04 மார்ச் 2014

நீங்கள் ஒரு மதம் பிடித்தவர் - அநாமதேயம் கூறுகிறார்!!

மதம் பிடித்தவன்: இது எனக்கு ஒரு அநாமதேயம் வழங்கிய பட்டம். 

நான் வாரந்தோறும் எழுதிவரும் 'திண்ணை' என்கிற பதிவில் வந்து கீழ்காணும் கருத்துரையை பதிவு செய்திருக்கிறார் ஒரு அனானிமஸ் அதாவது தன்னை இனம் காட்டிக்கொள்ள துணிச்சல் இல்லாத கோழை வாசகர் (சக பதிவாளராகவும் இருக்க வாய்ப்புள்ளது.).

"காழ்ப்புனர்ச்சி காழ்ப்புனர்ச்சி என்பதை தவிர வேறு எதுவும் இதிலில்லை.
ஒரு தரம் தருமி பதிவைப் படிங்களேன் எந்த நேரமும் மதம் பிடித்து அலையாமல் இருக்க உதவும். மத்த இரண்டு பேரும் வெறி வெறியா பேசுவாங்களாம், சோசப்பு சொம்பாட்டம் இருப்பாராம்."

சாதாரணமாக பெயரில்லாமல் வரும் கருத்துரைகளை நான் பதிவு செய்வதில்லை. ஆனால் இதை அவ்வாறு ஒதுக்கித் தள்ளிவிட்டு மவுனமாக இருக்க முடியவில்லை. ஏனெனில் அதற்கு முந்தைய பதிவிலும் இவரோ அல்லது இவருடைய சகாக்கள் ஒருவரோ வந்திருந்து வெறுப்பை உமிழ்ந்துவிட்டுச் சென்றிருந்தார். அதே சமயம் இதை கருத்துரையாக பதிவு செய்தால் அங்கு இதற்கு தகுந்த பதிலளிக்க முடியாமல் போய்விடும் என்பதுடன் இத்தகைய அழுக்கு மணம் படைத்தவர்களை மற்றவர்களுக்கு இனம் காட்டிவிட முடியாமலும் போய்விடும் என்பதால்தான் இதைக் குறித்து தனியாக ஒரு பதிவிடலாம் என்று எண்ணினேன். 

இனி அந்த அநானியின் கருத்துரைக்கு வருவோம்.

முதலில் இதை காழ்ப்புணர்ச்சி என்கிறார். யாருக்கு யார் மீது காழ்ப்புணர்ச்சி? பாஜக மீதா அல்லது அவருடைய பிரதமர் நாமினி நமோ மீதா?  புரியவில்லை.

அதன் பிறகு நான் எந்த நேரமும் மதம் பிடித்து அலைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதுவும் புரியவில்லை. ஆனால் அவருடைய அடுத்த வரியையும் சேர்த்து படிக்கும்போது லேசாக புரிகிறது. அதாவது நான் 'மதம் வெறி' பிடித்து அலைகிறேன் என்று சொல்கிறார் போலும்.

'திண்ணை' ஒரு அரசியல் சார்ந்த பதிவு. நான் ஒரு நடுநிலையான அரசியல் விமர்சகன் என்பது என்னுடைய பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு மிக நன்றாக தெரியும். நான் ஒரு நீண்டகால காங்கிரஸ் வாக்காளன் என்றாலும் கடந்த பத்தாண்டுகளாக அவர்களுடைய ஆட்சியில் நடந்த ஊழல்களால் அதிருப்தியடைந்துள்ளவன். மேலும் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலிலோ நிர்வாகத்திலோ எவ்வித முன் அனுபவமும் இல்லாத ராகுலை முன் நிறுத்துவதால் அவர்களுக்கு வாக்களிப்பதில் பயனில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளேன் என்று ஏற்கனவே ஒரு பதிவில் தெளிவாக கூறியுள்ளேன்.

அவர்களை விட்டால் இன்று தேசிய கட்சிகள் என விரல் விட்டு எண்ணக் கூடிய கட்சிகளில் முக்கிய கட்சி பாஜகதான். பாஜகவின் கொள்கைகளில் எனக்கு எப்போதுமே உடன்பாடு இருந்ததில்லை. ஆகவே அவர்கள் நமோவைத் தவிர அத்வானி போன்ற வேறு எவரையேனும் முன்நிறுத்தியிருந்தாலும் அந்த கட்சிக்கு வாக்களிக்க வாய்ப்பே இல்லை.

என்னைப் பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தல்களில் பிராந்திய கட்சிகளுக்கு வாக்களிப்பதில் எவ்வித பயனும் இல்லை. எப்போது மத்தியில் கூட்டாட்சி என்ற நிலை வந்ததோ அன்று முதலே ஊழலும், ஒழுங்கீனமும் தலைவிரித்தாட துவங்கிவிட்டன என்பது என்னுடைய கருத்து. ஆகவே திமுகவுக்கோ அல்லது மற்றெந்த மாநிலக் கட்சிகளுக்கோ வாக்களிக்கவும் வாய்ப்பில்லை.

ஆகவே இம்முறை மட்டுமல்ல இனி வரும் தேர்தல்களிலும் அதாவது மீண்டும் காங்கிரஸ் தமிழகத்தில் தலையெடுக்கும்வரையிலும் யாருக்கும் வாக்களிக்கப்போவதில்லை. எந்த கட்சியையும் சார்ந்திராததால்தான் என்னால் நடுநிலையாக எல்லாக் கட்சிகளையும் விமர்சிக்க முடிகிறது.

ஆகவே அரசியல் ரீதியாக எனக்கு யார் மீதும் காழ்ப்புணர்ச்சி இருக்க வாய்ப்பே இல்லை.

அடுத்த குற்றச்சாட்டு நான் எந்நேரமும் மத வெறி பிடித்து அலைகிறேனாம். ஆகையால்தான் என்னுடன் விவாதத்தில் பங்குபெறும் இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த இருவரையும் வெறிபிடித்தவர்கள் போல் பேச வைத்துவிட்டு நான் நடுநிலையாக பேசுகிறேனாம் (இதைத்தான் 'சொம்படிக்கிறேன்' என்று குறிப்பிட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்).

அரசியல் விமர்சனத்தை ஒரு சில நண்பர்கள் இணைந்து விவாதிப்பதுபோல் அமைத்தால் சுவாரஸ்யமாக இருக்குமே என்று எண்ணித்தான் கற்பனையாக இருவரை படைத்தேன். அவர்களுக்கு என்ன பெயர் சூட்டலாம் என்று நீண்ட நேரம் யோசித்து இந்து மற்றும் இஸ்லாமிய பெயர்களை வைத்தால் இன்று நம் நாட்டிலுள்ள முக்கிய மூன்று மதத்தினரையும் சார்ந்தவர்கள் பங்குபெற்றதுபோல் இருக்குமே என்று பெயரிட்டேன். 

அவர்கள் இருவரும் கூறுவது நாட்டிலுள்ள அனைத்து இந்து மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள் கூறுவதுபோலுள்ளது என்று உருவகப்படுத்திக்கொள்வது படு முட்டாள்தனமான செயல். அதே போன்று கிறீஸ்த்துவ மதத்தைச் சார்ந்த நபர் கூறுவதெல்லாம் கிறிஸ்த்துவர்களின் கருத்து என்பதும் முட்டாள்தனம்தான்.

நாட்டிலுள்ள அனைத்து இந்து சகோதரர்களும் பாஜகவினர் அல்லவே. அதே போல் பாஜகவிலுள்ள அனைவரும் இந்து வெறியர்களும் அல்ல. ஆகவே பாஜகவை எதிர்ப்பது இந்து மதத்தை எதிர்ப்பது என்பதாகிவிடாது. மேலும் கணேஷ் என்கிற கதாபாத்திரம் கோபத்துடன் பேசுவது விவாதத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டத்தானே தவிர எல்லா பாஜகவினரும் இந்து வெறியர்கள் என்றோ இப்படித்தான் வெறிபிடித்ததுபோல் பேசுவார்கள் என்றோ பொருளல்ல.

அதே போன்றுதான் ரஹீம்பாய் என்கிற கதாபாத்திரமும். இன்று நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளிலும் இஸ்லாமியர்கள் உள்ளனர். பாஜகவிலும் உள்ளனர். கிறிஸ்த்தவர்களும் அப்படித்தான். இஸ்லாமியர்களுக்காவது இந்திய முஸ்லீம் லீக் என்கிற கட்சி உள்ளது. கிறிஸ்த்தவர்களுக்கு அதுவும் இல்லை. 

இந்த மதத்தினர் இந்த கட்சியைச் சார்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்பது எவ்வளவு முட்டாள்தனமோ அதுபோலத்தான் இந்த மதத்தினர் இப்படித்தான் பேசுவார்கள் என்று கற்பிப்பதும் முட்டாள்தனம்தான். 

மூன்று பேர் கலந்துரையாடல் செய்கிறார்கள் என்ற சூழலில் இரு நபர்கள் காரசாரமான விவாதத்தில் ஈடுபடும்போது நடுநிலையில் நின்று ஒருவர் பேசினால்தான் எந்த விவாதத்தையும் ஒரு முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பதாலேயே கணேஷும் ரஹீம்பாயும் விவாதத்தில் ஈடுபடும்போது ஜோசப் என்கிற நபர் குறுக்கிட்டு நடுநிலையாக பேசுவது போல் அமைத்திருந்தேன். 

இந்த விவாதத்தில் என்னுடைய பெயரைத் தாங்கி வரும் நபர் சொல்வது மட்டும்தான் என்னுடைய சொந்த கருத்து. மற்ற இருவரும் கூறுவதாக வருவதெல்லாம் என்னுடைய கருத்துக்கு மாற்று கருத்து ஏதேனும் இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதாக நானாக கற்பனை செய்து எழுதப்படுபவை. அதில் தவறுகள் இருக்க வாய்ப்புண்டு. ஆனால் கடந்த சில வாரங்களாக இந்த பதிவுகளை வாசித்துவரும் எவருமே இதில் வரும் கருத்துக்களுக்கு எதிராக எழுதியதில்லை இந்த அநாமதேய வாசகரைத் தவிர. 

இதே கருத்தை அவர் தன்னுடைய சொந்த பெயரில் இட்டிருந்தால் அதை வரவேற்றிருப்பேன். ஆனால் இப்படிப்பட்ட முட்டாள்தனமான கருத்துரையை தன் சொந்த பெயரில் இட யாருக்கும் துணிச்சல் வராதுதான். ஆகவேதான் 'அநானிமஸ்' என்கிற போர்வைக்குப் பின்னாலிருந்துக்கொண்டு எழுதியிருக்கிறார் போலும். 

சில வருடங்களுக்கு முன்பு இப்படித்தான் ஒரு கோழை பதிவாளர் 'போலி' என்ற பெயரில் பல பதிவர்களை இகழ்ந்து எழுதி சுமூகமாக இயங்கிவந்திருந்த தமிழ்மண தளத்தை நாறடித்துவந்தார். இப்போது அவருடைய பாணியில் வேறொரு கோழை உருவெடுத்திருக்கிறார் போலிருக்கிறது. 

*********





11 கருத்துகள்:

  1. “போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும், ஏற்றதொரு கருத்தினை எடுத்துரைப்பேன். எவர் வரினும் நில்லேன். அஞ்சேன்” என்ற கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி , இதற்கெல்லாம் முக்கியத்துவம் தராமல் தொடர்ந்து பதிவிடுங்கள் என்பேன் நான். மடியில் கனம் இல்லாதபோது வழியில் பயப்படத்தேவையில்லை. உங்களை அறிவோம் நாங்கள்!

    பதிலளிநீக்கு
  2. அய்யா சோர்ந்து விடாதீர்கள்! ஜாதி,மதம்,அரசியல்,இலங்கைத் தமிழர் – பற்றிய பதிவுகள் என்றால் அநானிகள் பாய்ந்து , பாய்ந்து வருவார்கள். இன்னும் சிலபேர். அவர்களுக்கு பெயர் இருக்கும். BLOGGER என்று இருக்கும்.ஆனால் அவர்களுக்கு PROFILE எதுவும் இருக்காது. அவர்களும் கிட்டதட்ட அநானிகள்தான். நீங்களாவது Comment moderation வைத்து இருக்கிறீர்கள். நான் அதுவும் வைத்துக் கொள்வது கிடையாது. ரொம்பவும் மோசம் என்றால் எத்தனை முறை அவர்கள் வந்தாலும் சலிக்காது நீக்கிவிட வேண்டியதுதான். யாரும் ஒன்றும் சொல்ல முடியாது. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  3. தான் சொல்லும் கருத்தை தன்னாலேயே ஒத்துக்கொள்ள முடியாததால்தான் இப்படி அனாமதேயமாகக் கருத்துக்கள் வருகின்றன என்று நினைக்கிறேன். அல்லது பெயர் வெளியில் சொல்ல முடியாத நிலையில் உள்ளவராக இருக்க வேண்டும். அவைகளுக்கு மதிப்பு கொடுத்து ஏன் நம் மன நிம்மதியைக் கெடுத்துக்கொள்ள வேண்டும்? அப்படி வரும் கருத்துக்களை ஓரம் கட்டிவிடுவதே நல்லது என்பது என் அபிப்ராயம்.

    பதிலளிநீக்கு
  4. தனக்கு பிடிக்காத கருத்துக்களை சகித்து கொள்ள முடியாத மோசமான மனநிலையை தமிழ்பதிவுலகில் காண கூடியதாக உள்ளது.
    இப்படியான பதிவுலகில் Comment moderation அவசியமிருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு

  5. அட இதுகெல்லாம் இப்படி விளக்கம் சொல்ல தேவையில்லைங்க... உங்க மனதி என்ன தோணுதோ அதை எழுதிகிட்டே போங்க... உங்களுக்கு அனானிமஸ் கருத்துதான் வருது நமக்கு மிரட்டல் கடிதம் எழுதுறாங்க.. சில நாடுகளில் எனது தளத்தை தீண்டதகாத தளமாக கருதி தடை செய்து இருக்கிறார்கள் அதெல்லாம் நமது நட்புக்களின் கைங்காரியம்தானுங்க..

    யார் எப்படியோ எனக்கு அதுக்கெல்லாம் கவலைப்பட நேரம் இல்லைங்க எனக்கு என்ன தோனுதோ அதை கிறுக்கி கொண்டே இருப்பேனுங்க...

    அதுமாதிரி நீங்களும் மற்றவர்களின் கருத்துக்கு செவி சாய்க்காமல் தொர்ந்து எழுதுங்கள்

    உங்களுக்கு நான் சொல்லும் அட்வைஸ் அல்லது ஐடியான்னே வைச்சுங்களேன்.. அதாவது திண்ணையை மிகவும் பெரிதாக வெளியிடாமல் பல சிறு பதிவுகளாக நீங்கள் தினமும் வெளியிடலாமே?

    பதிலளிநீக்கு
  6. உலகம் ஆயிரம் சொல்லட்டுமே ,உங்களுக்கு நீங்கள் நீதிபதி ...தொடர்ந்து உங்கள் கருத்துக்களை எழுதுங்க ஜோசப் ஜி !
    த ம 2

    பதிலளிநீக்கு
  7. பதிவுலகில் இதெல்லாம் சாதாரணம்தான் கண்டுக்க கூடாது.

    பதிலளிநீக்கு
  8. இந்த பதிவில் கருத்துரையிட்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

    நீங்கள் அனைவரும் கூறியுள்ளபடி அநாமதேயங்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லைதான். ஆனால் இதற்கு முன்பு வந்திருந்த கருத்துக்கள் என்னை தனிப்பட்ட முறையில் விமர்சித்ததில்லை. என்னுடைய கருத்துக்களை மட்டும் விமர்சித்து வந்திருந்தால் இப்போதும் அதை பொருட்படுத்தியிருக்க மாட்டேன். ஆனாலும் நீங்கள் அனைவரும் கூறியுள்ளபடி பதிவுலகில் இதெல்லாம் சகஜமப்பா என்ற மனநிலையோடு நம் போக்கில் போய்க்கொண்டிருக்க வேண்டும் போலிருக்கிறது.

    மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருடைய வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. எந்த அபிப்பிராயமும் யார் சொல்கிறார்கள் என்றே பார்க்கப் படுகிறது. மதம் கலந்த அரசியல் அதுவும் மும்மதத்தினரும் சேர்ந்து சர்ச்சை யிடுவதும் எந்தக் கருத்துச் சொன்னாலும் பையஸ் ஆகவே எண்ணப் படும். அவரவர் கருத்துகளுக்கு விளக்கம் தேவை இல்லை என்பதே என் கருத்து.எல்லோரும் சமம் சகோதரரே என்னும் எண்ணம் குறைந்து போயிருப்பதே அனாவசிய முரண்பாடுகளுக்குக் காரணம்

    பதிலளிநீக்கு
  10. இதற்கெல்லாம் கலங்கிவிடாதீர்கள்....

    சொல்பவர்கள் சொல்லட்டும்.... நமக்கு நமது நிலை தெரியும். அடுத்தவர்கள் சொல்வதற்கு கவலைப்பட்டு என்ன செய்ய.....

    தொடர்ந்து பதிவுகளைத் தர வாழ்த்துகள்.....

    பதிலளிநீக்கு
  11. G.M Balasubramaniam said...
    எந்த அபிப்பிராயமும் யார் சொல்கிறார்கள் என்றே பார்க்கப் படுகிறது. மதம் கலந்த அரசியல் அதுவும் மும்மதத்தினரும் சேர்ந்து சர்ச்சை யிடுவதும் எந்தக் கருத்துச் சொன்னாலும் பையஸ் ஆகவே எண்ணப் படும். அவரவர் கருத்துகளுக்கு விளக்கம் தேவை இல்லை என்பதே என் கருத்து.எல்லோரும் சமம் சகோதரரே என்னும் எண்ணம் குறைந்து போயிருப்பதே அனாவசிய முரண்பாடுகளுக்குக் காரணம் //

    மிகச் சரியாக சொன்னீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


    4:29 PM வெங்கட் நாகராஜ் said...
    இதற்கெல்லாம் கலங்கிவிடாதீர்கள்....

    சொல்பவர்கள் சொல்லட்டும்.... நமக்கு நமது நிலை தெரியும். அடுத்தவர்கள் சொல்வதற்கு கவலைப்பட்டு என்ன செய்ய.....

    தொடர்ந்து பதிவுகளைத் தர வாழ்த்துகள்.....//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு