01 நவம்பர் 2005

திரும்பிப் பார்க்கிறேன்.. 4

1974 ம் வருடம்.

சென்னையில் என்னுடைய வங்கியின் புதிய கிளையை சென்னை தங்கசாலைத் தெருவில் திறப்பதென தீர்மானிக்கப்பட்டது.

சென்னையிலேயே மிக நீளமான சாலை என்ற பெருமை தங்கசாலை தெருவுக்கு உண்டு. சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அருகில் இருக்கும் தென்னிந்திய ரயில்வே அலுவலகத்திலிருந்து துவங்கி ஸ்டான்லி மருத்துவமனைப் பகுதியான தங்கசாலை (ஆங்கிலேயர் காலத்தில் தங்க நாணயங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை (Mint)இங்கு இருந்ததாக கூறுவார்கள்) வரை நீண்டு கிடக்கும் நெரிசல் மிகுந்த சாலையாகும். ஏறத்தாழ முப்பது ண்டுகள் கடந்த பிறகும் பெரிதாக எந்தவித மாற்றமும் இல்லாமல் இன்றும் அப்படியே இருப்பதும் இதன் பெருமைகளுள் ஒன்று.

சாலையின் இருபுறமும் பாத்திரக் கடைகள், இரும்பு சாமான்கள் (நீங்கள் என்னவெல்லாம் இரும்பிலிருந்து தயாரிக்கக்கூடியவை என மனதில் நினைக்கிறீர்களோ அத்தனை பொருட்களும் இங்கு கிடைக்கும்.) மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்கும் கடைகள், அவற்றிலிருந்து இறக்கப்படும் பொருட்களை ஏற்றிச் செல்ல காத்திருக்கும் பலதரப்பட்ட வாகனங்கள் (பழங்கால மாட்டுவண்டியிலிருந்து இக்கால Pickup Trucks வரை) என அடைத்துக்கொண்டிருக்கும் அச்சாலையில் விபத்தில் சிக்கிக்கொள்ளாமல் நடந்து செல்வதே ஒரு சர்க்கஸ் வித்தைதான்.

அப்படிப்பட்ட சாலையில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் அப்போது இருந்தன. இருப்பினும் ஒவ்வொரு வங்கியிலும் காத்து நிற்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் பார்த்தப் பிறகுதான் எங்களுடைய வங்கியின் கிளை ஒன்றை அங்கு திறப்பதென்று தீர்மானித்து இட வேட்டையில் இறங்கினோம்.

அப்போதுதான் நான் கடை நிலை அதிகாரியாக (Junior Officer Grade I) பதவி உயர்வு பெற்றிருந்தேன்.

இதற்கிடையில் ஒன்றை சொல்ல வேண்டும். 1969 டு 1980 காலக்கட்டம் இந்திய வங்கித்துறைக்கும் வங்கி ஊழியருக்கும் ஒரு பொற்காலம் என கூறலாம். ஓரிரு மாநிலங்களில் மட்டும் வணிகம் செய்துக்கொண்டிருந்த பல வங்கிகள் இந்தியா முழுவதும் தங்களுடைய கிளைகளை அசுர வேகத்தில் (at feverish pitch) திறக்க முடிவு செய்து புறப்பட்ட காலக்கட்டம் அது.

அதன் விளைவாக தேவையான அளவு படிப்பும், திறமையும், முன்னேற்ற சிந்தனையும் (Objective Menatality) உள்ள பல இளைஞர்களுக்கும் மிகக்குறைந்த காலத்திலேயே பதவி உயர்வும், வயதுக்கு மீறிய பொறுப்பும் வங்கிகளில் தரப்பட்டன.

1970ல் குமாஸ்தாவாக சேர்ந்த எனக்கும் நான்கே வருடத்தில் துணை மேலாளராக (என்னுடைய முதல் மேலாளர் மற்றும் அக்கவுன்டன்டின் பரிந்துரையும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்கவியலாது) பதவி உயர்வு கிடைத்தது.

விஷயத்துக்கு வருகிறேன்.

ஒருவார தேடுதலுக்குப் பிறகு தங்கசாலை தெருவில் பாழடைந்திருந்த ஒரு கட்டடத்தைக் கண்டோம். அதன் உரிமையாளர் யார் என்பதை அக்கம்பக்கத்தில் விசாரித்துக்கொண்டு சென்று பாழடைந்திருந்த கட்டடத்தை இடித்துவிட்டு எங்களுடைய வங்கிக்கிளைக்கு ஏதுவாக ஒரு புதிய கட்டடத்தைக் கட்டித்தர இயலுமா என்று விசாரித்தோம்.

இரும்பு வியாபாரம் செய்து நொடித்துப்போயிருந்த (அவர் பெயரை வெறும் செட்டியார் என்று மட்டும் குறிப்பிடுகிறேன்.) அவர் கட்டுமான செலவுக்கு குறைந்த வட்டிவிகிதத்தில் கடன் கொடுத்தால் கட்டித்தருகிறேன் என்று ஒப்புக்கொள்ள இடப் பிரச்சினை ஒருவாறாக தீர்ந்தது.

தேவையான தொகை முழுவதையும் ஓரிரு தவணையில் பட்டுவாடா செய்யவே கட்டடம் மளமளவென முடிக்கப்பட்டு சரியாக ஒன்பது மாதத்தில் எங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

அடுத்து, கிளையை யாரை வைத்து திறக்கச் செய்வதென்ற பிரச்சினை எழுந்தது.

அந்த வருடம் எங்கள் வங்கியின் ஐம்பதாவது (தங்க ஜூபிலி) ஆண்டாகவும் அமைந்துவிடவே மிகவும் பிரபலமானவரை அழைக்கவேண்டும் என்ற நிபந்தனையிட்டது எங்களுடைய தலைமையகம்.

இது விஷயமாக எங்களுடைய மற்ற சென்னைக் கிளைகளின் வாடிக்கையாளர்களில் முக்கிய புள்ளிகள்/வர்த்தகர்களை எல்லாம் சந்தித்து தோற்றுப்போன விஷயத்தை ஒருநாள் மாலை கட்டட உரிமையாளர் செட்டியாரிடம் சொல்லி புலம்பிக்கொண்டிருந்தேன்.

‘அட நீங்க என்ன சார். கையில் வெண்ணெய வச்சிக்கிட்டு நெய்க்கு அலையறீங்க?’ என்றார் செட்டியார் உற்சாகத்துடன்.

‘என்ன சார் சொல்றீங்க?’ என்றேன்.

‘நம்ம க்ளோஸ் தோஸ்த்துதான் சார் இந்த வட்டத்து தி.மு.க செயலாளரு. நான் சொன்னா அவுரு கலைஞரையே கூட்டிக்கினு வந்துருவாரு. நான் பார்த்துக்கறேன். கவலய உடுங்க.’

(செட்டியார் பேசியது முழுக்க முழுக்க சென்னைத் தமிழ். என்னால் இயன்றவரை புரியும்படி எழுதியிருக்கிறேன்.)

நான் திறக்கப்படவிருக்கும் கிளைக்கு மேலாளராக நியமிக்கப்பட்டவரை (ஆந்திராவைச் சார்ந்தவர். தமிழ் சுத்தமாக வராது) தொலைப்பேசியில் (எஸ்.டி.டி பிரபலமடைந்திருக்கவில்லை. Trunk Call புக் பண்ணிவிட்டு ஓரிரு மணி நேரம் காத்திருக்க வேண்டும். எதிர்புறத்தில் இருப்பவர் காது சவ்வு கிழியும் வண்ணம் உரத்த குரலில் கத்தவேண்டும்.) அழைத்து விவரத்தைச் சொல்லி முதலமைச்சரைச் சென்று சந்திக்க உடனே புறப்பட்டு வரச்சொன்னேன்.

செட்டியாருடைய நண்பரின் உதவியுடன் முதலமைச்சரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது (இது எத்தனை எளிதாக முடிந்தது தெரியுமா? ஐந்து வருடங்களுக்குப் பிறகு வேறொரு முதலமைச்சரை சந்திக்க நாள் கேட்டு நாயாய் நடந்ததை வருகின்ற பதிவுகளில் சொல்கிறேன்).

குறித்த நாளன்று எங்கள் மேலாளரும், நானும், செட்டியாரும் தலைமச் செயலகத்துக்கு சென்றோம்.

முதலமைச்சரை சந்திக்க இப்போதிருக்கும் கெடுபிடிகளெல்லாம் அப்போதைய கலைஞர் ஆட்சியில் சுத்தமாய் இல்லை.

நாங்கள் அவருடைய வாயிலிலேயே அமைந்திருந்த சிறு அறையில் அமர்ந்திருந்த அவருடைய காரியதரிசியிடம் என்னுடைய மேலாளரின் Visiting Cardஐ கொடுக்க அடுத்த பத்தாவது நிமிடத்திலேயே அழைப்பு வந்தது.

யாராவது ஒருவர் மட்டுமே உள்ளே செல்லலாம் என்ற நிபந்தனை விதிக்கப்பட யார் உள்ளே செல்வது என்ற சிறு கலந்தாலோசனைக்குப் பிறகு என்னுடைய மேலாளர் மட்டும் உள்ளே சென்றார்.

என்ன நடந்ததோ தெரியவில்லை சிறிது நேரத்திற்குப்பிறகு முதலமைச்சரின் அழைப்பு மணி ஒலிக்க, காரியதரிசி என்னையும் உள்ளே செல்ல அனுமதித்தார்.

விசாலமான அறையில் நடுநாயகமாக அமர்ந்திருந்த முதலமைச்சர் என்னைக் கண்டதும் முகத்தில் புன்னகையுடன் ‘உங்கள் மேலாளருக்கு தமிழ் பேசவரவில்லை. அதனால்தான் உங்களை உள்ளே கூப்பிட்டேன். சொல்லுங்கள் என்ன செய்ய வேண்டும்?’ என்றார்.

நான் தயங்கி, தயங்கி வந்த விஷயத்தை கூற அவரும் மவுனமாய் முழுவதையும் கேட்டுக்கொண்டு நான் பேசி முடித்ததும் எங்கள் இருவரையும் பார்த்து மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார்.

‘வேற்று மாநிலத்திலிருந்து வந்து தமிழ்நாட்டில் கிளைகளைத் திறக்கவிருக்கும் உங்களை இருகரம் விரித்து வரவேற்கிறேன். உங்கள் கிளையைத் திறக்க எனக்கு விருப்பம்தான். ஆனால் ஒன்று, ஒரு வங்கிக் கிளையைத் திறந்து, வங்கி வணிகத்தைப் பற்றி பேசி திறப்பு விழாவை வெற்றிகரமாக நடத்தித்தர என்னையும் விட பொருத்தமான ஒரு இளைஞர் என் அமைச்சரவையில் இருக்கிறார். அவரை அழையுங்கள்.’ என்றார்.

என்னுடைய மேலாளர் என்னை ஒருமுறைப் பார்த்துவிட்டு ஆங்கிலத்தில், “Sir, my Head Office instructed me to invite you for the inauguration.” என்றார் தயக்கத்துடன்.

உடனே சரளமான ஆங்கிலத்தில், “Don’t worry. I am not going to recommend any ordinary person for your function. He is my finance minister. He is the best person to inaugurate your branch.” என்று கூறிவிட்டு அவரே அழைப்பு மணியை அடித்து தன்னுடைய காரியதரிசியை அழைத்து “தம்பி மாதவனை ஒரு நிமிடம் இங்கு வந்துபோக சொல்லுங்கள்.” என்றார்.

அவரும் இரண்டொரு நிமிடத்தில் வந்து சேர கலைஞர் அவரிடம் எங்கள் இருவரையும் அறிமுகப்படுத்திவிட்டு, “வர ஜனவரி 19ல ஏதாவது முக்கியமான அப்பாயிண்ட்மென்ட் இருக்கான்னு பாருங்க.. இருந்தாலும் அட்ஜஸ்ட பண்ணிக்கிட்டு இவங்களோட வங்கி கிளையை என்னுடைய பிரதிநிதியா (‘நான் போயி அங்க என்னத்தையா பேசறது? அதான் உங்களை அனுப்பறேன்’ என்று இடையில் ஒரு ஜோக்) போய் திறந்துவச்சிட்டு வந்திருங்க.” என்றார்.

அப்போதைய நிதித்துறை அமைச்சராயிருந்த திரு. மாதவனும் மறுப்பேதும் கூறாமல் ஒப்புக்கொன்டார்.

ஒப்புக்கொண்டது போலவே குறித்த நேரத்தில் வந்திருந்து மிக அருமையான Inaugural Speechஐயும் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஜமாய்த்து என்னுடைய வங்கியின் தலைமையகத்திலிருந்து வந்திருந்த அனைவரையும் வியப்பிலாழ்த்தினார் அமைச்சர்.

கலைஞர் அவர்களைச் சந்திக்க கிடைத்த வாய்ப்பை என் வாழ்நாளில் மறக்கமுடியாத சம்பவமாக இன்றும் நினைக்கிறேன்.

கலைஞரை முதலமைச்சர் பதவியிலிருந்த சமயம் அவரைக் காணச் சென்ற அனைவரும் அவருடைய மிகத்தெளிவான அணுகுமுறைய கண்டு வியந்தனர் என்றால் மிகையாகாது. குறித்த நேரத்தில் அலுவலகத்துக்கு வருவது, தன்னைக் காண வருவோரை அதிக நேரம் காத்திருக்க வைத்து, இன்று போய் நாளை வா என இழுத்தடிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை அப்போது.

தலைமைச் செயலகத்தில் அன்று நான் கண்ட ஒழுக்கம், நேரம் தவறாமை, சுறுசுறுப்பு ஐந்து வருடங்கள் கழித்து அதே அலுவலகத்தில் நுழைந்தபோது காணாமற் போயிருந்தது மட்டுமல்ல...

வேண்டாம். அதைப் பற்றி எழுதும்போது சொல்கிறேன்.


அனுபவங்கள் தொடரும்..

21 கருத்துகள்:

  1. நீங்கள் எழுதியதை படித்ததும் எனக்கு இன்னொரு முதலமைச்சரைப் பார்த்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.

    சில மாதங்கள் முன் நாங்கள் வந்த கார் விழுப்புரம் அருகே லெவல் க்ராஸிங்கில் காத்து நிற்க வேண்டியிருந்தது. நிறைய கார்கள் வரிசையாக நின்றன. எங்கள் காருக்குப் பின்னால் வந்த காரில் பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் கார் நின்றது. எங்கள் ஓட்டுனர் அதைப் பார்த்து என்னிடம் கூற, நான் உடனே காரை விட்டு இறங்கி முதல்வரின் காரை நோக்கி, கை கூப்பியவாறே சென்றேன். என் வீட்டம்மா இந்த பிராம்மணனுக்கு திடீரென என்ன ஆயிற்று என விழித்தார்.

    நான் வருவதை பார்த்த முதலமைச்சர் தானும் காரிலிருந்து இறங்கினார். ஒரு கெடுபிடியும் இல்லை. கறுப்புப் பூனைகள் என்னைப் பிடித்துத் தள்ளவில்லை. அவ்வளவு எளிய மனிதர் ரங்கசாமி அவர்கள்.

    அவரிடம் நான் பாண்டிச்சேரி மாநிலத்துக்கு செல்பவர்கள் நுழைவு அனுமதிக்காக கஷ்டப்படுவதைக் கூறினேன். மானிலத்துக்குள் வரும் எல்லா சாலைகளிலும் சுங்கச் சாவடிகள் வைக்குமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் புன்முறுவலுடன் ஆவன செய்வதாகக் கூறினார். செய்கிறாரோ இல்லையோ தெரியாது. இன்முகத்துடன் பேசியதே முக்கியம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  2. நன்றி ராகவன்,

    நானும் புதுவை முதல்வருடைய எளிமையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.

    சென்னை மேயராய் இருந்த சமயம் திரு.ஸ்டாலினை சந்திப்பதும் மிக மிக எளிதாய் இருந்திருக்கிறது. இந்த விஷயத்தில் அவர் அப்படியே அவருடைய தந்தைதான்!

    இத்தகைய அரசியல்வாதிகள்தான் நம் நாட்டிற்கு தேவை.

    பதிலளிநீக்கு
  3. டோண்டு சார்,
    இங்கே கூட கலைஞரை பாராட்டி ஒரு வரி எழுத மனமில்லையா?

    ஜோசப் ஐயா,
    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி .கலைஞரின் நிர்வாகத் திறமை அவருடைய எதிரிகளும் பாராட்டும் ஒன்று.

    பதிலளிநீக்கு
  4. நன்றி ராஜ்,

    நானும் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன் தான்.

    இருப்பினும் கலைஞரை சந்திப்பது எத்தனை எளிதாயிருந்தது!

    இன்று தலைமைச் செயலகத்துக்கு சென்று பாருங்கள். பார்வையாளர்களை ஏதோ ஆடு மாடுகளைப் போல் நடத்துவார்கள்.

    பதிலளிநீக்கு
  5. நன்றி ஜோ.


    டோண்டு ராகவனுக்கும் கலைஞருக்கும் ஏதாவது பகையா என்ன?

    பதிலளிநீக்கு
  6. //டோண்டு ராகவனுக்கும் கலைஞருக்கும் ஏதாவது பகையா என்ன?//

    ஹி.ஹி..அப்படில்லாம் இருக்காதுன்னு நினைக்குறேன் .இருந்தாலும் டோண்டு சார் திராவிட இயக்க தலைவர் ஒருவரை தப்பித்தவறி எதாவது ஒரு விஷயத்தில் பாராட்டுவாரா-ன்னு ஒரு சின்ன சந்தேகம் .டோண்டு சார் .சும்மா நகைச்சுவைக்காக தான் சொல்லுறேன்.

    பதிலளிநீக்கு
  7. நான் பெரியார் அவர்களை ஆதரித்து பதிவே போட்டிருக்கிறேனே. அதை இங்கு பார்க்கவும்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  8. Good. V r always in need of such personalities. Nice to know that Kalingar is great in simplicity also.

    பதிலளிநீக்கு
  9. உங்கள் உடனடி ரெஸ்பான்சுக்கு நன்றி.

    ஜோ தமாஷாகத்தான் சொல்லியிருப்பார்.

    உங்கள் பெரியார் பதிவைப் படித்தேன். அருமை.

    பதிலளிநீக்கு
  10. ராம்கி,

    நன்றி.

    கலைஞரின் பிற்காலத்திய நடவடிக்கைகள் அவருடைய பெயருக்கு சிறிதளவு இழுக்கு சேர்த்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

    அதற்கு அவரை மட்டும் குற்றம் சொல்லி பயனில்லை. சந்தர்ப்ப சூழ் நிலை காரணமாக ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள சிறிதளவும் கொள்கையில்லாத சில தரம் கெட்ட கூட்டணி கட்சிகளை அனுசரித்துப் போகவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானதுதான் அவருடைய சரிவுக்கு காரணம்.

    பதிலளிநீக்கு
  11. மேலும் உங்கள் அனுபவங்களை பார்க்க காத்திருக்கிறேன்.

    // இருந்தாலும் டோண்டு சார் திராவிட இயக்க தலைவர் ஒருவரை தப்பித்தவறி எதாவது ஒரு விஷயத்தில் பாராட்டுவாரா-ன்னு ஒரு சின்ன சந்தேகம்//

    நானும் ஜோ திராவிட இயக்க தலைவரான ஜெயலலிதாவை எங்காவது பாராட்டியிருக்கிறாரா என்று அறிய (தமாஷாக இல்லாமல் சீரியஸாகவே) ஆவலாயுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  12. நானும் ஜோ திராவிட இயக்க தலைவரான ஜெயலலிதாவை எங்காவது பாராட்டியிருக்கிறாரா என்று அறிய (தமாஷாக இல்லாமல் சீரியஸாகவே) ஆவலாயுள்ளேன்.//

    என்ன ஜோ பதிலையே காணோம்?

    ஜெ.. வைப் பாராட்டி ஒரு பதிவைப் போடுங்களேன். மனசாட்சியைக் கழற்றி வைக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  13. //நானும் ஜோ திராவிட இயக்க தலைவரான ஜெயலலிதாவை எங்காவது பாராட்டியிருக்கிறாரா என்று அறிய (தமாஷாக இல்லாமல் சீரியஸாகவே) ஆவலாயுள்ளேன்.//

    முகமூடி,
    ஜெயலலிதாவை திராவிட இயக்கத்தலைவராக டோண்டு சாரே ஒத்துக்க மாட்டார்ன்னு நினைக்கிறேன் .அவர் நினைக்கிறாரோ இல்லையோ ,நான் ஜெயலலிதாவை அந்த பட்டியலில் சேர்க்கவில்லை .இருந்தாலும் ஜெயலலிதாவை பாராட்டவேண்டிய விஷயத்தில் பாராட்ட எனக்கு ஒன்றும் தயக்கமில்லை .குறிப்பாக சுனாமியால் பாதிக்கப்பட்ட கிராமத்தை சேர்ந்தவன் என்ற முறையில் ,அரசாங்கம் நிவாரணப்பணிகளில் ஓரளவு திருப்திகரமாகவே செயல்பட்டதாக அறிந்தேன் .அதை பாராட்டுகிறேன்..மற்றபடி ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது அவரை என்னால் ஆதரிக்க முடியவில்லை .அதற்கு பல காரணங்கள் உண்டு .தேவைப்பட்டால் பதிவு போடுகிறேன் .

    பதிலளிநீக்கு
  14. // ஜெயலலிதாவை திராவிட இயக்கத்தலைவராக டோண்டு சாரே ஒத்துக்க மாட்டார்ன்னு நினைக்கிறேன் //

    ஆஹா ஒரே கொயப்பமா போச்சே... அ.திராவிட.மு.க திராவிட இயக்கம் இல்லையா? எம்.ஜி.ஆர் காலத்தில் அது திராவிட இயக்கமா இருந்து இப்ப நீர்த்து போச்சா, இல்ல ஆரம்பிச்ச காலத்துல இருந்தே அது தி.இயக்கம் இல்லையா?

    முதல்ல திராவிட இயக்கம்னா என்னன்னு யாராச்சும் எனக்கு சொல்லுங்கப்பா...

    (டி.பி.ஆர். உங்களுடைய நல்லதொரு பதிவை ஹைஜாக் பண்ணும் எண்ணம் இல்லை. அப்படி ஒரு நிலை வந்திருச்சின்னா இத தனி பதிவா ஆரம்பிச்சிக்கிறேன்)

    பதிலளிநீக்கு
  15. முகமூடி,
    என்னைப்பொறுத்தவரை ஜெயலலிதாவுக்கும் திராவிட இயக்கத்துக்கும் சம்பந்தம் இல்லை .உங்களுக்கு மாற்றுக் கருத்து இருப்பது பற்றி எனக்கு அட்சேபனையும் இல்லை .இதற்கு மேலே,அவர் திராவிட இயக்கமாக இருந்தாலும் நான் ஆதரித்துத்தான் ஆக வேண்டுமென்று கட்டாயம் இல்லை .கலைஞரையும் நான் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கவில்லை .ஆனால் ஜெயலலிதாவுக்கு அவர் பரவாயில்லை என்பது தான் என் நிலை .

    இதற்கு மேல் சிண்டு முடியிற வேலை வேண்டாம் .டோண்டு சார் கேட்டால் பதில் சொல்லிகிறேன்.

    பதிலளிநீக்கு
  16. ஆஹா, ஆஹா!

    விவாதம் இப்பத்தான் சூடு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு.

    இருந்தாலும் இந்த பின்னூட்ட மேடை ஒரு முழுமையான விவாதத்திற்கு போறாது என்று நினைக்கிறேன்.

    ஜோ, முகமூடி, டோண்டு தனித்தனியாய் பதிவுகள் இடுங்களேன்.

    ஆனால் நான் ஜோ பக்கம்தான். அவர் எங்க ஊர்க்காரர் என்பதுக்காக மட்டுமல்ல.

    திராவிடர் கட்சிகளுக்கு ஒருவர் தலைவராகிவிட்டார் என்பதாலேயே அவர் திராவிடராகிவிட முடியாது என்பது என்னுடைய அபிப்பிராயம்.

    சிலருக்கு இதில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.

    பதிலளிநீக்கு
  17. // சிண்டு முடியிற வேலை வேண்டாம் // இரண்டு கேள்விகளுமே உங்கள் பின்னூட்டத்தை எடுத்தாண்டு உங்களை நேரடியாக கேட்கப்பட்டது. இதில் சிண்டு முடிவது எங்கு வந்தது...

    ***

    சரி மத்த விஷயங்கள் தனிப்பதிவில்... நன்றி...

    பதிலளிநீக்கு
  18. முகமூடி,
    என் பழைய அனுபவங்களின் மூலம் உங்களோடு விவாதிக்காமல் இருப்பது எனக்கு நல்லது என முடிவுக்கு வந்திருந்தேன் .இனிமேலும் அதை உறுதியாக தொடர்வது நல்லது என நினைக்கிறேன்.நன்றி!

    பதிலளிநீக்கு
  19. முகமூடி,
    நீங்கள் இதுவரை அடித்த 'ஜோ'க்குகளில் எனக்குப் பிடித்தது:
    "திராவிட இயக்க தலைவரான ஜெயலலிதாவை..."
    ஆனாலும் இதில் ஒருவரை நீங்கள் 'பீட்' பண்ண முடியாது - வீரமணி ...

    பதிலளிநீக்கு
  20. சபாஷ்! சரியாய் சொன்னீர்கள் தருமி!

    பதிலளிநீக்கு
  21. // என் பழைய அனுபவங்களின் மூலம் உங்களோடு விவாதிக்காமல் இருப்பது எனக்கு நல்லது // நல்ல முடிவு...

    ***

    // நீங்கள் இதுவரை அடித்த 'ஜோ'க்குகளில் எனக்குப் பிடித்தது: "திராவிட இயக்க தலைவரான ஜெயலலிதாவை..." //

    இந்த ஜோக்குக்கு காரணம் "திராவிட இயக்க தலைவர் ஒருவரை தப்பித்தவறி எதாவது ஒரு விஷயத்தில் பாராட்டுவாரா" என்ற அந்த 'ஜோ'க்கு... இன்னிக்கு தமிழ்நாட்டில் திராவிட இயக்கம்னு ஒன்னு இல்லவே இல்லை என்பதே என் பாயிண்டு... கி.வீரமணி தலைவரா இருக்கும் திராவிடர் கழகம் உட்பட... திராவிட இயக்கமா ஆரம்பிச்ச திமுக வை இன்னிக்கி நிலையில திராவிட இயக்கம்னா, அதிமுகவும் திராவிட இயக்கம்தான் என்பதே நான் சொல்ல வந்தது... உங்க அளவு அனுபவம் இருந்தா இத இன்னும் நல்லா சொல்ல முடியும்...

    // திராவிட இயக்கம்னா என்னன்னு யாராச்சும் எனக்கு சொல்லுங்கப்பா... // இதை உண்மையிலேயே தெரிந்து கொள்ளும் நோக்கில்தான் கேட்டேன். தனிப்பதிவா கேட்கிறேன். அப்பவாவது யாராவது பதில் சொல்றங்களான்னு பார்ப்போம்.

    பதிலளிநீக்கு