20 டிசம்பர் 2019

நேரத்தை அறுவடை செய்தல்!

நேரத்தை அறுவடை செய்தல் (Harvesting time) என்ற வார்த்தை பயன்பாட்டை கேட்டிருக்கிறீர்களா?

சமீபத்தில் இணையதளம் ஒன்றில் ஒரு ஆங்கிலக் கட்டுரையில் இந்த சொல் பயன்பாட்டை படித்தேன். 

இதற்கு நேரத்தை மிச்சப்படுத்துதல் என்று சுருக்கமாக கூறிவிடலாம்.

ஒவ்வொரு மணித்துளியும் பொன் போன்றது என்பதை மும்பையில் சில ஆண்டுகள் வசித்தால் போதும், தெளிவாக தெரிந்துவிடும். 

நான் மும்பையில் இரு தவணைகளாக சுமார் ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். 

முதல் தவணையில் நான் பணியாற்றிய செம்பூர் கிளைக்கு அருகிலேயே குடியிருந்ததால் அலுவலகத்திற்கென்று போக-வர செலவிடும் நேரம் அதிகம் போனால் அரை மணி நேரம்தான். பெரும்பாலான நாட்களில் உடன் வசித்த நண்பர்களுடன் பேசிக்கொண்டே நடந்து சென்றுவிடுவேன். 

ஆனால் இரண்டாவது தவணையில் நான் பணியாற்றிய இடம் காலா கோடா என்ற பகுதி மும்பையின் ஒரு கோடியிலும் நான் வசித்த இடமான வாஷி மறு கோடியிலும் இருந்ததால் போக-வரவே தினமும் சுமார் மூன்று மணி நேரம் செலவிட வேண்டியிருக்கும். அப்போது வாஷியிலிருந்து மும்பை வி.டி. ரயில் நிலையத்திற்கு விரைவு மின்வண்டியும் கிடையாது. 

வாஷி ரயில் நிலையத்திலிருந்து ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் வெவ்வேறு மார்க்கங்களில் மின்வண்டிகள் புறப்பட்டுக்கொண்டே இருக்கும். நான் செல்லவிருந்த மார்க்கத்தில் சுமார் ஒன்பது நிமிடங்களுக்கு ஒரு வண்டிதான். அதாவது அதிகாலை 4..01 முதல் வண்டி என்று துவங்கி ஒவ்வொரு ஒன்பது மணித்துளிகளுக்கு ஒரு வண்டி என்று அடுத்த நாள் விடியற்காலை 1.00 மணி வரை தொடர்ந்து இரு மார்க்கங்களிலும் வண்டிகள் வரும், செல்லும். இடையில் சிக்னல் கோளாறு, எதிரில் வரும் வண்டிகளுக்கு இடம் விட்டு காத்திருத்தல் போன்றவைகளால் கால தாமதம் ஏற்படும் சமயங்களில் - இது பெரும்பாலும் எல்லா நாட்களிலும் நடக்கும் - அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தில் எதுவும் நடக்காது... ஒரு மணித் துளி காலதாமதமாக நாம் நிலையத்தினுள் நுழைந்தாலும் மின்வண்டியை தவறவிட்டுவிட்டு அடுத்த வண்டிக்காக காத்திருக்க வேண்டியதுதான்.

பெரும்பாலும் ஒரு வண்டி காலதாமதமானால் அடுத்த வண்டியில் பயணிப்பதற்கென வந்து சேரும் பயணிகளும் சேர்ந்துக்கொள்ள இரண்டு வண்டிகளுக்கான கூட்டம் நிலையத்தை அடைத்துக்கொண்டு காத்திருக்கும். நம்மால் அந்த பயணிகளுடன் போட்டி போட்டிக்கொண்டு வண்டியில் ஏற முடியவே முடியாது. அதை விட்டு விட்டு அடுத்த வண்டிக்கு காத்திருக்க வேண்டியதுதான். அப்போதுதான் ஒவ்வொரு மணித் துளியின் அருமையும் நமக்கு புரியும்.

சென்னையிலும் இதே அளவு என்றில்லாவிட்டாலும் புற நகர் வண்டிகளை பிடிப்பவர்கள் ஓடும் ஒட்டத்தை பார்த்தாலே தெரியும், நேரத்தின் அருமை!

இதைத்தான் கட்டுரையாளர் harvesting time என்று கூறியிருந்தார். நேரத்தை அறுவடை செய்தல்.

நேரத்தை மிச்சப்படுத்துதல் ஒரு கலை. அது அனைவருக்கும் கைவரும் என்று கூற முடியாது.

சிலர் எல்லாவற்றிலும் பரபரப்பாக இருப்பர். வேறு சிலர் எதிலும் நிதானமாக இருப்பர். 

ஒரு குடும்பத்தில் கணவன் - மனைவி இருவருமே பரபரப்புள்ளவர்களாக இருந்தாலும் பிரச்சினைதான். அல்லது ஒருவர் பரபரப்பானவராகவும் ஒருவர் நிதானமானவராக இருந்தாலும் பிரச்சினைதான். இருவருமே நிதானமானவர்களாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.

பெரும்பாலான வீடுகளில் அலுவலகம் புறப்பட்டுச் செல்லும் சமயங்களில் வாக்குவாதங்கள் ஏற்படுவதே இந்த நேரப் பிரச்சினையால்தான். 

நேரத்தை மிச்சப்படுத்த பல எளிய வழிகள் உள்ளன. 

அவற்றில் சில:

1. மென்பொருள் தயாரிப்பவர்கள் தயாரிப்பில் இறங்குவதற்கு முன்பாக ஒரு Flow Chart தயாரித்துக்கொள்வார்கள். அதை நாமும் தினசரி அலுவல்களில் தயாரித்துக்கொள்ளலாம். காலையில் எழுந்ததிலிருந்து எந்தெந்த அலுவல்களை அன்று செய்ய வேண்டும் என்பதை முந்தைய தின இரவே தயாரித்துக்கொள்ளலாம். 

2. எடுத்ததை எடுத்த இடத்திலேயே வைத்துவிடுவது. நம்முடைய பெரும்பாலான நேரம் விரையமாவதே நமக்கு தேவையான பொருட்களை தேடுவதில்தான் என்றால் மிகையல்ல. 

3.வீட்டில் எந்த பொருள் அது பற்பசையானாலும் சமையலுக்கு பயன்படும் பொருட்களானாலும் அது இன்னும் இரண்டொரு நாட்களில் தீர்ந்துவிடப்போகிறது என்று தெரிய வரும்போதே அதை ஒரு புத்தகத்தில் (டைரி என்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், என்று கடைக்குச் செல்ல வேண்டுமோ அந்த தேதியிலேயே) குறித்துக் கொள்ளலாம். 

4. மார்க்கெட்டுக்கு செல்லும்போதும் மார்க்கெட்டின் அமைப்பை மனதில் வைத்துக்கொண்டு வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலை தயாரித்துக்கொள்ள வேண்டும். கடை வாயிலிருந்து துவங்காமல் கடைக் கோடியிலிருந்து துவங்கி வாசல் வரை பொருட்கள் கிடைக்கும் பகுதிகளை மனதில் வைத்துக்கொண்டு பட்டியலை தயாரித்தால் நேரமும் மிச்சம் எதுவும் மறந்தும் போகாது. இப்போது பெரு நகரங்களில் மால்கள் தான் பிரசித்தம் என்பதால் அதன் வரைப்படத்தையும் மனதில் வைத்து பட்டியலை தயாரித்துக்கொள்ளலாம்.

5. சமையலில் தினமும் என்ன குழம்பு அல்லது கறிகாய் வைப்பது என்ற குழப்பத்திலேயே இல்லத்தரசிகள் நேரத்தை வீணடிப்பார்கள். என் வீட்டிலும் அப்படித்தான். ஆனால் நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றதிலிருந்து அதற்கும் ஒரு அட்டவணை வைத்திருக்கிறேன். கடந்த பத்து வருடங்களாகவே அதாவது 2010லிருந்து வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்குவது என் வேலைதான். ஆகவே எந்த நாள் எந்த சமையல் என்பதையும் நானே தீர்மானித்துவிடுவேன். ஏழு நாட்களுக்கு ஏழு குழம்பு அதற்கு தேவையான கறிகாய் எல்லாம் அந்த அட்டவணைப்படிதான். அதிலேயே தினமும் பல மணித்துளிகள் மிச்சமாவதை உணர முடிகிறது. 

7. வெளியில் எங்காவது புறப்பட வேண்டுமென்றால் நான் மனதில் வைத்திருக்கும் நேரத்திலிருந்து குறைந்தது அரை மணி நேரம் முன்பாகவே புறப்பட வேண்டும் என்று வீட்டிலுள்ளவர்களிடம் கூறிவிடுவேன். புறப்படும் நேரத்தில் ஏற்படும் டென்ஷனை இது பல மடங்கு குறைத்துவிடுவதுண்டு. 

8.எல்லாவற்றிற்கும் நேரம் என்று ஒன்று உண்டு என்பார்கள் நம் முன்னோர்கள். எதை எதை எப்போது செய்ய வேண்டுமோ அதை அப்போதே செய்து முடித்துவிட்டால் நேரத்திற்கு நேரமும் மிச்சம் தேவையில்லாத படபடப்பும் தேவைப் படாது என்பார்கள். அதை வேத வாக்காக எடுத்துக்கொள்வதும் நேரத்தை மிச்சப்படுத்தும். 

9. முடியாது என்ற வார்த்தையை தயங்காமல் சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.  எல்லாவற்றிற்கும் சரி சரி என்று சொல்ல ஆரம்பித்தால் எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க முடியாது.

10. நம்முடைய செல்பேசியிலுள்ள ‘நாட்க்காட்டி (Calendar) செயலி’யை பயன்படுத்தி ஒரு மாதம் முழுவதும் எந்தெந்த தேதியில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் குறித்துக்கொண்டு அலாரமும் வைத்துவிட்டால் நேரம் வெகுவாக மிச்சப்படும், மறந்தும் போகாது. குறிப்பாக மின்கட்டணம், கடன் அட்டை பணம் செலுத்துதல் என்பன போன்ற முக்கியமான விவரங்களை அந்தந்த நாட்களில் குறித்து வைத்துக்கொண்டாலும்  தாமதக்கட்டணம் செலுத்துவதையும் தவிர்க்க முடியும். 

இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம். 

ஒரு பதிவை எழுத துவங்கும்போதே இதைத்தான் எழுத வேண்டும் என்று நாம் மனதில் குறித்துக்கொள்வதில்லையா? அதே போன்று அனைத்தையும் திட்டமிட்டு செயல்படுத்தினால் நேரம் மிச்சம்தான்.

ஒரு நாளைக்கு இருபத்தி நாலு மணி நேரம் போறமாட்டேங்குது என்பவர்களில் பெரும்பாலானோர் இவ்வாறு திட்டமிடாமல் செயல்படுபவர்களே என்பது என் கருத்து. என் அனுபவமும் அதுதான். 

**********

13 டிசம்பர் 2019

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்!

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.....

வாழ்க்கை  என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும் 

இதுதான் வாழ்க்கை. இதை ஏற்ருக்கொண்டால் நிம்மதி பிறக்கும். என்கின்றன இந்த திரைப்படப் பாடல் வரிகள்.

ஆனால் இது  தோல்வியை, இழப்பை ஏற்றுக்கொள் அதற்காக வருந்தாதே என்று நம்மை நாமே திருப்திப் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவது போலல்லவா உள்ளது?

அதையே இப்படி பாடிப் பார்த்தால்..

உனக்கும் மேலே உள்ளவர் கோடி 
உழைத்து உழைத்து  முன்னே செல்லு

என்றும் 

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் சாதனை இருக்கும்

ஆம்!

சாதிக்க வேண்டும் என்று நினைத்து முன்னே செல்வதுதான் இன்றைய தேவை.

நம்மால் முடிந்தால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை என்பதை என்னுடைய மேலாளர் வாழ்க்கையில்  ஒன்றும் இல்லாமையிலிருந்து தங்களுடைய அசுர உழைப்பால் மிக உன்னத நிலையை அடைந்த பல வாடிக்கையாளர்களை கண்டிருக்கிறேன். 

நான் முதல் முதலாக சென்னை கிளை ஒன்றில் மேலாளராக அமர்த்தப்பட்ட சமயம்.

சென்னை அமைந்தகரையில் 20க்கு 20 அடி பரப்பளவு மட்டுமே  இருந்த ஒரு சிறைய கடையில் ஐந்தாறு இரும்பு கட்டில்கள், மேசை மற்றும் கூரை மின் விசிறிகள், மடக்கும் இரும்பு நாற்காலிகள் என சுமார் பத்து பதினைந்து பொருட்களை மட்டுமே இருப்பு வைத்துக்கொண்டு தவணை முறையில் அவற்றை விற்பனை செய்து வந்த ஒருவரை என்னுடைய கிளை அருகில் அதே மாதிரியான ஆனால் சற்றே பெரிய அளவில் வணிகம் செய்துக்கொண்டிருந்த ஒரு வாடிக்கையாளர் அறிமுகப்படுத்தினார். எங்களுடைய வங்கியில் அ[போது வணிக கணக்கு (current account) துவங்க குறைந்தபட்சமாக ரூ. 500/- செலுத்தப்படுவதுடன் அதை இருப்பிலும் வைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த தொகை கூட அவரிடம் இருக்கவில்லை. ஆகவே முதலில் நீங்கள் உங்களுடைய பெயரில் சேமிப்பு கணக்கு துவங்குங்கள்.... வணிகம் சற்று பெருகியதும் வணிகக் கணக்கு துவங்கலாம் என்று அறிவுரை கூறி ரூ.100 மட்டும் செலுத்தி கணக்கு துவக்க வைத்தேன்.

அத்துடன் நில்லாமல் அடுத்த சில மாதங்களில் அப்போது பிரபலமாக இருந்த சிறு வணிகக் கடன் திட்டத்தில் (Small Loan Scheme) ரூ.10000/- ஓவர்டிராஃப்ட்டும் வழங்கினேன். அதற்கு ஈடாக அடகு வைக்கக் கூட அவரிடம் ஒன்றும் இருக்கவில்லை. அவரை அறிமுகப்படுத்தியவருக்கு அவருக்கு ஜாமீன் வழங்கவும் அவ்வளவாக விருப்பமில்லை. ஆனாலும் வேறொரு வாடிக்கையாளருடைய தனிநபர் ஜாமீன் இல்லாமல் கடன் கொடுக்கவும் வழியில்லை. ஆகவே அவரை நானே சமாதானப்படுத்தி ஜாமீன் வழங்க வைத்து கடனை வழங்கினேன்.

