24 அக்டோபர் 2019

தங்கவேல் நினைவாக .....(நகைச்சுவை)

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த தங்கவேல்-சரோஜா நகைச்சுவை ஜோடியை மறக்கவே முடியாது. அவர்கள் இருவரும் கணவன் - மனைவியாகவே நடித்து கலக்கிய திரைப்படங்கள் ஏராளம்.

அவற்றில் முக முக்கியமான திரைப்படம் கல்யாணப் பரிசு. மன்னார் & கம்பெனி என்று Google Searchல் அடித்து பாருங்கள், முதலில் வருவது சித்ராலயா கோபுவை பற்றி இந்து தினத்தாளில் வெளியான செய்திதான். (Years ago director and comedy playwright `Chithralaya' Gopu started `Mannar & Co.' in the film "Kalyana Parisu". Even today the imaginary firm `Mannar and Co' track, involving Thangavelu and Saroja, evokes laughter. )


சித்ராலயா கோபுவின் கற்பனையில் உருவான மன்னார் & கோ இப்போதும் வேலை வெட்டியில்லாத மருமகனை கேலி செய்ய மாமானார்கள் பயன்படுத்தும் நிறுவனம் என்றால் அது மிகையாகாது.

இக்கருத்தை உபயோகித்து தங்கவேல்-சரோஜா ஜோடியை கணவன்-மனைவியாக கற்பனையில் ஒரு நகைச்சுவைக் காட்சியை ஜோடித்தால் என்ன என்று முயன்றதன் விளைவே இந்த குறு-நாடகம்.

பாத்திரங்கள்

கணவர்: டணால் தங்கவேல்
மனைவி: சரோஜா

(வீட்டு கதவு திறந்து கிடக்கிறது. வீட்டினுள் நுழைந்த கணவர் ஹாலில் கிடந்த நாற்காலியொன்றில் அமர்கிறார்)

கணவர்: ஷூ.. அப்பப்பா.. என்னா வெயில், என்னா வெயில்? (உள்ளே எட்டிப்பார்த்து) ஏய் கமலா.. உன் வீட்டுக்காரன் களைச்சி போய் வந்திருக்கேன்.. ஒரு காப்பி, கீப்பி கிடையாதா?

(உள்ளிருந்து சப்தமே வராமல் போகவே.. கணவர் மெதுவே எழுந்து சமையற்கட்டை நோக்கி நடக்கிறார். அங்கேயும் அவருடைய மனைவி இல்லை. குழப்பத்துடன் வாசலை நோக்கி திரும்புகிறார். கணவருடைய குரல் கேட்டு அடுத்த வீட்டிலிருந்து வந்த அவருடைய மனைவி இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு கோபத்துடன் தன்னையே பார்த்துக்கொண்டு வாசலில் நிற்பதை பார்க்கிறார்.)

கணவர்:(தனக்குள்) இவளுக்கு விஷயம் தெரிஞ்சிருக்குமோ.. எமகாதகியாச்சே.. நமக்கு பின்னாலயே யாரையாச்சும் அனுப்பியிருப்பாளோ? இருக்கும், இருக்கும். (வெளியில்) ஹெஹ்ஹஹ்ஹே.. என்ன அப்படி பாக்கறே கமலா? என்னடா இவன் ஆஃபீஸ் போய்ட்டு வரேன்னு சொன்னவன் பகல்லயே வந்துட்டானான்னு பாக்கற.. அப்படித்தானே? அது ஒரு பெரிய கதை..(பேசிக்கொன்டே படுக்கையறையை நோக்கி நகர்கிறார்)

மனைவி: (கேலியுடன்) நீங்க சொல்றது எல்லாமே கதைதானே.. என்னைக்கி உண்மைய பேசியிருக்கீங்க? சொல்லுங்க, எங்கருந்து வரீங்க?

கணவர்: (தனக்குள்) மாட்டிக்கிட்டோம்னு நினைக்கறேன். இப்ப எப்படி சமாளிக்கறது? (மனைவியிடம்) ஹெஹ்ஹஹ்ஹே.. என்ன இப்படி கேட்டுட்டே? ஆஃபீஸ்லருந்துதான்?

மனைவி: அதான் கேக்கறேன் எந்த ஆஃபீஸ்லருந்து?

