04 அக்டோபர் 2019

நடந்தது என்ன? (முடிவுரை)

சென்னையிலிருந்து வெளியேறிய ரவி மாதவனின் இரு சிம் கார்டுகளையும் உடைத்தெறிந்தான். ஆனால் செல்பேசியை வீசி எறிய மனம் வரவில்லை. தன்னுடைய செல்பேசியையும் அணைத்து மாதவனுடைய செல்பேசியுடன் கைப் பையில் வைத்துக் கொண்டான். கொஞ்ச நாளைக்கி நம்ம ஃபோனையும் யூஸ் பண்ண வேணாம்... இத வச்சே போலீஸ் ட்ரேஸ் பண்ணிருமே....அதுவரைக்கும் தேவைப்படும்போது மட்டும் ராஜியோட ஃபோன யூஸ் பண்ணிக்குவோம்...

ஆனால் அவன் திருடிய பணம் அவனுக்கு வெகுநாள் வரவில்லை.... கேரளா, ஆந்திரா என்று சுற்றி திரிந்துவிட்டு கையிருப்பு காலியானதும் வருவது வரட்டும் என்ற நினைப்புடன் தனக்கு பரிச்சயமான சென்னைக்கே திரும்பினான்... தன்னுடைய கணக்கில் மீதமிருந்த பதினையாயிரம் ரூபாய் பணத்தை கணக்குகளிலிருந்து எவ்வித தடங்கலுமின்றி எடுக்க முடிந்ததும் சரி... நம்மள யாரும் கண்டுபிடிக்கல போலருக்கு என்று நினைத்தவாறு மேன்ஷனை அடைந்து தன் நண்பனை சந்தித்தான்..

’டேய் எங்கடா போய் தொலைஞ்ச...?..செல்ஃபோனையும் ஆஃப் பண்ணி வச்சிட்டே... என்னடா ஆச்சி?’ என்ற நண்பனிடம்...’ ஊருக்கு போற வழியில ஒரு ஆக்சிடண்ட்ல மாட்டிக்கிட்டண்டா.. பொழைச்சதே புண்ணியம்...’ என்று பொய் சொல்லி சமாளித்தான்...

அடுத்ததாக என்ன செய்யலாம் என்று யோசித்தான். இனியும் அவனால் எந்த பணியிலும் சேர்ந்த அது அளிக்கும் சொற்ப ஊதியத்தைக் கொண்டு வாழ்கையை நடத்த முடியும் என்று தோன்றவில்லை. உழைக்காமல் சுளையாக கிடைக்கும் பணத்தை செலவிடுவதில் உள்ள இன்பம் மற்ற எதிலும் கிடைக்காது என்று நினைத்தான்..... மீண்டும் செல்பேசிகளை வாங்கி விற்கும் தொழிலில் இறங்கினான்... கையிலிருந்த பணத்தில் நான்கைந்து திருட்டு செல்பேசிகளை அவனுக்கு எப்போதும் அத்தகைய செல்பேசிகளை விற்கும் ஆட்களிடமிருந்து வாங்கினான். கை மாத்தி வித்தா ரெண்டு மூனாயிரம் கிடைக்கும்... இப்போதைக்கி இதை வைத்து சமாளிப்போம்.. அப்புறம் பாத்துக்கலாம்....

அவன் வாங்கிய செல்பேசிகளில் ஒன்று ஸ்மார்ட் ஃபோன் ரகம் என்பதை கவனித்தான்.  அவனுடைய அதிர்ஷ்டமோ அல்லது கெட்ட காலமோ அந்த செல்பேசியை ஆன் செய்ததுமே ‘இது திருடுபோன செல்ஃபோன்.. உடனே அருகிலிருக்கும் காவல்நிலையத்தில் ஒப்படைக்கவும் ’ என்ற SMS வந்ததும் அதிர்ந்துபோனான்... என்னடா  இது சோதனை? சிம் கார்ட எடுக்காமயே நம்ம கிட்ட வித்துட்டான் போலருக்கே.... நாமளாவது சிம் கார்ட எடுத்திட்டு தொறந்துருக்கலாம்.....இப்ப என்ன பண்றது? என்று நினைத்தவாறு சுற்றும் பர்த்தான்.... அனைவரும் தன்னையே கவனிப்பதுபோன்ற பிரமை ஏற்பட தன்னுடைய வாகனத்தில் ஏறி அங்கிருந்த அகன்றான். 

