எங்களுக்கருகில் நின்றிருந்த சேட் உடனே, ‘Sir he has been running around the entire Town on his own for the past three months. You should be really proud of him.’ என்று ஐஸ் வைத்தார்.
அவர் எதற்கு அடிபோடுகிறார் எனக்கு மட்டும்தானே தெரியும்?
என்னுடைய பொது மேலாளர் அவரைப் பார்த்து புன்னகையுடன், ‘Yes. We know.’ என்றார். பிறகு என்னைப் பார்த்து இவர் யார் என்பதுபோல் புருவத்தை உயர்த்தினார்.
நான் அவரையும் அவருடைய வர்த்தகத்தைப் பற்றியும் கூறினேன். இதுதான் சாக்கு என்று அவர் இடையில் புகுந்து அவரைப் பற்றியும் அவருடைய சென்னை நண்பர் எங்களுடைய வங்கியின் மத்திய கிளையில் வைத்திருக்கும் கடன் கணக்கையும் விலாவாரியாக கூற ரம்பிக்கவே என்னுடைய பொது மேலாளர் என்னைப் பார்த்து, ‘டிபிஆர், I would like to meet some of your important Customers like Mr.---------. Is there any place where I can have some privacy?’ என்றார்.
என்னுடைய கிளையில் என்னுடைய கேபினைத் தவிர வேறு அறை ஏதும் இருக்கவில்லை. மேலும் கிளை முழுவதும் வாடிக்கையாளர்கள் அடைத்துக்கொண்டு நின்றிருந்ததால் நான் என்னருகில் நின்றுக்கொண்டிருந்த கட்டிட உரிமையாளரின் சகோதரரைப் பார்த்தேன்.
அவர் புரிந்துக்கொண்டு என் பொது மேலாளரிடம், ‘சார் உங்களுக்கு ஆட்சேபனையில்லேன்னா எதிர்த்தாப்லருக்கற என் கடையில ஒரு தனி காபின் இருக்கு. அத நீங்க யூஸ் பண்ணிக்கலாம்.’ என்றார்.
என்னுடைய பொது மேலாளர் என்னைப் பார்க்க, 'ஆமாம் சார். It would be suitable to sit and discuss with two or three persons.’ என்றேன்.
அவர் என்னுடைய வட்டார மேலாளரைப் பார்க்க அவரும் சரி என்பதுபோல் தலையை அசைத்தவாறே என்னிடம், ‘OK, TBR. You also come.’ என்றார்.
நான் உடனே என்னுடைய உதவி மேலாளரிடம் சென்று நான் வரும்வரை வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு அங்கு நின்றுக்கொண்டிருந்த சில முக்கியமான வாடிக்கையாளர்களை அணுகி என்னுடைய பொதுமேலாளர் சந்திக்க விரும்புவதாக கூறி அழைத்துச் சென்றேன்.
சேட்டுடன் அவருடைய வர்த்தகர் சங்கத்தைச் சேர்ந்த சிலரும் வந்திருந்தனர். என்னுடைய பொது மேலாளரும் சென்னை, மும்பைப் போன்ற பெருநகரங்களில் பணியாற்றியிருந்ததால் சேட்டின் வர்த்தகத்தைப் பற்றி அறிந்து வைத்திருந்தார். ஆகவே சேட்டின் தேவைகளைப் பற்றி அவர் கூறி முடிக்கும்வரை பொறுமையுடன் கேட்டுவிட்டு என்னைப் பார்த்தார். ‘TBR. You can accept applications from him and his friends for Rs.-------- each for the time being and send to me through your RM.’
பிறகு சேட்டைப் பார்த்து, ‘நான் உங்களுக்கும் உங்களுடைய நண்பர்களில் பத்து பேருக்கும் தலா ரூ.----------- வீதம் ஆறு மாதங்களுக்கு லிமிட்ஸ் சாங்ஷன் செய்கிறேன். உங்களுடைய கணக்கில் நீங்கள் செய்கிற வரவு செலவைப் பொறுத்து உங்களுடைய லிமிட்சைக் கூட்டுவதுடன் உங்களுடைய சங்கத்திலுள்ள இன்னும் சிலருக்கு கடனுதவி செய்ய முயல்கிறேன்.’ என்றார்.
