கடை உரிமையாளருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. ஆனால் அவருடைய மூத்த சகோதரர் முகத்தில் ஒரு விஷமப் புன்னகை மலர்ந்ததிலிருந்து அவருக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரிந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
இருப்பினும் அவர் ஒன்றும் கூறாமல் என்னையே திருப்பிப் பார்த்தார். ‘மேலே சொல்லுங்க சார்’ என்பதுபோலிருந்தது அவருடைய பார்வை.
‘உங்க கடையோட கவுண்டர் சேதமடைஞ்சதுக்கு நானோ கடை உரிமையாளரோ காரணமில்லைன்னு இதுலருந்து புரியுது.’ என்றேன் முகத்தில் ஏளனத்துடன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்த மேலாளரிடம்.
அவருடைய முகத்திலிருந்த ஏளனம் உக்கிரமமான கோபமாக மாறியது. தன்னருகிலிருந்த கடை சிப்பந்திகளை பார்த்தீங்களாடா இந்தாளோட திமிர? என்பதுபோல் ஒரு பார்வை பார்த்துவிட்டு என்னிடம் ‘என்ன சார் விளையாடறீங்களா?’ என்றார். ‘பின்னே, நாந்தான் காரணம்னு சொல்றீங்களா?’
‘நிச்சயமா. சார் சொல்றா மாதிரி நீங்கதான் சார் காரணம். நானும் நேத்து ராத்திரியே சார் வீட்டுக்கு போனதும் எங்கப்பா கிட்டயும் சித்தப்பா கிட்டயும் தலைபாடா அடிச்சிக்கிட்டேன். கேக்கலை. அப்பாதான் அத பெரிசுபடுத்த வேணாம். நாமளே பொறுப்பேத்துக்கிட்டு ரிப்பேர் பண்ணிக் குடுத்திறலாம்னு என் வாய அடைச்சிட்டார். அத்தோட காலங்கார்த்தால எங்கப்பாவும் சித்தப்பாவும் உங்க வீட்டுக்கு வந்து மன்னிப்பு கேட்டாங்க. நீங்களும் பெரிசா சரின்னு ஒத்துக்கிட்டு எங்கப்பா குடுத்தத வாங்கிக்கிட்டீங்கன்னு என்கிட்ட வந்து சொன்னப்பவே நான் அவங்கக்கிட்ட சொன்னேன் நீங்க இந்த மாதிரி ஸ்டண்ட் ஏதாவது பண்ணுவீங்கன்னு. அவங்க கேக்கலை. இப்ப நான் சொன்னா மாதிரியே ஏதோ சார்தான் இதுக்கு காரணம்கறா மாதிரி ரொம்ப ஓவரா பேசி டிராமா போடறீங்க.’ என்றார் உரிமையாளரின் சகோதரர் மகன் கோபத்துடன்.
அதுவரை கடைக்குள்ளேயே முடங்கிக்கிடந்த அவரை யாரோ போய் அழைத்து வந்திருக்க வேண்டும்.
மேலாளர் அப்போதாவது புரிந்துக் கொண்டு அடங்கிப் போயிருக்கலாம். கடைச் சிப்பந்திகள் ‘எங்கப்பா குடுத்தத’ என்று நம்முடைய ‘கைகலப்பு ஹீரோ’ சொன்னதைத் தெளிவாகப் புரிந்துக் கொண்டதை அவர்கள் தங்களுடைய மேலாளரைப் பார்த்த பார்வையிலிருந்தே அங்கிருந்த எல்லோருக்கும் புரிந்தது. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டதும் நாங்கள் எல்லோருமே பார்த்தோம்.
ஆனால் கடை மேலாளர் அத்துடன் நிற்கவில்லை. ‘டேய் என்ன பெரிய இவன் மாதிரி பேசறே?' என்றார். 'உங்கப்பாவே எங்க பொறுப்பிலேயே ரிப்பேர் பண்ணி குடுக்கறதுமில்லாம அதுவரைக்கும் வர்ற சேல்ஸ் நஷ்டத்தையும் சரி பண்ணி குடுத்திடறேன்னு ஏற்கனவே சொல்லியாச்சி. நீ என்னா இடையில வந்து துள்ளுறே.. வாய மூடிக்கிட்டு இரு.. இல்லே நீங்க பண்ண காரியத்துக்கு மறுபடியும் போலீசுக்கு போவேண்டி வரும்.’ என்று கூறியவாறு மிரட்ட ஹீரோவின் தந்தைக்கும் அசாதாரணமாக அன்று கடுங்கோபம் வந்தது.