அவர் மீது நான் வைத்திருந்த நம்பிக்கை வீண் போகவில்லை. அவருடைய தன்னம்பிக்கையும் அயரா உழைப்பும் நான் அங்கிருந்த மாற்றலாகிப்போகும் சமயத்தில் அதாவது சுமார் இரண்டு ஆண்டு காலத்தில் அவருடைய ஒவர்டிர்ஃப்ட் லிமிட் ஒரு லட்சமாகவும் அவருடைய வருட வணிகம் சுமார் பத்து லட்சமாகவும் வளர்ந்திருந்தது. 

நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது  அந்த கிளையின் மிகப் பெரிய வாடிக்கையாளராக உயர்ந்துள்ளார் என்று கேள்விப்பட்டபோது வியந்துபோனேன். இப்போதும் அதே பகுதியில்தான் அவருடைய கடை உள்ளது சுமார் நாற்பதாயிரம் சதுர அடி பரப்பில்.... அதே சாலையில் அவருடைய இரு இளைய சகோதரர்களும் அதே மாதிரியான கடைகளை நடத்தி வருகின்றனர்.

ஆயினும் அதே எளிமையுடன் அவர் இருப்பதை பார்க்கும்போது எவ்வித பின்புலனும் இல்லாமல் தனி ஒருவர் நினைத்தால் தன்னுடைய அயரா உழைப்பால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்பதை  உணர்ந்தேன்.

அதே போல் தூத்துக்குடியில் நான் மேலாளராக பொறுப்பேற்றபோது  மீன் ஏற்றுமதியாளர்களுக்கு ஐஸ் கட்டிகளை சிறிய அளவில் விற்பனை செய்துக்கொண்டிருந்த ஒருவரை சந்திக்க நேரந்தது. தூத்துக்குடியில் பிரதான தொழில் மீன்பிடி தொழில். அங்கு கிடைக்கும் சிங்க இறால்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அவற்றை டண் கணக்கில் கொள்முதல் செய்து மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கென்றே கேரள மாநிலத்தைச் சார்ந்த பலர் அங்கு தொழிற்சாலைகளை நடத்தி வந்தனர். இவர்களுக்கு ஐஸ் கட்டிகளை வழங்குவதற்கென்றே பல சிறிய நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வந்தன. வருடத்தில் எட்டு மாதங்கள் சீசன் படு ஜோராக நடக்கும். 

என்னுடைய வாடிக்கையாளர் மிகவும் நலிந்த குடும்பத்திலிருந்து வந்தவர். வேறொரு நிறுவனத்தில் தினக்கூலிக்கு ஐஸ் வெட்டும் பணியில் இருந்தவர். அவருக்கும் இதே போன்று ஒரு தொழிலை சொந்தமாக துவங்கி தொழில் செய்ய வேண்டும் என்ற ஆவல். நான் செல்லும் தேவாலயத்துக்குத்தான் அவரும் வருவார். அப்போது தூத்துக்குடியில் சிறப்பாக செயல்பட்டு வந்த பல்நோக்கு சேவை மையத்திலிருந்த மேலாளர் இவரை பரிந்துரைத்ததால் அரசு செயல்படுத்தி வந்த திட்டத்தின் கீழ் ரூ.பத்தாயிரம் கடனாக கொடுத்தேன். அந்த திட்டத்தில் அரசு சார்பில் இருபத்தைந்து விழுக்காடு மானியமாக வழங்கப்பட்டது. 

நான் கடன் வழங்கியது 1985ம் வருடம். இன்று தூத்துக்குடியிலேயே பெரிய ஐஸ் கட்டி தொழிற்சாலை அவருடையதுதான். தனி ஆளாக தன்னுடைய உழைப்பால் மட்டுமே உயர்ந்த மனிதர் அவர்!

இதுபோல் சென்னை ராயப்பேட்டையில், புரசை வாக்கத்தில் மும்பை செம்பூரில் என என்னுடைய பல கிளைகளில் மிக நலிந்த பின்னணியிலிருந்து வந்த பல வாடிக்கையாளர்கள் சுமார் இருபது ஆண்டு கால இடைவெளியில் நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து நிற்பதை பார்த்தபோது..

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் சாதனை இருக்கும்

என்கிற வரிகள் எத்தனை உண்மையானது என்பது புலப்பட்டது...

உழைப்பு, உழைப்பு, உழைப்பு இது மட்டுமே போதும்.... சரியான நேரத்தில் தேவைப்படும் மூலதனமும் கிடைத்துவிட்டால் வணிகத்தில் எட்டிவிட முடியாததே இல்லை எனலாம். 

***********



10 டிசம்பர் 2019

'எங்கள் ப்ளாக்' தளத்தில் என் கதை

என்னுடைய சிறுகதை 'கூடா நட்பு ' நண்பர் ஸ்ரீராமின் '' எங்கள் ப்ளாகில்வெளியாகி உள்ளது.

வாசித்து அங்கே உங்களுடைய கருத்துரைகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

05 டிசம்பர் 2019

எனது நான்காவது கிண்டில் புத்தகம்

இது என்னுடைய நான்காவது கிண்டில் புத்தகம்.

இது இன்று முதல் கிண்டில் ஆன்லைன் ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும்.

இதில் இரண்டு சிறுகதைகள் உள்ளன. இவை சுமார் 7 வருடங்களுக்கு முன்பாக எழுதப்பட்டதால் இதை பலரும் படித்திருக்க வாய்ப்பில்லை.

ஆகவே இதை தரவிறக்கம் செய்து படிப்பவர்கள் இதை பற்றிய தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நட்புடன்
டி பி ஆர

சுட்டி:

https://www.amazon.in/dp/B0827JZSP1/ref=cm_sw_r_cp_apa_i_Bem6Db5T0DV15

மனம் ஒரு குதிரை

மனம் ஒரு குரங்கு 
மனித மனம் ஒரு குரங்கு 
அதைத்தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் 
நம்மைப்பாவத்தில் ஏற்றி விடும் 
அது பாசத்தில் தள்ளி விடும்
மனம் ஒரு குரங்கு 
மனித மனம் ஒரு குரங்கு"

அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது
அப்படியே விட்டுவிட்டால் முடிவும் இராது
அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது
அப்படியே விட்டுவிட்டால் முடிவும் இராது
நயத்தாலும் பயத்தாலும் அடங்கி விடாது
நமக்குள்ளே இருந்து கொண்டு நன்மை தராது

இதே பெயரில் வந்த பழைய தமிழ்படத்தில் வந்த பாடல் வரிகள்.

ஆனால் உண்மையில் பார்க்கப் போனால் மனம் ஒரு குரங்கு என்பதை விட ’ஒரு குதிரை’ என்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

மனதை  கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவில்லை யென்றால் நம்மை பாதாளத்திலும் தள்ளிவிடும்!

இந்த வரிகள் நிச்சயம் குரங்குக்கு பொருந்தாது. 

அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது.

எந்த குரங்க போயி அடிக்கப் போறோம், இல்ல அணைக்கப் போறோம்? அடிச்சாலும் கடிக்கும், அணைத்தாலும் பிராண்டும். 

குதிரைதான் கட்டுப்பாட்டில் வைத்திராவிட்டால் பாதாளத்தில் அதாவது பள்ளத்தில் தள்ளிவிடும்.

ஆகவே மனம் ஒரு குதிரை என்பதுதான் சரியாக இருக்கும்.

மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதில் பலனில்லை. அதை கட்டவிழ்த்து பறக்க விட வேண்டும். அப்படி பறக்கவிட்டால் அது நம்மை பாவத்திலோ அல்லது பள்ளத்திலோ  தள்ளிவிடும் என்பதில் அர்த்தமில்லை.

பள்ளத்தில் விழுந்துவிடுவோம் என்று நினைத்தால் குதிரை சவாரி செய்வதில் கிடைக்கும் இன்பம் கிடைக்காமலே போய்விடுமே. அந்த இன்பம் அதில் சவாரி செய்தவர்களுக்குத்தான் தெரியும். அது ஒரு அலாதியான இன்பம். 

முதல் முதலாக இரு சக்கர வாகனம் ஒன்றில் பயணிக்கும்போது அனுபவித்த மகிழ்ச்சிக்கு ஒப்பானது என்றால் மிகையல்ல.

சைக்கிள் ஓட்டி பழகும்போது நாலு தடவ கீழ விழுந்து எழுந்து படிச்சாத்தாண்டா அதுல ஒரு த்ரில்லே இருக்கும் என்றான் எனக்கு பயிற்றுவித்த நண்பன். 

இது குதிரை சவாரிக்கும் பொருந்தும். 

ஒரு குதிரையை கட்டுக்குள் கொண்டுவருவது எத்தனை கடினமோ அதை விட கடினம் மனதை கட்டுக்குள் கொண்டு வருவது.

அதே சமயம் அதை கட்டுக்குள் கொண்டு வந்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை. 

அது அவரவர் மனநிலையைப் பொருத்தது.

நம் மனதில் உள்ளவற்றை அசைபோட்டு பார்ப்பதே ஒரு அலாதியான இன்பம்தான். 

இன்றைய தினம் நடந்துக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்வை சார்ந்தே பல கடந்த கால நினைவுகள் வந்து போவதை நான் உணர்ந்திருக்கிறேன்...

நான் குடியிருக்கும் வீட்டின் எதிர் வீட்டில் வசிக்கும் ஒரு ஏழு வயது சிறுவன் முதல் முறையாக தன் தந்தையின் உதவியுடன் சைக்கிள் ஓட்டிப் பழகுவதை கண்டபோது நான் இளம் வயதில் அதை பழகியதும் நினைவுக்கு வந்தது அதை என் இரு மகள்களுக்கும் பயிற்றுவித்ததும் நினைவுக்கு வந்தது.

மூச்சு வாங்க என் சைக்கிள் பின்னால் ஓடி வந்த என் நண்பனின் நினைவும் வந்தது... நான் அதே போல் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க என் மகளின் ஸ்கூட்டர் பின்னால் ஓடிய நினைவும் வந்தது...

இன்றைக்கு இணையதளத்தில் ‘தேடல்’ மென்பொருள்கள் பலவும் இந்த அடிப்படையில்தான் செயல்படுகின்றன போலும். ஒரு விஷயத்தை அடிப்படையாக எடுத்துக்கொண்டு அது சார்ந்த பல விஷயங்களை பின்னோக்கி சென்று தேடுவதை பார்த்தால் நம் மனதும் இதைப் போன்றுதானே செயல்படுகிறது என்று எண்ண தோன்றும்.

யோகாசனம் பயிலும் போதும் தியானத்தில் ஈடுபடும்போதும் மனம் ஒரு நிலையில் நிற்காமல் அலைந்துக் கொண்டிருந்தால் அதை கட்டுப்படுத்தாதீர்கள் அதை அதன் வழியிலேயே அலையவிட்டு ஒருநிலைப் படுத்த முயலுங்கள் என்று பயிற்றுவிப்பார்கள். 

இந்த யுக்தியை நானும் பல சமயங்களில் கையாண்டிருக்கிறேன்.

தினமும் இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பு ஒரு பதினைந்து நிமிடம் கண்களை மூடி பிரார்த்தனை செய்வதுண்டு. ஆனால் அந்த பதினைந்து நிமிடமும் மனம் ஒரு நிலையில் நிற்காது அலைந்துக்கொண்டே இருக்கும். உதடுகள் பிரார்த்திக்கொண்டு இருந்தாலும் மனம் ஒரு தறிகெட்ட குதிரையைப் போல அலைந்துக்கொண்டிருக்கும். அதை நம் வயப்படுத்த முயன்றால் பிரார்த்தனை தடைப்பட்டு போகும்......

இதற்கு சாத்தான் காரணம் என்பார்கள் நம் முன்னோர்கள். நீ கடவுளை நினைச்சி பிரார்த்தனை செய்வது சாத்தானுக்கு பிடிக்காதாம். அதனாலதான் அது தன் சீடர்களை அனுப்பி உன் மனதை அலையவிடுகிறது என்பார் என் அம்மாச்சி (அம்மாவின் தாயார்). எனக்கும் அது பல சமயங்களில் உண்மையாக இருக்குமோ என்று தோன்றுவதுண்டு. 

மனம் அப்படிப்பட்டதுதான். சமயத்திற்கு ஏற்றாற்போல் மாறிக்கொள்ளும். 

திருடுவது, கையூட்டு பெறுவது, கற்பழிப்பது எல்லாமே தவறு என்று நம்மில் பலருக்கு தெரிகிறது. ஆனால் அதில் தினம் தினம் ஈடுபடுபவர்களுக்கு அது தெரிவதில்லையே ஏன்? 

அதற்கு அவர்களுடைய கெட்டுப் போன மனதுதான் காரணம். மனம் நம் அனைவருக்கும் பொதுவானதுதான் என்றாலும் அதை நாம் எவ்வாறு பழக்கிவிடுகிறோமோ அதைத்தான் அது மீண்டும் மீண்டும் செய்யும்.  

அதைத்தான் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள் போலும். 

************




01 டிசம்பர் 2019

கிண்டில் புத்தகம் இலவசமாய்



இது என்னுடைய மூன்றாவது கிண்டில் புத்தகம்.

இன்று முதல் நான்கு நாட்களுக்கு இலவசம்.

விரும்புபவர்கள் தரவிறக்கம் செய்து படிக்கவும்.  கிண்டில் கடையில் ‘குற்ற வழக்குகள்’  என்று தேடினால் கிடைக்கும்.

உங்கள் கருத்துக்களை முடிந்தால் கிண்டில் தளத்திலும் முடியாதவர்கள் இந்த தளத்திலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த வாரம் நான் இலவசம் என்று குறிப்பிட்ட இரண்டு புத்தகங்களையும் இதுவரை சுமார் ஐநூறு பேர் தரவிறக்கம் செய்துள்ளனர்.

சிலர் என்னுடைய மின்னஞ்சலில் பாராட்டுகளும் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நட்புடன்,
டிபிஆர்.


27 நவம்பர் 2019

என்னுடைய புத்தகங்கள் இலவசமாய்.....


என்னுடைய இந்த இரண்டு கிண்டில் புத்தகங்களையும் இன்று முதல் சனிக்கிழமை வரையிலும் கிண்டில் ஆன்லைன் கடையிலிருந்து இலவசமாய் தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

இவற்றை படிக்காதவர்கள் அமேஜான் கிண்டில் ஆன்லைன் ஸ்டோருக்கு சென்று ‘free ebooks tamil' என்று  தேடலில் குறிப்பிடவும்.  அதை தொடர்ந்து காட்டப்படும் பட்டியலில் காட்டப்படும் இவை இரண்டையும் இலவசமாக தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

இதற்கு உங்களிடம் கிண்டில் செயலி தேவைப்படும். அது இப்போது கணினிக்கும் கிடைக்கிறது.

இதை தரவிறக்கம் செய்ய உங்களுக்கு அமேஜான் கணக்கு தேவைப்படும். உங்களிடம் இல்லையென்றால் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி புதிதாய் கணக்கு ஒன்று துவக்கிக்கொள்ளலாம்.

நட்புடன்,
டிபிஆர்.

