12 பிப்ரவரி 2013

யூதரும் இஸ்லாமியரும் பங்காளிகளே.. 1

இஸ்ரவேல் (Israel)நாட்டைச் சார்ந்த யூதர்களும் இஸ்லாமியர்களும் ஒருவகையில் பங்காளிகள்தான். ஏன், அந்த கூட்டத்தில் கிறிஸ்துவர்களுக்கும் பங்குண்டு.

கிறிஸ்துவர்கள் புனிதநூல் என போற்றும் பைபிள் இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். கிறீஸ்துவின் பிறப்புக்கு முந்தைய காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை அடக்கியது  பழைய வேதாகமம். கிறிஸ்துவின் பிறப்பு, இறப்பு மற்றும் உயிர்ப்பு ஆகியவற்றைக் கொண்டது புதிய வேதாகமம்.

பழைய வேதாகம புத்தகத்தின் துவக்கத்தில் கூறப்பட்டுள்ள சில வரிகளைப் படித்தால் அதில் அடங்கியுள்ளவற்றை புரிந்துக்கொள்ள முடியும்:

"அனைத்து மானிடரையும் மீட்குமாறு கடவுள் ஆபிரகாமை தேர்ந்தெடுத்து அவர்தம் வழிபமரபினர் வரலாற்றில் தாமே செயல்பட்டு, மீட்புப் பணியை தொடர்ந்தாற்றுகிறார் என்பதை இந்நூல் (தொடக்க நூல்) விரித்துரைக்கின்றது. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்குத் தாம் அளித்த வாக்குறுதியை இறைவன் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் இந்நூல் முற்றுப்பெறுகின்றது.:

அதாவது ஆதாம், ஏவாள் படைக்கப்படுதல், ஆபிரகாம் துவங்கி  அவர்களுடைய சந்ததிகள் எனப்படும் 12 யூதக் குல கோத்திரங்களில் உதித்த  யூதர்களின் வாழ்க்கைமுறை அவர்களுக்கு கடவுளின் வார்த்தையை எடுத்துரைக்கத் தோன்றிய பல்வேறு இறைவாக்கினர்களின் முயற்சிகள் என சுமார் 20க்கும் மேற்பட்ட பாகங்களாக பழைய வேதாகமம் விரிகிறது.

யூதர்கள் மட்டுமல்லாமல் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்களும் இந்நூல்களில் அடங்கியுள்ள பல நிகழ்வுகளையும் உண்மையென ஏற்றுக்கொள்கின்றனர்.

உலகிலுள்ள மானுடகுலத்தை மீட்குமாறு இறைவன் தெரிவு செய்யப்பட்ட ஆபிரகாம் இம்மூன்று மதத்தைச் சார்ந்த  அனைவருமே தங்களுடைய தந்தை எனவும் ஏற்றுக்கொள்கின்றனர். அதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

இஸ்லாமியருக்கும் யூதர்களுக்கும் உள்ள ஒற்றுமை: கிறீஸ்துவை இறைமகன் என்றோ உலகை மீட்க வந்த இரட்சகர் என்றோ ஏற்றுக்கொள்ளாதது.

இஸ்லாமியராலும் யூதர்களாலும் தங்களுடைய தந்தையாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் ஆபிரகாம்.

