20 மே 2014

தேர்தல் 2014 - விசித்திரமான முடிவுகள்!

நடந்து முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் பல சுவாரஸ்யமான தகவல்களை தருகின்றன.

ஒரு கட்சி பெறும் இடங்களை விட அது பெறும் வாக்கு விழுக்காடே (vote percentage) அது மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு மதிப்பை பெற்றுள்ளது என்றோ அல்லது ஒரு தேர்தலில் வாக்களித்தவர்களில் எத்தனை விழுக்காடு வாக்காளர்கள் அந்த கட்சியை ஆதரித்தார்கள் என்றோ காட்டுகிறது என்பார்கள். 

இந்த அடிப்படையில் பார்த்தால் ஒரு கட்சி தேர்தலில் பெறும் வாக்கு விழுக்காட்டுக்கும் அது வெற்றி பெறும் இடங்களுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்க வேண்டும் அல்லவா? 

ஆனால் கடந்த இரு பொதுத் தேர்தல் முடிவுகளை ஒப்பிடும்போது சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் பல விசித்திர முடிவுகளை அளித்துள்ளதைக் காண முடிகிறது. 

கீழ்காணும் பட்டியலைப் பாருங்கள்:


கடந்த, அதாவது 2009ல் நடந்த தேர்தலில் 22.90 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருந்த அஇஅதிமுக இம்முறை அதை இரட்டிப்பாக்கியுள்ளது, அதாவது 44.30 விழுக்காடு வாக்குகளை பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் 2104ல் அது வெற்றிப் பெற்ற இடங்களின் எண்ணிக்கையும் 9லிருந்து 18 ஆக அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அது பெற்ற இடங்களோ நான்கு மடங்கு. அதாவது 2009ல் ஒன்பதாக இருந்த அதன் இடங்கள் 2014ல் 37 ஆக உயர்ந்துள்ளது.

திமுகவை எடுத்துக்கொண்டால் 2009ல் 25.10 விழுக்காடாக இருந்த அதன் வாக்கு விழுக்காடு 2014ல் வெறும் 1.50 விழுக்காடு குறைந்து 23.60 விழுக்காடாக இருந்தது. இதன் அடிப்படையில் 2009ல் 18ஆக இருந்த அதன் இடங்கள் சுமார் இரண்டு இடங்கள் குறைந்து 16ஆக இருந்திருக்க வேண்டும். ஆனால் 2014ல் அதற்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

இந்திய அளவிலும் இதே போக்குதான் காணப்படுகிறது



இதற்கு என்ன காரணம்?

உலகிலுள்ள பல நாடுகளிலும் கட்சிகள் மட்டுமே போட்டியிடுகின்றன. தேர்தலின் முடிவில் கட்சிகள் பெற்றுள்ள வாக்கு விகிதங்களின் அடிப்படையில் நாட்டின் ஆட்சி மன்றங்களில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. 

ஆனால் இந்தியாவில் நாடு முழுவதும் சிறு, சிறு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகள் பெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். இது winner take all என்ற அடிப்படையில் அமைகிறது எனலாம். 

தமிழகத்தைப் பொறுத்தவரையில் 44.30 விழுக்காடு வாக்காளர்கள் மட்டும் வாக்களித்த ஒரு கட்சிக்கு மொத்தமுள்ள இடங்களில் 90 விழுக்காடுக்கும் மேல் இடங்கள் கிடைத்துவிட்டது. அப்படியானால் அவரை எதிர்த்து வாக்களித்த மக்களின் வாக்குகள் அனைத்தும் செல்லாக் காசாகி விட்டன என்பதுதானே பொருள்?

இந்திய அளவில் பார்த்தால் வெறும் 31.00 விழுக்காடு வாக்காளர்களால் ஆதரிக்கப்பட்ட ஒருவர் அவரை எதிர்த்து வாக்களித்த 69.00 விழுக்காடு வாக்காளர்களுக்கும் பிரதமராகிறார்! 

ஆகவேதான் இந்த முறை மாற்றப்பட்டு கட்சிகள் பெறும் வாக்கு விகிதாச்சார அடிப்படையில் நாடாளுமன்றத்தில் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை என்னுடைய முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இல்லையென்றால் தேர்தலின் நோக்கமே கேலிக்குறியதாகிவிடும் என்பது என்னுடைய கருத்து.

******

தமிழக தேர்தல் முடிவுகளை இன்னும் ஆழமாக ஆய்வு செய்தால் 2009 தேர்தலிலும் சமீபத்தில் நடந்த தேர்தலிலும் அஇஅதிமுக பெற்ற வாக்கு விழுக்காடு இரட்டிப்பாக அதிகரித்ததற்கு முக்கிய காரணம் அதை எதிர்த்து நின்ற கட்சிகள் இழந்த அனைத்து வாக்குகளும் அதிமுகவுக்குச் சென்றுவிட்டன என்பதை உணரமுடிகிறது. 

இதற்குக் காரணம் அதிமுகவை எதிர்த்து முந்தைய தேர்தலில் கூட்டணி அமைத்து களம் இறங்கிய கட்சிகள் இம்முறை தனித்தனியாக நிற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டன என்பதுதான். அதாவது அதிமுகவுக்கு எதிராக விழுந்துள்ள 56 விழுக்காடு வாக்குகள் நாலாபுறமும் சிதறியதாலேயே அதிமுகவால் நினைத்தும் பார்க்க முடியாத அளவு இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 

இதுமட்டுமேதான் அதிமுகவின் வரலாறு காணாத வெற்றிக்குக் காரணம். 

அதை விடுத்து எங்களுடைய கடந்த மூன்றாண்டு கால மக்கள் நலத் திட்டங்களுக்கு மக்கள் அளித்த பரிசு இது என்று அதிமுக கூறிவருவது சரியல்ல. 

மேலும் காங்கிரஸ் கட்சியின் கடந்த பத்தாண்டு கால அலங்கோல ஆட்சியால் வெறுப்புற்று போயிருந்த மக்கள் அதனுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி செய்த திமுகவையும் தண்டித்தே ஆகவேண்டும் என்ற மனநிலையில் இருந்திருக்க வேண்டும். ஆனாலும் திமுகவுக்கு எப்போதும் இருந்து வந்துள்ள வாக்கு வங்கியில் பெரிதாக ஏதும் தாக்கம் ஏற்படவில்லை என்பது அது பெற்றுள்ள வாக்கு விழுக்காடிலிருந்து தெரிகிறது. இவ்விரண்டு தேர்தல்களிலும் அது பெற்றுள்ள வாக்கு விகிதத்தில் 1.50 விழுக்காடு மட்டுமே சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை என்றால் அது தேர்தல் நடத்தும் விதத்திலுள்ள குறைபாடே அல்லாமல் வேறில்லை. மேலும் மொத்த முள்ள 39 தொகுதிகளில் பாஜக மற்றும் பாமக வெற்றிபெற்றுள்ள இரண்டு தொகுதிகளைத் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பெற்றது திமுகதான். ஆகவே அன்புமனி ராமதாஸ் பீற்றிக்கொள்வதைப் போல திமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படவில்லை என்பதுதான் உண்மை.

******

மேலும் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக கட்சிகள் இந்த தேர்தலை அணுகிய முறையிலும் பெருத்த வித்தியாசத்தை காண முடிகிறது.

திமுக தன்னுடைய பலன் எது என்று உணராமல் கூட்டு சேர வந்த காங்கிரசை உதறியது. தேதிமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டிருந்தாலாவது சில இடங்களை  தேற்றியிருக்கலாம். அதையும் அவராக வந்தால் பார்க்கலாம் என்று பேசிப் பேசியே காலத்தை வீணடித்துவிட்டனர்.  இடையில் அழகிரி வேறு சச்சரவை ஏற்படுத்தி கட்சியின் உள்பூசலை அம்பலமாக்கிவிட்டார். தேர்தல் பிரசாரத்தில் தங்கள் கட்சியை எதற்காக மக்கள் ஆதரிக்கவேண்டும் என்று பேசாமல் ஜெயலலிதாவை கிண்டலடிப்பதிலேயே குறியாயிருந்தனர். அதுவும் கூட மக்களை வெறுப்படையச் செய்திருக்கலாம். 

ஆனால் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே தனித்துத்தான் போட்டியிடுவது என்று அஇஅதிமுக தீர்மானித்தது. இதற்கு முக்கிய காரணம் கடந்த மூன்றாண்டுகளில் எதையும் பெரிதாக நாம் சாதிக்கவில்லை, ஆகவே மக்களின் ஏகோபித்த ஆதரவு நமக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்பதை அந்த கட்சி உணர்ந்திருந்தது. இருந்தும் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் நமக்கு எதிராக விழக்கூடிய வாக்குகளை சிதறடிக்க வேண்டும் என்று ஜெயா மிகச் சரியாக ஊகித்தார். மேலும் திமுகவுடனோ அல்லது காங்கிரசுடனோ எந்த கட்சியும் கூட்டு வைத்துக்கொள்ள முன்வராது என்பதையும் மீதமுள்ள கட்சிகள் பாஜகவுக் இணைந்து போட்டியிட்டாலும் அதனால் சொல்லக் கூடிய அளவுக்கு தாக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்பதையும் அவரால் கணிக்க முடிந்தது. ஆகவேதான் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதென முடிவு செய்தார்.

அதல்லாமல் மத்தியில் ஆட்சி செய்யவுள்ள அரசில் அங்கம் வகிக்கும் கட்சியாக தனது கட்சியை தெரிவு செய்ய வேண்டும் என்று ஜெயா  முழங்கி வந்தது எல்லாம் வெறும் ஜாலவித்தையே. கடந்த பத்தாண்டுகளாக திமுக மத்தியில் அங்கம் வகித்திருந்தாலும் மத்திய அரசு தமிழகத்தில் கொண்டு வந்த பல நலத்திட்டங்களை அந்த காலத்தில் சுமார் ஏழு ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த அஇஅதிமுகவின் ஒத்துழைப்பின்மையால் பெரிதான தாக்கம் எதையும் ஏற்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை. மத்திய அரசில் அங்கம் வகித்திருந்த திமுகவின் முயற்சியால் பல நல்ல திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைத்தும் அதை முழுமையாக செயலாக்காமல் தடுத்து நிறுத்தியது அஇஅதிமுக அரசுதான் என்றால் மிகையாகாது.