கணவர்: (சிரிக்கிறார்)ஏன் கேக்கறே?

மனைவி: (கேலியுடன்) விஷயமாத்தான் கேக்கறேன். சொல்லுங்க எந்த ஆஃபீஸ்லருந்து?

கணவர்: (தனக்குள்) நம்ம பார்க்லருந்து வந்தத எவனாவது பாத்த்துட்டு வந்து சொல்லிட்டானா? இருக்கும், இருக்கும். (பதில் சொல்ல வாய் திறக்கிறார்)

மனைவி: (கேலியுடன்) ஹெஹ்ஹஹ்ஹே.. அதான? நீங்க பொய் சொல்றப்பல்லாம் சிரிக்கிற சிரிப்புத்தானே? உங்களுக்காக நானே சிரிச்சிட்டேன். சொல்லுங்க? எந்த பார்க்லருந்து.. இல்ல இல்ல எந்த ஆஃபீஸ்லருந்து வரீங்க? போன வாரம் ஒரு டூப் விட்டீங்களே அந்த மன்னார் அண்ட் கம்பெனியிலருந்தா?

கணவர்: (தனக்குள்) அதையும் கண்டுபிடிச்சிட்டாளா? எமகாதகி, எமகாதகி..

மனைவி: என்ன சத்தத்தையே காணோம்?

கணவர்: (தனக்குள்) நான் என்னத்த சொல்றது? அதான் எனக்கும் சேர்த்து நீயே பேசிட்டியே. (மனைவியைப் பார்த்து)ஊம்.. உனக்கு என்ன தெரியணும்? நான் அதே ஆஃபீஸ்ல வேல செய்யறேனா இல்லையான்னுதானே?

மனைவி: (கேலியுடன்) நீங்க எந்த ஆஃபீசுக்காவது போயிருந்தாத்தானே அதே ஆஃபீசா இல்ல வேற ஏதாவது ஆஃபீசான்னு நினைக்கறதுக்கு?

கணவர்: என்னடாயிது வம்பாயிருக்கு? அப்ப நான் எந்த வேலையும் செய்யலேங்கறியா?

மனைவி: பின்னே.. முதல்ல மன்னார் & கோவிலன்னீங்க.. அந்த மானேஜரையே உங்க முன்னால நிறுத்தி நீங்க சொன்னது பொய்யின்னு நிரூபிச்சேன்.. அப்புறமா நான் பெரிய கதாசிரியன்னு ரீல் விட்டு கடையில வாங்குன ஒரு மாலையோட வந்து நின்னீங்க.. அதுவும் பொய்யின்னு தெரிஞ்சதுக்கப்புறம் ஹெஹ்ஹஹ்ஹேன்னு இளிச்சி சமாளிச்சீங்க.. இன்னும் என்னெல்லாம் சொல்லப் போறீங்களோன்னு பாக்கறேன்.. சொல்லுங்க இன்னைக்கி என்ன சொல்ல போறீங்க?

கணவர்: (கேலியுடன்) அதையும் நீயே சொல்லிடேன். புருஷன் வெளிய போய் வீட்டுக்கு வந்தா.. அன்பா.. வாங்க, உக்காருங்க, என்ன குடிக்கிறீங்க? காப்பி போதுமா, இல்ல ஏதாவது ஆப்பிள் ஜூஸ், ஆரஞ்ச் ஜுஸ் வேணுமா? அப்படின்னு கேக்கறவதான் மனைவி.. நீ என்னடான்னா?

மனைவி: (கோபத்துடன்) அது வேலைக்கி போயி சம்பாதிச்சிக்கிட்டு வர கணவனுக்கு.. உங்களுக்கில்ல..

கணவர்: (கோபத்துடன்) நான் சம்பாதிச்சிக்கிட்டு வராமத்தான் நீ இத்தன வருஷம் சாப்பிட்டுக்கிட்டு இருக்கியா?

மனைவி: (தாடையில் கைவைத்து ஆச்சரியப்படுகிறார்) பாருடி இந்த கூத்தை? உங்களுக்கு கோபம் கூட வருமாக்கும்?

கணவர்: ஏன்? ரோஷம் இருக்கற எந்த ஆம்பளைக்கும்தான் கோபம் வரும். எனக்கு வரக்கூடாதா? என்ன பேசற நீ?

