31 அக்டோபர் 2013

சொந்த செலவில் சூன்யம் - 63

மனைவி கோக்கிலாவையும் மகள் காஞ்சனாவையும் பத்திரமாக வீட்டில் கொண்டு சேர்த்துவிட்டு மீண்டும் தன் அலுவலகத்திற்கு  கிளம்பினான் ராஜசேகர். மாதவி கொலை வழக்கில் அடுத்த கட்ட விசாரணை மீண்டும் நீதிமன்றத்திற்கு வருவதற்கு அதிக நாள் ஆக வாய்ப்பில்லை என்று நினைத்தான். வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவர் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்து அவர் முன் வாக்குமூலத்தை ஏற்கனவே அளித்திருப்பதாலும் அதில் அவர் சம்மந்தப்பட்ட அரசு வழக்கறிஞரும் விசாரணை செய்திருந்த காவல்துறை ஆய்வாளரும் தன்னை பொய் சாட்சி சொல்ல நிர்பந்திப்பதாக கூறியிருந்ததாலும் எந்த ஒரு நீதிபதியும் மேலும் தாமதியாமல் அடுத்த கட்ட நீதிமன்ற  விசாரணைக்கு உத்தரவிடாமல் இருக்க மாட்டார் என்று அவனுக்கு தோன்றியது.

இதே சிந்தனையில் வாகனத்தில் விரைவாக செலுத்தி அலுவலகத்தை அடைந்த ராஜசேகர் அலுவலகம் பூட்டியிருப்பதைக் கண்டான்.  அன்றும் அதற்கடுத்த நாளும் வரவிருந்த வழக்குகளில் பெரிதாக தயாரிக்க ஏதும் இல்லை. ஆகவே அன்று நாகுவை அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்று கூறியிருந்தான். வசந்த் ஏற்கனவே இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றிருந்தான். 

மணியை பார்த்தான். சைதாப்பேட்டை நடுவர் நீதிமன்றத்தில் அவன் ஆஜராக இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. 

அதுவரை மாதவியின் கொலை வழக்கில் எதிர் வரும் திங்களோ அல்லது அதற்கு அடுத்த தினமோ அரசுதரப்பில் சாட்சியல் சொல்லவிருந்த இரு சாட்சிகளையும் எப்படியெல்லாம் விசாரிக்கலாம் என்று குறிப்பெடுக்கலாம் என்ற எண்ணத்துடந்தான் அலுவலகம் வந்திருந்தான். இந்த சமயத்தில் வசந்தும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

அலுவலகத்தை திறந்து ஏசியையும் மின்விசிறியையும் ஆன் செய்துவிட்டு இருக்கையில் அமர்ந்து கண்களை மூடினான். அதிகம் போனால் இன்னும் ஒரு வாரம். வழக்கு விசாரணையில் ஒரு முடிவு தெரிந்துவிடும். PW1, PW2 விசாரணக்குப் பிறகும் வழக்கை தொடர செஷன்ஸ் நீதிபதி அனுமதிப்பாரா என்று தெரியவில்லை. ஒருவேளை போலீசே கூட வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். அதற்குள் வெளியில் இருக்கும் முருகேசனை காவல்துறை பிடித்துவிட வேண்டும். 

முருகேசனின் நினைவு வந்ததுமே சட்டென்று நினைத்துக்கொண்டவனாய் தன் செல்ஃபோனை எடுத்து ராகவனின் எண்ணை தேடிப்பிடித்து அழைத்தான். எதிர்முனையில் ரிங் போய்க்கொண்டே இருக்க இருக்கையில் நிலைகொள்ளாமல் தவித்தான். ச்சே... இவரையும் வார்ன் பண்ணாம விட்டுட்டேனே? 

இணைப்பைத் துண்டித்துவிட்டு ஒரு சில நிமிடங்கள் கழித்து மீண்டும் அழைத்தான். அப்போதும் பதிலில்லை. முருகேசன் ஒருவேளை இவர்களை கடத்தியிருப்பானோ.....போலீசில் பிடிபட்டுவிடுவோம் என்ற அச்சம் அவனை எதையும் செய்ய தூண்டும் என்று நினைத்தான். ஆகவேதான் முதலில் தன் மனைவியையும் மகளையும் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டான். அவர்களுக்கு இனி பெரிதாக ஏதும் ஆபத்து வர வாய்ப்பில்லை. அதுபோன்றே முருகேசனின் அடுத்த எதிரியான சீனிவாசனையும் எச்சரித்தாயிற்று..... மருத்துவமனையில் இருக்கும் மல்லிகாவை அவன் நெருங்க வாய்ப்பில்லை.... மாதவியின் கொலை வழக்கில் அவனுக்கு உடந்தையாக இருந்த ராமராஜனை தீர்த்துக்கட்டிய பிறகு அவனை அதில் சிக்க வைக்கக் கூடியவர்கள் இருவர் மட்டுமே.... அதில் ஒருவன் நீதிமன்றத்தின் பாதுகாப்பில்.... மீதமிருந்தது மிஸஸ் ராகவன் மட்டுமே......

அவனுடைய மேசை மீதிருந்த செல்ஃபோன் அலறிய சத்தத்தில் நினைவுகளிலிருந்து மீண்ட ராஜசேகர் திரையைப் பார்த்தான், ராகவனின் செல்நம்பர். எடுத்து பதற்றத்துடன் 'ஹலோ' என்றான். 'என்ன சார் ரெண்டு தரம் கூப்ட்டேன்.... ஏன் எடுக்கலை?'

'அவர் எப்படி சார் எடுப்பாரு?' என்ற குரலைக் கேட்டதும் ஒரு கணம் யார் என்று பிடிபடாமல் திகைத்தான். எங்கோ கேட்ட குரல்போல் இருந்தது... ஆனால்..... ஆனால்..... 

'என்னா சார் ... குரல் அதுக்குள்ள மறந்துபோச்சா?' என்று எதிர்முனையில் முருகேசன் சிரித்தான்.....

அடப்பாவி என்றான் ராஜசேகர் தனக்குள். 'நீ எப்படி இந்த ஃபோன்ல?' என்றான்.

'இந்த ஃபோன் மட்டுமில்ல சார்...... ராகவன் சார்.... அவரோட வய்ஃப் எல்லாருமே இங்கதான்..... ஒரேயொரு நிமிஷத்துல  உங்கக்கிட்ட பேரம் பேச செமையா இருந்த சான்ஸ கோட்டை  விட்டுட்டேனே அதுக்கப்புறம் வந்த ஐடியாதான் இது....' 

முருகேசன் என்ன சொல்ல வருகிறான் என்பது ராஜசேகருக்கு புரிந்தது. இருந்தாலும், 'என்ன சொல்ற?' என்றான்.

'ஐ! ஒன்னும் புரியாத மாதிரி கேக்கறீங்க? உங்க சீமந்த புத்திரி ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு பெத்து வச்சிருக்கீங்களே..... அத தூக்கலாம்னுதான் ஸ்கூலான்ட வந்தேன்.... ஒரேயொரு நிமிஷத்துல மிஸ் பண்ணிட்டேன்! சரின்னுட்டு நேரா இங்க வந்தேன்.... நீங்க அடுத்து இவங்களதான் கூப்டுவீங்கன்னு தெரியும்... ஏன்னா அந்த குமார் பையனத்தான் ரெஸ்க்யூ பண்ணி கோர்ட்ல சரண்டர் பண்ண வச்சிட்டிங்களே.....?'

ராஜசேகர் என்ன செய்வதென சிந்தித்தான். இவனிடம் லைனில் இருக்கும்போதே போலீசுக்கு தகவல் சொன்னால் அவர்கள் இந்த ஃபோனுக்கு அருகில் இருக்கும் டவர் எது என்று கண்டுபிடித்துவிட முடியுமே.... மேசை மீதிருந்த தன் BSNL தொலைபேசியை பார்த்தான். ஆனால் முருகேசனுடன் பேசிக்கொண்டே செய்வது சிரமம். மேலும் தன்ராஜின் செல்ஃபோன் எண் இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் மொபைலில்தான் உள்ளது.... என்ன செய்யலாம், என்ன செய்யலாம் என்று அதையே மனதுக்குள் அசைபோட்டான். சட்டென்று ஒரு உத்தி மனதுக்குள் எழுந்தது..... அதுதான் சரி என்று முடிவு செய்தான்.

'இங்க பார் முருகேசா.... என் செல்ஃபோன்ல சார்ஜ் போகப்போவுது.... ஒரு அஞ்சி நிமிஷம் இரு..... ஷெல்ஃப்ல இருக்கற சார்ஜர எடுத்துக்கிட்டு வரேன்...... இல்லன்னா டிஸ்கனெக்ட் பண்ணிட்டு கூப்டு.... இல்லையா நானே அஞ்சி நிமிஷத்துல கூப்டறேன்....'

எதிர்முனையில் முருகேசன் சிரித்தான். 'ஐ.... என்ன விளையாடறிங்களா? என் கிட்ட பேசிக்கிட்டிருக்கறப்பவே அந்த எஸ்.ஐக்கு ஃபோன் பண்ணி சொன்னா இந்த கால ட்ரேஸ் பண்ணி கண்டுபிடிச்சிருவார்.... அதான?'

நாம தடுக்குல பாஞ்சா இவன் கோலத்துக்குள்ள பாய்வான் போலருக்கே.... படிச்ச கிரிமினலாச்சே.....'சேச்சே.... அதெல்லாம் இல்லை... ராகவனும் அவரோட வய்ஃபும் உன் கூட இருக்கறப்ப அந்த மாதிரி விளையாட்டெல்லாம் விளையாடுவேனா.... உண்மையிலேயே சார்ஜ் போகப்போவுது.... எப்பவேணும்னாலும் டிஸ்கனெக்ட் ஆயிரும் சொல்லிட்டேன்...' என்றவாறே  இணைப்பை துண்டித்துவிட்டு அடுத்த நொடியே செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்தான். அதன் பிறகுதான் தன்ராஜின் செல்ஃபோன் எண்ணை எடுக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. மீண்டும் ஆன் செய்தால் ஆபத்து என்று நினைத்தவன் எழுந்து மாதவியின் கொலைவழக்கு கோப்பை எடுத்து அதன் மேல் அட்டையில் குறித்து வைத்திருந்த தொலைபேசி எண்களில் தன்ராஜ் மற்றும் ராகவனின் செல்ஃபோன் எண்கள் உள்ளனவா என்று பார்த்தான். இருந்தன. 

BSNL தொலைபேசியை எடுத்து சுழற்றினான். அடுத்த நொடியே எதிர்முனையில் தன்ராஜ்  எடுக்க ராகவனின் தொலைபேசி எண்ணை கொடுத்து அதிலிருந்து முருகேசன் தன்னுடன் பேசியதை கூறினான்... 'சார்.... நா இந்த போனையும் டிஸ்கனெக்ட் பண்ணாம ரீசீவர டேபிள் மேல வச்சிட்டு  செல்ஃபோன்லருந்து ராகவன் நம்பர கூப்ட போறேன்..... நாங்க பேசறத இந்த ஃபோன் வழியா கேளுங்க..... If possible ரெக்கார்டும் பண்ணிக்கலாம்..... அவனோட லொக்கேஷனையும் டிரேஸ் பண்ணப் பாருங்க.....' என்று கூறிவிட்டு தன் செல்ஃபோனை ஆன் செய்தான்.  

அடுத்த நொடியே அது ஒலிக்க திரையைப் பார்த்தான்..... ராகவனுடைய செல்ஃபோன் எண் இல்லாமல் புதியதொரு எண் தெரிந்தது. அது செல்ஃபோனும் அல்ல என்பதும் தெரிந்தது. யாராக இருக்கும் என்று யோசித்தவாறே எடுத்து, 'ஹலோ' என்றான் தயக்கத்துடன்.

'என்ன சார் முழிக்கிறீங்களா? அதே ஃபோன்லருந்து மறுபடியும் கூப்ட நா என்ன முட்டாளா.....?' 

ராஜசேகர் சுதாரித்துக்கொண்டு செல்ஃபோன் ஸ்பீக்கரை ஆன் செய்து மேசை மீதிருந்த ஒலிவாங்கியின் அருகில் வைத்தான். 'சரி நீ பெரிய அறிவாளிதான் ஒத்துக்கறேன்...' என்றான்.... ஆனால் இந்த எண்ணை தன்ராஜுக்கு தெரிவிக்க முடியாது போலிருக்கே என்று ராஜசேஜர் நொந்துப்போனான்..... சட்டென்று ஒரு யோசனை உதிக்க முருகேசனுடன் பேசியவாறே தன்னுடைய லேப்டாப்பை திறந்து இணையத் தொடர்பை ஏற்படுத்தினான். பிறகு டெஸ்டாக்ப்பில் இருந்த 'வைபர்'  (viber) மென்பொருள் சுட்டியை சொடுக்கி கான்டாக்ட்ஸில் தன்ராஜின் மொபைல் எண்ணை சேர்த்தான். பிறகு சாட் பாக்சில் (chat box) முருகேசன் அழைத்த BSNL LL எண்ணை டைப் செய்து..... இதிலிருந்துதான் முருகேசன் என்னுடன் பேசுகிறான்... நான் பேச்சை தொடர்கிறேன்... நீங்கள் லொக்கேஷனை கண்டுபிடித்து அங்கு செல்லுங்கள் என்று அடித்துவிட்டு காத்திருந்தான். அடுத்த சில நொடிகளிலேயே ஒக்கே என்று பதில் வந்தது. மகிழ்ச்சியுடன் 'ஒனக்கு இப்ப என்ன வேணும்... அதச் சொல்லு.' என்றான் முருகேசனிடம். 

'இது மேட்டர்' என்று சிரித்தான் முருகேசன். 'சொல்றேன்.... கேஸ் அடுத்த வாட்டி ஹியரிங் வர்றப்போ நா இந்தம்மாவ கோர்ட்டுக்கு கொண்டாரேன்..... போலீஸ் அந்த குமார கொண்டாந்துரும்.....நா சொல்லிக்குடுத்துருக்கறா மாதிரிதான் அவங்க ரெண்டு பேரும் சாட்சி சொல்லணும்..... அவங்கள நீங்க எந்த கிராசும் பண்ணக் கூடாது....'

முருகேசன் இதைத்தான் கேட்பான் என்பதை ராஜசேகர் ஏற்கனவே ஊகித்து வைத்திருந்தான். 'சரி... அப்புறம்?'

'மாதவி வீட்லருந்து நீங்க சுருட்ன கேஷ், நகை எல்லாத்தையும் என்னான்ட குடுத்துறணும்.'

அது வங்கி லாக்கரில் வைத்துவிட்டதாக சீனிவாசன் கூறியது நினைவுக்கு வந்தது. அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். சரி என்று சொல்லி வைப்போம். 'சரி... இதானா, இன்னும் வேற இருக்கா?'

'நா பேராசைல்லாம் படமாட்டேன் சார்... இது போதும்.... ஆனா ஒரு கண்டிஷன்.'

'என்ன?'

'இதெல்லாம் முடியற வரைக்கும் ராகவன் என் கஸ்டடியிலதான்...... இதுல ஏதாவது ஒன்னு நடக்கலன்னா கூட..... ஒங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.'

ராஜசேகர் சிரித்தான். இடுக்கண் வருங்கால் நகுக என்று சில தினங்களுக்கு முன்பு வசந்த் அடித்த ஜோக் நினைவுக்கு வந்தது. 'அதான் ஏற்கனவே ரெண்டு மர்டர் பண்ணிருக்கியே... மூனாவது பண்றது ஒனக்கு பெரிய விஷயமா?'

'என்னது? நா மர்டர் பண்ணனா? யார் சொன்னது? நம்ம தொழில் ஃபோர்ஜரியும் கையாடலும்தான் சார்.... மர்டர்லாம் நமக்கு சரி வராது!'

'இத என்னெ நம்பச் சொல்றே?'

'பின்னே? மாதவி கொலைய செஞ்சது நாந்தான்னுதான் அந்த  ராமராஜனே ஒத்துக்கிட்டான? அவன் பாடிலருந்து அவனோட சூயிசைட் நோட் போலீஸ் எடுத்துருக்குமே?' 

என்னது? ராஜசேகரும் CCB செல் அலுவலகத்தில் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த தன்ராஜும் ஒருசேர அதிர்ந்தனர். 

'என்னய்யா சொல்ற? ராமராஜன் சூயிசைட் பண்ணிக்கிட்டாரா?'

