06 ஜனவரி 2014

INSOMNIA என்றால் என்னங்க?

'இரவு உறக்கமின்மை' (insomnia) என்பது ஒரு வியாதி இல்லை என்றாலும் அதை அலட்சியப்படுத்துவது முறையல்ல என்கின்றனர் மருத்துவர்கள். நிம்மதியற்ற உறக்கம் (restless sleep) என்று துவங்கி நாளடைவில் உறக்கமின்மையில் (insomnia) கொண்டு விட்டுவிடும் . உறக்கமின்மைதான் நம் உடலில் ஏற்படும் பலவித நோய்களுக்கும் உபாதைகளுக்கும் மூல காரணம்  என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதுவே நாளடைவில் மனத்தளவிலும் பாதிப்பை ஏற்படுத்திவிடுமாம்!

சாதாரணமாக, அதிக உடல் உழைப்பு இல்லாதவர்களிடையில்தான் உறக்கமின்மை அதிகம் காணப்படுகிறது என்றாலும் நம்முடைய மூளை தொடர்ந்து அதிக அளவில் செயல்படும்போதும் (hyper-active) உறக்கமின்மை ஏற்படுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஒரு திடகாத்திரமான மனிதனுக்கு தினமும் குறைந்தபட்சம் எட்டு மணி நேர உறக்கம் தேவை. எட்டு மணி நேர உறக்கம் என்று கூறும்போது அது 'இரவு உறக்கத்தை' (Night sleep) மட்டுமே குறிக்கிறது. மேலும் இரவில் எட்டு மணி நேரம் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். பகல் நேர உறக்கத்தையோ அல்லது நாள் முழுவதும் அவ்வப்போது உறங்குவதையோ குறிப்பிடவில்லை.

ஆனால் இன்றைய அவசர உலகில் இத்தகைய தடையில்லா இரவு உறக்கம் (undisturbed night sleep) என்பது அனைவருக்கும் சாத்தியப்படுவதில்லை. குறிப்பாக நம்முடைய இளைய தலைமுறையினருக்கு - அதிலும் குறிப்பாக கணினி தொடர்பான அலுவல்களில் உள்ளவர்களுக்கு -  இது சாத்தியமில்லை. BPO போன்ற சேவை துறையில் பணியாற்றும் பல இளைஞர்கள் தொடர்ந்து இரவு நேரங்களில் பணியில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் வார இறுதி நாட்களில் தவிர இரவு உறக்கம் என்பது கற்பனையிலும் சாத்தியமில்லை. 

ஆகவே இந்த கட்டுரையில் நான் கூறவிருக்கும் எதுவும் BPO அல்லது இரவு நேரத்தில் (Night duty) பணிக்கு செல்பவர்களுக்கு பொருந்தாது. அவர்களைப் பொருத்தவரை உறக்கமின்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. இத்தகையோர் காலையில் அலுவலகத்திலிருந்து திரும்பியதும் உணவையும் மறந்து உறங்குவதைப் பார்த்திருக்கிறேன். 

இவர்களுடன் இன்றைய தலைமுறையினரையும் சேர்த்துக்கொள்ளலாம். இவர்களுக்கு வார நாட்களில் உறக்கத்தை சேமித்து வைத்து வார இறுதி நாட்களில் அவற்றை பயன்படுத்திக்கொள்ளும் வித்தையும் கைவந்த கலையாகிவிட்டது. மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிக் காலங்களில் வேறு வழியில்லாமல் துவங்கும் இப்பழக்கம் நாளடைவில் பழகிப்போய்விடுகிறது. ஆனால் இளம் வயதில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தாத இந்த பழக்கம் நடுத்தர வயதை எட்டும்போதே பல நோய்களுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது என்பதும் உண்மை. 

ஆனால் இரவு உறக்கத்தில் மூளைக்கும் உடலுக்கும் கிடைக்கக் கூடிய ஓய்வு பகல் உறக்கத்தில் கிடைப்பதில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆகவேதான் insomania என்றால் அது இரவு உறக்கமின்மையை மட்டுமே குறிக்கின்றது என்கின்றனர்.

உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஆழ்ந்த இரவு உறக்கம் கிடைக்க என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று சுருக்கமாக பார்க்கலாம்.

1. குறித்த நேரத்தில் உறங்கச் செல்ல வேண்டும். 

நம்முடைய உடலுக்குள் body clock என்ற ஒரு அம்சம் உள்ளது. அது மூளையின் ஒரு பாகத்தில் உள்ளதாம்.  மூளையின் இந்த பகுதிதான் அதை இயக்குகிறது என்று இதுவரையிலும் உறுதியாக சொல்லப்படவில்லை. ஆனால் அத்தகைய மணிக்காட்டி நம் உடலுக்குள் இருப்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதை நம்மால் பல சமயங்களிலும் உணர்ந்துக்கொள்ள முடியும். குறிப்பாக ஒருவர் தினமும் எட்டு மணிக்கு உறங்க செல்வது வழக்கமாகிவிட்டால் அவரையும் அறியாமல் எட்டு மணிக்கு கண்கள் அசத்தும். அவர் அந்த நேரத்தில் வீட்டில் இருந்தாலும் சரி அல்லது வெளியில் வேறெந்த அலுவலில் இருந்தாலும் சரி அவருடைய மூளை 'இது நீங்கள் உறங்கும் நேரம்' என்று சொல்லிவிடும். அதை பொருட்படுத்தாமல் அவர் செய்துக்கொண்டிருக்கும் அலுவலிலேயே குறியாக இருந்தால் ஒரு சில நிமிடங்களில் மூளை அதை புரிந்துக்கொள்ளும். எட்டு மணிக்கு உறங்கிக்கொண்டிருந்தவர் அடுத்து சில தினங்களுக்கு தொடர்ந்து ஒன்பது மணிக்கோ அல்லது பத்து மணிக்கோ உறங்கும் பழக்கத்தை துவங்குவாரேயாகில் மூளை அதை புரிந்துக்கொண்டு அன்றிலிருந்து உறக்க நினைவுறுத்தலை மாற்றிக்கொள்ளும். அதே போன்று இரவு உறக்கத்தின் இடையில் சிறுநீர் கழிக்கவோ அல்லது வேறெந்த தேவைகளுக்கோ ஒருவர் படுக்கையிலிருந்து எழுந்து செல்ல நேரிடும்போது அப்போது எத்தனை மணி என்று தெரிந்துக்கொள்ள படுக்கையறை கடிகாரத்தில் பார்த்தால் அந்த நேரத்தை மூளை குறித்துக்கொள்ளுமாம்! பிறகு அதே நேரத்தில் அடுத்த நாளும் விழிப்பு வருமாம்! சந்தேகமிருந்தால் பரீட்சித்து பாருங்கள்! இதைத்தான் 'உடல் மணிக்காட்டி' (body clock) என்கின்றனர்.  

2. உடல் உழைப்பு தேவை

அதிக உடலுழைப்பு உள்ளவர்களுக்கு உடல் அசதியால் உறக்கம் எளிதாக வந்துவிடுகிறது. அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு அவர்களுடைய அலுவல்களில் உடலை விட மூளையைதான் அதிகம் பயன்படுத்த வேண்டியுள்ளது. 

உடல் சோர்வைப் போலவே மூளையும் ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்குப் பிறகு சோர்வடைகிறது என்றாலும் அது உடல் சோர்வை ஏற்படுத்துவதில்லை. ஆகவேதான் இத்தகையோருக்கு இரவில் எட்டு மணி நேர தடையில்லா உறக்கம் சாத்தியப்படுவதில்லை. 

ஆகவேதான் உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு தினசரி ஒரு குறிப்பிட்ட அளவு உடற்பயிற்சி அல்லது நாற்பது நிமிட நடை ஆகியவை தேவை என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள். 

3. உணவு பழக்கம்

அதுமட்டுமல்லாமல் நம்முடைய இரவு நேர உறக்கம் நம்முடைய உணவுப் பழக்க வழக்கத்தையும் சார்ந்ததுதானாம். 

நம்முடைய சிறு வயது முதலே வயிறு நிறைய உண்ண வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றனர் நம்முடைய பெற்றோர். இப்போதும் பல பெற்றோர்கள் தங்களுடைய குழந்தை சற்று குண்டாக இருப்பதையே விரும்புகின்றனர். அத்தகைய குழந்தைகள்தான் ஆரோக்கியமான குழந்தை என்ற நினைப்பு இன்னும் நம்மில் பலரிடமும் உள்ளதை காண முடிகிறது. இந்த வயிறு முட்ட சாப்பிடும் பழக்கம் நம்முடைய மனதில் நன்றாக ஊன்றப்படுவதால் அதுவே பிற்காலத்தில் உறக்கமின்மைக்கும் அதன் விளைவாக சகல நோய்களுக்கும் மூல காரணமாகிவிடுகிறது. 

குறிப்பாக, இன்றைய நவீன அதிவேக யுகத்தில் ஒரு நாளின் முக்கிய உணவாக கருதப்படும் காலை உணவு (Break fast) பலராலும் புறக்கணிக்கப்படுவதை காண்கிறோம். பள்ளிப்பருவத்தில் துவங்கும் இந்த பழக்கம் கல்லூரி முடிக்கும்வரை மட்டுமல்லாமல் அலுவலகங்களுக்கு செல்லும் வயது வரையிலும் கூட தொடர்வதுண்டு. காலை உணவு அறவே புறக்கணிக்கப்படுகிறது என்றால் பள்ளி/கல்லூரி/அலுவலகங்களுக்கு கொண்டு செல்லும் மதிய உணவோ கையடக்க டப்பாவில்! கால் வயிறுக்கும் கூட போறாத நிலை. காலை மற்றும் மதிய உணவில் சேர்க்க முடியாத அனைத்தையும் இரவு உணவில் சேர்த்து உண்ணும் நம்முடைய பழக்கமே இரவு நேர உறக்கத்தை பாதிக்கும் முக்கிய காரணம் என்றாலும் மிகையாகாது. காலையில் ஒரு மகாராஜாவைப் போலவும் இரவில் ஒரு பிச்சைக்காரனைப் போலவும் உண்ண வேண்டுமாம்!

மேலும் இரவு உணவு என்பது நம்மில் பலருக்கும் படுக்கைக்கு செல்வதற்கு அரை மணி முன்புதான் சாத்தியப்படுகிறது. இரவு பத்து மணிக்கு வீடு திரும்பி உடை மாற்றி குளித்து உணவு மேசையில் அமர்ந்து உண்டு முடிக்கும்போது மணி பதினொன்றாகிவிடும். உண்டு முடித்து சில நிமிடங்கள் (அதிகபட்சம் செய்தியை பார்க்க அரை மணி நேரம்). அதன் பிறகு படுக்கைதான். 

சாதாரணமாக இரவில் நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆக குறைந்தது இரண்டு மணி நேரம் தேவைப்படுகிறது. அதிலும் spicy food  எனப்படும் காரசாரமான நம்முடைய உணவு செரிமானம் ஆக இன்னும் சற்று கூடுதல் நேரம் தேவை. ஆகவே பத்து மணிக்கு உறங்க செல்லும் பழக்கம் உள்ளவர்கள் குறைந்தபட்சம் எட்டு மணிக்காவது தங்களுடைய இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும். இது சாத்தியமில்லை என்பவர்கள் உறக்கம் வரவில்லையே என்று புலம்புவதில் பயனேதும் இல்லை. வயிற்றில் உள்ள உணவை செரிமானம் செய்யும் வேலையில் மும்முரமாக இருக்கும் நம்முடைய மூளையிடம் நான் உறங்க வேண்டும் என்று கட்டளையிட்டாலும் அது பொருட்படுத்தாது. இன்னும் சிலர் படுத்தவுடனே உறங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் உணவுடன் சேர்த்து மதுவையும் அருந்துவார்கள். மதுவின் தாக்கம் மூளையின் செயல்பாட்டையும் பாதிப்பதால் உடனே உறக்கம் வந்துவிடும் என்பது உண்மைதான். ஆனால் மதுவின் தாக்கம் குறைந்ததும் மீண்டும் மூளை விழித்தெழுந்து உணவை ஜீரணிக்கும் வேலையில் இறங்கும். 

நம்முடைய உறக்கமும் கலைந்துவிடும். அப்புறம் சிவராத்திரிதான். 

நாளை நிறைவுபெறும். 

19 கருத்துகள்:

  1. சுருக்கமாக சொன்ன மூன்றுமே மனதில்... கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்துகள்... அதிலும் இரண்டாவதில் உடலுழைப்பு உள்ளவர்களுக்கு பிரச்சனை இல்லை... மற்றவர்களுக்கு நடைப்பயிற்சி சிறந்தது... தூரத்தை சொல்லாமல் நேரத்தை சொன்னது அருமை...

    பதிலளிநீக்கு
  2. தூக்கம் இல்லாவிட்டால் எழுந்து புத்தகம் படித்தால் பிறகு தூக்கம் தானே வந்து விடுகிறது.இது என் அனுபவம் .

    பதிலளிநீக்கு
  3. Insomnia என்பதை இரவு உறக்கமின்மை என்பதைவிட உறக்கமின்மை என்றே சொல்லலாம். இதை துயிலொழிவு என்றும் சொல்வார்கள். உறக்கமின்மை பற்றி விரிவாக சொன்னமைக்கு நன்றி. .

    உடல் மணிக்காட்டி என்று ஒன்று இருப்பது உண்மைதான். பல தடவை இரவில் இரயில் பயணம் செய்யும்போது காலை 4 மணி அலல்து 5 மணிக்கு எழவேண்டும் என நினைத்து கைப்பேசியில் அலாரம் வைத்தாலும் அந்த நேரத்திற்கு விழிப்பு வருவதை உணர்ந்திருக்கிறேன். இது நம்முடைய மூளை நாம் விழிக்க விரும்பும் நேரத்தை குறித்துக்கொள்வதால் தான் என்பது சரியே.

    உறக்க நேரத்தைப் பொறுத்தவரை 6.5 மணியிலிருந்து 7.5 மணி வரையான உறக்கமே நீண்ட ஆயுளைக் கொடுப்பதாகவும், 6.5 மணிக்கு குறைவாக உறங்குவதும் 8 மணி நேரமும் அதற்கு மேலும் உறங்குபவர்களின் ஆயுள் குறைவு என்றும் சிலர் சொல்கிறார்கள். இதுபற்றி ஏதேனும் ஆராய்ச்சி முடிவுகள் உண்டா?

    உணவு பழக்கம் பற்றி தங்களது கருத்து ஏற்புடையதே. வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் சொல்லுவார். ‘பசித்திரு’ என்று. அதாவது ‘வயிறு முட்ட சாப்பிடாமல் இரு.’ என்ற பொருளில்.

    அடுத்த பதிவுக்குக்காக காத்திருக்கிறேன் மேலும் பல புதிய தகவல்களுக்காக.

    பதிலளிநீக்கு

  4. /நம்முடைய மூளை தொடர்ந்து அதிக அளவில் செயல்படும்போதும் (hyper-active) உறக்கமின்மை ஏற்படுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்/ இது என் போன்ற வயதானவர்களுக்குப் பொருந்துமென்று தோன்றுகிறது. ஆனாலும் ஒரு சந்தேகம் மூளை அதிகம் வேலை செய்வதால் உறக்கமின்மையா அல்லது உறக்கமின்மையின் போது மூளை அதிகம் வேலை செய்கிறதா.? வாரம் ஷிஃப்ட் மாறும் பணியில் எந்த ஒரு நியதிக்கும் பழக்கப்படுத்த முடியாத சூழ்நிலையில் மனைவியைப் பிரிந்து இருந்த அவல நிலையை பாட்டில் எழுதி இருக்கிறேன் பிரிவின் வாட்டம்
    gmbat1649.blogspot.in/2010/08/pirivin-vaattam.html

    பதிலளிநீக்கு
  5. பல இளைஞர்களுக்கு [BPO] பணியில் இல்லாதவர்களுக்கு கூட இப்பொதெல்லாம் இந்த தூக்கமின்மை வந்துவிட்டது.

    நல்ல கட்டுரை. மேலும் படிக்க காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி. இதை இளைய தலைமுறைகளிம் கொடுத்து படிக்க சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. என்னங்க பதிவு போட்டு இந்த மதுரைத்தமிழனுக்கு ஆயுள் கம்மி என்று சொல்லீட்டீங்க...

    பதிலளிநீக்கு
  8. நானும் இப்படித்தான் உறக்கம் வராமல் தவித்துக்கொண்டிருக்கிறேன். நல்ல ஆலோசனைகள். நன்றி.

    பதிலளிநீக்கு
  9. டீவி வந்த பிறகு, தூக்கம் என்பது இப்போது இரவு 11 மணிக்கு மேல் என்று ஆகி விட்டது. Body Clock சிஸ்டத்தைப் பற்றி நன்கு தெளிவாகச் சொன்னீர்கள்! இதன் தொடர்ச்சியை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா5:57 AM

    வணக்கம்
    ஐயா..

    அனைவருக்கும் அறியவேண்டிய தகவல் அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

  11. திண்டுக்கல் தனபாலன் said...
    சுருக்கமாக சொன்ன மூன்றுமே மனதில்... கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்துகள்... அதிலும் இரண்டாவதில் உடலுழைப்பு உள்ளவர்களுக்கு பிரச்சனை இல்லை... மற்றவர்களுக்கு நடைப்பயிற்சி சிறந்தது... தூரத்தை சொல்லாமல் நேரத்தை சொன்னது அருமை...

    பெரும்பாலும் சொந்த அனுபவம்தான். இளம் வயதில் இவற்றில் பலவற்றை கடைபிடித்ததில்லை. அதன் விளைவை இப்போது அனுபவிக்கிறேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு

  12. அபயாஅருணா said...
    தூக்கம் இல்லாவிட்டால் எழுந்து புத்தகம் படித்தால் பிறகு தூக்கம் தானே வந்து விடுகிறது.இது என் அனுபவம் .//

    எனக்கு இது பலனளித்ததில்லை. ஒன்றுமே செய்யாமல் கண்களை மூடி அமர்ந்திருப்பதுதான் எனக்கு பலனளிக்கிறது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    பதிலளிநீக்கு

  13. வே.நடனசபாபதி said...
    Insomnia என்பதை இரவு உறக்கமின்மை என்பதைவிட உறக்கமின்மை என்றே சொல்லலாம். இதை துயிலொழிவு என்றும் சொல்வார்கள். உறக்கமின்மை பற்றி விரிவாக சொன்னமைக்கு நன்றி. . //

    உறக்கம் என்றாலே அது இரவு உறக்கத்தைத்தானே குறிப்பிடுகிறது. ஆகவேதான் அதை சுட்டிக்காட்டி சொன்னேன். உங்களுடைய கருத்துக்கு நன்றி.

    உடல் மணிக்காட்டி என்று ஒன்று இருப்பது உண்மைதான். பல தடவை இரவில் இரயில் பயணம் செய்யும்போது காலை 4 மணி அலல்து 5 மணிக்கு எழவேண்டும் என நினைத்து கைப்பேசியில் அலாரம் வைத்தாலும் அந்த நேரத்திற்கு விழிப்பு வருவதை உணர்ந்திருக்கிறேன். இது நம்முடைய மூளை நாம் விழிக்க விரும்பும் நேரத்தை குறித்துக்கொள்வதால் தான் என்பது சரியே. //

    நானும் பல வருடங்களாக அலாரம் வைக்காமலேயே எழுந்து பழகிப்போனவன். ஆனாலும் சில சமயங்களில் கோட்டை விட்டதும் உண்டு.


    உறக்க நேரத்தைப் பொறுத்தவரை 6.5 மணியிலிருந்து 7.5 மணி வரையான உறக்கமே நீண்ட ஆயுளைக் கொடுப்பதாகவும், 6.5 மணிக்கு குறைவாக உறங்குவதும் 8 மணி நேரமும் அதற்கு மேலும் உறங்குபவர்களின் ஆயுள் குறைவு என்றும் சிலர் சொல்கிறார்கள். இதுபற்றி ஏதேனும் ஆராய்ச்சி முடிவுகள் உண்டா?//

    குறைந்தபட்சம் இத்தனை மணி நேர உறக்கம் தேவை என்றுதான் ஆராய்ச்சிகள் சொல்கின்றனவே தவிர இதற்கு மேல் உறங்கினால் பாதகங்கள் ஏதும் உள்ளதாக கூறவில்லை. தேடிப்பார்க்க வேண்டும்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

  14. G.M Balasubramaniam said...

    /நம்முடைய மூளை தொடர்ந்து அதிக அளவில் செயல்படும்போதும் (hyper-active) உறக்கமின்மை ஏற்படுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்/ இது என் போன்ற வயதானவர்களுக்குப் பொருந்துமென்று தோன்றுகிறது.//

    சர்வீசில் இருப்பவர்களுக்கு மூளை இன்னும் ஆக்டிவாக இருக்கும். இன்று செய்த தவறுகளால் ஏற்படும் குற்ற உணர்வு அடுத்த நாளை அவர்கள் சந்திக்கவிருக்கும் challenges என மூளையும் மனதும் உழன்றுக்கொண்டே இருக்கும். அதாவது எதையும் சரியாக, குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு. என்ன நடந்தாலும் கவலையில்லை என்கிற don't care attitude உள்ளவர்கள் நன்றாகவே உறங்குவார்கள்.

    ஆனாலும் ஒரு சந்தேகம் மூளை அதிகம் வேலை செய்வதால் உறக்கமின்மையா அல்லது உறக்கமின்மையின் போது மூளை அதிகம் வேலை செய்கிறதா.? வாரம் ஷிஃப்ட் மாறும் பணியில் எந்த ஒரு நியதிக்கும் பழக்கப்படுத்த முடியாத சூழ்நிலையில் மனைவியைப் பிரிந்து இருந்த அவல நிலையை பாட்டில் எழுதி இருக்கிறேன் பிரிவின் வாட்டம்
    gmbat1649.blogspot.in/2010/08/pirivin-vaattam.html //

    படித்துவிட்டு சொல்கிறேன் சார். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

  15. 5:22 PM
    வெங்கட் நாகராஜ் said...
    பல இளைஞர்களுக்கு [BPO] பணியில் இல்லாதவர்களுக்கு கூட இப்பொதெல்லாம் இந்த தூக்கமின்மை வந்துவிட்டது.//

    உண்மைதான். தூக்கமின்மை என்பது இன்றைய universal பிரச்சினை.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

  16. Avargal Unmaigal said...
    பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி. இதை இளைய தலைமுறைகளிம் கொடுத்து படிக்க சொல்ல வேண்டும்.//

    அவர்களுக்கு இதுவெல்லாம் தெரியாதா என்ன? ஆனாலும் உறக்கத்தைவிட career தானே அவர்களுக்கு முக்கியமாக தெரிகிறது?

    Avargal Unmaigal said...
    என்னங்க பதிவு போட்டு இந்த மதுரைத்தமிழனுக்கு ஆயுள் கம்மி என்று சொல்லீட்டீங்க...//

    உங்களுக்கு மட்டுமில்லீங்க சரியான தூக்கம் இல்லாத எல்லாருக்குமே ஆய்ள் கம்மிதான் :))

    பதிலளிநீக்கு
  17. எம்.ஞானசேகரன் said...
    நானும் இப்படித்தான் உறக்கம் வராமல் தவித்துக்கொண்டிருக்கிறேன். நல்ல ஆலோசனைகள். நன்றி.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    பதிலளிநீக்கு

  18. தி.தமிழ் இளங்கோ said...
    டீவி வந்த பிறகு, தூக்கம் என்பது இப்போது இரவு 11 மணிக்கு மேல் என்று ஆகி விட்டது. Body Clock சிஸ்டத்தைப் பற்றி நன்கு தெளிவாகச் சொன்னீர்கள்!//

    வயது ஏற ஏற உறக்கம் குறைந்துவிடும் என்பார்கள். என்னுடைய மனைவி எத்தனை மணிக்கு உறங்கச் சென்றாலும் காலையில் 4 மணிக்கு எழுந்துவிடுவார்கள். அதற்கு மேல் அவர்களுடைய body clock அவர்களை உறங்க விடுவதில்லையாம்!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  19. 2008rupan said...
    வணக்கம்
    ஐயா..

    அனைவருக்கும் அறியவேண்டிய தகவல் அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    பதிலளிநீக்கு