26 ஏப்ரல் 2013

இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளா?


ஜோசப்: நம்ம டிஸ்கஷன துவங்கறதுக்கு முன்னால இன்னைக்கி வெளியான ஒரு லேட்டஸ்ட் நியூஸ பத்தி சொல்றேன். ஒரு வாரத்துக்கு முன்னால தில்லியில நடந்த போராட்டத்துல கலந்துக்கிட்ட ஒரு லேடிய தில்லி ஏசிபி ஒருத்தர் தேவையில்லாம கன்னத்துல அறைஞ்சி அந்த வீடியோ மீடியாவுலல்லாம் வந்து அவர சஸ்பென்ட் பண்ணாங்களே, ஞாபகம் இருக்கா?

ரஹீம்: ஆமா, அதுக்கென்ன? அவரெ டிஸ்மிஸ் செய்யணும்னு கூட கெஜ்ரிவால் டிமான்ட் பண்ணாரே!


ஜோசப்: அவரேதான்.  இப்ப IPC section 323 படி அவர் மேல ஒரு கேஸ் புக் பண்ணியிருக்காங்களாம்.


கணேஷ்: அப்படீன்னா? அந்த செக்‌ஷன்  என்ன சொல்லுது?


ஜோசப்:  வேணும்னே அடிச்சி துன்புறுத்துறதாம் (voluntary hurt). ஏசிபி அந்த பொண்ணெ அடிச்சதுக்கு எந்த காரணமும் இருக்கலே இல்லையா? அதான்.


ரஹீம்: (சிரிக்கிறார்) என்னைய்யா இது புது கதை? நம்ம ஊர்ல நடக்கற எல்லா போராட்டத்துலயும்தான் தேவையில்லாம சாதாரன கான்ஸ்டபிள் கூட ஆண், பொண்னுன்னு பாக்காம அடிக்கிறாங்க. அப்ப அவுங்க எல்லார் மேலயும் கேஸ் புக் பண்ணுவாங்களா? அதாவது, படிச்ச ஆளுங்கள அடிச்சா அது தப்பு. அடிச்ச ஆள சஸ்பென்ட் பண்ணுவாங்க, அவங்க மேல கேஸ் புக் பண்ணுவாங்க. ஏழைங்கள அடிக்கலாம். ஏன் கொல கூட செய்யலாம். கேக்க ஒரு நாதி இருக்காது.


கணேஷ்: அதுக்கு ஒரு காரணம் இருக்கு பாய்.


ரஹீம்: (எரிச்சலுடன்) என்னய்யா காரணம்? அது நடந்த இடம் தில்லி, அதானே சொல்ல வரே?


கணேஷ்: அது மட்டுமில்ல. டிவி காரங்க கேமரா வச்சுக்கிட்டு படம் பிடிச்சிக்கிட்டிருக்கறப்பவே  அந்த பொண்ணெ அடிக்கிறார்னா அந்தாளுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்? அதான்..


ரஹீம்: அப்ப இங்க மட்டும்? எத்தன கலெக்டர் ஆஃபீஸ் முன்னால நியாயமா போராட்டம் நடத்துறவங்கள பொம்பளைங்கன்னு கூட பாக்காம லத்தியால அடிக்கறதும் எட்டி உதைக்கறதும் உடம்பு மேல கைய வச்சி தள்ளி வுடறதும்.... ஏன் கொஞ்ச நாளைக்கி முன்னால ஒரு டீச்சரம்மாவ எல்லார் முன்னாலயும் முகத்துலயே அடிச்சி கீழ தள்ளி விடல? அந்த போலீஸ என்ன செஞ்சாங்க? தில்லியில இருக்கற பெரிய எடத்து பசங்க மேல கைய வச்சா, இல்ல அங்க இருக்கற பொம்பளைங்கள பாலியல் கொடுமை பண்ணா அது பெரிய குத்தம். ஒடனே டிவியில வரும், பேப்பர்ல வரும்... அதே இங்க நடந்தா? எல்லாம் சுத்த வேஸ்ட். நாம வேற எதையாவது பேசுவோம் ஜோசப். இந்த மாதிரி விஷயத்த பேசினாலே எனக்கு பிரஷர் ஏறுது.


