23 மே 2014

இது மோடியின் ராஜதந்திரமா இல்லை சுய விளம்பரமா?

அந்த காலத்தில் ஒரு நாட்டில் புதிதாக மன்னர் முடிசூட்டப்படும்போது அந்த நாட்டைச் சுற்றியுள்ள நாடுகளின் மன்னர்களை அந்த முடிசூட்டும் விழாவுக்கு அழைப்பார்களாம். அவற்றிற்கு இரண்டு காரணங்களைச் சொல்வார்கள். 

முதலாவது உங்களுடைய நட்பும் ஆதரவும் எனக்கு தேவை என்பதைச் சுட்டிக்காட்டுவது. 

இரண்டாவது நானும் ஒரு அரசன் என்ற அங்கீகாரம் அவர்களிடமிருந்து கிடைக்க வேண்டும் என்ற எண்ணம். 

இதற்கும் நம்முடைய நாட்டின் பதினான்காம் பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் நரேந்திர மோடி அந்த விழாவுக்கு தெற்காசிய நாட்டுத் தலைவர்களை எல்லாம் அழைத்ததற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ ? 

யாரும் சற்றும் எதிர்பார்த்திராத அவருடைய இந்த நடவடிக்கைக்கு நான் மேற் கூறிய இரண்டாவது காரணம்தான் உண்மையான காரணம் என்று நினைக்கின்றேன். உள்நாட்டில் இன்னும் என்னை பலரும் பிரதமராக ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். ஆகவே நீங்கள் என்னுடைய பதவி ஏற்பு விழாவிற்கு வருகை தருவதன் மூலமாக அந்த அங்கீகாரத்தை எனக்கு தாருங்கள், அதனால் உள்நாட்டில் எனக்கு மதிப்பு கூடும் என்கிற எண்ணம்.

இவர் ஒரு இஸ்லாமிய விரோதி ஆகவே இவர் பிரதமரானால் நமக்கு மட்டுமல்லாமல் இந்திய துணைக்கண்டத்திற்கே ஒரு அச்சுறுத்தலாக இருப்பார் என்று தேர்தலுக்கு முந்தைய வாரத்தில் கூட பாக்கிஸ்தானில் இருந்து கருத்து வெளியிடப்பட்டது. ஏனெனில் மோடிக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் பாக்கிஸ்தானுக்கு சென்றுவிடலாம் என்று பாஜக தலைவர் ஒருவரே வெளிப்படையாக கூறியது நினைவிருக்கலாம். இதிலிருந்து என்ன தெரிகிறது? மோடியை விரும்பாதவர்கள் இஸ்லாமியர்கள் மட்டுமே என்றுதானே? ஆகவேதானே இஸ்லாமிய நாடான பாக்கிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள் என்ற எச்சரிக்கை விடப்பட்டது! இப்படிப்பட்ட சூழலில் நானே பாக்கிஸ்தான் பிரதமரை என்னுடைய பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்தால் என்னைப் பற்றி இதுவரை வெளிவந்துள்ள எண்ணத்தை மாற்றி விடலாம் என்பதுடன் இந்த ஒரேயொரு செயல்பாட்டால் மேற்கத்திய நாடுகளிடம் என்னைப் பற்றி நிலவி வரும் எண்ணத்தையும் மாற்றிவிடலாம் என்றும் மோடி கருதியிருப்பார். ஆனாலும் வெறுமனே பாக்கிஸ்தான் அதிபரை மட்டும் அழைத்தால் இந்த தன்னுடைய எண்ணத்தை மற்றவர்கள் கண்டுபிடித்துவிடக் கூடாதே என்ற நினைப்பில் அவருக்கு தோன்றிய மாற்று உத்திதான் தெற்காசிய கூட்டமைப்பிலுள்ள அனைத்து நாட்டுத் தலைவர்களையும் அழைப்பது என்ற முடிவு. 

கடந்த ஆண்டு பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் (POK) பாக்கிஸ்தான் இராணுவத்தினர் ஒரு இந்திய வீரரின் தலையைத் துண்டித்துவிட்ட செய்தி வெளியான தினங்களிலிருந்து ஒரு சில வாரங்கள் கழித்து பேச்சு வார்த்தைக்காக அந்த நாட்டு வெளியுறவு அதிகாரிகள் குழு நம் நாட்டுக்கு விஜயம் செய்திருந்தது. அப்போது 'நம்முடைய நாட்டு வீரரின் தலையைக் கொய்தவருக்கு தில்லியில் பிரியாணி பரிமாறப்படுகிறது' என்று பொதுக்கூட்டம் ஒன்றில் எள்ளி நகையாடியவர்தான் இந்த மோடி. இப்போது என்ன நடக்கிறது? தேர்தல் முடிவுகள் வெளிவந்த அடுத்த நாளே அதே எல்லைப் பகுதியில் பாக்கிஸ்தான் இராணுவம் எல்லை மீறி புகுந்ததால் ஏற்பட்ட மோதலில் ஒரு இந்திய இராணுவ அதிகாரி உயிரிழந்தார். அதற்கு இன்னமும் பாக்கிஸ்தான் வருத்தம் தெரிவிக்காத நிலையில் அந்த நாட்டு பிரதமருக்கு அழைப்பு செல்கிறது.

இந்திய மீனவர்கள் வடக்கே பாக்கிஸ்தான் கடற்படையினராலும் தெற்கே இலங்கை கடற்படையினராலும் துன்புறுத்தப்படுவதற்கு முக்கிய காரணம் மத்தியிலுள்ள வலுவற்ற ஆட்சியாளர்களே என்று கூறிவந்த மோடி இப்போது பாக்கிஸ்தான் பிரதமரை மட்டுமல்லாமல் இலங்கை அதிபரையுமல்லவா அழைத்திருக்கிறார்?

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் மோடியை வாழ்த்துவதற்காக அவரை சந்திக்கச் சென்ற பாஜகவின் கூட்டாளி கட்சிகளில் ஒன்றான சிவசேனாவின் உத்தவ் தாக்கரே நீங்கள் எதைச் செய்தாலும் பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை மட்டும் இந்தியாவுக்குள் விளையாட அனுமதிக்கலாகாது என்று ஒரு வேண்டுகோளை வைத்தார். அப்போதே மோடி நான் இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்க வேண்டிய தேவையில்லை என்பதை இவருக்கு காட்ட வேண்டும் என்று எண்ணி அவர்களுடைய கிரிக்கெட் அணியை என்ன அவர்களுடைய பிரதமரையே அழைக்கிறேன் பார் என்று முடிவெடுத்திருக்க வேண்டும். 

இலங்கை அதிபரை அழைக்கவும் இதே எண்ணம் தான் காரணம். ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி என்றும் அவர் மீது சர்வதேச விசாரணை நடத்த இந்தியா முன்நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதுவரை இலங்கையை ஒரு எதிரி நாடாக கருத வேண்டும் என்று தமிழக சட்ட்மன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றியதையும் தமிழகத்திலுள்ள கட்சிகள் எதில் உடன்படுகிறார்களோ இல்லையோ ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக கருதுவதில் தங்களுடைய அனைத்து வேற்பாடுகளையும் மறந்து ஒன்றுபட்டு நிற்பதையும் மோடி அறியாதவரா என்ன? முந்தைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தங்களுடைய ராஜபக்சே வெறுப்பை கண்டுக்கொள்ளவில்லை ஆனால் பாஜக அப்படியல்ல என்று அவருடன் கூட்டு வைத்து அவருக்காகவே வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த தமிழக கட்சிகள் விரும்புவது என்ன என்பதையும் மோடி அறியாதவரா? இருப்பினும் அவர் இப்படியொரு முடிவு எடுத்ததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? உங்களுடைய எண்ணங்கள் எனக்கு முக்கியமில்லை நான் என் வழியிலேயேதான் செல்வேன் என்று சொல்லாமல் சொல்கிறார். அதுதான் உண்மை. இதை அவர் தூக்கியெறிய விருக்கும் துணை/இணை அமைச்சர் பதவிகளுக்காக காத்திருக்கும் தமிழக கட்சிகள் புரிந்துக்கொண்டால் நல்லது. 

