என்ன ஞாபகம் இருக்கா?’ என்று தன்னுடைய வலக் கரத்தை நீட்டியவாறு என்னை நோக்கி வந்தார்.
எனக்கு அவரை சட்டென்று அடையாளம் தெரியவில்லை. நான் திருதிருவென விழித்ததைப் பார்த்ததும். ‘என்ன சார் நம்ம வீட்டுக்கு வீடு கேட்டு வந்தீங்களே. அதுக்குள்ள மறந்துட்டீங்களா?’ என்றார்.
எனக்கு சட்டென்று அவருடைய முகமும் நான் வாடகைக்கு வீடு கேட்டு அவருடைய வீட்டிற்கு சென்றபோது அவர் என்னை நடத்திய விதமும் நினைவுக்கு வர என்னுடைய அதிருப்தியை என்னையுமறியாமல் என் முகமே அவருக்குக் காட்டிக் கொடுத்திருக்க வேண்டும்.
அவருடைய முகமும் சட்டென்று களையிழந்துப் போனது.
அவர் என்னைப் பெயர் சொல்லி அழைத்ததும் மீண்டும் என்னை நிமிர்ந்துப் பார்த்த என்னுடைய மெக்கானிக் என்னைப் பார்த்து, ‘எப்படி சார் இருக்கீங்க? ரொம்ப நாள் ஆச்சே சார் உங்கள பார்த்து?’ என்றார்.
பிறகு என் எதிரில் நின்றவரைக் காட்டி, ‘இவர உங்களுக்கு தெரியுமா சார்? சார் ------- பேங்கோட ஜி.எம் சார்.. இது சாரோட பையனோட வண்டி. சாருக்கு ஆஃபீஸ் ஜீப்ல போய்தான் பழக்கம். என்னமோ அவசரம்னு பையனோட வண்டிய எடுத்துக்கிட்டு வந்திருக்கார். வழியில மக்கார் பண்ணிருச்சி. இந்த காலத்து பசங்க வண்டிக்கு பெட்ரோல் போட்டுட்டா போறும், தானா ஓடிரும்னு நினைக்கிறாங்க. வண்டி வாட்டர் சர்வீஸ்கூட பண்ணாம ஆறு மாசமா ஒடிக்கிட்டிருக்கு போலருக்கு. சார் வண்டிய எடுத்த நேரம் நடு வழியில நின்னு போச்சி.’ என்றவர் அவரிடம், 'சார் இவரும் நமக்கு பழக்கமான சார்தான். இவரோட பேங்க் ஒன்னு நம்ம ஊர்ல திறக்கற விஷயமா வந்திருக்கார்.’ என்றார்.
பிறகு, என்னிடம், ‘சார், நீங்க டவுணுக்குள்ளதான போறீங்க? உங்களுக்கு ஆட்சேபனையில்லேன்னா சார உங்க வண்டியில கொண்டு போய் டாக்சி ஸ்டாண்டுல விட்டுட்டு போறீங்களா சார்?’ என்றார்.
நான் அவரைப் பார்க்க அவர் என்னை தர்மசங்கடத்துடன் பார்த்தார்.
தொடரும்..
சார், இவ்வலவு டெக்னிக் இருக்கா? இந்த பதிவை இளம் வங்கி அதிகாரிகள் படிச்சா, அவங்களுக்கு எப்படி தொழிலை விருத்தி பண்ணறதுன்னு நிறைய ஐடியா கிடைக்கும்.
பதிலளிநீக்குரொம்ப நல்ல அனுபவங்கள் சார் உங்களுக்கு.
வாங்க இ.கொத்தனார்,
பதிலளிநீக்குஎன்னுடைய அனுபவங்கள் யாருக்காவது உபயோகமா இருக்குமேன்னுதான் இந்த தொடரையே எழுத் ஆரம்பிச்சேன்.
என்னுடைய என்கதையுலகத்துல சூரியன் தொடர் கதையிலயும் பிசினஸ் பண்ண தெரியாம ஏமாந்து போன இளம் அதிகாரிகளைப் பத்தி எழுதுவேன்.
அதே போல நேர்மையா உழைச்சி வெற்றியடைஞ்சவங்களையும் அடையாளம் காட்டுவேன்.
அதையும் படிங்க..
வாங்க புதுவை..
பதிலளிநீக்குநீங்க சொல்றதும் சரிதாங்க..
நான் அங்க இருந்த சமயம் செழிப்பா இருந்த காலம்..
ஆனா இப்பவும் புத்திசாலித்தனமா விவசாயம் பண்ணி வசதியா வாழ்றவங்களப் பத்தி எனக்குத் தெரியும்..
நிலமில்லாத விவசாயிகள், பின்னே uneconomical land holdings இருக்கற small and marginal விவசாயிகளப் பற்றி நான் சொல்லலை..
படித்த இளைஞர்கள் யாருமே தங்களுடைய குடும்பத் தொழிலான விவசாயத்தை விட்டுட்டு வேற தொழில்களுக்கும் வேலைகளுக்கும் சென்று விடுவதும் இதற்குக் காரணம்னு நினைக்கிறேன்..
புதுவை சொல்வதும் உண்மைதான். உழவுத்தொழிலுக்கு மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. பிறகு நாமெல்லாம் எப்படி சாப்பிடுவது?வெளியில இருந்து வாங்கிச் சாப்பிட வேண்டியதுதான். அதுல எதாவது பிரச்சனை வந்தா அந்த நாடு உணவுப் பொருட்கள நமக்கு ஏத்துமதி செய்யாது. நாம அடிச்சிக்கிட்டு திரிய வேண்டியதுதான்.
பதிலளிநீக்கு