31 டிசம்பர் 2013

என் புத்தாண்டு உறுதிமொழிகள்!!

இதோ மீண்டும் ஒரு வருடம் என்னைக் கடந்து போகிறது. 

கடந்து சென்ற வருடம் என்னை எவ்வாறெல்லாம் பாதித்தது. என்னென்ன அனுபவங்களை தந்தது என்றெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். 

பணியில் இருந்த காலத்தில், அதாவது கணினி என்கிற ஒரு வினோதம் வங்கியில் அடியெடுத்து வைத்திராத காலத்தில், ஆண்டு இறுதி என்பதே ஒரு சிம்ம சொப்பனமாக இருந்து வந்தது. ஆண்டு இறுதி கணக்கு முடிக்க டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவையும் கடந்து பணியாற்ற வேண்டிய நிர்பந்தத்தில் இருந்ததுண்டு. ஆனாலும் வருட இறுதி ஜெனரல் லெட்ஜர் பாலன்ஸ் ஆகிவிட்டது என்கிற ஒரு மனநிம்மதியுடன் புத்தாண்டின் விடியற்காலையில் சில்லென்று காற்று முகத்தில் பட ஸ்கூட்டரில் பாரிஸ் கார்னரில் இருந்து புரசைவாக்கத்திலிருந்த வீட்டிற்கு வந்த சுகமான அனுபவமும் நினைவுக்கு வருகிறது.

பிறகு புகுந்த கணினி அலுவலக வாழ்க்கையை மட்டுமல்லாமல் குடும்ப வாழ்க்கையையும் கூட இயந்திரமயமாக்கிவிட்டது. இப்போதெல்லாம் நாம் எதையுமே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்கிற சவுகரியம் - அது சில சமயங்களில் அசவுகரியமாகவும் ஆகிப்போகிறது. மனைவியின் செல் நம்பரைக் கூட நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை - எத்தனை தொலைவில் உள்ளவர்களுடனும் நொடியில் தொடர்புக்கொள்ளக் கூடிய சவுகரியம் - இதிலும் அசவுகரியம் உள்ளதே! பிறந்த நாள் வாழ்த்தை சொல்ல கடைசி நிமிடம் வரையிலும் காத்திருந்து சொல்ல முயலும்போது busy tone இடையில் வந்து பிறகு இணைப்பு கிடைக்கும்போது இப்பத்தான் உங்களுக்கு சொல்ல தோனிச்சா என்கிற மகள்களின் எரிச்சலையும் சம்பாதித்து கொடுத்திருக்கிறது - இப்படி பல சவுகரியங்கள் இருந்தாலும் இவை முன்பு தனிமனித உறவுகளில் இதுவரை இருந்து வந்த நெருக்கத்தை, அன்னியோன்யத்தை குறைத்துவிட்டது என்றே தோன்றுகிறது.

இணையம் முதன் முதலில் நம் வாழ்வில் நுழைந்தபோது அது ஒரு புரியாத புதிராகத்தான் இருந்தது. ஆனால் அதுவே நாளடைவில் ஒரு அலாதி அனுபவமாக மாறி இப்போது அதுவே நம்முடைய நாட்களின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக்கொள்கிறதை காண முடிகிறது.

இந்த இணைய அடிமைத்தனம் இன்று பல தனிமனித உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது. 

கடந்த பத்து நாட்களாக மலேசியாவிலிருந்து வந்திருந்த மகள் மற்றும் பேத்தியுடன் நேரம் செலவிடவேண்டும் என்பதற்காகவே இணையத்திற்கு வருவதை நிறுத்தியிருந்தேன். ஆனால் அது அத்தனை எளிதாக இருக்கவில்லை. எதையோ பறிகொடுத்துவிட்டதுபோன்ற எண்ணம் மனதில் இருந்துக்கொண்டே இருந்தது. அந்த அனுபவம் எனக்கே வியப்பாக இருந்தது. நான் எதற்கும் எந்த சூழலும் அடிமையாகிவிடுபவன் இல்லை என்று எண்ணியிருந்த எனக்கு என்னுடைய இந்த பலவீனம் ஒருவித அச்சத்தைக் கூட அளித்தது. 

ஆனால் முதல் இரண்டு நாட்களுக்குப் பிறகு பேத்தியும் என்னுடன் நெருங்கி வந்துவிட நேரம் போனதே தெரியாமல் போனது. இணையத்திற்கு வெளியிலும் வாழ்க்கை இருப்பதை எனக்கு உணர்த்தியது  இரண்டு வாரங்களுக்குப் பிறகு நேற்று மாலை அவர்கள் திரும்பிச் சென்றதும் மீண்டும் ஒரு வெறுமை. நானும் என்னுடைய மனைவியும் தனித்துவிடப்பட்டதுபோன்ற ஒரு உணர்வு. மனைவிக்கு சமையல், தையல், தோட்டம் என்ற பல்வேறு அலுவல்கள். ஆனால் எனக்கு? இணையத்தை தவிர வேறு எதுவும் இல்லை என்பது போன்றதொரு வெறுமை. இத்தகைய எண்ணம் எனக்கு மட்டும்தானா அல்லது பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட அனைவருக்குமே உள்ளதா என்று தெரியவில்லை. 

இதிலிருந்து விடுபட வேண்டும். ஆகவே கடந்த வருடம் இணையத்தில் இருந்த நேரத்தில் பாதியளவு மட்டுமே இந்த வருடம் செலவிட வேண்டும் என்று எண்ணியுள்ளேன். இது அத்தனை எளிதல்ல என்றாலும் இதை சாத்தியமாக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். இது நல்ல முடிவுதானா இதை தொடர்ந்து கடைபிடிக்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இணைய பிரவேசத்தால் நின்றுபோயிருந்த வாசிக்கும் பழக்கத்தை மீண்டும் தொடர வேண்டும். மறந்துபோயிருந்த நண்பர்களை  தேடிப்பிடிக்க வேண்டும், தொடர்பற்று போயிருந்த சொந்தங்களுடனான உறவுகளை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். 

இவைதான் எதிர்வரும் புத்தாண்டு உறுதிமொழிகள்.

இணைய நண்பர்கள் அனைவருக்கும் என் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 


16 டிசம்பர் 2013

அர்விந்த் கெஜ்ரிவால்தான் நாட்டிலேயே நேர்மையானவரா?

அர்விந்த் கெஜ்ரிவாலை அறியாத இந்தியர்களே இருக்க முடியாது என்கிற அளவுக்கு மிகக் குறுகிய காலத்தில் மிகப் பிரபலமடைந்தவர் அவர்.

சாமான்யர்கள் கட்சி என்ற ஒரு அரசிய கட்சியை அவருடைய குரு என்று கருதப்படும் அன்னா ஹசாரேவின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் துவங்கி நடந்து முடிந்த தில்லி சட்டசைபை தேர்தலில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களைப் பெற முடியாவிடினும் வேறு எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாத அளவுக்கு கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றவர். 