அவசரத்தில் அவன் செய்த ஒரே முட்டாள்தனம் ஆன் செய்த செல்பேசியை அணைக்க மறந்ததுதான். 

அந்த செல்பேசியை களவு கொடுத்தவன் மாதவனைப் போல் முட்டாள் இல்லை. அதிகம் தாமதியாமல் காவல்துறையை அணுகி தன்னுடைய செல்பேசியின் IMIE எண்ணை புகாருடன் இணைத்து சமர்பித்திருந்ததால் சென்னைக் காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த வழங்கியில் செல்பேசியின் IMIE எண் பதிவாகியிருந்தது. விளைவு? ரவி அணைக்காமல்  சட்டைப்பையில் வைத்திருந்த அந்த  செல்பேசியின் சிக்னலே அவனைத் தொடர்ந்து சென்று அவன் தங்கியிருந்த விடுதியை அடைந்ததும் நிலையாக நின்றது. கட்டுப்பாட்டு அறையிலிருந்து மேன்ஷன் இருந்த பகுதி காவல்நிலையத்திற்கு விஷயம் செல்ல அடுத்த ஒரு மணி நேரத்தில் காவல்துறையிடம் சிக்கிக்கொண்டான்..

மாதவனின் முட்டாள்தனத்தால் செய்த குற்றத்தில் இருந்து தப்பிய ரவி தனது முட்டாள்தனத்தால் செய்யாத குற்றத்திற்கு சிக்கிக் கொண்டான். இதுதான் விதி போலும். 

ரவி தற்போது விசாரணை கைதியாக புழல் சிறையில்.....வழக்கு நிலுவையில்...

***********

இந்த சிறுகதை தொடரை வாசித்து இடப்பட்டிருந்த கருத்துரைகளில் இரண்டை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

1. திரு. ஜிஎம்பி. அவர்கள் இட்ட கருத்துரை ”எல்லா கதையிலும் உண்மையும் கற்பனையும் இணைந்துதான் இருக்கும்.”

அது இந்த கதைக்கும் பொருந்தும். இந்த கதையின் மூலக் கரு சில மாதங்களுக்கு முன்பு வந்த ஒரு செல்பேசி திருட்டுசம்மந்தப்பட்ட துணுக்கு செய்தி. அதில் களவு போன செல்பேசியிலிருந்த மொபைல் பேங்கிங் மென்பொருள் வழியாக பணம் கையாடல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கள்வன் பிடிபட்டானா என்பது தெரியவில்லை.

மேலும் கடந்த சில வருடங்களில் செல்பேசி திருட்டு என்பது மிக அதிக அள்வில் அதிகரித்து வருகின்றன என்பதையும் இணையத்தில் இருந்து நான் திரட்டிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் சில மாதிரிகளை கீழே அளித்துள்ளேன்.



அவை எங்கு செல்கின்றன?

நாம் என்ன செய்ய வேண்டும்?


செல்பேசி IMIE ஐ எவ்வாறு கண்டுபிடிப்பது?
எங்கு. எவ்வாறு சேமித்து வைக்கலாம்?

இந்த விவரத்தை திரையாகவே (Screenshot) எடுத்து நம்முடைய கணினியில் சேமிக்கலாம். கூடுதலாக இதை அப்படியே நம்முடைய மின்னஞ்சல் முகவரிக்கே அனுப்பி விட்டால் அங்கு மிகவும் சேமிப்பாக இருக்கும். எங்கிருந்து வேண்டுமானாலும் அதை தரவிறக்கம் செய்துக்கொள்ள முடியும்.

கடவுசொற்களை செல்பேசியிலையே சேமித்து வைப்பதில் தவறில்லை. ஆனால் அந்த கோப்பை வேறொரு கடவு எண் மூலம் பூட்டி வைக்கும் வசதி செல்பேசியில் இருந்தால் செய்யலாம். 

இன்னொரு சிஷயம். செல்பேசியை தொலைத்துவிடுவது என்பது நம்மையே தொலைத்துவிடுவதற்கு சமம் என்றும் ஆகவே செல்பேசி திருட்டை வெறும் திருட்டாக இனிமேலும் கருதமுடியாது என்று கனடா நாட்டு உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் ஒன்றில் குறிப்பிட்டிருந்ததையும் இணையத்தில் வாசிக்க நேர்ந்தது. அத்தகைய நிலைப்பாட்டை நம்முடைய நீதிமன்றங்களும் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். சாதாரண திருட்டு என்றால் அதிகபட்சமக மூன்றாண்டுகள்தான் சிறை தண்டனை... ஆனால் செல்பேசி திருட்டுக்கு அதை விடவும் கூடுதல் தண்டனை வழங்கினால் மட்டுமே இத்தகைய திருட்டுகள் குறைய வாய்ப்புள்ளது.

மேலும் ரவி சென்னை திரும்பி வாங்கிய செல்பேசியை திறந்ததுமே ’இது திருடப்பட்ட செல்பேசி....’ என்ற sms வருவதாக கூறியிருந்தேன். அது சாத்தியம்தானா என்று உங்கள் மனதில் எழுந்தால் அதற்கு பதில் கீழே:

சில மாதங்களுக்கு முன்பு தமிழக காவல்துறை DIGICOP  என்ற மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் சில விவரங்கள் கீழே:

1. இதில் செல்பேசி திருட்டை காவல் நிலையம் செல்லாமலேயே பதிவு செய்ய முடியும். இதில் தரப்பட்டுள்ள திரைகளில் (சிலவற்றை கீழே அளித்துள்ளேன்) நம்முடைய செல்பேசியின் அனைத்து விவரங்களையும் பதிவு செய்தால் திருட்டுப் போன செல்பேசியை யார் எடுத்து ஆன் செய்தாலும் அது உடனே காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செய்தியாக சென்றுவிடும். உடனே அங்கிருந்து நான் மேலே குறிப்பிட்டுள்ள குறுந்தகவலை அந்த செல்பேசி வைத்திருப்பவருக்கு சென்றுவிடும். அவரால் அந்த செல்பேசியை மீண்டும் பயன்படுத்தவே முடியாத அளவுக்கும் காவல்துறையால் லாக் செய்துவிட முடியும்.



2. திரு. நடனசபாபதி அவர்கள் இட்ட கருத்துரை: மாதவன் உடனே தன்னுடைய மனைவியின் செல்பேசியிலிருந்து கடவுச் சொற்களை மாற்றியிருந்தால் இந்த இழப்பு நடந்திருக்காதே என்று குறிப்பிட்டிருந்தார். 

ஆனால் அது அத்தனை எளிதல்ல என்று நினைக்கிறேன். இப்போது ஏறத்தாழ அனைத்து வங்கிகளுமே ‘Registered Cellphone' என்று ஒரு கொள்கையை வைத்திருக்கிறார்கள். நாம் கணக்கு துவங்கும்போது எந்த செல்பேசி எண்ணை பதிவு செய்கிறோமோ அதே எண்ணை வைத்துத்தான் பிறகு எவ்வித மாற்றங்களையும் செய்ய முடிகிறது. அதே எண்ணாக இருந்தாலும் கூட அந்த செல்பேசியை மாற்றி புதிதாக ஒரு செல்பேசியை வாங்கினாலே அதில் பழைய செல்பேசியில் நிறுவப்பட்டிருந்த எந்த வங்கி மென்பொருளையும் எளிதில் இயக்கிவிடமுடிவதில்லை. மீண்டும் அந்த மென்பொருளை புது செல்பேசியில் நிறுவி வங்கியுடன் தொடர்புகொண்டு அவர்கள் கூறும் அனைத்து வழிகளையும் பின்பற்றினால் மட்டுமே மென்பொருள் மீண்டும் ஆக்டிவ் செய்யப்படுகிறது. இந்த முறை செபேசிகளில் இயங்கிவரும் மின்சார பகிர்வு, செல்பேசி நிறுவனங்கள் என அனைத்து மென்பொருள்களும் இதே கருத்தின் (Concept) அடிப்படையில்தான் இயங்குகின்றன. மேலும் ஒவ்வொரு வங்கியும் வெவ்வேறான வழிமுறைகளை பின்பற்றுவதையும் காண முடிகிறது. அன்னிய செலவாணி வர்த்தகத்தில் Uniform customs and practices என்கிற அனைத்து வங்கி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்பது குறிப்பிடப் பட்டிருக்கும்... அதே போன்று உள்ளூர் வங்கி வர்த்தகத்திலும் அனைத்து வங்கிகளுக்கும் ஒரே மாதிரியான வழிமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன்...

