04 ஆகஸ்ட் 2012

நாமக்கல் மாவட்டத்தில் 77 தலைமையாசிரியர்கள் ஊழல்!


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக (scholarship) ஆண்டொன்றுக்கு ரூ.1850/- வீதம் (இதுவே மிகவும் குறைவுதான்) அரசு வழங்குகிறது. இத்தொகையை அரசின் ஆதி திராவிடர் நலத்துறையிலிருந்து காசோலையாக  பெற்று அதை மாணவர்களுக்கு வழங்கவேண்டியது அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களின் பொறுப்பு.

தங்களுடைய பள்ளியில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை அரசு இலாக்காவிலிருந்து பெறவே பள்ளிகள இலாக்கா அதிகாரிகளுக்கு கப்பம் கட்டவேண்டியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அதை பெற்று தருவதற்கென்றே தரகர்களை அந்த இலாக்கா - எந்த இலாக்காவில்தான் இத்தகைய தரகர்கள் இல்லை? வாகன உரிமம் வழங்கும் இலாக்காவிலிருந்து ஓய்வூதியத்தை வழங்கும் மத்திய/மாநில இலாக்காவரையிலும் இத்தகைய தரகர்களின் ஆதிக்கம்தானே? - இலைமறைவு காய்மறைவாக நியமித்துள்ளன என்பதும் அனைவரும் அறிந்ததே. சாதாரணமாக இத்தகைய தரகர்களுக்கு கட்ட வேண்டிய கப்பத்தை உதவித்தொகையிலிருந்து பிடித்ததுபோக மீதியை மாணவர்களுக்கு வழங்குவது வழக்கம். இதுதான் காலங்காலமாக நடந்துவருகிறது.

ஆனால் அரசிடமிருந்து பெறும் மொத்த தொகையையுமே போலிக் கையொப்பங்களை இட்டு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களே கபளீகரம் செய்வது என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்றுதான். அதுவும் நாமக்கல்  போன்ற ஒரு சிறிய மாவட்டத்தில் 77 பள்ளி தலைமையாசிரியர்கள் இத்தகைய ஊழலை செய்து தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தி உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கக் கூடிய செய்திதான்.

நன்னெறி கதைகள் கூறி மாணவ செல்வங்களை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பிலுள்ள பள்ளி ஆசிரியர்களே கொள்ளை அடிப்பதை தொழிலாக வைத்திருப்பது வேலியே பயிரை மேய்ந்த கதைதான்.

இத்தகைய ஊழல் நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழகமெங்குமே நடந்திருக்க வாய்ப்புள்ளது என்பதையும் அரசு கவனத்தில் கொண்டு மாநில மற்றும் மாவட்ட கல்வி இயக்குனர் அலுவலகத்தை தங்கள் அதிகார வட்டதிலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆய்வு நடத்த வேண்டுமென உத்தரவிடவேண்டும்.

இத்தகைய ஊழலை தடுக்க அரசு மாற்று வழி ஒன்றை வகுக்க வேண்டியதும் அவசியமாகிறது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் பெயரிலேயே வங்கிகளில் கணக்குகளை துவக்கி அதில் நேரடியாக அரசே உதவித்தொகையை செலுத்தலாம். அல்லது காசோலைகளை மாணவர்கள் பெயரிலேயே வழங்கலாம்.

தாற்காலிக பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மீது பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற நாமக்கல் மாவட்ட காவல்துரை எஸ்.பி. அறிவித்துள்ளதை கருத்தில்கொண்டு பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுடைய பெற்றோர்களும் காலதாமதம் இல்லாமல் புகார் அளிப்பதும் அவசியம்.

இதில் அதிசயம் என்னவென்றால் இத்தகைய ஊழலுக்கு துணை சென்ற ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் எவரும் பணியிடை நீக்கப்பட்டதாக செய்தி இல்லை! அப்படிப்பார்த்தால் எந்த துறை அதிகாரிகள்தான் ஊழலில் ஈடுபடவில்லை? அவர்களை எல்லாம் பணியிடை நீக்கம் செய்ய துவங்கினால் அரசே ஸ்தம்பித்துப் போய்விடுமே? அவர்களை எல்லாம் கைது செய்தால் தமிழகத்திலுள்ள அனைத்து சிறைகளுமே நிரம்பி வழியுமே என்பதால் விட்டுவிட்டார்களோ என்னவோ!!

ஊழல் மேல் மட்டத்திலிருந்து ஒழிக்கப்படுவதை விட இத்தகைய கீழ்மட்ட பணியாளர்களிடமிருந்து ஒழிக்கப்பட வேண்டும். கடந்த பதினெட்டு மாதங்களாக என் வீட்டு கட்டுமான பணியை சரிவர முடிக்க எத்தனை அரசு அதிகாரிகளுக்கு கப்பம் கட்ட வேண்டியிருந்தது? எத்தனை பேரிடம் கை கட்டி நிற்க வேண்டியிருந்தது? 1985 மற்றும் 1992லும் தூத்துக்குடியில் வீடு கட்டினேன். அப்போது இந்த அளவு சிரமப்பட்டதில்லை. நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துள்ளதோ இல்லையோ கையூட்டு பெறும் அதிகாரிகளின் எண்ணிக்கை மிகவும் கணிசமாகவே வளர்ந்துள்ளது!

வாழ்க பாரதம், வாழ்க ஜனநாயகம்!

***********

1 கருத்து:

  1. இந்த கேஸ் சிலபல கூச்சல்கள் மற்றும் தொலைக் காட்சி விவாதங்களுடன் இனிதே நிறைவு பெற்று சில நாட்களில் வழக்கம் போல் மறக்கப்படும். ஐந்து வருடங்கள் கழித்து தூசுதட்டி மறுபடியும் கிளறி பார்த்தோமானால் இந்தக் குற்றவாளிகளில் பலபேர் நல்லாசிரியர் விருது பெற்றிருப்பார்கள். சிலபேர் DEO லெவெலுக்கு போயிருப்பார்கள்.

    பதிலளிநீக்கு