16 ஆகஸ்ட் 2013

யார் கொலையாளி (நிறைவுப் பகுதி)

நேற்றைய பதிவை படித்துவிட்டு மேலைநாட்டு நண்பர் ஒருவர் அங்குள்ள  கைதிகளுக்கு 'மிராண்டா உரிமைகள்' முழுவதுமாக படித்துக்காட்டப்பட்டே கைது செய்கின்றனர் என்றும் குற்றவாளி எனக் கருதப்படுபவர் போலீஸ் விசாரணையின்போதோ அல்லது நீதிமன்றத்திலோ தனக்கு எதிராக சாட்சியம் அளிக்க வற்புறுத்தப்படுவதில்லை என்றும், தீர்ப்பு வரும் வரையிலும் ஒருவர் குற்றவாளி எனக் கருதப்படுவதில்லை என்றும் கருத்துரையில் குறிப்பிட்டிருந்தார். 

இங்கும் அத்தகைய சில உரிமைகளை சட்டம் வழங்கியுள்ளது. அதைப் பற்றி இன்று சுருக்கமாக பார்ப்போம்.

குற்றம் சுமத்தப்பட்டவரின் சாட்சியம்

க்ரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு எதிராக சாட்சியம் அளிக்க நிர்பந்திக்கப்படலாகாது என்கின்றன சட்டங்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 20(3) எந்த இந்திய குடிமகனும் தனக்கு எதிராக சாட்சியமளிக்க தேவையில்லை என்றும் அது அவருடைய அடிப்படை உரிமைகளில் ஒன்றும் என்றும் கூருகிறது. 21வது ஷரத்தில் இந்திய குடிமகன் ஒருவருக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளான சுதந்திரமான, இடையூறு இல்லாத வாழ்க்கை ஆகியவற்றை வேறெந்த சட்டமும் பறிக்கலாகாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே போன்று இந்திய குற்றவியல் முறைச் சட்டமும் 161, 313, 315வது பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டவர் குற்றம் நிரூபிக்கப்படும் வரையிலும் குற்றமற்றவர் என்றும் கருதப்படுவதால் அவரை தனக்கு எதிராக அரசால் தொடரப்படும் எந்த க்ரிமினல் வழக்குகளிலும் சாட்சியம் சொல்ல வற்புறுத்தலாகாது என்று கூறப்பட்டுள்ளது. குற்றம் சுமத்தபட்ட ஒருவர் சாட்சியம் அளிக்க முன்வராத நிலையில் அதை அவருக்கு எதிராக பயன்படுத்திக்கொள்ளவும் முடியாது என்கிறது குவிமுச.315 (B) பிரிவு.

ஏனெனில் ஒருவரை குற்றவாளி என்று நிரூபிக்கும் கடமையும் பொறுப்பும் குற்றம் சுமத்துபவருக்கே உள்ளதே தவிர குற்றம் சுமத்தப்பட்டவர் தன்னை நிரபராதி என நிரூபிக்கும் கடமை இல்லை. 

ஆகவே குற்றம் சுமத்தப்பட்டவர் தனக்கு எதிராகவோ அல்லது தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு விசாரணையின்போதோ அல்லது நீதிமன்றத்திலோ உண்மையாக பதில் கூற வேண்டும் என்றோ நிர்பந்தப்படுத்த முடியாது. 

ஆனால் குற்றம் சுமத்தப்பட்டவர் தாமாக முன்வந்து நீதிமன்றத்தில் தனக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்கும் பட்சத்தில் அவரை குறுக்கு விசாரணை செய்ய அரசுதரப்பு வழக்கறிஞருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உண்மை கண்டறியும் பரிசோதனைகள்.

Lie Detector Test எனப்படும் உண்மையை கண்டறிய நடத்தப்படும் பரிசோதனைகளும் குற்றம் சுமத்தப்பட்டவருடைய அனுமதி இல்லாமல் நடத்த முடியாது. சமீபத்தில் நடைபெற்ற பல வழக்குகளிலும் உச்சநீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்டவரை இத்தகைய பரிசோதனைகளுக்கு நிர்பந்திப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21வது ஷரத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை பறிப்பதாக உள்ளது என்பதால் அதை அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. ஆனால் ஒருவர் தாமாக முன்வந்து பரிசோதனைக்கு தன்னை ஆளாக்கிக்கொள்ளும் பட்சத்தில் அதன் முடிவுகளை அவருக்கு எதிராக பயன்படுத்திக்கொள்ள தடையேதும் இல்லை. 

ஆகவே காவல்துறை அதிகாரிகள் தங்களுடைய புலன் விசாரணையில் இறங்குவதற்கு முன்பே குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு சட்டம் வழங்கியுள்ள பல சலுகைகளை, உரிமைகளை கருத்தில்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் பல சமயங்களில், குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க தங்களுடைய மேலதிகாரிகளிடமிருந்து வரும் நிர்பந்தங்களால் விசாரணை அதிகாரிகள் பல சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பதும் உண்மை. 

விசாரணை செய்து குற்றவாளி யார் என்று கண்டுபிடிப்பதை விட அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்களையும் சாட்சியங்களையும் திரட்டி அவருக்கு நீதிமன்றங்கள் வழியாக தண்டனை பெற்றுத்தரும் பெரும் பொறுப்பும் காவல்துறை அதிகாரிகளுக்கு உண்டு. 

இதை சொல்வது மிக எளிது. ஆனால் நடைமுறையில் அது அத்தனை எளிதல்ல என்பதை பல வருடங்கள் இத்துறையில் பணியாற்றியவர்களுக்கே தெரியும். 

ஆனால் விசாரணை அதிகாரிகளுடைய கரங்கள் சட்டத்தால் எவ்வாறெல்லாம் கட்டப்பட்டுள்ளன என்பதைப் பற்றிய விவரம் ஏதும் இல்லாத நம்மைப் போன்ற பொதுஜனமும் பத்திரிகைத் துறையும் குற்றம் நடந்த சில தினங்களிலேயே குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போனால் காவல்துறை உறங்குகிறதா என்று கேள்வி கேட்பதற்கு மட்டும் தயங்குவதே இல்லை. 

இதை ஓரளவுக்காவது நாம் தெரிந்து வைத்திருப்பது என்று நான் நினைத்ததால்தான் இந்த கட்டுரையை எழுதினேன். அதற்கென நான் என்னை தயாரித்துக்கொள்ள முயன்றபோது அது அத்தனை எளிதல்ல என்பதை உணர்ந்துக்கொண்டேன். எனக்கு இதில் உதவ இப்போது காவல்துறையில் சர்வீசிலுள்ளவர்கள் மட்டுமல்லாமல் ஓய்வுபெற்றவர்களும் கூட தயாராக இல்லை.  சிலர் என் பேரை எங்கையும் குறிப்பிடக்கூடாது சார் என்று சொல்லிவிட்டுத்தான் நான் எழுதிய கட்டுரையை படித்துப்பார்த்து அவற்றிலுள்ள ஒருசில தவறுகளை சுட்டிக்காட்டினார்கள். இன்றும் அந்தத் துறையில் உள்ளவர்கள் மத்தியில் உள்ள ஒருவித அச்ச உணர்வே இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.

வழக்கறிஞர்களுள் பலருக்கு முன்பு ஒருகதை சொல்வார்களே தலைமை மந்திரவாதி தன்னுடைய மந்திரங்களில் மிக முக்கியமானவற்றை தன்னுடைய சீடர்களுடன் கூட பகிர்ந்துக்கொள்ள மாட்டாராம் என்று, அதுபோல இது ஏதோ தொழில் ரகசியம் என்பதுபோன்று தங்களுடைய கருத்துக்களை கூறாமல் நழுவிப்போய்விட்டனர். 

ஆனால் தமிழக காவல்துறையின் இணையதளத்தில் பல நல்ல தகவல்கள் குவிந்துக்கிடக்கின்றன. தெரிந்தோ தெரியாமலோ காவல்துறையினருக்கு மட்டுமே அனுமதி வழங்கவேண்டிய பல சுட்டிகள் நமக்கும் படிக்க கிடைக்கின்றன. அத்துடன் விக்கிப்பீடியா, லீகல் ஹெல்ப் என்ற பெயரில் நாட்டிலுள்ள பல இணையதளங்களிலும் இருந்து பல உபயோகமான தகவல்கள் கிடைத்தன. இவற்றை வைத்தே என்னால் இயன்ற அளவு வாசிப்பவர்களுக்கு புரியும் வகையில் எளிதான தமிழில் அளிக்க முயற்சி செய்தேன். 

இது ஒரு வசீகரமான தகவல்கள் இல்லைதான் என்றாலும் பலரும் இத்தொடரை விரும்பிப் படித்ததுடன் நிற்காமல் எனக்கு உற்சாகப்படுத்தும் வகையில் தங்களுடைய கருத்துக்களையும் பகிர்ந்துக்கொண்டனர். அவர்களுக்கெல்லாம் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்.

இந்த ஆய்வை நான் நடத்தியதற்கு வேறொரு காரணமும் உண்டு.

நான் பல வருடங்களாக கதைகள் படிப்பதில் ஆர்வமுள்ளவன். அதிலும் க்ரைம் நாவல்கள் என்றால் உயிர். ஒரு காலத்தில் நம்முடைய தமிழகத்தில் க்ரைம் நாவல்களுக்கு பிரசித்திபெற்ற ராஜேஷ்குமாருடைய பரம ரசிகனாயிருந்தவன். அதன் பிறகு பல ஆங்கில க்ரைம் நாவல்களைப் படிக்க வாய்ப்பு கிடைத்தபோது அவருடைய நாவல்கள் எத்தனை primitive ஆக இருந்தன என்பதை பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். 

சமீபகாலமாக ஆங்கில க்ரிமினல் நாவல்கள் எழுதுவதில் சிறந்துவிளங்குபவர் அமெரிக்க நாவலாசிரியரான  மைக்கேல் கொனெல்லி.  லாஸ் ஏஞ்சல்ஸ் டைம் பத்திரிகையின் க்ரைம் ரிப்போர்ட்டராக பணியாற்றிய இவருக்கு அமெரிக்க காவல்துறையினரின் செயல்பாடுகள் அனைத்தும் அத்துப்படி. ஆகவே பிற்காலத்தில் ஒரு தலைசிறந்த க்ரிமினல் கதைகள் எழுதும் நாவலாசிரியராக உருப்பெற்றதில் வியப்பேதும் இல்லை. அவர் படைத்த ஹாரி போஷ் (Harry Bosch) கதாபாத்திரம் க்ரிமினல் நாவல் பிரியர்கள் நடுவில் மிகவும் பிரபலமானது. லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறையில் புலன் விசாரணை அதிகாரியாக பணிபுரிவதுபோல் படைக்கப்பட்ட அந்த கதாபாத்திரம் குற்றவாளிகளை எவ்வாறு மடக்கிப் பிடிக்கிறார் என்பதை மிகவும் விலாவாரியாக, சுவைபட எழுதுவதில் கொனெல்லி மிகவும் வல்லவர். லாஸ் ஏஞ்சல்ஸ் செயல்பட்டு வந்த க்ரிமினல் லாயர்களுடைய செயல்பாடுகளை மையமாக வைத்தும் பல சுவையான கதைகளையும் படைத்துள்ளார் அவர்.

அவரைப் போலவே ஒரு க்ரைம் நாவலை முந்தைய காலத்திய இந்திய எழுத்தாளர்களைப் போன்று மேலெழுந்தவாரியாக எழுதாமல் ஒரு கொலைக் குற்றவாளி மற்றும் அவரை துரத்தும் காவல்துறை அதிகாரி அவர்களைத் தொடர்ந்து புலன் விசாரணை முடிவில் அதை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று வாதாடி வெற்றி பெற வழக்கறிஞர்கள் எடுக்கும் முயற்சிகள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றை மிக அழகாக எழுத்தில் கொண்டுவருவதை ஒரு பிரத்தியேக கலையாக கொண்ட ஆங்கில நாவலாசிரியர்கள் ஏராளம்.

அதே பாணியில் ஒரு கொலைக் குற்றம் நடந்ததிலிருந்து, விசாரணை, நீதிமன்றத்தில் நடத்தப்படும் காரசார விவாதங்கள் என அனைத்தையும் ஒரு நாவலில் சொன்னால் என்ன என்று நானும் யோசித்திருக்கிறேன். ஏறக்குறைய மூன்று மாத காலமாக அதைப் பற்றியே கனவு கண்டு அதற்காக இங்கும் அங்கும் அலைந்து இந்திய, குறிப்பாக தமிழக சூழலில் ஒரு முழுமையான க்ரைம் நாவலை எழுத முற்பட்டேன். எனக்கு பழக்கமான காவல்துறை அதிகார்கள், க்ரிமினல் வழக்கறிஞர்கள் சிலரை நேரில் சந்தித்து பல விஷயங்களை தெரிந்துக்கொண்டேன். அத்துடன் நில்லாமல் சென்னை சைதாப்பேட்டையிலுள்ள பெருநகர மெட்ரோபாலிட்டன் மஜிஸ்திரேட் மற்றும் எக்மோரிலுள்ள செஷன்ஸ் நீதிமன்றங்களுக்கும் நேரில் சென்று அங்கு நடைபெற்ற வழக்கு விசாரணைகளிலும் ஒரு பார்வையாளனாக கலந்துக்கொண்டேன். 

அந்த முயற்சியில் நான் கண்டறிந்தவற்றை குறிப்பெடுத்து முடித்தபோது அதுவே ஒரு தனிக் கட்டுரையாக வடிவெடுத்திருந்தது. ஆகவே அதையே ஒரு தனி பதிவாக 'யாரி கொலையாளி!' என்ற தலைப்பில் எழுத முடிவு செய்தேன்.

இதன் தொடர்ச்சியாக என்னுடைய 'கதையுலகம்' ப்ளாகில் 'சொந்த செலவில் சூன்யம்...' என்ற தலைப்பில் நாவல் ஒன்றை பதிவிட முடிவு செய்துள்ளேன். தினமும் ஒரு மணி நேரத்திற்கு மேல் கணினியில் எழுத முடியவில்லை என்பதால் கதையை எழுதத் துவங்கி இரண்டு மாத காலம் ஆகியும் இன்னும் முழுவதும் ரெடியாகவில்லை. இரண்டு வாரங்களில் முடித்துவிட முடியும் என்று நினைக்கிறேன். அதையும் படித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

அன்புடன்,
டிபிஆர்.


**********

8 கருத்துகள்:

  1. ‘யார் கொலையாளி?’ தொடர் பகுதியில் அனேகருக்குத் தெரியாத, அல்லது தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டாத, சட்டம் தந்துள்ள உரிமைகளை எளிய நடையில் தந்தமைக்கு நன்றி!

    இது ஒரு வசீகரமான தகவல்கள் இல்லைதான் என்றாலும் பலரும் இத்தொடரை விரும்பிப் படித்ததுடன் கருத்துக்களையும் பகிர்ந்துள்ளார்கள் எனக் கூறியுள்ளீர்கள். இது ஒரு சிலருக்கு வேண்டுமானால் வசீகரமான தகவல்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இவைகள் இந்தியக் குடிமகன்கள் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய அருமையான தகவல்கள். இதைப் படிக்கும்போது தாங்கள் இந்த தகவல்களைத் திரட்ட எவ்வளவு பாடுபட்டிருப்பீர்கள் என்பதை உணரமுடிகிறது. உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    தங்களது 'கதையுலகம்' வலைப்பதிவில் 'சொந்த செலவில் சூன்யம்...'என்ற தலைப்பில் நாவல் ஒன்றை பதிவிட முடிவு செய்துள்ளீர்கள் என அறிந்து மகிழ்ச்சி. அதைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    நீதி மன்றங்களில் ஜூரிகள் இருந்தபோது நடைமுறைகள் எப்படி இருந்தது என்பதை ஒரு தொடர் கதை மூலம் எழுத்தாளர் கல்கி அவர்கள் ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’ என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் எழுதினார். அது புத்தகமாக இப்போது கிடைக்கிறது. நேரம் கிடைப்பின் அதை வாங்கி படிக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. இத்தனை தகவல்களுக்குப் பின்னணியில் எவ்வளவு கடின உழைப்பு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. சிறப்பான பணி. என்னுடைய வேண்டுகோள் என்னவெனில் இதே வலைப பக்கத்தில் கதையை எழுதவும்.இரண்டு மூன்று வலைப பதிவுகளில் எழுதுவது பார்வையாளர் எண்ணிக்கையை குறைத்து விடும்.
    கதை கட்டுரை எதுவாக இருப்பினும் ஒரே வலைப்பூவில் எழுதுவது சிறந்தது

    பதிலளிநீக்கு
  3. வே.நடனசபாபதி said...

    நீதி மன்றங்களில் ஜூரிகள் இருந்தபோது நடைமுறைகள் எப்படி இருந்தது என்பதை ஒரு தொடர் கதை மூலம் எழுத்தாளர் கல்கி அவர்கள் ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’ என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் எழுதினார். அது புத்தகமாக இப்போது கிடைக்கிறது. நேரம் கிடைப்பின் அதை வாங்கி படிக்க வேண்டுகிறேன்//

    கண்டிப்பா சார்.

    உங்களுடைய தொடர் வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. T.N.MURALIDHARAN said...

    என்னுடைய வேண்டுகோள் என்னவெனில் இதே வலைப பக்கத்தில் கதையை எழுதவும்.//

    சரிங்க. கண்டிப்பா இந்த வலைப்பக்கத்திலேயே எழுதுகிறேன். படித்துவிட்டு கருத்தைக் கூறுங்கள்.

    உங்களுடைய தொடர் வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அஸ்திவாரம் பலமாக இருக்கிறது. சீக்கிரம் கட்டிடத்தை கட்ட ஆரம்பியுங்கள். இப்பொழுதெல்லாம் என்னால் ஃபிக்.ஷன்களை படிக்க முடிவதில்லை. படித்துப்பார்க்கலாமென்று இருக்கிறேன். என்னுடைய ஃபேவரைட் ஆதர், ஜான் கிரஷாம். மனுஷன் புத்தகத்தை எடுத்தால் வைக்கமுடியாது.

    பதிலளிநீக்கு
  6. ஜான் கிரஷாம். மனுஷன் புத்தகத்தை எடுத்தால் வைக்கமுடியாது//

    நானும் அவருடைய விசிறிதான். அவருடைய நாவல்களில் The firm, The Rainmaker ஆகியவற்றை படித்திருக்கிறேன். ஆனால் மிக்கேலின் நாவல்கள் இன்னும் deepஆக சொல்லப்பட்டிருக்கும். சிலருக்கு அது வளவளவென்று இருப்பதுபோல் தோன்றினாலும் எனக்கு அது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

    பதிலளிநீக்கு

  7. என்னதான் சட்டங்கள் உதவினாலும் காவல்துறையினரை நண்பர்கள் என்று எண்ணமுடிவதில்லையே. THEY MUST DO SOMETHING TO IMPROVE THEIR IMAGE. என்னுடைய பத்திரம் ஒன்று தவறிப் போய்விட்டது. சம்பந்தப் பட்ட நிறுவனத்தினர் காவல் துறையிடம் புகார் கொடுத்ததற்கு ஆதாரம் கேட்டார்கள். காவல்துறையை அணுகி புகார் கொடுக்க முயன்றபோது ஏதோ ஏமாற்றுப் பேர்வழியைப் போல் நடத்தினார்கள். என் கூற்றைவிட ஒரு அஃபிடாவிட் ( (நான் கூறியதை என்னை யாரென்றே தெரியாதஒரு நோட்டரி உர்ஜிதம் செய்து) தாக்கல் செய்ய வேண்டும் என்றனர். விளைவு எனக்கு ரூ. 300-/ செலவும் இரண்டு மூன்றுமுறை அலைச்சலும்தான்.
    இந்த குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்ய போலிஸ் காவலிலென்னென்ன வழிமுறைகள் கையாளப் படுகிறது என்பதையும் பலரும் அறிவர். IT IS NOT ENOUGH IF JUSTICE IS DONE, IT SHOULD APPEAR TO BE DONE ALSO. பல தகவல்களுடனான பதிவுகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. G.M Balasubramaniam said...

    IT IS NOT ENOUGH IF JUSTICE IS DONE, IT SHOULD APPEAR TO BE DONE ALSO.//

    சரியா சொன்னீங்க. ஆனால் காவல்துறையினரின் இந்த போக்கு இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. உலகளவிலும் இதே பிரச்சினைதான். இங்கு அதிகம் கொஞ்சம் அதிகம், அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு