சாதாரணமாக காப்பீட்டு நிறுவனங்கள் தங்களுடைய காப்பீட்டு பத்திரங்களில் ஆவரேஜ் ஷரத்து (Average clause) ஒன்றை சேர்த்திருப்பது வழக்கம்.
இது முந்தைய பதிவில் நான் குறிப்பிட்ட வாடிக்கையாளரைப் போன்று தங்களுடைய சரக்கு முழுவதையும் காப்பீடு செய்யாமலிருப்பவர்களுக்காகவே சேர்க்கப்பட்டிருக்கும்.
அதாவது ஒரு வணிகர் தன் வசம் இருக்கும் சுமார் ரூ.1.00 லட்சம் மதிப்புள்ள சரக்கை ரூ.0.50 லட்சத்திற்கு காப்பீடு செகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதாவது சரக்கின் மதிப்பில் 50% மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று பொருள்.
காப்பீட்டு நிறுவனத்தினரின் மதிப்பீட்டின்படி நஷ்டப்பட்ட சரக்கின் மதிப்பு ரூ.0.75 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். நஷ்டத்தில் 50%ஆன ரூ.37,500/- மட்டுமே நஷ்ட ஈடாக வழங்கப்படும்.
அத்துடன் காப்பீட்டு நிறுவனங்கள் நஷ்டப்பட்ட சரக்குகள் சம்பந்தப்பட்ட பில் (Bill) மற்றும் நிறுவனத்தின் கணக்கு புத்தகங்களையும் சரிபார்த்தப் பிறகே நஷ்டப்பட்ட சரக்கின் மதிப்பை ஒத்துக்கொள்ளும்.
இந்த ஷரத்தைக் கருத்தில் கொண்டுதான் வங்கிகள் சரக்குகளை ஈடாக வைத்து கடன் வழங்குகையில் நிறுவனத்தின் பொறுப்பில் இருக்கும் சரக்கின் முழு மதிப்பிற்கும் காப்பீடு செய்யவேண்டும் என்று வற்புறுத்துகின்றன.
இதன் முக்கியத்துவத்தை உணராத பல வணிகர்களும் வங்கி மேலாளர்களுடைய கருத்துக்கு ஒத்துப் போக மறுப்பதும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் எதற்கு வீணாக ப்ரிமீயம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம்தான். ஆகவே சம்பந்தப்பட்ட வணிகர்களுடைய சம்மதம் இல்லாமல் வங்கிகளே தங்களிடம் ஈடு வைக்கப்பட்டுள்ள சரக்கிற்கான முழு காப்பீட்டையும் செய்துவிட்டு சந்தா (Premium) தொகையை வணிகர்களுடைய கணக்கில் பற்று வைத்துவிடுவதுண்டு.
அப்படித்தான் நானும் செய்வேன். அதற்கெதிராக வாடிக்கையாளர் எந்த மறுப்பு தெரிவித்தாலும் அதை பொருட்படுத்தியதில்லை. ஆனால் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்த வாடிக்கையாளருடைய கோபத்திற்கு அஞ்சி என்னுடைய முந்தைய மேலாளர் அவர் குறிப்பிட்டிருந்த தொகைக்கு மட்டும் காப்பீடு செய்திருந்தார். அதாவது வாடிக்கையாளர் வங்கியிலிருந்து பெற்றிருந்த கடனுக்கு ஈடாக வைத்திருப்பதாய் அவர் சமர்பித்திருந்த சரக்கு அறிக்கையில் (Stock Statement) குறிப்பிட்டிருந்த மதிப்பில் சுமார் 60%க்கு மட்டுமே காப்பீடு செய்யப்பட்டிருந்தது. மேலும் குறிப்பாக கூற வேண்டுமென்றால் காப்பீடு செய்யப்பட்டிருந்த தொகை வங்கி கொடுத்திருந்த கடனுக்கு 10% குறைவாகவே இருந்தது.
அதாவது, சம்பந்தப்பட்ட தீவிபத்து ஒரேயொரு நாள் முன்பு நடந்திருக்கும் பட்சத்தில் வங்கி கொடுத்திருந்த கடனையும் கூட வசூலிக்க முடியாமல் போயிருக்க வாய்ப்பிருந்தது!
இதில் இனியொரு வில்லங்கமும் இருந்தது. தீ விபத்தில் கடையிலிருந்த மொத்த சரக்கும் எரிந்து போகவே உரிமையாளர் சரக்கு முழுவதுக்கும் நஷ்ட ஈடு வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தார்.