இதை ஏன் சொல்கிறேனென்றால் கடந்த தேர்தலில் நரேந்திர மோடியின் அலை உணரடப்படாத ஒரு சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. நரேந்திர மோடி பிரதமானால் அதை செய்வார், இதை செய்வார் என்றும் இந்தியர்கள் வெளி நாடுகளுக்கும் குறிப்பாக அமெரிக்காவுக்கு செல்ல விசா வாங்க வரிசையில் காத்திருந்ததுபோல வெளி நாட்டவர்கள் இந்தியாவுக்கு வர காத்திருக்கும் நிலை வரும் என்றெல்லாம் இங்குள்ளவர்கள் தினந்தோறும் கூறி வருகிறார்கள். ஆனால் அத்தகைய நல்ல திட்டங்களை மத்திய அரசு தீட்டினாலும் அவற்றை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டுமென்றால் இங்குள்ள மாநில அரசு மத்திய அரசுடன் தோழமையுடன் செயல்பட வேண்டும். மத்திய அரசு கொண்டு வரும் எந்த நல்ல திட்டமும் மாநிலத்தில் செயல்படுத்துவதற்கு மாநில அரசால் மட்டுமே முடியும். பறக்கும் சாலைத் திட்டத்தை கிடப்பில் போடுவதற்கு மாநில அரசு செய்ததுபோல் இனி வரும் மத்திய திட்டங்களுக்கும் மாநில அரசு முட்டுக்கட்டை போடுமானால் மத்திய அரசின் எந்த நலத்திட்டங்களும் தமிழகத்திற்கு பலனளிக்காமல் போய்விடும். 

நம்முடைய முதலமைச்சருக்கும் புதிய பிரதமர் மோடிக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது என்றும் ஆகவே அவர் பிரதமராவதற்கு இவர் ஆதரவு தெரிவிப்பார் என்று கூறிய ஒரே காரணத்திற்காக முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் மலைச்சாமியை தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முந்தைய நாள் கட்சியின் அடிப்படைத் தொண்டர் நிலையிலிருந்தே தூக்கியெறிந்தவர் ஜெயலலிதா. இதன் மூலம் அவர் தெரிவிக்க விழைந்தது என்ன? மோடி பிரதமராவதல்ல கட்சியினுடைய விருப்பம் என்பதுதானே? பாஜகவுக்கு இந்த அளவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்று அவர் நினைத்திருப்பார் போலிருக்கிறது. ஒருவேளை மூன்றாம் அணியினருக்கு பெரும்பான்மை கிடைத்தால் முன்பே மமதா கூறியதுபோன்று தமக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைக்கக் கூடும் என்று எண்ணியிருப்பாரோ? இருக்கும். இல்லையென்றால் அத்தனை மூர்க்கத்தனமாக மயில்சாமியை கட்சியைவிட்டே தூக்கியெறிந்திருக்க மாட்டார். ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் இவருடையது மட்டுமல்லாமல் தன்னுடன் கூட்டணி வைத்திருந்த எந்த கட்சியின் தயவும் இல்லாமல் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு மோடிக்கு பெரும்பான்மை கிடைத்துவிட்டது என்பதை அறிந்ததும் உடனே அவருக்கு வாழ்த்துக் கூறி கடிதம் எழுதிவிட்டார். மோடியும் கடிதம் கிடைத்ததும் பதில் கடிதம் போடாமல் உடனே தொலைபேசியில் அழைத்து மத்திய அரசின் அனைத்து ஒத்துழைப்பும் மாநில அரசுக்கு இருக்கும் என்று கூறிவிட்டார் போலிருக்கிறது.

இனிவரும் காலங்களில் இதே நட்பு நிலையை கடைபிடித்து மத்திய அரசின் நலத்திட்டங்களின் பயன்களை அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் மாநில அரசு செயல்படுமானால் அடுத்த சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாமல் மோடி மத்தியில் பிரதமராக இருக்கும் வரையில் இங்கும் அஇஅதிமுக தொடர்ந்து ஆட்சி செய்ய வாய்ப்பு உள்ளது. அதை விடுத்து தேவையில்லாத ஈகோவுடன் இப்போதுள்ள அதே மனநிலையுடன் செயல்படுவாரேயானால் அடுத்த தேர்தலிலேயே ஆட்சியை இழந்துவிட வாய்ப்புள்ளது.

இந்த தேர்தல் இன்னொரு அருமையான தீர்ப்பையும் அளித்துள்ளது எனலாம். அதாவது தனிநபர்களை மட்டுமே நம்பியிருக்கும் கட்சிகளுக்கு இனி வாய்ப்பில்லை என்பது. இத்தகைய துக்கடா கட்சிகளால் தங்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதை மக்கள் மிகத் தெளிவாக தெரியப்படுத்திவிட்டார்கள். மத்தியில் காங்கிரசும் பாஜகவும் இருபெரும் கட்சிகளாக இருப்பதுபோன்று தமிழகத்தில் திமுக, அஇஅதிமுக என இரண்டு கட்சிகள் போதும். காங்கிரசும் பாஜகவும் கூட இனி இங்கு வேரூன்ற வாய்ப்பில்லை போலுள்ளது. அவர்கள் இருவருமே தமிழகத்தின் இரு பெரும் கட்சிகள் ஏதாவது ஒன்றுடன் கூட்டணி வைத்துக்கொள்வதைத் தவிர இனி வேறு வழியில்லை. 

**********

  

26 கருத்துகள்:

  1. நடந்து முடிந்த தேர்தலின் முடிவை நன்றாக ஆய்ந்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதுபோல் கட்சிகள் பெற்ற விகிதாச்சார அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் முறை வரும்வரை நீங்கள் குறிப்பிட்ட இந்த நிலை தொடரும்.அதுவரை வெற்றிபெற்றோர் தங்கள் கட்சியின் கொள்கை மற்றும் ஆட்சியின் சிறப்புக்கு மக்கள் தந்த தீர்ப்பு என சொல்லி பீற்றிக்கொள்வதை சகித்துக் கொள்ளவேண்டியதுதான்.
    நாட்டை ஆண்ட கட்சியும் ஆளப்போகின்ற கட்சியும் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக வோடு கூட்டு வைப்பதை தவிர வேறு வழியில்லை என சரியாக சொல்லிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல அலசல்.

    இங்கே நியூஸியில் வாக்கு விகிதாச்சாரத்தில் அந்தந்த கட்சிகள் சிலரை பார்லிமெண்ட் அங்கமாக அவரவர் கட்சி சார்பில் சேர்த்துக் கொள்ளலாம் என்று MMP சிஸ்டம் கொண்டு வந்தார்கள். இது ராஜ்ய சபா எம் பிக்களை இந்தியாவில் தேர்தல் இல்லாமல் தேர்வு செய்வது போல்.

    இப்ப என்னன்னா... இது ஒரு புதுத் தலைவலியா ஆகி இருக்கு:(

    ஆரம்பத்தில் எம் எம் பி வேணுமான்னு ரெஃபரண்டம் ஆச்சு. இப்ப எடுத்துடலாமான்னு ரெஃபரண்டம் வரப்போகுது! எங்க தேர்தல் இந்த செப்டம்பர் 2014. பொதுத்தேர்தலுடன் சேர்த்தே இதையும் கேட்டுருவாங்க.

    பதிலளிநீக்கு
  3. தேர்தலை பற்றி மிக நுணுக்கமாய் ஆய்வு செய்திருக்கும் சிறந்த பதிவு.
    44.30 விழுக்காடு மக்களின் வாக்கை பெற் கட்சி 90 விழுக்காடுக்கும் மேல் இடங்களை பெற்றுகொள்வது நீதியல்ல.வாக்கு விகிதங்களின் அடிப்படையிலான ஜனநாயக தேர்தல் முறையே மிகவும் சிறந்தது.பித்தானிய முறையை தான் நாம்மின்னும் கட்டிக்கிட்டிருக்கோம் என்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  4. //திமுகவை எடுத்துக்கொண்டால் 2009ல் 25.10 விழுக்காடாக இருந்த அதன் வாக்கு விழுக்காடு 2014ல் வெறும் 1.50 விழுக்காடு குறைந்து 23.60 விழுக்காடாக இருந்தது. இதன் அடிப்படையில் 2009ல் 18ஆக இருந்த அதன் இடங்கள் சுமார் இரண்டு இடங்கள் குறைந்து 16ஆக இருந்திருக்க வேண்டும்.//

    ஓட்டுசதவிகிதமும் வெற்றிபெற்ற இடங்களையும் வைத்து எப்படி சார் கணக்கு போட முடியும்? டெப்பாசிட்டே கிடைக்காதவன் கூட 5% ஓட்டு வாங்கி இருக்கான்.

    நீங்க சொன்னதிலிருந்தே சொல்கிறேன். பாஜக 2009ல் 18% ஓட்டு வாங்கி 116 சீட்டுகள் ஜெயித்தது. காங்கிரஸ் 2014ல் 19.3% ஓட்டு வாங்கி 44 சீட்கள் மட்டுமே ஜெயித்துள்ளது.

    ஓட்டுவங்கிக்கும் ஜெயிக்கும் இடங்களுக்கும் நேரடி தொடர்பில்லை.

    பதிலளிநீக்கு
  5. நல்ல சரியான ஆய்வு. மிகவும் நுணுக்கமாக அலசியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. கொஞ்சமா திருப்பி உங்கள் பார்வையைப் பாருங்கள். 2009-ல் அண்ணா திமுகவை விட திமுக வெறும் 2.2% மட்டுமே அதிகம் பெற்று சீட்டை இரு மடங்காகப் பெற்றது எப்படி? உங்கள் கணக்குப்படி 2009-ல் அண்ணா திமுக சுமார் 16 இடங்களில் வென்றிருக்கவேண்டும்.

