‘சார்... நீங்க சொல்றா மாதிரி இங்க எதுவும் ஃபோன் கிடைக்கல சார்... நீங்க வேணா மேனேஜர் வர்ற வரைக்கும் வெய்ட் பண்ணி பாருங்க... அவர் நினைச்சா எங்க ஆளுங்க எல்லாரையும் கூப்ட்டு விசாரிப்பார்...’ என்றான் டிஆர் மால் கடை ஊழியர்.
‘அவர் எப்ப வருவார்?’ என்றான் மாதவன் எரிச்சலுடன்.
‘பத்து மணி ஆயிரும் சார்... எதுக்கும் நீங்க போய்ட்டு பத்து பத்தே காலுக்கு வந்து பாருங்க.’ கவுண்டரில் நின்றிருந்தவன் தன்னுடைய அலுவலை கவனிக்க துவங்கினான். மாதவன் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று சிந்திக்கலானான். அதுக்குள்ள போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய்ட்டு வந்துறலாமா?
‘இந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷன் எங்க இருக்குன்னு தெரியுமா?’ என்றான் சற்று முன் தன்னிடம் பேசியவனிடம்.
‘இப்படியே நேரா போயி ரைட்ல திரும்பி கேளுங்க.. சொல்வாங்க.’
அதற்குள் மாதவனின் மனது இது வேணுமா என்றது... போலீஸ் ஸ்டேஷனுக்கு போனா உடனே எதுவும் ஆகப்போறதில்ல... இந்த மேனேஜரே பத்து மணிக்குத்தான் வருவான்னா... அங்க இன்ஸ்பெக்டர் நிச்சயம் அதுக்கப்புறம்தான் வரப்போறார்... எதுக்கும் வெய்ட் பண்ணி இவர பாத்துட்டே அங்க போவோம்... ஒருவேளை ஃபோன கடை ஆள் யாராச்சும் எடுத்து மேனேஜர் கிட்ட குடுத்திருந்தா போலீசுக்கு போறத அவாய்ட் பண்லாமே.... அங்க போயி தேவையில்லாம அவனுங்க கேக்கற அடாவடி கேள்விக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்க வேணாமே...
சட்டென்று நினைவுக்கு வந்தவனாய்... கவுண்டரை நெருங்கி ‘ஒங்க ஃபோன்லருந்து என் செல்ஃபோனுக்கு டயல் பண்ண முடியுமா?’ என்றான்...
கவுண்டரில் நின்றிருந்தவன் எரிச்சலுடன் பார்த்தான். ‘இந்தாங்க நீங்களே டயல் பண்ணுங்க....’
மாதவன் பதட்டத்துடன் அதை வாங்கி அவசர அவசரமாக டயல செய்தான். ‘Switched off' என்று பதில் வந்ததும் நிம்மதியுடன் திருப்பிக் கொடுத்தான். ’நா இங்க விட்டுட்டு போனப்போ ஆஃபாயிருந்தா மாதிரியேத்தான் இப்பவும் இருக்கு.... அதனால இங்க எங்கயோதான் அது கெடக்கணும்... நா வேணா தேடி பாக்கலாமா?’
‘எங்கன்னு சார் பார்ப்பீங்க? மொத்தம் இருபதினாயிரம் சதுர அடி ஏரியா இது... வொர்க்கர்ஸ் எல்லாம் சாமான்கள அடுக்கிக்கிட்டு இருக்கற நேரம் வேற... இங்க இருந்துருந்தா காலையில க்ளீன் பண்ண ஹவுஸ் கீப்பிங் ஆளுங்க கையில கிடைக்காம இருந்துருக்காது... அவங்க எடுத்தாலும் ஒன்னும் செஞ்சிக்க முடியாது... ஏன்னா எல்லா ஏரியாவும் கேமரா கவரேஜ் இருக்கு....’
மாதவன் உடனே, ‘அப்படீன்னா நேத்து ஃபோன் விழுந்ததையும் ஏதாச்சும் ஒரு கேமரா கேப்சர் பண்ணியிருக்கலாம் இல்ல? அத பாக்க முடியுமா?; என்றான்.