இந்த குறுந்தொடரை தினமும் வாசித்து கருத்துரை இட்ட அனைத்த நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்மணம் போன்றதொரு திரட்டி இல்லாத சூழலில் பதிவுகளை வாசிப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பது ஒருவகையில் எழுதுபவர்களுக்கு சோர்வை அளித்தாலும் இந்த கதைக்கு வந்திருந்த பெரும்பாலான ஆதரவளிக்கக் கூடிய கருத்துரைகளை சோர்ந்திருப்போரையும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.... எனக்கும் அப்படித்தான்... படிப்பவர்கள் குறைவாக இருந்தாலும்...படிப்பவர்கள் அனைவருமே விவரம் உள்ளவர்கள் என்பதும் ஆறுதல் அளிப்பதை மறுப்பதற்கில்லை...

கொசுறு செய்தி: நேற்றைய செய்தியில் சென்னையில் பல மாதங்களாக இயங்கி வந்த செல்பேசி திருடும் கும்பல் ஒன்றை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த குழுவில் உள்ளவர்களுக்கு தினமும் ரூ.1000/- ஊதியமும் வாரத்திற்கு இரண்டு நாள் விடுமுறையும் வழங்கப்படுகிறதாம். தினமும் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் மூன்று ஸ்மார்ட் செல்பேசிகளையாவது திருடவேண்டும். இந்த குழுவின் தலைவன் பெயரும் ரவி!

என்ன ஒரு coincidence பாருங்கள்.



நன்றி.

22 கருத்துகள்:

  1. ‘ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருகக்காது’ என்பது போல திருடிய கையும் சும்மா இருக்காது என்பதால் திருட்டை தொழிலாகக் கொண்டோர் ஒரு நாள் சட்டத்தின் பிடியில் மாட்டுவது உறுதி. அந்த வகையில் திரும்பவும் திருட்டில் இறங்கிய ரவி ‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்’ என்ற பழமொழிக்கேற்ப மாட்டிக்கொண்டான்.

    இங்கே ரவியை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. அசட்டையாய் இருந்த மாதவனால் தான் ரவி போன்றோர் குற்றம் செய்ய முடிறது என்பதையும் சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.

    நாம் எவ்வாறு நமது கைப்பேசியை பாதுகாத்துக்கொள்ளவேண்டும், நமது கைப்பேசி காணாமல் போனாலோ திருடப்பட்டாலோ என்ன செய்யவேண்டும் என்பதை இந்த விழிப்புணர்வு தொடர் மூலம் சுவாரஸ்யமாக கதை போல் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள்!

    ஒரு சிறு நிகழ்வை, மர்மக்கதைபோல் விவரித்து அடுத்து என்ன நடக்குமோ என வாசகர்களை யோசிக்க வைத்த தங்களின் எழுத்தாற்றலுக்கு ஒரு சபாஷ்!

    பதிலளிநீக்கு
  2. இங்கே ரவியை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. அசட்டையாய் இருந்த மாதவனால் தான் ரவி போன்றோர் குற்றம் செய்ய முடிறது //

    ஏறத்தாழ அனைத்து குற்றங்களுக்குமே பாதிக்கப்படுபவர்களும் தங்களை அறியாமலையே அதற்கு காரணமாகிவிடுகிறார்கள்.

    நாம் எவ்வாறு நமது கைப்பேசியை பாதுகாத்துக்கொள்ளவேண்டும், நமது கைப்பேசி காணாமல் போனாலோ திருடப்பட்டாலோ என்ன செய்யவேண்டும் என்பதை இந்த விழிப்புணர்வு தொடர் மூலம் சுவாரஸ்யமாக கதை போல் சொல்லியிருக்கிறீர்கள். //

    இப்படி சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் துலங்கவில்லை. ஆனால் எழுதும்போது தானாகவே வளர்ந்து விட்டது என்பது தான் உண்மை.


    அடுத்து என்ன நடக்குமோ என வாசகர்களை யோசிக்க வைத்த தங்களின் எழுத்தாற்றலுக்கு ஒரு...//

    உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சார்.

    இந்த தொடர் முழுவதும் வந்திருந்து விரிவான கருத்துரைகளை பதிவு செய்ததற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. இந்த தொடரில் பல விடயங்களை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

    என்னைப் பொருத்தவரை அலைபேசி வைத்திருப்பவர்கள்தான் கவனமாக வைத்து இருக்கவேண்டும்.

    பொருட்களை தொலைத்து விடுவது மனித இயல்பே... இருப்பினும் மாதவனைப் போன்ற மெத்தப் படித்தவர்கள் நிறைய உண்டு.

    ஹோட்டலில் உட்கார்ந்ததும் அலைபேசியை டேபிளில் தூக்கி போடுவது, டாக்ஸியில் ஏறினால் டாஷ்போர்டில் தூக்கி போடுபவர்களும் உண்டு பிறகு அவசரமாக இறங்கி ஓடுவது. (தனது சொந்த கார் போலவே நினைப்பது)

    பதிலளிநீக்கு
  4. நான் எல்லாம்செல் பேசியை அதைப்பேசமட்டுமே உபயோகிக்கிறேன் பல செய்முறைகள் புரிவதில்லை தெரிவதில்லைமேலும்வங்கிக்கணக்கை செல்பேசி மூலமே ச்டெய்ய முடியும் என்று தெரிந்தாலும் அதை உபயொகிக்கத் தெரியாது மேலும் இந்த IMIE நம்பர் பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன் என்செல்பேசியின்நம்பரைக்கண்டுபிடிக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  5. என்னைப் பொருத்தவரை அலைபேசி வைத்திருப்பவர்கள்தான் கவனமாக வைத்து இருக்கவேண்டும்.//

    சரியாக சொன்னீர்கள்.

    வரவுக்கும கருத்துரை க்கும் மிக்க நன்றி ஜி!

    பதிலளிநீக்கு
  6. நான் எல்லாம்செல் பேசியை அதைப்பேசமட்டுமே உபயோகிக்கிறேன் //

    அதற்கான கருவிதானே அது? இந்த தலைமுறைதான் அதை மற்ற எல்லாவற்றிற்கும் பயன்படுத்துகிறது.

    பல செய்முறைகள் புரிவதில்லை//

    பரவாயில்லை. அதனால் பெரிய இழப்பு ஏதும் இல்லை.

    வரவுக்கும உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  7. முடிவுரை என்று அழகாய் பல நல்ல விஷயங்களைத் தொகுத்து வழங்கி இருக்கிறீர்கள்.  அலைபேசியில் இந்தப் பணப் பரிவர்த்தனை செய்யும் ஆரம்பிக்க கஷ்டங்களுக்காகவே நான் அதை மேற்கொள்ளவில்லை. 
     
    மேலும் ஒரு க்ளிக்கில்பணம் கைமாறுவது அத்தனை உசிதமாகப் படவில்லை எனக்கு என்பதாலும் பயம்.  என் மகன்கள் கூகுள் ஆப்பிள் பணம் செலுத்தி அதில் மீள்பரிசாகக் கிடைக்கும் சிறு தொகையையும் பெறும்போது சபலம் வரும்.  ஆனாலும் இதுவரை செயல்படுத்தியதில்லை!  


    ஏனெனில் காக்கும் நடவடிக்கைகளை எடுப்பதில் நான் அவ்வளவு சுறுசுறுப்பு இல்லாதவன் என்பது எனக்கே தெரியும் என்பதால் அந்த வழிக்கே போவதில்லை.  


    ஆனால் பணம் என்றில்லாமல் இந்தக் கால ஸ்மார்ட் போன்களால் பல விவரங்களைப் பெற முடிகிறது.   சொல்லப்போனால் அந்த ஸ்மார்ட்போன் நம் கையிலிருக்கும்போதே நாம் ஒவ்வொரு நொடியும் கண்காணிக்கப் படுகிறோம்!

    பதிலளிநீக்கு
  8. அடுத்ததாக ஒரு திருட்டில் பின்னே பெரிய நெட் வொர்க்கே செயல்படுகிறது. இந்த அலைபேசியை அறியாமல் திருடுவது ஒருபுறம்.  சாலைகளில்பேசிக்கொண்டே செல்லும்போது பைக்கில் வந்து நகை பறிப்பதுபோல பறித்துச் செல்வதும் நடக்கிறது.

    சமீபத்தில் நடந்த நகைத்திருட்டு பற்றிக்கூட பலவித கதைகள் உலவுகின்றன.  அங்கும் ஒரு ஸ்பெஷலிஸ்ட் திருடன் மாட்டி இருப்பதாகவும் செய்தி சொல்கிறது.  சமயங்களில் இன்ஷியூரன்ஸ் பணத்துக்காக அல்லது கணக்குக்காட்ட இப்படி ஒரு செட்டப் நடப்பதும் உண்டு என்கிற கருத்து இந்தத் திருட்டிலும் சுற்றி வந்ததைப் பார்க்க முடிந்தது.

    நகைத்திருட்டுப் பற்றியும் கதை வருமோ!

    பதிலளிநீக்கு
  9. பலநாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான் என்பது இதுதான் போலும்...  மூணு சீட்டு மோகம் போல திருடர்களால் ஒரு தடவையோடு நிறுத்த முடியாது என்பது அவர்கள் மாட்டப்போகும் விதியின் விளையாட்டு.  குடிகாரன் உறுதிமொழி மாதிரி 'இந்த தடவை மட்டும்' என்பது தினமும் நடக்கும்.   

    பதிலளிநீக்கு
  10. அலைபேசியில் இந்தப் பணப் பரிவர்த்தனை செய்யும் ஆரம்பிக்க கஷ்டங்களுக்காகவே நான் அதை மேற்கொள்ளவில்லை.//

    எனக்கும் முதலில் அந்த தயக்கம் இருந்தது. ஆனால் ஒரு சில முறை செய்து பழகிய பின் அது சரியாகிவிட்டது. ஆனால் PAYTM போன்ற தளங்களை பயன்படுத்துவதில்லை.

    பதிலளிநீக்கு
  11. சொல்லப்போனால் அந்த ஸ்மார்ட்போன் நம் கையிலிருக்கும்போதே நாம் ஒவ்வொரு நொடியும் கண்காணிக்கப் படுகிறோம்!//

    ஓரளவுக்கு இது உண்மை தான். நமது தனிப்பட்ட விவரங்களை பகிர்ந்தளிக்காதவரை நமக்கு பாதிப்பு இல்லை.

    பதிலளிநீக்கு
  12. அடுத்ததாக ஒரு திருட்டில் பின்னே பெரிய நெட் வொர்க்கே செயல்படுகிறது. இந்த அலைபேசியை அறியாமல் திருடுவது ஒருபுறம். சாலைகளில்பேசிக்கொண்டே செல்லும்போது பைக்கில் வந்து நகை பறிப்பதுபோல பறித்துச் செல்வதும் நடக்கிறது.//

    இத்தகைய செல் பேசிகளை குறைந்த விலையில் வாங்குவதற்கு என்றே ஒரு கூட்டம் இருக்கிறதே. அவர்களை நம்பித்தான் இந்த தொழில் இத்தனை வேகமாக வளர்ந்து வருகிறது.

    இன்ஷியூரன்ஸ் பணத்துக்காக அல்லது கணக்குக்காட்ட இப்படி ஒரு செட்டப் நடப்பதும் உண்டு என்கிற கருத்து இந்தத் திருட்டிலும் சுற்றி வந்ததைப் பார்க்க முடிந்தது.//

    இருக்கலாம். யார் கண்டது?

    நகைத்திருட்டுப் பற்றியும் கதை வருமோ//

    செயின் பறிப்பு பற்றி விரிவாக ஒரு திரைப்படமே வந்ததே. பெயர் நினைவில்லை.


    பதிலளிநீக்கு
  13. திருடர்களால் ஒரு தடவையோடு நிறுத்த முடியாது என்பது அவர்கள் மாட்டப்போகும் விதியின் விளையாட்டு. குடிகாரன் உறுதிமொழி மாதிரி 'இந்த தடவை மட்டும்' என்பது தினமும் நடக்கும்.//

    திருட்டுப் பழக்கம் சுடுகாடு மட்டும் என்றும் ஒரு பழமொழி வந்தாலும் வரும்: ))

    பதிலளிநீக்கு
  14. ஸ்ரீராம்,

    உங்கள் வரவுக்கும மிக விரிவாக கருத்துரைகள் இட்டதற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  15. கொசுறு செய்தி: நேற்றைய செய்தியில் சென்னையில் பல மாதங்களாக இயங்கி வந்த செல்பேசி திருடும் கும்பல் ஒன்றை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த குழுவில் உள்ளவர்களுக்கு தினமும் ரூ.1000/- ஊதியமும் வாரத்திற்கு இரண்டு நாள் விடுமுறையும் வழங்கப்படுகிறதாம். தினமும் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் மூன்று ஸ்மார்ட் செல்பேசிகளையாவது திருடவேண்டும். இந்த குழுவின் தலைவன் பெயரும் ரவி!///என்ன சார் இது புரியவில்லையே. எதற்கக இந்த ஏற்பாடு.
    கதை என்ற எண்ணமே வரவில்லை.

    நல்ல விறு விறுப்பாக நிறைவேறிய விஷயங்கள்.

    அந்தப் புதிய இணைப்பு பலபேரின் செல்பேசிகளைக் காக்கும்.

    மிக அரிய செய்திகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
    வாழ்த்துகளும் நன்றிகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரியவில்லையே. எதற்கக இந்த ஏற்பாடு.
      கதை என்ற எண்ணமே வரவில்லை.//

      இது கடந்த வாரம் ஜூனியர் விகடனில் வந்த உண்மை செய்தி. அந்த திருட்டுக் கும்பலின் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறேன். மீண்டும் ஒரு முறை பாருங்கள்.

      மிக அரிய செய்திகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.//

      உங்கள் வரவுக்கும கருத்துரை க்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. தமிழகம் வந்திருந்ததால் வலைப்பக்கம் வர இயலாத சூழல். இன்றைக்கு தில்லி திரும்பியதும் உங்கள் விடுபட்ட பதிவுகளை படித்து முடித்தேன்.

    தொடர் மிகச் சிறப்பாக இருந்தது. எத்தனை விதமான திருட்டுக்கள். மனித மனம் எப்படியெல்லாம் செயல்படுகிறது - அடுத்தவர் சொத்துக்கு ஆசைப் படக்கூடாது என்று உள்மனதுக்குத் தெரிந்தாலும் அதைச் செய்து விடுகிறார்கள்.

    நிறைய விஷயங்கள் இத் தொடர் மூலம் சொல்லி இருக்கிறீர்கள். கடவுச் சொற்கள், எண்கள் போன்றவற்றை அலைபேசியில் பதிவு செய்திருப்பது மிகப் பெரிய தவறு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  17. வலைப்பக்கம் வர இயலாத சூழல். இன்றைக்கு தில்லி திரும்பியதும் .... //

    தானும் உங்களை காணவில்லையே என்று நினைத்தேன்.

    பாராட்டுகளும் வாழ்த்துகளும்./

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  18. //தமிழ்மணம் போன்றதொரு திரட்டி இல்லாத சூழலில் பதிவுகளை வாசிப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பது ஒருவகையில் எழுதுபவர்களுக்கு சோர்வை அளித்தாலும்// ...ரொம்ப சோகம். இருந்தும் ஓரளவு விடாமல் தொடர்கிறேன் - வாசிக்க ஆளில்லாவிட்டாலும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப சோகம். இருந்தும் ஓரளவு விடாமல் தொடர்கிறேன் - வாசிக்க ஆளில்லாவிட்டாலும்! //

      ஆமாம். வேற வழி? ஆடற காலும் எழுதுற கையும் சும்மா இரூக்காதே?

      நீக்கு
    2. தமிழ்மணம் மீண்டு வர வாய்ப்பில்லை. கடந்த மூன்று மாதங்களாக முயன்று தோற்று விட்டேன். மாற்று ஏற்பாடு நடந்து கொண்டு இருக்கிறது. விரைவில் அறிவிப்பு வரும். உங்கள் ஆதங்கம் நிச்சயம் தீரும்.

      நீக்கு
    3. உங்கள் முயற்சிக்கு மிகவும் நன்றி. வெற்றி பெற வாழ்த்துகள்.

      நீக்கு