    …ஏன் நடக்கவில்லை என்று எதுவும் எழுதவில்லை.

    …இந்தியாவில் தொகுதிவாரியாக எம்பிக்கள் தேர்வாகின்றனர். ஒரு தொகுதியில் அதிக ஆதரவும் ஒரு தொகுதியில் ஆதரவே இல்லாமல் இருக்கலாம்.

    …அந்த எம்பிக்கள்தான் தங்கள் தலைவரை தேர்ந்தெடுக்கின்றனர். இதில் ஒட்டு மொத்த ஓட்டு சதவீதம் எப்படி சரியாக இருக்கும்.

    …நேற்றும் நடந்தது...இன்றும் நடக்கின்றது. இன்று மட்டும் ஏன் இந்த ஒப்பாரி?

    …கருணாநிதி என்ற நபரின் கட்சி மண்ணை கவ்வியதாலா?

    பதிலளிநீக்கு
  7. நல்ல அலசல்.... மிகவும் பொறுமையாக இதனை ஆய்வு செய்திருப்பது நல்ல விஷயம்....

    பதிலளிநீக்கு
  8. //பத்தாண்டுகளாக திமுக மத்தியில் அங்கம் வகித்திருந்தாலும் மத்திய அரசு தமிழகத்தில் கொண்டு வந்த பல நலத்திட்டங்களை அந்த காலத்தில் சுமார் ஏழு ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த அஇஅதிமுகவின் ஒத்துழைப்பின்மையால் பெரிதான தாக்கம் எதையும் ஏற்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை. மத்திய அரசில் அங்கம் வகித்திருந்த திமுகவின் முயற்சியால் பல நல்ல திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைத்தும் அதை முழுமையாக செயலாக்காமல் தடுத்து நிறுத்தியது அஇஅதிமுக அரசுதான் என்றால் மிகையாகாது.//

    நீங்கள் எழுத்தில் நடுநிலை தவறி இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். சேது சமுத்திர திட்டம் (அதிலும் அதன் உண்மையான பலன் மக்களுக்கு ஏதாவது இருக்குமா என்பது கேள்விக்குறியே!) தவிர வேறு எந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து மாநில அரசு தடுத்தது?

    //நம்முடைய முதலமைச்சருக்கும் புதிய பிரதமர் மோடிக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது என்றும் ஆகவே அவர் பிரதமராவதற்கு இவர் ஆதரவு தெரிவிப்பார் என்று கூறிய ஒரே காரணத்திற்காக முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் மயில்சாமியை தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முந்தைய நாள் கட்சியின் அடிப்படைத் தொண்டர் நிலையிலிருந்தே தூக்கியெறிந்தவர் ஜெயலலிதா. இதன் மூலம் அவர் தெரிவிக்க விழைந்தது என்ன? //
    தலை இருக்க வால் ஆடக் கூடாது என்ற ஒன்றையே! அதனால்தான் அதிமுக வில் ஒரே தலைவர்!

    பதிலளிநீக்கு
  9. நல்ல ஆய்வு. ஒரு வகையில் பார்த்தால் ஜனநாயகம் என்பதும் கேலிக்கூத்துதான். பத்து பேர் உள்ள இடத்தில், இரண்டு பேருக்கு விஷயம் தெரிந்தாலும், எட்டுபேர் மெஜாரிட்டி என்று அவர்கள் சொல்லுவதை ஒத்துக்கொள்ள வேண்டுமா?

    பதிலளிநீக்கு
  10. ஒரு நல்ல அரசியல் விமர்சனக் கட்டுரை.

    கட்சிகள் பெறும் வாக்கு விகிதாச்சார அடிப்படையில் நாடாளுமன்றத்தில் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் – யோசனை நிறைவேறினால் இன்னும் நல்லதுதான். ஆனால் அரசியல்வாதிகள் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

    முன்னாள் மாநில தேர்தல் ஆணையரின் பெயர் மயில்சாமி இல்லை. மலைச்சாமி என்பதாகும்.

    பதிலளிநீக்கு
  11. வே.நடனசபாபதி said...
    நடந்து முடிந்த தேர்தலின் முடிவை நன்றாக ஆய்ந்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதுபோல் கட்சிகள் பெற்ற விகிதாச்சார அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் முறை வரும்வரை நீங்கள் குறிப்பிட்ட இந்த நிலை தொடரும்.அதுவரை வெற்றிபெற்றோர் தங்கள் கட்சியின் கொள்கை மற்றும் ஆட்சியின் சிறப்புக்கு மக்கள் தந்த தீர்ப்பு என சொல்லி பீற்றிக்கொள்வதை சகித்துக் கொள்ளவேண்டியதுதான்.
    நாட்டை ஆண்ட கட்சியும் ஆளப்போகின்ற கட்சியும் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக வோடு கூட்டு வைப்பதை தவிர வேறு வழியில்லை என சரியாக சொல்லிவிட்டீர்கள். //

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. துளசி கோபால் said...
    நல்ல அலசல்.

    இங்கே நியூஸியில் வாக்கு விகிதாச்சாரத்தில் அந்தந்த கட்சிகள் சிலரை பார்லிமெண்ட் அங்கமாக அவரவர் கட்சி சார்பில் சேர்த்துக் கொள்ளலாம் என்று MMP சிஸ்டம் கொண்டு வந்தார்கள். இது ராஜ்ய சபா எம் பிக்களை இந்தியாவில் தேர்தல் இல்லாமல் தேர்வு செய்வது போல்.

    இப்ப என்னன்னா... இது ஒரு புதுத் தலைவலியா ஆகி இருக்கு:(

    ஆரம்பத்தில் எம் எம் பி வேணுமான்னு ரெஃபரண்டம் ஆச்சு. இப்ப எடுத்துடலாமான்னு ரெஃபரண்டம் வரப்போகுது! எங்க தேர்தல் இந்த செப்டம்பர் 2014. பொதுத்தேர்தலுடன் சேர்த்தே இதையும் கேட்டுருவாங்க.// எல்லா விஷயங்களுமே ஒரு காலத்தில் தலைவலியாகக் கூடியவைதான். அப்போதெல்லாம் ரெஃபரண்டம் வைக்கறது நல்லதுதான். மக்களின் எண்ணங்களை - அதாவது மெஜாரிட்டி மக்களின் - அறிந்துக்கொள்ள இது மிகவும் உதவும்.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  13. வேகநரி said...
    தேர்தலை பற்றி மிக நுணுக்கமாய் ஆய்வு செய்திருக்கும் சிறந்த பதிவு.
    44.30 விழுக்காடு மக்களின் வாக்கை பெற் கட்சி 90 விழுக்காடுக்கும் மேல் இடங்களை பெற்றுகொள்வது நீதியல்ல.வாக்கு விகிதங்களின் அடிப்படையிலான ஜனநாயக தேர்தல் முறையே மிகவும் சிறந்தது.பித்தானிய முறையை தான் நாம்மின்னும் கட்டிக்கிட்டிருக்கோம் என்கிறார்கள்.//

    என்ன செய்வது. இந்தியா போன்றதொரு நாட்டில் மாற்றங்களைக் கொண்டுவருவது அத்தனை எளிதல்லவே.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. குட்டிபிசாசு said...
    //திமுகவை எடுத்துக்கொண்டால் 2009ல் 25.10 விழுக்காடாக இருந்த அதன் வாக்கு விழுக்காடு 2014ல் வெறும் 1.50 விழுக்காடு குறைந்து 23.60 விழுக்காடாக இருந்தது. இதன் அடிப்படையில் 2009ல் 18ஆக இருந்த அதன் இடங்கள் சுமார் இரண்டு இடங்கள் குறைந்து 16ஆக இருந்திருக்க வேண்டும்.//

    ஓட்டுசதவிகிதமும் வெற்றிபெற்ற இடங்களையும் வைத்து எப்படி சார் கணக்கு போட முடியும்? டெப்பாசிட்டே கிடைக்காதவன் கூட 5% ஓட்டு வாங்கி இருக்கான்.

    நீங்க சொன்னதிலிருந்தே சொல்கிறேன். பாஜக 2009ல் 18% ஓட்டு வாங்கி 116 சீட்டுகள் ஜெயித்தது. காங்கிரஸ் 2014ல் 19.3% ஓட்டு வாங்கி 44 சீட்கள் மட்டுமே ஜெயித்துள்ளது.

    ஓட்டுவங்கிக்கும் ஜெயிக்கும் இடங்களுக்கும் நேரடி தொடர்பில்லை.//

    இப்போது தொடர்பில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் தொடர்பு இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்சியும் பெறும் ஓட்டு விகித அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று நான் கூறுவது இந்த குறையைப் போக்கத்தான்.

    பதிலளிநீக்கு
  15. கும்மாச்சி said...
    நல்ல சரியான ஆய்வு. மிகவும் நுணுக்கமாக அலசியிருக்கிறீர்கள்.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. ராவணன் said...
    நேற்றும் நடந்தது...இன்றும் நடக்கின்றது. இன்று மட்டும் ஏன் இந்த ஒப்பாரி? //

    நான் எந்த கட்சியையும் சார்ந்தவனும் அல்ல, அபிமானியும் அல்ல. ஆகவே நான் வைப்பது ஒப்பாரியல்ல. ஒரு பரிந்துரை. ராவணன் ஆண்டாலும் ராமன் ஆண்டாலும் என்னைப் பொருத்தவரை ஒன்றுதான்.

    பதிலளிநீக்கு
  17. வெங்கட் நாகராஜ் said...
    நல்ல அலசல்.... மிகவும் பொறுமையாக இதனை ஆய்வு செய்திருப்பது நல்ல விஷயம்....