நிபந்தனையற்ற ஆதரவை அளிக்க முன்வருகிறோம் என்று காங்கிரஸ் கட்சி முன்வந்தபோதும் உங்களுடைய ஆதரவை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் இதுதான் எங்கள் நிபந்தனைகள் என்று பல நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை முன்வைத்தவர். 

அது போதாதென்று தேர்தலில் மிகப்பெரிய கட்சியாக தெரிவு செய்யப்பட்ட பிஜேபியையும் கூட இந்த நிபந்தனைகளுக்கு உங்கள் பதில் என்ன என்று கேட்டு மிரட்டியவர். 

எங்களுடைய வாக்காளர்கள் எங்களை தனியாக அரசு அமைக்கும் அளவுக்கு வாக்களிக்கவில்லை, ஆகவே எதிர்கட்சியாக செயல்படவே விரும்புகிறோம். யாரிடமும் ஆதரவும் கோர மாட்டோம், யாருக்கும் ஆதரவும் அளிக்க மாட்டோம் என்ற Dog in the manger மாதிரியான முடிவை எடுத்து அதில் விடாப்பிடியாக நிற்பவர். 

எங்களைப் போன்ற சித்தாந்தம் உடைய நேர்மையான அரசியல்வாதிகள் (அதாவது தில்லி தேர்தலில் ஜெயித்தவர்கள்) வேறெந்த கட்சியிலிருந்தாலும் (காங்கிரஸ், பிஜேபி என்று கொள்க) தங்களுடைய கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு எங்களுடைய கட்சிக்கு வரலாம் என்றும் அறிக்கையிட்டவர்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவுக்கு பிரபலமானவர் அர்விந்த் கெஜ்ரிவால்.

இவருடைய அரசியல் வாழ்க்கையில் சொற்பமே காலமே கடந்துள்ளது என்றாலும் ஒரு கைதேர்ந்த அரசியல்வாதி என்று நிரூபித்துக் காட்டியவரும் இவரே. 

இவருடைய பின்னணியை (Background) சற்று ஆராய்ந்தால் இவருடைய இத்தகைய போக்குக்கான காரணங்கள் விளங்கும் என்பதால் இணையதளத்தை ஆய்வு செய்ததிலிருந்து கிடைத்த தகவல்கள்:

இவர் பிறந்தது ஆகஸ்ட் பதினாறாம் நாள். அதாவது சுதந்திர தினத்திற்கு அடுத்த நாள். ஆங்கில நட்சத்திர வரிசையில் பார்த்தால் சரியான சிம்ம ராசிக் காரர். பிறந்த நட்சத்திரத்தின் விவரம் எதுவும் கிடைக்கவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த பலருக்கும் patriotism எனப்படும் நாட்டுப்பற்று சற்று அதிகமாக காணப்படுவதைக் காண முடிகிறது. (நம்முடைய ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சுதந்திரத் தினத்தன்று பிறந்தவர். ஆகவேதான் அவருடைய பல  திரைப்படங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்துவதாகவே இருப்பதை பார்த்திருக்கிறோம். பழம்பெரும் ஹிந்தி திரைப்பட நடிகர் மனோஜ்
குமாரும் இந்த மாதத்தில் (அதாவது சிம்மராசிக்காரர்கள் (Lion) பிறக்கும் மாதமான 22 ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் 21 வரையிலான நான்கு வாரங்கள்) பிறந்தவர்தான். Mr. Bharat உட்பட பல தேசபக்தி படங்களை எடுத்தவர்!  

ஆகவே கெஜ்ரிவாலும் அதிக அளவிலான தேசபக்தியும் ஒரு சிம்ம ராசிக்காரருடைய அனைத்து குணநலன்களும் கலந்து ஒரு புரியாத புதிராக (enigma) இருப்பதில் வியப்பேதும் இல்லை. 

அவருடைய கட்சிக்கு சாமான்யர்கள் கட்சி என்று பெயர் வைத்திருந்தாலும் அவர் BITS, Pilaniயில் படித்து பொறியாளர் பட்டம் பெற்ற, பொருளாதார ரீதியில் வசதிவாய்ந்த தந்தைக்குப் பிறந்தவர். ஒரு இந்திய சாமான்யன் படித்து ஆளாக படும் சிரமங்கள் எதையும் அனுபவிக்காத Born with a silver spoon ரகம். அவரும் IIT Karakpurஇல் படித்த பொறியாளர்தான். படித்து முடித்த கையோடு டாட்டா நிறுவனத்தில் வேலை கிடைத்தாலும் படித்த படிப்புக்கு சிறிதும் பொருத்தமில்லாத அரசு நிர்வாக பணியில் நுழைய விரும்பி இரண்டே ஆண்டுகளில் அதை துறந்தவர் அவர். IAS அதிகாரியாக முடியாமல் IRS அதிகாரியானவர். அங்கும் நிலைக்க மனம் இடம் கொடுக்கவில்லை. பணியில் இருந்தபோதே மேல் படிப்புக்கென்று விடுப்பில் சென்றவர். ஆனால் அவரை இழக்க விரும்பாத அரசு ஊதியத்துடனான விடுப்பு வழங்குகிறோம் என்றது, ஒரேயொரு நிபந்தனையுடன். அதாவது படிப்பு முடிந்து திரும்பியதும் குறைந்த பட்சம் மூன்றாண்டுகள் பணியாற்ற வேண்டும். இல்லையென்றால் விடுப்புக் காலத்தில் அரசிடம் இருந்து பெற்ற ஊதியத்தை திருப்பிச் செலுத்த வேண்டும்.

அரவிந்த் படிப்பு முடிந்து திரும்பி வந்தார். ஆனால் அவரால் பணியில் நிலைத்து நிற்க முடியவில்லை. இதுவும் சிம்ம ராசிக் காரர் குணம்தான். எதிலும் திருப்தியடையாத மனநிலை. யாருக்கும் பணிந்து செல்ல முடியாத குணநலன். பல்லைக் கடித்துக்கொண்டு பதினெட்டு மாதங்கள் பணியாற்றிவிட்டு மீதமிருந்த பதினெட்டு மாதங்களுக்கு ஊதியமில்லா விடுப்பில் (Loss of Pay leave of absence) சென்றார். அவர் கணக்குப்படி முப்பத்தியாறு மாதங்கள் அதாவது அரசு விதித்த மூன்றாண்டு பணிக்காலக் கெடு முடிந்துவிட்டது. ஆனால் அரசு உத்தியோகம் ஆனாலும் தனியார் உத்தியோகம் ஆனாலும் ஊதியமில்லா விடுப்பு சர்வீஸாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்பதை வேண்டுமென்றே மறந்துப்போனார். இதிலும் தான் ஒரு சிம்மராசிக் காரர் என்பதை காட்டினார். என்னை எதுவும் கட்டுப்படுத்தாது என்ற மனப்பாங்கு. விதியை மீறிவிட்டீர்கள் ஆகவே பெற்ற ஊதியத்தை திருப்பிச் செலுத்துங்கள் என்றது அரசு. 

ஆனால் கெஜ்ரி ஒத்துக்கொள்ளவில்லை. ஊழலுக்கு எதிராக புதியதொரு அணியைத் துவக்கியிருந்த அவருடைய குரு அன்னா ஹசாரேயுடன் தன்னை இணைத்துக்கொண்டு செயல்படத் துவங்கியதால் தன்னை அரசு பழிவாங்குகிறது என்று சொந்தப் பிரச்சினையை அரசியலாக்கினார். இதுவும் ஒருவகையில் ஊழல்தான், கையாடல்தான் என்பதை சவுகரியமாக மறந்தார். ஆனாலும் அரசு விடவில்லை. பிறகு நண்பர்கள், தெரிந்தவர்களிடத்திலிருந்தெல்லாம் கடன் வாங்கி அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தினார். 

படித்த படிப்புக்கு பொருத்தமான வேலை டாடா நிறுவனத்தில் கிடைத்தும் அதை உதறிவிட்டு அரசு பணியில் நுழைந்து பிறகு அதுவும் சலித்துப்போய் பொதுஜன சேவையில் இறங்கி பிறகு ஊழலை ஒழிக்க போராட்டங்கள் நடத்தி, அன்னா ஹசாரேவின் ஆத்மார்த்த சீடராக சிறிது காலம் அவருடைய போராட்டங்களில் கலந்துக்கொண்டு பிறகு அந்த கூட்டத்திலிருந்த ஒரு சிலருடன் ஒத்துப் போக முடியாமல் அதிலிருந்து விலகி தனக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு மீண்டும் பொதுஜன சேவையில் இறங்கி பிறகு அதையே ஒரு அரசியல் கட்சியாக உருவாக்கி பல நல்ல, சில சில்லறைத்தனமான போராட்டங்களையெல்லாம் நடத்தி இப்போது தில்லி சட்டமன்ற தேர்தலில் மூன்று முறை தொடர்ந்து முதலமைச்சராக இருந்தவரை அவருடைய சொந்த தொகுதியிலேயே துணிச்சலுடன் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கெஜ்ரிவால்.

இத்தனைக் குறுகிய காலத்தில் இத்தனை முறை தன்னுடைய வாழ்க்கைப் பாதையை மாற்றிக்கொண்டாலும், இத்தனை சாதனைகளைப் படைத்திருந்தாலும் அவருடைய பிறப்பு குணம் அவரை நிம்மதியாக இருக்கவிடப் போவதில்லை என்பது உறுதி. அவர் எத்தனை நேர்மையான எண்ணங்களைக் கொண்டிருந்தாலும் தன்னை விட்டால் இந்த உலகில் குறைந்தபட்சம் இந்திய அரசியலில், நேர்மையாளன் இல்லை என்பதுபோல் உள்ள அவருடைய பேச்சும் நடவடிக்கைகளும் அவரை ஏதாவது ஒரு சிக்கலில் சிக்க வைத்துக்கொண்டே இருக்கும். அதற்கு அவருடைய அளவிட முடியாத ஈகோவும் ஒரு முக்கிய காரணம். 

காங்கிரஸ் ஒரு ஊழல்வாதிகளின் கட்சி ஆகவே அதனுடைய ஆதரவைப் பெற்று ஆட்சியமைப்பதில் எவ்வித பொருளும் இல்லை என்ற அவருடைய நிலைப்பாட்டில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் அதை எடுத்துச் சொன்ன விதம்தான் அவரை ஒரு நடைமுறைக்கு சாத்தியமில்லாத மனிதர் (Impractical) என்று காட்டுகிறது.  

மேலும் நேர்மை (Honesty) என்பது ஒன்றும் புனிதமல்ல (Virtue). நாம் எல்லோருமே ஒருவகையில் நேர்மையாளர்கள்தான். ஆனால் எந்த அளவுக்கு என்பதில்தான் வேறுபாடே. நான்  அப்பழுக்கில்லாதவன் என்று யாராலும் கூறிக்கொள்ள முடியாது. பைபிளிலும் கூட ஏசுபிரானை ஒருவர் நல்லவரே என்று அழைத்தபோது இறைவன் மட்டுமே நல்லவர் என அழைக்கப்படத் தகுதியுள்ளவர் என்று பதிலளித்தார். இறைவனை விட்டால் தன்னையறியா பாலகனை கூறலாம். நிச்சயம் கெஜ்ரிவால் தன்னை இவ்விருவருடனும் ஒப்பிட்டுக்கொள்ள முடியாது என்று கருதுகிறேன். 

ஆகவே அவர் தன்னைத்தானே ஏற்றிவைத்துக்கொண்டுள்ள உயர்ந்த பீடத்திலிருந்து (High pedestal) சற்று இறங்கி வந்து தன்னையும் தன்னுடைய கட்சியையும் நம்பி வாக்களித்த தில்லி மக்களுக்கு உருப்படியாக எதையாவது செய்ய நினைத்தால் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கூறும் காங்கிரசின் ஆதரவைப் பெற்று அரசு அமைக்க முன்வர வேண்டும். 

காங்கிரசின் ஆதரவை அவராக கேட்டு பெறவில்லை. ஆகவே அவர்களுடைய ராகத்திற்கு ஆடவேண்டிய தேவையும் இல்லை. தன்னுடைய கட்சி தேர்தலுக்கு முன்பு என்னவெல்லாம் செய்வதாக வாக்களித்தாரோ அதையெல்லாம் அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து தாராளமாக செய்யலாம். நிபந்தனையற்ற ஆதரவு என்று சொல்லிக்கொண்டு ஏதேனும் ஒரு காலக்கட்டத்தில் காங்கிரஸ் ஏதேனும் நிபந்தனைகளை முன்வைத்தால் அப்போது கெஜ்ரிவால் எவ்வித தயக்கமும் இல்லாமல் முதலமைச்சர் பதவியை தூக்கியெறிந்துவிட்டு சட்டசபையைக் கலைத்துவிடச் சொல்லி ஆளுநருக்கு பரிந்துரைக்கலாமே. அல்லது எவ்வித முகாந்திரமும் இல்லாமல் காங்கிரஸ் தன்னுடைய ஆதரவை விலக்கிக்கொண்டாலும் அது மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவை அதிகமாக்குமேயல்லாமல் நிச்சயம் குறைத்துவிட முடியாது. 

ஆனால் திருவிளையாடல் நாகேஷைப் போல எனக்கு கேள்விகளைக் கேட்கத்தான் தெரியும் என்கிற பாணியில் தொடர்ந்தால் இவருக்கு போராட்டங்கள் நடத்தத்தான் தெரியும் ஆக்கபூர்வமாக ஒன்றும் செய்யத் தெரியாது போலிருக்கிறது என்று மக்கள் நினைத்துவிட வாய்ப்புள்ளது.  

***********

12 டிசம்பர் 2013

மன்மோகன் சிங்கின் பதவி பறிக்கப்படுமா?

திரு. மன்மோகன் சிங் பல ஆண்டுகளாக பல்வேறு அரசு பதவிகளில் பணியாற்றி அவருடைய பொருளாதார அறிவுக்கும் திறனுக்கும் பாராட்டப்பட்டவர்தான் என்றாலும் கடந்த பத்தாண்டுகளாக தனக்குக் கீழ் பணியாற்றுபவர்களையும் - அமைச்சரவை சகாக்கள், தன்னுடைய இலாக்கா அதிகாரிகள் - தேசத்தையும் சரிவர வழிநடத்த தவறியதன் காரணமாக செயலற்ற பிரதமர் என்ற முத்திரையுடன் தன்னுடைய சுமார் இருபதாண்டு அரசியல் மற்றும் பொது வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளார்.



கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து பொருளாதாரத்தில் பட்டம் பெற்று உலகளவில் பொருளாதார மேதை, சிறந்த நிர்வாகி என்று ஏற்றுக்கொள்ளப் பட்ட மன்மோகன் சிங் முதன் முதலாக நாட்டின் நிதியமைச்சராக தேசிய அரசியலில் நுழைந்ததே யாரும் எதிர்பாராமல் நடந்ததுதான்.

1991ம் வருடம் ஜூன் மாதம் முதன் முதலாக நாட்டின் நிதியமைச்சராக அமர்த்தப்பட்டதை பிறகு பிபிசி நிரூபர் ஒருவருக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறுகிறார் சிங். 'நரசிம்ம ராவ் அவர்களின் முதன்மை காரியதரிசி என்னை நாட்டின் அடுத்த நிதியமைச்சராக தெரிவு செய்திருக்கிறார் என்று என்னிடம் தொலைபேசியில் கூறியபோது நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அடுத்த நாளே ராவ் அவர்கள் என்னை அழைத்து சற்று கோபத்துடன் உடனே ஜனாதிபதி இல்லத்திற்கு வந்து பதவியேற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியபோது என்னால் மறுக்க முடியவில்லை.'

ஆக, அவராக விரும்பி அரசியலுக்குள் நுழையவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. 

நாட்டின் நிதியமைச்சராக அவர் பதவியேற்றபோது நாட்டின் நிதிநிலமை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அந்த சூழலில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உலக நாணய நிதியத்தை (IMF) அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தனர் பிரதமர் ராவும் மன்மோகன் சிங்கும். நிதியம் தங்களுடைய கடனுதவி தேவையென்றால் அதற்கு தாங்கள் பரிந்துரைக்கும் அனைத்து பொருளாதார சீர்திருத்த முயற்சிகளையும் அமுல்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. அன்று வரை இந்தியாவில் நடைமுறையில் இருந்த உரிம கட்டுப்பாடுகள் (Licence Raj), அன்னிய நேரடி முதலீடுகள் மற்றும் அன்னிய வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்வதற்கு தடையாயிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தளர்த்த வேண்டும் என்றது நிதியம். 

பிரதமர் ராவ் அளித்த ஆதரவில் இந்த கட்டுப்பாடுகளை சிறிது சிறிதாக தளர்த்திய சிங் நாட்டின் வர்த்தகத்தை அன்னிய நிறுவனங்களுக்கு திறந்துவிட்டார். அதைத் தொடர்ந்து அரசின் கட்டுப்பாடில் இயங்கிவந்த பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் முதலீடு என்ற கொள்கையை அமுல்படுத்தினார். இவ்விரண்டு கொள்கைகளையும் இன்றளவும் எதிர்த்து வரும் கம்யூனிச கட்சிகள் நாட்டின் இன்றைய பொருளாதார தேக்க நிலைக்கு மன்மோகன் சிங்கின் தவறான பொருளாதார கொள்கைகளே காரணம் என்று கூறிவருகின்றன.  

அவர்கள் கூறிவரும் குற்றச்சாட்டுக்கள் உண்மையோ இல்லையோ இத்தகைய முயற்சிகள் நாட்டின் நிதி நிலைமையை சீரமைத்தது என்பதில் சந்தேகமில்லை. அவர் நிதியமைச்சராக பதவியேற்றபோது USD 1 billionனாக இருந்த அன்னிய செலவாணி கையிருப்பு இன்று USD 280 billionனுக்கும் மேல்!

ஆனால் 1991ம் வருடம் பதவியேற்றதிலிருந்து அவர் எடுத்த முயற்சிகள் அரசை காப்பாற்ற முடியவில்லை. 1996ல் நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. 

2004ல் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தபோது சோனியா காந்திதான் பிரதமராக வருவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த சூழலில் அவர் சிங்கை பரிந்துரைத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அந்த முடிவின் பின்னணியில் பல காரணங்கள் இருந்தாலும் சிங் பிரதமராவது காலத்தின் கட்டாயம் போலும். 

அவர் பிரதமராக பதவியேற்றபோது அவரை ஒரு இடைக்கால பிரதமராகவே காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பார்த்தன. ராகுல் காந்தி அந்த பதவியில் அமர்த்தப்படும் வரை இவர் ஒரு காபந்து பிரதமராகவே இருப்பார் என்று அனைவரும் கருதியிருந்த சூழலில் சுமார் பத்தாண்டு காலம் அந்த பதவியில் அவரால் இருக்க முடிந்ததே பெரிய சாதனை என்பதை மறுப்பதற்கில்லை. 

அதே சமயம் இந்த பத்தாண்டு காலத்தில் அவர் அதுவரை ஈட்டியிருந்த பெயரையும் புகழையும் இழந்து இப்போது தன்னை பிரதமராக்கியவராலேயே ஒதுக்கப்பட்டு நிற்பதுதான் வேதனை.

அவர் ஈட்டியிருந்த பொருளாதார பட்டத்துடன் 'செயலற்ற பிரதமர்', 'முடிவெடுக்க முடியாதவர்', 'துணிச்சலில்லாதவர்' என பல பட்டங்களைப் பெற்றிருக்கிறார். அவற்றுடன் 'ஊழல் பேர்வழி' என்ற பட்டமும் இணைந்துக்கொள்ளுமா என்பது அவர் மீது எதிர்க்கட்சிகள் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் முழுவதும் விசாரிக்கப்படும்போதுதான் தெரியவரும். 

அவர் ஊழல்வாதியா இல்லையா என்பது ஒருபுறமிருக்க அவருடைய அமைச்சரவையில் அங்கம் வகித்த பல அமைச்சர்களும் ஊழலில் ஈடுபட்டபோது அவர் பாராமுகமாக இருந்ததை மறுப்பதற்கில்லை. ஊழல் செய்வது தவறு என்றால் ஊழலுக்கு துணை போவதும் அதைக் கண்டும் காணாததுபோல் இருப்பதும் தவறுதான். இந்த தவறை சிங் செய்திருப்பது பல விதங்களிலும் நிரூபிக்கப்பட்டுள்ளதையும் மறுப்பதற்கில்லை. 

அவருடைய இந்த பாராமுகம்தான் இன்று காங்கிரஸ் கட்சியை இந்த இழிநிலைக்கு ஆளாக்கியுள்ளது என்பதும் உண்மைதான். அவருடைய இந்த செயலற்றத் தன்மைக்கு அவரை பின்னாலிருந்து ஆட்டிப்படைத்து வந்த சோனியா அம்மையாரும் அவருடைய குடும்பத்தினரும்தான் காரணம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும் அவர்களுடைய குறுக்கீட்டை சகித்துக்கொண்டு பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் சிங்கிற்கு இருக்கவில்லை. அவர் நினைத்திருந்தால் எந்த நேரமும் பதவியை தூக்கியெறிந்துவிட்டு சென்றிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. ஆகவே கடந்த சில தினங்களாக இத்தனைக்கும் காரணம் மன்மோகன்தான் என்று சோனியாவும் ராகுலும் மறைமுகமாக கூறிவருவதை இனியும் சகித்துக்கொண்டு இருக்க வேண்டுமா என்பதுதான் கேள்வி. அவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு ஏ.கே.ஏவை இடைக்கால பிரதமராக்கலாமா என்று சோனியா ஆலோசித்துவருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானதும் அவர் பதவியை துறந்திருக்கலாம்.  இன்னமும் எதற்காக காத்திருக்கிறார் என்பது புரியாத புதிராக உள்ளது.

உலகத் தலைவர்களுள் முக்கியமானவர், நேர்மையானவர், பொருளாதார மேதை என்றெல்லாம் பல உலக தலைவர்களாலும் போற்றப்பட்டு வந்தவர் இப்போது தன்னுடைய சொந்த கட்சியிலேயே தனிமைப்படுத்தப்பட்டு நிற்பதைக் காணும்போது ஒரு புறம் வேதனையாக இருந்தாலும் அவருடைய இந்த பரிதாப நிலைக்கு அவர் மட்டுமே காரணம் என்பதும் நினைவில் வருகிறது.

இதுவரை ஒருமுறை கூட மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படாதவர் மன்மோகன் சிங். சமீபத்தில் மீண்டும் மாநிலங்கள் அவைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் இன்னும் ஒரு சில மாதங்களில்  அவருடைய அரசியல் பயணம் முடிவுக்கு வரும் என்பதில் ஐயமில்லை.

வெளியேற்றப்படுவதை விட வெளியேறுவது மேல் என்பதை அவர் உணர வேண்டும். ஆனால் அவருக்குத்தான் சட்டென்று முடிவெடுக்கவே தெரியாதே!!

**********

10 டிசம்பர் 2013

PPP அடிப்படையில் இந்தியா ஜப்பானை முந்தியது!!

GDP, GNP அடிப்படையில் உலகில் ஒன்பதாவது இடத்திலுள்ள இந்தியா 'வாங்கும் திறன் ஒப்பீடு' (Purchasing Power Parity) அடிப்படையில் ஜப்பானை முந்தி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது என்கிறது உலக நாணய நிதியம் (IMF). 2011ம் ஆண்டு இறுதியில் அது வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (GDP) இந்த ஒப்பீட்டின் அடிப்படையில் $ 4.46 trillion ஆகவும் ஜப்பானின் மதிப்பு $ 4.44 trillion ஆகவும் இருந்ததாம்!! 

அது என்ன வாங்கும் திறன் ஒப்பீடு?

சுருக்கமாக பார்க்கலாம்.

உலகிலுள்ள மிகப் பெரிய பொருளாதார சக்தி எனப்படும் அமெரிக்காவின்  நாணயமான டாலருடன் உலகிலுள்ள மற்ற நாடுகளின் நாணயங்களின் வாங்கும் திறனை (Purchasing Power) ஒப்பிட்டுப் பார்ப்பதுதான் இந்த 'வாங்கும் திறன் ஒப்பீடு.'

ஆங்கிலத்தில் இதை Purcasing Power Parity என்கிறார்கள். 

உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் செல்லுபடியாகக் கூடிய ஒரே நாணயம் அமெரிக்காவின் டாலர்தான் என்றால் மிகையாகாது. ஆகவே உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் வசிப்பவர்களுடைய வாங்கும் திறனை மதிப்பீடு செய்ய 1986ம் வருடம், அமெரிக்காவில் கிடைக்கும் ஒரு பொருளின் விலையை மற்ற நாடுகளில் நிலுவையிலுள்ள விலையுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தது  அமெரிக்காவின் பிரபல  'தி எக்கனாமிஸ்ட்'  சஞ்சிகை (Magazine).

அமெரிக்காவிலுள்ள மக்டனால்டு பர்கர் (Burger) ஒன்றின் விலையை அந்த நிறுவனத்தின் கிளைகள் இயங்கிவரும் ஏனைய நாடுகளிலுள்ள விலையுடன் ஒப்பிட்டு அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டின் நாணயத்தின் மதிப்பு என்ன என்பதை தோராயமாக கணக்கிட்டு Big Mac Index என்ற ஒரு பட்டியலை வெளியிட்டது இந்த சஞ்சிகை. அதன்படி இந்தியாவின் ரூபாய்தான் உலகிலேயே குறைத்து மதிப்பிடப்படும் நாணயம் என்று கண்டறியப்பட்டது.  

இதை எப்படி கண்டுபிடித்தார்கள் என்று பார்ப்போம்.

அமெரிக்காவில் மிகவும் பிரபலமான மக்டனால்டு பர்கரின் சராசரி விலை $ 4.56. இந்தியாவில் அதே பர்கர் $ 1.50 கிடைக்கிறது. தற்போதைய அன்னிய செலாவணி மாற்று விகிதத்தின் படி ஒரு டாலரின் மதிப்பு ரூ.59.98. இதன் அடிப்படையில் இந்தியாவில் இந்த பர்கரின் விலை Rs.90/-  ($1.50x59.98).   அமெரிக்காவில் இதன் இந்திய ரூபாய் மதிப்பு சுமார் Rs.273.50 ($4.56x59.98).  இதன்படி பார்த்தால் ஒரு டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு Rs.19.70(90/4.56=19.70)  என்றுதான் இருக்க வேண்டும். இது அன்னிய சந்தையின் டாலர் மதிப்புடன் ஒப்பிடுகையில் ரூ.40.30 குறைவு (60 - 19.70=40.30).

ஆகவேதான் இந்திய ரூபாயை the world's most underestimated currency என்கிறது இந்த கணிப்பு.  

இந்த சூத்திரத்தின் அடிப்படையில் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பை (GDP)கணக்கிடும்போதுதான் அது ஜப்பானின் ஒட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பை மிஞ்சுகிறதாம்! 

இந்த தளத்தில் உலகிலுள்ள அனைத்து நாடுகளுடைய நாணயத்தின் டாலருக்கு எதிரான உண்மையான மதிப்பை உடனடியாக கணக்கிட்டும் பார்க்கும் வசதியுள்ளது. 

மக்டனால்டு பர்கர் என்பதில் மட்டுமில்லாமல்  இந்திய-அமெரிக்க நாடுகளில் விற்கப்படும் பெட்ரோல் விலையிலும் இதே நிலைதான். சென்னையில் எண்பது ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலின் அமெரிக்க விலை சுமார் மூன்று டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் நூற்றியெண்பது ரூபாய். இந்த அடிப்படையில் பார்த்தாலும் ஒரு டாலரின் இந்திய மதிப்பு அன்னிய செலவானி சந்தையிலுள்ள டாலரின் மதிப்பைக் காட்டிலும் மிகவும் குறைவு (80/3=26.66). எலக்ட்ரானிக் பொருட்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் மற்ற எல்லா பொருட்களுடைய விலையிலும் இத்தகைய கணிசமான வேறுபாட்டை நம்மால் காண முடிகிறது.

ஆனால் இது ஒரு குறியீடு மட்டுமே என்பதையும் இதை மட்டும் வைத்து ஒரு நாட்டிலுள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை அளவிட்டுவிட முடியாது என்பதையும் மறுப்பதற்கில்லை. 

இத்தகைய ஒப்பீடுகள் பை-லேட்டிரல் எனப்படும் இரண்டு நாடுகளுடைய நாணயங்களின் மதிப்பை ஒப்பிட பயன்படுவதுடன் வர்த்தக அடிப்படையில் அவ்விரு நாடுகளுக்கிடையிலும் நடைமுறையிலுள்ள நாணய மாற்று விகிதத்தில் ஒரூ நீண்டகால தாக்கத்தை (Long Term Effect) ஏற்படுத்தவும்  வாய்ப்புள்ளது என்கின்றனர் சில பொருளாதார நிபுணர்கள். 

இரு நாடுகளுக்கிடையிலுள்ள வர்த்தகத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் சந்தை பணமாற்று விகிதத்திற்கும் (Exchange Rate) இத்தகைய வாங்கு திறன் அடிப்படையில் கணிக்கப்படும் நாணய மதிப்பிற்கும் (Estimated under PPP) ஏன் இந்த வேறுபாடு என்ற கேள்வி எழலாம்.

இதற்கு பல காரணங்கள் இருப்பினும் இவற்றில் முக்கியமானதாகக் கருதப்படுவது இரண்டு காரணங்கள்:

1. அந்தந்த நாட்டிலுள்ள தொழிலாளர் ஊதியம் (Labour cost).

இது ஓரளவுக்குத்தான் உண்மை என்றாலும் இதுதான் மிக முக்கியமான காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்தியாவில் ஒரு தொழிலாளருக்கு வழங்கப்படுவதைப் போல மூன்று மடங்கு அதிகமான தொகை ஊதியமாக அமெரிக்காவில் வழங்கப்படுகிறது. ஒரு பொருளின் உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் தொழிலாளர்  ஊதியம்(Labout Cost) பொருட்களின் இறுதி சந்தை விலையையும் ஏற்றிவிடுகிறது. 

2. இந்திய நாட்டின் கணக்கில் வராத வர்த்தகத்தின் மதிப்பு. (Hidden strength of India's parallel economy)

இந்த கறுப்புச் சந்தை இந்திய பொருளாதாரத்தின் மிகப்பெரிய பலவீனம் எனக் கருதப்பட்டாலும் சில வேளைகளில் அதுவே நம்முடைய பலமாகவும் கருதப்படுகிறது. கணக்கில் வராத வர்த்தகர்கள் அல்லது தயாரிப்பாளர்களால்  அரசுக்கு விற்பனை வரி, கலால் வரி, வருமான வரி, சொத்துவரி என பலவிதங்களில் வரி செலுத்தும் நேர்மையான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தயாரித்து விற்கும் பொருட்களின் விலையை விடவும் பண்மடங்கு குறைத்து விற்க முடிகிறது. 

அத்தகைய பொருட்களுடன் போட்டிப் போடும் நிலைக்கு உள்ளூர் மற்றும் அயல்நாட்டு வர்த்தகர்களும் தள்ளப்படுவதால்தான் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம்முடைய சந்தையில் இந்த அளவுக்கு பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன என்கின்றனர். மேலும் சீனாவைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் உலகின் மற்றெந்த நாட்டிலும் இல்லாத உள்நாட்டு தேவைகள் (Domestic Demand) இந்தியாவில் இருப்பதும் ஒரு காரணம். இதில் இன்னொரு காரணமும் உள்ளது. இதை ஆங்கிலத்தில் Economies of Scale என்கிறார்கள். அதாவது இந்தியாவிலுள்ள மிக அதிக அளவிலான நுகர்வோர் தேவைகளால் (Increasing demand of the domestic consumer) பொருட்களின் தயாரிப்பும் அதிகரிக்கப்படுகிறது. ஒரு பொருளை அதிக தளவில் தயாரிக்கும்போது (Mass Production) அதன் தயாரிப்பு செலவையும் குறைக்க முடியும் என்கிறார்கள்.

அது எப்படி?

ஒரு பொருளை தயாரிக்க தேவைப்படும் செலவினங்களில் (Production cost) நிரந்தர செலவு (Fixed Cost) அன்றாட செலவு (Variable Cost)  என்று இரு இனங்கள் உண்டு. இதில் தொழிற்சாலையின் வாடகை, தயாரிப்பில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்காகும் பராமரிப்பு செலவுகள் மற்றும் அவற்றின் தேய்மானம் (Depreciation), உழைப்பாளரின் ஊதியம் (Labour Cost) ஆகியவை ஒரு பொருள் தயாரித்தாலும் நூறு பொருட்கள் தயாரித்தாலும் பெரிதாக மாறப்போவதில்லை. ஆகவே ஒரு பொருளை அதிக அளவில் தயாரிக்கும்போது அதன் சராசரி உற்பத்தி செலவு ( Average Production Cost) குறைகிறது. இதன் விளைவாக அவற்றின் விலையையும் கணிசமாக குறைக்க முடிகிறது. விற்பனைக்கு வரும் பொருட்களை பெருமளவில் கொள்முதல் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் பல்பொருள் அங்காடிகளால் (Super Markets) ரோட்டோர சில்லறைக் கடைகளை விடவும் மலிவான விலைக்கு பொருட்களை விற்க முடிவதற்கும் இதுவே காரணம். (அதே சமயம் இத்தகைய ரோட்டோர சில்லறைக் கடைகளும் சந்தையில் இருப்பதால்தான் பல்பொருள் அங்காடிகளும் அவர்களுடன் போட்டி போடுவதற்காகவே தங்களுடைய பொருட்களின் விலையை குறைக்கும் நிர்பந்தத்திற்குள்ளாகிறார்கள் என்பதும் உண்மை. எதிர்வரும் காலங்களில் ரோட்டோர சில்லறைக் கடைகள் அடியோடு அழியுமானால் அப்போது பல்பொருள் அங்காடிகளின் ஆதிக்கம் பெருகி அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் உள்ளதுப்போல் அவர்களுடைய (Supermarkets) கட்டுப்பாட்டில் நம்முடைய நுகர்வோரும் சிக்கி திணறப்போவது உறுதி. )

இந்திய சந்தையில் பணவீக்கத்தின் (inflation) தாக்கத்தால் அன்றாடம் ஏறும் விலைவாசியால் பாதிக்கப்படும் நம்முடைய நுகர்வோருக்கு PPP என்பதோ வாங்கு திறன் ஒப்பீடு என்பதோ அல்லது இந்தியாவின் நாணயம்தான் உலகிலேயே குறைத்து மதிக்கப்படும் நாணயம் என்பதோ எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை  என்பது உண்மை. ஆனாலும் இத்தகைய ஒப்பீடுகளின் மூலம் உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம்முடைய நாட்டிலுள்ள விலைவாசி அவ்வளவு அதிகமில்லை என்பதை நம்மால் உணர முடிகிறது. 

கடந்த மூன்று மாத காலமாக அமெரிக்காவில் வசித்து வரும் என்னுடைய மகள் கூறுவதை கேட்டதிலிருந்து இந்தியா இந்தியாதான் என்பதை உணர முடிகிறது. என்னுடைய மலேசிய வாசத்தின்போதும் இதை முழுவதுமாக உணர முடிந்திருக்கிறது. இங்கு யாராலும் வாழ்ந்துவிட முடியும். கோடீஸ்வரனாலும் வாழ முடியும் அதே அளவுக்கு இல்லாவிடினும் தன்னுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துக்கொண்டு பாமரனாலும் வாழ்ந்துவிட முடிகிறது.

'நான் சென்ற நாட்டில் இந்த நாடு சிறந்தது' என்று அன்று கண்ணதாசன் எழுதிய பாட்டில் வரும் வரிகள் இன்றளவும் உண்மை. 

**********

03 டிசம்பர் 2013

GNP என்றால் என்ன - GDP க்கும் அதற்கும் என்ன வித்தியாசம்?

கடந்த வாரம் GDP என்றால் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பு என்று பார்த்தோம். உண்மையில் அது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டிலேயே பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு என்று கூற வேண்டும். அதாவது, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு முழுவதுமாக இதில் சேர்க்கப்படுவதில்லை. ஒரு நாட்டின் ஏற்றுமதி அதன் இறக்குமதியை விட அதிகமாக இருக்கும் சூழலில் மட்டுமே அதிகமுள்ள பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு மற்ற உள்நாட்டு தயாரிப்புகளின் மதிப்புடன் சேர்க்கப்படுகிறது. 

ஆனால்  GNP என்பது எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டாலும் அவை நம்முடைய நாட்டை சார்ந்தவர்களால் தயாரிக்கப்படும் பொருட்களாக இருக்கும் பட்சத்தில் அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தின்  மதிப்பையும் (Income) உள்ளடக்கியதாகும். 

இன்னும் எளிமையாக கூறவேண்டுமானால் நம்முடைய நாட்டின் GDP நம்முடைய நாட்டில் வாழும்/இயங்கும் அயல் நாட்டைச் சார்ந்த தனிநபர்  அல்லது நிறுவனங்கள் இங்கு தயாரிக்கும் அல்லது அளிக்கும் சேவைகளின் மதிப்பை உள்ளடக்கியது என்றாலும் அவற்றால் அவர்களுக்கு (அயல் நாட்டினருக்கு) கிடைக்கும் வருமானம் அதாவது, முதலீடு மற்றும் பங்குகளிலிருந்து கிடைக்கும் டிவிடன்ட், கடன் பத்திர முதலீட்டிலிருந்து கிடைக்கும் வட்டி, அயல் நாட்டினருக்கு சொந்தமான நிறுவனங்கள் ஈட்டும் லாபம் ஆகியவற்றின் மதிப்பு ஒட்டுமொத்த GDP யிலிருந்து குறைக்கப்படுகிறது. 

ஆகவே நம்முடைய GDP வருடா வருடம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும் நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த வருமானம் அதே அளவு வளரும் என்று சொல்ல முடியாது. 

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் இங்கு  செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள்  ஒவ்வொரு வருடமும் ஈட்டும் லாபம் மற்றும் FIIs எனப்படும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் நம்முடைய பங்கு சந்தைகளில் செய்யும் முதலீடுகளிலிருந்து ஈட்டும் லாபம் ஆகியவை நம்முடைய GDP அதாவது நம்முடைய நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் சேவைகளின் மதிப்பிலிருந்து குறைக்கப்படும். அதே சமயம் நம்முடைய நாட்டினர் வெளிநாடுகளில் ஈட்டும் வருமானம், லாபம், வட்டித் தொகை ஆகியவை நம்முடைய GDPயுடன் சேர்க்கப்பட்டும். இந்த கூட்டுத்தொகைதான் GNP எனப்படுகிறது.

தலை சுற்றுகிறதா?

இதை ஒரு சூத்திரத்தின் மூலம் விளக்குகிறேன்.

கடந்தவாரம் GDPஐ கணக்கிட நாம் பார்த்த சூத்திரம் இது: 

GDP=C+I+G+(X-M) 

இதில் 

C= Consumption அதாவது தனிநபர் மற்றும் நிறுவன செலவினங்களையும் 

I= Investments அதாவது இவ்விருவகுப்பினரின் முதலீடுகளையும் 

G= Government Expenditure & Investments அதாவது அரசு செய்யும் செலவினங்கள் மற்றும் முதலீடுகளையும் 

X= Exports அதாவது நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பையும்

M= Imports அதாவது இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பையும் குறிக்கிறது என்று பார்த்தோம்

இந்த முறையில் கணக்கிடப்படும் GDPயிலிருந்து 

1. வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அவர்களுடைய நாட்டிற்கு அனுப்புகிற வருமானத்தை குறைக்க வேண்டும்

2. நம்முடைய நாட்டினர் வெளிநாடுகளிலிருந்து நம்முடைய நாட்டுக்கு அனுப்பியுள்ள வருமானத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். 

இதன் கூட்டுத் தொகைதான் GNP (Gross National Product).

இன்னும் தெளிவாக்க வேண்டுமானால் GDPயை கணக்கிட நம்முடைய நாட்டின் பூளோக எல்லைக்குள் (Geopgraphic Area) தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களின் மதிப்பையும் பார்க்கிறார்கள். அது எந்த நாட்டினரால் தயாரிக்கப்பட்டது என்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால் அவற்றால் கிடைக்கும் வருமானம் நமக்கு கிடைப்பதில்லை. 

ஆகவேதான் நம்முடைய GDPயின் தொடர் வளர்ச்சி மட்டுமே நம்முடைய பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் ஒரு நாட்டின் GNP வளர்ச்சியடையும் போது அது அந்த நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தையும் அந்த நாட்டினரின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தும் என்று நம்பப்படுகிறது. 

இதை சூத்திரத்தில் கூற வேண்டுமென்றால் GNP = GDP + Net Income Earned from Abroad என்று கூறலாம்.

இதில் NET என்ற வார்த்தை நம்முடைய நாட்டினர் அயல் நாட்டில் ஈட்டும் வருமானம் மற்றும் நம்முடைய நாட்டில் அயல்நாட்டினர் ஈட்டும் வருமானம் ஆகியவற்றிற்கு இடையிலுள்ள வித்தியாசத்தை (Difference between Income earned by our citizens abroad AND Income earned by foreign nationals in our Country) குறிக்கிறது. 

சுருக்கமாக கூறவேண்டுமென்றால் ஒரு நாட்டின் GNP என்பது அந்த நாட்டினர் ஈட்டும் மொத்த வருமானத்தின் மதிப்பு என்றும் கூறலாம். 

ஆயினும் உலகிலுள்ள அனைத்து நாடுகளும் தங்களுடைய பொருளாதார வளர்ச்சியை GDP அடிப்படையிலேயே கணக்கிடுகின்றனர் என்பதும் உண்மை. ஆகவே 1991 வரை தங்களுடைய நாட்டுப் பொருளாதார நிலையை GNP மூலம் மட்டுமே கணக்கிட்டு வந்த அமெரிக்கா அதன் பிறகு பிற உலக நாடுகள் பின்பற்றும் முறையான GDP முறையை பின்பற்ற துவங்கியது.

(United States used GNP as its primary measure of total economic activity before 1991, when it began to use GDP. In making the switch, the Bureau of Economic Analysis (BEA) noted that GDP provided an easier comparison of other measures of economic activity in the United States and that "virtually all other countries have already adopted GDP as their primary measure of production.") 

Source:http://en.wikipedia.org/wiki/Gross_national_product

GDP முறையை அடிப்படையாக வைத்தே உலகிலுள்ள நாடுகளை உலக வங்கி தரவரிசைப் படுத்துகிறது என்றாலும் GNP அடிப்படையிலும் நாடுகளின் தரவரிசை பட்டியலும் விக்கிப்பீடியா தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா 2010 மற்றும் 2011 வருடங்களில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. (GDP அடிப்படையிலும் இந்தியா இதே இடத்தில்தான் உள்ளது). இதிலிருந்து என்ன புரிகிறது? நம்முடைய நாட்டைப் பொருத்தவரை GDP மற்றும் GNP ஆகிய எந்த முறையில் கணக்கிட்டாலும் பெரிய வேறுபாடுகள் இல்லை. 

ஆனால் உலகின் மற்ற வேறெந்த நாடுகளிலும் இல்லாத ஒரு பிரத்தியேகம் நம்முடைய நாட்டில் உள்ளது. அதுதான் parallel economy எனப்படும் கறுப்புச் சந்தை. நம்முடைய நாட்டின் உற்பத்தியாகட்டும் அல்லது வருமானமாகட்டும் அவற்றில் சரிபாதி, - சிலர் சம அளவு என்றும் கூட கூறுகின்றனர் - கணக்கில் வரவு வைக்கப்படாமலேயே இருந்து வருகிறது. ஆகவே நம்முடைய நாட்டில் வெளியிடப்படும் GDPயின் மதிப்பு உண்மையில் வெளியிடப்படும் மதிப்பை போல் ஒன்றரை மடங்கு இருக்க வேண்டும் என்றாலும் மறுப்பதற்கில்லை. இதை நம்முடைய நாட்டின் சாபக்கேடு என்றும் சொல்லலாம் அல்லது மறைந்துக்கிடக்கும் வலிமை என்றும் (Intrinsic Value)கூறலாம். அது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தைப் பொருத்தது.  

ஒரு நாட்டின் GNPயும் GDPஐ போலவே நடப்பு விலைவாசியிலும் (current market prices) அடிப்படை ஆண்டிலிருந்த (Base Year) விலைவாசியிலும் கணக்கிடுகிறார்கள். இதன் மூலம் கணக்கிடப்படும் ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு நாடு எந்த அளவுக்கு உற்பத்தியிலும் வருமானத்திலும் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை கணக்கிட முடிகிறது.

ஒரு நாட்டின் ஒட்டுமொத்த GNPஐ அந்த நாட்டிலுள்ள மக்கள்தொகையால் வகுத்து (Divide) கிடைக்கும் தொகையை Per Capita GNP என்கின்றனர். 

ஒரு நாட்டின் Per Capita GNP மதிப்பை அமெரிக்க டாலருக்கு மாற்றுவதன் மூலம் உலகிலுள்ள அனைத்து நாடுகளின் தனிநபர் வருமானத்தை ஒரே நாணய மதிப்பில் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது என்கிறது உலக வங்கி. ஆனால் இந்த தொகை நாட்டிலுள்ள அனைத்த நபர்களுக்கும் ஒரே அளவில் கிடைக்கிறது (equal distribution) என்பதை காட்டுவதில்லை என்பதும் உண்மை. 

ஒரு நாட்டினரின் வாழ்க்கைத் தரத்தை இன்னொரு நாட்டினரின் வாழ்க்கைத் தரத்துடன் Per Capita GDP மற்றும் Per Capita GNP அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்ப்பதைவிட அவ்விரு நாட்டினரின் வாங்கும் திறன் அடிப்படையில் (Purchasing Power) ஒப்பிட்டு பார்க்கும் முறையை Purasing Power Parity Method என்கின்றனர். 

அது என்ன என்பதை அடுத்த பதிவில் காணலாம்.