எரிச்சலுடன் மேலாளரைப் பார்த்தார். ‘அதான் நான் செஞ்சி குடுக்கறேன்னு சொல்லிட்டு வந்தேன்லே. அப்புறம் ஏன் சார் வந்ததும் அவரப்பத்தி அவரோட மேலதிகாரிங்க கிட்ட் கம்ப்ளெய்ண்ட் பண்ணுவேன்.. போலீஸ்கிட்ட போவேன்னு மிரட்டறீங்க? ஏன் சார், உங்களுக்கு மட்டும்தான் போலீஸ் இருக்கா? நாங்க உள்ளூர்க்காரங்க சார். எங்கிருந்தோ வந்துட்டு எங்கள மிரட்டற வேலை வச்சிக்காதீங்க. இத்தோட இந்த விஷயத்த விட்டுட்டீங்கன்னா நான் சொன்னா மாதிரி எல்லாம் செய்வேன். இல்லன்னா என் பையனமாதிரி பேச வேண்டிவரும். சொல்லிட்டேன்.’ என்றவர் என்னைப் பார்த்து, ‘சார் இவர் பேசினத மனசுல வச்சிக்காதீங்க. இந்த கடைய முன்ன நின்னு கட்டுனவன் நான். உங்க லாக்கர ஏத்துனதால தரையும் உடையல இவர் கவுண்டரும் டேமேஜ் ஆவல. உங்களுக்கு வேற வேலையிருந்தா பாருங்க. இல்லன்னா கொஞ்ச நேரம் நம்ம கடையில போயி உக்காருங்க.. இவர இனி நான் டீல் பண்ற விதத்துல டீல் பண்ணிக்கறேன்.’ என்றார்.
நானும் அவர் கூறியதைப் புரிந்துக் கொண்டு மேலாளரை பார்ப்பதைத் தவிர்த்து சாலைக்கு எதிரிலிருந்த அவருடைய கடையை நோக்கி நகர்ந்தேன். அக்கம்பக்கம் குடியிருந்தவர்கள், கடை உரிமையாளர்கள், பணியாளர்கள் என குழுமியிருந்த அனைவரும் என்னை பார்த்த பார்வையில் நான் சற்று சங்கடப்பட்டேன் என்பது உண்மை. விவரம் தெரியாதவர்களுடைய பார்வையில் நான் குற்றவாளியைப்போல் தெரிந்திருக்க வேண்டும்.
ஆனால் அப்போதும் அக்கடை மேலாளர் விவஸ்தையில்லாமல் தன்னுடைய கோபத்தின் பிடியில் சிக்கியிருந்ததால் விஷயத்தை மேலும் விபரீதமாக்குவதிலேயே தீவிரமாயிருந்தார். ‘சார் எங்க போறீங்க? அவர் சொல்லிட்டா நீங்க போயிடறதா? நான் உங்கக்கிட்டத்தான சாவிய குடுத்திட்டு போனேன். நீங்கதான் இதுக்கு பதில் சொல்லணும்.’ என்றவாறு என் பின்னே வர அதுவரை தன் தந்தையின் அறிவுரைப்படி பொறுமையாயிருந்த நம்முடைய ஹீரோ நிதானமிழந்து என்னைத் தொடர்ந்து வந்த மேலாளரின் குறுக்கே சென்று நின்றார்.
இருவரும் ஒருவரையொருவர் கோபத்துடன் பார்த்துக் கொண்டு நின்ற சிறிது நேரத்தில் அவருடைய தந்தை அவர்களுக்கிடையில் நுழைந்து தன் மகனை உருதுவில் திட்டி ‘போடா கடைக்கு’ என்பதுபோல் கையைக் காட்டினார்.
