25 நவம்பர் 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 21

‘சார் யாரை ஃபோன்ல கூப்பிடுறீங்க?’ என்றார் என் உதவி மேலாளர்.

‘இந்த ஆளை அறிமுகப்படுத்தினாரே அந்த Pawn Brokerஐ கூப்பிடறேன். We should make him responsible. இல்லன்னா அநாவசியமா நம்ம கைலருந்தில்ல போயிடும்? அதுவுமில்லாம இன்னைக்கி Cash Close பண்றதுக்குள்ள பணத்த ரிக்கவர் பண்ணலைனா Head Office க்கு வேற ரிப்போர்ட் பண்ணனுமே.’ என்றேன்.

எதிர்முனையில் தொலைப்பேசி அடித்துக்கொண்டேயிருந்தது. பதில் வரவில்லை. கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். மாலை மணி 5.10. இன்னும் அரை மணி நேரத்தில் அடகு வைத்தவரை பிடித்து பணத்தை வசூல் செய்தே ஆகவேண்டும். எனக்கெதிரே அமர்ந்திருந்த உதவி மேலாளரை பார்த்தேன். அவர் மிகவும் டென்ஷனாக இருந்தார். இவரை அனுப்பினால் காரியம் வெற்றியடையாதது மட்டுமல்ல குழப்பங்கள் வரவும் வாய்ப்பிருக்கிறது. நானே செல்வது என தீர்மானித்தேன்.

‘நான் ஒன்னு பண்றேன். இந்த நகைகளையெல்லாம் சேஃபில வச்சிட்டு நான் அந்த பான் புரோக்கர் வீடு வரைக்கும் போய்ட்டு வரேன்.. இடையில ஏதாவது ஃபோன் வந்தா நான் இன்னும் அரைமணியில வந்துருவேன்னு சொல்லுங்க.. Don’t Worry. Let us keep this secret. காஷியருக்குக் கூட இந்த விஷயம் தெரிய வேண்டாம். நான் திரும்பி வந்தப்புறம் Cash Close பண்ணா போறும். ஒரு கலெக்ஷனுக்கு போயிருக்கேன்னு மட்டும் காஷியர்கிட்ட சொல்லுங்க. நான் போன விஷயம் என்னாச்சின்னு ஃபோன் பண்றேன்.’ என்று அவரிடம் கூறிவிட்டு நான் கிளம்பினேன்.

அந்த பான் புரோக்கரின் வீடும் கடையும் ஒன்றாயிருந்தது எனக்கு தெரியும். வங்கியிலிருந்து கால்மணி நடை தூரத்திலேயே இருந்ததால் அவருடைய வீட்டுக்கு சென்று கதவைத் தட்டினேன். சிறிது நேரத்தில் கதவை திறந்த அவருடைய தாயார் (அவருக்கு என்னை தெரியும்) ‘என்ன சார் திடீர்னு? அவன் இல்லையே காலையிலேயே ஒரு ஃப்ரென்டு வந்தான்னு கூட்டிக்கிட்டு உங்க பேங்குக்கு வந்தான் இல்லே.. அதுக்கப்புறம் வீட்டுக்கு வரவே இல்லை சார்.’ என்றார்.

‘இதென்னடா சோதனை?’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு சாலையில் நின்று மேல்கொண்டு என்ன செய்வது என்று யோசித்தேன். இப்போதிருப்பதுபோல் கைத்தொலைபேசி வசதியில்லாததால் அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

சில நொடிகளில் அன்று நான் செய்யவேண்டியதை தீர்மானித்தேன். கையிலிருந்து பணத்தை செலுத்துவதை தவிர வேறு வழியில்லை.. இன்றைய கணினி யுகத்தில் அத்தகைய கடனே கொடுக்கப்படவில்லை என்று வங்கியின் பதிவுகளில் (Records) இருந்து அழித்துவிடமுடியும். ஆனால் அப்போது? எல்லாம் கைகொண்டு எழுதும் காலமாயிற்றே! எழுதப்பட்ட புத்தகங்களிலிருந்து சம்மந்தப்பட்ட பக்கத்தையும் கிழித்துவிட முடியாது. ஏனென்றால் எல்லா பக்கங்களும் வரிசையான எண்களைக் கொண்டவை..

அருகிலிருந்த கடையிலிருந்த தொலைப்பேசி வழியாய் என்னுடைய உதவி மேலாளரை அழைத்து விஷயத்தை சொன்னேன். ‘கையிலருந்து பணத்தை அடைக்காம வேறு வழியில்லை.. Do you have any cash with you?’ என்றேன்.

‘எவ்வளவு சார்?’

‘முழு கடன் தொகையான ரூ.25,000/- செலுத்த வேண்டும். அவ்வளவு பெரிய தொகை உங்கள் கணக்கில் இருக்கிறதா?’

‘இல்லையே சார். இப்ப என்ன பண்றது?’ அவருடைய குரல் நடுங்கியது. அவருக்கு வேலை நிரந்தரமாகி ஒரு மாதமே ஆகியிருந்தது. அந்த பயம் வேறு. திருமணமும் ஆகவில்லை. கேரள மாநிலத்தை சேர்ந்தவர். சென்னையும் அவ்வளவாய் தெரியாது.

‘டோன்ட் ஒர்ரி. நான் ஒன்னு பண்றேன். வீட்டுக்கு போயி என் ஒய்ஃபோட நகைகளை கொண்டு வரேன். மத்தத நாளைக்கு பாத்துக்கலாம். ஒரு அரைமணி நேரம் ஆகும். நான் வந்ததுக்கப்புறம் Cash Close பண்ணா போறும்.’ என்று அவருக்கு தைரியம் அளித்துவிட்டு என்னுடைய ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு என் வீட்டுக்கு விரைந்தேன்.

செல்லும் வழியெல்லாம் என் மனைவியிடம் இதை எப்படி சொல்வது என்ற சிந்தனைதான். எனக்கும் திருமணம் முடிந்து ஒன்றரை ஆண்டுகளே ஆகியிருந்தன. என் மனைவியின் நகைகளெல்லாம் என்னுடைய வங்கியின் Safe Deposit Lockerல் தான் எப்போதும் இருக்கும். உறவினர், நண்பர் வீட்டு திருமணம் போன்ற விசேஷங்களுக்கு செல்லும் நேரங்களில் மட்டும் வெளியே எடுத்துவிட்டு அடுத்த நாளே திருப்பி வைத்துவிடுவது வழக்கம். வெறுமனே வீட்டு அலமாரியில் வைத்திருக்கும் லாக்கர் சாவியை எடுத்துக்கொண்டுபோய் நகைகளை எடுத்து இன்றைய அவசியம் முடிந்ததும் திருப்பி வைத்துவிடலாம் என்று என் சிந்தனை சென்றது.

அடுத்த நொடியே ‘வேண்டாம், மனைவியிடம் சொல்லிவிட்டு செய். ஏமாற்ற நினைக்காதே. எடுத்த நகையை திருப்பி வைக்க முடியாமற்போனல், பின்னர் வில்லங்கம்.’ என என் மனசாட்சி எச்சரிக்க என் மனைவியிடம் சொல்லிவிடலாம் என்று தீர்மானித்தேன்.

ஆனால் வீட்டை அடைந்ததும் மீண்டும் மனம் மாறி, அலமாரியிலிருந்த லாக்கர் சாவியை எடுத்துக்கொண்டு 'பேங்கலருந்து வர்றதுக்கு ராத்திரி லேட் ஆகும். அத உங்கிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தேன்.' என்று ஒரு பொய்யை உதிர்த்துவிட்டு வியப்புடன் என்னையே பார்த்த மனைவியை பொருட்படுத்தாமல் வெளியேறி ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து வங்கிக்கு விரைந்தேன் இதனால் ஏற்படப்போகும் பின்விளைவுகளை நினையாதவனாய்..

தொடரும்..

9 கருத்துகள்:

  1. பெயரில்லா12:20 PM

    Have you tried writing novels?. You have a good skills for that..Waiting to see what happened next

    -Satheesh

    பதிலளிநீக்கு
  2. நன்றி சத்தீஷ்.
    எனக்கு நாவல் எழுதற திறமையிருக்கான்னு என்னையே கேட்டுக்கறேன்.

    தெரியலை.. உள்ளுக்குள்ளே ஒளிஞ்சிருக்கோ என்னவோ..

    கொஞ்சம் சிறுகதைகளை எழுதியிருக்கேன். சில பிரபல மின்சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன. என் கதையுலகம்.ப்ளாக்ஸ்பாட்.காம் வலைப்பூவில் பதிந்துள்ளேன். படித்துவிட்டு உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.

    http://enkathaiulagam.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. தொடர்ந்து நீங்க காண்பிக்கற ஆர்வத்துக்கு மிகவும் நன்றி ராஜ்.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா1:40 PM

    உங்க தொடரை தினமும் படித்துவருபவர்களில் நானும் ஒருவன் ஜோசப் சார். நல்லா போயிக்கிட்டிருக்கு.. தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா1:43 PM

    இன்றைய பதிவை நல்லா முடிச்சிருகீங்க..ஏதும் பிரச்சினையாயிருச்சா? நாளைய பதிவை ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா1:55 PM

    ‘இதென்னடா சோதனை?’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு சாலையில் நின்று மேல்கொண்டு என்ன செய்வது என்று யோசித்தேன்."

    பேங்க் மானேஜர்களுக்கு இப்படியெல்லாமா கஷ்டங்கள் இருக்கு சார்? வெளியிலருந்து பாக்கறவங்களுக்கு கவுரமான வேலயா தெரியுது.. ஆனா நாய்படாத பாடு படணும் போலருக்கு? நல்லா, கோர்வையா படிக்கறவங்களுக்கு ஆர்வத்த தூண்டுறா மாதிரி எழுதறீங்க சார்.

    பதிலளிநீக்கு
  7. உங்க தொடரை தினமும் படித்துவருபவர்களில் நானும் ஒருவன் ஜோசப் சார்./

    மிகவும் நன்றி சம்பத். உங்க பின்னூட்டம் இல்லாத என்னுடைய பதிவே இல்லைன்னு நினைக்கிறேன்.

    இதத்தான் பூர்வ ஜன்ம நட்புங்கறாங்களோ.

    பதிலளிநீக்கு
  8. இன்றைய பதிவை நல்லா முடிச்சிருகீங்க..

    நன்றி.

    பதிலளிநீக்கு
  9. பேங்க் மானேஜர்களுக்கு இப்படியெல்லாமா கஷ்டங்கள் இருக்கு சார்? /

    இத விட பெரிய கஷ்டங்களை சந்திச்ச என்னுடைய சில நண்பர்களுடைய அனுபவங்களையும் எழுதும்போதுதான் நீங்க புரிஞ்சிக்குவீங்க.. கையிலருந்து பணமும் போயி, பதவியும் போயி.. நீங்க சொன்னா மாதிரி இது ஒரு தலைவலி பிடிச்ச பதவிதான். என்ன செய்யறது.. வேற ஒரு வேலையும் தெரியாதே. எங்க போறது?

    பதிலளிநீக்கு