21 நவம்பர் 2019

கணினிக்கு ஏற்ற கிண்டில் மென்பொருள்

நான் அமேஜான் கிண்டிலில் என்னுடைய புத்தகத்தை வெளியிட்டுள்ள தகவலை என்னுடைய பல அலுவலக நண்பர்களுடன் பகிர்ந்திருந்தேன். அதில் பலரும் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் என்பதால் எங்களால் கைப்பேசியில் இதை படிக்க முடியவில்லை, கண்கள் வலிக்கின்றன என்றார்கள். எனக்கும் அதே தொல்லை தான் என்றேன்.

வேறு சிலர் எங்களிடம் ஸ்மார்ட் ஃபோன் இல்லை டிபிஆர் என்றார்கள். என்னிடமும்தான் இல்லை என்றேன்.

நானும் இதை நினைத்துத்தான் கிண்டில் பக்கமே செல்லாமல் இருந்தேன். ஆனால் என்னுடைய நண்பர்களுள் ஒருவர் கணினிக்கு என்றே அமேஜான் ஒரு கிண்டில் மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதை தரவிறக்கம் செய்து படியுங்கள் என்றார்.

இதில் நம் வலை நண்பர் ஜோதிஜி அவர்களின் புத்தகத்தைத்தான் முதலில் படித்தேன். நம் கண்களுக்கு தேவையான அளவுக்கு எழுத்துக்களை பெரிதாக்கிக் கொள்ளும் வசதியும் இதில் இருப்பதால் கண்களுக்கு எவ்வித வலியும் ஏற்படவில்லை.

ஆகவே இத்தகையோர் பயனடையவே இந்த பதிவை எழுதுகிறேன்.

கீழ்காணும் திரை நகல்களை பார்த்தாலே போதும் என்று நினைக்கிறேன்.
இரண்டாவது திரையில் உங்கள் மின்னஞ்சல் விலாசத்தை கொடுத்தால் மென்பொருளின் சுட்டி (Link) வந்துவிடும். அதை பயன்படுத்தி மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிவிடலாம்

உங்களுக்கு அமேஜான் கணக்கு இருந்தால் மென்பொருளை அங்கு பதிவு செய்துக்கொள்வது நல்லது.

அதன் பிறகு டெஸ்க்டாப்பிலுள்ள கிண்டில் சுட்டியை க்ளிக் செய்து கிண்டில் தளத்திலுள்ள எந்த மின்புத்தகத்தையும் வாங்கி படிக்கலாம். ஜெயகாந்தனின் சிறுகதை தொகுப்பு இலவசமாகவே கிடைக்கிறது. அதே போல் பல பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன.

அச்சு புத்தக விலையுடன் ஒப்பிடுகையில் இதில் பண்மடங்கு குறைந்த விலையிலேயே புத்தகங்கள் கிடைக்கின்றன. பல புதிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் ஐம்பது ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைப்பது எத்தனை அரிது!

இந்த மென்பொருளை பயன்படுத்தி மறைந்து வரும் வாசிப்பு பழக்கத்தை மீண்டும் தொடருங்கள்.

நன்றி,

டிபிஆர்.





20 நவம்பர் 2019

அமேஜான் கிண்டிலில் என் புத்தகம்

சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு ‘சொந்த செலவில் சூன்யம்’ என்ற க்ரைம் நாவலை ஒரு நீள் தொடராக எழுதியிருந்தேன். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதை அப்போதே பல நண்பர்கள் இதை புத்தக வடிவில் வெளிக்கொணரலாமே என்று கருத்துரைகளில் கூறியிருந்தனர். ஆனால் அதில் அப்போது எனக்கு அவ்வளவாக விருப்பமில்லை. 

ஆனால் இப்போது நம்முடைய பதிவுலக நண்பர்கள் சிலர் காட்டிய பாதையில் அமேஜான் கிண்டில் தளத்தில் வெளியிட்டுள்ளேன். 


இதை இயன்றவரை பலருக்கும் சென்று சேர்க்கும் வகையில் இதன் விலையை ஐம்பது ரூபாய்க்கும் குறைவாக விலையிட வேண்டும் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் அமேஜான் தளத்தில் புத்தகத்தின் அளவின் (size) அடிப்படையில் அமெரிக்க சந்தையில் குறைந்த பட்சம் 0.99 டாலர்கள் விலை இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அந்த சந்தையில் நிர்ணயிக்கப்படும் விலையின் அடிப்படையில்தான் உலகெங்கும் உள்ள அமேஜான் கிண்டில் தளங்களில் விலை நிர்ணயிக்கப்படுமாம்!

அமெரிக்க சந்தையில் குறைந்த பட்ச விலையாக ஒரு டாலரை தெரிவு செய்தேன். அதன் அடிப்படையில் இந்திய சந்தையில் ரூ.72/- என நிர்ணயிக்கப்பட்டது. இதில் முப்பந்தைந்து விழுக்காடு எனக்கு ராயல்ட்டியாக வழங்கப்படும். எழுபது விழுக்காடு வரை ராயல்டி வழங்கும் திட்டமும் உள்ளது. ஆனால் அந்த் அடிப்படையில் புத்தகத்தின் விலை குறைந்த பட்சம் ரூ.225/- இருக்க வேண்டும். அந்த விலையில் புத்தகத்தை இந்தியாவில் விற்பது கடினம் என்பதால் அதை நான் தெரிவு செய்யவில்லை. 

இந்த நாவலை தொடராக படித்தவர்களுக்கு இதைப் பற்றி தெரிந்திருக்கும். அமேஜான் விதித்த நிபந்தனைகளின்படி இத்தொடரை என்னுடைய என்னுலகம் தளத்திலிருந்து நீக்கிவிட வேண்டியதாயிற்று. இப்போது அது என்னுடைய பளாகில் படிக்க கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் இதுவரை படிக்காதவர்களுக்கு  ஒரு கதை சுருக்கம்.

ராஜசேகர் ஒரு க்ரிமினல் வழக்கறிஞர். திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. 

வழக்கறிஞர் பணியில் அதிகம் பிரசித்தி இல்லாதவர். சுமாரான வருமானம்தான். 

இந்த சூழலில் தன்னிடம் உதவி கேட்டு வரும் மாதவி என்ற பெண்ணுடன் தகாத உறவு ஏற்படுகிறது. 

ஆனால் அந்த பெண் தன்னுடன் அல்லாமல் வேறு பலருடனும் இத்தகைய தொடர்பு வைத்திருந்ததை அறிய வரும்போது அவர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் தன்னை தாக்க வரும் மாதவியை பிடித்துதள்ளிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார் ராஜசேகர். 

அடுத்த நாள் காலை மாதவி கொலையுண்டு இறந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைகிறார். ஒருவேளை தாந்தான் கொலையாளியாக இருக்குமோ என்று அஞ்சுகிறார். 

அவர்தான் கொலை செய்தாரா இல்லையா அப்படியானால் அதிலிருந்து விடுபடுகிறாரா அல்லது தண்டிக்கப்படுகிறாரா என்பதுதான் மீதி கதை. 

ஒரு சராசரி க்ரைம் நாவலைப் போன்று இல்லாமல் குற்றவாளையை கண்டுபிடிப்பதில் காவல்துறை செய்யும் புலன்விசாரணைகள், காவல்துறையில் அதிகாரிகளுக்கிடையில் ஏற்படும் ஈகோ மோதல்கள், காவல்துறைக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும் இடையில் ஏற்படும் மோதல்கள், குற்றவாளிக்காக ஆஜராகும் வழக்கறிஞரின் குற்ற விசாரணைகள் அதை தொடர்ந்து வழக்கு வழக்காடு மன்றத்திற்கு செல்லும் சூழலில் அங்கு ஏற்படும் மோதல்கள், காரசாரமான விவாதங்கள் என குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது முதல் தண்டனை அளிக்கப்படும் வரையிலான அனைத்து நிகழ்வுகளையும் விவரிக்கிறது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நாவலை தேடி எடுத்து சில பகுதிகளை குறைத்தோ நீக்கியோ என ஒரு முழு தணிக்கை செய்து வெளியிட்டுள்ளேன்.

இதை தொடராக வாசித்தவர்களுக்கும் முழு நாவலையும் ஒரே மூச்சில் வாசித்து முடிக்கும் அனுபவம் இந்த புத்தக வாயிலாக கிடைக்கும் என்று நம்புகிறேன். 

நன்றி,

அன்புடன்,
டிபிஆர்.  

14 நவம்பர் 2019

கா..கா..கா (நகைச்சுவை)

நடிகர்கள்: பார்த்திபன், வடிவேலு, மற்றும் பலர்.

சாலையோரத்திலிருந்த டீக்கடை ஒன்றில் பார்த்திபன் அமர்ந்து காப்பி குடித்துக் கொண்டிருக்கிறார்.

தெருமுனையில் சைக்கிளில் வந்துக் கொண்டிருந்த வடிவேல் தூரத்திலிருந்தே அவரைப் பார்த்துவிடுகிறார். அவர் பார்ப்பதை பார்த்திபனும் பார்த்துவிடுகிறார். உடனே ஒரு விஷமப் புன்னகை அவர் உதடுகளில் தவழ்கிறது. இருப்பினும் பார்த்தும் பார்க்காததுபோல் தன் அருகில் பெஞ்சில் கிடந்த தினத்தந்தி நாளிதழை எடுத்து தன் முகத்தை மூடிக்கொண்டு படிக்கிறார்.

வடிவேலு சைக்கிளிலிருந்து இறங்கி வந்த வழியே செல்ல முயன்றவர் பார்த்திபன் பேப்பரில் ஆழ்ந்திருப்பதைப் பார்க்கிறார். நின்று யோசிக்கிறார்.

வடி: அட கன்றாவியே.. இன்னைக்கி பொறப்பட்ட நேரமே சரியில்லை போலருக்குதேடா.. இவன் எங்க இங்க வந்தான்? கேள்வி கேட்டே கொன்னுருவானே.. இப்ப என்ன பண்ணித் தொலையறது? (பார்த்திபனை ஓரக் கண்ணால் பார்க்கிறார்) நம்மள பார்த்திருப்பானோ.. இருக்காது.. அவன்தான் பேப்பர்ல முங்கிட்டான்லே.. நம்மள பார்த்துருக்க மாட்டான்.. நாம வந்த வழியே போனோம்னு வச்சிக்க.. நோட் பண்ணாலும் பண்ணுவான்.. அதனால.. சைலண்ட்டா வண்டிய உருட்டிட்டே போயி.. அந்த பயல தாண்டுனதும் ஏறிக்குவம்.. அதான் கரெக்ட். அப்படியே பார்த்துட்டாலும் அவன் யாருன்னு தெரியாத மாதிரி நடிச்சிருவோம். நடிக்கறதுக்கு நமக்கு சொல்லியா தரணும்.. நடிப்புல நம்ம யாரு? கிங்குல்ல? (தன் பாணியில் கழுத்தை உலுக்கிக் கொண்டு உறுமுகிறார். பிறகு சைக்கிளை உருட்டிக் கொண்டே பார்த்திபன் இருந்த திசைக்கு நேரெதிர் திசையில் பார்த்துக்கொண்டு ‘நான் பார்த்ததிலே இவன் ஒருத்தனைத்தான் அசிங்கம் என்பேன் ரொம்ப அசிங்கம் என்பேன்.’ என்று பார்த்திபனை மனதில் நினைத்துக் கொண்டு வாய்க்குள் பாடியவாறே செல்கிறார். இதை ஆரம்பமுதலே கவனித்துக்கொண்டிருந்த பார்த்திபன் அவர் கடையைக் கடக்கும்வரை பொறுத்திருந்து பேப்பரை கக்கத்தில் வைத்துக்கொண்டு தன் இரண்டு கைகளையும் தட்டுகிறார். பிறகு பேப்பரை மீண்டும் எடுத்து முகத்தை மூடிக்கொள்கிறார்.)

(கைதட்டல் சப்தம் கேட்டு ஷாக் அடித்தாற்போல் நின்ற வடிவேலு தன்னையுமறியாமல் திரும்பிப் பார்க்கிறார். பார்த்திபன் பேப்பரைப் படித்தவாறே ஓரக்கண்ணால் வடிவேலுவைக் கவனிக்கிறார். வடிவேலு பார்த்திபன் பேப்பரில் மூழ்கியிருப்பதை பார்த்து நிம்மதியடைகிறார்.)

வடி: யார்ராவன்? கைதட்டல் சத்தம் மட்டும் கேக்குது திரும்பிப் பார்த்தா ஒரு பய மவனையும் காணோம்.. காலங்கார்த்தால வம்பு பண்றதுக்குன்னே அலையறானுவப்பா.. நிம்மதியா எளுந்திரிச்சமா.. ஒரு வேல சோலிய பாத்தமான்னு இருக்க முடியுதா.. ரோட்டுல நிம்மதியா நடமாடக் கூட முடியாம.. என்ன பொளப்புறா சாமி... பேசாம துபாய்ல கக்கூஸ்... (வாயைப் பொத்திக்கொண்டு சுற்றும் முற்றும் பார்க்கிறார்) வாணாம்.. வாய குடுத்து மாட்டிக்கிறாத.. வாய்க்குள்ள பேசினாக் கூட கண்டுபிடிச்சிருவான்.. எமகாதக பய.. உக்காந்துருக்கான் பார், ஒன்னுமே தெரியாதமாதிரி.. அவன் மூஞ்சும், மொவறையும்.. சரி நமக்கெதுக்கு ஊர் வம்பு.. இப்பிடியே போயி சந்தைல ஆத்தா குடுத்த லிஸ்ட்டு பிரகாரம் ஜாமான வாங்கிக்கிட்டு ஊர் போய் சேர்வோம்.. சைக்கிளை உருட்ட ஆரம்பித்தவர் சட்டென்று நினைவுக்கு வந்தவர்போல்..) சரிஈஈஈஈ.. அதான் கடை போயிருச்சில்ல.. பொறவெதுக்கு உருட்டறது? சும்மா சல்லுன்னு ஏறிக்கிற வேண்டியதுதான.. (சைக்கிளை நிறுத்தி வலது காலை தூக்கி சீட்டின் மேல் வைக்கிறார்.. மீண்டும் கைதட்டல் சப்தம் கேட்கிறது. பதறியடித்துக் கொண்டு காலை இறக்கிக் கொண்டு திரும்பிப் பார்க்கிறார். யாரும் காணாமல் மீண்டும் காலை சீட்டுக்கு உயர்த்துகிறார். அவருக்கு பின்னால் இருந்து குரல் மட்டும் கேட்கிறது. ‘டேய் கேன, உன்னைத்தாண்டா. காது கேக்கல?)