ஜோசப்: நீங்க சொல்றதுல உண்மை இல்லாம இல்ல பாய். ஆனா அதுக்காக நாம டென்ஷனாயி என்ன ஆகப் போவுது? போன வாரமும் இப்படித்தான் கணேஷ் ஏதோ ஒரு பேச்சுக்கு குஜராத்த பத்தி சொல்ல போயி நீங்க கோச்சிக்கிட்டு சடார்னு எழுந்து போய்ட்டீங்க. இந்த மாதிரி பொலிடிக்கல் டிஸ்கஷன்ல எதிரும் புதிருமா பேச்சு வரத்தான் செய்யும் பாய். அதுக்கெல்லாம் போயி டென்ஷன் ஆனா அப்புறம் எதப்பத்தித்தான் டிஸ்கஸ் பண்றது?


ரஹீம்: உண்மைதான் ஜோசப். நா அன்னைக்கி பண்ணது கொஞ்சம் ஓவர்தான். நானே அப்புறம் கணேஷ கூப்ட்டு சாரி சொன்னேன். என்ன கணேஷ்?


கணேஷ்: (சிரிக்கிறார்) ஆமா ஜோசப். பாய் நா வீட்டுக்கு போன உடனே கூப்ட்டார்.


ஜோசப்: சரி அத விடுங்க. நாம ராசா விஷயத்த பத்தி பேசுவமா?


ரஹீம்: (சிரிப்புடன்) அவர் பிஎம்முக்கு வழிகாட்டுன விஷயம்தானே? அதான் ஊரே சிரிக்கிதே. இவர் போயி அவருக்கு தப்பா வழிகாட்டுனாராம். இந்த பார்லிமென்ட் கூட்டு கமிட்டி நடத்துன விசாரனையே ஒரு சால்ஜாப்புதானே ஜோசப்?


ஜோசப்: இப்ப அவங்க ரிப்போர்ட்ல சொல்லியிருக்கறத பாத்தா நீங்க சொல்றது சரிதான்னுதான் படுது.


கணேஷ்: நம்ம மு.கவும் நாசூக்கா வாழைப்பழத்துல ஊசி ஏத்துனா மாதிரி சொன்னத கேட்டீங்க இல்ல? ஒரு நாட்டோட பி.எம்ம அவர் கீழ இருக்கற ஒரு இலாக்கா மினிஸ்டர் தப்பா வழி நடத்துனார்னு சொன்னா எப்படி நம்ப முடியும்னு கேட்டாரே, நியாயந்தானே?


ஜோசப்: நியாயம்தான், இல்லேன்னு சொல்லலே. ஆனா முப்பதுக்கும் மேல மினிஸ்டர்ஸ் இருக்கற ஒரு கேபினெட்ல ஒவ்வொரு மினிஸ்டரும் செய்யற விஷயங்கள எல்லாம் துருவி, துருவி ஒரு பி.எம் பாத்துக்கிட்டே இருக்கணும்னு சொன்னா அப்புறம் அந்த மினிஸ்டர் எதுக்கு கணேஷ்? அது மட்டுமில்ல இன்னொன்னையும் நாம கவனிக்கணும்.


கணேஷ்: என்னது?


ஜோசப்: நா தப்பு பண்ணலேன்னு ராசா சொல்றது இருக்கட்டும். ஆனா அப்படியே நா தப்பு செஞ்சிருந்தா பிரதமரும் தப்பு செஞ்சிருக்கார்னு சொல்றது ஒரு ரெஸ்பான்சிபிள் மினிஸ்டர் பேசற பேச்சா தெரியல. அவர் சொல்றது எப்படியிருக்குன்னா நா தப்பு செஞ்சிருந்தாக்கூட அத பிஎம் கண்டுபிடிச்சிருக்க வேணாமாங்கறா மாதிரி இருக்கு. நா என்ன சொல்ல வரேன்னா, நீ தப்பு செஞ்சியா? அதோட நிறுத்திக்க. அதே தப்ப பி.எம்முந்தான் செஞ்சார் ஃபைனான்ஸ் மினிஸ்டருந்தான் செஞ்சார்னு சொல்றதுக்கு நீ யாரு? அவங்க தப்பு செஞ்சிருந்தா அத விசாரிக்கறதுக்கு நாட்ல கோர்ட் இருக்கு. என்னோட சேர்ந்து அவருந்தான் தப்பு செஞ்சார் அப்ப அவர விட்டுப்போட்டு என்னெ மட்டும் ஏன் புடிக்கிறீங்கன்னு கேட்டா என்ன சொல்றது?


கணேஷ்: அப்போ 2G விவகாரத்துல ராசா மட்டும்தான் தப்பு செஞ்சிருக்கார்னு அந்த ரிப்போர்ட் சொல்றது சரின்னு சொல்ல வறீங்களா?


ஜோசப்: அப்படியில்ல. ராசா தப்பு செஞ்சிருக்காரா இல்லையா? அதான் கேள்வி.


ரஹீம்: அதெப்படி அப்படி சொல்ல முடியும்? ராசா சொல்றது என்ன? நா எத செஞ்சாலும் அத பி.எம் அப்புறம் ஃபைனான்ஸ் மினிஸ்டர் ரெண்டு பேர் கூடயும் டிஸ்கஸ் பண்ணிட்டுத்தான் செஞ்சேன்னு சொல்றாரே? அப்புறம் எப்படி ராசா பி.எம்ம மிஸ்கைட் பண்ணார் கமிட்டி சொல்றாங்க?


ஜோசப்: இல்ல பாய். Raja misled the PMனு சுப்ரீம் கோர்ட்டே சொல்லத்தான் செஞ்சாங்க. அத்தோட இந்த விஷயத்துல ஃபைனான்ஸ் மினிஸ்டர் ப.சி.மேல எந்த குத்தமும் நிரூபமனமாகலன்னும் ஸ்பெஷல் கோர்ட் சொல்லிட்டாங்க. அப்புறமும் இவர் எதுக்கு சொன்னதையே சொல்லிக்கிட்டிருக்கணும்? எல்லா விஷயத்தையும் பி.எம் ஒருத்தரே செய்ய முடியாதுன்னுதான் ஒவ்வொரு இலாக்காவுக்கும் ஒரு மினிஸ்டர்னு அப்பாய்ன்ட்மென்ட் பண்றாங்க. இவங்க எல்லார் வேலையையும் சூப்பர்வைஸ் பண்றதுக்கா பி.எம்ம வச்சிருக்காங்க? இல்ல பாய். ஏதாவது முக்கியமான பாலிசி விஷயம்னா அத தனியா டிஸ்கஸ் பண்ணி முடிவெடுக்கறதுக்கு காபினெட்ல இருக்கற சீனியர் மினிஸ்டர்ஸ் க்ரூப் ஒன்னு வச்சிருக்காங்க. அவங்களும் ராஜாவுக்கு சில முக்கியமான கைட்லைன்ஸ்லாம் குடுத்துத்தான் இருக்காங்க. ஆனா இவர் தன் மனம்போன போக்குல என்ன காரணத்துக்காகவோ சில தேவையில்லாத டிசின்ஷன்ஸ்லாம் எடுத்து இருக்கார். இன்னைக்கி அத மறைக்கறதுக்கு என்னவெல்லாமோ பேசிக்கிட்டு இருக்கார். இந்த வாதமெல்லாம் ஸ்பெஷல் கோர்ட்ல நடந்துக்கிட்டிருக்கற கேஸ்ல எடுபடப் போறதில்லங்கறது நிச்சயம். இப்ப இவர் செய்ய வேண்டியது என்னன்னா வாய மூடிக்கிட்டு இருக்கறது. அத விட்டுட்டு பாக்கற மீடியா காரங்கக்கிட்ட எல்லாம் வாய்ல வந்ததையெல்லாம் உளறிக்கிட்டிருக்கறது நல்லாவே இல்ல.