‘அதுக்கு மேனேஜர் வரணும்... ஒன்னு வெளியில வெய்ட் பண்ணுங்க... இல்லன்னா போய்ட்டு அப்புறமா வாங்க...’ பணியாள் கோபத்துடன் தன் இருக்கைக்கு திரும்பிச் செல்ல மாதவன் வேறு வழியின்றி கடையிலிருந்து வெளியேறினான்.
********
ரவி மால் இயங்கிவந்த பகுதியை அடைந்தபோது பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் மிகவும் குறைவாக இருந்ததை கவனித்தான். ஆனாலும் அங்கு வாகனத்தை நிறுத்தாமல் மாலை ஒட்டியிருந்த சாலையில் திரும்பி வாகனத்தை நிறுத்தினான். அது ஒரு வர்த்தக பகுதியாக இருந்ததாலும் காலை பத்து மணிக்கு மேல்தான் பல கடைகளும் திறக்கப்படுவது வழக்கம் என்பதாலும் பல கடைகள் மூடிக்கிடந்தது அவனுக்கு வசதியாகப் போய்விட்டது. சாலையிலும் அவ்வளவாக ஆள்நடமாட்டாம் இல்லை. கண்காணிப்பு கேமராக்கள் ஏதும் உள்ளனவா என்று சாலையின் இருதிசையிலும் பார்வையை செலுத்தினான். ஓரிரண்டு கடைகளைத் தவிர மற்ற எவற்றிலும் காமரா பொருத்தபடாமலிருந்ததை கவனித்தான்.
காமரா பொருத்தப்படாமலிருந்த கடைகளில் ஒன்றின் படிகட்டுகளில் அமர்ந்து மாதவனின் செல்பேசியை எடுத்து ஆன் செய்தான். அவன் என்ன செய்ய போகிறான் என்பதை அறிந்த அவனுடைய மனது மீண்டும் அவனை எச்சரித்தது.
எதுக்கும் இன்னொரு தரம் யோசி.... நீ எந்த அக்கவுண்ட்டுக்கு மாத்தறியோ அதுல ஒன்னோட அட்றஸ் மட்டுமில்லாம ஒன்னோட செல்ஃபோன் நம்பரும் இருக்கும்.. வீட்ட மாத்திட்டே சரி.... ஃபோன் நம்பர என்ன பண்ணுவே...? யூஸ் பண்ணாம இருக்க முடியுமா ஒன்னால? அத வச்சே ஒன்னெ போலீஸ் புடிச்சிருவாங்களே? என்று குடைந்த மனதை அடக்கினான். ‘என் செல்போன யூஸ் பன்னாத்தான? அதான் ராஜி போறப்போ ஒன் ஃபோன நீயே வச்சிக்கோன்னு எறிஞ்சிட்டு போய்ட்டாளே? கொஞ்ச நாளைக்கி அத யூஸ் பண்ணிக்குவோம்... எத்தன நாளைக்கி போலீஸ் தேடுவாங்க? மிஞ்சிப் போனா மூனு நாலு மாசம்... அதுக்கப்புறம் வேற கேஸ்ல அவங்க கவனம் போயிரும்..
தவறு செய்ய வேண்டும் என்று துணிந்தவர்கள் அதை நியாயப்படுத்த எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் என்பது ரவியின் விஷயத்தில் உண்மையானது.
குடைந்ததெடுத்த மனசாட்சியை பொருட்படுத்தாமல் முந்தைய தினம் அவன் செய்ய நினைத்திருந்த காரியத்தில் முனைப்பாக இறங்கினான்.
அவன் நினைத்ததை செய்து முடிக்க சரியாக இருபது நிம்டங்கள் எடுத்தன. முந்தைய நாள் இரவில் அவனுடைய கணக்கு விவரத்தை பதிவு செய்துக்கொள்ள மறுத்த வங்கிகள் இப்போது எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் செய்துக்கொள்ள அனுமதித்தன.
IMPS (Immediate Payment Service)முறையில் பணத்தை அவனுடைய கணக்குகளுக்கு மாற்றினான். அடுத்த அரை மணி நேரத்தில் மூன்று வங்கிகளிலிருந்தும் எழுபத்தையாயிரம் ரூபாய் வந்து சேர்ந்தது.