வடி: (திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்க்கிறார். யாரையும் காணோம். பார்த்திபனைப் பார்க்கிறார். அவர் பேப்பரால் முகத்தை மூடிக்கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு நிம்மதியடைகிறார்.) சை.. குரல் மட்டுந்தேன் கேக்குது.. மூஞ்ச காணோமே.. அசரீரிம்பாங்களே அதா இருக்குமோ.. (தலையை ஆட்டிக்கொண்டு) இருக்கும், இருக்கும்.. நமக்கெதுக்கு வம்பு..? திரும்பிப் பாக்காம.. மிதிச்சிக்கிட்டு.. வாணாம்.. கால தூக்கிப் போடறப்பதான குரல் கேக்குது.. உருட்டிக்கிட்டே போய்ட்டா..? ஆமா.. இப்படியே இன்னும் கொஞ்ச தூரம் உருட்டிக்கிட்டே போயி..

(அவர் போவதைப் பார்த்த பார்த்திபன் பேப்பரை மடித்து தன் அருகில் வைத்துவிட்டு மீண்டும் கைகளை தட்டுகிறார்.)

வடி: என்னடாயிது காலங்கார்த்தால ரோதனை.. ?(சடாரென் திரும்பி) எவண்டா அவன்..? என்ன நக்.. (பார்த்திபன் தன்னையே பார்ப்பதைப் பார்த்துவிட்டு தனக்குள்) பார்த்திட்டாண்டா.. பார்த்திட்டாண்டா.. இன்னைக்கி போனாப்பலதான்... சரி, சரி.. அவன யாருன்னு தெரியாதமாதிரி நடிக்கத்தான போறோம்.. முட்டாப் பய மவன்.. கண்டுபிடிக்கிறானான்னு பாப்பம்..

(பார்த்திபன் பெஞ்சிலிருந்து எழுந்திருக்காமலேயே வடிவேலுவை நோக்கி ‘இங்க வா’ என்று சைகை செய்கிறார்.

வடி:(தனக்கு பின்னால் திரும்பி பார்க்கிறார். அங்கே யாரையும் காணாமல் பார்த்திபனைப் பார்க்கிறார்) யாரு, என்னையா?

பார்: ஆமாண்டா.. உன்னையேத்தான்.. நீ என்ன டமார செவிடா? ரெண்டுதரம் கைதட்டியும் திரும்பிப் பாக்காம போற?

வடி: (வேண்டா வெறுப்போடு வந்து அவன் முன்னே நிற்கிறார். ஆனால் அவர் முகத்தைப் பார்க்காமல் மேலே பார்த்துக்கொண்டு நிற்கிறார்) யோவ் யாருய்யா நீ? ரோட்ல பேசாம போய்ட்டிருக்கற ஆள இளுத்து வச்சி வம்பு பண்ற?

பார்: டேய் வெண்ணெ.. என்ன பார்த்து பேசுறா.. அங்க எங்கயோ சூன்யத்த பாத்த்துக்கிட்டு யார்யா நீன்னா? அங்கருந்து யாரு.. செத்துப்போன உங்க பாட்டனா பதில் குடுப்பான்..?

வடி: (கோபத்துடன் பார்த்திபனை முறைக்கிறார்) யோவ்.. எதுக்குய்யா எங்க தாத்தனையெல்லாம் இளுக்கற? வேணாம்.. மரியாத கெட்டுரும்...சொல்லிட்டன்.. ஆளம் தெரியாம கால விட்டுட்டு.. (சட்டென்று நினைவுக்கு வந்தவராய் வாயை மூடிக்கொள்கிறார்)

பார்: (நெருங்கி வடிவேலு முகத்தை உற்று பார்க்கிறார்) டேய் என்ன நிறுத்திட்டே.. சொல்லு.. ஆழம் தெரியாம என்னத்த விட்டேன்.. சொல்றா?

வடி: ஒன்னுமில்லப்பா.. ஆள விடு.. சந்தைக்கு போணும்.. ஆத்தா வையும்..ஆள விடு..

பார்: டேய், டேய் நிறுத்துறா... நீ என்ன பதினாறு வயதினில கமல்ஹாசனா.. சொன்னதையே சொல்லிக்கிட்டு.. சரி.. என்னை தெரியல? பார்த்தும் பாக்காத மாதிரி போற...?

வடி: (பார்த்திபனை பார்க்கிறார்) தெரியலயே.. நீ யாருன்னே தெரியலையே (அழுகிறார்) எதுக்குய்யா சும்மா போய்ட்டிருந்த என்ன இளுத்து வச்சி வம்பு பண்றே..?விடுய்யா.. சந்தைக்கு போணும்.. ஆத்தா நிசத்துக்குமே வையும்யா.. என்ன விட்டுறு..

பார்: (டீ கடை பெஞ்சில் அமர்ந்திருந்தவர்களைப் பார்க்கிறார்) ஏங்க உங்க யாருக்காவது என்ன அடையாளம் தெரியுதா?

எல்லோரும் கோரசாக: ஓ தெரியுதே.. புதுசா ஊருக்கு வந்துருக்கற தம்பிதானே.. நல்லாத் தெரியுது..

பார்: (சலிப்புடன்) என்னங்க நீங்க..? நா இந்த ஊருக்கு வந்துதான் ஆறு மாசத்துக்கு மேல ஆயிருச்சில்ல..? இன்னும் புதுசா ஊருக்கு வந்த தம்பிங்கறீங்க? சரி அது போட்டும்.. அப்ப என்ன உங்க எல்லாருக்கும் அடையாளம் தெரியுது.. (டீக்கடைக்காரரை பார்க்கிறார்) ஏங்க டீ.. உங்களுக்கு?

டீக்கடைக்காரர்: (தனக்குள்) களவாணிப்பய.. எம்பேரு தெரிஞ்சிருந்தும் நக்கலா டீங்கறாம் பாரு.. பேசாம தெரியலேன்னு சொல்லிரலாமா? ஆனா இவன் குடுக்க வேண்டிய அம்பது ரூவா காசு அம்பேலாயிருமே.. (பார்த்திபனையும் வடிவேலுவையும் மாறி மாறி பார்க்கிறார்) அட என்ன தம்பி கிண்டல் பண்ணிக்கிட்டு... உங்கள் தெரியாம இருக்குமா? நீங்க வேற நமக்கு அம்பது ரூவா பாக்கி வச்சிருக்கீக, உங்கள தெரியாம போயிருமா?

பார்: யோவ்! என்ன சந்துல சிந்து பாடறியா..? பிச்சாத்து அம்பது ரூபா.. (சட்டென்று திரும்பி வடிவேலுவைப் பார்க்கிறார்) சார் ஒரு அம்பது ரூபா இருந்தா குடுங்க சார்.. இந்த டீக்கடைக் காரன் மூஞ்சில விட்டெறியறேன்.. (வடிவேலு இல்லையென்று மறுக்க அதை பொருட்படுத்தாமல் அவருடைய சட்டைப் பையில் கைவிட்டு கொத்தாய் கிடைத்த பணத்திலிருந்து ஐம்பது ரூபாய் நோட்டொன்றை எடுத்து கடைக்காரரை நோக்கி எறிகிறார்) இந்தாய்யா ஒம் பிச்சாத்து அம்பது ரூபா.. சார் யாருன்னு நினைக்கறே? துபாய்ல லச்ச லச்சமா சம்பாதிச்சவரு.. அதையெல்லாம் விட்டுட்டு இந்த ஊர்ல.. நம்மள மாதிரி ஆளுங்களுக்கு சேவை செய்யணும்னு இங்கயே தங்கிட்டார்.. (வடிவேலுவை பார்த்து) என்ன கக்கூ.. சாரி.. உங்க பேரே இதுவரைக்கும் சொல்லலையா.. அதான்.. கொஞ்சம் கன்ஃப்யூசாயிட்டேன்.. இப்ப சொல்லுங்க.. ஏன் பாத்தும் பாக்காத மாதிரி போனீங்க..ங்க என்ன ங்க.. டேய் சொல்லுறா.. எதுக்கு... பார்த்தும்... பாக்காம... போன?

வடி: யோவ் யார்யா நீ? லூசா..? நாந்தான் தெரியாதுங்கறேன்ல.. சொன்னதையே திருப்பி திருப்பி சொல்ற? கைலருந்த காசையும் எடுத்துக்கிட்டு.. யோவ் வேணாம்.. எடுத்த காச திருப்பி குடுத்துறு.. அப்புறம் சந்தைலருந்து ஜாமான் வாங்காம வீட்டுக்கு போனா.. ஆத்தா நிசத்துக்குமே வையும்யா.. காச குடுய்யா.. (அழுகிறார். கடையிலிருந்த எல்லோரும் சிரிக்கின்றனர்)

பார்: டேய்.. (விரல்களை மடக்கிக்கொண்டு முஷ்டியை உயர்த்தி முகத்துக்கு முன்னால் குத்துவதைப் போல் வருகிறார்) டேய் யாரப் பாத்து லூசுங்கற? இப்ப சொல்லு.. நீ அன்னைக்கி பஸ்சுல டிக்கட் வாங்காம.. செக்கிங் இன்ஸ்பெக்டர்கிட்ட லஞ்சம் குடுத்து அடிவாங்குன பார்ட்டி தான?

வடி: (தனக்குள்) படுபாவிப் பய.. நாம முட்டாத்தனமா செஞ்ச காரியத்தையெல்லாம் ஒன்னு விடாம ஞாபகத்துல வச்சிருக்கானே.. இப்ப என்ன பண்றது? சரி.. நாம போட்ட வேஷத்தையே தொடர்ந்து போட வேண்டியதுதான்.. (அசடு வழிகிறார்) யோவ் நெசமாவ நான் அவனில்லைய்யா.. என்ன விட்டுறு..

பார்: (கோபத்துடன்) டேய் என்ன ஜெமினி கனேசன்னு நினைப்பா.. ?கொட்டா டாக்கீஸ்ல நான் அவனில்லை படத்த பாத்துட்டு.. என்ன.. நக்கலா? நீ நான் அவனில்லைன்னு சொன்னா நான் நீ அவனில்லைன்னு நம்பிரணுமா? சொல்றா நீ அவந்தானே...

வடி: நீ என்னய்யா சொல்ற? உனக்கு மட்டும் எப்படீய்யா இப்படியெல்லாம் மாத்தி மாத்தி பேச வருது.. ஜெமினி கனேசங்கற, கொட்டா டாக்கீசுங்கற.. நீ என்ன சொல்ல வரேன்னே தெரியலையேய்யா.. கொஞ்சம் தெளிவாத்தான் பேசேன்.. (டீக்கடையிலிருந்தவர்களைப் பார்க்கிறார்) ஏன்யா பாத்துக்கிட்டே இருக்கீகளே.. யாராச்சும் கேக்கப் படாதா.. இவரு சொல்றது உங்களுக்கு யார்க்காச்சும் புரியுதா? (இல்லை என்று தலையசைத்துவிட்டு பார்த்திபன் முறைத்ததும் ஆமாம் என்று தலையசைத்துவிட்டு ஒவ்வொருவராய் எழுந்து போகின்றனர்)

வடி: யோவ் என்னய்யா இது.. நா கேட்டப்ப இல்லைன்னவனெல்லாம் உன் மூஞ்ச பார்த்ததும் ஆமாங்கறானுங்க.. யார்யா நீ?

பார்: டேய்.. என்ன நடிச்சே தப்பிச்சிரலாம்னு பாக்கறீயா.. ?உனக்கு ஜெமினி கணேசன் யாருன்னு தெரியாது?

வடி: யோவ் எதிர்ல நிக்கற உன்னையே யாருன்னு தெரியல.. அது யாருய்யா ஜெமினி கணேசன்? அந்தாள எனக்கு எதுக்கு தெரியணுங்கற?

பார்: (திரும்பி டீக்கடைக்காரரைப் பார்க்கிறார்) ஏங்க, உங்களுக்கு ஜெமினி கணேசன தெரியுமா?

டீ.க: என்ன தம்பி நீங்க கிண்டல் பண்ணிக்கிட்டு.. காதல் மன்னன தெரியாதாக்கும். அந்த தம்பிதான் சும்மா கிண்டல் பண்ணுதுன்னா.. நீங்களும் என்ன கேக்கறீங்களே..

பார்: (வடிவேலுவிடம்) பாத்தியாடா.. நாள் முழுசும் டம்ளர் டம்ளரா டீ, காப்பிங்கற பேர்ல சுடுதண்ணிய வித்துக்கிட்டிருக்கறவருக்குக்கூட (டீக்கடைக்காரர் முகத்தை தொங்கப்போடுகிறார்) ஜெமினி கணேசன்னவுடனே காதல் மன்னன்னு தெரியுது.. நீ தெரியலேன்னு டிராம பண்றியா?

வடி: யோவ் யாரைய்யா சொல்ற? உண்மைலையே தெரியாதுய்யா..

பார்: சரி.. உனக்கு என்ன வயாசாச்சி..

வடி: (சந்தேகத்துடன்) எதுக்கு?

பார்: (முட்டியை வைத்து முகத்தில் லேசாக குத்துகிறார்) ஊம்.. ஒன்ன கல்யாணம் பண்ணிக்கறதுக்கு.. சொல்றா.. என்ன வயசாச்சி..? அம்பது, இல்ல அது ஜாஸ்தி.. ஒரு நாப்பத்தஞ்சி..

வடி:(அழுகிறார்) யோவ்.. முழுசா இருபது கூட ஆவலய்யா. என்ன போயி.. ஏன்யா இந்த அழும்பு பண்ற..? எனக்கின்னும் கல்யாணம் கூட ஆவலைய்யா!

பார்: ஐ! எனக்குக்கூடத்தான் முப்பத்தஞ்சி வயசாயும் இன்னும் கல்யாணம் ஆவலே.. அதுக்காக நீ சின்னப் பையன்னு ஆயிருமா? சரி.. என்னை தெரியலை ஒத்துக்கறேன்.. ஜெமினி கணேசன்னு யாருன்னு சொல்லு விட்டுடறேன்.. சொல்லு..

வடி: (அழுகை கூடி குரல் உச்சத்துக்கு போகிறது) யோவ்.. நெசமாலுமே நீ சொல்ற ஆள எனக்கு தெரியாதுய்யா..

பார்: டேய், வேணாம். இந்த ஜிம்கானா வேலையெல்லாம் என்கிட்ட வேணாம்.. சரி.. நீ சினிமால்லாம் பாப்பேல்ல?

வடி: (அழுகையை நிறுத்திவிட்டு.. தலையை ஒரு உலுக்கு உலுக்கிக் கொண்டு உறுமுகிறார்.) என்னா நீ அப்படி கேட்டுட்டே..? வாரம் ரெண்டு சினிமான்னாச்சும் பாக்கலேன்னா ஐயாவுக்கு சாப்பாடு எறங்காதுல்லே..

பார்: அதுசரி.. சினிமால்லாம் பாக்கற ஆளுதானா நீ.. பார்த்தா தெரியலையே..

வடி: யோவ்.. சினிமா பாக்கற ஆளுன்னு பாத்தவுடனேயே சொல்லிருவியா நீ? போய்யா.. எவனாச்சும் காதுல பூ வச்சிருப்பான் அவங்கிட்ட போயி சொல்லு.. சரி.. இப்ப ஒனக்கு என்ன வேணும்? எதுக்கு இப்ப சினிமா பாக்கறியான்னு கேக்கறே.. ?அதச் சொல்லு..