ரஹீம்: எனக்கு ஒரு சந்தேகம் ஜோசப்.


ஜோசப்: சொல்லுங்க.


ரஹீம்: இப்படி பி.எம் முக்கு எதிரா பகிரங்கமா மு.கவும் அவரோட கட்சி ஆளுங்களும் பேசறாங்களே அப்ப வரப்போற ஜெனரல் எலக்‌ஷன்ல காங்கிரசோட கூட்டணி இல்லங்கற முடிவுக்கு வந்துட்டாங்களோ?


கணேஷ்: அதிலென்ன சந்தேகம் பாய்? இனிமே இவங்களே போனாக் கூட காங்கிரஸ் இவங்கள சீந்தாதுன்னுதான் நா நினைக்கேன்.


ரஹீம்: அப்போ தனியா நிப்பாங்களா என்ன? அப்படி நின்னா கிடைக்கற ஒரு, ரெண்டு சீட் கூட இல்லாம போயிரும். அதுக்கு பேசாம கேப்டன் சொல்றா மாதிரி எலெக்‌ஷன பாய்காட் பண்ணிறலாம். சிறிலங்கா விஷயத்த காட்டி போட்டியிடாம இருந்துட்டா அப்புறம் வர்ற அசெம்பிளி எலெக்‌ஷனுக்காவது யூசாவும், என்ன சொல்றீங்க?


கணேஷ்: (சிரிக்கிறார்) அதுவும் இப்ப உறுதியா சொல்ல முடியாது பாய். அதுக்கு இன்னும் மூனு வருசம் இருக்கே.


ஜோசப்: ஒருவேளை பிஜேபியோட கூட்டு வச்சிக்கலாம்னு நினைக்கறாரோ என்னவோ?


ரஹீம்: அப்புறம் மதச்சார்பு இல்லாத கட்சிக்குத்தான் எங்க ஆதரவுன்னு இதுவரைக்கும் சொல்லிக்கிட்டிருந்ததெல்லாம்? அவ்வளவுதானா?


ஜோசப்: (சிரிக்கிறார்) ஏற்கனவே ஒருதரம் அவங்களோட கூட்டு சேர்ந்து சென்ட்ரல்ல ஆட்சி பண்ணவங்கதான பாய்? மதச்சார்பில்லாதவங்கன்னு சொல்றதெல்லாம் சும்மா. காரியம் ஆவணும்னா காவடியும் எடுப்பாங்க.


ரஹீம்: அதென்னவோ உண்மைதான்.


கணேஷ்: அப்புறம் ஒரு விஷயம் பாய். கோபப்படாம கேக்கணும். அப்படீன்னாதான் இத பத்தி பேசலாம். என்ன சொல்றீங்க?

ரஹீம்: (எரிச்சலுடன்) யோவ் என்ன கிண்டலா? என்ன சொல்ல வறீரு?


கணேஷ்: அதான் பாய். பெங்களூர்லயும் அமெரிக்காவுல பாஸ்டன்லயும் நடந்த பாம் ப்ளாஸ்ட் பத்தி....


ரஹீம்: அதுக்கென்ன இப்போ? அதான் ரெண்டு எடத்துலயும் சம்மந்தப்பட்டவங்கள புடிச்சிட்டாங்களே?


கணேஷ்: அது இல்ல பாய் நா சொல்ல வர்றது.


ரஹீம்: (எரிச்சலுடன்) வேற என்னய்யா? சொல்ல வந்தத சொல்லும்யா.


கணேஷ்: பாத்தீங்களா? சொல்றதுக்குள்ளவே எரிச்சல் வருதே. அப்புறம் எப்படி மேக்கொண்டு சொல்றது?


ரஹீம்: (சிரிக்கிறார்) சரிய்யா.. .கோவப்படல. என்ன சொல்ல வந்தே?


கணேஷ்: ரெண்டு எடத்துலயுமே அக்யூஸ்ட் இஸ்லாமியர்கதான்.


ரஹீம்: ஆமா. அப்படித்தான் சொல்றாங்க.


கணேஷ்: எதுக்கு பாய் ஒங்க ஆளுங்க மட்டும் எப்ப பாத்தாலும்....


ரஹீம்: (கோபத்துடன் குறுக்கிடுகிறார்) யோவ்.... எங்க ஆளுங்கன்னு சொல்லாதே.... இந்த மாதிரி எல்லாம் செய்யிறவங்க உண்மையான முஸ்லீம்சே இல்ல... அத முதல்ல தெரிஞ்சிக்கோ. எந்த உயிருக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடாதுன்னுதான் எங்க குர்ரான் சொல்லுது.. எங்க நபியும் சொல்லியிருக்காரு. இந்துக்கள்ல தீவிரவாதியே இல்லையா? அதனால எல்லா இந்துக்களும் தீவிரவாதிங்கன்னு சொல்லிறலாமா? குஜராத்ல முஸ்லீம்ஸ குறிவச்சி அடிச்சவங்க எல்லாம் யாருய்யா? ஒங்க இந்துக்கதானே? அப்ப மட்டும் இப்படி எங்க ஆளுங்க ஏன் இப்படின்னு ஒன்னையே நீ கேட்டுறுக்கியா?


ஜோசப்: சரி பாய்... நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சரி. கணேஷ் இந்த மாதிரி பேசறது சரியில்ல. எல்லா மதத்துலயும்தான் தீவிரவாதம் இருக்கு. தீவிரவாதத்துக்கும் மத நம்பிக்கைக்கும் எந்த சம்மந்தமும் இல்லங்கறத நாம பல சமயங்கள்ல பாத்துருக்கோம். ஏறக்குறைய நூறு வருசத்துக்கும் மேல அயர்லாந்துல இங்கிலாந்துக்கு எதிரா தீவிரவாத அட்டாக்ஸ் நடந்துக்கிட்டுதான் இருக்கு. ஒரே மதத்துக்குள்ளவே இரண்டு பிரிவுகளுக்கு இடையில இந்த மாதிரி கேவலமான அட்டாக்ஸ் நடக்கறப்ப எப்படி கணேஷ் எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள்னு முத்திரை குத்தறது? படிச்சவங்களே இப்படியெல்லாம் திங்க் பண்ண ஆரம்பிச்சா அதுக்கு முடிவே இல்ல கணேஷ்.


கணேஷ்: நா அப்படி ஒட்டுமொத்தமா எல்லா இஸ்லாமியர்களையும் குத்தம் சொல்ல வரலே ஜோசப். நா சொல்ல வந்தது என்னன்னா...


ஜோசப்: (குறுக்கிட்டு) வேணாம் கணேஷ். இந்த விஷயத்த இத்தோட விட்டுருவோம். இது ரொம்ப சென்சிட்டிவான விஷயம். இந்த வாரத்துல பரபரப்பா பேசப்பட்ட இன்னொரு விஷயம் பெங்கால்ல நடந்த சிட்ஃபன்ட் கம்பெனி ஏமாத்து. அதப்பத்தி பேசலாம்.


ரஹீம்: அதுல பேசறதுக்கு என்ன இருக்கு ஜோசப். அதான் சிஎம் 500 கோடிய நிவாரணமா தந்துட்டாங்களே?