ஆனால் அவரால் கடையிலிருந்த சரக்கிற்கான ஆவணங்களை முழுவதுமாக சமர்ப்பிக்க இயலவில்லை. கடையிலிருந்த மொத்த சரக்கில் ஐம்பது விழுக்காடுக்கான ஆவணங்கள் கூட அவர் வசம் இருக்கவில்லை. ஆகவே அவர் சமர்ப்பித்திருந்த வணங்களின் பேரில் அவருக்கு கிடைக்கக்கூடிய நஷ்ட ஈடு சரக்கின் மதிப்பில் சுமார் 25 விழுக்காடு மட்டுமே.
யார் செய்த அதிர்ஷ்டமோ அவர் எங்களுடைய வங்கி கடன் கணக்கை தாமாகவே முன்வந்து சம்பவம் நடந்த முந்தைய தினம் திருப்பி அடைத்திருந்தார். இல்லையென்றால்.. இப்போது நினைத்து பார்த்தாலும் மனம் கலங்குகிறது.
மேலாளர்களின் இப்படிப்பட்ட தவற்றால் வங்கிக்கு இழப்பு ஏற்படும் பட்சத்தில் விசாரனைக்கு முன்பே அவர்கள் இடைக்கால பணி நீக்கம் செய்யப்படுவது நிச்சயம். பிறகு வங்கிக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் கணிசமான தொகையாக இருக்கும் பட்சத்தில் மேலாளரின் பணி பறிபோவதும் உண்டு. அத்துடன் அவருடைய ஓய்வூதியம், பி.எஃப், கிராச்சுவிட்டி எல்லாவற்றையும் பிடித்துக்கொண்டு வெறுங்கையராய் அனுப்பப்படுவதும் உண்டு..
என்னுடைய வாடிக்கையாளருக்கு அஞ்சி குறைவான மதிப்பிற்கு காப்பீடு செய்தது என்னுடைய முந்தைய மேலாளர்தான் என்றாலும் அதை நான் கிளைக்கு பொறுப்பேற்றவுடனே மேலதிகாரிகளுடைய பார்வைக்கு கொண்டு செல்லாத தவற்றிற்காக எனக்கும் அதற்குரிய தண்டனை கிடைக்க வாய்ப்பிருந்தது.
இது ஒருபுறமிருக்க, என்னுடைய வாடிக்கையாளர் விபத்து நடந்த மறுநாளே என்னுடைய அலுவலகத்திற்கு காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பீட்டாளருடன் வந்தார். அவர் முன்னிலையில் என்னிடம், ‘ஏன் சார் பெரிசா ரூலெல்லாம் பேசறீங்களே நான் குடுத்துருந்த ஸ்டாக் ஸ்டேட்மெண்ட்லருக்கற தொகைக்கு இன்சூர் பண்ணாம இருந்தது ஒங்க தப்புத்தானே? அதுக்கு என்ன சொல்றீங்க?’ என்றார் வீம்புடன்.
அவருடைய மனசாட்சிக்கே தெரியும் நடந்தது என்னவென்று. நான் மறுபேச்சு பேசாமல் என்னுடைய உதவி மேலாளரை என்னுடைய அறைக்கு அழைத்து வாடிக்கையாளர் கூறியதை அவரிடம் கூறினேன். அவர் என்னிடம் சில நாட்களுக்கு முன் கூறியதையே காப்பீட்டு நிறுவனத்திலிருந்து வந்தவர் முன் போட்டு உடைத்தார். ‘சார் இவர் சொல்றதுல கொஞ்சம் கூட உண்மையில்ல. நாங்க இன்சூர் செஞ்ச இந்த பாலிசிக்கே ப்ரிமீயம் என் கணக்குலருந்து வசூலிக்கக் கூடாதுன்னு இங்க வந்து சத்தம் போட்டதும் இல்லாம நாங்க டெபிட் பண்ண ப்ரீமியம் தொகைய ரிவர்ஸ் பண்ண சொல்லி லெட்டரும் அனுப்பிச்சார். இருங்க அந்த லெட்டர கொண்டு வரேன்.’ என்று உடனே சென்று கோப்பிலிருந்த கடிதத்தைக் கொண்டு வந்து காட்ட வாடிக்கையாளரின் முகம் சுருங்கிப் போனது.