மனைவி: (கேலியுடன்) அது ரோஓஓஓஒஷம் (இழுத்து உச்சரிக்கிறார்) உள்ளவங்களுக்கு.. உங்களுக்கில்ல..

கணவர்: (மனைவியின் பார்வையை தவிர்து தரையை பார்க்கிறார்)

மனைவி: அதிருக்கட்டும். போனமாசம் பாத்துக்கிட்டிருக்கறதா சொன்னீங்களே அந்த வேலை என்னாச்சி?

கணவர்: எது அந்த எக்ஸ்போர்ட், இம்போர்ட் கம்பெனியா? அது..

மனைவி: (கேலியுடன்) ஆஆஆஆஅமா.. (நடிகை சரோஜாவின் ஸ்பெஷாலிடியே வார்த்தைகளை இழுத்து, இழுத்து நக்கலடிப்பதுதான்) என்ன இழுக்கறீங்க? அங்கயும் கல்த்தா குடுத்துட்டானா? சொல்லுங்க. என்ன பண்ணீங்க?

கணவர்: அந்த மானேஜரை கன்னத்துல அறைஞ்சிட்டேன்.. அதான் கல்த்தா குடுத்து அனுப்பிச்சிட்டான் (தன் பின்னங் கழுத்தில் கைவைத்து தள்ளிவிடுவதுபோல் அபிநயிக்கிறார்).

மனைவி: (தாடையை பிடித்துக்கொண்டு ஆச்சரியத்துடன் கணவரை பார்க்கிறார்) என்ன மானேஜர அடிச்சீங்களா? நீங்களா? எதுக்கு?

கணவர்: பின்னே? முதலாளி சொன்னா செய்யாம இருக்க முடியுமா?

மனைவி: (குழப்பத்துடன்) என்ன சொல்றீங்க? உங்க மானேஜரையே அடிக்கசொல்லி உங்க முதலாளி சொன்னாரா ? டூப் விடாதீங்க. நீங்க தினமும் விடற டூப்ல நீங்க எப்ப டூப் விடறீங்க, எப்ப உண்மைய பேசறீங்கன்னே சொல்ல முடியல.. உண்மைய சொல்லுங்க.. மானேஜர அடிக்க சொல்லி உங்க முதலாளி சொன்னாரா?

கணவர்: ஐயர ரெண்டறைன்னு சொன்னா என்ன அர்த்தம்? எங்க மானேஜர் ஒரு ஐயர். அவரத்தான் ரெண்டு அறை விட சொல்றார்னு நினைச்சி சப்புன்னு அறைஞ்சிட்டேன் (தன் கன்னத்திலேயே அடித்துக்கொள்கிறார்). சொன்னத செஞ்சதுக்கு சீட்ட கிழிச்சிட்டான்.

மனைவி:(எரிச்சலுடன்) ஐயோ.. நீங்க விடுற டூப்புக்கு அளவே கிடையாதா?

கணவர்: அடிச்சதுக்கப்புறம்தான் தெரிஞ்சிது முதலாளி கணக்கு போட்டுக்கிட்டிருந்திருக்காருன்னு தெரிஞ்சது.

மனைவி: கணக்கா? என்னங்க சொல்றீங்க?

கணவர்: ஆமா கமலா.. அவரு முந்தா நாளோட கணக்கு வழக்க பாத்துக்கிட்டிருந்திருக்காரு.. அஞ்சி அரை (ஹாஃப், ஹாஃப் என்று ஒலி வராமல் உதடுகளை மட்டும் அசைத்து காட்டுகிறார்) களை கூட்டினா ரெண்டரைதானே வரும்.. அதத்தான் அந்த மனுஷன் சத்தமா சொல்லியிருக்காரு வாய்ப்பாடு மாதிரி. எனக்கு பக்கத்துல நின்னுக்கிட்டிருக்கற மானேஜர் ஐயரை ரெண்டறைன்னு கேட்டுச்சு.. பளார், பளார்னு அறைஞ்சிட்டேன்.. வெளியே போடான்னுட்டான்.

(மனைவி பொங்கிவந்த சிரிப்பை அடக்க முடியாமல் வயித்தை பிடித்துக்கொண்டு சிரிக்கிறார்.. தப்பித்தால் போதும் என்று கணவர் தன் படுக்கையறைக்குள் ஓடி ஒளிகிறார்.)