இல்லையென்றால் மீண்டும் ஒரு கைகலப்பு நிச்சயம் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
நான் மேலாளரைத் திரும்பிக் கூட பார்க்காமல் சாலையைக் கடந்து எதிரே இருந்த கடைக்கு முன்னாலிருந்த மேடை போன்ற வராந்தாவில் நின்றுக் கொண்டேன். என்னைப் பின் தொடர்ந்து வந்த உரிமையாளரின் மகனும் என்னுடன் நின்றுக் கொண்டார். ‘அவன் பேசினதயே நினைச்சிக்கிட்டிருக்காதீங்க சார். அவன் ஒரு லூசுப் பய. அப்பா குடுத்தத வாங்கிக்கிட்டான். பேசாம இருந்திருக்கலாம். சும்மா கடையாளுங்க என்ன நினைச்சிக்குவாங்கன்னு உங்கக் கிட்ட குதிச்சிப் பார்த்தான். ஆனா நீங்க சரியா திருப்பி உட்டீங்க. நீங்க சொன்னத நேத்தைக்கில்ல சார் போன அஞ்சி வருஷமா நான் சொல்லிக்கிட்டே இருக்கேன். தரையில இப்படி பாளமா விரிசல் பண்ணிட்டு கார்பெட் போட்டு மூடி வச்சிருக்கானே .. நாளைக்கு அவன் அடிச்ச கவுண்டர எடுக்கும்போதே டேமேஜ் பெரிசா யிடும், இப்பவே கேளுங்க சித்தப்பான்னு எவ்வளவோ சொன்னேன். கேக்கலை.. லாக்கர் ஏத்தறப்போ இருட்டா இருந்ததா நான் அந்த விரிசல மறந்துட்டேன். நேத்து நீங்க போனதும்தான் சட்டுன்னு இந்த டேமேஜுக்கு அவன்தாம்ப்பா காரணம், நாம ஒன்னும் நஷ்ட ஈடு கொடுக்க வேணாம்னு அப்பா கிட்டயும் சித்தப்பா கிட்டயும் எவ்வளவோ சொன்னேன். என் பேச்ச கேக்காம நாங்களே ரிப்பேர் பண்ணி தரேன்னு சொல்லிட்டு வந்திட்டாங்க. அப்பா அவன் கிட்ட சொன்னதுமே அவனுக்கு நாம பண்ண விரிசலாலத்தான் தரை பொளந்துக்கிச்சின்னு தெரிஞ்சிருக்கும். அதனாலத்தான் அப்பா சம்திங் குடுத்து நாங்களே ரிப்பேர் பண்ணி தரோம்னு சொன்னப்போ வாய மூடிக்கிட்டு வாங்கிக்கிட்டான். இப்ப பாருங்க. அவன் மறுபடியும் போலீஸ்க்கு போவேன்னதும் அப்பாவுக்கே கோபம் வந்திருச்சு. அவருக்கு கோபமே வராது. எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருப்பார். ஆனா கோபம் வந்துது, அவ்வளவுதான். இப்ப பாருங்க வேடிக்கைய.. பய ஆடிப் போயிருவான்.’
மூச்சு விடாமல் கொட்டித் தீர்த்த, அதுவரை முன்கோபி, அதிகப் பிரசங்கி என்று நான் நினைத்திருந்த, சுமார் இருபத்தி மூன்றே வயதிருந்த அவரை முதன் முதலாக சற்று மரியாதையுடன் பார்த்தேன். வயசுக்கேற்ற தெனாவட்டான பேச்சு என்று அவருடைய பேச்சை என்னால் ஒதுக்கித் தள்ள முடியலை. ‘பையன் புத்திசாலிதான்.’ என்று நினைத்தேன்.
அவர் தன் தந்தையைப் பற்றி கூறியது சரிதான். அவருடைய உரத்த குரல் சாலை முழுவதும் கேட்டது. அவருடைய கோபத்தை அதுவரைக் கண்டறியாத கடை மேலாளர் அவருடைய ஒரு கேள்விக்கும் பதிலளிக்க முடியாமல் ஆடிப் போய் விட்டார் என்றுதான் கூற வேண்டும்.
‘இங்க பாருங்க சார். என் பையன் இந்த விபத்துக்கு நீங்க தரையில ஏற்படுத்தன விரிசல்தான் காரணம்னு நேத்து ராத்திரி சொன்னப்பக் கூட நான் போட்டும்டா அது நடந்து நாலஞ்சி வருஷம் ஆயிருச்சி. நாம அப்பவே கேக்காம விட்டது தப்பு. அதனால இப்ப அத பெரிசுபடுத்த வேண்டாம். நாமளே சரி பண்ணி குடுத்திரலாம்னு சொன்னேன். இப்ப அப்படி ஏண்டா சொன்னோம்னு நினைக்கிறேன். அன்னைக்கித்தான் உங்க ஆள்ல யாரோ ஒருத்தர் அவசரப்பட்டு போலீஸ்க்கு ஃபோன் பண்ணி என் பையன் மேல கம்ப்ளெய்ண்ட் குடுத்தார்னு நினைச்சேன். ஆனா இப்ப நீங்களே எல்லார் முன்னாலயும் ஒன்னுமில்லாத விஷயத்துக்கு.. அதாவது நீங்களும் உங்க கம்பெனியுமே காரணமாயிருந்த விஷயத்துக்கு, என் பையன் மேல கம்ப்ளெய்ண்ட் பண்ணுவீங்கன்னு மிரட்டறீங்க. அதனால இப்ப நான் சொல்லப் போறத நீங்க கேளுங்க. நேத்து ராத்திரி நடந்த விபத்துக்கு நீங்க தரையில ஏற்படுத்துன விரிசல்தான் காரணம். அதனால உங்க கம்பெனிக்கு நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் விடப்போறேன். அதுமட்டுமில்ல இதையே காரணம் காட்டி உங்கள காலி பண்ண சொல்லி கோர்ட்ல ஃப்ரெஷ்ஷா ஒரு அப்பீல் போடப் போறேன். உங்களால முடிஞ்சத பார்த்துக்குங்க.’
கடை மேலாளர் திகைப்பில் வாயடைத்துப் போய் நிற்க படபடவென பொரிந்துத் தள்ளிய உரிமை¨யாளரின் சகோதரர் எங்களை நோக்கி வேகமாக வந்து என்னைப் பார்த்து, ‘வாங்க சார், உள்ள.. நம்ம வேலைய பார்ப்போம். அந்த ஆளு என்ன செய்யணும்னு நினைக்கிறாரோ அத செய்துக்கட்டும்.’ என்றவாறு என்னையும் அழைத்துக் கொண்டு கடைக்குப் பின்னாலிருந்த அவருடைய வீட்டுக்குச் சென்றார்.
நான் என்ன சொல்வதெனத் தெரியாமல் எதிரே கடை வாசலில் எங்களையே பார்த்துக் கொண்டு திகைத்துப் போய் நின்றிருந்த மேலாளரை ஒரு சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டு நின்றேன். பிறகு உரிமையாளரைத் தொடர்ந்து அவருடைய வீட்டிற்குள் நுழைந்து அமர்ந்தேன்.
‘என்ன சார் நீங்க போட்ட போடுல ஆளு அசந்துபோய் பேச்சு மூச்சில்லாம நின்னுட்டார் போலருக்கு?’ என்றேன்.
சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் இருந்தவர் குபீரென்று அடக்க மாட்டாமல் சிரிக்க ஆரம்பித்தார். நானும் எங்களைத் தொடர்ந்து வந்து என் எதிரில் அமர்ந்திருந்த அவருடைய இளைய சகோதரரும் ஒன்றும் புரியாமல் அவரையே பார்த்தோம். சிறிது நேரத்திற்குப் பிறகு சிரிப்பையடக்கிக் கொண்டு எங்கள் இருவரையும் பார்த்தார். ‘அந்தாளு மூஞ்சி போன போக்கைப் பார்த்தீங்களா சார்? நான் இப்படி பேசுவேன்னு நினைச்சிருக்க மாட்டார் போலருக்கு. எல்லாம் ஒரு டிராமத்தான்னு அவருக்கு எங்க தெரியப் போவுது?’
எனக்கு அப்போதும் ஒன்றும் விளங்கவில்லை. ‘என்ன சார் சொல்றீங்க? டிராமான்னா?’
அவர் சிரிப்பை அடக்கிக் கொண்டு தன் சகோதரரைப் பார்த்து உருதுவில் என்னவோ கூறினார். அவரும் உடனே சிரித்தார்.
தொடரும்..
படிக்கும் போது எல்லாம் புரிஞ்சது....கடைசீல டிராமான்னு சொல்லீருக்கீங்களே........என்ன டிராமாவோ........நாளைக்கு வரைக்கும் காத்திருக்க வேண்டியதுதான்.
பதிலளிநீக்குகாசு வாங்குன கணவான் காசுக்கேத்த பணியாரம் சுட்டுக்க வேண்டியதுதான. அத விட்டுட்டு ரொம்ப ஆடுனா நல்லாவா இருக்கு.
இன்னுமொரு டிராமாவா? சரி வெயிட் பண்ணி படிக்கறோம்.
பதிலளிநீக்கு