நான் உடனே, ‘சார் ஒங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் பெரிசுதான். எனக்கும் கவலையாத்தான் இருக்கு. ஆனா அதுக்காக வெறுமனே எங்க பேங்க் மேல குத்தம் சொல்லாதீங்க. நான் ஒங்கள எங்க கடன திருப்பி கட்டுங்கன்னு கூட சொல்லலை.. அடகு வச்சிருக்கற சரக்குக்குண்டான பில்லுங்கள காமிங்கன்னு மட்டும்தான் கேட்டேன். நீங்களாத்தான் செக்க அனுப்பி அக்கவுண்ட க்ளோஸ் பண்ணீங்க. அத நீங்க எந்த நோக்கத்துல செஞ்சீங்களோ அதுமூலமா என்னோட வேலைய காப்பாத்திட்டீங்க. அதுக்கு ஒங்களுக்கு நன்றி.. மத்தபடி ஒங்களுக்கும் இன்சூரன்ஸ் கம்பெனிக்கும் நடுவுல நா செய்யறதுக்கு ஒன்னுமில்ல சார்.. சாரி.’ என்றேன்.
ஆனாலும் மனிதர் தன்னுடன் வந்திருந்த காப்பீட்டு மதிப்பீட்டாளர் முன் தான் யார் என்று காண்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ‘சார் ஒங்க லோன க்ளோஸ் பண்ணிட்டேன்னு பொறுப்பிலருந்து கழண்டுக்க பாக்காதீங்க. எனக்கு ஏற்பட்ட நஷ்டம் ஒன்னு ரெண்டு இல்ல. ஒங்க வேல போறத பத்தி எனக்கென்ன சார் கவலை? ஒங்க ஹெட் ஆஃபீசுக்கு எழுதப் போறேன்.. நாந்த்தான் விவரமில்லாத ஆளுன்னு வச்சிக்குங்க.. ஒங்களுக்கு எங்க சார் போச்சி புத்தி? நான் ------ லட்சத்துக்கு ஸ்டாக் ஸ்டேட்மெண்ட் குடுத்திருக்கேன். நீங்க பாட்டுக்கு --------- லட்சத்துக்கு இன்சூர் செஞ்சிருக்கீங்க? ஒங்களோட அஜாக்கிரதையால எனக்கு ஏற்பட்ட நஷ்டத்த யார் ஈடுகட்டுறது? நிச்சயமா நான் ஒங்க ஹெட் ஆஃபீசுக்கு புகார் செய்யத்தான் போறேன்.. அங்கருந்தும் எனக்கு நியாயம் கிடைகலனா நான் கோர்ட்டுக்கும் போக தயார்.’ என்றார் காட்டு கத்தலாக.
என்னைக் கோபப்படுத்தி தாறுமாறாக பேசவைத்து அதற்கும் சேர்த்து புகார் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவர் அவ்வாறு பேசுகிறார் என்பதை புரிந்துக்கொண்ட நான் அமைதியாக இருந்தேன். அவருடன் வந்திருந்த காப்பீட்டு அதிகாரிக்கும் அவர் பேசுவதிலிருந்த அடாவடித்தனம் புரிந்ததால் தர்மசங்கடத்துடன் என்னைப் பார்த்தார். ஆனால் என்னுடைய வாடிக்கையாளர் விடுவதாயில்லை.
‘என்ன சார் நா பாட்டுக்கு கத்திக்கிட்டிருக்கேன். நீங்க பாட்டுக்கு யாருக்கு வந்த விருந்தோன்னு ஒன்னும் பேசாம இருக்கீங்க. ஏதாச்சும் சொல்லுங்க சார்.’ என்றார்.
நான் அப்போதும் கோபப்படாமல் என்னுடைய உதவி மேலாளரைப் பார்த்து நீங்க போங்க நான் பாத்துக்கறேன் என்று அனுப்பி வைத்தேன். என்னுடைய அறைக்கு வெளியே நின்றிருந்த மற்ற வாடிக்கையாளர்கள் என்னுடைய அறையையே பார்ப்பது தெரிந்தது. இவருடன் மேலும் வாக்குவாதத்தில் ஈடுபடுவது பிரச்சினையை அதிகமாகவே க்கும் என்று நினைத்தேன். ஆனால் அதே சமயம் இவருக்கு என் மீதோ அல்லது என்னுடைய வங்கியின் மீதோ எந்த தவறும் இல்லையென்பதை அப்போதே விளக்கிக் கூறாமல் விட்டுவிடுவதும் உசிதமல்ல என்று நினைத்தேன்.
‘சார் நீங்க சொல்றது சரின்னே வச்சிக்குவோம். நேற்றைக்கு முந்தைய தினம் நீங்க கணக்க க்ளோஸ் பண்ணதுமே ஒங்களுக்கு இன்சூரன்ஸ் பாலிசிய அனுப்பி வச்சிட்டேன். நீங்க ஏறத்தாழ மதியம் மூனு மணிக்கு கையெழுத்து போட்டு வாங்கியிருக்கீங்க. அப்போதிருந்து இருபத்தி நாலு மணி நேரம் கழிச்சித்தான் விபத்து நடந்திருக்கு. நீங்க நெனச்சிருந்தா அந்த பாலிசி தொகைய உடனே இவர காண்டாக்ட் செஞ்சி கூட்டியிருக்கலாம். செய்யல. நான் இப்ப சொல்றதயும் பொருட்படுத்தாம நீங்க எங்க ஹெட் ஆஃபீசுக்கு புகார் செஞ்சீங்கன்னா போன மூனு வருசமா ஒவ்வொரு தடவையும் நாங்க இன்சூரன்ஸ் ப்ரீமியம் டெபிட் செஞ்சப்போ நீங்க அத அடைக்க முடியாதுன்னு எங்க பேங்குக்கு எழுதன லெட்டர அனுப்பினாலே போறும். எங்க மேல எந்த ஆக்ஷனும் எடுக்காம விட்டுருவாங்க. அப்படியே நீங்க குடுத்திருந்த ஸ்டேண்ட்மெண்ட் தொகைக்கு நாங்க இன்சூர் செஞ்சிருந்தாலும் அந்த ஸ்டாக் எதுக்குமே ஒங்கக்கிட்ட பில் இல்லேங்கறதுனால நாங்க இன்சூர் பண்ண தொகைக்கு நீங்க க்ளெய்ம் வச்சாலும் இவங்க கம்பெனியிலருந்து செட்டில் செஞ்சிருக்க மாட்டாங்க. அதனால புகார் அனுப்பி ஒங்க நேரத்த வேஸ்ட் பண்ணாம இன்சூரன்ஸ் கம்பெனியில ஏதாச்சும் பண்ண முடியுமான்னு பாருங்க. போங்க, எனக்கு வேல இருக்கு.’ என்றேன்.
என்னுடைய வார்த்தைகளை விட நான் அமைதியாக பேசியதுதான் அவருடைய கோபத்தை மேலும் கிளறியது. கோபத்துடன் தன்னுடன் வந்திருந்த காப்பீட்டு நிறுவன அதிகாரியைப் பார்த்தார். ‘என்ன சார் இவர் என்னென்னமோ சொல்றாரு நீங்களும் பேசாம கேட்டுக்கிட்டு இருக்கீங்க? அதுக்கு இவர் சொல்றது சரின்னு அர்த்தமா சார்?’
அவர் தர்மசங்கடத்துடன் ஆமாம் என்று தலையை அசைக்க என்னுடைய வாடிக்கையாளர் ‘நீங்க ரெண்டு பேரும் ஏதோ பேசி வச்சிக்கிட்டு சொல்றா மாதிரியில்ல இருக்கு? ஒங்க மேலயும் கம்ப்ளெய்ண்ட் செய்யணும் போலருக்கு..’ என்றவாறு உரக்க சப்தமிட்டுவிட்டு கோபத்துடன் வெளியேற உடன் வந்திருந்த அதிகாரி, ‘சாரி சார்.. இவர் இப்படித்தான். ஒங்க மேல கம்ப்ளெய்ண்ட் ஏதும் அனுப்பாம நா பாத்துக்கறேன். வரேன்.’ என்றவாறு எழுந்து சென்றார்.
அவர் என்ன மாயம் செய்தாரோ என்னுடைய வாடிக்கையாளர் என் மீது எந்த புகாரும் அனுப்பாமல் இருந்துவிட்டார்.
அந்த விபத்திலிருந்து மீண்டு மீண்டும் கடையை சிறிய அளவில் திறக்க அவருக்கு சுமார் ஆறுமாத காலம் பிடித்தது. நான் மதுரைக் கிளையில் சரியாக ஒரு வருட காலம் மட்டுமே இருந்ததால் நான் மாற்றலாகி சென்ற வாரத்தில்தான் அவர் கடையை மீண்டும் திறந்தார்.
ஆனால் சுமார் நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் மதுரைக்கு சென்றபோது அவர் கடையை பழைய நிலைக்கு கொண்டு வந்திருப்பதைப் பார்த்து அசந்துப் போனேன். முன்பு இருந்ததை விட அதிக பொலிவோடு கடை இருந்தது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு கூடி கடையே வண்ண விளக்குகளுடன் ஜொலித்துக்கொண்டிருந்தது..
சரி.. என்ன சார் ஒரே வருடம் மட்டும்தான் மதுரையில் இருந்தீர்களா என்று கேட்டால் அதற்கும் காரணம் இருக்கிறது..
மோதுவது யார் என்று பார்க்காமல் மோதியதால் எனக்கு கிடைத்த பரிசுதான் அந்த மாற்றம்..
மாற்றம் மட்டுமா?
தொடரும்..
'விடாக்கண்டன் கொடாக்கண்டன்'-
பதிலளிநீக்குகேள்விப்பட்டிருக்கேன். ஆனா இப்ப ஒரு படாக்கண்டன் வர்ராரோ!
வாங்க டிபிஆர்ஜோ. நல்வரவு.
பதிலளிநீக்குஇப்ப உடம்பு தேவலையா?
மதுரையிலே ஒரு வருசம் ரொம்ப வேகமா ஓடி இருக்குமே.
பிரச்சனைகளுக்கு நீங்கன்னாவே ரொம்பப் பிடிக்குது போல:-))))
ஆஹா, அப்ப மதுர கதை ரொம்ப நாள் ஒடாதா?
பதிலளிநீக்குஹா ஹா
பதிலளிநீக்குமதுரைன்னாலே எனக்கு தல தான் நியாபகம் வர்றார், பார்ப்போம் , ஐயாவ எந்த தல வந்து தூக்கிச்சின்னு? ;)
வாங்க ஜோசப் சார். எப்படி இருக்கீங்க? ரொம்ப நாள் ஆச்சு.
பதிலளிநீக்குவாழ்ந்து கெட்டவனுக்குக் கொஞ்சம் ஆத்திரமும் மொறைப்பும் இருக்கத்தான செய்யும். நீங்களும் கூடச் சேந்து கும்மரிச்சம் போடாதது நல்லதுதான். ஆனாலும் அவரு அந்தப் படிப்பினைய வெச்சு திரும்ப முன்னுக்கு வந்துட்டாரே...அதப் பாராட்டித்தான் ஆகனும்.
மதுரைல ஒரு வருசந்தானா! எங்கப்பாவும் மதுரை சர்வீஸ்ல இருந்தப்போ ஒரு அரசியல்வாதியால படாத பாடு பட்டாரு. ஆனா யாரு அந்த அரசியல்வாதின்னு தெரியாது.
sir! you were missing!where were you all these days!!1 any problem? anyways nice to see you Sir!any English blog updates?/
பதிலளிநீக்குபின்னூட்டம் இட்ட எல்லோரிடத்தும் பதிலளிக்க நேர்ந்த தாமதத்திற்கு மன்னிப்புக்கு கோருகிறேன்..
பதிலளிநீக்குநேற்று பதிவை இட்டுவிட்டு அலுவலகத்தை விட்டு கிளம்பியவன் இன்றுதான் திரும்பினேன்.
வாங்க ஜி!
பதிலளிநீக்குஆனா இப்ப ஒரு படாக்கண்டன் வர்ராரோ! //
நீங்களே படிச்சிட்டு சொல்லுங்க..
வாங்க துளசி,
பதிலளிநீக்குஇப்ப உடம்பு தேவலையா? //
தேவலை.. ஆஃபீஸ்லயே ஒரு குட்டி ஸ்டூல போட்டு அதும் மேல கால நீட்டி வச்சிட்டு ஒக்காந்திருக்கேன். இல்லன்னா சாயந்திரம் ஆனதும் கால் பெரிசா வீக்கமாயிருது. வலி இல்லைன்னாலும் ஒரு நியூசன்ஸ்..
மதுரையிலே ஒரு வருசம் ரொம்ப வேகமா ஓடி இருக்குமே.//
பின்னே.. பிரச்சினை மேல பிரச்சினையா வந்து ஜெட் வேகத்துல ஓடிருச்சி. அந்த 12 மாசமும் எனக்கு ஒரு நல்ல அனுபவம்.
பிரச்சனைகளுக்கு நீங்கன்னாவே ரொம்பப் பிடிக்குது போல//
இத விட பிரச்சினையையெல்லாம் என்னோட நண்பர்கள் சந்திச்சிருக்காங்க.. அவங்களுக்கு எழுதற நேரம் வரல.. இந்த பொசிஷன் பயங்கர சென்சிட்டிவ் ஆனதுங்க.. எந்த நேரத்துலயும் எதுவும் சம்பவிக்கலாங்கற மாதிரியான வேலை.. நேரம் கிடைச்சா என்னுடைய நண்பர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் எழுதறேன்.. பயங்கர த்ரில்லா இருக்கும்..
வாங்க ஸ்ரீஷிவ்,
பதிலளிநீக்குஅப்ப மதுர கதை ரொம்ப நாள் ஒடாதா?//
ஓடுற வரைக்கும் போதும்னு ஆயிருச்சி அங்கருந்து மாற்றல் வந்தப்போ..
அருண்மொழி கோச்சிக்காதீங்க..ஒங்க பின்னூட்டத்துக்கு பதில் போடறப்போ ஸ்ரீஷிவ் பேர போட்டுட்டேன்:(
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீஷிவ்,
பதிலளிநீக்கு'தல'யா நானா? நீங்க வேற.. தல தப்பிச்சது தம்புரான் புண்ணியம் ஓடினேன் மதுரைய விட்டு..
வாங்க ராகவன்,
பதிலளிநீக்குவாழ்ந்து கெட்டவனுக்குக் கொஞ்சம் ஆத்திரமும் மொறைப்பும் இருக்கத்தான செய்யும். //
வாஸ்தவம்தான். அதனால்தான் நான் பொறுமையாக இருந்தேன்.
ஆனாலும் அவரு அந்தப் படிப்பினைய வெச்சு திரும்ப முன்னுக்கு வந்துட்டாரே...அதப் பாராட்டித்தான் ஆகனும்./
உண்மைதான். தோல்வியைக் கண்டு சோர்ந்து போகாமல் மறுபடியும் ஜெயிச்சி வந்ததுக்கு அவர எவ்வளவு பாராட்டினாலும் தகும்..
மதுரைல ஒரு வருசந்தானா! எங்கப்பாவும் மதுரை சர்வீஸ்ல இருந்தப்போ ஒரு அரசியல்வாதியால படாத பாடு பட்டாரு. ஆனா யாரு அந்த அரசியல்வாதின்னு தெரியாது. //
ஒங்கப்பா எந்த வருசம் மதுரையில இருந்தாங்க? ஒருவேளை நம்மாளுதான் அவங்களுக்கும் பிரச்சினை குடுத்தாரோ என்னவோ?
வாங்க டெல்ஃபின்,
பதிலளிநீக்குsir! you were missing!where were you all these days!!1 any problem? anyways nice to see you Sir!any English blog updates?/
எனக்கு கொஞ்சம் சுகம் இல்லைங்க. அத்தோட என்னோட நண்பர் செஞ்சிக்கிட்டிருந்த வேலையெல்லாம் நான் செய்ய வேண்டியதா போச்சி. சாதாரணமா டெய்லி ராத்திரியிலதான் என்னோட அடுத்த நாள் பதிவுகள எழுதுவேன்.. சுகமில்லாமல் போனதும், வேலைப் பளு அதிகமானதும் இரவு நேரங்களில் எழுத முடியாமல் போய்விட்டது.
ஆங்கிலப் பதிவுகளையும் விரைவில் துவங்கிவிடுவேன்..
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி டெல்ஃபின்.
//// மதுரைல ஒரு வருசந்தானா! எங்கப்பாவும் மதுரை சர்வீஸ்ல இருந்தப்போ ஒரு அரசியல்வாதியால படாத பாடு பட்டாரு. ஆனா யாரு அந்த அரசியல்வாதின்னு தெரியாது. //
பதிலளிநீக்குஒங்கப்பா எந்த வருசம் மதுரையில இருந்தாங்க? ஒருவேளை நம்மாளுதான் அவங்களுக்கும் பிரச்சினை குடுத்தாரோ என்னவோ? //
எந்த வருசம்.....இருங்க கணக்குப் போட்டு பின்னால போறேன். அது 82-84க்குள்ள இருக்கலாம் சார்.
வாங்க ராகவன்,
பதிலளிநீக்குஅது 82-84க்குள்ள இருக்கலாம் சார். //
அப்படியா.. அப்போ நான் சொன்ன ஆளா இருக்க முடியாது..