'பின்னே? அந்த மாதவி இவனுக்கு கிடைக்காம போயிருவாளோங்கற ஆத்திரத்துல அவள கொன்னான். அதுக்கப்புறம்  ஏன்டா கொன்னோம்னு புலம்பிக்கிட்டே இருந்தான்.... போலீஸ் புடிச்சா தூக்குல போட்ருவாங்களேன்னு பயந்துக்கிட்டு கழுத்த அறுத்துக்கிட்டான்.....- ராஜசேகர் முருகேசனுடன் பேசியவாறே..... 'என்ன மிஸ்டர் தன்ராஜ்.... Is it true? Did you find any suicide note?' என்று ராஜசேகர் வைபரில் அடித்தான். அடுத்த நொடியே இல்லை என்று பதில் வந்தது. அதை தொடர்ந்து 'His location identified. U keep tlkng sndng a pol party from SP off..' என்று பதில் வந்தது -  கழுத்த அறுத்துக்கறதுக்கு முன்னால எனக்கு முன்னாலெயே மாதவிய நாந்தான் கொன்னேன்னு எழுதி பாக்கெட்ல வச்சான்..... சரி சும்மாதான் சொல்றான்னு நினைச்சி நா பாத்ரூமுக்கு போய்ட்டு வர்றதுக்குள்ள கழுத்த அறுத்துக்கிட்டான்.... நம்ம மேல கேஸ் வந்துருமேன்னு படாதபாடு பட்டு பாடிய ட்ரிப்ளிக்கேன்  பிரிட்ஜ் கீழ கொண்டு போட்டேன்.... போலீசுக்கு அவன் எழுதுன லெட்டர் கிடைச்சிருக்கணுமே.... இல்லன்னா அவனோட பேன்ட் பாக்கட்ட பாக்க சொல்லுங்க சார்....'

தொடரும்

30 அக்டோபர் 2013

சொந்த செலவில் சூன்யம் - 62


'மிசஸ் ராகவன பத்தி சொல்றேன்.... குமார் எஸ்கேப்பாய்ட்டானு தெரிஞ்சதும் அந்த லேடிய கிட்நேப் பண்ண முருகேசன் ட்ரை பண்ணா?' என்றான் ராஜசேகர்.

'அத நா பாத்துக்கறேன்....' என்ற தன்ராஜ் தன் செல்ஃபோனை எடுத்து டயல் செய்ய 'சரி சார்.... பாக்கலாம் என்றவாறு ராஜசேகர் அறையிலிருந்து வெளியேறினான்.

ராஜசேகர் வெளியேறுவதை பார்த்தவாறே நின்றிருந்த தன்ராஜ் எதிர்முனையில் எடுக்கப்பட்டதும்,' சிசிபி தான? நா E1 எஸ்.ஐ தன்ராஜ் பேசறேன்.... நா அங்கதான் வந்துக்கிட்டிருக்கேன்.... ஒரு கேஸ் விஷயமா.' என்றார்.

'...............'

'ஆமா இன்னும் பத்து பதினஞ்சி நிமிஷத்துல அங்க வந்துருவேன்.... அதுக்கு முன்னால நா இப்ப சொல்ற நம்பர ட்ரேஸ் பண்ண முடியுமான்னு பாத்து வைங்க.' என்ற தன்ராஜ் சற்று முன்னர் குறித்துவைத்திருந்த முருகேசனின் செல்ஃபோன் எண்ணை படித்தார். அதை சொல்லி முடித்ததும் கையிலிருந்த ராமராஜன் எண்ணையும் படித்து காட்டினார், 'இதையும் பாத்து வைங்க..... வந்துக்கிட்டே இருக்கேன்.'

இணைப்பைத் துண்டித்துவிட்டு மீண்டும் இருக்கையில் அமர்ந்து ஒரு சில நொடிகள் யோசனையில் ஆழ்ந்தார். பிறகு செல்ஃபோனை எடுத்து தன் காவல் நிலையத்தை அழைத்தார். எதிர் முனையில் எடுக்கப்பட்டதும், 'யோவ் பெருமாள் சார் ஆஃபீஸ்ல இருக்காரா?' என்றார்.

'..............'

'சரி.... அவர் வந்தா நா சிசிபி வரைக்கும் போயிருக்கேன்னு சொல்லு.... மத்தத நா வந்து சொல்லிக்கறேன்....' என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினார்.

********

ராஜசேகர் எஸ்.பி. அலுவலகத்திலிருந்து தன்னுடைய அலுவலகத்திற்கு செல்லாமல் நேரே தன் வீட்டை சென்றடைந்தான். 'நீங்களும் எதுக்கும் கேர்ஃபுல்லா இருங்க சார்.' என்று தன்ராஜ் சற்று முன்னர் அவனை எச்சரித்ததிலிருந்து அதையே நினைத்துக்கொண்டிருந்தான். 

முருகேசனுக்கு அவன் மீது கோபம் இருப்பதற்கு மூன்று காரணங்கள் இருந்தன. ஒன்று: அவனை இனி எந்த காரணத்திற்காகவும் தன்னை தேடி வரவேண்டாம் என்று எச்சரித்து அனுப்பியது. அதற்கு தன்னை மாதவியிடம் சிக்க வைத்து ஏற்கனவே தண்டனை அளித்துவிட்டிருந்தான் என்றாலும் அதனால் ஏற்பட்ட கோபம் இன்னும் இருக்க வாய்ப்புண்டு. இரண்டாவது கோபாலுக்கு ஆதரவாக கோர்ட்டில் ஆஜராவது... நாம் தவறு செய்திருந்தும் நம்மை இருமுறை தன்னுடைய வாதத்திறமையால் அவற்றிலிருந்து விடுவித்திருந்தவராயிற்றே? அதே திறமையை பயன்படுத்தி இவர் கோபாலை இந்த வழக்கிலிருந்து விடுவித்துவிடுவாரோ என்ற நினைப்பால் வரக்கூடிய கோபம். மூன்றாவது ராமராஜனின் வசம் இருந்த குமாரை மீட்டு நீதிமன்றத்தில் சரணடைய வைத்த விஷயமும் முருகேசனுக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு... ஆகவே அந்த கோபமும் இருக்கும் என்று நினைத்தான்.

தன்னுடைய நீண்ட நாள் கூட்டாளியான ராமராஜனையே எவ்வித தயக்கமும் இன்றி கொலை செய்யும் அளவுக்கு துணிச்சலுள்ள முருகேசன் தன்னையும் பழிவாங்க முயல்வது சாத்தியமே என்றும் தோன்றியது. நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக......... இதே கோணத்தில் சிந்தித்தவாறு வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தவனுக்கு சட்டென்று ஏதோ ஒன்று தோன்ற வாகனத்தின் வேகத்தை கூட்டி அடுத்த சில நிமிடங்களில் தன் குடியிருப்பை அடைந்து வாகனத்தை நிறுத்திவிட்டு நாலுகால் பாய்ச்சலில் தன் குடியிருப்பை அடைந்து அழைப்பு மணியை அடித்தான். 

அவன் அடித்த வேகத்தைக் கண்டு பதறிப்போன அவனுடைய மனைவி கோக்கிலா அடுத்த நொடியே கதவைத் திறந்து எதிரில் நின்ற ராஜசேகரைப் பார்த்து, 'என்னங்க.... எதுக்கு இப்படி அடிக்கிறீங்க? யார்றான்னு பயந்தே போய்ட்டேன்...'

எதிரில் நின்ற மனைவியைப் பார்த்ததும் நிம்மதியடைந்த ராஜசேகர் அடுத்த நொடியே, 'ஏய், எத்தன தடவ சொல்லியிருக்கேன்? பீப் ஹோல (peep hole) வழியா யாருன்னு பாக்காம கதவ இப்படி தொறக்காதேன்னு....?' என்று எரிந்து விழுந்தான். 

அவனுடைய கேள்வியின் அர்த்தம் புரியாமல், 'ஏன்... நம்மள தேடி யார் வரப்போறா?' என்றவாறு திரும்பி ஹாலுக்குள் நடந்தவளை தொடர்ந்து வீட்டினுள் நுழைந்த ராஜசேகர் உடனே வாசற்கதவைத் தாளிட்டான். 'காஞ்சனா ஸ்கூல்லருந்து எத்தன மணிக்கி வரணும்?'

சமயலறையை நோக்கி நகர்ந்த கோக்கிலா நின்று வியப்புடன் அவனைப் பார்த்தாள். என்னாச்சி இவருக்கு? நேரங்கெட்ட நேரத்துல வந்துட்டு என்னென்னமோ கேட்டுக்கிட்டு நிக்கிறார்?

'என்ன பதில் சொல்லாம நிக்கே?'

'ஏன் கேக்கீங்க?'

'காரணமாத்தான் கேக்கேன்..... எத்தன மணிக்கி வரணும்?'

கோக்கிலா சுவர்க்கடிகாரத்தை பார்த்தாள். மணி பண்ணெண்டு கூட ஆவலையே..... மதியானம் நாலு மணியாவது ஆவும்.'

அவ்வளவு நேரம் ஆகுமா? இதை எப்படி எதிர்கொள்வது? நம் மனதில் இருப்பதை இவளிடம் கூறி இவளையும் தேவையில்லாத கவலைக்கு ஆளாக்கிவிடுவோமோ? ஒருவேளை நாம்தான் தேவையில்லாமல் அச்சம் கொள்கிறோமோ என்றெல்லாம் நினைத்த ராஜசேகர் பரவாயில்லை நம் மனதில் இருப்பதை இவளிடம் கூறிவிடுவோம். 

'இங்க பார்.' என்று துவங்கிய ராஜசேகர் முருகேசனைப் பற்றியும் அவனால் ஏற்படக்கூடிய ஆபத்தைப் பற்றியும் சுருக்கமாகக் கூறிவிட்டு தொடர்ந்தான். 'எதுக்கும் நாம கேர்ஃபுல்லா இருக்கறது நல்லது. இன்னையிலருந்து நா சொல்ற வரைக்கும் தனியா எங்கயும் வெளிய போகாத, நா இல்லாதப்போ யார் பெல்ல அடிச்சாலும் பீப் ஹோல்ல பாக்காம கதவ திறக்கக் கூடாது. உனக்கு சரியா அடையாளம் தெரியாத யாராருந்தாலும் கதவ திறக்காம யார் வேணும்னு கேளு. பதில் வரலைன்னா கதவ திறக்காத. அப்படியும் வந்த ஆள் போகலன்னா சீனிவாசன் நம்பர தரேன். அவருக்கு ஃபோன் பண்ணு. இல்லன்னா மேல் ஃப்ளோர்ல இருக்கற ஆடிட்டர் வீடு..... யாரையாச்சும் கூப்ட்டு விஷயத்த சொல்லு..... இதெல்லாம் இன்னும் நாலஞ்சி நாளைக்கித்தான்......அதுக்குள்ள போலீஸ் அவனெ  பிடிச்சிரும்....'

அவன் பேசி முடிக்கும்வரையிலும் முகத்தில் கலவரத்துடன் அவனையே பார்த்தவாறு நின்றிருந்த கோக்கிலா, 'அப்படீன்னா நம்ம காஞ்சனாவுக்கும் ஆபத்து இருக்கா?' என்றாள். 'அவள இப்பவே போயி கூட்டிக்கிட்டு வந்துறலாங்க.'

அதுவும் சரிதான் என்று நினைத்த ராஜசேகர், 'சரி டிரெஸ் மாத்திக்கிட்டு ரெடியாயிரு... நா சீனிவாசனுக்கும் ஃபோன் பண்ணி சொல்லிட்டு பார்க்கிங்ல வெய்ட் பண்றேன்.' என்று கூறிவிட்டு செல்ஃபோனை எடுத்து டயல் செய்தான். 

எதிர்முனையில் எடுக்கப்பட்டதும், 'சார்... ஒரு அர்ஜன்ட் மேட்டர்.' என்று தன் மனைவியிடம் கூறியவற்றையே மீண்டும் கூறி முடித்தான். 'எதுக்கும் கேர்ஃபுல்லா இருங்க சார்... என் வய்ஃப் கிட்ட ஒங்க நம்பரும் ஆடிட்டர் நம்பரும் குடுத்துருக்கேன்.... In case அவளோட ஃபோன் வந்தா உடனே போலீசுக்கோ இல்ல எனக்கோ இன்ஃபர்மேஷன் குடுங்க.' என்றவன் தொடர்ந்து, 'நா எஸ்.ஐ. தன்ராஜோட நம்பரையும் குடுக்கேன்... நோட் பண்ணிக்குங்க.' என்று தன் செல்ஃபோனில் இருந்த அவருடைய எண்ணையும் கொடுத்தான். 'நா சொல்லித்தான் கூப்டறேன்னு சொன்னீங்கன்னா உடனே பாசிட்டிவா ரெஸ்பான்ட் பண்ணுவார்.... அப்படி அவர் எடுக்கலன்னா எனக்கு ஃபோன் பண்ணுங்க... நா பாத்துக்கறேன்....'

'சரி சார்.... ஆனா அவன் அந்த அளவுக்கு போகமாட்டான்னு நினைக்கிறேன்.' என்றார் சீனிவாசன். 

'அப்படி சொல்லிற முடியாது சார்.....' என்று மறுத்தான் ராஜசேகர். 'யார் எப்போ என்ன செய்வாங்கன்னு சொல்ல முடியாது. அத்தோட அவனுக்கு நெருக்கமாயிருந்த ராமராஜனையே கொல்ல துணிஞ்சவன் எதையும் செய்வான்.... அப்புறம் இன்னொரு விஷயம்..... நம்ம செக்கரட்டரிக்கிட்ட சொல்லி நம்ம வாட்ச் மேனையும் விஜிலன்டா இருக்க சொல்லுங்க சார்.... யார் வந்தாலும் சரியா விசாரிக்காம உள்ள விடவேணாம்னு சொல்லி வச்சா நல்லது. என்ன சார்?'

'சரி சார்... இப்பவே சொல்லிடறேன்....'

'தாங்ஸ் சார்....' என்றவாறு இணைப்பைத் துண்டித்துவிட்டு புறப்பட தயாராக நின்றிருந்த மனைவியுடன் புறப்பட்டு பள்ளியை அடைந்தான். நல்லவேளையாக அவன் சென்றடைந்த போது உணவு இடைவேளை நெருங்கியிருந்தது. வாசல் கேட்டில் நின்றிருந்த வாட்ச்மேனிடம் தன்னையும் மனைவியையும் அறிமுகப்படுத்திக்கொண்டு பள்ளி முதல்வரை காண வேண்டும் என்றான். 'இன்னும் பத்து நிமிஷத்துல லஞ்ச் இன்டர்வெல் விட்ரும் சார்..... லஞ்ச் கொண்டு வந்திருக்கற பேரன்ட்சோட சேந்து நீங்களும் போலாம்.....' 

வேறு வழியின்றி அவனும் கோக்கிலாவும் காத்திருந்தனர். அவனைப் போலவே கேட் முன்பு கையில் உணவு பைகளுடன் காத்திருந்த பெற்றோர்களை கவனித்தான். வேகாத வெயிலில் முகத்தில் வழிந்தோடும் வியர்வையைக் கூட துடைத்துக்கொள்ளாமல் பள்ளி வாசலையே பார்த்தவாறு காத்திருந்தவர்களுடைய அனைவர் முகத்திலும் தெரிவது தவிப்பா அல்லது சலிப்பா என்று வியந்தான் ராஜசேகர். காலையிலயே லஞ்ச கட்டி குடுத்துவிடாம எதுக்கு இந்த வீண் அலைச்சல்?  கொஞ்சம் ஆறிப்போன சாப்பாட்ட சாப்ட்டாத்தான் என்னவாம்?  இப்படியெல்லாம் பேம்பர் (pamper) பண்ணி குழந்தைகள வளர்க்கணுமா?

அவனுடைய எண்ண ஓட்டத்தை மதிய உணவு இடைவேளைக்கு ஒலித்த பள்ளி மணியின் ஓசை கலைத்தது. காத்திருந்த பெற்றோர்கள் ஏதோ சினிமா நுழைவுச்சீட்டை வாங்க முனைவதுபோல் முண்டியடித்துக்கொண்டு விரைய அவர்களுடன் நுழைய முயன்ற கோக்கிலாவை தடுத்து நிறுத்தினான். 'இரு அவங்க போவட்டும்.... நிதானமா போவோம்.'

'இல்லைங்க.... இந்த கூட்டத்திலேயே அந்த படுபாவி இருந்தா?'

