29 அக்டோபர் 2005

திரும்பிப் பார்க்கிறேன்.. 1

நான் என் வங்கியில் குமாஸ்தாவாக சேர்ந்த நாளை (24.10.1970) இன்றுவரை என்னால் மறக்கவியலவில்லை.

படிப்பு முடிந்த கையோடு ஆங்கில தட்டெழுத்தில் ஹையர் (அப்போதெல்லாம் படித்தவுடனே வேலை கிடைக்க வேண்டுமென்றால் தட்டெழுத்து திறமை அவசியமாயிருந்தது) முதல் வகுப்பில் முடித்திருந்ததால் உடனே வேலை கிடைத்தது.

வேலைக்கு சேர்ந்த முதல் நாளே வந்தது சோதனை..

தட்டெழுத்து பயின்ற எல்லோருக்குமே சுருக்கெழுத்தும் தெரிந்திருக்கும் என்று என்னுடைய மேலாளர் நினைத்திருந்ததால் வந்தது வினை. (கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்.. சுமார் ஐம்பது வயதிருக்கும்..)

இப்போதெல்லாம் படிப்பும் திறமையும் இருந்தால் முப்பது வயதைக் கடந்தவரெல்லாம் மேலாளராகிவிட முடியும். நான் மேலாளரானபோது என் வயது 32.

என்னுடைய வேலை நியமன உத்தரவை டிக்டேட் செய்ய வங்கியின் மேலாளர் அவருடைய அறைக்கு அழைத்து நியமன நியமங்கள், என்னுடைய ஊதியம் (ரூ.120 + DA + HRA இத்யாதி, இத்யாதி என மொத்தம் சுமார் ரூ.300 சொச்சம்) என கடகடவென கூறிக்கொண்டே போக நான் Long Handல் எழுத முடியாமல் திரு திருவென விழித்தேன்.

என்னுடைய மேலாளர் (அவர் இவ்வாண்டு மே மாதம்தான் தன்னுடைய எழுபத்தெட்டாவது வயதில் மரித்தார். அன்று தற்செயலாக கொச்சி சென்றிருந்த நான் விவரமறிந்தவுடன் அவருடைய வீட்டுக்குச் சென்று இறுதிச் சடங்கில் பங்குகொண்டேன்) ஒரு விசித்திரமானவர். டிக்டேட் செய்யும்போதெல்லாம் மட்டும் தன்னுடைய சுழலும் நாற்காலியை எனக்கு நேர் எதிராக (அதாவது எனக்கு முதுகைக் காட்டிக்கொண்டு) திருப்பிக்கொண்டு விடுவார். நான் அவருடைய முதுகைப் பார்த்துக்கொண்டுதான் அவர் கூறுவதைக் குறித்துக்கொள்ள வேண்டும்.

டிக்டேஷன் முடிந்தவுடன் அறையை விட்டு வெளியேறிவிட வேண்டும். அவர் திரும்பிப் பார்க்கும்போது நாம் அறையை விட்டு வெளியேறாமல் நின்றுக்கொண்டிருந்தால் அவ்வளவுதான், தொலைந்தோம்.

முதல் நாள் அன்று இந்த மர்மம் எனக்குத் தெரியாததால் டிக்டேஷன் முடிந்து அவர் திரும்பி நின்றுகொண்டிருந்த என்னைப் பார்த்து முறைத்த உக்கிரமம் என் கண்களை விட்டு மறையவே ஒரு வாரம் பிடித்தது.

புஸ் புஸ்சென்று அடர்த்தியாயிருந்த தன் புருவங்களை உயர்த்தி அவர் பார்த்த பார்வையில் பயந்துபோய் என்ன பேசுவதென்று தெரியாமல் தட்டுத் தடுமாறி .. ‘சார்.. என்னால் சரியாகக் குறித்துக்கொள்ள முடியவில்லை..’ சொல்லி முடிப்பதற்குள் அலுவலக மைய ஹாலில் இருந்த அழைப்பு மணி அலற பதறியடித்துக்கொண்டு உள்ளே நுழைந்த பியூனிடம் ‘அந்த அக்கவுன்டன்டை உடனே வரச்சொல்’ என்று உரத்தக் குரலில் ஆணையிட அடுத்த நிமிடம் அக்கவுண்டன்ட் ஆஜரானார். (அப்போதெல்லாம் மேலாளரை ‘ஏஜன்ட்’ என்றும் அதற்கடுத்த எல்லா அதிகாரிகளையும் ‘அக்கவுன்டன்ட்’ என்றும் அழைக்கப்பது வழக்கம். இப்போது எல்லா அதிகாரிகளுமே மேலாளர்கள்தான். கிளை மேலாளர், துணை மேலாளர், இணை மேலாளர் என ஒரே கிளையில் பல மேலாளர்கள் உண்டு)

‘என்ன (பெயரைத் தவிர்த்துள்ளேன்).. இவருக்கு குறுக்கெழுத்து தெரியாது போலருக்கே.. ஹெட் ஆஃபீசுக்கு உடனே தெரியப்படுத்துங்க..’ என்று எரிச்சலுடன் கூறிவிட்டு என்னைப் பார்த்து ‘நீ போகலாம்’ என்று கண்ணாலேயே சாடை காட்ட ‘போச்சுடா வேலை..’ என்ற நினைப்புடன் என் இருக்கைக்குத் திரும்பி, உட்காராமல் அக்கவுன்டன்ட் ஏஜன்ட் அறையிலிருந்து வரும்வரைக் காத்திருந்தேன்.

அக்கவுன்டன்ட் என்ன சொன்னாரோ தெரியவில்லை.. என் வேலை போகாமல் தப்பித்தது..

அதற்குப் பிறகு அக்கவுன்டன்டின் (அவர் ஜெனரல் மேனஜராக பதவி ஓய்வுப்பெற்று நான்கு ஆண்டுகளாகின்றன) அறிவுரைப்படி ஆறே மாதத்தில் சுருக்கெழுத்தைக் கற்றுக்கொண்டு (இரண்டு முறை தேர்வு எழுதியும் தோற்றுப்போனது வேறு விஷயம்) அந்த ஏஜன்ட் பதவி உயர்வு பெற்று செல்லும் வரை தாக்குப் பிடித்தேன்.

அவருடன் பணி புரிந்த நான்காண்டுகளும் மறக்க முடியாதவை.

அவருடைய Eccentric நடத்தைகளை அவரைப் போலவே நடித்துக்காட்டுவதில் சீனியர் குமாஸ்தா ஒருவர் மிகவும் தேர்ந்தவர். மாலை ஐந்து மணிக்குப் பிறகு (ஏஜன்டும் அக்கவுன்டன்டும் சரியாய் ஐந்து மணிக்கு அலுவலகத்தை விட்டு புறப்பட்டு விடுவார்கள். நாங்கள் ஜர்னல் எழுதி ஜெனரல் லெட்ஜரை Tally செய்து விட்டு அக்கவுன்டன்ட் வீட்டுக்கு தொலைப்பேசி செய்து தெரிவிக்கவேண்டும். அருகிலேயே குடியிருந்த அவர் ஹாயாக வந்து கையெழுத்திட்டுவிட்டு அலுவலகத்தை பூட்டிக்கொண்டு போவார்.) அவர் நடத்திக்காட்டும் imitation வேலைப் பளுவை வெகுவாய் குறைத்துவிடும்.

கணினியின் உதவியுடன் அன்றாட வேலையை முடிக்கவே இத்தலைமுறைக்கு ஏழு மணியாகிறது! கால்குலேட்டர் கூட இல்லாமல் அன்றைய கணக்கை முடித்தால்தான் வீடு திரும்பமுடியும் என்ற அன்றைய நாட்களை நினைத்துப் பார்க்கவே பயமாயிருக்கிறது..

ஒருசில நாட்கள் வேலையை முடிக்க இரவு பதினோரு மணிக்கு மேலாகிவிடும்.

‘எலேய் (எங்களுடைய பூர்வீகம் பாளையங்கோட்டை) உங்க ஆஃபீஸ் இரண்டு மணிவரைதான்னு போர்ட்ல போட்டிருக்கு. நீ எங்க ஊர சுத்திட்டு ராத்திரி பதினோரு மணிக்கு வரே?’ன்னு அப்பா ஏசுவதற்கு பதில் சொல்ல முடியாமல் ‘இவருக்கு எப்படி சொல்லி புரியவைப்பது’ என்று தெரியாமல் விழித்திருக்கிறேன். வங்கிகள் பகல் இரண்டு மணிவரைதான் திறந்திருக்கும் என்பது உண்மைதான். ஆனால் அது வாடிக்கையாளர்களுக்கு. அதுவரை நடந்து முடிந்த வரவு செலவுகளைச் சரிபார்த்து கணக்கு புத்தகங்களை சமண் (Tally) செய்து முடிப்பதற்குள் போதும், போதுமென்றாகிவிடும். சனிக்கிழமை, திங்கட்கிழமைகள் என்றால் கேட்கவே வேண்டாம்.

அந்த மேலாளர் விசித்திரமானவர் என்று சொன்னேன்.

அவர் டிக்டேட் செய்தவற்றை தட்டெழுதிக்கொண்டு சென்று கொடுத்தவுடன் வாசித்துப் பார்க்காமல் கையொப்பமிட்டு விடுவார். பிறகுதான் மேலிருந்து வாசிக்க ஆரம்பிப்பார்..

ஆரம்பகாலத்தில் (அதாவது குறுக்கெழுத்து பயிலும் வரை) அவருடைய வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தப்பும் தவறுமாக குறித்துக்கொண்டு தட்டெழுதி முடித்திருப்பேன். ஒவ்வொரு கடிதத்திலும் குறைந்தது ஐந்து தவறுகளாவதிருக்கும்.

ஒவ்வொரு தவறையும் தன்னுடைய கருப்பு மையினால் (நல்ல வேளை அப்போது Sketch Pen இருக்கவில்லை. மை நிரப்பும் Pen தான்.) ஐந்தாறு முறை அடித்து அந்த பகுதியையே ஓட்டையாக்கிவிடுவார் (என்னையே கிழித்துவிடுவதாய் நினைத்துகொள்வார் என்று நினைப்பேன்).

‘நீங்கல்லாம் எந்த ஸ்கூல்ல படிச்சீங்க.’ என்று என்னைப் பார்க்காமல் எதிரில் இருந்த சுவற்றைப் பார்த்துக்கொண்டு பற்களைக் கடிப்பார்..

படித்து முடித்துவிட்டு கடிதத்தைப் பந்தாய் சுருட்டி சுவற்றின் மீது எறிவார். நான் பாய்ந்து சென்று கீழே விழுவதற்குள் பிடித்துக்கொண்டு என் இருக்கைக்குச் சென்று சுருக்கங்கள் போக நீவி அக்கவுன்டன்டின் அறைக்குச் சென்று அவருடைய உதவியுடன் தவறான வார்த்தைகளைத் திருத்தி மீண்டும் அவருடைய அறைக்குள் - அறைக்கதவை இரண்டு, மூன்று முறையாவது தட்ட வேண்டும் - (கண்ணாடி கதவுதான். நான் வெளியே நிற்பது நன்றாய் தெரிந்தாலும் குறைந்தது மூன்று முறை தட்டினால்தான் வேண்டா வெறுப்பாக திரும்பி பார்ப்பார்) நுழைந்து தட்டெழுதியதை நீட்டுவேன்.

நான் தட்டெழுதியது சரியாய் இருக்கும் பட்சத்தில் ‘உம்’ என்ற உறுமலுடன் கையொப்பமிடுவார்.

அதே மனிதர் நாளடைவில் என்னை அழைத்து தான் எழுத விரும்புவதை வெறும் நான்கைந்து வாக்கியத்தில் கூறிவிட்டு ‘நீங்களே லெட்டரா அடிச்சு கொண்டாங்க ஜோசப்’ என்று நான் தயாரித்துக்கொண்டு செல்லும் கடிதங்களை மறுபேச்சு பேசாமல் புன்னகையுடன் கையொப்பமிடுகிற அளவுக்கு நான் ஒரே வருடத்தில் தயாரானேன் என்பதும்

அதற்குப் பிறகு தன்னுடைய பதவி காலத்தில் என்னைப் பற்றி ‘என்னுடைய தயாரிப்பாக்கும் இவன்’ என்று என்னுடைய வங்கியில் பலரிடமும் கூறியதுடன் என்னுடைய ஒவ்வொரு பதவி உயர்விலும் அக்கறையுடன் பரிந்துரைத்ததும் வேறு விஷயம்..

இன்றும் என்னால் மறக்கமுடியாத நல்ல மனிதர் அவர்...


நினைவலைகள் தொடரும்...

3 கருத்துகள்:

  1. தங்கள் பதிவு இன்றைய இளைஞர்களுக்க வழிகாட்டி நேற்று நடந்ததை தெரிந்து கொள்ள முடிகிறது

    பதிலளிநீக்கு
  2. ஜோசப் ஐயா,

    திபா தொடர் முடிந்துவிட்டதா ?

    நீங்கள் தொடரை தொடங்கி இன்றுடன் இரண்டு வருடம் ஆகிறது.

    வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  3. வாங்க கண்ணன்,


    நீங்கள் தொடரை தொடங்கி இன்றுடன் இரண்டு வருடம் ஆகிறது.//

    அப்படியா? மறந்தே போனேன். நினைவுறுத்தியதற்கு நன்றி.


    திபா தொடர் முடிந்துவிட்டதா ?//

    தாற்காலிகமாக... மீண்டும் தொடரும். ஆனால் எப்போது என்பதுதான் தெரியவில்லை:-)

    பதிலளிநீக்கு