பார்: (டீக்காரரை திரும்பி பார்க்கிறார்) பாத்தியாய்யா.. என்னையே மடக்கிட்டான்.. (வடிவேலுவைப் பார்த்து) சரி.. அவ்வை சண்முகி படம் பாத்திருக்கியா..

வடி: (சந்தோஷத்துடன்) என்னா நீ அப்படி கேட்டுட்டே.. நம்ம கமல் காசன்னா நமக்கு உசுருல்லே..

பார்: என்னது கமல் காசனா? உன் நாக்குல இடி விழ! கமல் காசன் இல்லடா கமல் ஹாசன்.. எங்க சொல்லு.. கமல் ஹாசன்..

வடி: (தனக்குள்) நமக்கு 'ஹா' வராதுன்னு தெரிஞ்சிருப்பான் போலருக்குதே.. இத வச்சே நம்மள ராவிருவானே.. பேசாம ஜெமினி கணேசன தெரியும்னே சொல்லிட்டு போயிருக்கலாம்.. எல்லாம் இன்னைக்கி முளிச்ச நேரம்.. (பார்த்திபனை ஓரக்கண்ணால் பார்க்கிறார்)இப்ப என்ன வேணும் ஒனக்கு? அவர் பேரை இன்னொருத்தரம் சொல்லணும்.. அதானே..

பார்: (நெற்றியில் அடிக்கிறார்) அதாண்டா வேணும், வெண்ண.. சொல்லு.. க..ம..ல் ஹா..ச..ன்.. அழுத்தமா கரெக்டா சொல்லு.. விட்டுர்றேன்.. ஜெமினி யார்னு கூட சொல்ல வேணாம்.. இத்த மட்டும் கரெக்டா சொல்லு.. சொல்றா டேய்..

வடி: (அழுகிறார்) அதுக்கேன்யா சும்மா சும்மா அடிக்கறே.. வலிக்குதில்லே..

பார்: டேய் பேச்ச மாத்தாத.. சொல்லு..

வடி: கமல் காசன்.. சொல்லிட்டேன்.. போட்டுமாய்யா.. சந்தைய மூடிரப்போறான்யா.. ஆத்தா வையும்.. விட்டுறுய்யா..

பார்: (டீக்காரரைப் பார்த்து) ஏங்க.. இவன் கரெக்டா சொன்னானா? உங்களுக்கு எப்படி கேட்டிச்சி..?

டீ.கா: (தனக்குள்) சரியாச் சொன்னான்னு சொன்னா புது தம்பி கோச்சிக்கும். தப்புன்னு சொன்னா வீணா அந்த தம்பியோட விரோதமாயிரும். அந்த தம்பியோட ஆத்தா வேற ஊர்ல பெரிய மனுஷி.. எனக்கு இது தேவை தானா? இருந்தாலும் இந்த புது தம்பி படா பேஜார் புடிச்சவந்தான்.. என்ன சொல்றது?

பார்: யோவ் என்ன உனக்கும் காதுல ஏதாச்சும் ப்ராப்ளமா?

டீ.கா: (பதறிக்கொண்டு) இல்லீங்களே தம்பி..

பார்: அப்புறம் என்ன? இவர் சொன்னது சரியா தப்பான்னு கேட்டனே? பதிலையே காணோம்..

(டீ.கா.. பார்த்திபனின் பின்னால் நின்றுக்கொண்டிருந்த வடிவேலுவின் கைகளில் இருந்த நூறு ரூபாய் நோட்டைப் பார்க்கிறார். அவரையுமறியாமல் புன்னகை விரிய.. பார்த்திபன் அவருடைய பார்வை சென்ற பாதையில் பார்க்கிறார். வடிவேலு சட்டென்று ரூபாய் நோட்டை தனக்கு பின்னால் மறைத்துக்கொண்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்கிறார்.)

பார்: (வடிவேலுவை அப்படியே திருப்பி அவருடைய கையிலிருந்த நூறு ரூபா நோட்டை பிடுங்கிக் கொள்கிறார்) டேய் என்ன லஞ்சமா? சரி.. அதுவும் நல்லதுக்குத்தான்.. காலைலருந்து எந்த லூசு மாட்டுவான் இன்னைக்கி சாப்பாட்டுக்கு புடுங்கலாம்னு பார்த்துக்கிட்டிருந்தேன்.. நீ மாட்டிக்கிட்டே.. ரொம்ப தாங்க்ஸ்.. (பாக்கெட்டில் வைத்துக்கொள்கிறார்) ஆமா, நான் அம்பது ரூபா எடுத்ததுக்கு ஜாமான் வாங்கணும், ஆத்தா வையும்னு ஒப்பாரி வச்சியே.. இப்ப சொளையா நூறு ரூபா நோட்ட எடுத்த நீட்டுற? 

வடி: (கெஞ்சுகிறார்) யோவ், யோவ், வேணாம்யா.. நா முட்டாத்தனமா காச எடுத்து நீட்டிட்டேன்யா.. அத குடுத்துறுய்யா.. அது ஆத்தா காசுய்யா.. நா ஓன் கால்ல வேணும்னாலும் விழறேன்.. குடுத்துறுய்யா.. (காலில் விழ குனிகிறார்)

பார்: (வலது கரத்தை உயர்த்து ஆசீர்வதிக்கிறார்) தீர்க்காயுசு பவ.. கல்யாணம் பண்ணிக்கிட்டு வீணா போ. எழுந்திரு. இன்னொரு தரம் கமல் ஹாசன்னு சொல்லிட்டு திரும்பிப் பாக்காம ஓடு..

வடி: (தரையில் கைகளை ஊன்றி தடுமாறி எழுந்து அழுக்கான கைகளை மறந்து போய் தன் சட்டையில் தேய்க்க.. சட்டை முழுவதும் அழுக்காகிறது. அதைப் பார்த்துவிட்டு மீண்டும் அழுகிறார்) யோவ் இது ஒனக்கே நல்லாருக்கா.. வெள்ளையும் சொள்ளையுமா சந்தைக்கு போயிட்டிருந்தவன கூட்டி வச்சி வம்பு பண்ணி.. ஒன் கால்ல விழ வச்சி இப்படி அலங்கோலமாக்கிட்டியே.. நியாயமாய்யா.. சொல்லுய்யா.. நியாயமா?

பார்: (டீக்கடை பெஞ்சில் சென்று அமர்ந்தவர் கால் மேல் கால் போட்டுக்கொண்டு வடிவேலுவை மேலும் கீழும் பார்க்கிறார். திரும்பி டீக்காரரை பார்க்கிறார்) ஏங்க, ஐயா இப்பத்தான் அம்சமா இருக்காருல்லே.. (வடிவேலுவிடம்) இப்படியே போ.. கரெக்டா கூலிக்காரன் மாதிரியிருக்கே.. சந்தையில எல்லாம் சீப்பா தருவான்.. உங்கையிலயும் நூத்தம்பது ரூபா கம்மியா இருக்கில்லே.. இந்த வேஷம் கரெக்டா இருக்கு.. போ.. டாடா.. (டீக்காரரிடம்) யோவ்.. சூடா ஒரு டீ போடு.. தண்ணி கலக்காத பால்ல போடு.. அதான் சார் நூறு ரூபா குடுத்துருக்காரே.. அப்படியே ரெண்டு பப்ஸ எடு..

வடி: (இரண்டு பேரையும் மாறி மாறி பார்க்கிறார்) யோவ் நீங்க ரெண்டு பேருமே நல்லாருக்க மாட்டீங்க.. சொல்லிட்டேன்.. (அழுக்கான சட்டையை தட்டிவிட்டுக்கொண்டே சைக்கிளை நோக்கி செல்கிறார்)

பார்: (கைதட்டி) டேய் நில்றா.

வடி: (திடுக்கிட்டு நின்று திரும்பி பார்க்கிறார்) இன்னுமென்னய்யா? அதான் கைலருந்ததெல்லாத்தையும் பிடுங்கிட்டே இல்ல.. பொறவென்ன?

பார்: பயந்துராத.. காசெல்லாம் வேணாம்.. ஹா ஹா ஹான்னு ஒரு சிரிப்பு சிரியேன்.. சிரிச்சிக்கிட்டே போனா காசு போனதெல்லாம் மறந்துருமில்லே அதான் கேட்டேன்.. எங்க கொஞ்சம் சிரி..

(வடிவேலு அவர் சொன்னதன் சூட்சுமம் புரியாமல் அழுதுக்கொண்டே ஹா.. ஹா.. ஹா.. என்று சிரிக்க அது கா, கா, கா என்று ஒலிக்கிறது. பார்த்திபனும், டீக்காரரும்.. சற்று முன் பெஞ்சிலிருந்து எழுந்து சென்று ஒதுங்கி நின்று பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் கொல்லென்று சிரிக்க வடிவேலு தன் தவறைப் புரிந்துக்கொண்டு வாயை மூடிக்கொண்டு சைக்கிளில் ஏறிக்கொண்டு ஒரே ஓட்டமாய் சென்று மறைகிறார்.)




முற்றும்.

01 நவம்பர் 2019

பாஜகவின் சரிவு...... நிறைவுப் பகுதி

4 ம் பாகம்

பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் என்ற மத்திய அரசின் திட்டங்களால் வரலாறு காணாத அளவுக்கு சரிந்து கிடக்கும் நாட்டின் பொருளாதாரட்தை மீட்டெடுக்கும் பொறுப்பு யாரிடம் உள்ளது?

நிச்சயம் அது மத்திய அரசின் கையில்தான் உள்ளது என்று சமீபத்தில் கைவிரித்துவிட்டது மத்திய ரிசர்வ் வங்கி. எங்களால் வங்கிகளுக்கு நாங்கள் அளிக்கும் கடனுக்கு வசூலிக்கப்படும் ரிப்போ (Repo) வட்டி விகிதத்தை மட்டும்தான் குறைக்க முடியும்  ஆனால் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் வங்கிகளிடம் தான் உள்ளது என்கிறார் மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர். 

ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு ரிப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட போதும் அதை பயன்படுத்தி ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் பெற வங்கிகள் யாரும் முன் வரவில்லை. 

ஏன்?

ஏனெனில் வங்கிகளிடம் உள்ள முதலீட்டையே அவர்களால் முழுவதுமாக பயன்படுத்த வாய்ப்பில்லாத சூழல். இதன் காரணமாக  தங்களிடம் உபரியாக உள்ள தொகையை வங்கிகளுக்கிடையிலான கடன் வழங்கும்  ஓவர்நைட் எனப்படும் ஒரு நாள் வட்டிக்கு கடனாக வழங்கிவருகின்றனர். இதில் அவர்களுக்கு கிடைக்கும் ஆறு விழுக்காடு வட்டி வாடிக்கையாளர்களுடைய  குறைந்த பட்ச வைப்பு நிதிக்கான வட்டியை விடவும் குறைவு. அதாவது ஆறு முதல் ஏழரை விழுக்காட்டிற்கு வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட தொகையை ஆறு அல்லது அதற்கும் குறைவாக பிற வங்கிகளுக்கு  நாள் வட்டிக்கு வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்கிற உண்மை நாட்டிலுள்ள எத்தனை பாமரனுக்கு தெரியும்.

ஏன் இந்த அவல நிலை?

வங்கிகளிலிருந்து பெருமளவு கடன் பெறுவது பெரும் தொழில் நிறுவனங்கள்தான். அல்லது பெரும் வர்த்தக நிறுவனங்கள். இவை அனைத்துமே முடங்கிப் போயுள்ள சூழலில் யார் கடன் வாங்கி முதலீடு செய்ய முன்வருவார்கள்?

மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி நாட்டிலுள்ள மொத்த உற்பத்தித் திறனில் (Installed Capacity) 67 முதல் 70 விழுக்காடு வரை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறதாம். அதாவது நாட்டிலுள்ள நிறுவனங்கள் மொத்தமாக ஒரு லட்சம் கோடி மதிப்பிற்கு உற்பத்தி செய்ய முடியும் என்கின்ற சூழலில் அறுபதாயிரம் முதல் எழுபதாயிரம் கோடி வரை மட்டுமே உ/ற்பத்தி செய்யப்படுகின்றனவாம். அதையே சந்தையில் வாங்க ஆளில்லாதபோது மேற்கொண்டு கடன் வாங்கி உற்பத்தியை கூட்டுவதற்கு எந்த தொழிலதிபர் முன்வருவார்?

இதுதான் இன்றைய யதார்த்த நிலை..

இந்த சூழலில்  தான் தொழிலதிபர்களின் வரி விகிதத்தை பெருமளவுக்கு குறைக்க முன்வந்தது மத்திய அரசு. இந்த வரிக்குறைப்பு தொழிலதிபர்களின் மனநிலையை பெரிதளவுக்கு மாற்றுவதாக தெரியவில்லை. உண்மையில் மத்திய அரசுக்கு இதனால் ஏற்படவிருக்கும் ஒரு லட்சம் கோடி வருவாய் இழப்பு  வெறும் விழலுக்கு இறைத்த நீராகத்தான் போய்விட்டது எனலாம். 

இந்த சூழலில் ஒரு நாட்டின் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்று நான் இந்த பதிவின் துவக்கத்தில் கூறியுள்ள  ஆங்கிலேய பொருளாதார மேதை கெய்ன்ஸ் அன்றே கூறியுள்ளார். 

அவர் கூறியுள்ளது இதுதான்.

நாட்டின் பொருளாதாரம் எதனால் மந்த நிலையை அடைந்துள்ளது என்பதை அந்த நாட்டின் அரசு முதலில் ஆராய வேண்டும். ஒரு நாட்டின் உற்பத்தித் திறன் முழுமையாக பயன்படுத்தப்படாத சூழலில் அதை மேம்படுத்த முயற்சிகள் செய்ய வேண்டும். அதாவது அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைகளில் முழுவதுமாக விற்க நுகர்வோர் தேவையை அதிகரிக்க வேண்டும். அதாவது அவர்களுடைய வாங்கும் திறனை அதிகரிக்க வேண்டும். 

எப்படி... ?

நாட்டிலுள்ள தனிநபர் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். 

இதை நாட்டிலுள்ள தனியார் தொழில் நிறுவனங்களால் செய்ய முடியாமல்போகும் சூழலில் (இதுதான் இன்றைய நிலை) மத்திய அரசே தன்னுடைய பொது செலவினங்களை (Public Expenditure) அதிகரிக்க வேண்டும் என்கிறார் கெய்ன்ஸ்.