அவருடைய நிலைப்பாடு இப்படித்தான் இருக்கும் என்று அவரை எதிர்த்து நான் எழுதி வந்துள்ள பல பதிவுகளிலும் கூறியிருக்கிறேன். இது அவருக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கும் தெரிந்திருக்கும். அதனால்தானோ என்னவோ  ஒரேயொரு இடத்தைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் அவரை புறக்கணித்தார்கள். அன்புமணி ஜெயித்தது சாதியின் அடிப்படையில் மட்டுமே என்பதால் அதைப்பற்றி இங்கு பேசுவதில் எந்த பயனும் இல்லை. ஆக மோடியின் செயல்பாடுகளைப் பற்றி அறியாமல் இருந்தது அவருக்கு துணை சென்ற தமிழக கட்சிகள் மட்டுமே. இவர்கள் தலைகீழாக நின்றாலும், ஏன் அவருடைய பதவி ஏற்பு விழாவையே புறக்கணித்தாலும் மோடியின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில் அவருடைய தாரக மந்திரம் நாட்டின் பொருளாதார மேம்பாடு (economic development) மட்டுமே. `அதற்கு அண்டை நாடுகளுடன் நட்புறவு மிக, மிக அவசியம் என்பது அவருக்கு தெரியும். அதுதான் சரியான தீர்வும் கூட.

தெற்காசிய நாடுகள் மட்டுமல்லாமல் அவற்றைக் கடந்து அண்டை நாடுகள் எனப்படும் சீனா,  கிழக்கேயுள்ள ஜப்பான், தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளுடனான நட்புறவும் நமக்கு அவசியம். மேலும் தன்னை உள்ளே வரவேண்டாம் என்று பல  ஆண்டுகள் விசா அளிக்க மறுத்து வந்த அமெரிக்காவை நம்புவதை விட அதற்கு செக் மேட் வைக்கக் கூடிய நாடுகளான, ஐநா பாதுகாப்பு குழுவின் நிரந்தர உறுப்பு நாடுகளான, சீனா மற்றும் ரஷ்யா நாடுகளின் நட்புறவு மிகவும் அவசியம் என்பதும் மோடிக்குத் தெரியும். மோடி குஜராத் மாநில முதலமைச்சரானதும் முதலில் விஜயம் செய்த நாடுகள் ஜப்பானும் சீனாவும்தான். இவர் சீனாவுக்கு சென்று வந்த பிறகுதான் அங்கு பல ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்திருந்த குஜராத்தி வைர வியாபாரிகளில் பலர் விடுதலை செய்யப்பட்டனர். 

இதுதான் மோடியின் பின்புலம். சீனாவோடு நட்புறவை வளர்த்துக்கொண்டால் பாக்கிஸ்தானின் அத்துமீறல்கள் மட்டுமல்லாமல் இலங்கையின் அட்டூழியங்களும் குறையும் என்பது அவருடைய நம்பிக்கை. அதுவும் ஒரு வகையில் உண்மைதான். இந்தியத் துணைக்கண்டத்தில் அடாவடி செய்துக்கொண்டிருக்கும் இவ்விரு நாடுகளும் அமெரிக்காவை விட சீனாவுக்குத்தான் அஞ்சுகின்றன என்பதும் சீனாவின் தயவில்தான் இந்த நாடுகளின் பொருளாதாரம் உள்ளன என்பதும் நம்மவர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ மோடிக்கு மிக நன்றாகவே தெரிந்துள்ளது. இது காங்கிரசுக்கும் தெரியும், முந்தைய பிரதமர் மன்மோகனுக்கும் தெரியும். ஆனால் துணிந்து நடவடிக்கையில் இறங்க முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகளின் நெருக்குதல் அவர்களுக்கு தடையாக இருந்தது. ஆனால் மோடிக்கு அந்த தடை இல்லை. 

இந்தியாவின் பொருளாதாரம் அசுர வேகத்தில் முன்னேற வேண்டுமென்றால் அன்னிய நாட்டின் முதலீடு எவ்வளவு முக்கியமோ நம்முடைய நாட்டு நிறுவனங்கள் அன்னிய நாடுகளுக்குச் சென்று முதலீடு செய்வதும் அங்கு தங்களுடைய வணிகத்தைப் பெருக்குவதும் முக்கியம். இதை மோடி உணர்ந்திருக்கிறாரோ என்னமோ தெரியாது ஆனால் அவருக்காக கோடிக் கணக்கில் வாரி இறைத்து அவரை பிரதமர் பதவியில் அமர்த்தியுள்ள வர்த்தக முதலாளிகளுக்கு மிக நன்றாகவே தெரியும்.  எனக்கு இஸ்லாமிய சிங்கள நாடுகளின் செயல்பாடுகளில் உடன்பாடில்லை என்றால் என்ன அவர்களுடனான வர்த்தக தொடர்புக்கு மதிப்புள்ளதாயிற்றே? நாய் விற்ற காசு குரைக்கவா செய்யும்? இதுதான் மோடியின் தத்துவம். அதை மக்கள் உணர்ந்திருந்ததால்தான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் அவருக்கு வாக்களித்து சரித்திரம் கண்டிராத வெற்றியை அவருக்கு அளித்துள்ளனர் என்பதை அவருடன் கூட்டு வைத்துள்ள கட்சிகள் உணர்ந்துக்கொண்டு செயல்பட்டால் நல்லது. அதை விட்டு விட்டு எங்கோ இருக்கும் தமிழனின் நலன்தான் முக்கியம் என்று வாய் கிழிய பேசிக்கொண்டிருந்தால் தங்களுக்கு கிடைக்கவிருக்கும் வாய்ப்புகளையும் பறிகொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவார்கள். 

எங்கோ இருக்கும் தமிழனைப் பற்றிய கவலையை விடுங்கள் எங்களுடைய மீனவர்கள் அநியாயமாக கொல்லப் படுகிறார்களே அதற்கு என்ன பதில் என்று கேட்கிறீர்களா? அதற்கும் கூடிய விரைவில் ஒரு வழி பிறக்கும். இந்திய கடல் எல்லைகளில் நம்முடைய கடற்படையின் கண்காணிப்பு அதிகரிக்கப்படும். இதன் மூலம் தவறுதலாகக் கூட எல்லை தாண்டிச் செல்லும் நம்முடைய மீனவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள். இது ஒன்று மட்டுமே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும். மேலும் இத்தகைய இடையூறுகளுக்கு பின்புலமாக இருக்கும் சீனாவின் செயல்பாடுகளும் மோடியின் சீனாவுடனான நட்புறவால் முடிவுக்கு வரும்.

ஆனால் ஆங்கிலத்தில் One should not bite more than one can chew என்பார்கள். அதாவது மென்று விழுங்க முடியாத அளவுக்கு உணவை எடுத்துக்கொள்ளக் கூடாதாம்! இதை ஏன் சொல்கிறேன் என்றால் அரசியலிலும் கூட ஆற அமர தீர்க்கக் கூடியவைகளை அவசரப் பட்டு ஒரே சமயத்தில் தீர்க்க முயலக் கூடாது.  இது மோடியின் விஷயத்தில் உண்மையாகிவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

*********** 


20 மே 2014

தேர்தல் 2014 - விசித்திரமான முடிவுகள்!

நடந்து முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் பல சுவாரஸ்யமான தகவல்களை தருகின்றன.

ஒரு கட்சி பெறும் இடங்களை விட அது பெறும் வாக்கு விழுக்காடே (vote percentage) அது மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு மதிப்பை பெற்றுள்ளது என்றோ அல்லது ஒரு தேர்தலில் வாக்களித்தவர்களில் எத்தனை விழுக்காடு வாக்காளர்கள் அந்த கட்சியை ஆதரித்தார்கள் என்றோ காட்டுகிறது என்பார்கள். 

இந்த அடிப்படையில் பார்த்தால் ஒரு கட்சி தேர்தலில் பெறும் வாக்கு விழுக்காட்டுக்கும் அது வெற்றி பெறும் இடங்களுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்க வேண்டும் அல்லவா? 

ஆனால் கடந்த இரு பொதுத் தேர்தல் முடிவுகளை ஒப்பிடும்போது சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் பல விசித்திர முடிவுகளை அளித்துள்ளதைக் காண முடிகிறது. 

கீழ்காணும் பட்டியலைப் பாருங்கள்:


கடந்த, அதாவது 2009ல் நடந்த தேர்தலில் 22.90 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருந்த அஇஅதிமுக இம்முறை அதை இரட்டிப்பாக்கியுள்ளது, அதாவது 44.30 விழுக்காடு வாக்குகளை பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் 2104ல் அது வெற்றிப் பெற்ற இடங்களின் எண்ணிக்கையும் 9லிருந்து 18 ஆக அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அது பெற்ற இடங்களோ நான்கு மடங்கு. அதாவது 2009ல் ஒன்பதாக இருந்த அதன் இடங்கள் 2014ல் 37 ஆக உயர்ந்துள்ளது.

திமுகவை எடுத்துக்கொண்டால் 2009ல் 25.10 விழுக்காடாக இருந்த அதன் வாக்கு விழுக்காடு 2014ல் வெறும் 1.50 விழுக்காடு குறைந்து 23.60 விழுக்காடாக இருந்தது. இதன் அடிப்படையில் 2009ல் 18ஆக இருந்த அதன் இடங்கள் சுமார் இரண்டு இடங்கள் குறைந்து 16ஆக இருந்திருக்க வேண்டும். ஆனால் 2014ல் அதற்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

இந்திய அளவிலும் இதே போக்குதான் காணப்படுகிறது



இதற்கு என்ன காரணம்?

உலகிலுள்ள பல நாடுகளிலும் கட்சிகள் மட்டுமே போட்டியிடுகின்றன. தேர்தலின் முடிவில் கட்சிகள் பெற்றுள்ள வாக்கு விகிதங்களின் அடிப்படையில் நாட்டின் ஆட்சி மன்றங்களில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. 

ஆனால் இந்தியாவில் நாடு முழுவதும் சிறு, சிறு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகள் பெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். இது winner take all என்ற அடிப்படையில் அமைகிறது எனலாம். 

தமிழகத்தைப் பொறுத்தவரையில் 44.30 விழுக்காடு வாக்காளர்கள் மட்டும் வாக்களித்த ஒரு கட்சிக்கு மொத்தமுள்ள இடங்களில் 90 விழுக்காடுக்கும் மேல் இடங்கள் கிடைத்துவிட்டது. அப்படியானால் அவரை எதிர்த்து வாக்களித்த மக்களின் வாக்குகள் அனைத்தும் செல்லாக் காசாகி விட்டன என்பதுதானே பொருள்?

இந்திய அளவில் பார்த்தால் வெறும் 31.00 விழுக்காடு வாக்காளர்களால் ஆதரிக்கப்பட்ட ஒருவர் அவரை எதிர்த்து வாக்களித்த 69.00 விழுக்காடு வாக்காளர்களுக்கும் பிரதமராகிறார்! 

ஆகவேதான் இந்த முறை மாற்றப்பட்டு கட்சிகள் பெறும் வாக்கு விகிதாச்சார அடிப்படையில் நாடாளுமன்றத்தில் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை என்னுடைய முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இல்லையென்றால் தேர்தலின் நோக்கமே கேலிக்குறியதாகிவிடும் என்பது என்னுடைய கருத்து.

******

தமிழக தேர்தல் முடிவுகளை இன்னும் ஆழமாக ஆய்வு செய்தால் 2009 தேர்தலிலும் சமீபத்தில் நடந்த தேர்தலிலும் அஇஅதிமுக பெற்ற வாக்கு விழுக்காடு இரட்டிப்பாக அதிகரித்ததற்கு முக்கிய காரணம் அதை எதிர்த்து நின்ற கட்சிகள் இழந்த அனைத்து வாக்குகளும் அதிமுகவுக்குச் சென்றுவிட்டன என்பதை உணரமுடிகிறது. 

இதற்குக் காரணம் அதிமுகவை எதிர்த்து முந்தைய தேர்தலில் கூட்டணி அமைத்து களம் இறங்கிய கட்சிகள் இம்முறை தனித்தனியாக நிற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டன என்பதுதான். அதாவது அதிமுகவுக்கு எதிராக விழுந்துள்ள 56 விழுக்காடு வாக்குகள் நாலாபுறமும் சிதறியதாலேயே அதிமுகவால் நினைத்தும் பார்க்க முடியாத அளவு இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 

இதுமட்டுமேதான் அதிமுகவின் வரலாறு காணாத வெற்றிக்குக் காரணம். 

அதை விடுத்து எங்களுடைய கடந்த மூன்றாண்டு கால மக்கள் நலத் திட்டங்களுக்கு மக்கள் அளித்த பரிசு இது என்று அதிமுக கூறிவருவது சரியல்ல. 

மேலும் காங்கிரஸ் கட்சியின் கடந்த பத்தாண்டு கால அலங்கோல ஆட்சியால் வெறுப்புற்று போயிருந்த மக்கள் அதனுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி செய்த திமுகவையும் தண்டித்தே ஆகவேண்டும் என்ற மனநிலையில் இருந்திருக்க வேண்டும். ஆனாலும் திமுகவுக்கு எப்போதும் இருந்து வந்துள்ள வாக்கு வங்கியில் பெரிதாக ஏதும் தாக்கம் ஏற்படவில்லை என்பது அது பெற்றுள்ள வாக்கு விழுக்காடிலிருந்து தெரிகிறது. இவ்விரண்டு தேர்தல்களிலும் அது பெற்றுள்ள வாக்கு விகிதத்தில் 1.50 விழுக்காடு மட்டுமே சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை என்றால் அது தேர்தல் நடத்தும் விதத்திலுள்ள குறைபாடே அல்லாமல் வேறில்லை. மேலும் மொத்த முள்ள 39 தொகுதிகளில் பாஜக மற்றும் பாமக வெற்றிபெற்றுள்ள இரண்டு தொகுதிகளைத் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பெற்றது திமுகதான். ஆகவே அன்புமனி ராமதாஸ் பீற்றிக்கொள்வதைப் போல திமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படவில்லை என்பதுதான் உண்மை.

******

மேலும் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக கட்சிகள் இந்த தேர்தலை அணுகிய முறையிலும் பெருத்த வித்தியாசத்தை காண முடிகிறது.

திமுக தன்னுடைய பலன் எது என்று உணராமல் கூட்டு சேர வந்த காங்கிரசை உதறியது. தேதிமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டிருந்தாலாவது சில இடங்களை  தேற்றியிருக்கலாம். அதையும் அவராக வந்தால் பார்க்கலாம் என்று பேசிப் பேசியே காலத்தை வீணடித்துவிட்டனர்.  இடையில் அழகிரி வேறு சச்சரவை ஏற்படுத்தி கட்சியின் உள்பூசலை அம்பலமாக்கிவிட்டார். தேர்தல் பிரசாரத்தில் தங்கள் கட்சியை எதற்காக மக்கள் ஆதரிக்கவேண்டும் என்று பேசாமல் ஜெயலலிதாவை கிண்டலடிப்பதிலேயே குறியாயிருந்தனர். அதுவும் கூட மக்களை வெறுப்படையச் செய்திருக்கலாம். 

ஆனால் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே தனித்துத்தான் போட்டியிடுவது என்று அஇஅதிமுக தீர்மானித்தது. இதற்கு முக்கிய காரணம் கடந்த மூன்றாண்டுகளில் எதையும் பெரிதாக நாம் சாதிக்கவில்லை, ஆகவே மக்களின் ஏகோபித்த ஆதரவு நமக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்பதை அந்த கட்சி உணர்ந்திருந்தது. இருந்தும் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் நமக்கு எதிராக விழக்கூடிய வாக்குகளை சிதறடிக்க வேண்டும் என்று ஜெயா மிகச் சரியாக ஊகித்தார். மேலும் திமுகவுடனோ அல்லது காங்கிரசுடனோ எந்த கட்சியும் கூட்டு வைத்துக்கொள்ள முன்வராது என்பதையும் மீதமுள்ள கட்சிகள் பாஜகவுக் இணைந்து போட்டியிட்டாலும் அதனால் சொல்லக் கூடிய அளவுக்கு தாக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்பதையும் அவரால் கணிக்க முடிந்தது. ஆகவேதான் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதென முடிவு செய்தார்.

அதல்லாமல் மத்தியில் ஆட்சி செய்யவுள்ள அரசில் அங்கம் வகிக்கும் கட்சியாக தனது கட்சியை தெரிவு செய்ய வேண்டும் என்று ஜெயா  முழங்கி வந்தது எல்லாம் வெறும் ஜாலவித்தையே. கடந்த பத்தாண்டுகளாக திமுக மத்தியில் அங்கம் வகித்திருந்தாலும் மத்திய அரசு தமிழகத்தில் கொண்டு வந்த பல நலத்திட்டங்களை அந்த காலத்தில் சுமார் ஏழு ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த அஇஅதிமுகவின் ஒத்துழைப்பின்மையால் பெரிதான தாக்கம் எதையும் ஏற்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை. மத்திய அரசில் அங்கம் வகித்திருந்த திமுகவின் முயற்சியால் பல நல்ல திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைத்தும் அதை முழுமையாக செயலாக்காமல் தடுத்து நிறுத்தியது அஇஅதிமுக அரசுதான் என்றால் மிகையாகாது.

இதை ஏன் சொல்கிறேனென்றால் கடந்த தேர்தலில் நரேந்திர மோடியின் அலை உணரடப்படாத ஒரு சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. நரேந்திர மோடி பிரதமானால் அதை செய்வார், இதை செய்வார் என்றும் இந்தியர்கள் வெளி நாடுகளுக்கும் குறிப்பாக அமெரிக்காவுக்கு செல்ல விசா வாங்க வரிசையில் காத்திருந்ததுபோல வெளி நாட்டவர்கள் இந்தியாவுக்கு வர காத்திருக்கும் நிலை வரும் என்றெல்லாம் இங்குள்ளவர்கள் தினந்தோறும் கூறி வருகிறார்கள். ஆனால் அத்தகைய நல்ல திட்டங்களை மத்திய அரசு தீட்டினாலும் அவற்றை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டுமென்றால் இங்குள்ள மாநில அரசு மத்திய அரசுடன் தோழமையுடன் செயல்பட வேண்டும். மத்திய அரசு கொண்டு வரும் எந்த நல்ல திட்டமும் மாநிலத்தில் செயல்படுத்துவதற்கு மாநில அரசால் மட்டுமே முடியும். பறக்கும் சாலைத் திட்டத்தை கிடப்பில் போடுவதற்கு மாநில அரசு செய்ததுபோல் இனி வரும் மத்திய திட்டங்களுக்கும் மாநில அரசு முட்டுக்கட்டை போடுமானால் மத்திய அரசின் எந்த நலத்திட்டங்களும் தமிழகத்திற்கு பலனளிக்காமல் போய்விடும். 

நம்முடைய முதலமைச்சருக்கும் புதிய பிரதமர் மோடிக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது என்றும் ஆகவே அவர் பிரதமராவதற்கு இவர் ஆதரவு தெரிவிப்பார் என்று கூறிய ஒரே காரணத்திற்காக முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் மலைச்சாமியை தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முந்தைய நாள் கட்சியின் அடிப்படைத் தொண்டர் நிலையிலிருந்தே தூக்கியெறிந்தவர் ஜெயலலிதா. இதன் மூலம் அவர் தெரிவிக்க விழைந்தது என்ன? மோடி பிரதமராவதல்ல கட்சியினுடைய விருப்பம் என்பதுதானே? பாஜகவுக்கு இந்த அளவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்று அவர் நினைத்திருப்பார் போலிருக்கிறது. ஒருவேளை மூன்றாம் அணியினருக்கு பெரும்பான்மை கிடைத்தால் முன்பே மமதா கூறியதுபோன்று தமக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைக்கக் கூடும் என்று எண்ணியிருப்பாரோ? இருக்கும். இல்லையென்றால் அத்தனை மூர்க்கத்தனமாக மயில்சாமியை கட்சியைவிட்டே தூக்கியெறிந்திருக்க மாட்டார். ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் இவருடையது மட்டுமல்லாமல் தன்னுடன் கூட்டணி வைத்திருந்த எந்த கட்சியின் தயவும் இல்லாமல் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு மோடிக்கு பெரும்பான்மை கிடைத்துவிட்டது என்பதை அறிந்ததும் உடனே அவருக்கு வாழ்த்துக் கூறி கடிதம் எழுதிவிட்டார். மோடியும் கடிதம் கிடைத்ததும் பதில் கடிதம் போடாமல் உடனே தொலைபேசியில் அழைத்து மத்திய அரசின் அனைத்து ஒத்துழைப்பும் மாநில அரசுக்கு இருக்கும் என்று கூறிவிட்டார் போலிருக்கிறது.

இனிவரும் காலங்களில் இதே நட்பு நிலையை கடைபிடித்து மத்திய அரசின் நலத்திட்டங்களின் பயன்களை அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் மாநில அரசு செயல்படுமானால் அடுத்த சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாமல் மோடி மத்தியில் பிரதமராக இருக்கும் வரையில் இங்கும் அஇஅதிமுக தொடர்ந்து ஆட்சி செய்ய வாய்ப்பு உள்ளது. அதை விடுத்து தேவையில்லாத ஈகோவுடன் இப்போதுள்ள அதே மனநிலையுடன் செயல்படுவாரேயானால் அடுத்த தேர்தலிலேயே ஆட்சியை இழந்துவிட வாய்ப்புள்ளது.

இந்த தேர்தல் இன்னொரு அருமையான தீர்ப்பையும் அளித்துள்ளது எனலாம். அதாவது தனிநபர்களை மட்டுமே நம்பியிருக்கும் கட்சிகளுக்கு இனி வாய்ப்பில்லை என்பது. இத்தகைய துக்கடா கட்சிகளால் தங்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதை மக்கள் மிகத் தெளிவாக தெரியப்படுத்திவிட்டார்கள். மத்தியில் காங்கிரசும் பாஜகவும் இருபெரும் கட்சிகளாக இருப்பதுபோன்று தமிழகத்தில் திமுக, அஇஅதிமுக என இரண்டு கட்சிகள் போதும். காங்கிரசும் பாஜகவும் கூட இனி இங்கு வேரூன்ற வாய்ப்பில்லை போலுள்ளது. அவர்கள் இருவருமே தமிழகத்தின் இரு பெரும் கட்சிகள் ஏதாவது ஒன்றுடன் கூட்டணி வைத்துக்கொள்வதைத் தவிர இனி வேறு வழியில்லை. 

**********