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. bandhu said...
    /
    நீங்கள் எழுத்தில் நடுநிலை தவறி இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். //

    நான் என்றுமே நடுநிலை தவறியதில்லை. தவறவும் மாட்டேன். ஏனெனில் எனக்கு எந்த கட்சி மீதும் அபிமானம் ஏதும் இல்லை. இரண்டு கட்சிகளையும் குறை கூறியதிலிருந்தே இதை நீங்கள் உணர்ந்திருக்க வேண்டும்.

    சேது சமுத்திர திட்டம் (அதிலும் அதன் உண்மையான பலன் மக்களுக்கு ஏதாவது இருக்குமா என்பது கேள்விக்குறியே!) தவிர வேறு எந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து மாநில அரசு தடுத்தது? //

    பல திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் அரசியல் காழ்ப்புணர்வு உள்ளவர் அம்மாதான். இது கட்சி சார்பில்லா அனைவருக்கும் தெரியும்.

    //நம்முடைய முதலமைச்சருக்கும் புதிய பிரதமர் மோடிக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது என்றும் ஆகவே அவர் பிரதமராவதற்கு இவர் ஆதரவு தெரிவிப்பார் என்று கூறிய ஒரே காரணத்திற்காக முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் மயில்சாமியை தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முந்தைய நாள் கட்சியின் அடிப்படைத் தொண்டர் நிலையிலிருந்தே தூக்கியெறிந்தவர் ஜெயலலிதா. இதன் மூலம் அவர் தெரிவிக்க விழைந்தது என்ன? //
    தலை இருக்க வால் ஆடக் கூடாது என்ற ஒன்றையே! அதனால்தான் அதிமுக வில் ஒரே தலைவர்! //

    ஆமாம். இதுதான் அந்த கட்சியின் தலைவிதி. எவன் தலை எப்போது உருளும் என்ற அச்சத்துடனே வாழ்பவர்கள் அந்த கட்சியில் உள்ளவர்கள்.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. Packirisamy N said...
    நல்ல ஆய்வு. ஒரு வகையில் பார்த்தால் ஜனநாயகம் என்பதும் கேலிக்கூத்துதான். பத்து பேர் உள்ள இடத்தில், இரண்டு பேருக்கு விஷயம் தெரிந்தாலும், எட்டுபேர் மெஜாரிட்டி என்று அவர்கள் சொல்லுவதை ஒத்துக்கொள்ள வேண்டுமா?//

    இப்போதுள்ள தேர்தல் விதிமுறைகளின்படி இதை விட்டால் வேறு ஏது வழி?

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. தி.தமிழ் இளங்கோ said...
    ஒரு நல்ல அரசியல் விமர்சனக் கட்டுரை.

    கட்சிகள் பெறும் வாக்கு விகிதாச்சார அடிப்படையில் நாடாளுமன்றத்தில் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் – யோசனை நிறைவேறினால் இன்னும் நல்லதுதான். ஆனால் அரசியல்வாதிகள் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

    முன்னாள் மாநில தேர்தல் ஆணையரின் பெயர் மயில்சாமி இல்லை. மலைச்சாமி என்பதாகும்.//

    தவற்றை சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  21. இந்தக் கணக்கு எல்லாம் தோல்வியை ஆராய உதவலாம் இந்தக் கணக்கு ஓட்டுப் போட்டவர்களின் எண்ணிக்கையின் அடிப்படைதானே 35% மக்கள் வாக்கௌப் பதிவே செய்யவில்லையே. மத்தியில் பாஜகவின் தலைவர் ஹிட்லரின் வாரிசாக இல்லாமல் இருந்தால் சரி. நானொரு benevolent dictator வந்தால் நலமாயிருக்கும் என்று கூறி வந்தேன். இவர் அப்படிபட்டவரா கொடுங்கோலரா என்று போகப் போகத் தெரியும் மீண்டும் சொல்கிறேன் we get what we deserve.

    பதிலளிநீக்கு
  22. பெயரில்லா2:51 AM

    இத்தகைய சிக்கல்களை தீர்க்கத் தான் அன்றே அண்ணல் அம்பேத்கார் விகிதாச்சார அடிப்படையிலும், இரட்டை வாக்குரிமையை கோரினார்.
    உண்மையில் விகித்தாசார அடிப்படையில் தேர்தலை நடத்தினால் சிறுபான்மையினர், தலித்கள், பெண்கள் ஆகியோருக்கு கணிசமான இடங்களை பெறலாம்.

    உதாரணத்துக்கு 40 தொகுதிகளை உடைய தமிழகத்தை 10 தேர்தல் மாவட்டங்களாக பிரித்தால். ஒரு தேர்தல் மாவட்டத்தில் முதல் நான்கு இடங்களைப் பெறுவோருக்கு நான்கு ஆசனங்களைக் கொடுக்கலாம். அதன் அடிப்படையில் இரட்டை வாக்குரிமை முறையை கொண்டு வந்து ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் ஒரு பெண், ஒரு சிறுபான்மை வேட்பாளருக்கு இடம் கொடுக்கலாம். சிறுபான்மை வேட்பாளரை அந்தந்த தேர்தல் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள கணிசமான சிறுபான்மை மக்களின் தொகையின் அடிப்படையில், தலித், பழங்குடி, இந்து, முஸ்லிம், கிறித்தவர், பவுத்தர், சமணர் திருநங்கையர் என சமூகத்தில் சிறுபான்மை நிலையில் உள்ள ஒருவருக்கு வழங்கலாம்.

    அப்படி நோக்கினால் முதல் இரண்டு இடத்தை பொது வாக்குகள் அடிப்படையிலும், இன்னும் இரண்டு இடத்தை சிறப்பு வாக்குகள் அடிப்பையிலும் வைத்து. நான்கு பேரை தேர்ந்தெடுக்கலாம், இதன் அடிப்படையில் ஜனநாயகத்தில் பங்கேற்ற அனைத்து மக்களின் விருப்பங்களுக்கு அமைய வேட்பாளர்கள் வெற்றி பெறலாம்.

    இத்தகைய விகிதாச்சார அடிப்படையிலான தேர்தல் முறையே சிறந்தவையாகவும், பன்முக மக்கள் வாழும் தேசத்தில் ஏதுவாகவும் அமையும்.

    பதிலளிநீக்கு

  23. Blogger G.M Balasubramaniam said...

    இந்தக் கணக்கு எல்லாம் தோல்வியை ஆராய உதவலாம் இந்தக் கணக்கு ஓட்டுப் போட்டவர்களின் எண்ணிக்கையின் அடிப்படைதானே 35% மக்கள் வாக்கௌப் பதிவே செய்யவில்லையே. மத்தியில் பாஜகவின் தலைவர் ஹிட்லரின் வாரிசாக இல்லாமல் இருந்தால் சரி. நானொரு benevolent dictator வந்தால் நலமாயிருக்கும் என்று கூறி வந்தேன். இவர் அப்படிபட்டவரா கொடுங்கோலரா என்று போகப் போகத் தெரியும//

    எதேச்சாதிகாரமும் (dictatorship) தேவைதான். ஆனால் அது நல்ல எண்ணங்களுடன் கூடியதாக இருக்க வேண்டும். ஒழுங்கீனமான அரசு அதிகாரிகளை நல்வழிப்படுத்த இத்தகைய தலைமை உதவக்கூடும். அப்படியொரு அதிகாரத்தை செலுத்த மோடிக்கு கடந்த இருபதாண்டுகளில் இல்லாத பெரும்பான்மை பலம் இப்போது கிடைத்துள்ளது. அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. Dictatorship என்ற சொல்லுக்கு எதேச்சாதிகாரம் என்பதை விட சர்வாதிகாரம் என்பதுதான் சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
  25. @ கோடங்கிச் செல்வன்,

    இந்த இரு வாக்கு முறை ஐரோப்பியாவில் ஒரு சில நாடுகளில் உள்ளது. இந்த முறையை நம்முடைய நாட்டில் அமுல்படுத்தினால் எத்தனை பேரால் அதாவது பாமர மக்களால் புரிந்துக்கொள்ள முடியும் என்று தெரியவில்லை. ஆகவே வேட்பாளர்கள் இல்லாமல் கட்சிக்கு வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்தலாம். இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் வாக்குகள் பெறும் அனைத்துக் கட்சிகளுக்கும் மக்கள் மன்றத்தில் பிரதிநிதிகள் இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  26. அலசல் கொஞ்சம் ஒருதலைப் பட்சமானது போல் தெரிகிறது. சில திட்டங்களுக்கு, ஜெயந்தி நடராஜனின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை (அதிமுக அரசு என்பதால்). சேது சமுத்திரத் திட்டத்தில் யார் பலன் பெற்றது? டி.ஆர்.பாலுவின் கம்பெனி மற்றும் அதன் மூலமாக தி.மு.க. சென்னையில் உள்ள பாலங்கள் மற்றும் ஸ்டார் இன்ஷூரன்ஸ் துபாயின் இ.டி.ஏ 'நிறுவனத்துக்குக் கொடுத்து அதன் மூலமாக கமிஷன் திமுக தலைவருக்கு (அவர் குடும்பத்துக்கும்) வந்தது. அதனால், அதிமுக திட்டங்களை நிறுத்திவைத்தது என்று சொல்வது சரியல்ல.

    விகித்தாச்சார முறை கொண்டுவருவதற்கு முன்பு, இரு கட்சிகளைத் தவிர மற்றவைகளைக் கலைத்துவிட வேண்டும். எதுக்கு துண்டு துக்கடா கட்சிகள்? இந்தியாவுக்கு காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா (அதாவது முதலிரண்டு இடத்தைப் பிடிக்கும் கட்சி அல்லது 15 சதவிகிதத்துக்குமேல் ஆதரவு உள்ள கட்சிகள்) போதும்.

    ஓட்டளிக்கச் செல்லாதவர்களுக்கு ரேஷன் போன்ற பலன்'கள் கிட்டக்கூடாது.

    இது மாதிரி ஒவ்வருவரும் ஒரொரு கருத்து சொல்லிக்கொண்டே போகலாம்.

    பதிலளிநீக்கு