அதாவது மத்திய, மாநில அரசுகள் தங்களுடைய முதலீட்டை அதிகரிக்க வேண்டும். பெரிய அளவிலான கட்டுமான திட்டங்கள் அதாவது ஸ்மார்ட் சிட்டி போன்ற பெரு நகரங்களை உருவாக்கும் திட்டம், நாட்டிலுள்ள அனைத்து மாநில நகரங்களில் உலகதரம் வாய்ந்த விமான நிலையங்களை உருவாக்கும் திட்டங்கள், சாலை வசதிகளை மேம்படுத்துதல் என அரசுகள் மக்களிடத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும். இதற்கு தேவைப்படும் நிதியை கடனாக பெற வேண்டி வந்தாலும் அதை  செயல்படுத்த ஆட்சியாளர்கள் துணிந்து  முன் வரவேண்டும். ஆங்கிலத்தில் இதை calculated risk என்பார்கள். 

ஆனால் நடப்பது என்ன? மத்திய அரசு நலத் திட்டங்களை செயல்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை. தொழில் நிறுவனங்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் நியாயமாக வழங்க வேண்டிய தொகைகளையே நிதிப்பற்றாக் குறையை (fiscal deficit) காரணம் காட்டி சுமார் ஒரு லட்சம் கோடி அளவுக்கு முடக்கி வைத்திருப்பதை என்னவென்று சொல்வது?

அதாவது ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள ஒரு தொழில் அல்லது வர்த்தக நிறுவனம் தங்களுடைய மூலப் பொருள் கொள்முதலுக்கு செலுத்திய ஜிஎஸ்டி  மற்றும் எக்சைஸ் வரியை அவர்கள் ஏற்றுமதி செய்தவுடன் அரசு சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு திருப்பி வழங்குவது வாடிக்கை.... அதே போல் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் ஒப்பந்ததாரர்களுக்கு அவர்கள் பணியை முடித்த உடனே ஒப்பந்த தொகையை வழங்கிட வேண்டும்.... மக்களிடமிருந்து வசூலித்த கூடுதல் வருமான வரி போன்ற தொகைகளையும் குறைந்த காலக் கெடுவிற்குள் திருப்பி வழங்கிட வேண்டும். ஆனால் இத்தகைய தொகைகளை தங்களுடைய நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி நிறுத்தி வைப்பது எந்த விதத்தில் நியாயம்? பெரு நிறுவனங்களுக்கு அரசு வழங்க வேண்டிய தொகைகளை நிறுத்தி வைப்பதாலோ அல்லது காலங்கடந்து வழங்குவதாலோ அத்தகைய பெரு நிறுவனங்கள் தங்களுக்கு மூலப் பொருட்களை வழங்கும் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய தொகையையும் நிறுத்தவோ தள்ளிப்போடவோத்தானே செய்ய நேரிடும்...? மத்திய மாநில அரசுகளின் இத்தகைய பொறுப்பற்ற செயல்களால் நாட்டில் பணப்புழக்கம் மேலும் மேலும் நலிவடையத்தானே செய்யும்?

இதை ஆங்கிலத்தில் vicious cycle என்பார்கள்... இதை உடனே தடுத்து நிறுத்த மத்திய அரசு தாராள பொருளாதார கொள்கையை கடைபிடிக்க துணிந்து முன் வரவேண்டும்.... நாட்டின் ஒட்டுமொத்த கடன் அளவு சிறிது உயர்ந்தாலும் அதனால் ஏற்படும் பொருளாதார முன்னேற்றம்.... அதன் விளைவாக அரசுகளுக்கு கிடைக்கும் வருவாய் அதிகரிப்பு என நாளடைவில் அரசின் ஒட்டுமொத்த வருவாயும் உயர்ந்து வாங்கிய கடனை அடைக்க ஏதுவாக அமையும்.

RISK என்கிற ஆங்கில வார்த்தைக்கு Rare Instinct to Seek the unKnown என்று கூறுவார்கள். Rare Instinct என்றால் அபூர்வ உள்ளுணர்வு... unknown என்றால் நமக்குத் தெரியாதவை. அதை நோக்கிப் பயணிப்பது தான் RISK. அது வெகு சிலருக்கே சாத்தியப்படும். அதாவது என்ன நடக்கும் என்பது தெரியாமலே இலக்கைத் தேடிச் செல்லும் துணிவு... இலக்கை அடைந்தால் மகிழ்ச்சி... தோல்வியடைந்தால் தொடர்ந்து முயல்வேன் என்கிற பிடிவாதம்....

இது ஒரு காலத்தில் சாதாரண சாக்கு பை விற்றுக் கொண்டிருந்த அம்பானிக்கு இருந்தது. இன்று அவருடைய மகன் முகேஷ் ஆசியாவிலேயே பெரும் தொழிலதிபர்கள் பட்டியலில்... இப்படி அசாத்திய துணிவுடன் சாதித்தவர்கள் நம்முடைய நாட்டில் ஏராளம் பேர் உள்ளனர். ஆட்சியாளர்களில் சொல்ல வேண்டுமென்றால் காலம் சென்ற நரசிம்மராவை சொல்லலாம். நேரு குடும்பத்தைச் சாராத முதல் பிரதமர் என்றாலும் அவர் அன்று நடைமுறைப்படுத்திய தாராள பொருளாதார கொள்கைகள் அப்போது நாடு இருந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வர உதவியது.

இதுதான் இன்றைய ஆட்சியாளர்களுக்கு தேவைப்படும் குணாதிசயம். 

துரதிர்ஷ்டவசமாக அது இப்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. 

நிறைவு.

31 அக்டோபர் 2019

பாஜகவின் சரிவு....4


3ம் பாகம்

ஜிஎஸ்டி வரி விதிப்பு உண்மையில் வரவேற்கப்பட வேண்டியதுதான். 

ஏனெனில் ஜிஎஸ்டி அமலாக்கப்படுவதற்கு முன்பு நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களும் தங்கள் விருப்பப்படி விற்பனை வரி, நுழைவு வரி, மதிப்பு கூட்டு வரி, சேவை வரி என பல்வேறு வரிகளை வெவ்வேறு விகிதங்களில் வசூலித்துவந்தன. யூனியன் பிரதேசங்கள் எனப்படும் பாண்டிச்சேரி, தில்லி போன்ற மாநிலங்களில் மற்ற மாநிலங்களில் நடப்பில் இருந்து வந்த விகிதங்களை விட மிகவும் குறைவாக விற்பனை வரி  வசூலிக்கப்பட்டு வந்தன. இதனால்  அண்டை மாநிலங்களான தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் வசித்தவர்கள் கூட உண்மைக்கு புறம்பான தங்குமிட விலாசங்களை காட்டி விலையுயர்ந்த வாகனங்களுக்கு மிகக் குறைந்த விற்பனை வரி செலுத்தி வரி ஏய்ப்பு நடத்த வாய்ப்பளித்தது. அத்துடன் மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகங்களுக்கு அந்தந்த மாநில விற்பனை வரியுடன் மத்திய அரசின் விற்பனை வரியையும் செலுத்தும் பழக்கமும் இருந்து வந்தது. இதனால் பல வணிகர்கள் வரிக்கு வரி செலுத்த வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டனர். 

இவ்வாறு மாநிலங்களுக்கிடையில் விற்பனை மற்றும் சேவை வரி வசூலிப்பத்தில் எவ்வித ஒற்றுமையும் இல்லாத சூழலில் நாடு முழுவதும் வசூலிக்கப்பட்டு வந்த பல்வேறு வகையான வரி விகிதங்களை ஒருங்கிணைத்து விற்பனை மற்றும் சேவை வரி என்ற ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு மத்திய அரசு தள்ளப்பட்டது. 

ஆனால் இதை அமல்படுத்துவதில் மத்திய அரசு காட்டிய அவசரம்தான் இப்போது நிலவும் அனைத்து குழப்பத்திற்கும் காரணம். 

மேலும் ஜிஎஸ்டிக்கு முன்பு மாநிலங்கள் வசூலித்து வந்த விற்பனை வரி விகிதங்கள் ஏழு விழுக்காட்டிலிருந்து அதிக பட்சமாக பதினான்கு விழுக்காடு வரை இருந்தன. தமிழகத்தை பொருத்தவரை அதிகபட்ச விற்பனை வரி 12.5 விழுக்காடாக இருந்தது. நாட்டில் எந்த ஒரு மாநிலத்திலும் விற்பனை வரி பதினெட்டு விழுக்காட்டிற்கு மேல் இருக்கவில்லை. மாநில எல்லையை தாண்டி நடக்கும் வர்த்தகத்திற்கு தமிழக விற்பனை வரியுடன் மத்திய அரசு விற்பனை வரி (அதிகபட்ச வரியாக ஆறு விழுக்காடு)யையும் சேர்த்தாலும் பதினெட்டு விழுக்காட்டை தாண்டியதில்லை.

ஆனால் இவற்றை ஒருங்கிணைத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியில் அதிகபட்ச வரியாக இருபத்தி எட்டு விழுக்காடு என நிர்ணையிக்கப்பட்டது. இதே போன்று எட்டிலிருந்து பத்து விழுக்காடு வரை மட்டுமே இருந்துவந்த பல பொருட்களின் வரி விகிதம் பதினெட்டு விழுக்காடு என்ற அளவுக்கு உயர்த்தி நிர்ணையிக்கப்பட்டது. அதாவது அத்தியாவசிய பொருட்கள் என மக்கள் கருதி வந்த பல பொருட்களின் மீது விதிக்கப்பட்டு வந்த விற்பனை வரி ஆறிலிருந்து பத்து விழுக்காடு வரை உயர்த்தப்பட்டதால் பொருட்களின் விலையும் உயர்ந்தன. இதன் விளைவாக மக்கள் அவற்றை வாங்குவதை குறைக்கவோ அல்லது வசதியில்லாதவர்கள் முற்றிலுமாக தவிர்க்கவோ செய்தனர். 

இதில் விசித்திரம் என்னவென்றால் மேல்தட்டு மக்கள் மட்டுமே அதிக அளவில் உண்ணும் பித்சா, பர்கர் போன்ற உணவு வகைகளுக்கு ஐந்து விழுக்காடு வரியும் பாமரர் வீட்டு குழந்தைகளும் உண்ணும் பிஸ்கட்டுக்கு பதினெட்டு விழுக்காடு வரி என்கிற அளவில் ஒரு வரைமுறை இன்றி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டன. பாமரர்களால் நினைத்தும் பார்க்க முடியாத ஆலிவ் எண்ணெய்க்கு ஐந்து விழுக்காடு வரி... ஆனால் பெரும்பாலோர் பயன்படுத்தும் சமையல் எண்ணெய்க்கு பண்ணிரண்டு விழுக்காடு வரி... பற்பசை தூளுக்கு பண்ணிரண்டு விழுக்காடு, பற்பசை மற்றும் பிரஷ்சுக்கு பதினெட்டு விழுக்காடு வரி... தீப்பெட்டிக்கு 12 விழுக்காடு, மண்ணெண்னை விளக்குக்கு (hurricane lamps) 18%

தீப்பெட்டி தொழிலில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விகிதத்தை குறைக்கும்படி பலமுறை கோரிக்கை விடுத்தும் அது இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருந்து வருகிறது.  இதனால் சிவகாசி மற்றும் கோவில்பட்டியில் இயங்கிவரும் பல சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு பலர் வேலையிழந்து தவிப்பது நமக்கு தெரிகிறது. இன்றைய காலை செய்தியில் சாலையோரம் பல வருடங்களாக இயங்கிவந்த பல உணவகங்கள் நாள்தோறும் மூடப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டது, . 

இத்தகைய நியாயமற்ற வரி விகிதங்களால் சிறிய அளவில் உற்பத்தியில் ஈடுபட்டு வந்திருந்த சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் அவர்கள் வாங்கும் ஒவ்வொரு மூலப்பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்தி வாங்க வேண்டிய சூழலில் அவர்களுடைய பொருட்களுக்கு அதுவரை அமலில் இருந்து வந்த வரி விகித உயர்வால் ஏற்பட்ட விற்பனை சரிவும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு பல நிறுவனங்களும் மூடும் நிலையை அடைந்தன. தமிழகத்தில் இத்தகைய உற்பத்தி நிறுவனங்களுக்கு பேர்பெற்ற திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டதிலிருந்து மூடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்தை கடந்துவிட்டது என்கிறது சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கைகள். 

இந்த திட்டம் அமலாக்கப்பட்டதிலிருந்து சுமார் முப்பது முறைகளுக்கு மேலாக வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டதிலிருந்தே இந்த திட்டம் எத்தனை அவசரகதியில் அமலுக்கு கொண்டு வரப்பட்டது என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. இன்னமும் இது முடிந்தபாடில்லை. இனி வரும் ஜிஎஸ்டி குழுவின் கூட்டங்களிலும் பல பொருட்களின் குறைக்கப்பட வேண்டிய சூழல் ஏற்படும். ஏனெனில் எவ்வித வரைமுறையும் ஆய்வும் இல்லாமல் நிர்ணயிக்கப்பட்ட வரி விகிதங்கள் இவை. ஏறத்தாழ கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் வரி விகிதங்கள் பல முறை குறைக்கப்பட்டாலும் அமலாக்கப்பட்ட காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட நியாயமற்ற வரி விகிதத்தால் விற்பனையை இழந்து மூடப்பட்ட நிறுவனங்களில் பல இன்னும் மூடிய நிலையிலேயே இருப்பதுதான் வேதனை.

ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு கொண்டுவரப் பட்டபோது மாதம் குறைந்தது ஒரு லட்சம் கோடி வருவாய் இருந்தால்தான் நாட்டின் மொத்த நிதிபற்றாக்குறையை(fiscal  deficit) சமாளிக்க முடியும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. துவக்க காலங்களில் அந்த இலக்கை அடைய முடிந்தாலும் கடந்த ஒரு வருடமாக சராசரியா எண்பதாயிரம் கோடியை தொடுவதே சிரமமாக உள்ளதாம்.

இது எதனால்?

நாட்டின் வரி வருவாயை அதிகரிக்க வேண்டுமானால் நாட்டின் உற்பத்தியை பெருக்கி அதன் விளைவாக  சந்தைக்கு வரும் பொருட்களை உடனே வாங்கும் அளவுக்கு நுகர்வோரின் வாங்கும் திறனையும் சேர்த்து அதிகரித்தால் விற்பனை  தொடர்ந்து உயரும். அதனால் நாட்டின் மறைமுக வரி வருவாயும் உயர்ந்துக்கொண்டே செல்லும்.

இந்த அடிப்படை பொருளாதார தத்துவத்தை உணராத ஆட்சியாளர்கள் வரியை மட்டும் உயர்த்தினாலே வருவாய் பெருகிவிடும் என்று நினைத்தது எத்தனை அறிவீனம்?. மத்தியிலுள்ள ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கைகளால் விற்பனை சரிந்துக்கொண்டே இருக்கும்போது அதன் மூலமாக கிடைக்கும் வரி வருவாயும் குறையத்தானே செய்யும்? அதுதான் இப்போது நடக்கிறது.




பணமதிப்பிழப்பு நடவடிக்கை உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் அனைவருடைய கையிலுமிருந்த ரொக்கப் பணத்தை இல்லாமல் செய்தது. ஜிஎஸ்டியோ இந்த சூழலில் இருந்து மீண்டு வந்து உற்பத்தியை பெருக்கி இலாபம் ஈட்டலாம் என்று நினைத்திருந்த உற்பத்தியாளர்களின் எண்ணத்தை நிராசையாக்கிப் போட்டது எனலாம். 

இத்தோடு நிற்காமல் இன்னும் ஒரு முட்டாள்தனமான தீர்மானம் மூலம் நாட்டின் வாகன உற்பத்தியையும் முடக்கி போட்டது மத்திய அரசு. அதன் விளைவாக கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாம் காணாத அளவுக்கு வாகன விற்பனை சரிந்து அதன் உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியையே பெருமளவு குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன. 

அதுதான் மாசுகட்டுப்பாட்டை மேலும் கடுமையாக்கும் பிஎஸ் ஆறு (BS 6) திட்டம். 

வாகன விற்பனை பெருமளவில் குறைந்ததற்கு காரணம் என்ன என்று மத்திய நிதியமைச்சரிடம் நிரூபர்கள் கேள்வி கேட்டபோது அவர் திருவாய் மலர்ந்து உதிர்த்த அபத்தமான பதில்: இப்போதெல்லாம் மக்கள் ஓலா, ஊபர் போன்ற வாடகை வாகனங்களில் பயணிப்பதையே விரும்புகிறார்கள். வாகன விற்பனை  சரிவுக்கு இதுவும் ஒரு காரண்ம். இந்த பதிலுக்கு ஆங்கில பத்திரிகை ஒன்று அளித்த பதில் என்ன தெரியுமா? ’இப்படி ஒரு பதிலை அளிப்பதற்கு பதிலாக நிதியமைச்சர் எனக்கு தெரியவில்லை என்றே பதிலளித்திருக்கலாம். ’

மத்திய அரசு கடந்த ஆண்டு நாட்டில் தற்போது  நடைமுறையிலுள்ள Bharat Stage (BS) IV என்ற மாசுகட்டுப்பாட்டு விதிமுறை (Emission Norm) யிலிருந்து நேரடியாக BS VI மாற தீர்மானித்தது. இது ஐரோப்பாவில் நடைமுறையிலுள்ள Euro VI விதிமுறைக்கு சமமாக கருதப்படுகிறது. இந்த முடிவு நல்ல முடிவு என்பது உண்மைதான் என்றாலும் நாடு இப்போதுள்ள நிதி நிலமையில் இந்த முடிவு தேவைதானா என்ற கேள்வி எழுகிறது.

ஏனெனில் உலகில் பல வளர்ந்த நாடுகள் இன்னும் Euro IV என்கிற நிலையையே எட்டவில்லையாம்! இதற்குக் காரணம் இதற்கு வாகனங்களில் பல முக்கிய மாறுதல்களை செய்ய வேண்டியுள்ளது.   அதற்கு மிக அதிக அள்விலான முதலீடு தேவைப்படுகிறது. ஆகவே தான் வாகன உற்பத்தியாளர்கள் பலரும் தங்களால் இயன்றவரை இந்த திட்டத்தை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டுமென்று மத்திய அரசுடன் போராடி பார்த்தார்கள். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி எதிர்வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தே தீரும் என்று அறிவித்துவிட்டது. 

ஆகவேதான் நாட்டிலுள்ள பல வாகன உற்பத்தியாளர்கள் தங்களுடைய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த  வேண்டிய நடைமுறைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே BS IV மோட்டார் இயந்திரங்களை (Engines) கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள வாகனங்களை நுகர்வோர் யாரும் வாங்குவதற்கு முன்வராததால் வாகன விற்பனையும் வெகுவாக சரிந்து உற்பத்தியையே நிறுத்த வேண்டிய சூழலுக்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டனர். 

மத்திய நிதியமைச்சர் தற்போது பயன்பாட்டிலுள்ள BS IV இயந்திரங்களுடன் இயங்கும் வாகனங்களுக்கு அதன் ஆயுட்காலம் வரை பயன்படுத்துவதற்கு ஏற்ற ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று உறுதியளித்திருந்தாலும் அவருடைய வாக்குறுதியை நுகர்வோர் நம்ப தயாராக இல்லை என்பதை வாகன விற்பனையின் தொடர் சரிவு உறுதி செய்கிறது. வாகனங்களை இயக்க பயன்படுத்தும் பெட்ரோலிய பொருட்களிலும் மாற்றங்கள் செய்யப்படவிருப்பதால் BS VI வாகனங்கள் விற்பனைக்கு வரும்போது அதை வாங்கிக்கொள்ளலாம் என்று நுகர்வோரும் தங்களுடைய முடிவை சற்று தள்ளிப்போட்டுவிட்டனர் போலும். 

இந்த மாற்றம் டீசல் இயந்திரத்துடன் இயங்கும் வாகனங்களைத்தான் மிக அதிக அளவில் பாதிக்கும் என்கிறார்கள். சரக்கு போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து கனரக வாகனங்களுமே டீசலைத்தான் பயன்படுத்துவதால் அத்தகைய வர்த்தகத்தில் ஈடுபட்டு வருபவர்களும் தங்களுடைய புதிய வாகன தேவைகளை தற்போதைக்கு ஒத்திவைத்து விட்டனர். 

இதுதான் தற்போதைய வாகன உற்பத்தி நிறுத்தம் மற்றும் விற்பனை சரிவுக்கு உண்மையான காரணம். 

சரி இந்த பொருளாதார சரிவிலிருந்து எப்படி மீள்வது? இது யார் கையில் உள்ளது?

நாளை பார்க்கலாம்.

30 அக்டோபர் 2019

பாஜகவின் சரிவு....3

2ம் பாகம்

1. பணப்புழக்கத்தில் வீழ்ச்சி

இந்திய வர்த்தகத்தை என்னதான் டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு முயற்சித்தாலும் இன்று மட்டுமல்ல இனி எதிர்வரும் ஐம்பதாண்டு காலத்திற்கும் மொத்த வர்த்தகத்தில் சுமார் 96 விழுக்காடு கேஷ் அண்ட் கேரி (Cash and Carry) எனப்படும் ரொக்க வர்த்தகமாகத்தான் இருக்கும். இதுதான் இந்திய வர்த்தகத்தின் தனித்துவம். நாட்டில் எத்தனை பெரிய பல்பொருள் அங்காடிகள் (Super Stores, Hyper Stores, Malls) வந்தாலும் சாலையோர கடைகளில்தான் இந்தியாவின் பெரும்பான்மை வர்த்தகம் நடைபெறுகிறது... இனியும் நடைபெறும்.... இத்தகைய கடைகளில் நடக்கும் வர்த்தகம் அனைத்துமே ரொக்கத்தில்தான் நடைபெறுகின்றன. இத்தகைய கடைகளை நடத்துபவர்கள் கொள்முதல் செய்வதும் ரொக்க அடிப்படையில்தான். இதை மத்திய அரசு எத்தனை முயற்சித்தாலும் மாற்றுவது சாத்தியமில்லை. 

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை அறிவித்த பிரதமர் எதிர்வரும் காலங்களில் நாட்டின் பணப் பயன்பாடு பெருமளவு குறையும் என்று ஆரூடம் கூறினாலும் உண்மையில் நடந்தது என்ன? 

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் துவக்க நாட்களில் கையில் பணமில்லாமல் அல்லாடிய சாமான்ய மக்கள் வேறுவழியின்றி வங்கி அட்டைகளை பெருமளவில் பயன்படுத்த துவங்கியது என்னவோ உண்மைதான். அந்த காலக்கட்டத்தில் மொத்த பணப் பயன்பாடு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்புடன் ஒப்பிடுகையில் (curreny to GDP ratio) 12.01 விழுக்காடு என்ற நிலையிலிருந்து 8.8 விழுக்காடாக குறைந்தாலும் பணப்புழக்கம் அடுத்த சில மாதங்களில் சீரடைந்ததும் மீண்டும் 10.10 விழுக்காடு என்ற அளவுக்கு உயர்ந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்ட முந்தைய கால அளவுக்கு மீண்டும் அடைந்தது என்பதுதான் உண்மை. 

மேலும் நம்முடைய நாட்டின் பொருளாதார நிலையை தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிப்பவர்கள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 90 விழுக்காடு உள்ள சாமான்ய மக்கள். அதாவது நடுத்தரத்திற்கும் சற்று கீழே உள்ளவர்கள். இவர்களுடைய வாங்கும் திறனை வைத்துத்தான் சந்தையில் எந்த ஒரு பொருளின் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலோனோர் கிராமங்களில் வசிப்பவர்கள். இவர்களுடைய மாத வருமானத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தை வைத்துத்தான் இந்திய பொருளாதாரத்தின் நிலை தீர்மானிக்கப்படுகிறதே தவிர. ஆன்லைனிலோ அல்லது பெரும் மால்களிலோ பொருட்களை வாங்கிக் குவிக்கும் மேல்தட்டு மக்களால் அல்ல.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் பணப்புழக்கம் முற்றிலுமாக ஸ்தம்பித்து நின்ற அறிமுக மாதங்களில் முதலில் முடங்கிப்போனது இத்தகையோரை சென்றடையும் வர்த்தகம்தான். இவர்கள் கைவசம் இருந்த அனைத்து ரொக்கத்தையும் வங்கிகளில் அடைத்துவீட்டதால் பணப்புழக்கம் வெகுவாக ஏன் முற்றிலுமாக குறைந்துபோய் அதிலிருந்து மீளவே முடியாமல் தாற்காலிகமாக அடைக்கப்பட்ட சிறு குறு வர்த்தக நிறுவனங்களுக்கு அளவே இல்லை. இதன் விளைவாக இவற்றிற்கு விநியோகம் செய்துவந்த மொத்த வணிகர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டனர் என்பதும் உண்மை. ஆகவே தான் இந்த நடவடிக்கை நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி அளவு மற்றும் அவற்றின் மொத்த மதிப்பு எனப்படும் GDP யும் கூட எதிர் வரும் ஆண்டுகளில் கணிசமான அளவு குறைய வாய்ப்புள்ளது என்று அன்றே முன்னாள் நிதி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல பொருளாதார வல்லுநர்கள், உலக வங்கி உட்பட கூறினார்கள்.

2. சரக்கு போக்குவரத்தில் சிக்கல்.

இத்தகைய வணிக நிறுவனங்களின் இடைவிடா தேவைகளையே சார்ந்திருந்த சரக்கு போக்குவரத்து நிறுவனங்களும் கைவசம் ரொக்கம் இல்லாமல் பெருமளவு பாதிக்கப்பட்டன. இந்திய அளவில் சுமார் எட்டு லட்சம் சரக்கு வாகன ஓட்டுனர்கள் தங்களுடைய வாகனங்களுக்கு டீசல் கூட நிரப்ப முடியாமல் அவதியடைந்தனர். இவர்களில் எத்தனை பேரிடம் வங்கி அட்டைகள் இருந்திருக்க வாய்ப்புள்ளது? அன்றாடம் தேவைப்படும் டீசல் மற்றும் கைச்செலவுக்கு கூட ரொக்கம் இல்லாமல் அவதிப்பட்டதை மறுக்கமுடியுமா? இதன் விளைவு... வர்த்தக்ப் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கிப்போனது. அதில் இருந்து மீண்டு வர முடியாமல் தொழிலையே தாற்காலிகமாக கைவிட்டவர்கள் எத்தனையோ பேர். 

3.பங்கு சந்தை வீழ்ச்சி

இந்த நடவடிக்கை ரொக்கத்தில் நடக்கும் வணிகம் மட்டுமல்லாமல் இந்திய பங்கு சந்தையையும் வெகுவாக பாதித்தது. பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நாளன்று தேசிய பங்கு சந்தை சுமார் 1,700 புள்ளிகளும் நிஃப்டி சுமார் 600 புள்ளிகளும் சரிந்தன. அன்றைய சரிவிலிருந்து மீண்டு வர சுமார் மூன்று மாதங்கள் தேவைப்பட்டன. 2016 ஜூலை மாதம் துவங்கி 2017 பிப்ரவரி வரையிலான இடைப்பட்ட காலத்தில் சரிவை சந்திக்காத நிறுவனங்களே இல்லை என்கிறது புள்ளிவிவரங்கள் பெரும்பான்மையான நிறுவனங்கள் இன்றுவரையிலும் அதிலிருந்து மீளவில்லை என்பதுதான் உண்மை. குறிப்பாக ரொக்கத்திலேயே நடைபெற்று வரும் கட்டுமானத் தொழில், மோட்டார் வாகனம், சில்லறை வர்த்தகம், 

3. தொழில் உற்பத்தியில் சரிவு

நாட்டிலுள்ள பெரும் தொழில் நிறுவனங்களும் கூட இதனால் பாதிக்கப்பட்டன. ஏன்.. இவை தயாரிக்கும் பொருட்களில் பெரும்பாலான விழுக்காடு இந்திய சந்தையை நம்பியே தயாரிக்கப்படுகின்றன. கடைநிலை வர்த்தக நிறுவனங்களில் ஏற்படும் பணத்தட்டுப்பாடு எஸ்கலேட்டர் (Escalator)முறையில் நாட்டிலுள்ள அனைத்து பெரிய நிறுவனங்களின் உற்பத்தியையும் பாதித்தன. கடைநிலை வர்த்தக நிறுவனங்களில் தொடர் தேவையினால்தான் (continuous demand) இத்தகைய தொழில் நிறுவனங்கள் தொடர்ச்சியாக இயங்க முடிந்தன. சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் முடக்கப்பட்டதன் விளைவு அவற்றையே நம்பியிருக்கும் பெரு நிறுவனங்களையும் பாதிக்கத்தானே செய்யும்?

4. விவசாய உற்பத்தியில் வீழ்ச்சி

கிராமங்களில் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த அனைத்து தொழில்களிலும் ரொக்கம்தான் பெருமளவில் பயன்படுகின்றன. விதை, உரம், வேலையாட்களுக்கு கூலி என எதிலும் ரொக்க பரிவர்த்தனைகள்தான் என்பதுதான் இன்றல்ல இனிவரும் காலங்களிலும் நடக்கும். அதை எந்த தொழில்நுட்ப முன்னேற்றமும் மாற்றிவிடப்போவதில்லை. விவசாய உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதிலும் கூட ரொக்கம்தான் தேவைப்படுகிறது. எந்த விவசாயி பொருட்களை விற்றுவிட்டு வங்கியில் செலுத்தப்படும் தொகைக்காக காத்திருப்பான்? இப்போதும் அரசு கொள்முதல் மையங்களில் கொள்முதல் செய்யப்படும் பொருட்களின் மதிப்பு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்றால் விவசாயிகள் அதை ஏற்காமல் குறைந்த விலைக்கானாலும் உடனே ரொக்கம் தர தயாராக உள்ள இடைத்தரகரிடம் விற்பதையே விரும்புகின்றனர். மேலும் தங்களுடைய பொருட்களின் மொத்த மதிப்பும் வங்கியில் வரவு வைக்கப்படுமா என்கிற நிச்சயத்தன்மையும் இல்லாத சூழலில் இது முழுவதுமாக நடைமுறைக்கு வருவது சாத்தியமே இல்லை. சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது என இத்தகைய மையங்களில் பொருட்களை விற்கும் விவசாயிகள் குமுறுவது செய்திகளில் வருவதை பார்க்க முடிகிறது. 

5. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (GDP) வீழ்ச்சி

சிறு, குறு மற்றும் பெரு என அனைத்து தொழில் உற்பத்தி மற்றும் விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட சரிவின் விளைவு 15-16 ஆம் நிதியாண்டில் 9.00 விழுக்காடாக இருந்த நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியின் அளவு பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்ட 16-17 நிதியாண்டில் 5.5. விழுக்காடுக்கு சரிந்தது. அதிலிருந்து மெள்ள மெள்ள மீண்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் 6.5 விழுக்காடாக அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு விழுக்காடு அளவுக்கே உயர்ந்துள்ளது. இப்படியே போனால் 15-16 நிதியாண்டில் நாடு அடைந்த 9.00 விழுக்காட்டை அடையவே இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவைப்படுமோ?



6. வேலை வாய்ப்பில் இழப்பு

பணப்புழக்கம் அறவே முடக்கப்பட்டுவிட்ட நிலையில் குடிசை தொழில்கள் மற்றும் முறைசாரா தொழில் துறை (unorganised sector) நிறுவனங்களும் ஒவ்வொன்றாக மூடப்பட அதில் பணிபுரிந்த பெருவாரியான பணியாட்கள் பணி இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். இதில் பெருமளவு பாதிக்கப்பட்டவை கட்டுமான தொழில். இதில் அன்றாட கூலிக்கு பணிபுரிந்துவந்த லட்சக்கணக்கான பணியாட்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தங்களுடைய வேலைகளை இழந்து போயினர். கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது என்ற நிலை ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் என்றாலும் மிகையாகாது.

இந்த நடவடிக்கையை தொடர்ந்து ஏற்பட்ட சரிவை மேல்காணும் படம் மிகத் தெளிவாக காட்டுகிறது. 

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நடைமுறைப்படுத்தப்பட்டதற்கு காரணமாக இருந்தவர்களின் மனப்போக்கு எத்தகையதாக இருந்தது என்பது தெரியவில்லை. இத்தகைய நடவடிக்கையை தனிமனிதனாகவோ அல்லது ஒரு சிறு குழுவாகவோ தீர்மானித்து எடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களால் கடுமையாக தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சம்மந்தப்பட்டவர்களின் பேச்சு திறமையாலும் அதன் எதிர்பாளர்கள் அதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட எதிர்மறை விளைவுகளுக்கு மக்களிடத்தில் தகுந்த முறையில் எடுத்துரைக்க தவறியதாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் பாராட்டப்பட்டு முன்பைவிட அதிக அளவு பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தப்பட்டதன் விளைவைத்தான் நாடு இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு வருவதற்கு முன்பே மத்திய அரசு எடுத்த மற்றுமொரு அவசர முடிவு தான் ஒரே நாடு ஒரே வரி என்ற ஜிஎஸ்டி வரி அமலாக்கம்...

அதை நாளை பார்க்கலாம்

29 அக்டோபர் 2019

பாஜாகவின் சரிவு....2



முதல் பாகம்

சந்தையில் ஒரு பொருளின் விலை அதன் விநியோகம் (supply) அந்த பொருளுக்கு சந்தையில் நுகர்வோர் தரப்பிலிருந்து வரும் தேவை (Demand)என இரண்டின் அளவை பொருத்தே நிர்ணயிக்கப்படுகின்றன என்பதை இன்றல்ல சுமார் எண்பது வருடங்களுக்கு முன்பே அதாவது 1930ல் வாழ்ந்த இங்கிலாந்து பொருளாதார மேதை ஜே.எம்.கெய்ன்ஸ் (John Maynard Keynes) தன்னுடைய ஆராய்ச்சி கட்டுரை ஒன்றில் கூறியிருக்கிறார். 

உதாரணத்திற்கு வெங்காயத்தின் விலையை எடுத்துக்கொள்வோம்.

சந்தையிலுள்ள மொத்த விநியோகம் ஒரு டண் என்று வைத்துக்கொள்வோம். அதை வாங்க அதே சந்தையில் உள்ள மொத்த நுகர்வோரின் எண்ணிக்கை ஆயிரம் என்று வைத்துக்கொள்வோம். விநியோகத்தின் அளவில் மாற்றமில்லாமல் நுகர்வோரின் எண்ணிக்கை கூடும்போது.... அதாவது நுகர்வோரின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் அதிகரிக்கும் சூழலில் வெங்காயத்தின் விலை கூடும்... ஆயிரத்துக்கும் கீழே குறையும் போது அதாவது தேவை குறையும்போது வெங்காயத்தின் விலையை குறைக்காவிட்டால் அது விற்பனையாகாமல் தேங்கும் நிலை உருவாகும். ஆகவே வணிகர்கள் அதன் விலையை குறைக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

இதையே மாற்றி நுகர்வோரின் எண்ணிக்கை அதே ஆயிரம் என்ற நிலையில் வெங்காயத்தின் விநியோக அளவு ஒரு டண்ணுக்கும் கீழே குறையும்போது தேவை விநியோகத்தை விட அதிகம் என்பதால் வெங்காயத்தின் விலை கூடும். விநியோகத்தின் அளவு ஒரு டண்ணுக்கு மேல் அதிகரிக்கும்போது வெங்காயத்தின் விலை குறையும்...

இதுதான் ஒரு பொருளாதார சந்தையில் ஒரு பொருளின் விலை நிர்ணயிக்கப்படுவதின் அடிப்படை தத்துவம்.

பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கைகள் தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள் என்றாலும் அது விநியோகம் மற்றும் நுகர்வோரின் வாங்கும் திறன்களை ஒரே மாதிரியாக பாதித்ததால் இதுவரையிலும் பொருட்களின் விலை அதிக அளவில் உயரவில்லை என்பது உண்மை.

ஆனால் இந்த முடிவுகள் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை பாதித்துவிட்டதாக வல்லுநர்கள் கூறுவது எதனால்?

இதை ஆராய நான்  உலக பொருளாதாரத்தைப் பற்றி விவாதிக்கும் பல இணையதளங்களை உலாவி (Browse)திரட்டிய தகவல்களை இங்கே சுருக்கமாக அளித்திருக்கிறேன்.

முதலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை.

இந்த நடவடிக்கை எதற்காக எடுக்கப்பட்டது என்பதை மத்திய அரசு அளித்திருந்த விளக்கம் என்ன?

1.இந்திய பணச்சந்தையில் கறுப்புப் பணத்தின் விழுக்காடு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
2.கள்ள நோட்டுகளின் புழக்கம் மிக அதிக அளவில் அதிகரித்துவிட்டது. இது தீவிரவாதிகளின் செயல்பாடுகளுக்கு மிகவும் உதவுகிறது.
3.வருமானவரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் 
4.நாட்டில் பணப்புழக்கம் குறையும். அதனால் விலைவாசி குறையும்.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

1. கறுப்பு பணம் அதிகரித்துவிட்டது/

மத்திய அரசின் மதிப்பீட்டின்படி இந்தியாவில் சுமார் மூன்று லட்சம் கோடி கறுப்புப் பணம் இருந்ததாம்! இந்த மதிப்பீட்டை யார், எந்த அடிப்படையில் செய்தார்கள் என்பதே ஒரு கேள்விக் குறி. உண்மையில் மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது புழக்கத்தில் இருந்த சுமார் ரூ.15.41 லட்சம் கோடியில் ரூ.15.30 லட்சம் கோடி அதாவது மொத்த பணத்தில் 99.3 விழுக்காடு பணம் வங்கிகளில் செலுத்தப்பட்டுவிட்டது. மீதமுள்ள தொகையான ரூ.10,720 கோடி மட்டும்தான் கறுப்புப் பணம்.. இந்த அளவு குறைந்த தொகையை மீட்டெடுக்க இத்தனை விபரீதமான முடிவு தேவைதானா என்று பொருளாதார வல்லுநர்கள் கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

இவற்றை மீட்டெடுக்கத்தானே வருமான துறை என்ற ஒரு பெயரில் சர்வ அதிகாரம் படைத்த ஒரு அமைப்பு உள்ளது.? அவர்கள் ஒவ்வொரு ஆண்டும்  மீட்டெடுக்கும் தொகைக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லையே என்றும் கூறுகின்றனர் என்கின்றனர் வல்லுநர்கள்.

மேலும் ஒரு நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு அந்த நாட்டின் கறுப்புப் பணம் மட்டுமே காரணமாகிவிட முடியாது. ஏனெனில் இன்று உலகளவில் மிக அதிக அளவு கறுப்புப் பணத்தை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் ரஷ்யாவும் இரண்டாம் இடத்தில் சீனாவும் உள்ளன. இவை இரண்டுமே கடந்த இருபது ஆண்டுகளில் அசுரத்தனமான பொருளாதார வளர்ச்சியை சந்தித்துள்ள நாடுகள். அதற்கு அடுத்தபடியாக மெக்சிகோ. அதன் பிறகுதான் இந்தியா வருகிறது. முதல் இரண்டு இடங்களில் உள்ள நாடுகளிலுள்ள கறுப்புப் பணத்தின் அளவோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் உள்ள கறுப்புப் பணத்தின் அளவு ஐம்பதில் ஒரு பங்கு மட்டுமே. 

ஆக பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு அரசு முன்வைத்த முதல் காரணமே அடிபட்டுப் போகிறது. சரி அப்படியே வைத்துக்கொண்டாலும் கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்கிறார்களே அப்போதெல்லாம் கறுப்புப் பணம் நாட்டில் இல்லையா? 

இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட காலக்கட்டத்தை இப்போது திரும்பிப் பார்க்கும்போது இதன் பின்னாலிருந்த மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுவது: அப்போது நடக்கவிருந்த ஐந்து வட மாநில சட்டமன்ற தேர்தல்கள்.. குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தை தன் வசப்படுத்த நினைத்த மோடியும் அவருடைய கட்சியும் எதிர்கட்சிகள் வசமிருந்த கணக்கில் வராத பெரும் தொகை ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் தாள்களாகவே இருக்கும் என்றும் அதை செல்லாக் காசாக்கிவிட்டால் அவர்களுடைய மொத்த கஜானாவும் காலியாகிவிடும் எனறு எண்ணியிருக்கலாம். 

2. கள்ள நோட்டுகள் ஒழிக்கப்பட்டுவிடும்!

மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.1000, தாள்கள்களுக்கு மாற்றாக அரசு அறிமுகப்படுத்திய ரூ.2000 தாளில் பல நகலெடுக்கவியலாத அம்சங்கள் உள்ளன என்று விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் அது அறிமுகப்படுத்தப்பட்ட வெகு சில மாதங்களிலேயே பாக்கிஸ்தானிலிருந்து எல்லையை தாண்டி ஊடுருவிய தீவிரவாதிகளிடமிருந்து கட்டுக்கட்டாக ரூ.2000த்தின் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டபோது நாடே அதிர்ந்து போனது. மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி 2017-2018 நிதியாண்டில் இந்திய வங்கிகளில் செலுத்தப்பட்ட தொகைகளில் மட்டும் சுமார் 5.04 லட்சம் கள்ள நோட்டுகள் இருந்தனவாம்! அதில் 2000 ரூபாய் தாள் மட்டும் 1.80 லட்சம்! இதில் வியப்பு என்னவென்றால் புதிய ஐநூறு ரூபாய் மற்றும் இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிறகு நூறு ரூபாய் மற்றும் ஐம்பது ரூபாய் தாள்களின் கள்ளப் பிரதிகள் அதிக அளவில் புழக்கத்தில் வந்துள்ளதாம்! . 





இரண்டாயிரம் ரூபாய் தாள்களின் கள்ள பிரதிகள் நாட்டில் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதால் அதன் பயன்பாட்டை குறைக்கும் வகையில் கடந்த ஓராண்டில் அதை அச்சடிப்பதையே மத்திய ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது!

ஆக இதிலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியையே சந்தித்துள்ளது 

3. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயரும்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆண்டை தொடர்ந்து வந்த நிதியாண்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை சுமார் பத்து மில்லியன் அதாவது ஒரு கோடி உயர்ந்தது என்பது உண்மைதான். ஆனால் இதில் பெரும்பாலோனோர் மாத வருமானம் பெறுவோர். அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் சராசரியாக அதிகரித்த வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை விட இந்த அதிகரிப்பு ஒன்றும் அதிகம் இல்லை.. மேலும் எண்ணிக்கை அதிகரித்தாலும் வரி வசூலில் பெரிய அளவுக்கு ஏற்றம் இல்லை என்கிறது வருமான வரித்துறையின் அறிக்கை. அவ்வாறு அதிகரித்த தொகையிலும் பெருமளவு பணமதிப்பிழப்பு எடுக்கப்பட்ட துவக்க நாட்களில் மதிப்பிழந்த ரூபாய்களை அதாவது ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகளை வரி செலுத்துவதற்கு பயன்படுத்தலாம் என்ற அரசின் அறிவிக்கையை தொடர்ந்து செலுத்தப்பட்ட சுமார் ஐம்பதாயிரம் கோடியை கழித்துவிட்டால் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு முன்புள்ள ஐந்தாண்டுகளில் சராசரியாக வசூலிக்கப்பட்ட தொகையின் அளவிலேயே இருந்துள்ளது. 

எனவே இந்த காரணமும் ஏற்புடையதல்ல.

4. நாட்டில் பணப்புழக்கம் குறையும் அதனால் விலைவாசி குறையும்

நான் ஏற்கனவே விளக்கியுள்ளப்படி விலைவாசி குறைய பணப்புழக்கம் ஒரு காரணமே தவிர அதுமட்டுமே காரணமல்ல.. விநியோகம் முந்தைய அளவிலேயே இருந்து பணப்புழக்கம் மட்டும் கணிசமான அளவு குறைக்கப்பட்டு இருந்தால் மட்டுமே விலை வாசி குறைய வாய்ப்புள்ளது. ஆனால் உற்பத்தியும் குறைந்து அதன் விளைவாக விநியோக குறைவும் நுகர்வோரின் வாங்கும் சக்தி குறைவும் சம நிலையில் இருக்கும்போதும் விலைவாசி ஏறாமல் இருக்கும் என்பதுதான் உண்மை. ஆகவே விலைவாசி ஏறாமல் இருந்திருக்குமானால் அதற்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மட்டுமே காரணமல்ல.

ஆனால் இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகள் என்னென்ன?

நாளை பார்க்கலாம்...