03 அக்டோபர் 2019

நடந்தது என்ன,,,? (நிறைவுப் பகுதி)

‘ஏங்க பாத்தா படிச்ச ஆள் மாதிரி இருக்கீங்க. இப்படியா எல்லாத்தையும் ஃபோன்லயே சேவ் பண்ணி வப்பீங்க? இது எப்படி இருக்குன்னா வீட்ட பூட்டிட்டு சாவிய பூட்டு வாயிலயே வச்சிட்டு போற மாதிரி இருக்கு..’ என்று கிண்டலுடன் தன் எதிரில் அமர்ந்திருந்த மாதவனை பார்த்தார் உதவி ஆய்வாளர் கோபால் ‘சரி இப்ப நாங்க என்ன பண்ணணும்கறீங்க?’

டிஆர் மாலுக்கு அருகில் இருந்த அந்த பகுதி காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த மாதவன் கடந்த அரை மணி நேரமாக உதவி ஆய்வாளர் கோபாலின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கி அவஸ்தை பட்டுக்கொண்டிருந்தான்.

‘ஒரு சேஃப்டிக்காகத்தான் சார்.... ரெண்டு மூனு பேங்க்ல அக்கவுண்ட் இருக்கு.... அத்தோட டெபிட் கார்ட்... அப்புறம் க்ரெடிட் கார்டுன்னு இருந்ததால....’

‘ஆமா.... பணம் நிறைய இருந்தா ரெண்டில்ல நாலு பேங்க்ல கூட அக்கவுண்ட் வச்சிக்கலாம்...எல்லா காரடையும் பர்சுல வச்சிக்கலாம்... அதுக்கு வேண்டிய பாஸ்வேர்ட் பின் நம்பர உங்கள மாதிரி செல்ஃபோன சேவ் பண்ணி வச்சிக்கலாம்.... இதுக்கு பதிலா அந்த கார்டுங்க பின்னாலயே எழுதி வச்சிருந்தீங்கன்னா திருடுறவனுக்கு இன்னும் ஈசியா இருந்திருக்கும்ல?’ கோபாலின் குரலில் இருந்த நக்கல் மாதவனை எரிச்சலடைய வைத்தது...

இதுக்குத்தான் இங்க வரவே கூடாதுங்கறது.... இவனுங்க கிட்ட மாட்டிக்கிட்டு அல்லாடுறதுக்குள்ள பேசாம வேற ஒரு ஃபோன வாங்கிகிட்டு போயிறலாம் போல...

‘என்ன மிஸ்டர் மாதவன்... என்ன பதிலையே காணம்?’

‘இல்ல சார் ஆஃபனவர் முன்னாலதான் செக் பண்ணேன் ஃபோன் ஸ்விட்சாஃப்னுதான் வந்துது...’

‘அப்படீன்னா அது அந்த மால்லதான் எங்கயாவது கிடக்குதோ என்னவோ? அங்க போய் கேட்டீங்களா?’

‘ஆமா சார்.. காலையில முதல் வேலையா அங்கதான் போனேன். மேனேஜர பார்த்து ஒரு கம்ப்ளெய்ண்ட் வேற குடுத்துட்டுதான் வ்ரேன்.’

‘மேனேஜர பாத்தீங்களா? அந்தாள் அடாவடிய பேசுவானே?’

நீங்க மட்டும் என்னவாம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்ட மாதவன். ‘ஆமா சார்... எங்க கடையில ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டார்... ஆனா நீங்க கொஞ்சம் சிசிடிவி ஃபுட்டேஜ பாருங்க சார்னு கேட்டேன்...’

‘அதுக்கு அவர் என்ன சொன்னார்?’

‘ஒங்கக் கிட்டல்லாம் காட்ட முடியாது... நீங்க போலீஸ் கம்ப்ளெய்ண்ட் குடுங்க.. அவங்க வந்து கேட்டா காட்டறோம்னு சொல்லிட்டார்... எனக்கு வேற வழி தெரியல அதான் இங்க வந்தேன்...’

‘இருங்க நா ஃபோன் செஞ்சி கேக்கறேன்.’ என்று பதிலளித்த உதவி ஆய்வாளர் கோபால் தன் செல்பேசியை எடுத்து டயல் செய்தார். நீண்ட நேரம் கழித்து எதிர் முனையிலிருந்து மால் மேலாளரின் குரல் கேட்டது.... ;சொல்லுங்க சார்... ஒங்க ஃபோனத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன்..அந்தாள் அங்க வந்துருப்பாரே?

‘ஆமா.... சிசிடிவி ஃபுட்டேஜ்ல ஏதாச்சும் தெரிஞ்சிதா?’

‘ஆமா சார்... அந்தாளு மூளை இல்லாம செல்ஃபோன ட்ராலிக்குள்ள வீசி எறிஞ்சிருக்கான். அது கீழருக்கற ஹோல் வழியா தரையில விழுந்துருக்கு. அத கூட கவனிக்காம அந்தாள் அடுத்த செக்‌ஷனுக்கு போயிருக்கான்... கீழ விழுந்து கிடந்த ஃபோன ஒரு சின்ன பாப்பா எடுத்து பக்கத்துலருக்கற இருந்த கூடைக்குள்ள போடறது தெரியுது.. ஆனா அந்த கூடைய யார் எடுத்துக்கிட்டு போனார்ங்கறது மட்டும் ஃபுட்டேஜ்ல க்ளியரா தெரியல... அத ஒரு சிடியில காப்பி பண்ணி வச்சிருக்கேன்... நம்ம பையன் கிட்ட குடுத்து உடறேன்....’

‘சரி... அனுப்புங்க.’ இணைப்பை துண்டித்துவிட்டு மாதவனைப் பார்த்தார் கோபால்.. அந்தாள் காட்டு கத்தலா கத்தனத இந்தாளும் நிச்சயமா கேட்ருப்பாங்கறது இந்தாள் முகம் போற போக்க பாத்தால தெரியுதே..

‘அவர் சொல்றது ஒங்களுக்கு கேட்ருக்குமே?’

மாதவன் ஆமாம் என்பது போல் தலையை அசைத்தான்.

‘அப்போ ஃபோன் மாலுலருந்து வெளியில போயிருக்கு....ஒங்க நம்பர சொல்லுங்க... டயல் பண்ணி பாக்கலாம்...’

மாதவன் சொல்ல சொல்ல கோபால் டயல் செய்துவிட்டு காத்திருந்தார்.... check the number you have dialled... என்று வந்தது.....

கோபால் தன் எதிரில் அமர்ந்திருந்த மாதவனை எரிச்சலுடன் பார்த்தார். ‘என்னமோ switch off னு வந்துதுன்னு சொன்னீங்க?’

‘ஆமா சார்... அந்த மால் ஆள் கிட்டருந்து ஃபோன வாங்கி நாந்தான் டயல் பண்ணேன்.... இப்ப என்ன சொல்லுது சார்?’

‘அப்படி ஒரு நம்பரே இல்லேங்குது.... எடுத்தவன் சிம் கார்ட கழட்டினாத்தான் இப்படி பதில் வரும்...’

‘இருக்க முடியாது சார்... நா விட்டப்போ அது டெட் ஆகியிருந்தது... அந்த எரிச்சல்ல தான் ட்ராலிக்குள்ள போட்டேன்...’

‘சரி.. அது போவட்டும்.. ஒங்க ஃபோனோட IMIE நம்பர் தெரியுமா?’

மாதவன் திருதிருவென விழித்ததிலிருந்தே அது அவனிடம் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது... எழுந்து நின்றார்... ‘சரி.. நீங்க கிளம்புங்க... ஒங்க செல்லோட IMIE நம்பரோட சப்மிட் பண்ணாத்தான் புகாரையே ரிஜிஸ்டர் பண்ணிக்குவோம்... அது இல்லன்னா தலைகீழா நின்னாலும் ஒங்க ஃபோன ட்ரேஸ் பண்ணவே முடியாது... நீங்க போயி வீட்ல எங்கயாச்சும் எழுதி வச்சிருக்கீங்களான்னு பாருங்க... அப்புறமா வந்து கம்ப்ளெய்ண்ட் வாசல்லருக்கற ரைட்டர் கிட்ட குடுத்துட்டு போங்க...ஹூம்...’

மாதவனும் வேறு வழியின்றி எழுந்து நின்றான். அந்த நேரம் பார்த்து ஒரு காவலர் வந்து ‘சார் இந்த சிடிய டிஆர் மால் பையன் வந்து குடுத்துட்டு போனான் சார்...’ என்று ஒரு சிடியை நீட்ட கோபால் அதை வாங்கிக்கொண்டு மாதவனை பார்த்தார். ஒக்காருங்க என்று சைகை காட்டிவிட்டு மேசை மீதிருந்த தன் கணினியில் அதை இட்டு பார்த்தார்.

சற்று முன்னர் டிஆர் மாலின் மேலாளர் பார்த்த அதே காட்சிகள் திரையில் தெரிய....’இடியட்ஸ்... எத்தன தடவ சொன்னாலும் இந்த மால்காரங்க கேக்க மாட்டேங்கறானுங்களே... கடைக்குள்ள ஹெல்மெட், தொப்பி போட்டுக்கிட்டு வர விடாதீங்கன்னு எத்தன தடவ சொல்லியிருக்கோம்....’ என்று எரிச்சலுடன் பேசியவாறே மீண்டும் செல்பேசியை எடுத்து டயல் செய்தார்.

எதிர் முனையில் மால் மேலாளர் எடுத்ததும் ‘சார் எத்தன வாட்டி சொல்றது? இப்படி தொப்பியோடயோ இல்ல ஹெல்மெட்டோடயோ யாரையும் மாலுக்குள்ள அலவ் பண்ணாதீங்கன்னு.... இப்படி ஒரு சொத்த ஃபுட்டேஜ வச்சிக்கிட்டு நாங்க என்ன பண்றது’ என்று உரக்கவே இரைந்தார்.

‘நாங்க சொன்னாலும் கஸ்டமர்ஸ் கேக்க மாட்டேங்கறாங்க சார்..நீங்க ஒன்னு பண்ணுங்க...எனக்கு ரைட்டிங்ல ஒரு லெட்டர் அடிச்சி அனுப்புங்க... அத நாங்க கடை முழுசும் டிஸ்ப்ளே பண்ணிடறோம்.. இதுக்கு மேல எங்களால ஒன்னும் பண்ண முடியாது.. சாரி..’ என்றவாறு கோபாலின் பதிலுக்கு காத்திராமல் இணைப்பை துண்டிக்க... ‘சரியான அகராதி புடிச்சவன்...’என்றவாறு மாதவனை பார்த்தார். ‘இங்க வந்து பாருங்க... இந்தாள நேத்து பாத்த ஞாபகம் இருக்கா?’

மாதவன் எழுந்து உதவி ஆய்வாளரின் இருக்கைக்கு பின்னால் நின்று கணினி திரையை பார்த்தான். இவன் நம்ம பின்னால நின்னுக்கிட்டிருந்தவனாச்சே....’ஆமா சார்... இந்தாளு எனக்கு பின்னாலதான் நின்னுக்கிட்டிருந்தான்... என் ஃபோன கூட சூப்பரா இருக்கு என்ன மாடல்னு கேட்டான்... அப்ப இவன் கையிலதான் ஃபோன் இருக்கு போலருக்கு சார்..’``

‘இருந்து என்ன பண்ண? அவன் முகமே தெரியலையே... இதுக்குத்தான் படிச்சி படிச்சி சொல்றோம்... இந்த மாதிரி முகத்த மூடறா மாதிரி ஹெல்மெட்டோ தொப்பியோ போட்டுக்கிட்டு வர்றவங்கள உள்ள விடாதீங்கன்னு... கேட்டாத்தான?’

மாதவன் மீண்டும் தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தான்... இவன் முன்னாலதான் நாம ஃபோனையே ஓப்பன் பண்ணி சாமான்க லிஸ்ட்ட பாத்தோம்... ஒருவேள எண்ட்ரி கோட அடிச்சதையும் கவனிச்சிருப்பானோ.... தெரியலையே....

‘என்ன மாதவன்... என்ன யோசனை?’

இவர் கிட்ட சொல்லி இன்னும் வாங்கி கட்டிக்கவா? ஒன்றும் இல்லை என்பது போல் தலையை அசைத்தான்.

‘அந்தாள் சிம் கார்ட ரிமூவ் பண்ணதிலருந்து என்ன தெரியுது?’

இல்லை என்பது தலையை அசைத்தான் மாதவன்.

‘அந்தாள் ஒங்க ஃபோன ரீசார்ஜ் பண்ணி ஓப்பன் செஞ்சிருக்கான்.... ஃபோன தொறக்கறதுக்கு வெறும் ஸ்வைப் மட்டுந்தான் வச்சிருந்தீங்களா.. இல்ல பேட்டர்ன் ஏதாச்சும் இருக்கா?’ என்றவர் அவருடைய கேள்விகளுக்கு அவரே பதிலும் அளித்தார். ‘வச்சிருந்தாலும் அதல்லாம் இப்ப மேட்டரே இல்ல...அத தொறந்து குடுக்கறதுக்குன்னே நிறைய பேர் அலையறானுங்க....’

என்ன பதிலளிப்பது என தெரியாமல் அமர்ந்திருந்த மாதவனை கோபாலின் அடுத்த கேள்வி உரைய வைத்தது.

‘மூனு பேங்க்ல அக்கவுண்ட்ஸ் வச்சிருக்கேன்னு சொன்னீங்களே... சுமாரா எவ்வளவு பேலன்ஸ் வச்சிருப்பீங்க?

இந்தாள் கிட்ட சொல்லி என்ன ஆவப்போவுது? லட்சத்துக்கு மேலன்னு சொன்னா... நம்ம கிட்டருந்து எவ்வளவு கறக்கலாம்னு நினைப்பானோ... வேணாம்.... இவன் கிட்ட சொல்லி... நாள பின்னால விசாரணைன்னு சொல்லி வீடு வரைக்கும் வந்து ஷாமிலிக்கி ஃபோன் தொலைஞ்ச விஷயம் தெரிஞ்சா காலாகாலத்துக்கு அத சொல்லி சொல்லியே சாவடிப்பா....

‘என்ன கேல்குலேட் பண்றீங்களா?’

‘பெருசா ஒன்னும் இல்ல சார்... மினிமம் பேலன்ஸ்தான் மூனுலயும் இருக்கும்... மிஞ்சி போனா பத்து பதினஞ்சி..’ 

அந்த  பொய்யால் எத்தனை பெரிய இழப்பு தனக்கு ஏற்படவுள்ளது என்பதை அப்போது அவன் உணர்ந்திருக்கவில்லை... ‘டெபிட் கார்ட் இல்லாம அவனால வித்ட்றா பண்ண முடியாதே சார்..’

‘அதுவும் சரிதான்.... நீங்க போயி ஒங்க ஃபோனோட IMIE நம்பர் இருக்கான்னு பாருங்க... இல்லன்னா கம்ப்ளெய்ண்ட் குடுக்கறதுல எந்த யூசும் இல்ல... இதனால ஒங்களுக்கு ஃபோன் போச்சேங்கறத தவிர மானிடரியா பெரிய லாஸ் எதுவும் இல்லாததால.... அவனெ ட்ரேஸ் பண்றதுல பெருசா எதுவும் கிடைக்க போறதில்ல.... என்ன சொல்றீங்க?’

மாதவன் அப்போதே அங்கிருந்து போய் தன்னுடைய வங்கி கணக்குகளின் இருப்பை செக் செய்தால் தேவலை என்று தோன்றவே எழுந்து நின்றான்.. ‘சரி சார்.. தேடி பார்த்துட்டு வரேன்...’

அவன் வாசலை கடந்து மறையும் வரை காத்திருந்த கோபால்....’டூப் அடிக்கிறான்.. பேலன்ஸ் பெரிசா வச்சிருப்பான்னுதான் நினைக்கேன்... இல்லன்னா அவன் மூஞ்சி அப்படி பேயறைஞ்சா மாதிரி இருக்காது...எங்க நம்ம கிட்ட ஆக்சுவல் பேலன்ஸ சொன்னா எதையாச்சும் கேப்பமோன்னு நினைச்சிருப்பான்.... எப்படியோ தொலையட்டும்....’

அவருக்கு அருகில் நின்றிருந்த காவலர்கள் அவருடைய பேச்சுக்கு எப்படி பதிலளிப்பது என்பது தெரியாதது போல் அவரை பார்த்தனர்...

‘இந்தாள் அவன் ஃபோனோட IMIE நம்பர் இல்லாம வந்தா புகார வாங்க கூடாது... என்ன புரியுதா?’

சரி சார் என்பதுபோல் காவலர்களை தலையை அசைத்தனர்....’வெளீயில நேத்து வந்த அந்த குடும்ப தகராறு ஆளுங்க வந்துருக்காங்க சார்.’என்றார் ஒரு காவலர்.

‘சரி வரச்சொல்லு... காலையில யார் முகத்துல முளிச்சனோ அந்தாளோட ரெண்டு மணி நேரம் வேஸ்ட்டா போயிருச்சி.... முட்டா பசங்க.. படிச்சவனுங்களே இப்படி முட்டாத்தனமா இருந்தா என்னத்த செய்யிறது?’ என்று முனகியவாறே தன் இருக்கையில் சென்று அமர்ந்தார் கோபால்.

*************

காவல் நிலையத்தை விட்டு வெளியேறி சிறிது தூரம் சென்ற மாதவன் சாலையின் எதிர்புறத்தில் இருந்த வங்கி ஏடிஎம் அறைக்குள் நுழைந்து பர்சை எடுத்து ஒவ்வொரு டெபிட் கார்டையும் பயன்படுத்தி இருப்பை சோதிக்கலானான்....

ஆனால் அவன் இருந்த பதட்டத்தில் அவனிடமிருந்த எந்த டெபிட் கார்டுடைய பின் நம்பரும் சரியாக நினைவுக்கு வரவில்லை... முதல் இரண்டு முயற்சிகளும் தோல்வியில் முடிய மூன்றாவது முறையும் தவறாக அடித்தால் அந்த அட்டை அன்று முழுவதும் முடக்கப்பட்டுவிடும் என்பது அவனுக்கு தெரியும் என்பதால் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

அவனுடைய செல்பேசியில் சேமித்து  வைத்திருந்த கடவு எண்களின் கோப்பின் நகல் ஒன்றை மடிக்கணினியில் சேமித்து வைத்தது நினைவுக்கு வர ஏடிஎம் வாசலில் வேறு யாராவது காத்திருக்கிறார்களா என்று வாசல் கண்ணாடி வழியாக பார்த்தான்.

நல்ல வேளையாக யாரும் இல்லை. உடனே முதுகில் மாட்டியிருந்த பையில் இருந்த மடிக்கணினியை எடுத்து ஆன் செய்து தன்னை ஒரு நிமிடம் நிதானப்படுத்திக்கொண்டு தேடினான்... ஐந்தாறு நிமிடங்களுக்குப் பிறகு அந்த கோப்பைக் கண்டுபிடிக்க முடிந்தது.

பிறகு ஒவ்வொரு அட்டையையும் பயன்படுத்தி சோதிக்க துவங்கினான். முதல் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பது தெரியவே பதட்டத்துடன் தன் கையில் மீதமிருந்த கார்டுகளையும் பயன்படுத்தி சோதனை செய்தான். இறுதியில் அவனுடைய மூன்று வங்கி கணக்குகளிலிருந்து மொத்தமாக எழுபத்தையாயிரம் எடுக்கப்படிருப்பதை பார்த்து அதிர்ந்தே போனான்..... அடப்பாவி.... காலையிலயே செக் பண்ணணும்னு தோனாம போச்சே....  நாம வேற மினிமம் பேலன்ஸ்தான் இருக்கும்னு சொல்லிட்டமே... இப்ப மறுபடியும் போலீஸ்ல போயி சொன்னா நம்புவாங்களா?

அதுவுமில்லாமல் டெபிட் கார்ட் இல்லாம எப்படி பணத்த எடுத்திருப்பான்? பேங்க் டு பேங்க் டிரான்ஸ்ஃபர் பண்ணியிருப்பானோ என்று நினைத்தவனுக்கு தன் செல்பேசியில் வங்கிகளின் மொபைல் பேங்கிங் ஆப்கள் இட்டு வைத்திருந்தது நினைவுக்கு வந்தது. எடுத்தவன் படா கேடியா இருப்பான் போலருக்கே.... எந்த பேங்குக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருப்பான்..? இத எப்படி கண்டுபிடிக்கிறது? நெட் பேங்கிங் வழியா கண்டுபிடிச்சிறலாமே? ஆனா அதுக்கு நெட் கனெக்‌ஷன் வேணுமே?

அவனுடைய கணினியில் இணைய வசதி இல்லை... தன் செல்பேசியிலுள்ள இணைப்பை கணினியுடன் ஷேர் செய்துதான் இணையத்தை வலம் வருவான்.  அந்த செல்பேசி இல்லாத சூழலில் அலுவலகத்திற்கு சென்றால்தான் அது சாத்தியமாகும்... அப்படியே கண்டுபிடிச்சாலும்  போலீஸ் ஹெல்ப் இல்லாம அவனெ எப்படி புடிக்க முடியும்? நாம போய் கேட்டாலும் அந்த பேங்க் ஆளுங்க ஒரு இன்ஃபோவும் குடுக்க மாட்டானுங்களே....

கடவுளே எதுக்கு இந்த சோதனை எனக்கு? ரெண்டு லட்சமா சேர்ந்ததும் மொத்தமா ஊருக்கு அனுப்பி கல்யாண கடன அடைச்சிருங்கம்மான்னு சொல்லலாம்னு நினைச்சமே இப்படி அம்போன்னு பாதிய பறிகுடுத்துட்டு நிக்கறமே... இது மட்டும் ஷாமிலிக்கு தெரிஞ்சா என்ன ஆவறது....?

மேற்கொண்டு என்ன செய்வது என்பது தெரியாமல் அங்கேயே சிலையாய் நின்றான் மாதவன்...

டாக்டர் கிட்டயும் வக்கீல் கிட்டயும் பொய் சொல்லக் கூடாதுன்னு சொல்வாங்களே? அதுல போலீஸ்கிட்டயும் பொய் சொல்லக் கூடாதுன்னு சேத்துக்கணும் போல ....

அவன் காவல் ஆய்வாளரிடம் உண்மையை கூறியிருந்தால் எந்த கணக்குக்கு தொகை மாற்றப்பட்டிருந்தததோ அந்த கணக்கு விவரத்தை வைத்தே கள்வனை பிடித்திருக்கலாம்... எடுத்தவனுடைய தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தாலும் அவனுடைய புகைப்படம் நிச்சயம் அதிலிருந்து கிடைத்திருக்கும். .அதை வைத்தே சிறிது காலதாமதமானாலும் அவனை பிடித்திருக்கலாம்.

ஆனால் மாதவனுக்கு பணம் களவு போனதை விடவும் எங்கே அது தன் மனைவிக்கு தெரிந்துவிடுமோ என்கிற அச்சமே அதிகமாய் வாட்டி எடுத்ததால்...

போனது போட்டும்... சம்பாதிச்சிக்கலாம்... ஆனா ஷாமிலிக்கி மட்டும் தெரிஞ்சா நம்ம நிம்மதியே போயிரும்.... வாழ்நாள் முழுசும் இத சொல்லியே டார்ச்சர் பண்ணிருவா... வேணாம்... இது நமக்குள்ளவே இருக்கட்டும்..... எல்லாம் என் தலையெழுத்து என்று தன்னையே நொந்தவாறு சாலையில் இறங்கி நடந்தான் மாதவன்...

விநாச காலே விபரீத புத்தி அதாவது விதி  கெட்டுப்போனால் மதி கெட்டுப் போகும் என்பார்கள். மாதவனின் விஷயத்தில் அது உண்மையாகிப்போனது.

நிறைவு...

இந்த சிறுகதையின் முடிவுரை நாளை...

13 கருத்துகள்:

  1. போலீஸிடமும் உண்மையை மறைக்ககூடாதோ... ஹா.. ஹா...

    கொலை செய்தவன் போலீஸிடம் உண்மையை சொன்னால் மாட்டி விடுவானே... ஹி.. ஹி..

    தொடர்கிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொலை செய்தவன் போலீஸிடம் உண்மையை சொன்னால் மாட்டி விடுவானே... //
      வாங்க ஜி!
      நான் சொல்றது புகார் கொடுக்க போறவங்களுக்கு..

      நீக்கு
  2. // இந்தாள் கிட்ட சொல்லி என்ன ஆவப்போவுது? லட்சத்துக்கு மேலன்னு சொன்னா... நம்ம கிட்டருந்து எவ்வளவு கறக்கலாம்னு நினைப்பானோ...//

    என மாதவன் நினைத்தது சரிதான். யதார்த்த நிலை அதுதான். ஆனாலும் கணக்கில் பெரிய தொகை இருப்பில் இருக்கும்போது உண்மையை சொல்லியிருக்கவேண்டும.

    சிலசமயம் மனம் குழப்பத்தில் இருக்கும்போது இதுபோல் நடக்க வாய்ப்புண்டு. மாதவனின் கவனக்குறைவால் பணத்தை இழந்திருக்கிறார். அதை ‘புத்தி கொள்முதல்’ என எடுத்துக் கொள்ளவேண்டியதுதான்.

    முடிவுரைக்கு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலசமயம் மனம் குழப்பத்தில் இருக்கும்போது இதுபோல் நடக்க வாய்ப்புண்டு//

      அதுதான் மாதவன் விஷயத்தில் நடந்தது. மேலும் இன்றிருக்கும் காவல்துறை அதிகாரிகளில் யார் நல்லவர் அல்லது கெட்டவர் என்பதும் நமக்கு தெரிவதில்லையே. கறக்கற மாட்ட கறந்துறலாம்னு நினைக்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்!

      நீக்கு
    2. உங்கள் வரவுக்கும கருத்துரை க்கும் மிக்க நன்றி சார்.

      நீக்கு
  3. ரவிக்குஉடம்பு பூரா மச்சம்!  அவன் காட்டில் மழை.  நாம் சொல்வோம், இது மாதிரி சம்பாதிக்கும் பணம் நிலைக்காது, அவனுக்கு கடவுள் தண்டனை கொடுப்பார் என...    இது மாதிரி ஆட்கள் நன்றாகவேதான் இருக்கிறார்கள்.  அநியாயம்.  கொடுமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது மாதிரி சம்பாதிக்கும் பணம் நிலைக்காது, அவனுக்கு கடவுள் தண்டனை கொடுப்பார்//

      என்று நானும் நம்புகிறேன்.

      நீக்கு
  4. அலைபேசியில் இத்தனையையும் சேமித்து வைத்திருக்கிறோம் என்று நமக்கே தெரியும்போது முதல் வேலையாக வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்திருக்க வேண்டும்.  மாதவனின் அலட்சியம்.  
    கோபத்தில் போனைத் தூக்கி எறியும் ஓரிருவரை எனக்குத் தெரியும்.  அவர்கள் கோபம் அவர்களுக்கு எதிரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இத்தனையையும் சேமித்து வைத்திருக்கிறோம் என்று நமக்கே தெரியும்போது முதல் வேலையாக வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்திருக்க வேண்டும்//

      இதற்கு பின்னுரையில் விரிவாகப் பதிலளித்துள்ளேன்.

      நீக்கு
  5. நல்லவேளை நான் அலைபேசியில்பரிவர்தனை எதுவும் செய்வதில்லை.  ஆனாலும் அந்த IMIE  நம்பரைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
  6. ஆனாலும் அந்த IMIE நம்பரைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன்!/

    ஆமாம். எப்படி எங்கு சேமித்து வைக்கலாம் என்பதை பின்னுரையில் கூறியுள்ளேன்.
    உங்களுடைய வருகைக்கும்
    ஒன்றுக்கு மூன்று கருத்துரைகளை இட்டதற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  7. எவ்வளவு பெரிய இக்கட்டில் மாட்டிக் கொண்டான் மாதவன்.
    இந்த ஊரில் எல்லாமே அலைபேசி வழியாகத் தான்.
    ஏன் கடைக்குப் போய் வாங்குவதில் என்ன பெரிய கஷ்டம் என்று யோசிப்பேன்.

    எனக்கு சம்மதமே இல்லை.
    அருமையாக விளக்கி இருக்கிறீர்கள் ஜோசஃப் சார்.
    மிக மிக நன்றி.
    எனக்கு வாட்ஸாப் மட்டும் போதும் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  8. ஏன் கடைக்குப் போய் வாங்குவதில் என்ன பெரிய கஷ்டம் என்று யோசிப்பேன். //

    நான் லோக்கல் கடையில் கிடொக்காத பொருட்களை மட்டுமே ஆன்லைனில் வாங்குவேன்.

    மற்றபடி பெரும்பாலான வங்கி பரிவர்த்தனைகள், செல்பேசி மற்றும் கடன் அட்டை தொகை, மின் கட்டணம் போன்றவைகளும் வங்கி ஆப்கள் வழிதான். துவக்கத்தில் சற்று சிரமமாக இருந்தாலும் இப்போது பழகிவிட்டது.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    பதிலளிநீக்கு