ஜோசப்: அதான் ஏன்னு கேக்கறேன்? அது ஒரு தனியார் கம்பெனி. இந்த மாதிரி நாட்டுல எத்தனையோ கம்பெனி திவாலாயிருக்கு. ஏன் நம்ம தமிழ்நாட்டுல ராயப்பேட்டா பெனிஃபிட் ஃபன்டுங்கற கம்பெனி திவாலாயி எத்தனையோ படிச்ச ஆளுங்களோட பணமும் போச்சே அப்போ இங்க ஏதாச்சும் கவர்ன்மென்ட் செஞ்சிதா?


ரஹீம்: நீங்க சொல்றது வாஸ்தவம்தான் ஜோசப்.


கணேஷ்: (சிரிக்கிறார்) அப்போ மமதா மேடம் ரொம்ப நல்லவங்கன்னுதான் அர்த்தம். ஒன்னா ரென்டா 500 கோடி!


ரஹீம்: (எரிச்சலுடன்) அட நீ வேறய்யா, காமெடி பண்ணிக்கிட்டு. அது யார் பணம்? எல்லாத்தையும் பப்ளிக்கிட்டருந்து செஸ்னு போட்டு வாங்க போறாங்களாமே?


ஜோசப்: அதுல இன்னொரு விஷயமும் இருக்கு பாய். அந்த சிட் கம்பெனியிலருந்து போன அசெம்பிளி எலக்‌ஷன்ல மேடத்தோட திரினாமூல் காங்கிரசுக்கு கோடி கணக்குல டொனேஷன் போயிருக்காம். அத்தோட அந்த பார்ட்டி எம்.பிங்க, ஸ்டேட் மினிஸ்டர்ங்க எல்லாம் கம்பெனி எம்டிய மிரட்டி, மிரட்டியே நிறைய கோடி கபளீகரம் பண்ணியிருக்காங்கன்னும் கேள்வி. இங்கயும் அந்த அக்கிரமம் நடந்துருக்கு பாய். ராயப்பேட்டா பெனிஃபிட் கம்பெனி விழுந்ததுக்கே முக்கிய காரணம் இங்கருக்கற சில முக்கிய பிரபலங்கள் வாங்குன பெரிய, பெரிய லோன திருப்பி கட்டாததுதானாம். அங்க அந்த கம்பெனி எம்டியே தைரியமா சிபிஐக்கு எழுதிட்டார். இங்க எல்லாத்தையும் மூடி மறைச்சிட்டாங்க. ஏன் கொஞ்ச வருசத்துக்கு முன்னால பாலு ஜ்வெல்லர்ஸ் விழுந்துச்சே.. ஞாபகம் இருக்கா?


கணேஷ்: நா கூட கேள்விப்பட்டுருக்கேன் ஜோசப். அதுல நிறைய சினிமாகாரங்களும் சம்மந்தப்பட்டிருக்காங்களாமே?


கணேஷ்: அவுங்க மட்டுமா? அன்னைக்கி அரசியல்ல கொடிகட்டி பறந்துக்கிட்டிருந்த சில அரசியல்வாதிங்களும்தான்னு பேசிக்கிட்டாங்களே?


கணேஷ்: ஆமா பாய்... நாட்டுல நடக்கறத நல்லதுங்களுக்கு இவங்க காரணமோ இல்லையோ நடக்கற கெட்டதுங்களுக்கெல்லாம் பின்னால இவங்கமாதிரி ஆளுங்க நிச்சயம் இருப்பாங்கன்னு சொல்றது சரிதான் போலருக்கு.


ஜோசப்: நிச்சயமா. சரி... மத்தத அடுத்த வாரம் பேசலாம்.

******

இந்த வார தமாஷ்!


சிவகாசிக்கு செல்லவேண்டிய பிரதமர் தென்காசிக்கு சென்றது அம்பலமானது.
கர்நாடகாவில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் இணைந்த கூட்டணி அரசு அமைக்கிறது.

கிறிஸ்கெய்ல் ஊக்கமருந்து அருந்திவிட்டு விளையாடுவதாக குற்றச்சாட்டு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக