28 டிசம்பர் 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 45

நாயக்கருடைய கமிஷன் மண்டி தஞ்சையின் பிரதான சாலைகளில் ஒன்றில் அமைந்திருந்தது. அவருடன் வர்த்தகம் செய்வோரின் எண்ணிக்கை ஐம்பதுக்கும் மேலிருந்ததால் எந்த நேரமும் நெல் மற்றும் அரிசி மூட்டைகளை ஏற்றவும் இறக்கவும் வாகனங்கள் வருவதும் போவதுமாக இருப்பதுண்டு.

நாங்கள் குடியிருக்க வீட்டை பேசி முடித்த விஷயத்தை அவரிடம் அறிவிக்க நானும் என் மனைவியும் தரகருடன் அவருடைய அலுவலகத்தை சென்றடைந்தபோது மாலை நேரமாயிருந்ததாலும் அன்று மாதத்தின் கடைசி நாளாயிருந்ததாலும் வாகனங்கள் மற்றும் அவருடைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையுடன் அவரிடம் நெல் கொள்முதல் பணத்தை வாங்க வந்திருந்த அடுத்துள்ள கிராமத்து விவசாயிகளுமாய் சேர்ந்து அவருடைய அலுவலகத்தின் முன் ஒரு சிறிய ஜனத்திரளே குழுமியிருந்தது.

எங்களுடைய வாகனம் அவருடைய அலுவலகத்திலிருந்து சில மீட்டர் தூரம் இருந்தபோதே தரகர் என்னைப் பார்த்து, ‘சார் வீடு முடிஞ்ச விஷயத்தை பொதுவா சொன்னாப்போறும். நான் பெறகு வீட்டுக்காரரப் பத்தியெல்லாம் விலாவாரியா சொல்லிக்கறேன்.’ என்றார்.

எனக்கும் அவருடைய யோசனை சரியென்று படவே, ‘சரி. நாங்க உங்கள இறக்கிவிட்டுட்டு ஹோட்டலுக்கு போயிடறோம். இந்த கூட்டத்துல நாயக்கரோட பேசி அவர் வேலைய கெடுக்க வேண்டாம்னு பார்க்கிறேன்.’ என்றேன்.

‘ஆமா சார். நீங்க சொல்ற மாதிரியே செஞ்சிரலாம்.’ என்ற தரகர் எங்களுடைய வாகனம் நாயக்கருடைய அலுவலகத்தையடைந்ததும் அவசர அவசரமாக கதவைத் திறந்துக்கொண்டு இறங்கினார்.

ஆனால் அந்த நேரம் பார்த்து அலுவலகத்தைவிட்டு வெளியே வந்த நாயக்கர் தான் மென்றுக்கொண்டிருந்த வெற்றிலைச் சாற்றை சாலையோரத்தில் உமிழ்ந்துவிட்டு கையிலிருந்த பித்தளை செம்பிலிருந்த நீரால் வாயைக் கொப்புளித்தவாறே வண்டியிலிருந்து தரகர் மட்டும் இறங்குவதைப் பார்த்தார். ‘என்னய்யா சார் வரலை?’ என்றவாறே எங்கள் வாகனத்தை நோக்கி வந்தார்.

வேறு வழியில்லாமல் நானும் வாகனத்திலிருந்து இறங்கி, ‘வணக்கம் சார். நீங்க ரொம்ப பிசியா இருந்தா மாதிரி தெரிஞ்சிது. அதான் நம்ம விஷயத்த பத்தி நாள¨க்கு பேசிக்கலாம்னு நெனைச்சேன்.’ என்றேன்.

அவர் உரக்க சிரிக்கவே குழுமியிருந்த அனைவரும் எங்களை திரும்பிப் பார்த்தனர். ‘வேல கிடக்குது சார். நம்ம பயலுவளுக்கு இதெல்லாம் ரொம்ப சகஜம். சொல்லுங்க. போன விஷயம் என்னாச்சி? வீடு கிடைச்சிதா? என்னய்யா தரகரே, சாருக்கு நல்ல வீடா காமிச்சீங்களா?’

தரகர் என்னை கலவரத்துடன் பார்த்தார். நான் சிரித்துக்கொண்டே, ‘ஆமாம் சார். தரகர் நிறைய வீடுகளைக் காட்டினார். அதுல போஸ்டல் காலனியிலருந்த வீடு எனக்கு பிடிச்சிருந்தது. வீட்டு ஒனர் அம்மாவும் ரொம்பவும் மரியாதை தெரிஞ்ச ஆளா தெரிஞ்சாங்க. அட்வான்ஸ் கூட வேணாம்னுதான் சொன்னாங்க. நாந்தான் ஒரு அடையாள அட்வான்சா ரூ.1000/- கொடுத்து முடிச்சிட்டேன். மத்த விஷயங்கள தரகர் சொல்லுவார்னு நினைக்கறேன். என் பொண்ணுக்கு காலைலருந்து ஒன்னும் சாப்பிட குடுக்கலை. அதனால் நான் ஹோட்டலுக்கு போலாம்னு பாக்கறேன். மத்தத நாளைக்கு பேசிக்கலாம் சார்.’ என்றவாறு வாகனத்தில் ஏற இருந்த என்னை தடுத்து நிறுத்திய நாயக்கர் தரகரை பார்த்தார்.

‘யாருய்யா அது போஸ்டல் காலனியில? அருளானந்தர் நகர்ல சொன்ன வீடு என்னாச்சி?’

தரகர் மென்று விழுங்கினார். ‘நாயக்கரய்யா, சாருக்கு அது பிடிக்கலைங்க. போஸ்டல் காலனியில நம்ம ---- வீடுங்கய்யா.’ என்றார்.

தரகர் இன்னார் வீட்டை முடித்துக் கொடுத்தேன் என்று கூறி முடிக்கக்கூட இல்லை. கையிலிருந்த செம்பை தரையில் வீசியெறிந்த நாயக்கர் தரகரின் சட்டயைப் பிடித்து இழுத்து கன்னத்தில் ஓங்கி அறைந்தார். ‘ஏண்டா தரகு பயலே.. நான் படிச்சி படிச்சி சொல்லியும் அந்த ---- பய வீட்டை முடிச்சி குடுத்தேன்னு சொல்றதுக்கு ஒனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கணும்?'

நாயக்கருக்கு நிச்சயம் இந்த விஷயம் பிடிக்காது சார் என்று தரகர் சற்று முன்பு கூறியபோது பெரிதாக நினைக்காத நான் தரகர் விஷயத்தை அவரிடம் கூறியவுடன் அவர் ரியாக்ட் செய்த விதத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

நாயக்கருடைய செயலை முற்றிலும் எதிர்ப்பாராத நான் சிறிது நேரம் என்ன செய்வதென தெரியாமல் திகைத்துப்போய் நின்றுக்கொண்டிருதேன். நல்ல வேளையாய் பசியில் அழுகிற மகளை மடியில் போட்டுக்கொண்டு சமாதானப்படுத்துவதில் மும்முரமாயிருந்த என் மனைவி இந்த நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை. ஆனால் நாயக்கரின் அலுவலகத்தில் குழுமியிருந்தவர்கள் யாரும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நாயக்கரின் கோபம் அவர்களிடையில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாதிலிருந்து இது அவர்களுக்கு சாதாரண விஷயம்போலும் என்று நினைத்தேன்.

இருப்பினும் நான் செய்த தவறுக்கு தரகர் தண்டிக்கப்படுவதைக் காண சகியாத நான், ‘சார் தரகர் மேல எந்த தப்பும் இல்லை. நாந்தான் வீடு பிடிச்சிருந்ததால அவர் சொல்லியும் நான் கேக்கலை.’ என்றேன்.

நாயக்கர் நான் சொன்னதைக் கேளாதவர்போல் தன் அலுவலகத்தை நோக்கி நடக்கலானார். என்னைப் பார்த்த தரகர் சைகையாலேயே, ‘நீங்க போயிருங்க சார். நான் பார்த்துக்கறேன்.’ என்றவாறு அவர் பிறகு ஓட ஒரு சில விநாடிகள் காத்திருந்த நான் காரிலேறி விடுதிக்கு திரும்பினேன்.

விடுதிக்கு திரும்பிய நானும் என் மனைவியும் நாள் முழுவதும் சுற்றி களைத்துப் போயிருந்ததால் இந்த விஷயத்தைக் குறித்து மேலும் விவாதிக்காமல் இரவு உணவுக்குப் பின் படுக்கைக்குச் சென்றோம்.

அசதியின் காரணமாக காலையில் என் அறையிலிருந்த தொலைப்பேசி ஒலிக்கும் வரை எழவில்லை.

தொலைப்பேசி மணி ஒலி கேட்டதும் பதறியெழுந்த நான் ஒலிவாங்கியை எடுத்து, ‘ஹலோ’ என்றேன்.

‘சார் நான் மெட்றாஸ்லருந்து பேசறேன். எங்க எம்.டி. உங்கக்கிட்ட அவசரமா பேசணுமாம்.’ நாயக்கரை எனக்கு அறிமுகம் செய்த வாடிக்கையாளர்!

சிறிது நேரம் கழித்து, ‘சார் எப்படி இருக்கீங்க? வீடெல்லாம் புடிச்சிட்டீங்க போலருக்கு? நேத்து நாயக்கர் என்கிட்ட ஃபோன்ல சொன்னார்.’ என்றவரிடம் ‘ஆமாம் சார். நாயக்கர் அனுப்பின தரகர் மூலமாத்தான் ஒரே நாள்ல வீடு கிடைச்சிது. உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்.’ என்றேன்.

‘அதனாலென்ன சார். இதெல்லாம் நீங்க எனக்கு செஞ்ச உதவிக்கு முன்னால சின்ன விஷயம்.’ என்றவர் சிறிது நேர தயக்கத்திற்குப் பிறகு, ‘சார் அப்புறம் ஒரு விஷயம்.’ என இழுக்கவே நான் உஷாரானேன். திரும்பி என் மனைவியைப் பார்த்தேன். அவர் எழுந்து படுக்கையில் அமர்ந்து என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.

நான் ஒலிவாங்கியில், ‘சார் ஒரு நிமிஷம்.’ என்று கூறிவிட்டு என் மனைவியிடம், ‘நீ போய் முதல்ல குளிச்சிட்டு சீக்கிரம் ரெடியாவு. வெளிய போவணும்.’ என்று அவசரப்படுத்தி அறையை விட்டு அனுப்பினேன். இந்த விஷயம் என் மனைவிக்கு தெரிந்தால் ‘அவ்வளவு பிரச்சினைனா அந்த வீடு வேண்டாங்க’ என்று எங்கே கூறிவிடுவார்களோ என்ற அச்சம் எனக்கு!

‘சார்..’ என்று குரல் மறுபுறத்திலிருந்து கேட்கவே.. ‘சொல்லுங்க சார்.’ என்றேன்.

‘சார், நேற்று ராத்திரி ரொம்ப நேரம் நாயக்கர் பேசினார். அவருக்கு நீங்க ஃபிக்ஸ் பண்ண வீடு பிடிக்கலைன்னு நினைக்கிறேன். மெட்றாஸ்லருக்கற நமக்கு இந்த குலம், கோத்திரம்லாம் முக்கியமில்லதான் சார். ஆனா ஊர் பக்கம் இன்னமும் அதுதான் பிரதானமாயிருக்கு. இப்பவும் நான் ஊருக்கு போகும்போதெல்லாம் இந்த மாதிரி பிரச்சினைகள சந்திக்க வேண்டிதான் வருது. இது காலங்காலமா கிராமபுறங்களிலும் தஞ்சாவூர் மாதிரி சிறு நகரங்கள்லயும் இருந்து வர்ற பிரச்சினை. இத நீங்களோ நானோ ஒரே நாள்ல தீர்த்து வைக்க முடியாது சார். அதுவுமில்லாம உங்கள மாதிரி மேனேசர்ங்க இத ஒரு பிசினஸ் கோணத்துலருந்து மட்டும் பார்க்கறதுதான் நல்லதுன்னு நினைக்கறேன்.’என்றவரை இடைமறித்தேன்.

‘பிசினஸ் கோணமா? அப்படீன்னா?’

‘சார் நான் சொல்ல வந்தது என்னன்னா, நாயக்கர் தஞ்சாவூர்ல மட்டுமில்ல, சுத்தி இருக்கிற இருபது, இருபத்தஞ்சி கிராமங்கள்லயும் ரொம்பவும் செல்வாக்கு இருக்கறவர். அவரால உங்க பேங்குக்கு நல்லமாதிரியான பார்ட்டிங்களயெல்லாம் கொண்டுவரமுடியும். அதனால ஆரம்பத்திலயே அவர் மனசு கோணாம பார்த்துக்கறது நல்லதுன்னு நினைக்கறேன். அதனாலத்தான் சொல்றேன். மத்தபடி உங்க இஷ்டம்.’

துவக்கத்தில் எனக்கு எரிச்சலாக இருந்தாலும் யோசித்துப் பார்த்தபோது அவர் கூறியதிலும் நியாயம் இருப்பதுபோல் தோன்றியது. இருப்பினும் உடனடியாக முடிவெடுக்க முடியாமல், ‘சரி சார். நீங்க சொன்னத யோசிச்சிப் பார்த்து நாயக்கர் கிட்டயும் பேசிட்டு ஒரு முடிவெடுக்கறேன். மாலைக்குள்ள உங்கள கூப்பிடறேன். உங்க அட்வைசுக்கு நன்றிங்க.’ என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தேன்.

இணைப்பைத் துண்டிப்பதற்கே காத்திருந்ததுபோல் மீண்டும் தொலைப்பேசி சிணுங்க எடுத்தேன்.

‘சார் இங்க ரிசப்ஷன்லுருந்து பேசறேன்.’

‘என்ன சொல்லுங்க.’ என்றேன்.

‘சார் நாளைலருந்து ஒரு வாரத்துக்கு பெரிய கோயில்ல அரசு நடத்தற சதய விழாவுக்கு மெட்றாஸ்லருந்து அமைச்சர்களும், வி.ஐ.பிசும் வர்றதுனால எங்களுக்கு ரூம்ஸ் தேவைப்படுது சார். நீங்க பகல் ரெண்டு மணிக்குள்ள ரூம் காலிபண்ண வேண்டியிருக்கும். தொந்தரவுக்கு மன்னிக்கணும்.’

சட்டென்று எனக்கு கோபம் வந்தது. ‘என்னங்க இது அக்கிரமம்! அதுக்கெதுக்கு என்னை வெக்கேட் பண்ண சொல்றீங்க?’

தொடரும்..

8 கருத்துகள்:

  1. நாயக்கருடைய செல்வாக்கு பாதாளம் வரை பாயும் போல இருக்கே!

    பதிலளிநீக்கு
  2. ஒரு சின்ன விதயம் என்று கருதக் கூடியதற்கு இத்தனை கோபமும் முஸ்தீபுமா ?
    அதிகாரவெறி என்பது இதுதான் :(

    பதிலளிநீக்கு
  3. வாங்க துளசி, நன்றி.

    ஆமாங்க இந்த மாதிரி நாயக்கருங்க நம்ம கிராமப்புறங்கள்ல நிறையவே இருக்காங்க. அங்கல்லாம் அவங்க வச்சதுதான் சட்டம். நாயக்கர் பொதுவா பழகறதுக்கு நல்லவராத்தான் தெரிஞ்சார். ஆனா இந்த குலம், கோத்திரம்னு பாக்கறதுதான் அவருக்குள்ளருக்கற முரண்பாடு.

    பதிலளிநீக்கு
  4. வாங்க மணியன், நன்றி.

    நமக்கு அதுக்கு சின்ன விஷயமா படுது. இத அதிகார வெறின்னு சொல்லலாமா? தெரியலை. ஆனா அடிமனசுலருக்கறதுதானே வெளியே வரும்? ஜாதியின் அடிப்படையில மனிதர்களை பிரித்து பார்ப்பதும் ஒருவகை வெறிதான்.

    பதிலளிநீக்கு
  5. என்ன ஜோசப் சார்,
    நம்மூரைப் போட்டுத்தாக்குறீங்களே.. ஹூம்.. நடந்ததான் சொல்றீங்க. என்ன செய்யறது. இப்பல்லாம் நிலைமை எவ்வளவோ தேவலை.

    போஸ்டல் காலனியா? அது எங்கேருக்கு? எனக்கு இன்னிவரைக்கும் தெரியலியே? MC பக்கமா? இல்ல Sacred Hearts பக்கமா?

    பதிலளிநீக்கு
  6. வாங்க ராமனாதன்,

    உங்க ஊரு தஞ்சாவூரா? தெரியாம போச்சே.. நான் எழுதறது இருபத்திரண்டு வருஷத்துக்கு முன்னால நடந்தது. இப்ப மாறியிருந்ததுன்னா ரொம்ப சந்தோஷம். போஸ்டல் காலனிங்கறது போலி பெயர். உண்மையான காலனி பேர் எழுதி நான் குறிப்பிட்ட குலத்தவர் மனதைப் புண்படுத்த எனக்கு விருப்பமில்லை ராமனாதன். அந்த காலனி MC போகும் வழியில் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. Hello TBR

    Thanks for your daily updates to the blogs. Even though I was brought up in a suburb of a small district in Tamilnadu during the 70's and 80's I never encountered these caste issues. Very sorry to learn of your experiences.

    "உண்மையான காலனி பேர் எழுதி நான் குறிப்பிட்ட குலத்தவர் மனதைப் புண்படுத்த எனக்கு விருப்பமில்லை"

    true mark of a great blogger. Hats off to you.

    Look forward to more of your experiences.

    Murali

    பதிலளிநீக்கு
  8. வாங்க முரளி,

    I never encountered these caste issues. //

    You are right. It does not normally happen. I had worked in several small towns. It was quite strange that I had to face such a situation that too for taking a house on rent!

    Sorry to say this Murali, if the tenant and the houseowners are Hindus it does not happen. But Christians are normally looked at as Dalits. That is the reason behind such issues. Even in places in Chennai we face such issues.

    பதிலளிநீக்கு