சேட் இதை முற்றிலும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அவருடைய முகத்திலிருந்த மகிழ்ச்சியே காட்டியது. வாயெல்லாம் பல்லுடன், ‘Thank you so much Sir. You need not worry about the turnover in the accounts.’ என்றார்.
அவர் சென்றதும் அதற்கடுத்து அவரைப் போலவே தஞ்சையில் நான் கடந்த இரண்டு வாரங்களில் சந்தித்திருந்த வர்த்தகர்களை பொது மேலாளருக்கு அறிமுகம்படுத்தினேன். ஏறக்குறைய வந்திருந்த எல்லோருக்குமே அவருடைய அதிகாரத்திற்குட்பட்ட கடன் தொகைக்கு In principle sanction அளித்தார். அன்று அவர் அனுமதியளித்த கடன் தொகைகளை நான் வழங்கினாலே அவ்வருட இறுதிக்குள்ளாகவே என்னுடைய கிளை லாபத்தில் இயங்க ஆரம்பித்துவிடும் என்று நினைத்தேன்.
ஆனால் அதே சமயம் இவ்வாடிக்கையாளர்களின் விண்ணப்பப் படிவங்களையெல்லாம் பூர்த்திசெய்து அதற்குண்டான கணக்கு வழக்கு பத்திரங்களையெல்லாம் சேர்த்து அனுப்புவதற்கு என்ன பாடுபடப் போகிறேனோ என்றும் நினைத்தேன்.
அத்துடன் போதும் என்று கிளம்பிய பொது மேலாளருடன் சுமார் பகல் ஒரு மணிக்கு என்னுடைய வங்கி கிளைக்கு திரும்பியபோது எனக்காகக் காத்திருந்த பண்ணையாரையும் அவருடைய வளர்ப்பு மகளையும் கண்டு அதிர்ந்துபோய் ‘சே! இந்த சேட் பண்ண களேபரத்தில் ஐயாவை மறந்தே போனேனே என்று என்னை நானே நொந்துக்கொண்டுஅவரை அவசரமாக நெருங்கினேன். ‘என்ன ஐயா நீங்க இன்னும் போகலையா?’ என்றேன்.
அவர் புன்னகையுடன், ‘என்ன தம்பி நீங்க? உங்க கிட்ட சொல்லாம எப்படி போறதுன்னுதான்...’ என்றவாறு தன்னுடன் கொண்டுவந்திருந்த மஞ்சள் பையிலிருந்து தயக்கத்துடன் ஒரு உறையை எடுத்து என்னிடம் நீட்டினார். ‘தம்பி, நீங்க கேட்டா மாதிரியே என்னால முடிஞ்சத..’
அந்த காசோலையைக் கண்ட நான் அதிர்ந்துபோய் பண்ணையாரை திகைப்புடன் பார்த்தேன். அத்தனைப் பெரிய தொகை அது! இதை என்னுடைய வங்கியில் இடுவதற்காக எத்தனை வங்கியிலிருந்த வைப்புக் கணக்குகளை முடித்தாரோ என்று நினைத்தேன்.
உடனிருந்த நாயக்கர் என்னை சற்றுத் தள்ளி அழைத்துக்கொண்டு சென்று, ‘சார் நீங்க அவர ஒரு சாதாரண கஸ்டமராத்தான் நினைச்சிக்கிட்டிருக்கீங்கன்னு நினைக்கிறேன். ஆனா அவரு உங்கள ஒரு உறவா நினைச்சிக்கிட்டிருக்கார். அவரத்தான் சார் நீங்க உங்க அதிகாரிங்கக்கிட்ட அறிமுகப்படுத்தணும். அந்த களவாணிப்பய சேட்ட இல்ல.’ என்றார் சற்றே எரிச்சலுடன்.
அவர் பேசியதில் இருந்த ஆதங்கம் என்னையும் பாதிக்க எங்களை நோக்கி வந்துக்கொண்டிருந்த என்னுடைய பொது மேலாளர் பண்ணையாரின் தோற்றத்தைக் கண்டு பொருட்படுத்தாமல் சென்றதைப் பார்த்த நான் அவரை அழைத்து பண்ணையார் கொடுத்த காசோலையை அவரிடம் காண்பித்து அறிமுகப்படுத்தினேன்.
என்னுடைய பொது மேலாளரும் காசோலையையும் பண்ணையாரையும் மாறி மாறி பார்த்துவிட்டு குழப்பத்துடன் என்னைப் பார்த்தார். நான் உடனே அவரைப் பற்றியும் அவருடைய தோட்டத்தைப் பற்றியும் சுருக்கமாக எடுத்துக் கூறினேன். எங்களுக்கு சற்று தூரத்தில் நின்றுக்கொண்டிருந்த நாயக்கரும் எங்களுக்கருகில் வந்து பண்ணையாரைப் பற்றி அவரிடம் கூற என்னுடைய பொதுமேலாளார் அவருடைய கைகளைப் பற்றிக்கொண்டு நன்றி தெரிவித்தார்.
இதை எதிர்பார்க்காத பண்ணையார் கூச்சத்துடன் தன் கைகளை விடுவித்துக்கொண்டு, ‘எல்லாம் உங்க மேனேஜர் தம்பிதான் காரணம். பத்து பதினைஞ்சு மைல் தூரத்தையும் பாக்காம என்ன பல தடவை வந்து பார்த்து திரும்ப திரும்ப கேட்டதாலத்தான் எனக்கும் ஏதாச்சும் செய்யணும்னு தோனிச்சி சார். இப்ப கணக்கு வச்சிருக்கற பேங்க்லல்லாம் எங்கள மாதிரி விவசாயிங்கள கண்டுக்கவே மாட்டாங்க. ஆனா இந்த தம்பி என்னையும் மதிச்சி வந்து கேக்கும்போது...’ என்றார் குரல் தழுதழுக்க.
‘பாத்தீங்களா டிபிஆர்? இதத்தான் எல்லா மேனேஜர் மீட்லயும் நான் அடிக்கடி சொல்றது. கஸ்டமர்ங்கள்ல பெரியவங்க சின்னவங்கன்னு யாருமே இல்லை.. நம்மள பொறுத்தவரை அஞ்சு ரூபா வச்சிருக்கறவரும் கஸ்டமர்தான். அதுமட்டுமில்ல கஸ்டமர்ங்கள அவங்களோட தோற்றத்தை மட்டும் வச்சி எடைபோடக்கூடாது.. நான் இது என்னுடைய முப்பது வருஷ வங்கி வர்த்தக அனுபவம்’ என்றவாறு பண்ணையாருடைய கரங்களை மீண்டும் பற்றிக்கொண்டு, ‘ஐயா நானும் உங்களுடைய எளிமையான தோற்றத்தைக் கண்டு பார்த்தும் பார்க்காமல்தான் செல்லவிருந்தேன். மன்னித்துக்கொள்ளுங்கள்.’ என்றார்.
அவருடைய இந்த கனிவான வார்த்தைகள் பண்ணையாரின் தர்மசங்கடத்தை மேலும் அதிகரிக்க அவர் என்னைப் பார்த்து, ‘தம்பி நான் கிளம்பறேன். நீங்க ரசீது எழுதி வைங்க. நான் ரெண்டு மூனு நாள் கழிச்சி வந்து வாங்கிக்கறேன். நான் இப்படியே உங்க வீடு வரைக்கும் போய்ட்டு போறேன்.’ என்றார்.
அவர் பேசியதன் பொருள் விளங்காமல் என்னைப் பார்த்த என்னுடைய பொது மேலாளரிடம் அன்று காலையில் என் மகள் திடீரென்று சுகமில்லாமல் போனதையும் பண்ணையார் என் மகளைக் காண வேண்டும் என்று என்னிடம் தெரிவித்ததையும் சுருக்கமாக கூறினேன்.
அவர், ‘அப்படியா? எனக்கு தெரியவே இல்லையே. நீங்க ஒன்னு பண்ணுங்க. நான் வந்த கார் வெளியதான் நிக்குது. நீங்க இவரை கூட்டிக்கிட்டு போய்ட்டு வந்துருங்க. நீங்க வர்ற வரைக்கும் இங்கருக்கற கஸ்டமர்ஸ நானும் உங்க RMமும் பார்த்துக்கறோம்.’ என்றார்.
அவர் வேலையில் மிகவும் கண்டிப்பானவர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நான் சென்னைக் கிளையில் இருந்தபோது தலைமையலுவலகத்துக்கு சென்றிருந்த நேரத்தில் இரண்டு மூன்று முறை அவருடைய கேபினில் சென்று சந்தித்திருக்கிறேன்.
ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு மேல் பேச மாட்டார். சுருக்கமாக வந்த விஷயத்தைக் கேட்டுவிட்டு, ‘ஓக்கே டிபிஆர். ஆல் தி பெஸ்ட்’ என்று அனுப்பிவைத்து விடுவார்.
அவரா இப்படி?
அதற்கு மேலும் காத்திருக்காமல் பண்ணையாரையும் அவருடைய மகளையும் அழைத்துக்கொண்டு என் வீட்டுக்குச் சென்றேன்.
நல்ல வேளை, நான் பண்ணையாருடன் சென்றடைந்தபோது என் மகளுடைய காய்ச்சல் சற்றே குறைந்திருந்தது. இருப்பினும் மிகவும் களைப்புடன் இருந்த என்னுடைய மகள் பண்ணையார் முகத்தைக் கண்டதும் பளிச்சென்று புன்னகைக்கவே அவர் மிகவும் மகிழ்ந்துப் போனார். எனக்கே அவர்களுக்கிடையில் இருந்த அந்த அற்புதமான கெமிஸ்ட்ரியின் பின்னணி புரியவில்லை.
நாங்கள் தஞ்சைக்கு வந்த கடந்த சில மாதங்களில் சுமார் இரண்டு மூன்று முறை தூத்துக்குடியிலிருந்து வந்து சென்ற என்னுடைய மாமனாரென்று பண்ணையாரை நினைத்துக்கொண்டிருப்பாளோ என்றும் தோன்றியது. அந்த அளவுக்கு அவருடன் ஒட்டிக்கொண்டாள் என் மகள்.
என்னுடைய பொது மேலாளர் எனக்காக காத்திருப்பாரே என்பது நினைவுக்கு வர நான் பண்ணையாரை அழைத்துக்கொண்டு டவுணுக்கு திரும்பும் நோக்கத்துடன், ‘ஐயா நாம போலாம்னு நினைக்கிறேன். இன்னொரு நாளைக்கு நானே உங்கள என் மகளோட வந்து பார்க்கறேன்.’ என்றேன்.
ஆனால் அவரோ, ‘நீங்க கார எடுத்துக்கிட்டு போங்க தம்பி. நான் இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போறேன்.’ என்றார்.
என் மனைவியும், ‘நீங்க போங்க. ஐயாவும் இவங்களும் இருந்து சாப்ட்டுட்டு போட்டும்.’ என்று அவருடைய மகளைச் சுட்டிக்காட்டி சொல்லவே நான் வேறு வழியின்றி அவர்களிருவரையும் விட்டுவிட்டு கிளம்பினேன்.
வரும் வழியெல்லாம் அவரைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன்.
நான் தஞ்சையிலிருந்து மாற்றலாகி தூத்துக்குடி சென்று மூன்று வருடம் கழித்து சென்னைக்கு சென்று அங்கிருந்து மூன்று வருடங்கள் கழித்து மும்பைக்கு செல்லும் வரை வருடா வருடம் வேளாங்கண்ணிக்கு செல்லும்போதெல்லாம் அங்கிருந்து பூண்டி மாதா கோவிலுக்கு செல்லும் வழியில் பண்ணையாரின் தோப்புக்கு சென்று அவ்ருடன் ஒரு இரண்டு மூன்று மணி நேரம் தங்கிவிட்டு செல்லாமல் இருந்ததே இல்லை. ஒவ்வொரு முறையும் என் மகளைப் பார்க்கும்போதெல்லாம் அவர்கள் இருவரும் பாசத்துடன் பழகிக்கொள்வதை பார்க்கும்போதெல்லாம் அப்படி அவர்கள் இருவரும் மற்றவரில் என்ன உறவைப் பார்த்தார்கள் என்று இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். என் மகளுடைய இரண்டுவயதில் துவங்கிய அந்த பாசம் அவள் வளர்ந்து பத்து வயதுவரை சற்றும் மங்காமல் இருந்தது பெரிய ஆச்சரியம்தான்.
மும்பையில் இருந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னைக்கு மாற்றலாகி வந்து ஒரு முறை பூண்டி மாதா கோவிலுக்கு செல்லும் வழியில் தோப்பிற்குச் சென்றபோது தோப்பு கைமாறி இருந்தது. பண்ணையார் காலமாகி மூன்று வருடங்கள் ஆகியிருந்தது.
அவர் நோய்வாய்பட்டு படுக்கையில் விழுந்ததும் அவருடைய வளர்ப்பு மகளை ஊரை விட்டே விரட்டியடித்துவிட்டு அவருடைய உறவினர்கள் அவரை நிர்பந்தித்து சொத்து பத்திரத்தில் கையொப்பமிட வைத்து அவருக்கிருந்த எல்லாவற்றையும் அபகரித்துக் கொண்டனர் என கேள்விட்டபோது நான் என் மனைவியும் வேதனையடைந்தோம்.
நல்லவேளை. என் மூத்த மகளை சென்னையில் என் தாயார் வீட்டில் விட்டு விட்டு சென்றிருந்தேன்.
அந்த நல்ல மனிதர் மரணத்தருவாயிலும் சந்தோஷமாக இல்லை என்பதை இன்று நினைத்தாலும் துக்கம்தான் மேலிடுகிறது.
தொடரும்..
ஐயோ கொடுமையே....இதெல்லம் நடந்தும் இந்த உலகம் இன்னும் இருக்குதே....எது எப்படியோ.....அந்தப் பாவிகளுக்கு ஆண்டவர் கொடுக்க வேண்டியதைக் கொடுத்திருப்பார். சந்தேகமே இல்லை.
பதிலளிநீக்குSir, very touching incidents. Here is the most irony of life. why peolple like pannaiyar didnt have a peaceful death? Well. we must consloe ourself saying that we dont know the meaning of GODS acts. In Hindu philosophy, there is one action - reaction theory which says u msut pay for what u did. May be pannaiyar might have finshded off all his bad deeds done by his kith and kin, his fatehr, grandfather and his soul migh have become pure... Something like this alone will make us to move forward in this staright path, otherwise we will lose the confidence. sory, this has become a bit too much. The reason is also your wonderful write up.
பதிலளிநீக்குdear TPR
பதிலளிநீக்குthanks.thanjavur manvasanai ai appadiye pathivu seykinreergal. nanum thanjavoor karanthan.vazhkkayai virattikkondu 35 aandugal odi kalaiththu oyvu petrapinbum thanjaiyin sugantham innum parimalikkinradhu
PANNAIYAR mudivu oru nerunjimul.adhilum koda thanjayaiadam pidithu vitteergal
INDIA LIVES IN VILLAGES but where are indians.....?
அன்பே சிவம் படம் பார்த்து பதிவுகளில் கரைந்து உங்கள் பதிவிற்கு வந்தால் நீங்களும் அன்பே சிவமா?
பதிலளிநீக்குபண்ணையாருக்கு உங்களுடன் அஞ்சலி செலுத்துகிறேன். நல்ல மனுஷன்.
வாங்க ராகவன்,
பதிலளிநீக்குஇதெல்லம் நடந்தும் இந்த உலகம் இன்னும் இருக்குதே//
அதனால்தான் பூமித்தாயை பொறுமைக்கு உதாரணமாக சொல்கிறார்களோ என்னவோ.
வாங்க கிருஷ்ணா,
பதிலளிநீக்குSomething like this alone will make us to move forward in this staright path, otherwise we will lose the confidence. //
Yes. You are absolutely right.
வாங்க மணியன்,
பதிலளிநீக்குஅன்பே சிவத்தில் வந்த சில உருக்கமான காட்சிகளை சரியாக சொல்லத் தெரியாமல் கெடுத்துவிட்டார்கள்..
இல்லையென்றால் இன்னும் மனம் நெகிழ்ந்துபோயிருக்கும்.
ஆனால் பண்ணையார் ஒரு நிஜ மனிதன். அவரை நிர்க்கதியாய் நிம்மதியில்லாமல் சாகடித்தவர்களும் நிஜ மனிதர்கள். அதுதான் வித்தியாசம்.
Hello TBR
பதிலளிநீக்குA touching post. Fortunate to know about a few good people through your blog and I am very thankful to you for that.
Murali
Thanks for Murali.
பதிலளிநீக்குThere are several nice people like Pannaiar around us . We come to about their qualities only when we move closer to them.
வாங்க ராஜ்,
பதிலளிநீக்குI'll visit your blog and give a feedback.
Thanks.