22 மார்ச் 2012

சிறுபான்மையினரை சிறுமைபடுத்தும் மத்திய அரசு

சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் சிறப்பு மிக்க முறையில் பணியாற்றி வந்தவர்கள் கிறிஸ்துவ பாதிரியார் மற்றும் கன்னியர்கள். அவர்களால் நடத்தப்பட்டு வரும் கல்வி நிறுவனங்களில் பயின்று இன்று உலகெங்கும் பணிபுரிபவர்களுள் பெரும்பாலோனோர் கிறிஸ்துவர் அல்லாதோரர் என்றால் மிகையல்ல. அதுபோன்று இலவச அல்லது குறைந்த செலவில் சேவை மனப்பான்மையுடன் அவர்களால் வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகளால் காப்பாற்றப்பட்ட உயிர்களுள் பெரும்பாலோனோர் கிறிஸ்துவர் அல்லாதோரே.

ஆயினும் தன்னை ஒரு மதச் சார்பற்ற நாடாக பறைசாற்றிக்கொள்ளும் இந்தியாவில் அன்று முதல் இன்று வரை சிறுபான்மை மக்களை உதாசீனப்படுத்துவது மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளில் ஒன்றாகவே இருந்து வருகிறது என்பதை அரசின் (அது எந்த கட்சியால் ஆளப்பட்டாலும்) செயல்பாடுகள் பல சமயங்களில் எடுத்துக்காட்டியுள்ளன. தேர்தல் காலத்தில் காலைப் பிடிப்பதும் அது முடிந்ததும் காலை வாரிவிடுவதும் நாட்டை இதுவரை ஆண்ட அனைத்துக்கட்சிகளும் கடைபிடித்துவந்த எழுதா கொள்கை என்றும் கூறலாம்.

இதுவரை நாட்டை ஆண்ட கட்சிகளுள் காங்கிரஸ் மட்டுமே சிறுபான்மை சமூகத்தை, அவர்கள் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டை அங்கீகரித்து
, ஆதரித்து வந்த கட்சி என்பது சிறுபான்மையினரிடையே பரவலாக நிலவி வந்த கருத்து. ஆனால் சமீப காலமாக, அதாவது கூட்டணி என்ற பெயரில் நாட்டிலுள்ள சந்தர்ப்பவாத கட்சிகளையெல்லாம் இணைத்துக்கொண்டு ஆட்சி என்ற பெயரில் நாட்டையே கேலிக்குரியதாக்கி வரும் காங்கிரஸ் தலைமையிலான இந்த ஆட்சி சிறுபான்மையினரை சமீப காலமாக சிறுமைப்படுத்தி வருவதை காணமுடிகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறப்பதனால் ஏற்படக்கூடிய பாதகங்களினால் நேரடியாக பாதிக்கப்படவிருக்கும் இடிந்தகரை கிராமத்தின் மொத்த ஜனத்தொகையில் 80 விழுக்காடுக்கும் மேலுள்ளவர்கள் மீனவர்கள். அவர்களுள் பெரும்பான்மையினர் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள். ஆகவே அவர்கள் வழிபடச் செல்லும் தேவாலயங்களை நிர்வகிக்கும் பாதிரியார்களும் அவர்களுடைய இந்த போராட்டத்திற்கு ஆதரவளித்தே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானவர்கள். அத்தகைய பாதிரியார்களுக்கு மறை மாவட்ட அளவில் தலைவராக இருக்கக் கூடிய தூத்துக்குடி ஆயர் அவர்களும் இந்த போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு அளிக்க வேண்டிய சூழல்.
எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்துயமத்திய அரசுக்கு எதிராக கத்தோலிக்க பாதிரியார்களும்
, ஆயர்களும் இத்தகைய மாபெரும் மக்கள் போராட்டத்திற்கு துணிந்து ஆதரவு அளிக்க முன்வந்ததில்லை. இந்து மதத்திலிருந்து மதம் மாறிய ஒரே காரணத்திற்காக அதுவரை வழங்கப்பட்டிருந்த சலுகைகள் தலித் கிறிஸ்துவ மக்களுக்கு மறுக்கப்பட்டபோதும் உலகளவில் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய போராட்டத்தை அவர்கள் முன் நின்று நடத்தியதில்லை.

னெனில் இடிந்தகரை மக்கள் தற்போது நடத்திவரும் போராட்டம் அவர்களுடைய வாழ்வாதாரத்தை  மட்டுமல்லாமல் அவர்கள் உயிர் வாழ்வதையே பாதிக்கக் கூடும் என்கிற அச்சத்தால் - வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், உயிர் பயத்தால் - ஏற்பட்ட தன்னிச்சையான போராட்டம் என்பதால்தான் அவர்களுடைய ஞான மேய்ப்பர்களான பாதிரிமார்கள் ஆதரவு அளிக்க முன்வந்தனர். ஆனால் இந்த போராட்டத்தில் கத்தோலிக்க கிறீஸ்த்துவர்கள் மட்டுமே பங்கு கொள்வதுபோலவும் இடிந்தகரை கிராமத்திலும் அதைச் சுற்றிலுமுள்ள கிராமங்களில் வசிக்கும் மற்ற மதத்தினர் எவரும் இதில் கலந்துக்கொள்ளாமல் இருப்பதுபோலவும் சில நாளேடுகளும் ஊடகங்களும் சித்தரிப்பது விஷமத்தனமானது. இந்த போராட்டக் குழுவை முன்நின்று நடத்துபவரே கிறீஸ்துவரல்ல என்பதை மறந்துவிட்டன இந்த பத்திரிகைகள்!

இது கிறிஸ்துவர்களால் கிறிஸ்துவர்களுக்காக நடத்தப்படும் போராட்டம் என்பதாகவும் ஆகவே சில கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நன்கொடைகளை இந்த போராட்டக் குழுவின் தலைவர் நடத்துகின்ற தொண்டு நிறுவனத்திற்கு மாற்றியதுபோலவும் கற்பனையாக ஒரு குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் என்ற பதவிக்கே களங்கம் வருவித்துக்கொண்டிருக்கும் ஒரு இணை அமைச்சர் பகிரங்க புகார் வைத்தார்.
 ஆனால் அதை முழுமையாக நிரூபிக்க முடியாமல் போகவே தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயரின் தலைமையில் செயல்பட்டு வரும் தூத்துக்குடி பல்நோக்கு சேவை மையத்தின் பெயரில் வழங்கப்பட்டிருந்த வெளிநாட்டு நன்கொடை உரிமத்தை (FCRA A/c)யும் அந்த தொண்டு நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளையும் முடக்கி வைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

FCRA விதிகளின்படி ஒரு திட்டத்திற்காக பெறப்பட்ட நன்கொடையை வேறொரு திட்டத்திற்காக பயன்படுத்தலாகாது என்பது உண்மைதான். ஆனால் அதன் உள்நோக்கம் என்னவென்று பார்த்தால் சேவை நோக்கத்துடன் ஒரு திட்டத்தை தயாரித்து அதற்கென நன்கொடையை பெற்று பிறகு அந்த நிதியை லாப நோக்கத்துடன் செயல்படவிருக்கும் வேறொரு திட்டத்திற்காக பயன்படுத்தக்கூடாது என்பதுதான். உதாரணத்திற்கு சமூகக் கூடம் ஒன்றை கட்டுவதற்காக ஒரு திட்டத்தை தயாரித்து அதற்கென வெளிநாடுகளிலிருந்து பெற்ற நன்கொடையை வியாபார நோக்குடன் ஒரு திருமண மண்டபமோ அல்லது கேளிக்கை விடுதியோ கட்ட பயன்படுத்தக் கூடாது என்ற நோக்கில்தான் இத்தகைய விதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


நான் தூத்துக்குடியில் கிளை மேலாளராக பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் இதே தூத்துக்குடி தொண்டு நிறுவனம் கண்கானிப்பில் செயல்படுத்தப்பட்டு வந்த பல மக்கள் நல திட்டங்களில் பங்குக்கொண்டு அவர்கள் பரிந்துரைத்த மக்களுக்கு சலுகைக் கடன்கள் வழங்கியிருக்கிறேன். மற்ற அரசு இலாக்காக்களைப் போலல்லாமல் கடன் பெற தகுதியானவர்களை இனங்கண்டு பரிந்துரைப்பதுடன் நின்றுவிடாமல் வங்கிகள் வழங்கும் கடன் தொகையை முழுவதுமாக வசூலிக்கவும் இந்த தொண்டு நிறுவனம் உதவியுள்ளது.

இன்றும் அந்த தொண்டு நிறுவனம் பெறும் நன்கொடைகளை நம்பி தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயரின் கண்கானிப்பில்  230 கல்வி நிறுவனங்கள், 3 மருத்துவமனைகள், 18 சுகாதார மையங்கள் மற்றும் 1200 அனாதை குழந்தைகள், ஊனமுற்றோர், முதியோர், மனநலம் குன்றியோர், கைவிடப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் இல்லங்கள் இயங்கிவருகின்றன. இவை அனைத்தும் மத்திய அரசின் இந்த அடாவடி நடவடிக்கையால் முடங்கிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த தொண்டு நிறுவனத்தின் ஆண்டு கணக்குகளை தணிக்கை செய்து வரும் தணிக்கை நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கை கூடங்குளம் போராட்டக் குழுவினருக்கு எவ்வித நன்கொடையும் திருப்பிவிடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய பிறகும் வேண்டுமென்றே ஏதோ ஒரு நலத்திட்டத்திற்காக பெற்ற நன்கொடையை வேறொரு நலத்திட்டத்திற்காக பயன்படுத்தியுள்ளது என்பதை குற்றமாக கற்பித்து ஒரு சிறுபான்மையினரால் கால் நூற்றாண்டுக்கும் மேல் திருப்திகரமாக செயல்பட்டு வந்த ஒரு தொண்டு நிறுவனத்தின் வங்கி கணக்கை முடக்கி அதை சார்ந்திருக்கும் பல ஏழை எளியவர்களின் வாழ்க்கையில் விளையாடும் மத்திய அரசின் போக்கு வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இத்தகைய அடாவடிச் செயலுக்கு காரணம் காங்கிரஸ் என்று ஒட்டுமொத்தமாக குறைகூற முடியாது. ஆனால் மனமுதிர்வில்லாத ஒருசில மத்திய அமைச்சர்களே இதற்குக் காரணம். அவர்களை அடக்கி ஆள திராணியில்லாத சாதுவான ஒரு பிரதமர் அமைச்சரவைக்கு தலைவராக இருப்பதும் ஒரு காரணம்.


*********

2 கருத்துகள்:

  1. அய்யா... ஜோசப், ஒரேடியா சிறுபான்மையினருக்கு அரசு எதிர்ப்பா இருக்குன்னு சொல்லிட முடியாது. கற்பழிப்பு வழக்குல சிக்கி இதுவரை எந்த பாதிரியாராவது தண்டனை பெற்றிருக்கிறாரா?

    பதிலளிநீக்கு
  2. ஏங்க எதுக்கும் எதுக்கும் முடிச்சி போடறீங்க? கற்பழிப்பு செஞ்சது யாரா இருந்தா என்ன? கிறிஸ்துவ பாதிரியார்ங்கறதால சும்மா விட்டுறனுமா என்ன? அதப் பத்தியெல்லாம் நான் சொல்ல வறல.

    பதிலளிநீக்கு