ஆபிரகாம் மற்றும் அவருடைய மனைவி சாராள் இருவருக்கும் அவர்களுடைய முதிர்ந்த வயது வரை குழந்தைப் பேறு கிடைக்கவில்லை. சாராவிடம் எகிப்து நாட்டைச் சார்ந்த ஆகார் என்ற பணிப்பெண் ஒருத்தி இருந்தாள். சாராய் ஒரு நாள் ஆபிரகாமிடம் ஆண்டவர் என்னை பிள்ளைப்பேறு இல்லாதவளாக்கிவிட்டார். நீர் என் பணிப்பெண்ணிடம் உறவுகொள்ளும். ஒருவேளை எனக்காக ஒரு பிள்ளை பெற்றுத் தரக்கூடும் என்கிறாள். அவளை ஆபிரகாமுக்கு மனைவியாகவும் கொடுக்கிறாள். ஆபிரகாமுடன் ஏற்பட்ட உறவின் விளைவாக கருவுற்ற ஆகார் தன் எஜமானியையே ஏளனத்துடன்
நோக்குவதைக் கண்ட சாரா ஆபிரகாமிடம் 'நீர் தழுவும்படி நானே கொடுத்த என்னுடைய பணிப்பெண் என்னை ஏளனமாக நோக்குகிறாள். ஆண்டவரே எனக்கும் உமக்கு நீதி வழங்கட்டும்.' என்கிறாள். ஆனால் ஆபிரகாமோ ஆகார் உன்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்டவள்தானே நீயே உனக்கு நல்லதாகப்படுவதை அவளுக்குச் செய் என்கிறார். சாராளோ ஆகாரை
கொடுமைப்படுத்த ஆகார் அவளிடமிருந்து தப்பி ஓட வழியில் ஆண்டவரின் தூதர் அவளுக்குத் தோன்றி 'நீ திரும்பிச் சென்று உன் தலைவியின் பேச்சுக்கு கட்டுப்படு நட. உனக்கும் உன் வழிமரபினரையும் யாரும் எண்ண முடியாதபடி
பலுகிப் பெருகச் செய்வேன். நீ கருவுற்று பெற்றெடுக்கும் மகனுக்கு இஸ்மயேல் எனப் பெயரிடு. ஆனால் அவன் காட்டுக் கழுதை போல் வாழ்பவனாக இருப்பான். எல்லாரையும் அவன் எதிர்ப்பான். எல்லோரும் அவனை எதிர்ப்பார்கள். தன் உறவினருக்கும் அவன் எதிரியாக வாழ்வான் என்கிறார்.

அதன் பிறகு ஆபிரகாம் ஒருமுறை ஒரு காட்சி வழியாக இறைவனிடம் உறையாடியபோது ஆண்டவரே எனக்கு குழந்தையே இல்லையே, எனக்குப் பிறகு என் வீட்டு அடிமை மகன் அனைத்திற்கும் உரிமையாளனாகப் போகிறானே என்று புலம்புகிறார். அதற்கு மறுமொழியாக உனக்குப் பிறப்பவனே (அதாவது அவருக்கும் அவருடைய மனைவி சாராவுக்கும்) உனக்குப் பின் உரிமையாளன் ஆவான் என்கிறார் ஆண்டவர். ஆனால் அப்போதே ஆபிரகாமும் அவருடைய மனைவியும் மிகவும் வயது முதிர்ந்தவர்களாக இருந்தனர். ஆயினும் ஆண்டவர் வாக்களித்தபடியே அவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டனர்.

பிறகு அடிமைப் பணிப்பெண் ஆகார் தனக்கு பிறகு பிறந்த குழந்தையுடன் சிரித்து விளையாடுவதைக் காணப் பொறுக்காமல் சாரா ஆபிரகாமிடம் 'இந்த பணிப்பெண்ணையும் அவளுடைய மகனையும் விரட்டிவிடும். ஏனெனில்
பணிப்பெண்ணின் மகன் என் மகன் ஈசாக்குடன் பங்காளியாய் இருக்கக் கூடாது.' என்கிறாள். அவளுடைய இந்த பேச்சு ஆபிரகாமுக்கு வேதனையளித்தது. அப்போது ஆண்டவர் அவரிடம் பையனையும் பணிப்பெண்ணையும் குறித்து வேதனைப்படாதே. சாரா கேட்டுக்கொண்டபடியே அவளை அனுப்பிவிடு. ஆயினும் அவனும் உன்னுடைய வித்தாய் இருப்பதால் அவனிடமிருந்தும் ஒரு இனத்தைத் தோன்றச் செய்வேன் என்கிறார்.

ஆபிரகாம் அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து, ஆகாரமும் ஒரு துருத்தித் தண்ணீரும் எடுத்து ஆகாரிடம் கொடுத்து, அவள் தோளின் மேல் வைத்து, பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து அவளை அனுப்பி விடுகிறார். அவள் புறப்பட்டுப்போய், பெயர்ஷெபாவின் வனாந்திரத்தில் அலைந்து திரிகிறாள். துருத்தியிலிருந்து தண்ணீர் செலவழியவே, அவள் பிள்ளையை
ஒரு செடியின் கீழ் விட்டு, பிள்ளை சாகிறதை நான் பார்ப்பேனோவென்று சொல்லி, அம்பு பாயும் தூரத்தில் போய், எதிரே உட்கார்ந்து சப்தமிட்டு அழுகிறாள்.

ஆண்டவர் பிள்ளையின் சத்தத்தைக் கேட்கிறார். ஆண்டவரின் தூதனானவன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு, ஆகாரே உனக்கு நேரிட்டதென்ன? பயப்படாதே. பிள்ளை இருக்கும் இடத்தில் கடவுள் அவன் சப்தத்தைக் கேட்டார். நீ எழுந்து பிள்ளையை எடுத்து, அவனை உன் கையால் பிடித்துக் கொண்டு போ! அவனைப் பெரிய ஜனமாக்குவேன் என்றார். கடவுள் அவளுடைய கண்களைத் திறக்க தண்ணீருள்ள ஒரு துரவை அவள் கண்டு, போய், துருத்தியில் தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுக்கிறாள். ஆண்டவர் இஸ்மயேலுடன் துணையாய் நின்று அவனை காக்கிறார். அவன்
வளர வளர வில் வித்தையிலும் வல்லவனானாகிறான்.

ஆபிரகாமுக்கும் சாராவுக்கும் பிறந்த ஈசாக்கின் வழிமரபினர் இஸ்ரவேலிலும் பணிப்பெண் ஆகாருக்கு பிறந்த இஸ்மவேல் வழிமரபினர் பாலைவனத்திலும் குடியேறுகின்றனர்.

ஈசாக்கின் வழிவந்தவர்களே இஸ்ரயேல் நாட்டினராகிய யூதரும் எகிப்தில் குடியேறிய இஸ்மயேலின் வழிவந்தவர்களே இஸ்லாமியர்களும்...

ஆக ஒரே தகப்பனுக்கு மனவியராக இருந்த இருவேறு பெண்களுக்கு பிறந்த பங்காளிகள்தான் இஸ்ராயேல் நாட்டைச் சார்ந்த யூதரும் எகிப்து மற்றும் அரபுநாடுகளைச் சார்ந்த இஸ்லாமியிரும். இங்கிருந்துதான் இஸ்லாம் உலகெங்கும் பரவியது.

இவ்விரு இனத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடையில் ஆதிகாலம் முதலே சமாதானம் இருந்ததில்லை.

அதைப்பற்றி மேலும் சுருக்கமாகக் கூறுகிறேன்...

தொடரும்...


5 கருத்துகள்:

  1. Sir,
    It is totally irrelevant to this article, I was expecting from you, a write-up on your friend, Mr. Dondu.

    Regards,

    Krishnan

    பதிலளிநீக்கு
  2. Sir,
    It is totally irrelevant to this article, I was expecting a write-up from you, on your friend, Mr. Dondu.

    Regards,

    Krishnan

    பதிலளிநீக்கு
  3. Genesis 16

    11. பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக.

    12. அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.

    பதிலளிநீக்கு
  4. அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.//

    அதனால்தான் அவர்கள் தீவிரவாதிகளாகிவிட்டனர் என்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  5. ஆரம்பிச்சிட்டீங்களா உங்க பஞ்சாயத்தை!

    பதிலளிநீக்கு