முடிவு

14 கருத்துகள்:

  1. ‘கல்யாண பரிசு’ திரைப்படத்தில் தங்கவேலு –சரோஜா இருவரும் அடித்த லூட்டியை திரும்பவும் நினைவுக்கு கொண்டுவந்து அதன் தொடர்ச்சியாக அவர்கள் பேசும் நகைச்சுவை உரையாடல்களை இரசிக்கும்படி தந்திருக்கும் தங்களுக்கு பாராட்டுகள்! ‘ஐயர ரெண்டர’ என்பதற்கு இப்படியும் பொருள் கொள்ளலாம் என்று தங்கவேலு நினைத்ததாக சொல்லியிருப்பது சிரிக்கவைத்தது.

    தொடருங்கள் தங்களின் நகைச்சுவை பதிவுகளை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் சார்,

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சார்.

      நகைச்சுவை பதிவுடள் சரியாக அமைவது அபூர்வம். அப்படி அமைந்தால் தான் சிரிப்பு வரும். இல்லை யென்றால் கடுப்பாகி விடுவார்கள் என்பதால் எப்போதாவது தான் இத்தகைய பதிவுகளை இடமுடிகிறது.

      உங்கள் வரவுக்கும கருத்துரை க்கும் மிக்க நன்றி சார்.

      நீக்கு
  2. எழுத்திலும் நகைச்சுவை காட்டும் உங்களுக்கு பாராட்டுகள் எனக்கு நகைச் சுவை ரொம்பதூரம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வரவுக்கும பாராட்டுக்கும் மிக்க நன்றி சார்.

      நீக்கு
  3. ஹா...ஹா... ஹா...    ஐயரை ரெண்டறை...!   கதைகளில் கடைசி ட்விஸ்ட் போல கடைசியில் வார்த்தை ஜாலம் வந்து தங்கவேலுவைக் காப்பாற்றி விடுகிறது.   அவர்கள் பேசும் குரலிலேயே படித்துப் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் பேசும் குரலிலேயே படித்துப் பார்த்தேன்//

      நான் எழுதும் போதும் அப்படியே சொல்லி பார்த்து தான் எழுதினேன்.

      நீக்கு
  4. //அஞ்சி அரை (ஹாஃப், ஹாஃப் என்று ஒலி வராமல் உதடுகளை மட்டும் அசைத்து காட்டுகிறார்)//

    டிபிகல் தங்கவேலு ஸ்டைல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் அவருடைய தனிப்பட்ட பாணி. டயலாக் பேசாமலேயே முக பாவனைகளாலேயே நம்மை சிரிக்க வைத்தவர் அவர்.

      நீக்கு
  5. தங்கவேலு நகைச்சுவையில் (ஆனால் ஜோடி சரோஜா அல்ல!)  "அதான் எனக்குத் தெரியுமே" கூட ரொம்ப ஃபேமஸ்!   படம் 'அறிவாளி' என்று ஞாபகம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதான் எனக்குத் தெரியுமே" கூட ரொம்ப ஃபேமஸ்!  //

      இது NSK மதுரம் இணையின் ஒப்பற்ற காமெடி டிராக். NSK வின் நகைச்சுவை காட்சிகளை பிரதிபலிப்பது போல் எழுதுவது மிக மிக சிரமம்.

      உங்கள் வரவுக்கும மூன்று கருத்துரைகளை பதிவு செய்ததற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. என் எஸ் கே இல்லை ஸார்...   தங்கவேலுதான்.    பூரி செய்யும் முறை பற்றிச் சொல்வார்.   ஜோடியாக நடித்திருப்பவர் முத்துலட்சுமி.

      https://www.youtube.com/watch?v=WYSOgxnGReQ  

      நீக்கு
    3. ஆமாம். திருத்தத்திற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. வணக்கம் ஐயா நன்றாகவே ரசிக்க முடிகிறது தங்களது எழுத்து ரசனை ஸூப்பர்.
    (சற்று பிஸி ஆகவே தாமதம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா நன்றாகவே ரசிக்க முடிகிறது தங்களது எழுத்து ரசனை ஸூப்பர்.
      (சற்று பிஸி ஆகவே தாமதம்)//



      உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஜி!

      தாமதமானாலும் வருகைக்கு நன்றி ஜி!

      நீக்கு