இத உடனே வித்ட்றா பண்ணணும்.... அது இந்த ஏரியாவுல வேணாம்... ஒருவேளை கேமராவுல நம்ம மொகம் தெரிஞ்சி அத வச்சி அக்கம்பக்கத்துல விசாரிச்சா எவனா ஒருத்தன் நம்ம ஹைட்ட (height) வச்சே அடையாளம் சொல்லிறுவான்... கொஞ்ச தூரம் போய் பாக்கலாம்..
***********
ஏறத்தாழ அதே நேரத்தில் மாலுக்குள் மீண்டும் நுழைந்த மாதவன் ‘மேனேஜர் வந்துட்டாருங்களா?’ என்றான் அவனை எதிர்கொண்ட முதல் பணியாளிடம்..
‘இப்பத்தான் வந்தார்.... ஆனா மால் முழுசும் ரவுண்ட்ஸ் போய்ட்டு பத்தரைக்கு மேலத்தான் கேபினுக்கு வருவார்... நீங்க வேணும்னா அஞ்சாவது மாடியில போய் வெய்ட் பண்ணுங்க...’
மாதவன் மணியை பார்த்தான். மணி பத்தரை ஆகியிருந்தது... என்ன ஆளுங்கடா.. என்று சலித்துக்கொண்டான்... வேறு வழியின்றி ஐந்தாவது மாடியை அடைந்து அங்கு அமர்ந்திருந்த பெண்ணிடம் மேனேஜரை பார்க்க வேண்டும் என்றான்...
‘ரவுண்ட்ஸ் போயிருக்காரு... வெய்ட் பண்ணுங்க..’
மாதவன் முனகியவாறே அங்கிருந்த இருக்கைகள் ஒன்றில் அமர்ந்து காத்திருந்தான்.
****
ரவி அங்கிருந்து கிளம்பி பத்து நிமிட தூரம் சென்றதும் மாதவன் கணக்கு வைத்திருந்த வங்கி ஏடிஎம்களை கண்டதும்.. இங்கயே நம்ம வேலைய முடிச்சிறலாம்... ஆனா ஒரு டைம்ல பத்தாயிரத்துக்கு மேல எடுக்க முடியாது போலருக்கே....எதுக்கும் ட்ரை பண்ணி பாக்கலாம்..
அவ்ன் நினைத்தது போலவே ஒரு தவணையில் பத்தாயிரம்தான் எடுக்க முடிந்தது. ஆனாலும் இரண்டு வங்கிகளிலும் இருந்து ஒரு நாளுக்கு தலா முப்பதாயிரம் வரையிலும் எடுக்க முடியும் என்பது அவனுக்கு தெரியும். அந்த வங்கியின் ஏடிஎம்மில் அவனைத் தவிர வேறு யாரும் காத்திருக்காததும் அவனுக்கு வசதியாகப் போனது. சலிப்படையாமல், பதட்டப்படாமல் ஆறு முறை இரண்டு வங்கிகளின் டெபிட் கார்டுகளையும் பயன்படுத்தி அறுபதாயிரத்தை எடுத்துக்கொண்டான். அவன் எடுத்த தொகையின் பெரும் பகுதி இரண்டாயிரம் நோட்டுகளாகவே இருந்ததைக் கண்டதும் ‘வசதியா போயிருச்சி...’ என்று நினைத்தான்.. .
நல்ல வேளை, ஆளுங்க வர்றதுக்குள்ள நாம வேலைய முடிச்சிட்டோம் என்று எண்ணியவாறே தலையில் அணிந்திருந்த தொப்பியை முகம் மறையும் வரையிலும் இழுத்துவிட்டுக்கொண்டு விரைந்து சென்று வாகனத்தில் ஏறி அங்கிருந்து அகன்றான்....
வேறு எங்கும் நிற்காமல் மேன்ஷனை அடைந்து அறையிலிருந்த தன்னுடைய பொருட்களில் ஒரேயொரு கைப்பையை மட்டும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான். வாகன சாவியை சுவரில் இருந்த ஆணியில் தொங்கவிட்டான். ‘ரிசெப்ஷன்ல குடுக்க வேணாம்... மோகன் வர்றப்ப இத பாத்து எடுத்துக்குவான்.’
நல்ல வேளையாக அவன் வாசலுக்கு வரும்போது ரிசப்ஷனில் யாரும் இல்லை.
ரவி சாலையில் இறங்கி சிறிது தூரம் நடந்து சென்று மாநகர பேருந்து நிறுத்ததில் காத்திருந்தான். இங்கருந்து ஆட்டோவுல போனா நாம எங்க போறோம்கறத போலீஸ் ஈசியா தெரிஞ்சிக்க வாய்ப்பிருக்கே...
தன்னால் முடிந்தவரை தன்னை பின்னால் காவல்துறை ட்ரேஸ் செய்ய முடியாமல் செய்துவிட்டோம் என்ற திருப்தியில் அடுத்த சில நிமிடங்களில் வந்து நின்ற பேருந்தில் ஏறினான்.
எங்கு செல்வது என்ற எவ்வித இலக்கும் இல்லாமல் துவங்கியது அவனுடைய பயணம்....
*******
‘சார் உங்கள மேனேஜர் வரச்சொன்னார்’
மாதவன் உடனே எழுந்து எதிரிலிருந்த மேலாளர் அறைக்குள் நுழைந்தான்.
‘என்ன விஷயமா என்னெ பாக்கணும்னு சொன்னீங்க?’ என்ற மேலாளரிடம் தான் வந்த விவரத்தை பதட்டத்துடன் சொல்லி முடித்தான்.
‘அப்போ எத்தன மணி இருக்கும்?’
‘ராத்திரி ஒன்பது மணி இருக்கும் சார்.’
‘சரி நா எதுக்கும் வொர்க்கர்ஸ் கிட்ட விசாரிச்சி வைக்கிறேன்... நீங்க எதுக்கும் போலீஸ்ல ஒரு கம்ப்ளெய்ண்ட் குடுத்துருங்க.’
மாதவனுக்கு எரிச்சல் வந்தது. ‘சார் ஒங்க கடையில இருக்கற சிசிடிவி ஃபுட்டேஜ பார்த்தா யாராச்சும் எடுத்திருந்தாலும் தெரியுமில்ல?’
மேலாளர் அவனுக்கு பதிலளிக்காமல் எழுந்து நின்றார். ‘அத நாங்க பாத்துக்கறோம்... நீங்க போலீஸ்ல கம்ப்ளெட்ண்ட் குடுக்கறதுதான் பெட்டர்... அவங்க வந்து விசாரிக்கறப்போ வீடீயோ ஃபுட்டேஜ காட்டிக்கறோம்.. வேணும்னா நீங்க ஒரு கம்ப்ளெய்ண்ட் எழுதி வெளியில இருக்கற வொர்க்கர் குடுத்துட்டு போங்க...’
அவனுடைய பதிலுக்கு காத்திராமல் அவர் அறையை விட்டு வெளியேற வேறு வழியின்றி மாதவனும் எழுந்து வெளியில் வந்து அங்கு அமர்ந்திருந்த பணியாளிடமே ஒரு வெள்ளைத்தாளை பெற்று ஒரு புகாரை எழுதிக்கொடுத்துவிட்டு வெளியேறினான்.
******
அவன் மின்தூக்கியில் ஏறி மறைந்ததும் மால் மேலாளர் கண்காணிப்பு கேமாரா திரைகள் மேற்பார்வையிடும் அறைக்குள் நுழைய அங்கு பணியில் இருக்க வேண்டியவர்கள் இருக்கையில் இல்லாமல் இருப்பதை கவனித்ததும் எரிச்சலுடன் வெளியில் வந்து, ‘ஏன் இங்க யாரும் இல்ல?; என்று உரக்க கத்தினார்.
அடுத்த சில நொடிகளில் ஒரு அறையில் இருந்து இரண்டு பணியாட்கள் ஓடி வந்தனர்... ‘பாத்ரூம் போயிருந்தோம் சார்...’
‘ரெண்டு பேருக்கும் ஒன்னாவா வரும்?’ என்று எரிந்து விழுந்தார் ‘ எப்பவும் ஸ்க்ரீன் முன்னால ஒரு ஆளாவது இருக்கணும்னு சொல்லியிருக்கேன்ல?’
’சாரி சார்....’
‘இத சொல்லி சொல்லி கடுப்பேத்தாதீங்க போய் வேலைய பாருங்க... இன்னொரு தரம் இந்த மாதிரி நடந்துது.....’ என்றவாறு மீண்டும் காமரா திரைகள் இருந்த அறைக்குள் நுழைந்த மேலாளர்.... ‘நேத்து க்ரவுண்ட் ஃப்ளோர்ல ரிக்கார்ட் பண்ண சிடிய எடுத்துக்கிட்டு என் ரூமுக்கு ஒரு ஆள் வாங்க....’
பணியாள் ஒருவர் தயக்கத்துடன் அவரை பார்த்தான்..’டைம் ஸ்லாட் ஏதாச்சும் இருக்கா இல்ல ஃபுல்லா வேணுமா சார்?’
‘ராத்திரி ஒன்பது மணியிலருந்து கடை மூடற வரைக்கும் போதும்... க்விக்.’ அவர் வெளியேறி தன் அறையை நோக்கி சென்றார்.
‘என்னடா காலையிலயே மிலிட்டரி இந்த கத்து கத்துது?’ என்றவாறே இருவரில் ஒருவன் முந்தையை தினம் ரெக்கார்ட் செய்து சேமித்து வைக்கப்பட்டிருந்த சிடிக்கள் இருந்த ட்ராயரை திறக்க அடுத்தவன் சிரித்தவாறே ‘தெரியலையே’ என்றான்.
அந்த மாலில் இருந்தவர்கள் மேலாளரின் கண்டிப்பானவர் என்பதால் மிலிட்டரி என்று பெயர் வைத்திருந்தார்கள்.
*******
பணியாள் கொண்டு வந்து கொடுத்த சிடியை தன் கணினியில் இட்டு ஆய்வு செய்த மேலாளர் சற்று முன்பு தன்னிடம் புகார் அளிக்க வந்தவர் தெரிகிறாரா என்று பார்த்தார்.
வாசலில் இருந்து ஒவ்வொரு பகுதியாக நகர்ந்தவர் பால், தயிர் இருந்த பகுதியில் மாதவனைப் போன்ற ஒரு உருவத்தைக் கண்டதும் ஜூம் செய்து பார்த்தார். ‘இந்த ஆள்தான்...’
மாதவன் தன் செல்பேசியை ஆன் செய்வதும் அதை தொடர்ந்து தன் அருகில் நின்றிருந்தவரிடம் உரையாடுவதும் பிறகு அங்கிருந்து நகர்ந்து அடுத்திருந்த மளிகை பொருட்கள் பகுதிக்குள் நுழைவதும் அங்கு தன்னுடைய செல்பேசியை ட்ராலிக்குள் எறிவதும் தெரிந்தது...
கேமராவை மீண்டும் ஜூம் செய்து பார்த்தார். மாதவன் வீசி எறிந்த செல்பேசி ட்ராலியின் அடியில் இருந்த ஒட்டை வழியாக தரையில் விழுவதும் தெரிந்தது. ஆனால் அதை யாரும் எடுக்கவில்லை என்பதையும் கவனித்தார்.
இந்த ஓட்ட ட்ராலிய மாத்துங்கடான்னு எத்தன தரம் அந்த சூப்பர்வைசர் கிட்ட சொல்லியிருக்கேன்.... ?அப்பவே மாத்தியிருநதா இப்போ இது விழுந்திருக்குமா? போலீஸ் வந்து ஏங்க முழுசா ஒரு செல்ஃபோன் கீழ விழற அளவு ஓட்டையா ட்ராலியில இருக்கும்னு கேட்டா நா என்ன பதில் சொல்றது? இவனுங்கள கட்டி மேய்க்க முடியலடா சாமி என்று நொந்தவாறே திரையில் தன்னுடைய பார்வையை தொடர்ந்தார்....
அடுத்த சில நொடிகளில் இரண்டு அல்லது மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று தரையில் கிடந்த செல்பேசியை எடுத்து அருகில் வைக்கப்பட்டிருந்த கூடையில் போடுவது தெரிந்தது... அடுத்து என்ன நடக்கிறது என்பதை கவனித்துக்கொண்டிருந்த மேலாளர் அந்த கூடையில் மீண்டும் சில பொஎருட்கள் வைக்கப்படுவதையும் அத்துடன் சேர்த்து தலையில் தொப்பி அணிந்திருந்த ஒருவர் அந்த கூடையுடன் அங்கிருந்து நகர்வதையும் கவனித்தார்.
அந்த மனிதரின் முகத்தை பார்க்கும் நோக்கத்துடன் காமராவை ஜூம் செய்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.... திரையை அடைத்துக்கொண்டு அந்த மனிதரின் தலையில் அணிந்திருந்த தொப்பி மட்டுமே தெரியவே எரிச்சலுடன் தன் காலடியில் இருந்த அழைப்பு மணியை அழுத்தினார். அவர் அழுத்திய வேகத்தில் அது அபாய மணி போல் அடித்து அந்த தளம் முழுவதும் ஒலிக்க அடுத்த நொடியே நான்கைந்து பணியாட்கள் அவருடைய அறைக்குள் நுழைந்தனர்.
‘இண்டர் காம்ல கூப்ட்டு க்ரவுண்ட் ஃப்ளோர் சூப்பர்வைசர வரச்சொல்லு....க்விக்.’
அவருடைய குரலிலிருந்த வேகம் அனைவரையும் தொற்றிக்கொள்ள அதில் ஒருவர் வராந்தாவிலிருந்த உள் தொலைபேசியில் விவரத்தை கூற அடுத்த சில நிமிடங்களில் தரைதளத்திற்கு பொறுப்பிலிருந்த சூப்பர்வைசர் மேலாளர் அறைக்குள் நுழைந்தார்.
‘நேத்து ராத்திரி ஒம்பது மணிக்கு நீங்க ட்யூட்டில இல்லையா:’
‘இருந்தேனே சார்.’
மேலாளர் ஜூம் செய்யப்பட்டிருந்த திரையை காட்டினார். ‘அப்ப இது என்ன? நம்ம மாலுக்குள்ள ஹெல்மெட்டோ இல்ல இந்த மாதிரி முகத்த மூடுறா மாதிரியான தொப்பியோ யாராச்சும் போட்டுக்கிட்டு வந்தா அத ரிமூவ் பண்ன சொல்லணும்னு சொல்லியிருக்கேன்ல?’
‘ஆமா சார்.... ஆனா?’
‘என்ன ஆனா?’
‘நிறைய கஸ்டமர்ஸ் சொன்னாலும் எடுக்க மாட்டேங்கறாங்க சார்... சண்டைக்கி வராங்க... எங்களால திருப்பி ஒன்னும் சொல்ல முடியறதுல்ல...
‘ஒடனே எங்கிட்ட சொல்ல வேண்டியதுதானையா? இப்ப போலீஸ் வந்து கேட்டா இத எப்படி காட்றது?’
‘போலீசா...? எதுக்கு சார்? ஏதாச்சும் பிரச்சினையா?’
‘ஆமாய்யா.... இப்பத்தான் ஒரு ஆள் வந்து என் செல்ஃபோன இங்கதான் விட்டுட்டு போனேன்னு கம்ப்ளெய்ண்ட் குடுத்திட்டு போயிருக்கார்... இந்த தொப்பிக்காரன் கூடையிலதான் அந்த ஃபோன் விழுந்திருக்கு... இவன் தான் அத எடுத்துக்கிட்டு போயிருக்கணும்... அவன ஐடி(ID) பண்லாம்னு பாத்தா முகமே தெரியல... போலீஸ் வந்து இத பாத்தா காறி துப்ப மாட்டாங்க?’
சூப்பர்வைசர் முந்தைய நாள் இரவு ஒரு வாடிக்கையாளர் கூடையிலிருந்து கவுண்டரில் இருந்த ஒரு வொர்க்கர் ஒரு செல்பேசியை எடுத்து அந்த கூடையை வைத்திருந்த வாடிக்கையாளரிடம் கொடுத்ததை நினைவு கூர்ந்தார்.... அந்த ஆளும் தலையில தொப்பி போட்டுருந்தா மாதிரிதான் இருந்தது.... ஆனா அத இவர் கிட்ட சொல்ல போயி..... இவர் போலீசுக்கிட்ட சொல்லி... அந்த ஆள அடையாளம் காட்ட ஸ்டேஷனுக்கு வான்னு கண்ட நேரத்துலயும் இழுத்தடிச்சா என்னாவறது......? ஒன்னும் தெரியாத மாதிரி இருந்துருவோம்....
‘என்ன சைலண்டாய்ட்டீங்க..?’
‘இனிமே ஸ்ட்ரிக்டா சொல்லிடறேன் சார்...’ என்று பதிலளித்தான் சூப்பர்வைசர்.
‘இனிமே சரி... நேத்து ஏன் இத கவனிக்கல? அதுக்கு என்ன பதில்?’
‘அந்த நேரத்துல கடையில நல்ல கூட்டம் சார்.... கவுண்டர் கிட்டவே நிக்க வேண்டியதா போச்சி... அதான்....’
‘எதையாச்சும் சொல்லி சமாளிக்கறதுல இருக்கற புத்திசாலித்தானம் வேலையில இருக்கணுமில்ல? சரி சரி போயி வேலைய பாருங்க...’
அவர் அவசர அவசரமாக அறையிலிருந்து வெளியேற திரையில் தெரிந்த மனிதர் வேறு பகுதிக்கு எங்காவது சென்றிருந்தாரா என்று கவனித்தார். மேற்பார்வையாளர் கூறியிருந்ததுபோல முந்தைய நாள் இரவு கடை மூடும் சமயம் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததை பார்க்க முடிந்தது.... கவுண்டர் ஏரியாவுல இன்னும் ரெண்டு மூனு காமரா வைக்கணும் போலருக்கு... பத்து கவுண்டருக்கு மூனு காமரா போதாது.... காமராவின் அருகிலிருந்த கவுண்டர்களைத் தவிர மற்ற கவுண்டர்களில் நின்றிருந்தவர்கள் எவர் முகத்தையும் ஜூம் செய்தாலும் சரியாக தெரியாததையும் கவனித்தார். அதனால்தான் காமராவில் இருந்து தொலைவிலிருந்த எட்டாவது கவுண்டரில் ரவியின் கூடையிலிருந்து செல்பேசியை எடுத்து ரவியிடம் கொடுத்தது சரியாக கேப்சர் செய்யபடாமல் போயிருந்தது....
சிடியை கணினியிலிருந்து எடுத்து தன் அருகில் நின்றிருந்த பணியாளிடம் கொடுத்தார். ‘ஒன்பது மணியிலருந்து கடை மூடற வரைக்கும் எடுத்த போர்ஷன மட்டும் தனியா ஒரு சிடி போட்டு எடுத்து கொண்டுக்கிட்டு வா....’
அவன் வாசலை நோக்கி நகர்ந்தான்,
‘டேய்... இத போயி எல்லார்கிட்டயும் தம்மட்டம் அடிக்காத... சீக்ரெட்டா போட்டு எடுத்து கொண்டுக்கிட்டு வா... சீக்கிரம்..’
இவருக்கு எல்லாமே சீக்கிரம்தான் என்று தனக்குள் முணகியவாறே பணியாள் கண்காணிப்பு திரைகள் இருந்த அறையை நோக்கி நகர்ந்தான்.
‘முட்டா பசங்க... இந்த சிடிய பாத்துட்டு போலீஸ்காரன் என்ன சொல்வான்னு தெரியலையே...’ என்று முணகியவாறு தன் அலுவலை தொடர்ந்தார் மேலாளர்.
நாளை நிறைவு பெறும்...
மனிதர்களில் சந்தர்ப்பம் வாய்த்தால் தவறு செய்யாதவர்களே இருக்க மாட்டார்களோதவறு செய்பவன் எங்கவது தன்சுவடுகளை விட்டுச்செல்கிறான்
பதிலளிநீக்குவாங்க ஜிஎம்பி சார்?,
நீக்குஉண்மை தான். என்னதான் புத்திசாலியாக இருந்தாலும் எங்காவது ஒரு தவறு செய்து சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்வார்கள். ரவியும் அதற்கு விதிவிலக்கில்லை.
தனது கைப்பேசி தொலைந்தவுடனே மாதவன் அந்த கைப்பேசியை முடக்க ஏற்பாடு செய்துவிட்டு மனைவியின் கைபேசி மூலம் தனது வங்கிகளுக்கான கடவு சொற்களை மாற்றியிருக்கவேண்டும். அப்படி மாதவன் செய்யாததால் ரவிக்கு பணத்தை களவாட வாய்ப்பு கிடைத்துவிட்டது.
பதிலளிநீக்குஆனால் நிச்சயம் ரவி காவல் துறையிடம் மாட்டுவார் என் நினைக்கிறேன். ‘Every contact leaves a trace’ என்ற Dr Edmond Locard இன் அடிப்படை கோட்பாட்டின்படி, ரவி நிச்சயம் ஏதேனும் ஒரு தடயத்தை விட்டு சென்றிருப்பார்.
அது என்ன என்பது பற்றியும், எப்படி அவர் காவல்துறையினரிடம் சிக்கினார் என்பது பற்றியும் அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஆனால் நிச்சயம் ரவி காவல் துறையிடம் மாட்டுவார் என் நினைக்கிறேன். ‘//
நீக்குஎல்லா திருடர்களும் நிச்சயம் பிடிபடுவார்கள் என்பது உண்மைதான். அதன் படி பார்த்தால் ரவியும் நிச்சயம் சிக்கவேண்டும். நாளை தெரிந்துவிடும்.
உங்கள் வரவுக்கும கருத்துரைக்கும் மிக்க நன்றி சார்.
வெகு சுவாரஸ்யம் ஐயா.
பதிலளிநீக்குநம்மில் பலரும் எழுதும் கதை மட்டுமல்ல நடைமுறை வாழ்வில் குற்றம் செய்யும் அனைவருமே ஏதாவது தடயத்தை விட்டு வைப்பது எழுதப்பட்ட தீர்ப்பு.
ரவியின் நிலையும் இப்படித்தான் இருக்கும்.
பயணத்திலிருந்து... கில்லர்ஜி
ரவியின் நிலையும் இப்படித்தான் இருக்கும்.
நீக்குபயணத்திலிருந்து... //
வாங்க ஜி!
இருக்கலாம். நாளை தெரிந்து விடும்.
ரவி கேடி என்று தெரிகிறது. மாட்டுவதைப் பற்றி அவன் கவலைப்படவும் இல்லை போல... அதை ஒத்திப்போட்டு அதற்குள் காசை செலவு செய்வான் போல...!
பதிலளிநீக்குரவி கேடியாக இருக்கலாம். புத்திசாலியா என்பது நாளை தெரிந்துவிடும்.
நீக்குஉங்கள் வரவுக்கும கருத்துரைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குதனது கைப்பேசி தொலைந்தவுடனே மாதவன் அந்த கைப்பேசியை முடக்க ஏற்பாடு செய்துவிட்டு மனைவியின் கைபேசி மூலம் தனது வங்கிகளுக்கான கடவு சொற்களை மாற்றியிருக்கவேண்டும். அப்படி மாதவன் செய்யாததால் ரவிக்கு பணத்தை களவாட வாய்ப்பு கிடைத்துவிட்டது.////////This is the truth. நாம் அசால்ட்டாக செய்யும் பல தவறுகள் நஷ்டத்தை நோக்கி நம்மை நகர்த்துகின்றன.
பதிலளிநீக்குஜோசஃப் சார், நீங்கள் கதையை நகர்த்திச் செல்லும் விதம் அபாரம்.
மனம் நிறை வாழ்த்துகள்.
நீங்கள் கதையை நகர்த்திச் செல்லும் விதம் அபாரம்.//
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே.
உங்கள் வரவுக்கும கருத்துரைக்கும் நன்றி.