'நா பாத்துட்டேன்.. அவன் இங்க இல்ல.' என்று பதிலளித்த ராஜசேகர் கூட்டம் கலைந்ததும் கோக்கிலாவை அழைத்துக்கொண்டு பள்ளி முதல்வர் அறையை அடைந்தான். அடுத்த சில நிமிடங்களில் பள்ளி முதல்வர் தன் அறைக்கு வந்ததும் தான் வந்த விஷயத்தை கூறி தன் மகள் காஞ்சனாவை தன்னோடு அழைத்துச் செல்ல விரும்புவதாகவும் அடுத்த நாலைந்து தினங்களுக்கு அவள் பள்ளிக்கு வர இயலாது என்றும் கூறினான். 'எதுக்கும் நீங்க ஒரு ரிட்டன் ரிக்வெஸ்ட் குடுத்துறுங்க சார்.' என்று அவர் கேட்டுக்கொண்டதும் சட்டென்று எழுந்த கோபத்தை அடக்கிக்கொண்டு அலுவலகத்திலிருந்தே ஒரு வெள்ளை தாளை வாங்கி மடமடவென எழுதி கொடுத்தான். அதை வாங்கி படித்தும் பாராமல்  தன் மேசை மீது வைத்த பள்ளி முதல்வர் வாசலில் நின்றிருந்த சிப்பந்தியிடம் 'ஃபிஃப்த் ஸ்டான்டர்ட் பி செக்ஷன் க்ளாஸ் டீச்சர வரச்சொல்லுங்க.' என்றார். 

அடுத்த சில நிமிடங்களில் முப்பது வயது மதிக்கத்தக்க ஆசிரியை வந்ததும் தன் மேசை மீது வைத்திருந்த கடிதத்தை அவரிடம் கொடுத்து, 'உங்க க்ளாஸ் ஸ்டூடன்ட் காஞ்சனாவோட பேரன்ட்ஸ் இவங்க.... அந்த கேர்ல இவங்க கூட அனுப்பிருங்க.... she may not attend the classes for the next four days.... நோட் பண்ணி வச்சிக்குங்க.' என்று கூறிவிட்டு ராஜசேகரை பார்த்தார். 'You can go with her' 

அவருக்கு நன்றி கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறி வகுப்பறையை நோக்கி சென்ற ஆசிரியை பின்னால் தன் மனைவியை அனுப்பி வைத்தான். 'காஞ்சனாவ கூட்டிக்கிட்டு வா... நா இங்கயே நிக்கேன்.'

சுமார் பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து கோக்கிலாவும் காஞ்சனாவும் தன்னை நோக்கி வருவதைக் காணும் வரையில் கலக்கத்துடன் நின்றிருந்தான் ராஜசேகர்.

*******

எஸ்.பி சந்தானத்தின் அலுவலகத்திலிருந்து புறப்பட்ட செல்லும் வழியிலேயே தன்ராஜ் அவரை அழைத்தான். அவர் அவனுடைய அழைப்புக்கென்றே காத்திருந்தவர் போல் எடுத்து, 'சொல்லுங்க தன்ராஜ்.' என்றார்.

ராஜசேகரிடமிருந்து கிடைத்த தகவல்களை சுருக்கமாக தெரிவித்த தன்ராஜ், 'நா சிசிபிக்கி போய்கிட்டிருக்கேன் சார். நா மாத்திரம் சொன்னா கால் சோர்ச ட்ரேஸ் பண்ணுவாங்களான்னு தெரியல. நீங்க கொஞ்சம் கூப்ட்டு CCB டிஎஸ்பிக்கிட்ட சொல்ல முடியுமா சார்?' என்றான்.

'கண்டிப்பா.... நீங்க அங்க போய் சேர்றதுக்குள்ள கூப்ட்டு சொல்லிருவேன்...' என்று உறுதியளித்த எஸ்.பி. 'அப்புறம் இன்னொரு விஷயம்.'

'சொல்லுங்க சார்.'

'நா பெருமாள கூப்ட்டு இந்த கேஸோட இன்வெஸ்ட்டிகேஷன நானே டேக்கோவர் பண்ணிக்கறேன்னு சொல்லிட்டேன். அதோட உங்களையும் என்னோட ஆஃபீசுக்கு ஸ்பெஷல் ட்யூட்டியா போட்ருக்கேன்னும் சொல்லியாச்சி. நீங்க CCBல வேல முடிஞ்சதும் நேரா ஸ்டேஷனுக்கு போயி இந்த கேஸ் டைரியயையும் இது சம்பந்தமான இருக்கற எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வந்துருங்க... இந்த கேஸ் முடியற வரைக்கும்...... அப்புறம் என்ன பண்றதுன்னு டிசைட் பன்ணிக்கலாம்.'

'பெருமாள் சார் ஒன்னும் சொல்லலையா சார்?' என்றார் தன்ராஜ் தயக்கத்துடன்.

'அவர் என்னங்க சொல்றது?' என்றார் எஸ்.பி. சற்று எரிச்சலுடன்.... 'Why worry about that....? நீங்க நா சொன்னத செஞ்சிட்டு ரிப்போர்ட் பண்ணுங்க....' 

அவரை பதில்பேச அவகாசம் அளிக்காமல் இணைப்பை எஸ்.பி. துண்டிக்க அமைதியாகிப் போன செல்ஃபோனை இடுப்பிலிருந்த உறையில் சொருகிக்கொண்டு சென்னை மத்திய சைபர் க்ரைம் செல் அலுவலகத்தை நோக்கி விரைந்தார் தன்ராஜ்.

தொடரும்


29 அக்டோபர் 2013

சொந்த செலவில் சூன்யம் - 61


'இவர் சொல்றது சரிதான்... நா அந்த ஆங்கிள்ல இத உங்கக்கிட்ட போட்டு காட்டல.... இப்போ இந்த கேஸ்ல போலீஸ்க்கு இருக்கற ரெண்டு மெய்ன் விட்னசஸ் இவங்க ரெண்டு பேரும்தான். இவங்க ஸ்டேட்மென்ட்லருந்து நா டிரைவ் (derive) பண்ணத சொல்றேன்.... கேட்டுட்டு சொல்லுங்க.' என்ற ராஜசேகர் தன் குறிப்பேட்டை எடுத்து அதில் முந்தைய இரவு குறித்து வைத்திருந்ததை ஒருமுறை பார்த்துவிட்டு தொடர்ந்தான். 

மாதவியோட மரணத்திற்கு அவருடைய தலைக்கு பேக்சைடுல இருக்கற ரெண்டு காயங்கள்தான் காரணம்னு பி.எம். ரிப்போர்ட் சொல்லுது. அந்த இரண்டு காயங்களுக்கு இடையில குறைந்தது அரை மணி நேரமாவது இருந்துருக்கணும்னும் சொல்லியிருக்காங்க. மரணம் இரண்டாவது அடிபட்ட நேரத்துலருந்து ஒரு மணி நேரத்துக்குள்ள அதாவது சுமார் எட்டு, எட்டரைக்குள்ள நடந்திருக்கலாம்கறது பி.எம் பண்ண டாக்டரோட அப்சர்வேஷன். அந்த ஆங்கிள்ல பாத்தா முதல் அடி சுமார் ஆறுலருந்து ஆறரைக்குள்ளயும் இரண்டாவது அடி ஆறே முக்கால்லருந்து ஏழு மணிக்குள்ளயும் நடந்துருக்கணும். 

ஆனா 

'1. கோபால் அன்னைக்கி சாயந்தரம் ஆறு மணிக்கி மாதவி வீட்லருந்து போனப்போ மாதவி வீட்டு வாசல் வரைக்கும் வந்து வழியனுப்புனத குமார் பாத்ததா சொல்றார். சோ..... மாதவி அந்த டைம்ல உயிரோடத்தான் இருந்துருக்காங்க.

2.அன்னைக்கி ராத்திரி ஏழு மணிக்கி மாதவி வீட்டோட நெய்பர் மிசஸ் ராகவன் அந்த வீட்டுக்கு முன்னால நாங்க பாத்தது கோபால இல்ல முருகேசனத்தான்னு சொல்றாங்க. இதுலருந்து கோபால் மறுபடியும் பர்ட்டிக்குலரா ரெண்டாவது வூன்ட் பட்ட நேரத்துலயும்  அந்த ஸ்பாட்டுல இல்லைங்கறதும் ப்ரூவ் ஆகுது. 

இதுலருந்து மாதவி தலையிலருக்கற ரெண்டு வூன்ட்ஸுக்கும் கோபால் காரணமா இருக்க முடியாதுங்கறது தெரியுது. இந்த டேப்ஸ்ல இருக்கறா மாதிரியே இவங்க ரெண்டு பேரும் கோர்ட்ல சொல்ல விடாம பிபி தடுக்க ட்ரை பண்ணாலும் அவங்கள கிராஸ் எக்ஸாமின் பண்றப்போ நா வெளியில கொண்டு வர்றத யாராலயும் தடுக்க முடியாது. இதுல இன்னொன்னையும் கவனிக்கணும்.  குமார் ஏற்கனவே மஜிஸ்டிரேட் முன்னால ஸ்வார்ன் ஸ்டேட்மென்ட் (sworn statement) குடுத்தாச்சி. அதனால ஹோஸ்டைல் விட்னசுன்னு பிபி சொன்னாலும் அத ஏத்துக்கறதும் ஏத்துக்காததும் ஜட்ஜ பொறுத்தது. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ஜஸ்டிஸ் மூர்த்தி சார் (செஷன்ஸ் ஜட்ஜ்) இத நிச்சயம் கன்சிடர் பண்ணுவார். அதனால இந்த ரெண்டு பேர் சொன்னத கேட்டதுக்கப்புறமும் கோபால்  மேல ஃபைல் பண்ணிருக்கற கேஸ கன்டினியூ பண்றது எந்த அளவுக்கு சரின்னு நீங்கதான் டிசைட் பண்ணணும்....'

ராஜசேகரின் விளக்கமான பதிலை கேட்ட எஸ்.பி. 'சேகர் சொல்றதுலயும் பாய்ன்ட் இருக்கு தன்ராஜ்.' என்றார்.

''நா இல்லேன்னு சொல்லலை சார்....' என்ற தன்ராஜ் ஒரு சில நொடிகள் சிந்தனையில் ஆழ்ந்தார். 

வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு இருக்கும் சூழலில் அதை வாபஸ் பெறுவதற்கு அதை நடத்தும் வழக்கறிஞரின் அனுமதி நிச்சயம் வேண்டும். ஆனால் அது பிபி வேணுவிடமிருந்து கிடைக்க வாய்ப்பே இல்லை. மேலும் இந்த ஒலிநாடாக்கள் விஷயம் இன்ஸ்பெக்டர் பெருமாளுக்கோ அல்லது பிபி வேணுவுக்கோ தெரியவந்தால்  அதை தங்களிடம் உடனே சொல்லாமல் மறைத்தது ஏன் என்ற கோபிக்கவும் வாய்ப்புள்ளது. இவற்றை எஸ்.பி சந்தானத்தின் முன்பு இட்டுக் காட்டியபோது நாமும் அங்கு இருந்தோம் என்று தெரியவந்தால் வேறு வினையே வேண்டாம். போறாததற்கு இந்த இரண்டு ஒலிநாடாக்களின் பின்னால் இந்த வழக்கின் எதிரியான கோபாலின் வழக்கறிஞர் இருப்பது தெரியும்போது அவர்கள் எப்படி அதை கண்ணோக்குவர் என்பதும் சிந்திக்க வேண்டிய விஷயம். தன்னை இந்த வழக்கிலிருந்து ஓரங்கட்டிவிடுவது என்று பெருமாள் நினைத்திருந்ததும் அவருக்கு தெரியும். அதனால்தான் இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளபோதே இரண்டு தினங்களுக்கு முன்பு வேறொரு வழக்கு விசாரணையை பெருமாள் தன்னிடம் ஒப்படைத்ததையும் நினைவுகூர்ந்தார். ஆனால் அந்த விஷயம் எஸ்.பிக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆகவே இந்த தர்மசங்கடமான சூழலில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வது எப்படி என்பதிலேயே தன்ராஜின் சிந்தனை சென்றது. 

'என்ன தன்ராஜ்..... என்ன யோசனை?' என்றார் எஸ்.பி. 

'இல்ல சார்.....இதுல ஃபர்தரா என்ன செய்யலாம்னு.......'

'இதுல இவ்வளவு டீப்பா திங்க் பண்றதுக்கு ஒன்னுமில்லை தன்ராஜ்......' என்று சற்று எரிச்சலுடன் கூறிய எஸ்.பி. தொடர்ந்தார். 'I fully endorse Sekar's view that Gopal is not guilty in this... நீங்களும் பெருமாளும் பிபியோட ஒக்காந்து இந்த கேஸ கன்டினியூ பண்றதா வேணாமான்னு டிஸ்கஸ் பண்ணுங்க... அதுக்கு பிபி ஒத்துக்காமாட்டார்னு நீங்க நினைச்சா.... முருகேசன பத்தி ராஜசேகருக்கு தெரிஞ்ச விஷயங்கள கேட்டுக்கிட்டு அவர டிரேஸ் பண்ணி புடிக்க பாருங்க.... இந்த ரெண்ட தவிர ஒங்களுக்கு வேற அவென்யூ ஒன்னுமில்லை..... என்ன சொல்றீங்க?' 

எஸ்.பியின் குரலில் இருந்த கண்டிப்பு தன்ராஜை சற்று அதிர்ச்சியடையச் செய்தது. ஏனெனில் இந்த இரு ஒலிநாடாக்கள் மட்டுமே கோபாலை நிரபராதி என்று முடிவு செய்ய போதும் என்ற முடிவுக்கு அவர் வருவார் என்று தன்ராஜ் எதிர்பார்க்கவில்லை. அதுவுமில்லாமல் பிபி வேணுவின் விருப்பப்படி சாட்சிகளை உண்மைக்கு புறம்பாக சாட்சியம் அளிக்கும்படி என்னால் பயிற்றுவிக்க முடியாது என்ற நிலையை அவர் எடுத்ததுமே அந்த வழக்கிலிருந்தே விடுபட்டால் போதும் என்று நினைத்துத்தானே எஸ்.பியின் தலைமையில் ஏற்படுத்தப்பட்டிருந்த சிறப்பு விசாரணைக் குழுவில் இணைந்து பணியாற்ற தனக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டுமென்று கேட்டிருந்தார்? ஆகவேதான் ஆய்வாளர் பெருமாள் சில தினங்களுக்கு முன்பு வேறொரு வழக்கை தன்னிடம் ஒப்படைத்தபோது விட்டால் போதும் என்று நிம்மதியடைந்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையில் மீண்டும் எப்படி இறங்குவது? இதற்கு பெருமாள் தலைமையில் இயங்கிக்கொண்டிருக்கும் நிலையத்திலுள்ளவர்களுடைய யாருடைய ஒத்துழைப்பும் கிடைக்க வாய்ப்பில்லையே? என்னடா இது தேவையில்லாத சோதனை என்று தனக்குள்ளே நொந்துப்போனார் அவர். 

'நா கிளம்பலாமா சார்?' என்ற ராஜசேகரின் குரல் அவரை நனவுலகுக்கு இழுத்து வந்தது. 

'ஒரு நிமிஷம் சேகர்.' என்ற எஸ்.பி சந்தானம் மீண்டும் அமைதியாகிப்போன தன்ராஜை சற்று எரிச்சலுடன் பார்த்தார். 

அவருடைய பார்வையின் தாக்கத்தை உணர்ந்த தன்ராஜ் ராஜசேகரிடம், 'இந்த ரெண்டு பேரையும் உங்களுக்கு தெரிஞ்சத சொல்ல முடியுமா சார்?' என்றார்.

ராஜசேகர் பதிலளிப்பதற்கு முன்பு எஸ்.பி. இடைமறித்தார். 'எனக்கு அர்ஜன்டா ஒரு மீட்டிங் இருக்கு.... அதனால ஒன்னு பண்ணுங்க..... இதே ஃப்ளோர்லருக்கற மினி மீட்டிங் ரூம்ல ஒக்காந்து ஃபர்தரா எப்படி ப்ரொசீட் பண்றதுன்னு டிஸ்கஸ் பண்ணுங்க. நா கெளம்பறேன்.'

அவர்கள் இருவருடைய பதிலுக்கும் காத்திராமல் எழுந்த எஸ்.பி. விடுவிடுவென அந்த அறையிலிருந்து வெளியேறி வாசலில் அமர்ந்திருந்த காவலரிடம், 'வண்டிய போர்ட்டிக்கோவுக்கு கொண்டு வரச் சொல்லுய்யா... கமிஷனர் ஆஃபீசுக்கு போணும்....' என்றவாறு வலப்புறம் திரும்பி லிஃப்டை நோக்கி நடந்தார். 

அறையில் தனித்து விடப்பட்ட தன்ராஜும் ராஜசேகரும் ஒருவரையொருவர் பார்த்தவாறு நின்றிருந்தனர். 

பிறகு இருவரும் அறையிலிருந்து வெளியேறி சந்தானம் பரிந்துரைத்திருந்த கூட்டம் நடத்தும் அறையை கண்டுபிடித்து அதனுள் நுழைந்தனர்.

சுமார் இருபதடி நீள, அகலத்துடன் இருந்த அறையில் நடுவில் நீள் சதுர வடிவில் ஒரு மேசையும் அதன் இருமருங்கிலும் சுமார் இருபது பேர் தாராளமாக அமர்ந்து உரையாட இருக்கைகளும் இருந்ததை கவனித்தனர். அறையின் இடப்புறச் சுவரில் ஒரு வெண் திரையும் அதன் முன்னால் ஐந்தடி தூரத்தில் ஒரு ஓவர்ஹெட் ப்ரொஜெக்டரும் வைக்கப்படிருந்தது. தன்ராஜும் ராஜசேகரும் மேசையின் எதிரும் புதிருமாக அமர்ந்தனர். 

இவருடன் சேர்ந்து நாம் இந்த அறையில் அமர்ந்திருப்பது பிபிக்கோ அல்லது பெருமாளுக்கோ தெரியவந்தால் என்னாவது என்ற சிந்தனையில் தன்ராஜும் இவர நாம கோர்ட்ல பண்ண டார்ச்சருக்கு இந்தாள் நம்மள ஏதாச்சும் டார்ச்சர் பண்ணுவாரோ என்கிற சிந்தனையில் ராஜசேகரும் அமர்ந்திருக்க அவர்கள் இருவர் இடையிலும் ஒரு தர்மசங்கடமான அமைதி நிலவியது. 

அதை கலைக்கும் எண்ணத்துடன் ராஜசேகர் எழுந்து தலைக்கு மேல் இருந்த மின்விசிறிகளில் ஒன்றை ஓடவிட்டுவிட்டு அமர்ந்து தன்ராஜை பார்த்தான். 'சம்மர் முடியப் போவுதுன்னுதான் பேரு..... ஃபேன் இல்லாம இருக்க முடியல, இல்ல?' என்றான்.

இதற்காகவே காத்திருந்ததைப் போல் ராஜசேகரைப் பார்த்து புன்னகைத்தார் தன்ராஜ். 'ஆமா சார்.... நீங்களாவது பரவால்லை கேஷுவல் டிரஸ்ல இருக்கீங்க.... இந்த யூனிஃபார்ம்ல..... தாங்க முடியல.....'

ஒருவழியாக அவர்களுக்கிடையில் இருந்த திரை விலக இருவரும் சகஜ நிலைக்கு வந்தனர். 

தன்ராஜ் எஸ்.பி அறையில் தன்னிடம் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தான். 'முருகேசன் என்னோட பழைய க்ளையன்ட் சார்.... ரெண்டு ஃபோர்ஜரி கேஸ்லருந்து நாந்தான் அவனெ ரெஸ்க்யூ பண்ணேன்.... இனியும் இந்த மாதிரி கேஸ்ல மாட்டிக்கிட்டு எங்கிட்ட வந்தா நா டிஃபென்ட் பண்ண மாட்டேன்னு வார்ன் பண்ணி அனுப்புனேன்.... அதுக்கப்புறம் அவன்கிட்டருந்து எந்த கான்டாக்டும் இல்ல.....' 

'ராமராஜன்?'

'அவர் இந்த கேஸ் விஷயமா மீட் பண்ணப்பத்தான் பழக்கம்.'

'ஓ!' என்ற தன்ராஜ், 'இவங்க ரெண்டு பேருக்கும் இடையில கான்டாக்ட் இருந்தது ஒங்களுக்கு எப்ப தெரியும்?'

'தெரியாதுங்க..... நேத்து குமாரோட ஸ்டேட்மென்ட கேட்டதுக்கப்புறம்தான் தெரியும்.' அவன் ராகவனை சந்தித்த அன்றே இதைப்பற்றி லேசான ஐயம் ஏற்பட்டிருந்தாலும் அதை மேலும் உறுதிப்படுத்தியது குமாரின் வாக்குமுலம்தான். 

அவன் கூறிய பதிலை மனதுக்குள் அசைபோட்டவராய் அமர்ந்திருந்தார் தன்ராஜ். அவருடைய போலீஸ் மூளை ராஜசேகர் 

தன்னிடம் இருந்து எதையோ மறைக்கிறார் என்பதை உணர்த்தியது..... ஆனாலும் அவரை ஒரு குற்றவாளி போன்று விசாரிக்க மனம் வரவில்லை. அதற்கு இவரும் நம்முடைய ஊரைச் சார்ந்தவராயிற்றே என்ற பரிவும் இவர் சந்தானத்திற்கும் நெருக்கமானவர் என்ற எச்சரிக்கை உணர்வும் காரணம். 

'என்ன சார்.... என்ன யோசனை? இவர் சொல்றத எந்த அளவுக்கு நம்பலாம்னா?' என்றான் ராஜசேகர் புன்னகையுடன்...

'சேச்சே அப்படியில்ல...' என்று அவசரமாக மறுத்தார் தன்ராஜ்..

'நீங்க நெனக்கறது ஓரளவுக்கு சரிதான்....' என்ற ராஜசேகர் தன் கைப்பெட்டியிலிருந்து முருகேசனின் செல்ஃபோன் கால் லிஸ்ட்டை எடுத்து நீட்டினான். 'ராகவன் கிட்டருந்துதான் முருகேசனோட செல்ஃபோன் நம்பர் கிடைச்சிது... குமார் எங்கள கூப்டறதுக்கு முன்னாலயே நம்ம சோர்ஸ் வழியா இந்த லிஸ்ட எடுத்துட்டோம்..... இத பாத்ததுக்கப்புறந்தான் முருகேசனுக்கும் ராமராஜனுக்கும் இடையில இருக்கற ரிலேசன்ஷிப் தெரிஞ்சிது.....'

அவன் நீட்டிய பட்டியலை வாங்கி மேலோட்டமாக வாசித்த தன்ராஜ் அதில் ராமராஜனின் செல்ஃபோன் எண் கடந்த இரு வாரங்களில் மட்டும் பலமுறை இருந்ததைக் கண்டார். கோபாலின் எண்ணும் கூட அதில் பல முறை தென்பட்டதை கவனிக்க தவறவில்லை. 'போலீச விட டீப்பாவே போயிருக்கீங்க?' என்றார் புன்முறுவலுடன்.

'அக்யூஸ் பண்றத விட டிஃபென்ட் பண்றது ரொம்ப கஷ்டம் சார்.' என்றான் ராஜசேகர் அதே புன்னகையுடன். 

தன்ராஜ் தன்னையுமறியாமல் சிரித்தார். 'இந்த லிஸ்ட நா வச்சிக்கலாமா?' 

'இல்ல சார்.... இந்த கேஸ் முடியற வரைக்கும் இது வேண்டியிருக்கும்.... உங்களால முடியாத விஷயமா இது? CCBல சொன்னாத்தான் ஒரு செகன்ட்ல கிடைச்சிருமே....'

'அதுவும் சரிதான்... இவங்க ரெண்டு பேரோட ஃபோன் நம்பரஸ மட்டும் நோட் பண்ணிக்கிறேன்.... சிம் கார்ட சேஞ்ச் பண்ணியிருந்தாலும் IMIE வச்சி இப்ப எங்க இருக்காங்கன்னு ட்ரேஸ் பண்ண யூசாவும்...'

'யூ மீன் எங்க இருக்கான்னு?' 

தன்ராஜ் புரியாதவர்போல் பார்த்தார். 'அப்படீன்னா?'

ராஜசேகர் சிரித்தான். 'ராமராஜன் இருக்கற எடம்தான் தெரியுமே..... இனி தெரிய வேண்டியது முருகேசன் எடம்தான?'

'ஓ!' என்று தன்ராஜும் சிரித்தார்.....'நல்ல ஜோக்.'

இதே மூடில் விடைபெறுவதுதான் நமக்கு நல்லது என்று நினைத்த ராஜசேகர் எழுந்து நின்றான். 'நைஸ் மீட்டிங் யூ சார்..... அன்னைக்கி கோர்ட்ல நடந்தத மறந்துருப்பீங்கன்னு......'

தன்ராஜின் முகம் சட்டென்று மாறினாலும் அடுத்த நொடியே சகஜ நிலைக்கு திரும்பி ராஜசேகரை நோக்கி கையை நீட்டினார். 'அத அப்பவே மறந்துட்டேன்.... நீங்க ஜட்ஜ இம்ப்ரஸ் பண்றதுக்கு செஞ்ச டிராமாங்கறது எனக்கு நல்லாவே தெரியும்!'

இதை சற்றும் எதிர்பாராத ராஜசேகர் உரக்க சிரித்தான். 'Touch!' என்றான்..... தன்ராஜின் கரத்தைப் பற்றி குலுக்கிவிட்டு வாசலை நோக்கி நடந்தான். 'ஏதாச்சும் ஹெல்ப் வேணும்னா சொல்றீங்களா?'

'கண்டிப்பா.....' என்ற தன்ராஜ் சட்டென்று, 'எதுக்கும் கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க ராஜசேகர்.' என்றார்.

வாசல்வரை சென்ற ராஜசேகர் நின்று திரும்பி பார்த்தான். 'எதுக்கு?' என்றான் வியப்புடன்.

'முருகேசனுக்கு நீங்களும் ஒருவிதத்துல எனிமிதான்.... மறந்துராதீங்க.'

அவர் சொன்னதில் இருந்த உள்ளர்த்தம் அவனுக்கு புரிந்தது. உண்மைதான்..... தன் மீது முன்விரோதம் ஏற்கனவே இருந்தது என்பதுடன் இந்த வழக்கில் கோபால் சார்பாக நாம் ஆஜராவதும் அவனை சீண்டி விட்டிருக்க வாய்ப்புள்ளது. 

'நீங்க சொன்னதும்தான் எனக்கும் இதுலருக்கற சீரியஸ்னஸ் புரியுது...... அவனெ நீங்க அரெஸ்ட் பண்ற வரைக்கும் நானும் கூட கேர்ஃபுல்லாத்தான் இருக்கணும் நினைக்கேன்.' என்ற ராஜசேகர் 'இன்னொரு விஷயமும் இருக்கு சார்.' என்றான். 

'சொல்லுங்க..'

தொடரும்..

28 அக்டோபர் 2013

சொந்த செலவில் சூன்யம் - 60

'இல்ல பாஸ்.... நாமளும் ஒருதடவ பாடிய பாத்துட்டா நல்லதுன்னு நெனச்சேன்......' என்றான் வசந்த்.

'நாம பாத்து என்ன பண்றது?' என்று வினவினான் ராஜசேகர். 'அதுமட்டுமில்ல. நாம அங்க போனாலும் நம்மள அலவ் பண்ணணுமே? '

'அதுவும் சரிதான்... அதோட இந்த விஷயம் தன்ராஜுக்கோ இல்ல இன்ஸ்பெக்டர் பெருமாளுக்கோ தெரியுமான்னு தெரியலையே?'

அதுவும் ஒரு பிரச்சினையாயிற்றே என்று ஒரு சில நொடிகள் யோசித்த ராஜசேகர் ஒரு முடிவுக்கு வந்தான். 'நம்ம கேஸ் முடியற மட்டும் நம்ம கிட்ட இருக்கற டேப்ஸ போலீஸ் கிட்ட குடுக்க வேணாம்னு நினைச்சிக்கிட்டிருந்தோம் இல்ல? அந்த ஐடியாவ மாத்திக்க வேண்டியதுதான் போலருக்கு.'

'அதாவது இப்பவே அத போலீஸ் கிட்ட குடுத்துறலாம்னு சொல்றீங்களா பாஸ்?'

'ஆமா.... ஆனா E1 போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கறவங்கக் கிட்ட இல்ல..... நேரா எஸ்.பிக்கிட்ட குடுத்துறலாம்.... அவர் அநேகமா இத தன்ராஜ்கிட்டதான் ஹேன்டோவர் பண்ணுவார்..... என்ன சொல்ற?'

'நீங்க சொல்றது சரிதான் பாஸ்... ஆனா இந்த விஷயம் பெருமாளுக்கும் அவர் மூலமா பிபிக்கும் தெரிய வந்தா என்ன நடக்கும்னு தெரியுமில்ல? இந்த டேப்ஸையே எரேஸ் பண்ணி கோபாலுக்கும் இந்த லேட்டஸ்ட் மர்டருக்கும் கூட முடிச்சி போட்ருவாங்க....'

'டேய்.... யோசிக்காம பேசாத..... டேப்ப எரேஸ் பண்ணா மட்டும் இத முழுசா மறைச்சிற முடியுமா? குமாரோட ஸ்டேட்மென்ட்தான் மஜிஸ்டிரேட் கிட்ட இருக்கே....'

'அட ஆமால்ல? அத நா மறந்தே போய்ட்டேன்.... சாரி பாஸ்.'

'நல்லா மறந்தே போ.... இப்பல்லாம் ஒனக்கு எல்லாமே மறந்துப்போயிருது....'

'சாரி பாஸ்.....' என்று மன்னிப்புக் கோரிய வசந்த், 'எஸ்.பிய நீங்க பாக்கப் போறப்ப நானும் வரட்டுமா பாஸ்?'

வசந்த் கூறியதை சற்று நேரம் மனதுக்குள் அசைபோட்ட ராஜசேகர் இவன் வந்தால் நம்மால் எஸ்.பியிடம் மனம் திறந்து பேச முடியாமல் போய்விடுமோ என்று நினைத்தான். அவருடன் பேசும்போது குறிப்பாக யார் அந்த முருகேசன், ஒங்களுக்கு அவனெ எப்படி தெரியும் என்று அவர் கேள்வி கேட்டால்? ஒருவேளை நமக்கும் மாதவிக்கும் இடையிலிருந்த உறவை விவரிக்க வேண்டி வந்தால்? மேலும் கோபால் அன்று மாலை ஆறு மணிக்கு மாதவியின் வீட்டிலிருந்து வெளியேறியதை பார்த்ததாக குமார் கூறுவதை எப்படி நம்புவது என்று எஸ்.பி கேள்வி எழுப்பும் பட்சத்தில் அதை நானும் பார்த்தேன் சார் என்று கூற வேண்டி வந்தால்? ஆகவே நாம் மட்டும் தனியாக செல்வதுதான் உசிதம் என்று முடிவு செய்தான். அதே சமயம் தன்னுடைய உதவியாளனாக இரு என்று வசந்தைக் கேட்டுவிட்டு இப்படிப்பட்ட சமயங்களில் அவனை வேண்டாம் என்று ஒதுக்குவது முறையா என்ற கேள்வியும் எழுந்தது.

'பாஸ்?' 

'இல்லடா.....இப்போதைக்கி வேணாம்.... நா முதல்ல ஃபோன் பண்ணி பாக்கறேன்.... அவர் நேர்ல வாங்கன்னு சொன்னா உன்னெ கூப்டறேன்...'

'சரி பாஸ்.... அப்ப வச்சிடறேன்.'

'சரிடா... தேவைப்பட்டா காலையில கூப்டறேன்... குட்நைட்..' என்று இணைப்பைத் துண்டித்த ராஜசேகர் கேள்விக்குறியுடன் தன்னையே பார்த்தவாறு நின்ற கோக்கிலாவைப் பார்த்தான். 'நீ படுக்க போவல?' 

'இல்லைங்க தூக்கம் வரல....  நீங்க திரும்பி வந்த சத்தம் கேட்டதும் வந்தேன்.... எங்கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க.... ஒங்க முகம் சட்டுன்னு ஷாக்கான மாதிரி மாருச்சே... அதான்...'

'அது ஒன்னுமில்லை... கோபாலோட பி.ஏவ யாரோ மர்டர் பண்ணிட்டாங்களாம்......'

'அடப் பாவமே.... என்னங்க இந்த கேஸ் இப்படி படுத்துது?'

'சரி....நீ போய் படு.... நா இன்னொரு ஃபோன் பண்ணிட்டு வரேன்...' என்ற ராஜசேகர் அவள் படுக்கையறைக்குள் சென்று கதவை மூடும் வரை காத்திருந்துவிட்டு எஸ்.பி. சந்தானத்தை அழைத்தான். 

ராஜசேகர் பலமுறை முயன்றும் எதிர்முனையில் எஸ்.பி ஃபோனை எடுக்கவேயில்லை. மணியைப் பார்த்தான். இரவு பதினோரு மணியை கடந்திருந்தது. ஒருவேளை சைலன்டில் போட்டுவிட்டு மறந்திருப்பாரோ என்று நினைத்து தான் அவருடன் பேச விரும்புவதாக ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினான். அவன் நினைத்திருந்ததுபோலவே அடுத்த நொடியே அழைப்பு வந்தது. 'சைலன்ட் மோட்ல போட்டு வச்சிருந்தேன்.... அதான் எடுக்கல... சொல்லுங்க என்ன விஷயம்?'

'ஏதாவது மீட்டிங்ல இருக்கீங்களா சார்? நா வேணும்னா காலையில கூப்டட்டுமா?'

'இல்ல.... இப்பத்தான் ஒரு மீட்டிங்லருந்து வந்தேன்..... வீட்டுக்கு வந்தாச்சு.... சொல்லுங்க..'

'சார் அந்த மாதவி கொலை கேஸ்ல..... அக்யூஸ்ட் கோபாலோட பி.ஏ. ராமராஜன்..'

'ஆமா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் ஃபோன் வந்துது. அந்த விஷயமாத்தான் கூப்ட்டீங்களா?'

'ஆமா சார்....'

'சொல்லுங்க.... உங்கக்கிட்ட ஏதாச்சும் க்ளூ இருக்கா?'

'இருக்கும்னுதான் தோனுது சார்....' என்று தயக்கத்துடன் துவங்கிய ராஜசேகர் இனியும் தயங்குவது முறையல்ல என்று முடிவு செய்து தன்னிடமுள்ள ஒலிநாடாக்களின் விவரத்தை அவரிடம் சுருக்கமாக கூறினான். 'நா இந்த டேப்ஸ மாதவி கொலை கேஸ் முடிஞ்சதும் குடுத்துறலாம்னு இருந்தேன்.... ஆனா ராமராஜனோட மர்டருக்கப்புறம்...... இனியும் டிலே பண்ணா சரிவராதுன்னு நினைச்சித்தான் கூப்ட்டேன்.....'

சந்தானம் மறுமுனையில் ஒரு சில நொடிகள் பதிலளிக்காமல் மவுனம் காத்தது ராஜசேகரை சங்கடப்படுத்தியது. 

'சார்...' என்றான் மீண்டும்.

'நீங்க செஞ்சது உங்க சைடுலருந்து பார்த்தா நியாயமா படலாம் ராஜசேகர்.... ஆனா ஒங்களுக்கு விஷயம் தெரியவந்தவுடனேயே போலீசுக்கு சொல்லியிருந்தா ஒரு உயிர காப்பாத்தியிருக்கலாமில்ல...? மாதவியோட மர்டர் கேஸ்லயும் உண்மையான குற்றவாளியாருன்னு கண்டுபுடிச்சிருக்கலாமே....?' அவர் குரலில் இருந்த போலீஸ் கண்டிப்பு ராஜசேகரை ஒரு நிமிடம் நிலைகுலைய வைத்தது..... அவர் நினைத்தால் ஒரு குற்றவாளியை போலீசிடமிருந்து வேண்டுமென்றே மறைத்த குற்றத்திற்காக தன் மீதே நடவடிக்கை எடுக்க முடியுமே என்று நினைத்தான்....

எப்படி பதிலளிப்பது என தெரியாமல், 'I am really sorry Sir...' என்றான்....

ஆனால் அடுத்த நொடியே சந்தானம் சமாதானமடைந்தது அவனுக்கு நிம்மதியைத் தந்தது. 'It's OK.... நீங்க வேறெந்த நோக்கத்தோடயும் இத மறைச்சிருக்க வாய்ப்பில்லை.....This is how most of the criminal lawyers function.....உங்களுக்கு உங்க கட்சிக்காரன்தான் முக்கியம். உங்க கட்சிக்காரனே தன்னோட குத்தத்த ஒத்துக்கிட்டாலும் அவனுக்காக வாதாடி ஜெயிக்கற உங்கள மாதிரி லாயர்ஸ் இருக்கறதாலதான நிறைய கேசுங்கள்ல உண்மையான குத்தவாளிங்க தப்பிச்சிக்கிறாங்க....? அதே சமயம் க்ரிமினல் லாயர்ஸ் எடுத்துக்கற அளவு எஃபர்ட்ஸ் (efforts) போலீஸ் எடுத்துக்கறதில்லைங்கறதும் உண்மைதான்......'

அவர் கூறியதிலிருந்த உண்மை அவனுக்கு புரியாமலில்லை.... ஆனால் அதுதான் யதார்த்தம்.... ஒரு குற்றவியல் வழக்கறிஞரின் வேலையே அதுதானே...? சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய கடமை அவனுக்கில்லையே....? அதை நிலைநாட்ட வேண்டிய போலீஸ் சரியாக நேர்மையுடன் செயல்பட்டால் க்ரிமினல் வழக்கறிஞர்கள் எத்தனை திறன் படைத்தவர்களாக இருந்தாலும் குற்றவாளி தண்டனையிலிருந்து தப்பிக்க வாய்ப்பில்லையே....? ஒரு குற்றவாளியை நிரபராதி என்று நிரூபிக்க க்ரிமினல் வழக்கறிஞர்கள் எடுக்கும் முயற்சிகளில் பாதியளவு முயற்சியாவது அவன் குற்றவாளிதான் என்று நிரூபிக்க போலீஸ் எடுத்தாலே போதுமே...!

எதிர்முனையில் இருந்து வந்த எஸ்.பி.யின் குரல் ராஜசேகரின் நினைவுகளை கலைத்தது. 'இப்ப அந்த ரெண்டு டேப்பும் உங்க கஸ்டடியில இருக்கா?'

'ஆஃபீஸ் சேஃப்ல வச்சிருக்கேன் சார்.... இப்பவே வேணும்னாலும் கொண்டுக்கிட்டு வரேன்....'

'வேணாம்.... நீங்க வர்ற சமயத்துல இந்த கேஸ டீல் பண்ற ஆஃபீசர்சும் இருந்தா நல்லதுன்னு ஃபீல் பண்றேன்... So... காலையில ஒரு பத்து பத்தரைக்கு ஃபோன் பண்ணிட்டு என்னோட ஆஃபீசுக்கு வந்துருங்க....'

இந்த கேஸ டீல் பண்றவங்கன்னு சொன்னா அந்த இன்ஸ்பெக்டர் பெருமாளும் வருவாரோ..... வேற வினையே வேணாமே? அவருக்கு தெரிஞ்சா அந்த பிபிக்கும் தெரிஞ்சா மாதிரிதான? 'சார்.... நா ஒன்னு சொல்லலாமா?' என்றான் தயக்கத்துடன்.

'சொல்லுங்க....' எஸ்.பியின் குரலில் லேசான எரிச்சல் தென்பட்டதை அவன் உணராமலில்லை... ஆனாலும் தன் மனதில் பட்டத்தை சொல்லிவிடுவோம் என்று முடிவு செய்தான்.

'மிஸ்டர் பெருமாளும் வர்றது.......' என்று இழுத்தான்.

'நீங்க சொல்ல வர்றது புரியுது..... நாளைய மீட்டிங்குக்கு தன்ராஜ மட்டும் இன்வைட் பண்றேன்.... போறுமா?' 

'தாங்ஸ்... சார்....'

'சரி.... வேற ஒன்னும் இல்லையே?'

'இல்ல சார்... குட்நைட்...' என்று பதிலளித்த ராஜசேகர் எதிர்முனையில் இணைப்பு துண்டிக்கப்படும் வரை காத்திருந்துவிட்டு தன் செல்ஃபோனை அணைத்துவிட்டு தன் படுக்கையறைக்குள் நுழைந்தான்....

********** 

அடுத்த நாள் காலை ராஜசேகர் தன் அலுவலகத்திற்குச் சென்று அங்கு பத்திரப்படுத்தி வைத்திருந்த இரண்டு ஒலிநாடாக்களையும் எடுத்துக்கொண்டு எஸ்.பி அலுவலகத்தைச் சென்றடைந்தபோது அவருடைய அறையில் எஸ்.ஐ. தன்ராஜும் இருந்ததை கவனித்தான். 

'வாங்க சேகர்.....' என்று எஸ்.பி. அவனை அழைத்து அவர் மேசை முன் இருந்த இருக்கைகளில் ஒன்றை காண்பிக்க தன்ராஜ் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடுத்திருந்த இருக்கையில் அமர்ந்து அவரிடம், 'குட்மார்ங்' என்றவாறு கையை நீட்டினான். அவர் உடனே எழுந்து புன்னகையுடன் பதிலுக்கு காலை வணக்கம் சொல்ல இருவரையும் பார்த்து எஸ்.பி  புன்னகைத்தார். 

ராஜசேகர் தன் கைப்பெட்டியை திறந்து அதிலிருந்த டேப்ரெக்கார்டரை எடுத்து முதலில் ராகவன் பேசிய ஒலிநாடாவையும் அதனையடுத்து குமார் பேசிய ஒலிநாடவையும் ஓடவிட்டான். 

இரண்டு ஒலிநாடாக்களும் ஓடி முடியும்வரை எஸ்.பி சந்தானமும் துணை ஆய்வாளர் தன்ராஜும் உன்னிப்பாக கேட்டவாறு அமர்ந்திருக்க ராஜசேகர் இதனால் ட்ரையல் கோர்ட்டிலுள்ள தன்னுடைய வழக்கிற்கு எவ்வித பாதிப்பும் வந்துவிடக்கூடாதே என்ற கவலையுடன் அமர்ந்திருந்தான். அத்துடன் எஸ்.பிய பாக்க போறப்போ என்னையும் 

கூட்டிக்கிட்டு போறேன்னு சொன்னீங்களே சார் என்று வசந்த் கேட்டால் அவனை எப்படி சமாளிப்பது என்ற எண்ணமும் அவனை வாட்டியெடுத்தது. 

'அவ்வளவுதானா, இன்னும் இருக்கா?' என்ற எஸ்.பி. யின் குரல் கேட்டு நினைவுகளிலிருந்து மீண்ட ராஜசேகர் ஓடிமுடிந்திருந்த டேப் ரிக்கார்டரை பார்த்தான். 'என்ன சார் கேட்டீங்க?' என்றான்.

எஸ்.பி பதிலளிக்காமல் ராஜசேகரை ஒரு சில நொடிகள் தன் போலீஸ் பார்வையால் துளைத்தார். 'என்ன ராஜசேகர் ஏதோ டீப்பா திங்க் பண்ணிக்கிட்டிருந்தீங்க போலருக்கு? என்ன விஷயம்?'

'பென்டிங்லருக்கற கேஸ்ல இதுனால ஏதாச்சும் ப்ராப்ளம் வந்துருமோன்னு.......'

எஸ்.பி அவனுடைய கேள்விக்கு பதிலளிக்காமல் தன்ராஜை பார்த்தார். 'என்ன சொல்றீங்க தன்ராஜ்?'

'தெரியல சார்.... இப்பத்தைக்கி ஒன்னும் சொல்ல முடியல.....இது ரெண்டுமே அவுட்சைட் கோர்ட் வாங்கப்பட்ட ஸ்டேட்மென்ட்ஸ்.  இத வாக்குமூலம்னு கூட சொல்ல முடியாது... இவங்க ரெண்டு பேரும் இதுல சொல்லியிருக்கறா மாதிரியே கோர்ட்ல சொல்லணும்...... அதுக்கு முன்னாடி பிபி இவங்க ரெண்டு பேரையுமே ஹோஸ்டைல் விட்னஸா டிக்ளேர் பண்ண வச்சிருவார்.... அதுக்கப்புறம் இவங்க சொல்றத டிஸ்ரிகார்ட் பண்ணணும்னும் ஆர்க்யூ பண்ணுவார். ஜட்ஜ் இத எப்படி எடுத்துக்குவார்னு தெரியல.....'

இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க என்பதுபோல் ராஜசேகரைப் பார்த்தார் எஸ்.பி.


தொடரும்..

27 அக்டோபர் 2013

சொந்த செலவில் சூன்யம் - 59

'எதுக்கு அப்படி சொல்றீங்க?' என்றான் ராஜசேகர். இவர் கிட்டயும் தன் கைவரிசையை காட்டியிருப்பான் போலருக்கு...

'ஒரு மூனு வருசத்துக்கு முன்னால.... 2010 கடைசின்னு நினைக்கிறேன்.... நமக்கு தெரிஞ்ச ஒருத்தர் அவனெ எங்கிட்ட அறிமுகம் செஞ்சி வச்சார்..... அக்கவுன்ட்ஸ் எல்லாம் நல்லா பாப்பான்..... ஒங்க கம்பெனிக்கு ஒர் அக்கவுன்டன்ட் வேணும்னு சொல்லிக்கிட்டிருந்தீங்களே அதான் கூட்டியாந்தேன்னு சொன்னார்.... அவர் நமக்கு நல்லா தெரிஞ்சவர்ங்கறதால இவன சேத்துக்கிட்டேன்.....அக்கவுன்ட்ஸ் மட்டுமில்லாம பேங்க் டீலிங்க்ஸ்லாம் கூட அவன் வழியாத்தான்..... நாலஞ்சி மாசம் நல்லாத்தான் வேல பாத்தான். அதுக்கப்புறம் திடீர்னு அப்ஸ்கான்டாய்ட்டான்..... ரெண்டு மூனு வாரமா வரலை... ஒரு ஃபோன் கூட பண்ணாம  நின்னுட்டானேன்னு நினைச்சேன்..... அப்புறந்தான் தெரிஞ்சிது அவன் செஞ்சிருந்த வேலை..... ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேல சுருட்டியிருக்கான்.... அதுக்கப்புறம் அவனெ ரெக்கமன்ட் பண்ணவர்கிட்ட கேட்டா அப்படியா சார் எனக்கே இன்னொருத்தர்தான் இன்ட்ரொட்யூஸ் பண்ணார் சார்னு கழண்டுக்கிட்டார்.... அப்புறம் போலீஸ் வரைக்கும் போய் அவனெ தேடிப்புடிச்சோம்..... அவன் போலீசையே கணக்கு பண்ணி கேஸே இல்லாம செஞ்சிட்டான்..... நீங்க செக் புக் முழுசும் ப்ளாங்கா கையெழுத்த போட்டு இவன்கிட்ட குடுத்துட்டு இவன் கையாடல் பண்ணிட்டான்னு சொன்னா எப்படி சார்? கோர்ட்ல கேஸ் நிக்காது.... அதனால compromiseஆ போயிருங்க... எவ்வளவு முடியுமோ அத நாங்க அவன்கிட்ட இருந்து ரிக்கவர் பண்ணி தந்துடறோம்னு சொல்லி.....நாப்பதாயிரம் போல கலெக்ட் பண்ணி குடுத்துட்டு கம்ப்ளெய்ன்ட திருப்பி வாங்கிக்குங்கன்னு கம்பெல் பண்ணாங்க... கோபாலும் சரி விட்றலாம்பா ரவுடி மாதிரி பேசறான்னான்.... சரின்னுட்டு அத்தோட விட்டுட்டேன்....'

அவர் இறுதியாக சொன்ன கோபாலும் 'சரி விட்றலாம்பா' என்ற வரிகள் ஒருவேளை இதற்கு கோபாலும் உடந்தையாக இருந்திருப்பாரோ என்று நினைக்கத் தோன்றியது. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், 'சரி சார்.... இன்னொரு கேள்வி.... இப்ப கோபாலோட பிஏவா இருக்கற ராமராஜன் ஒங்க கம்பெனியில ரொம்ப நாளா இருக்காரா?' என்றான்.... 

'ரொம்ப நாள்னா.... ரெண்டு மூனு வருசம் இருக்கும் சார்..... முதல்ல மார்க்கெட்டிங்குக்காகத்தான் சேத்தோம்..... ஆளுங்கள கன்வின்ஸ் பண்றா மாதிரி பேசறதுல அவன் கில்லாடி..... எதுக்கு கேக்கறீங்க?'

'சொல்றேன்.... அவருக்கும் முருகேசனுக்கும் தொடர்பு ஏதாச்சும் இருக்க சான்ஸ் இருக்கா?'

'தெரியலயே சார்....' என்று பதிலளித்தார் சீனிவாசன்.

'எதுக்கு கேக்கறேன்னா அந்த  கோபாலோட வீட்ட பாக்கறதுக்கு முருகேசனும் மாதவியும் வந்தப்போ அவங்களுக்கு வீட்ட காட்டுனது ராமராஜந்தான்னு ராகவன் சொன்னார்...... அதான்....'

'இருக்கும் சார்.... ஏன்னா கோபால் அங்கருந்து ஷிப்ட் ஆனதும் வித்துறலாம்கற ஐடியாவுல அந்த ரெஸ்பான்சிபிளிட்டிய ராமராஜன்கிட்டதான் குடுத்துருந்தோம்..... ஆனா முடியல... சரி வாடகைக்கு விட்றலாம்னு டிசைட் பண்ணி ஹின்டுல ஆட் குடுத்தோம்.. அதுவும் அவர்தான் செஞ்சார்..... ஆட் வந்த அன்னைக்கி வீட்ட பாக்க வசதியா அவர்தான் அன்னைக்கி முழுசும் அங்க வெய்ட் பண்ணிக்கிட்டுருந்தார்னு நினைக்கிறேன்..... அப்போ வந்தவங்கள்ல இந்த பொண்ணும் இருந்துருக்கலாம்... ஆனா முருகேசன்தான் அந்த பொண்ண கூட்டிக்கிட்டு வந்தாங்கற விஷயம் நீங்க இப்ப சொன்னதுக்கப்புறந்தான் தெரியும்.... ஒருவேளை அப்பத்துலருந்து முருகேசன ராமராஜனுக்கு தெரிஞ்சிருக்கலாம்.....'

இதில் ஏதோ செட்டப் உள்ளது என்ற சந்தேகத்துடன் சில நொடிகள் யோசித்த ராஜசேகர் மணியை பார்த்தான். பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. 'ரொம்ப லேட்டாயிருச்சே சார்.....  மீதிய நாளைக்கி பேசலாமா?' என்றான்.

சீனிவாசனும் திரும்பி ஹால் சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தார். 'பரவால்லை சார்.... நா ராகவன் என்ன சொன்னார்னு கேக்க நினைச்சேன்.... ஆனா இப்ப நீங்க கேக்கற கேள்விங்க என்னெ இன்னும் கன்ஃப்யூஸ் பண்ணிருச்சி.... என்னன்னு தெரிஞ்சிக்காம தூக்கம் வராது சார்..... சொல்லுங்க எதுக்கு முருகேசன பத்தியும் ராமராஜன பத்தியும் கேக்கறீங்க?'

'எல்லாத்தையும் சொல்றேன்.... கடைசியா ஒரு கேள்வி.... ராமராஜன் ரெண்டு நாளைக்கி முன்னால ஒங்க கம்பெனியிலருந்து ரிசைன் பண்ணிட்டாராமே தெரியுமா சார்?'

சீனிவாசன் இதை அறிந்திருக்கவில்லை என்பது அவர் முகம் போன போக்கிலேயே தெரிந்தது. 'தெரியாதே சார்....? நா தங்கச்சி வீட்லருந்து இன்னைக்கி சாயந்தரம்தான் திரும்பி வந்தேன்.... வந்தவுடனே ராகவன் ஃபோன் பண்ணார்..... அதுலருந்து ஒங்கள கேக்கணும், கேக்கணும்னே நினைச்சிக்கிட்டிருந்தேன்......'

சரி.. இனியும் இவரிடம் கேள்விகள் கேட்டு துன்புறுத்த வேண்டாம் என்று நினைத்த ராஜசேகர் ராகவன் கூறியவைகளை சுருக்கமாக கூறி முடித்தான். 'ஆனா அவர் சொன்னத வச்சி கோர்ட்டுக்கு போக முடியாது சார்.... அதுவுமில்லாம கோர்ட்ல சாட்சி சொல்ல வேண்டியது மிசஸ் ராகவன்தான்.... என்கிட்ட சொன்னா மாதிரியே கோர்ட்ல சொல்றதுக்கு கவர்ன்மென்ட் லாயர் அவ்வளவு ஈசியா அலவ் பண்ணிறமாட்டார்...... இவர ஹோஸ்டைல் விட்னஸா ட்ரீட் பண்ணி இவர் சொல்ற எதையும் கணக்குல எடுத்துக்கக் கூடாதுன்னு வாதாடுவார்..... என்னோட கிராஸ் எக்சாமினேஷன்ல முழுசையும் வெளியில கொண்டு வர முடியும்னாலும் அந்த லேடி எந்த அளவுக்கு கோர்வையா சொல்வாங்கன்னும் தெரியலை.....அதான் ஒங்கக்கிட்ட சொல்லலாமா வேணாமான்னு யோசிச்சிக்கிட்டிருந்தேன்.... அவங்க சொல்றத வேற யார் வழியிலாவது கன்ஃபர்ம் பண்ணிக்க முடிஞ்சா நல்லாருக்கும்.... அதுக்குத்தான் உங்கக்கிட்ட அந்த ரெண்டு பேர பத்தியும் கேட்டேன்... நீங்க இப்ப சொன்னதுலருந்து முருகேசனுக்கும் ராமராஜனுக்கும் இடையில நமக்கு தெரியாத ஏதோ ஒரு ரிலேசன்ஷிப் இருக்கு...... அது என்னான்னு கண்டுபிடிக்கணும்...... முருகேசனுக்கு ஒங்க மேல என்மிட்டி (enmity) இருக்கறதுக்கு சான்ஸ் இருக்குன்னு நினைக்கேன்..... ஆனா ராமராஜனுக்கு இதுல ஏதாச்சும் ரோல் இருக்கான்னும் பாக்கணும்.... வசந்த் கிட்ட சொல்லி ஃபர்தரா இன்வெஸ்ட்டிகேட் பண்ணிட்டு சொல்றேன்..... அதுவரைக்கும் இதையே நினைச்சி டென்ஷனாகாம இருந்தீங்கன்னா நல்லது..... என்ன சார்?'

ராகவன் கூறியிருந்தவைகள் அதற்குப்பிறகு குமார் கூறியதுடன் ஒத்துப்போயிருந்தாலும் நீதிமன்றத்தில் அவர்கள் தன்னிடம் கூறியிருந்ததுபோன்றே கூறினால் மட்டுமே அது வழக்கின் தீர்ப்பு கோபாலுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது என்று ராஜசேகர் நினைத்தான். அதற்கு முன்பு சீனிவாசனிடம் அதைப் பற்றி கூறி வீணாக அவர் மனதில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவனுக்கு தோன்றியது. ஆகவேதான் சற்று முன்பு குமாரின் ஒலிநாடாவில் அவன் கேட்ட விஷயங்களைக் கூட அவரிடம் கூறாமல் மறைத்துவிட்டான்.  

சீனிவாசன் பதிலளிக்காமல் ஒரு நீண்ட பெருமூச்சுடன் சோபாவிலிருந்து எழுந்தார். 'சரி சார்..... நா இதுல டென்ஷனாயி ஒன்னும் ஆவப்போறதில்ல போலருக்கு...... ஒங்களால முடிஞ்சத செய்ங்க.... குட்நைட்.'

ராஜசேகரும் எழுந்து 'குட் நைட் சார்..... கிவ் மீ டு த்ரீ டேய்ஸ்..... ஃபுல் டீட்டெய்ல்சும் தெரிஞ்சதுக்கப்புறம் வந்து பாக்கறேன்.' என்று விடையளித்துவிட்டு கிளம்பினான். 

******* 

அவன் தன்னுடைய குடியிருப்பை அடைந்ததுமே அவனுடைய செல்போன் ஒலித்தது. வசந்தா? இந்த நேரத்துல எதுக்கு கூப்டறான் என்று நினைத்தவாறு, 'என்னடா இந்த நேரத்துல?' என்றான்.

'விஷயம் இருக்கு பாஸ். அதான் கூப்ட்டேன்...'

'அப்படியென்னடா தலைபோற விஷயம்?' என்றான் வசந்தின் பீடிகையை விரும்பாதவன்போல்..'சஸ்பென்ஸ் வைக்காம விஷயத்த சொல்லு.' 

'ராமராஜன யாரோ மர்டர் பண்ணிட்டாங்க பாஸ்.'

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ராமராஜன் யாரிடமும் தெரிவிக்காமல் தன்னுடைய அறையில் மயங்கிக் கிடந்த குமாரைப் பற்றியும் கவலைப்படாமல் அறையைக் காலி செய்துவிட்டு சென்றுவிட்டதை கேட்டதிலிருந்தே இப்படி ஏதாவது நடக்கும் என்ற ஐயம் அவன் மனதுக்குள் எழுந்திருந்தது. ஆனாலும் அது நனவானபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இதை எப்படி கையாள்வது? 

'என்னடா சொல்ற? ஒனக்கு யார் சொன்னா?'

'ராமராஜன் பர்சுல மேன்ஷன் விசிட்டிங் கார்ட் இருந்துருக்கும்போல.... அரை மணி நேரத்துக்கு முன்னால ட்ரிப்ளிக்கேன் எஸ்.ஐ. மேன்ஷனுக்கு வந்து விசாரிச்சிட்டு போனாராம். மேன்சன் மேனேஜர் எனக்கு ஃபோன் பண்ணியிருந்தார்.'

'குமார நாம அங்கருந்து கொண்டு போன விஷயம் போலீஸ்கிட்ட சொல்லிட்டாங்களாமா?'

'இல்ல பாஸ்... போலீஸ் அதப்பத்தி கேக்காததால நாமளா எதுக்கு சொல்லி மாட்டிக்கறதுன்னு நினைச்சி பேசாம இருந்துட்டாராம்.... நீங்களும் தப்பித்தவறி இந்த விஷயத்த வெளியில சொல்லிறாதீங்க சார்... அப்புறம் எம்பாடு திண்டாட்டமாயிரும்னு சொன்னார்.'

'சரி... அதுவும் ஒருவகையில நல்லதுக்குத்தான்.' என்ற ராஜசேகர் சட்டென்று நினைவுக்கு வர, 'என்ன சொன்னே, ட்ரிப்ளிக்கேன் போலிசா?'

'ஆமா பாஸ்.... அவரோட பாடி ட்ரிப்ளிக்கேன் மெட்ரோ ட்ரெயின் பிரிட்ஜுக்கு கீழ கிடந்துதாம். கழுத்துல ஒரேயொரு டீப் வெட்டு மட்டுந்தானாம்.... வேற எங்கயோ வச்சி மர்டர் பண்ணிட்டு அங்க கொண்டு போயி போட்ருப்பாங்க போலருக்கு..'

'அப்போ E1 போலீசுக்கு இதுவரைக்கும் தெரிய வாய்ப்பில்லைன்னு நினைக்கேன்....'

'அப்படித்தான் நானும் நினைக்கேன் பாஸ்...' என்று ஆமோதித்த வசந்த் தொடர்ந்து, 'இப்ப என்ன பண்ண போறீங்க பாஸ்?' என்றான்.

அதான? இப்ப என்ன பண்றது?  ராகவனும் அவரைத் தொடர்ந்து குமாரும் கூறியவற்றை ஒலிநாடாவில் அவன் பதிந்து வைத்திருந்தாலும் அதை காவல்துறையிடம் சமர்ப்பிக்காமல் இருந்ததற்கு முக்கிய காரணம் கோபால் மீது தொடரப்பட்டிருந்த வழக்கில் தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால்தான். அவர்கள் இருவரையும் சாட்சி கூண்டில் வைத்து தன்னுடைய குறுக்கு விசாரணை மூலம் மாதவியின் கொலையில் கோபால் எவ்விதத்திலும் சம்மந்தப்பட்டிருக்கவில்லை என்பதை நிருபித்து வழக்கை தள்ளுபடி செய்ய வைத்துவிடலாம் என்றும் அதன் பிறகு தன்னிடமுள்ள ஒலிநாடாக்களை போலீசிடம், குறிப்பாக, துணை ஆய்வாளர் தன்ராஜிடம் சமர்ப்பிக்கலாம் என்றுதான் அவன் எண்ணியிருந்தான். ஆனால் ராமராஜனின் மரணம் இனிமேலும் அந்த உத்தியை கடைபிடிப்பதில் பயனில்லை என்பதை அவனுக்கு உணர்த்தியது.  

'என்ன பாஸ்  சைலன்டாய்ட்டீங்க?' என்ற குரல் எதிர்முனையிலிருந்து வந்தது. 

'அதத்தான்டா யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.'

'நா உடனே புறப்பட்டு வரவா பாஸ்?' 

'வந்து?'



தொடரும்..  

தீபாவளி போனஸ்: நாளை முதல் தீபாவளி வாரம் துவங்குவதால் தினமும் இரண்டு பதிவுகள் இடுவதென தீர்மானித்துள்ளேன். முதல் பதிவு நண்பகல் 12.00 மணிக்கும் இரண்டாவது பதிவு பிற்பகல் 2.00 மணிக்கும் பதிவிடப்படும். அநேகமாக தீபாவளியன்று இத்தொடர் முடிவு  பெறும். 

26 அக்டோபர் 2013

சொந்த செலவில் சூன்யம் - 58

'பாஸ்.... இன்னொரு விஷயம் கேள்விப்பட்டேன்.' என்றான் வசந்த் சட்டென்று.

'என்ன?' என்றான் ராஜசேகர்.

'பிபி PW2 சும்மானாச்சும் உடம்புக்கு சரியில்லைன்னு சர்டிஃபிக்கேட் அனுப்பிருப்பார்னு DMO முன்னால ஆஜராயி ஹெல்த் செக் பண்ணிக்கணும்னு பெருமாள் சார் கிட்ட சொல்லியிருக்காராம். இன்னைக்கி காலையிலதான் நம்ம தோஸ்த் ஃபோன் பண்ணி சொன்னான்.'

ராஜசேகர் சிரித்தான். 'அந்த பிபி அடிபட்ட ஆள்.... அவ்வளவு லேசுல  விட்றமாட்டார். சரி... ஒன்னு பண்லாம்... நாமளே ராகவன கூப்ட்டு வார்ன் பண்லாம்... ஒருவேளை நீ சொல்றா மாதிரி அவங்க சும்மா ஃபேக் (fake) சர்ட்டிபிக்கேட் வாங்கி குடுத்திருந்தா பிபி சும்மா விடமாட்டார், அதனால பேசாம அடுத்த ஹியரிங் சமயத்துல ஆஜராயிருங்கன்னு அட்வைஸ் பண்லாம், என்ன சொல்ற?'

'இது நமக்கு தேவையா பாஸ்?'  என்றான் வசந்த். 'அவங்களுக்கு என்ன டென்ஷனோ?'

'டேய்... அவங்க ஆஜரானத்தான்டா நம்ம கேஸும் க்ளோசாவும்... இல்லன்னா இழுத்துக்கிட்டே போவும்....'

'அதுவும் சரிதான் பாஸ்.... உங்கக்கிட்ட அவங்க ஃபோன் நம்பர் இருக்கா?'

'அதான் அவர் அன்னைக்கி நா மாதவி வீட்ல இருந்தப்போ கூப்ட்ருந்தாரே?'

'அப்ப சரி.... நம்பர குடுங்க கூப்ட்டு பாக்கலாம்.'

'வேணாம்....' என்று மறுத்தான் ராஜசேகர், 'நீ கூப்ட்டா எப்படி ரெஸ்பான்ட் பண்ணுவாங்களோ? நானே கூப்டறேன்.'

எதிர்முனையில் ஒரு சில நொடிகள் யாரும் எடுக்காமல் ரிங் போய்க்கொண்டே இருந்தது. சரி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று ராஜ்சேகர் இணைப்பைத் துண்டிக்கவிருந்த நொடியில் ராகவனின் குரல் கேட்டது. 

'சொல்லுங்க சார்.. நா ராகவன் பேசறேன்.'

'ஒங்க வஃய்புக்கு இப்ப எப்படி இருக்கு சார்?' என்றான் ராஜசேகர் நேரடியாக.

எதிர்முனையில் சற்று தயங்குவது தெரிந்தது. 

'எதுவாருந்தாலும் சொல்லுங்க சார்..' என்றான் ராஜசேகர்.

'வய்ஃப் நல்லாத்தான் சார் இருக்காங்க... '' என்றார் ராகவன். 'ஆனா அந்த பெருமாள் வந்து போனதுக்கப்புறம் she is psychologically affected.... ரொம்ப பயப்படறா... அதான் ப்ரஷர் ஜாஸ்தியாயிருச்சி... she is not fit for travelனு ஒரு எம்.சி வாங்கி சப்மிட் பண்ணேன்....'

'ஆனா உங்க வய்ஃபால டிராவல் பண்ண முடியும், அப்படித்தான?'

'ஆமா சார்...' என்று தயக்கத்துடன் பதில் வந்தது.

'தப்பு பண்றீங்க சார்.... இப்ப அந்த பிபி டிஸ்ட்ரிக்ட் மெடிக்கல் ஆஃபீசர் முன்னால உங்க வய்ஃப் ஆஜராகி மெடிக்கல் செக்கப் பண்ணிக்க சொல்லி நோட்டீஸ் அனுப்ப ஏற்பாடு பண்ணப் போறார்னு கேள்விப்பட்டேன். DMO ஒங்க வய்ஃப் பெர்ஃபக்ட்லி ஆல்ரைட்டுன்னு சர்ட்டிஃபை பண்ணிட்டா உங்க பாடு திண்டாட்டமாயிரும்..... கோர்ட்ட ஏமாத்த ட்ரை பண்ணீங்கன்னு சொல்லி அரெஸ்ட் வாரன்ட் இஷ்யூ பண்ணச் சொல்லிக் கூட அவர் ட்ரை பண்லாம்....'

'என்ன சார் சொல்றீங்க?' என்றார் ராகவன் பதற்றத்துடன்.

'ஆமா.... அதனால நா சொல்றபடி செய்ங்க...'

'சொல்லுங்க சார்...'

'நீங்க உடனே E1 போலீஸ் ஸ்டேஷன கூப்ட்டு என் வய்ஃபுக்கு இப்ப பரவால்லை சார்.... அடுத்த ஹியரிங் அன்னைக்கி கோர்ட்டுக்கு வந்துருவாங்கன்னு  தன்ராஜ் கிட்டயோ இல்ல இன்ஸ்பெக்டர் பெருமாள் கிட்டயோ சொல்லிருங்க.. டிலே பண்ண வேணாம்...'

'அப்படியா சொல்றீங்க?' என்று மீண்டும் ராகவன் தயங்கினார். 

'இதத் தவிர அரெஸ்ட் வாரன்ட அவாய்ட் பண்றதுக்கு வேற வழியில்ல சார்..... டைம வேஸ்ட் பண்ணாம இப்பவே ஃபோன் பண்ணி சொல்லிருங்க... உங்க நன்மைக்குத்தான் சொல்றேன்... அப்புறம் ஒங்க இஷ்டம்.' என்று சற்று காட்டமாகவே சொன்ன ராஜசேகர் எதிர்முனையிலிருந்த ராகவன் மறுத்துப் பேச வாய்ப்பளிக்காமல் இணைப்பை துண்டித்துவிட்டு எதிரில் அமர்ந்திருந்த வசந்தைப் பார்த்தான். 

'நீங்க ஸ்பீக்கர்ல போட்டது நல்லதா போச்சி பாஸ்.... என்ன தைரியம் பாத்தீங்களா? கோர்ட் சம்மன் வந்தாத்தான் தெரியும்!'

'எல்லாம் அசட்டு தைரியம்தான்.... சரி அத வுடு.....' என்ற ராஜசேகர் சுவர்க்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு வியந்தான். 'டேய் டைம் போனதே தெரியாம ஒக்காந்துருக்கோம்.... கிளம்பு.'

'சரி பாஸ்.... நாளைக்கு ஏதாச்சும் வேலையிருக்கா?'

'இல்லடா... இனி அடுத்த ஹியரிங் டேட் வந்தாத்தான்....'

'அப்பன்னா நா ரெண்டு நாள் லீவ் எடுத்துக்கட்டா பாஸ்?'

'ஏன், மறுபடியும் இன்வெஸ்ட்டிகேஷனா?' என்றான் ராஜசேகர் கேலியுடன். 

'இல்ல பாஸ்.... ராஜிக்கு கொஞ்சம் ஜ்வெல்ஸ் எடுக்கணுமாம்.... அதான்... மாப்ளை வீட்லருந்து மேரேஜ் டேட் குறிச்சி அனுப்பிச்சிருக்காங்க....'

'அடப்பாவி, இத கூடவா ஸ்லோவா சொல்லுவ?' என்றான் ராஜசேகர் எரிச்சலுடன். 'என்னைக்கி மேரேஜ்?'

'ஜனவரி 17 பாஸ். இன்னும்  மூனு மாசம் இருக்குன்னாலும் கோல்ட் ப்ரைஸ் டெய்லி ஏறிக்கிட்டே இருக்கே... பணம் கையில இருந்தா வாங்கிறேன்டான்னு அம்மா டெய்லி சொல்லிக்கிட்டே இருக்காங்க.... அதான் நாளைக்கு நல்ல நாளாம்....'

'சரி... சந்தோஷமா போய்ட்டு வா..... ஏதாச்சும் அர்ஜன்ட்னா ஃபோன் பண்றேன்.'

'ஓக்கே பாஸ்...' என்று வசந்த் தன் லேப்டாப் பையுடன் கிளம்ப ராஜசேகரும் அவனைத் தொடர்ந்து அலுவலகத்தைப் பூட்டிக்கொண்டு வெளியேறினான்.

******

அலுவலகத்திலிருந்து எட்டு மணிக்கு புறப்பட்ட ராஜசேகர் வீட்டை சென்றடைந்தபோது மணி ஒன்பதைக் கடந்திருந்தது. 

வழி நெடுக இருந்த வாகன நெரிசலில் சிக்கி வந்தவனிடம் 'சீனிவாசன் சார் ரெண்டு மூனு தரம் வந்து போய்ட்டாருங்க... என்னென்னு போய் பார்த்துட்டு வந்துருங்களேன்.' என்று அவனுடைய மனைவி கோக்கிலா கூற 'அவருக்கு வேற வேலையில்லடி...' என்று அவள் சற்றும் எதிர்பாராமல் எரிந்து விழுந்தான். அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள் கோக்கிலா. 

'என்ன ஆச்சிங்க...? இப்ப நா என்ன சொல்லிட்டேன்னு......' என்று பதில் பேச முனைந்தவள் அவனுடைய இறுகிய முகத்தைப் பார்த்ததும் நிறுத்திக்கொண்டாள். ஆள் மூட் அவுட் போலருக்கு... இதுக்கு மேலயும் நாம ஏதாச்சும் பேசினா டேஞ்சர்தான் என்று நினைத்தவாறு உணவு மேசை மீது தயாராக வைத்திருந்த உணவை எடுத்து மீண்டும் சூடாக்கலாம் என்று கிச்சனுக்குள் நுழைந்துக்கொண்டாள். குளிச்சிட்டு வந்தா நார்மலாயிருவார். 

அவள் நினைத்தவாறே அடுத்த பதினைந்து நிமிடங்களில் குளித்து உடை மாற்றி வந்த ராஜசேகர், 'காஞ்ச் தூங்கிட்டாளா?' என்றான் ஒன்றுமே நடவாததுபோல். 

மறுபேச்சு பேசாமல் அவன் உணவு மேசையில் வந்தமர்ந்ததும் சூடாக்கி வைத்திருந்த சப்பாத்தியையும் தொட்டுக்கொள்ள வைத்திருந்த வெஜிடபிள் குருமாவையும் பரிமாறிவிட்டு அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அவனருகில் அமர்ந்திருந்தாள். 

அவன் சாப்பிட்டு முடித்து கைகழுவிய கையோடு, 'சாரி கோக்கி... ஆஃபீஸ்லருந்து வர வழி முழுசும் ஒரே டிராஃபிக் ஜாம்.... அதான் வந்ததும் வராததுமா நீ சொன்னதும் டென்ஷனாய்ட்டேன்....' என்றான்.

இதத்தான் பத்து வருசமா அனுபவிச்சிக்கிட்டிருக்கேனே என்பதுபோல் ஒரு லேசான புன்னகையுடன் எழுந்து உணவுபாத்திரங்களை எடுத்துச் சென்று கிச்சன் சிங்கில் போட்டுவிட்டு விளக்கை அணைத்துவிட்டு ஹாலில் வந்து அமர்ந்தாள். 'அவருக்கு ஃபோன் பண்ணியாவது என்ன விஷயம்னு கேளுங்களேன்.' என்றாள்.

'சரி.' என்று சுருக்கமாக கூறிய ராஜசேகர் தன் செல்ஃபோனை எடுத்து டயல் செய்தான். அவனுடைய அழைப்பை எதிர்பார்த்திருந்தவர்போல் சீனிவாசன் உடனே எடுக்க, 'இப்பத்தான் வந்தேன் சார்..... ஏதாச்சும் அர்ஜன்ட் விஷயமா?'

'ஆமா சார்....  ராகவன் உங்கள பார்த்து எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேன்னு சொன்னார்..... அவர் சொன்ன விதம் இதுல ஏதாச்சும் புதுசா இருக்குமோன்னு நினைக்க தோனிச்சி... அதான் உங்கக்கிட்ட கேக்கலாம்னு.....'

ராகவனிடம் வழக்கு முடியும் வரையிலும் இதை யாரிடமும் கூற வேண்டாம் என்று சொல்லியிருந்தும் எதற்காக அவர் இவரிடம் போய்.....? இதை எப்படி சமாளிப்பது என்று யோசித்தான். ராகவன் அவனிடம் கூறியிருந்த விஷயம் கோபாலுக்கு சாதகமானதாகத்தான் இருந்தது என்றாலும் அதை வேறு யாராவது கராபரேட் (corroborate-ஊர்ஜிதம்) செய்யாமல் இவரிடம் எப்படி சொல்வது? எதையாவது சொல்லி சமாளிக்கலாமா? ஒருவேளை ராகவன் தன்னிடம் கூறியவற்றை முழுவதுமாக இவரிடம் கூறியிருந்தால்? அவர் சொன்னதை நம்மிடம் உறுதிசெய்துக்கொள்வதற்காக சீனிவாசன் நம்மிடம் தெரியாததுபோல் கேட்டிருப்பாரோ? நாம் வேறு எதையாவது சொல்லி சமாளிக்க ஏற்கனவே விஷயம் முழுவதையும் அறிந்துவைத்திருக்கும் இவர் நம்மை தவறாக நினைத்துவிட்டால்? 

'சார்....?' என்று மீண்டும் சீனிவாசன் அழைப்பது கேட்டது....

இனியும் தாமதித்து அவரை நோகடிக்க வேண்டாம் என்று நினைத்த ராஜசேகர் தன் அருகில் அமர்ந்திருந்த கோக்கிலாவைப் பார்த்தான். அவள் ஆவலுடன் தான் பேசுவதை கேட்க காத்திருந்தது புரிந்தது. இங்கிருந்து பேச வேண்டாம் என்று முடிவு செய்து எழுந்து நின்றான். 'சார் நா கீழ வந்து சொல்றேன்.' 

இணைப்பை துண்டித்துவிட்டு தன் மனைவியைப் பார்த்தான். 'நீ போய் படு.... நா கீழ போய்ட்டு வந்துடறேன்... கதவ நா பூட்டிக்கிட்டு போறேன்...' என்றவாறு அவளுடைய பதிலுக்கு காத்திராமல் வெளியேறி அடுத்த சில நொடிகளில் சீனிவாசனின் குடியிருப்பை அடைந்தான்.

அவனுக்காக காத்திருந்த சீனிவாசனின் முகத்தில் தெரிந்தது கவலையா குழப்பமா என்பதை அனுமானிக்க முடியாத வகையில்...... இந்த வயசான காலத்துல இவருக்கு இந்த துன்பம் தேவைதானா என்று தோன்றியது. 

'ராகவன் என்னெ மீட் பண்ணி சில விஷயங்கள சொன்னார் சார். ஆனா அத எந்த அளவுக்கு நம்பறதுன்னு தெரியல.... இன்னும் வேற யார்கிட்டயாவது கன்ஃபர்ம் பண்ணிக்கலாம்னு பாத்தேன்... நா சொல்ற வரைக்கும் இது நமக்குள்ளவே இருக்கட்டும்னு கூட சொல்லியனுப்புனேன்.... இருந்தும் உங்கக் கிட்ட சொல்லியிருக்கார்....'

'அப்படியா சார்?' என்றார் சீனிவாசன் கவலையுடன்.... 

'சார் நா அவர் சொல்றதுக்கு முன்னால உங்கக்கிட்ட சில கேள்விகள கேக்கலாமா?' என்றான் ராஜசேகர்.

'என்ன கேள்விங்க சார்?'

'ஒங்களுக்கு முருகேசன்னு யாரையாச்சும் தெரியுமா?'

அவர் பதிலளிக்காமல் ஒரு சில நொடிகள் சிந்தனையில் ஆழ்ந்ததைக் கவனித்தான். தெரியலைன்னா உடனே சொல்லியிருப்பாரே..... So... இவருக்கும் அவன தெரிஞ்சிருக்கு.....

'தெரியும் சார்..... சரியான ஃப்ராடு பய.....' என்றார் சீனிவாசன்.

தொடரும்...

25 அக்டோபர் 2013

சொந்த செலவில் சூன்யம் - 57

முன்கதை 

'அதுதான் பாஸ் மிஸ்டரியா இருக்கு.' என்றான் வசந்த். 'ஒருவேளை ராமராஜன் தள்ளிவிட்டு மாதவிக்கு அடி கிடி பட்டுருந்தா ஆஸ்ப்பிட்டலுக்கு கொண்டுபோலாம்னு போயிருப்பாங்களோ?'

'அப்படீன்னா ஏற்கனவே அடிபட்டு கிடந்த மாதவிய மறுபடியும் எதுக்கு இன்னும் சிவ்வியரா அடிச்சிருக்கணும்?' என்றான் ராஜசேகர்.

'அதுவும் சரிதான் பாஸ்.....' என்ற வசந்த் சட்டென்று பிரகாசமானான். 'இப்ப புரியுது பாஸ்.'

'என்னடா புரியுது?' என்றான் ராஜசேகர் சலிப்புடன். 'சஸ்பென்ஸ் வைக்காம சொல்லு.'

'மாதவிய ஏதோ  ஒரு காரணத்துக்காக மர்டர் பண்றதுதான் முருகேசனோட ப்ளான். அதுக்கு ராமராஜன யூஸ் பண்ணிக்கலாம்னு நினைச்சி முருகேசந்தான் ராமராஜன முதல்ல அனுப்பியிருக்கணும்..... ஆனா ராமராஜன் சொதப்பிட்டார்....'

'அதெப்படிறா முருகேசனுக்கு தெரியும்?'

'இருங்க பாஸ்.....' என்றான் வசந்த். 'இது என் யூகம்தான் பாஸ். கரெக்டா இல்லையான்னு நீங்கதான் சொல்லணும்.'

'சரி சொல்லு.'

'அன்னைக்கி சாயந்தரம் கோபால் ஃபோன் பண்ண அதே டைம்ல, இல்லன்னா ஒரு சில நிமிஷத்துக்கப்புறம் முருகேசனும் ஃபோன் பண்ணி மாதவி ஃபோன எடுக்கறாளான்னு பாத்துருக்கணும்.... ஆனா ரிசீவர் ஆஃப் ஹூக்ல (off the hook) இருந்ததால எங்கேஜ்ட் டோன் கிடைச்சிருக்கும்..... அதுலருந்து ராமராஜன் கையால மாதவி சாகலைங்கறது முருகேசனுக்கு தெரிஞ்சிருக்கும்.... அதனாலதான் இந்த தடவ ராமராஜன தனியா அனுப்புனா சரிவராதுன்னு முருகேசனும் போயிருப்பார்.... ஆனா போற வழியில ராமராஜன் என்னால முடியாதுன்னு ஜகா வாங்கியிருப்பார்..... அதான் அவர கார்ல விட்டுட்டு முருகேசன் மட்டும் வீட்டுக்குள்ள போயி காரியத்த முடிச்சிட்டு வந்துட்டார். அவரோட அதிர்ஷ்டமோ துரதிர்ஷ்டமோ... அடுத்த வீட்டு மிசஸ் ராகவன் அந்த நேரம் பாத்து அங்க வந்துருக்காங்க....அவங்க நம்மள பாத்துட்டாங்களேங்கற ஷாக் முதல்ல இருந்தாலும் அதையே தங்களுக்கு சாதகமா யூஸ் பண்ணிக்கிட்டாங்க ரெண்டு பேரும்... கோபால அங்க பாத்ததா அந்த லேடி சொல்லிட்டா பழி கோபால் மேல விழுந்துருமே....? என்ன பாஸ்... என் யூகம் சரியாருக்குமா?'

உடனே பதிலளிக்காமல் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்த ராஜசேகர்....'இத விட யாராலயும் விஷுவலைஸ் பண்ண முடியாதுறா.... நீ சொல்றா மாதிரிதான் நடந்துருக்கணும்.....' என்றான் இறுதியில்...

'ஆனா ஒரு டவுட் பாஸ்..'

என்ன என்பதுபோல் அவனைப் பார்த்து தன் புருவங்களை உயர்த்தினான் ராஜசேகர். 

'குமார எதுக்காக பாஸ் கிட்நேப் பண்ணி ரூம்ல அடைச்சி வச்சாங்க.? அவந்தான் இவங்க ரெண்டு பேரையும் பத்தி போலீஸ்ல மூச்சே விடலையே?'

'அதுக்கு என்னோட யூகம் என்னன்னு சொல்லட்டுமா?' என்றான் ராஜசேகர் புன்னகையுடன்.'

'சொல்லுங்க பாஸ்.' என்று கேட்க தயாரானான் வசந்த்.

'மாதவிய மிரட்டுனா மாதிரியே அந்த பையன் குமாரையும் இவங்க ரெண்டு பேரும் மிரட்டி வச்சிருப்பாங்க.. அதுக்கு பயந்துதான் போலீஸ்ல இவங்க ரெண்டு பேரை பத்தியும் அவன் போலீஸ்ல சொல்லல. அது மட்டுமில்ல... தன்ராஜ் முதல்ல மிசஸ் ராகவன் சொன்னத கேட்ருக்கார்.... அதுக்கப்புறம் அதே ஆங்கிள்ல குமார்கிட்ட விசாரிச்சிருப்பார். அதாவது அன்னைக்கி சாயந்தரம் கோபால் அவர் கார அங்க பார்க் பண்ணியிருந்தாரான்னு மட்டும் கேட்டுருப்பார்..... அவனும் ஆமா சார்னு சொல்லியிருப்பான்...'

'ஆனா பாஸ்....' என்று குறுக்கிட்ட வசந்தை சைகை காட்டி தடுத்த ராஜசேகர் தொடர்ந்தான். 'இர்றா... முழுசையும் கேட்டுட்டு சொல்லு..... போலீசோட இன்வெஸ்ட்டிகேஷன் முழுசும் கோபால அக்யூஸ்டா முன்வைச்சியே நடக்கறத பாத்த முருகேசனும் ராமராஜனும் சரி நாம தப்பிச்சோம்னு நினைச்சிருப்பாங்க..ஆனாலும் மிஸ்டர் ராகவன் வீட்டையும் குமாரையும் டெய்லி வாட்ச் பண்ணிக்கிட்டு இருந்துருப்பாங்க.... அப்பத்தான் குமார போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிக்கிட்டு போனதும் இன்ஸ்பெக்டர் பெருமாள் ராகவன் வீட்டுக்கு வந்துபோனதும் தெரிஞ்சிருக்கும்.... போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்ட்டு வந்த குமார மிரட்டி என்னடா சொன்னாங்கன்னு கேட்ருப்பாங்க.... அவன் கோபால் ஏழு மணிக்கும் வீட்டுக்குள்ளருந்து வந்தத பாத்ததா சொல்லச் சொல்லி மிரட்டுனாங்கன்னு சொல்லியிருப்பான். சரி அப்படியே சொல்லிரு... இல்லன்னா நீ க்ளோஸ்னு சொல்லி இவங்க ரெண்டு பேரும் மிரட்டியிருப்பாங்க..... ஏற்கனவே போலீஸ் மிரட்டுனதுல மிரண்டு போயிருந்த குமார் இவனுங்க ரெண்டு பேரும் மிரட்டுனதும் இன்னும் அரண்டுட்டான்.  மிசஸ் ராகவனையும் போலீஸ் இப்படித்தான் சொல்லணும்னு மிரட்டிட்டுப் போனதும் அவங்க மூலமாவே இவங்களுக்கு தெரிஞ்சிருக்கணும்.... அட நாம சொன்னதையே போலீசும் சொல்லுது அதனால நமக்கு இனிமே ப்ராப்ளம் இல்லேன்னு முருகேசனும் ராமராஜனும் நினைச்சிருப்பாங்க.'

'இருக்கும் பாஸ்.. அப்படீன்னா அவனெ  எதுக்கு திடீர்னு கிட்நேப் பண்ணாங்க?'

ராஜசேகர் பதிலளிக்காமல் சிந்தனையில் ஆழ்ந்தான். 'இதுக்கு ரெண்டு காரணம் சொல்லலாம். ஒன்னு, குமார் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்ட்டு வந்ததும் இதுலருந்து எப்படிறா தப்பிக்கறதுன்னு யோசிச்சிருப்பான்.  இங்க இனியும் இருந்தா கோர்ட்டுக்கு போயி பொய் சொல்ல வேண்டி வரும்... போகலைன்னா போலீஸ் மட்டுமில்லாம முருகேசனையும் விரோதிச்சிக்கணும். அவங்க ரெண்டு பேரையும் விரோதிச்சிக்கிட்டு சென்னையில நிம்மதியா இருக்க முடியாதுன்னு நினைச்சிருப்பான். கொஞ்ச நாளைக்காவது ஊர் பக்கம் போயிறலாம்னு நினைச்சி போயிருப்பான். அவனெ தினமும் வாட்ச் பண்ணிக்கிட்டிருந்த ராமராஜன் அவனெ ரெண்டு நாளா காணம்னு முருகேசன்கிட்ட சொல்லியிருப்பார். அவனுக்கு சொந்த ஊர தவிர வேற போக்கிடம் கிடையாதுன்னு நினைச்சி அங்க தேடிப் போயி புடிச்சிட்டாங்க. இனியும் இவனெ வெளியில விட்டா சரிவராதுன்னு கடத்திட்டானுங்க.'

'இருக்கலாம் பாஸ்.... என்னமோ ரெண்டு காரணம்னு சொன்னீங்க? அதென்ன ரெண்டாவது?'

'முருகேசனுக்கு பிராசிக்யூஷன் விட்னசஸ்ஸ நா எப்படி கிராஸ் பண்ணுவேங்கறது ஞாபகத்துக்கு வந்துருக்கும்!' என்றவாறு சிரித்தான் ராஜசேகர்.

வசந்தும் சிரித்தான். 'ஓ! அதான் மேட்டரா? ரெண்டாவதுதான் பொருத்தமா இருக்கு. சொளையா லட்சக் கணக்குல கையாடல் பண்ணவனையே ரெண்டு தரம் வெளியில கொண்டு வந்த ஆளாச்சே நீங்க? உங்கக் கிட்ட மாட்டுனா பையன் என்னாவறதுன்னு நினைச்சிருப்பானுங்க? கரெக்ட் பாஸ்...' 

'ஆமா. இவன் நிச்சயம் அவரோட கிராஸ்ல உளறிடுவான்னு நினைச்சி கடத்திட்டானுங்க.....'

'ஆமா பாஸ், ஒத்துக்கறேன்.' என்று ஒத்துக்கொண்ட வசந்த், 'அப்படின்னா நீங்க சொன்ன கண்டிஷன் மிசஸ் ராகவனுக்கும் அப்ளிக்கபிள்தான?' என்றான்.

'குமார் தனியாள். சென்னையில அவனுக்குன்னு யாரும் இல்ல. ஆனா மிசஸ். ராகவன் அப்படியாடா? அவங்களோட சேத்து ராகவனையும் கடத்தணும்..... அவங்க ரெண்டு பேரையும் திடீர்னு காணம்னா அக்கம்பக்கத்துலருக்கறவங்க தேட மாட்டாங்க?'

ராஜசேகரின் விளக்கத்தை ஒரு சில நொடிகள் அசைபோட்ட வசந்த் இறுதியில், 'அப்படியும் இருக்கலாம்' என்றான். 'ஆனா எதுக்கும் அவங்க மேலயும் ஒரு கண் வச்சிருக்கணும் பாஸ்.'

'அது நம்மால எப்படிறா முடியும்? நாம என்ன போலீஸா? எனக்கென்னவோ அந்த அளவுக்கு முருகேசனோ இல்ல ராமராஜனோ போக மாட்டாங்கன்னு நினைக்கிறேன். அதுவுமில்லாம குமாருக்கு தெரிஞ்சிருக்கற அளவுக்கு ராகவனுக்கும் அவரோட வய்ஃபுக்கும் தெரிஞ்சிருக்க சான்ஸ் இல்லையே.....?'

'சரி அத விடுங்க பாஸ்.. எனக்கு இன்னொரு டவுட்!'

'என்னைக்கோ ஒரு நாள் நீ டெவில்ஸ் அட்வகேட் மாதிரி கேள்விங்கள கேடுடான்னு சொன்னதுக்கா இத்தன கேள்வி கேக்கறே?' என்று சிரித்தான் ராஜசேகர். 'சரி சொல்லு என்ன டவுட்?'

'எதுக்கு ராமராஜனும் அப்ஸ்கான்டாய்ட்டார்?' 

'அதான்டா மிஸ்டரியா இருக்கு!'

'இப்படியும் இருக்கலாம் பாஸ்.'

'எப்படி?'

'ரெண்டு மூனு நாள் இவனெ செடேஷன்ல (sedation) வச்சிரு அதுக்குள்ள நா ஒரு ப்ளானோட வரேன்னுட்டு முருகேசன் சொல்லியிருப்பார்.... ஆனா ஒரு வாரமாயும் ஆள் வரவேயில்ல... இவன் முழிச்சிக்கறதுக்குள்ள வந்துறலாம்னுட்டு அவர தேடிக்கிட்டு ராமராஜன் போயிருப்பாரோ என்னவோ?  போன எடத்துல என்ன ஆச்சோ!'

'நீ சொல்றா மாதிரி பாத்தாலும் இந்நேரம் முருகேசனாவது இவனெ தேடிக்கிட்டு வந்துருக்கணுமே? லாட்ஜ கூப்ட்டு பாக்கலாமா?'

'இங்க வர்ற வழியில கூப்ட்ருந்தேன் பாஸ்..... நாங்க நேத்து அங்கருந்து கிளம்புனதுக்கப்புறம் யாரும் வரலையாம்.' என்ற வசந்த் 'அந்த மேனேஜர் இன்னொன்னும் சொன்னார்.' என்றான்.

'என்ன?'

'ரூம்ல ராமராஜனோட திங்ஸ் எதையுமே காணமாம்! காலி பெட்டி மட்டுந்தான் இருக்காம். ஆள் எஸ்கேப் ஆய்ட்டார் போலருக்கு.'

'என்னடா சொல்ற? அவரோட திங்ஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு போனத யாருமே பாக்கலையா? How is it possible?'

'அதுவும் சரிதான் பாஸ். ஆனா அவர் எல்லா மாசாமாசமும் ரூம் ரென்ட்ட கரெக்டா குடுக்கறவர்ங்கறதால அவர் ஹேன்ட் பேக்கோட  போனப்போ ஆஃபீஸ் விஷயமா எங்கயாச்சும் போவாராருக்கும் ரெண்டு நாள்ல வந்துருவார்னு மேன்சன் ஆளுங்க நினைச்சிருப்பாங்க....'

'சரி....அத அப்புறம் பாத்துக்கலாம்.... இன்னைக்கி காலையில சந்தானம் சார்.... அந்த பையன் என்ன ஸ்டேட்மென்ட் குடுத்தான்னு ஒங்களுக்கு தெரியுமான்னு கேட்டார்..'

'நீங்க என்ன சொன்னீங்க?' என்றான் வசந்த் ஆவலுடன்..

'எனக்கு தெரியாது சார்... அப்படியே தெரிஞ்சாலும் இந்த கேஸ் முடியற மட்டும் ஒங்ககிட்ட சொல்றது கஷ்டம் சார்னு சொன்னேன்....'

'அதுக்கு அவர் ஒன்னும் சொல்லலையா?'

'ஒன்னும் சொல்லலை.... இன்னும் ரெண்டு மூனு நாள்தான? கேஸ் ஒருவழியா முடிஞ்சிருச்சின்னா சொல்லிக்கலாம்.'

'ரெண்டு மூனு நாளா? அதுக்குள்ள கேஸ் முடிஞ்சிருமா? எப்படி பாஸ்?'

ராஜசேகரின் புன்னகையே பதிலாக வந்தது. அதில் தெரிந்த ஏதோ ஒரு மர்மம் வசந்தை மேலும் குழப்பியது. 'என்ன பாஸ் சி.ஐ.டி கணக்கா ஸ்மைல் பண்றீங்க? சீக்ரெட்டா ஏதாச்சும் பண்றீங்களா, எனக்கு தெரியாம?'

ராஜசேகர் சிரித்தான். 'சேச்சே அப்படியெல்லாம் இல்லடா...'

'பின்ன? எப்படி மூனு நாளுக்குள்ள கேஸ் முடிஞ்சிரும்னீங்க?'

'டேய்.. ரெண்டு மூனு நாள்ங்கறது ஒரு எக்ஸ்பிரஷன்றா (expression), அதையே லிட்டரலா (literal) எடுத்துக்கறதா?'

'ஓ! அதான பார்த்தேன்.... இன்னும் ஒரு விட்னசக் கூட முழுசா எக்ஸாமின் பண்ணி முடிக்கலையேன்னு பாத்தேன்....'

'என்னடா சொல்ற? பிபி மறுபடியும் அந்த  தன்ராஜ கூப்ட்டு ரீ-எக்ஸாமின் பண்ணுவாருன்னு சொல்றியா?'

'கண்டிப்பா பாஸ்... நீங்க பண்ண டேமேஜ முழுசா ரிப்பேர் பண்ண முடியாட்டாலும் அங்க, இங்க டிங்கரிங் பண்ணாமயா உட்ருவார்.....? எனக்கென்னவோ இந்த ஒரு வாரத்துல வேணுவும் ஏதாச்சும் பண்ணுவார்னு தோனுது...'

'அவர் என்ன வேணா செய்யட்டும்..... நமக்கு வேண்டியது பிராசிக்யூஷன் விட்னஸ் ஒன்னும் ரெண்டும் கூண்டுல ஏறணும்... அத்தோட கேஸ் க்ளோசாயிரும்... என்ன சொல்ற?'

வசந்த் சிரித்தான். 'பாஸ்..... அது அவ்வளவு சீக்கிரத்துல நடக்காது. நீங்க வேணா பாருங்க.'

ராஜசேகர் முறைத்தான். 'எதுக்கு அப்படி சொல்ற?'

'PW 1 ஆஸ்ப்பிடலைஸ்ட் PW2 அப்ஸ்கான்டிங்.... அப்புறம் எப்படி அவங்கள கூப்டுவாங்க?' என்ற வசந்த் கோப்பிலிருந்த அரசுதரப்பு சாட்சிகள் பட்டியலைப் பார்த்தான். 'அதனால அடுத்ததா பி.எம் பண்ண டாக்டர்... இல்லன்னா ஃபிங்கர் ப்ரின்ட் பியரு (Finger Print Bureau)ஆளுங்க, அதுவும் இல்லன்னா ஃபாரன்சிக் ஆளுங்கன்னு யாரையாச்சும் கூப்ட்டு ப்ளேடு போடுவார்.....'

ராஜசேகர் சிடுசிடுத்தான். 'டேய், PW2தான் சரன்டராய்ட்டானே?'

'அது இதுவரைக்கும் பிபிக்கு தெரியாதே? அவனெ கூட்டிக்கிட்டு போகறதுக்கே E1 ஸ்டேஷன்லருந்து யாரையும் அனுப்பாம சந்தானம் சார் அவரோட ஆஃபீஸ் ஆளுங்களத்தான அனுப்புனாராம், கேள்விப்பட்டேன்..'

ராஜசேகர் வியப்புடன் வசந்தைப் பார்த்தான்... 'டேய்... என்ன ரொம்ப கேஷுவலா சொல்ற? இந்த நீயூஸ் உனக்கு எப்ப தெரிஞ்சிது?'

வசந்த் தன் வாயால் தானே சிக்கிக்கொண்டவனாய் திருதிருவென விழித்தான். 'உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன் பாஸ்.' என்று அசடு வழிந்தான். 

'நல்லா நினைச்சே போ..... நா பேசினப்போ சந்தானம் சார் தன்ராஜ் கிட்ட சொல்றேன்னுதான் சொன்னார்.. அப்பவே பிபிக்கும் நியூஸ் போயிருக்கும்னு நினைச்சேன்...'

'எனக்கென்னவோ இந்த ஐடியாவுக்கு பின்னால தன்ராஜும் இருக்கார்னு நினைக்கிறேன் பாஸ்... அவருக்கு குமார் விஷயத்துல இன்டர்ஃபியராவதுக்கு தயக்கமா இருந்துருக்கும்... அத்தோட பெருமாள் சாருக்கு தெரிஞ்சா அது உடனே பிபிக்கும் தெரிஞ்சிரும்... அவன் இருக்கற எடத்த தெரிஞ்சிக்கிட்டு போயி மறுபடியும் அவனெ உருட்டி மிரட்டி தான் நினைச்சத சொல்ல வச்சிருவார்னு நினைச்சிருப்பார்.... அதனால அவர் சொல்லித்தான் சந்தானம் சார் தன்னோட ஸ்டாஃப அனுப்பிருப்பார்னு நினைக்கிறேன்....'

' நீ சொல்றதுலயும் லாஜிக் இருக்கு....' என்றான் ராஜசேகர். 'தன்ராஜுக்கும் கோபல தவிர வேற யாரோ ஒரு ஆள் இதுல இன்வால்டாயிருக்க சான்ஸ் இருக்குனு தோனியிருக்கும்.....  ஆனா தன்ராஜ் பண்ற இந்த பேக்ரவுன்ட் விளையாட்டு மட்டும் பிபிக்கு தெரிய வந்துது.... அவ்வளவுதான்.....' 

வசந்த் சிரித்தான்.... 'தன்ராஜ் கதி அதோகதிதான்....'

'ஒனக்கு எல்லாமே தமாஷ்தான்டா.' என்று முறைத்தான் ராஜசேகர்.

'பாஸ்.... இன்னொரு விஷயம் கேள்விப்பட்டேன்.' என்றான் வசந்த் சட்டென்று.

தொடரும்..