06 டிசம்பர் 2005

திரும்பிப் பார்க்கிறேன் -30

சில நொடிகள்வரை காத்திருந்த நான் அலுவலக படிகளில் ஏறவும் ஒரு வாகனம் சர்ரென்று வந்து என் பின்னே நிற்கவும் சரியாக இருந்தது..

மனசுக்குள் ‘திக்’கென்றது. அரைமனதுடன் திரும்பி பார்த்தேன்.

வந்து நின்ற வண்டி அம்பாசடர்தான். ஆனால் அதிலிருந்து இறங்கியவர் பிள்ளையில்லை. அப்பாடா என்றிருந்தது!

வடக்கத்திய ஸ்டைலில் நீண்ட கோட் (ஷேர்வானி) சூட் சகிதம் ஒரு வடக்கத்திய திரைப்பட நடிகரைப் போல் இருந்த அவரை எங்கோ பார்த்ததுபோலிருந்தது. யாராயிருந்தால் நமக்கென்ன என்று நினைத்துக்கொண்டு முதல் மாடியிலிருந்த என் அலுவலகத்துக்கு திரும்பினேன்.

படிகளில் என் பின்னால் கேட்ட காலடி ஓசை காரிலிருந்து வந்தவரும் என் கிளைக்குத்தான் வந்திருக்கிறார் என்பதை உணர்த்தியது. யாராவது வாடிக்கையாளராக இருக்கும்.

என் காபினுக்குள் நுழைந்து மின்விசிறியை வேகமாக சுழலவிட்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தேன். கடந்த ஒரு வாரத்தில் நடந்த சம்பவங்களின் தாக்கத்தை சற்று அதிகமாகவே உணர்ந்தேன். பேசாமல் ஒரு வாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்கு போனாலென்ன என்று யோசித்தேன்.

சட்டென்று சேர்மனின் ஃபோன் கால் நினைவுக்கு வர நிமிர்ந்து உட்கார்ந்தேன். பியூன் என் அறைக்கு வெளியே நிற்பது தெரிந்தது. என்ன என்பதுபோல் அவனைப் பார்த்தேன். கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தவன், ‘சார் உங்கள பாக்கறதுக்கு இவர் வந்திருக்கார்.’ என்று ஒரு விசிட்டிங் கார்டை கொடுத்தான்.

திடுக்கிட்டு எழுந்து கதவைத் திறந்துகொண்டு வெளியே சென்று பார்த்தேன். காரிலிருந்து இறங்கியவர்தான்!

பார்த்தும் பார்க்காததுமாதிரி இருந்தார்னு சேர்மன்கிட்ட புகார் போனா என் கதி அதோகதிதான்.

கவுண்டரை சுற்றிக்கொண்டு சென்று ஒரு அசட்டு புன்னகையுடன் அவரை வரவேற்று என் அறைக்கு அழைத்து சென்றேன். பியூனிடம் ஒரு அரை மணி நேரத்துக்கு யாரையும் அறைக்குள் விடவேண்டாம் என்று கூறிவிட்டு அவரைப் பார்த்தேன். அவரைப் பார்த்தாலே ஒரு.. என்ன சொல்வது, 420 லுக்?

(உங்களுக்கு யாரை பார்த்தாலும் சந்தேகம்தானா சார்? முந்தைய பதிவுல ஒருத்தர் பின்னூட்டத்துல கேட்டது இந்த பதிவை எழுதும்போது நினைவுக்கு வருகிறது.)

ஆனால் அவருடைய தோற்றம் அப்படித்தான் இருந்தது. அதென்ன 420? தெரியாதவர்களுக்கு ஒரு விளக்கம். Indian Penal Code Sec.420 deals with cheating. அதனாலதான் அந்த மாதிரி ஆளுங்களுக்கு 420னு பேர் வைக்கறது வழக்கம்!

மனதுக்குள் நினைத்ததை வெளியே சொல்ல முடியாமல் அவரைப் பார்த்தேன். ‘சேர்மன் உங்கள பத்தி ரொம்ப உயர்வா சொன்னார் சார். சொல்லுங்க. நான் என்ன பண்ணனும்?’

பயங்கர பந்தாவுடன் கைப்பையிலிருந்து புகைப்பிடிக்கும் குழாயையும் (Smoking Pipe) ஒரு ப்யூர் லெதர் பவுச்சையும் நிதானமாக எடுத்து, லெதர் பவுச்சிலிருந்த புகையிலைத் தூளை எடுத்து பைப்பில் நிறைத்து அதன் மேல் தீயை வைத்து சாவகாசமாக உள்ளிழுத்து விட்டார். எரிச்சலாக இருந்தது. நான் ஒரு சுத்தமான அக்மார்க் நான்-ஸ்மோக்கர். புகைன்னாலே பயங்கர அல்ர்ஜி.

சேர்மன் ஆளாச்சே, மனதிற்குள் சபித்துக்கொண்டேன். வேறு வழி?

‘மிஸ்டர் ஜோசப்’ சரியாய் அமிதாப் பச்சன் குரல். வட இந்திய கலர். நெற்றியில் சந்தனப் பொட்டு. இடது கையில் தங்க பட்டையுடன் அக்காலத்திய ரோலக்ஸ் வாட்ச். இரண்டு கைகளிலும் சுமார் எட்டு விரல்களில், கட்டை விரல்களைத் தவிர, பளபளக்கும் மோதிரங்கள். அதில் ஒன்று நவரத்தினங்களுடன்.

இந்த காலத்து பிள்ளைகள் கூறுவது போல், ‘போதுன்டா, அடங்கு’ என்று சொல்ல வேண்டும் போலிருந்தது.

‘யெஸ் சார்,’ என்று அவரை மேலே தொடர எடுத்துக் கொடுத்தேன்.

‘சுருக்கமா சொல்றேன்.’ (முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் நடந்த உரையாடல். முடிந்தவரை தமிழாக்கம் செய்துள்ளேன்.) ‘எங்க கம்பெனி பூம்புகார் ஷிப்பிங்லருந்து ரெண்டு கப்பல்கள் சார்ட்டர் (Charter) பண்றதுக்கு ஒரு அக்ரிமெண்ட் போடப்போறோம். இனிஷியல் டிஸ்கஷன்லாம் முடிஞ்சி இன்னும் ரெண்டு வாரத்துல டாக்குமெண்ட்ஸ் சைன் (sign) பண்ணிருவோம்.’

‘இதென்னடா பெரிய ரீலா இருக்கு’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு பார்த்தேன்.

‘ரெண்டு கப்பல்களும் தூத்துக்குடி-ஹால்தியா ரூட்ல ரெகுலரா ஓடும். தூத்துகுடியிலருந்து ஹால்தியா (கொல்கத்தாவிலுள்ள Sea Port) வுக்கு உப்பும் திரும்பிவரும்போது சிமென்ட்டும் ட்ரான்ஸ்போர்ட் பண்றதா உத்தேசம். அதுக்கான பேச்சு வார்த்தையும் சம்பந்தப்பட்ட பார்ட்டிங்களோட நடந்துகிட்டிருக்கு.’

சரி. இதுல எங்களோட ரோல் என்ன? அத சொல்லுங்க. பிள்ளை மாதிரி ஆளுங்கக்கிட்ட பேசறா மாதிரி இவர்கிட்ட பேச முடியாதே!

‘இன்னும் ரெண்டு வாரத்துக்குள்ள ப்ரொப்போசல் பேப்பர்சோட எல்லா அக்ரிமெண்ட்சும் வில் பி சைன்டு, சீல்ட் அன்ட் டெலிவர்ட் டு யூ.’ பெருந்தன்மையுடன் சிரித்தார் அவர்.

நான் ஒன்றும் சொல்லாமல் அவரையே பார்த்தேன்.

‘எங்க கம்பெனிக்கு உங்க் சேர்மனோட பழைய பேங்குலதான் மெய்ன் அக்கவுண்ட். இந்த புது கம்பெனியோட Current Accountம் அந்த பேங்க்லதான் இருக்கு. உங்க சேர்மன போன மாசம் ஒரு ஃபங்ஷன்ல பார்த்தேன். அவர்கிட்ட இந்த டீலை பத்தி காஷ¤வலா பேசிக்கிட்டிருந்தப்ப அவர்தான் எங்க பேங்க்லருந்து கொடுக்கறோம். நீங்க ப்ரொப்போசல ரெடி பண்ணி மட்றாஸ் பிராஞ்சஸ்ல ஒன்னுல சப்மிட் பண்ணுங்கன்னு சொன்னார். அதான் உங்க கிட்ட வந்தேன்.’

நான் தயக்கத்துடன் அவரை பார்த்தேன். ‘என்ன ப்ரொப்போசல்னு கொஞ்சம் ப்ரீஃப் பண்ணா ஹெல்ஃபுல்லா இருக்கும்’ என்றேன்.

அவர் வியப்புடன் பார்த்தார். ‘உங்க கிட்ட டீடெய்லா சொல்லியிருக்கேன். நீங்க சும்மா போய் பார்த்தா போதும்னாரே.’

‘அப்படீன்னு யார் சொன்னா, சேர்மனா?’

‘நோ, நோ. உங்க க்ரெடிட் டிபார்ட்மெண்ட் ஹெட்.’

அடப்பாவி மனுஷா? அவரா? அந்த அதிகாரி எதையுமே சரியா செய்யமாட்டார். குழப்பல் மன்னன் என்றுதான் அவரை எல்லோருக்கும் தெரியும். சேர்மன் அவர்கிட்ட என்ன சொன்னாரோ இவர் என்ன புரிஞ்சிக்கிட்டாரோ! அவர்கிட்ட நான் பேசியே ஒரு மாசத்துக்கு மேலாச்சி. இப்ப இவர்கிட்ட அவர் என்கிட்ட ஒன்னும் சொல்லலைன்னு சொன்னா இவர் நேரா சேர்மனுக்கு ஃபோன் பண்ணிருவார். அப்புறம் அவர் அந்த குழப்பல் மன்னன கூப்பிட்டு டோஸ் விடுவார். அவர் என் கிட்ட சொல்லிட்டேன்னு முழுசா ஒரு பொய்யை சொல்லவும் தயங்க மாட்டார். ஆக, கடைசியா பழி முழுசும் என் தலைமேலத்தான் வந்து விழும். என்ன பண்ணலாம்? யார்மேலயும் பழிய போடாம டெலிக்கேட்டா கையாளணும்.

‘ஓ அவரா? அவர் நேத்து நான் இல்லாதப்போ கூப்பிட்டதா நம்ம அசிஸ்டென்ட் சொன்னாரு சார். இன்னைக்கி காலையிலேயே ஒருத்தர் வந்து இவ்வளவு நேரம் பிரச்சினை பண்ணிட்டு இப்பத்தான் போறார். இஃப் யூ டோண்ட் மைண்ட், நீங்களே சொல்லுங்களேன்.’

இரு தோள்களையும் குலுக்கிக் கொண்டு கண்களை மேலே உருட்டி, ‘வாட் ஈஸ் திஸ் மிஸ்டர். ஜோசஃப்? ஆரம்பத்திலேயே இந்த மாதிரி கன்ஃப்யூஷன் இருந்தா அப்புறம் உங்களையெல்லாம் நம்பி இவ்வளவு பெரிய ப்ரொப்போசலை எப்படி கொடுக்கிறது? மிஸ்டர்... (சேர்மனின் பெயரை அலட்சியமாக உச்சரித்து) சொன்னாரேன்னு வந்தேன். ஐ திங்க் ஐ ஆம் வேஸ்ட்டிங் மை டைம். நான் ஒன்னு பண்றேன். நான் எங்க ஆஃபீஸ் மேனேஜரை உங்கள காண்டாக்ட் பண்ண சொல்றேன். அவர் உங்களுக்கு எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுவார். ஓ கே. எனக்கு மினிஸ்டர்கிட்ட ஒரு அப்பாயின்ட்மெண்ட் இருக்கு.. நான் வரேன்.’

நான் எழுந்து அவரை தடுக்கும் முன்னர் அவர் எழுந்து ஒரே வேகமாய் படியிறங்கி சென்றுவிட அவர் பின்னால் ஓடுவதா, வேண்டாமா என்று நான் தயங்கி நிற்க என் தொலைப்பேசி அடித்தது.

சரியான நேரத்துல இதென்னடா ரோதனைன்னு எடுத்து காதில் வைத்ததுதான் தாமதம், எதிர் முனையிலிருந்து சேட்! அவர் குரலிலிருந்தே அவருடைய கோபத்தின் உக்கிரம் புரிந்தது. ‘என்ன ஜோச·ப் இப்படி பண்ணீட்டீங்க. இது கொஞ்சம் கூட நல்லால்லை!’

போச்சிரா? பிள்ளையோட வேலைதான். என் நேரத்தை நொந்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைத்துக்கொண்டு அவருடைய கோபம் அடங்கும்வரை திட்டி தீர்க்கட்டும் என்று ஒலிவாங்கியை தேமே என்று பிடித்துக்கொண்டு நின்றேன்.

தொடரும்

15 கருத்துகள்:

  1. அடடா,எப்படித் தான் இப்படி சுவை குறையாது கொண்டுபோகிறீர்களோ?மைக்கல் மதன காமராஜன் -ல கமல் சொல்லுற மாதிரி "அதெல்லாம் அப்டியே வர்றது"..இல்லையா சார்?

    பதிலளிநீக்கு
  2. ம்ம்ம்ம்ம்.. அப்புறம்? ( கதை கேக்குற நாயை செருப்பால அடி என்று துளசி சொன்ன பழமொழி ஞாபகத்துக்கு வருது :-))))))))))))

    பதிலளிநீக்கு
  3. "அதெல்லாம் அப்டியே வர்றது"..இல்லையா //

    கமலுக்கு வேணும்னா அப்படியே வரலாம் ஜோ. நானெல்லாம் ஒரு ரெண்டு மணி நேரம் எழுதி,எழுதி, கரெக்ட் பண்ணி, பண்ணி... ஒரு பதிவு எழுதி முடிக்கறதுக்குள்ள போறும், போறும்னு ஆயிடும்.

    நல்லாருக்குன்னு சொன்னா சந்தோஷம். இல்லன்னா இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணனும்னு நினைச்சிக்குவேன்.

    நன்றி ஜோ.

    பதிலளிநீக்கு
  4. கதை கேக்குற நாயை செருப்பால அடி//

    ஐயையோ துளசியா அப்படி சொன்னாங்க? அவங்களுக்கு அப்படியெல்லாம் கூட பேச வருமா என்ன?

    ஆனா ஒன்னு நிஜத்துல நடந்தத எழுதுனா கதைங்கறீங்க. நல்லா இருந்தா சரிதான்.

    நன்றி உஷா!

    பதிலளிநீக்கு
  5. யார் சொன்னா நீங்க இப்படி தொடரும் போடறத நிறித்துவீங்கன்னு யோசிக்கிறேன். //

    யோசிங்க, யோசிங்க. நல்லா யோசிங்க. ஆனா வாழ்க்கை சரிதை!? எழுதும்போது எப்படி ராஜ் 'தொடரும்' போடாம இருக்கறது?

    பொறுத்துக்குங்க. பொறுத்தவர்? பூமியாள்வார்! கேட்டதில்லை?

    நாளைக்கு பாக்கலாம் ராஜ். நன்றி.

    பதிலளிநீக்கு
  6. ஜோசப் சார் ஒவ்வொரு பாகத்துலயும் குறையாத விறுவிறுப்பு. தொடர்ந்து கலக்குங்க. அடுத்த பதிவு இன்னமும் சிறப்பாக இருக்கும் என எதிர் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. வாங்க ராகவன், நன்றி.

    லஞ்ச் டைமா?

    எழுதறதுக்கு விஷயம் இருந்தாத்தான் விறுவிறுப்பா எழுத முடியும். அடுத்த பதிவு இதேபோல விறுவிறுப்பா இருக்குமான்னு இன்னைக்கி ராத்திரி எழுதுனாத் தெரியும். முடிஞ்ச வரைக்கும் ட்ரை பண்றேன்.

    பதிலளிநீக்கு
  8. என்ன சார், ரொம்ப நாளாச்சி உங்க பதிவுகள பார்த்து பின்னூட்டம் போட்டு. இன்னைக்கித்தான் உக்கார்ந்து உங்க பின் பதிவுகளையெல்லாம் படிச்சேன். சூப்பரா ஒரு க்ரைம் தொடர் போல இருக்கு.

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. வாங்க சம்பத். ரொம்ப நாள் ஆச்சி பார்த்து?

    டெய்லி உங்க பின்னூட்டத்த பாத்துட்டு திடீர்னு பாக்காம என்னமோ மாதிரி ஆயிருச்சி.

    தொடர்ந்து பின்னூட்டம் போடுங்க.

    பதிலளிநீக்கு
  10. என்னங்க உஷா,

    என்னை இப்படிப் பழி தீர்க்கணுமுன்னு எத்தனை நாளா ப்ளான்?:-))))

    ஜோசஃப்,

    'இது கதை அல்ல நிஜம்'ன்னு தலைப்புக் கொடுத்திருக்கலாம்.

    பி.கு: அந்த கதை கேக்கற டேஷை----.... கதைக்கு மட்டுமே பொருந்தும்.
    நீங்க சொல்றது நிஜமாச்சே. இதுக்கு அது( ? க.கே.டேஷ் பழமொழி) பொருந்தாது.

    மேல்விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்

    http://www.maraththadi.com/article.asp?id=2199

    //யார் சொன்னா நீங்க இப்படி தொடரும் போடறத நிறித்துவீங்கன்னு
    யோசிக்கிறேன்//

    ம்ம்ம்ஹ்ஹூம். நான் 'ஆத்தா'டா......முடியாது...நான் யார் சொன்னாலும்
    மலையேறமாட்டேண்டா...ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ஹ்ஹூம் :-))))))))
    மெகா சீரியல் எழுத ப்ராக்டீஸ் பண்ணறேண்டா...... ம்ம்ம்ஹ்ஹூம்ம்:-)))))

    பதிலளிநீக்கு
  11. வாங்க துளசி.

    நீங்க பின்னூட்டம் போடற அழகே அழுகுங்க.

    உங்க் ச்சிண்டு கதையல்ல நிஜத்தை படிச்சேன். சூப்பரா இருந்திச்சி. உங்கள மாதிரி நிஜத்தையும் கதைமாதிரி சொன்னா நாய் என்ன கழுதையும் (சாரி No offence) உக்காந்து கேக்குமே.. அப்புறம் அத எதுக்கு அடிக்கறது?

    மலையேறமாட்டேண்டா...ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ஹ்ஹூம் :-))))))))
    மெகா சீரியல் எழுத ப்ராக்டீஸ் பண்ணறேண்டா...... ம்ம்ம்ஹ்ஹூம்ம்:-)))))//

    பயமுறுத்தாதீங்க. பாவம் ராஜ் பயந்துறப்போராரு. ரெகுலரா பின்னூட்டம் போடரவருங்க.விட்றுங்க பாவம்.

    பதிலளிநீக்கு
  12. மேன்மை மிகு துளசி அவர்களுக்கு,
    இங்கு கதை என்பது வாயில் இருந்து வரும், தட் மீன்ஸ், வாயில் இருந்து வரும் சொற்களை குறிக்கும் என்பதை நினைவில்
    கொள்க :-)
    ஜோசப் சார், நல்ல வேளை துளசி ஒத்துக்கிட்டாங்க, என்ன செய்ய சின்ன புள்ளையில இருந்து கத கேட்டு பழகியாச்சு
    (துளசி ஊர்ல இல்லேன்னு நெனச்சது தப்பா போயிடுச்சே!)

    பதிலளிநீக்கு
  13. என்னங்க உஷா,என்னென்னமோ சொல்றீங்க.

    வாயிங்கறீங்க, சொல்ங்கறீங்க..

    போட்டும். கதைக்கறதுன்னு கேள்வி பட்டிருக்கீங்களா. யாழ்ப்பாணத்தின் கொஞ்சு தமிழ்ல கதைக்கறதுனா பேசறதுன்னு அர்த்தம். அந்த அர்த்தத்துல துளசி சொல்லியிருக்கலாம்னு நினைக்கறேன். சரியாங்க துளசிங்க?

    பதிலளிநீக்கு
  14. வழக்கம்போல கலக்கல்...

    மலையேறமாட்டேண்டா...ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ஹ்ஹூம் :-))))))))
    மெகா சீரியல் எழுத ப்ராக்டீஸ் பண்ணறேண்டா...... ம்ம்ம்ஹ்ஹூம்ம்:-)))))//

    பயமுறுத்தாதீங்க. பாவம் ராஜ் பயந்துறப்போராரு. ரெகுலரா பின்னூட்டம் போடரவருங்க.விட்றுங்க பாவம்.


    இது சூப்பர்:):):)

    பதிலளிநீக்கு
  15. வாங்க அன்பு,

    அதாவது மெய்ன் பதிவை விட பின்னூட்டங்களுக்கு நான் அளித்த பதில் பின்னூட்டம் நல்லாருக்குங்கறீங்க. இருக்கலாம்.
    ஏதோ ஒன்னு. சூப்பர்னு சொன்னீங்களே அதுக்கு நன்றி அன்பு!

    பதிலளிநீக்கு