30 அக்டோபர் 2012

நாயகன் - உலகநாயகனின் உடான்ஸ்!



கமல் ஒரு சிறந்த நடிகர். அதில் சந்தேகமேயில்லை. ஆனால் உலகநாயகன் பட்டத்திற்கு தகுதியானவர்தானா என்ற கேள்வி என்னுள் பல சமயங்களில் எழுந்துள்ளது. உலகத்திலேயே சிறந்த நாயகன் என்று பொருள் கொள்ளும் அளவுக்கு அவர் சிறந்த நடிகர் அல்ல. மேலும் அவர் தன்னைத் தானே மெச்சிக்கொள்ளும் ஒரு மனமுதிர்வற்றவர் (immatured person) என்பதையும் பல சமயங்களில் நிரூபித்துள்ளார்.

அதற்கு ஒரு சமீபத்திய உதாரணம் ஹிந்து நாளிதழில் அவர் எழுதியுள்ள இந்த  கட்டுரை

இந்த கட்டுரை வெளிவந்ததுமே அவருடைய தீவிர ரசிகர்கள் சிலர் ஃபேஸ்புக் போன்ற பல சமூக வலைத்தளங்களில் பாராட்டி எழுதியிருந்தனர். அதிலும் சிலர் அவருடைய ஆங்கில புலமையையும், எழுத்தாற்றலையும் கூட புகழ்ந்து எழுதியிருந்தனர். அவருடைய ஆங்கில புலமையைப் பற்றி எழுத எனக்கு தகுதியும் இல்லை விருப்பமும் இல்லை.

ஆனால் அவர் தன்னைத்தானே மெச்சிக்கொள்ளும் விதமாக எழுதியுள்ளவற்றையும் ஏதோ 'நாயகனின்' வெற்றிக்கு தான் தான் மூல காரணம் என்பதுபோன்றும் தயாரிப்பாளர் மட்டும் இன்னும் சற்று தாராளமாக செலவு செய்திருந்தால் ஆஸ்கார் ரேஞ்சுக்கு படத்தை எடுத்திருப்போம் என்றெல்லாம் உடான்ஸ் விட்டிருப்பதைத்தான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த கட்டுரையைப் பற்றி பாராட்டி ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் எழுதியிருந்ததற்கு மறுமொழியாக (அதாவது முக்தா சீனிவாசனின் இந்த கட்டுரை ஹிந்து நாளிதழில் வெளிவருவதற்கு முன்பாகவே) தயாரிப்பாளர் ஏற்படுத்திய முட்டுக்கட்டைகளைப் பற்றி எழுதாமல் இருந்திருக்கலாம் என்று எழுதியிருந்தேன். ஏனெனில் எனக்கு அப்போதே தெரியும் அவர் எழுப்பியிருந்த குற்றச்சாட்டுகளில் சிலவற்றிலாவது நிச்சயம் உண்மை இருக்காது என்று.

நான் நினைத்தது சரிதான் என்பது போல் இருந்தது முக்தா சீனிவாசனின் விளக்கம்.  விளக்கம்



கமலின் கட்டுரையில் தன்னை மறைந்த சுஜாதா அவர்களுடன் ஒப்பிட்டுக்கொண்டிருப்பது அவருடைய தற்புகழ்ச்சிக்கு ஒரு முக்கிய உதாரணம். 'அவர்கள் இருவருடைய அறிவையும் திறமையையும் கோடம்பாக்கம் ஒன்றும் இல்லாமல்' செய்துவிட்டதாம்!

கமல் இயக்கிய விக்ரம் ஒரு துக்கடா படம். திரைக்கதையில் சுத்தமாக சுதப்பிவிட்டு கோடம்பாக்கத்தை குறை கூறி என்ன பயன்? சுமார் இருபது வருடங்கள் கழித்து இவர் எழுதி இயக்கிய படங்களின் கதி என்ன? கிரேசி மோகனுடன் சில திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிவிட்டு அவரைப் போன்றே தன்னாலும் நகைச்சுவையாக திரைக்கதை எழுத முடியும் என்று தீர்மானித்துக்கொண்டு எழுதி இயக்கிய படங்கள் பாக்ஸாஃபீசில் மண்ணைக் கவ்வியதை மறந்துவிட முடியுமா?

கமலின் தற்பெருமைக்கு இன்னும் ஒரு சாம்பிள்: 'நாயகனின் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் ஒரு வர்த்தகர். அவரைப் பொருத்தவரை சினிமா ஒரு வர்த்தகம், கலை அல்ல.'

அடேங்கப்பா! கமல் எழுதி இயக்கி தயாரித்த அனைத்து படங்களும் கலைநயமுள்ள படங்களாயிற்றே! இந்த சமயத்தில் இவரைப் பற்றி இவருடைய இன்னொரு தயாரிப்பாளர் குமுறியது நினைவுக்கு வருகிறது. 'கமல் எப்போதுமே மற்றவர் தயாரிக்கும் படங்களில்தான் சோதனை செய்து பார்ப்பார் (he will experiment only in others' film)'. இதற்கு அவர் experiment செய்து நடித்து தோல்வியடைந்த பல படங்கள் சாட்சி.

இன்னும் ஒரு சாம்பிள்: திரைக்கதை எழுதுவதில் உள்ள நுணுக்கங்களை (nuances) மணிரத்தினம் இவரிடம் கேட்டு படித்தாராம்!!!! இதற்கு மணிரத்தினம்தான் பதில் அளிக்க வேண்டும். ஆனால் அவர் நிறைகுடம். தளும்பமாட்டார். ஆனால் அவருக்கு பதிலாக சுஹாசினியாவது பதிலளிக்க வேண்டும். ஏனென்றால் அவர்தான் ஒருமுறை 'கமல்ஹாசனைப் போலவே இந்திய திரையுலகிலும் பல சிறந்த நடிகர்கள் உள்ளதை என்னால் பிறகுதான் உணர்ந்துக்கொள்ள முடிந்தது' என்றார். ஆகவே அடுத்த வார ஹிந்துவில் இதற்கு பதில் அளிப்பார் என்று நம்புகிறேன்.

தான் மற்ற நடிகர்கள் போல் அல்ல என்பதையும் கமல் சுட்டிக்காட்டியுள்ளர். அதாவது ஒரு திரைப்பட கதாநாயகன் தன்னுடன் நடிக்க கதாநாயகியைத் தான் பரிந்துரைப்பாராம். ஆனால் இவர் ஒரு இயக்குனரை பரிந்துரைத்தாராம்!!!

நாயகனின் தயாரிப்பாளரைப் பற்றி கமல் அடித்த உடான்சும் அதற்கு தயாரிப்பாளருடைய பதில்களும்

1. கமல்: முக்தா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் முந்தைய படங்கள் அதன் நிறுவனர் சீனிவாசனை ஒரு சிக்கன பேர்வழி (tight fisted)என்பதை காட்டியுள்ளது.

முக்தா சீனிவாசன்: நாயகன் படத்தின் தயாரிப்பு செலவு ரூ.60 லட்சம் என முடிவு செய்தோம். ஆனால் இறுதியில் அது ரூ.1 கோடியை எட்டியிருந்தது.
மேலும் இதில் கமலின் ஊதியமே ரூ.17.50 லட்சங்கள்.

அதாவது தயாரிப்பு செலவில் 1/5 பங்கு! கமலை தவிர அந்த படத்தில் நடித்த அனைவருமே சில்லறை நடிகர்கள் என்பதால் அவர்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்ட மொத்த ஊதியமே இவருக்கு அளிக்கப்பட்ட ஊதியத்தை விட குறைவாகவே இருந்திருக்கும். கலைநயமுள்ள படத்தை எடுக்க விரும்பிய கமல் தன்னுடைய ஊதியத்தை குறைத்திருக்கலாமே!


2. கமல்: அப்போதைய திரைப்படங்கள் போல் அல்லாமல் மணிரத்தினம் சண்டைக் காட்சிகளுக்கென்றே சுமார் ரு.12 லட்சம் அளவுக்கு ஒரு தனி பட்ஜெட் தயாரித்திருந்தார். இதற்கென்றே ஷோலே படத்தில் பணியாற்றிய ஜிம் ஆலனை இங்கிலாந்திலிருந்து வரவழைத்தோம். ஆனால் தயாரிப்பாளர் அவரை மூன்றே நாட்களில் திருப்பி அனுப்பியது என்னை மிகவும் மனம்தளர வைத்தது. மேலும் ஒப்பனைக்கோ ஆடைகளுக்கோ தனியாக பட்ஜெட் ஏதும் இருக்கவில்லை.

மு.சீனிவாசன்: மணிரத்தினம் என்னிடம் கதை சொன்னபோது படத்தில் யாருக்கும் ஒப்பனை இருக்காது என்றும் தமிழர்களின் ஆடை எனப்படும் வேட்டி, கைலியைத் தவிர பிரத்தியேக ஆடை அலங்காரம் ஏதும்  இருக்காது என்றுதான் கூறினார். அவர் மேலை நாடுகளில் இருந்து ஒப்பனையாளரையோ அல்லது சண்டைக் காட்சி அமைப்பாளர்களையோ வரவழைப்பதில் எவ்வித ஆர்வமும் காட்டவில்லை. மேலும் கமல் பரிந்துரைத்த ஜிம் ஆலன் ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் கேட்டதாலும் வேலு நாயக்கரின் வாழ்க்கையை எடுக்க இத்தகைய வீண் செலவுகள் தேவையில்லை என்று நான் நினைத்ததாலும் கமலின் ஆலோசனைகளை ஏற்கவில்லை.

படத்தின் மொத்த செலவே ரூ.60 லட்சம் என்று நிர்ணயித்துவிட்டு சண்டைக்காட்சிகளுக்கே  நாளொன்றுக்கு ரூ.2 லட்சம் என்றால் எப்படி? நாயகனின் பட நீளத்தில் 1/3 பங்கு சண்டைக்காட்சிகள் என்பதால் அதற்கே சுமார் ரூ.20 லட்சம் தேவைப்பட்டிருக்கும்!

3. கமல்: தயாரிப்பாளரின் சிக்கன நடவடிக்கையால் மும்பை தாராவியில் படமாக்க முடியவில்லை. ஆகவே ராஜபார்வை படத்தில் நான் அறிமுகப்படுத்திய தோட்டாதரணி உண்டாக்கிய செட்டில்தான் படத்தின் பெரும்பான்மையான காட்சிகளை படமாக்க வேண்டியிருந்தது.

மு.சீனிவாசன். மும்பை தாராவியை நேரில் பார்த்தபோது அதில் படப்பிடிப்பை வைத்துக்கொள்வது என்னுடைய குழுவினருக்கு அத்தனை பாதுகாப்பானதாக இருக்காது என்று நான் கருதியதால்தான் சென்னையிலேயே வீனஸ் ஸ்டுடியோவில் மூன்று மடங்கு பொருட்செலவில் செட் போடவைத்தேன்.

படத்தைப் பார்த்தவர்களுக்கு அது செட் என்று சொன்னால்தான் தெரியும் என்கிற அளவுக்கு மிக தத்ரூபமாக செட்டை உருவாக்கியிருந்த பெருமை தோட்டாதரணிக்குத்தான்.

இப்படி கமலின் கட்டுரையில் நிறைய உடான்ஸ்கள்! அதையெல்லாம் விரிவாக எழுத வேண்டுமென்றால் இரண்டு, மூன்று பாகங்கள் தேவைப்படும். இந்த இரு கட்டுரைகளையும் படிக்காதவர்கள் நான் மேலே காட்டியுள்ள சுட்டியில் சென்று படித்துக்கொள்ளலாம்.

நாயகன் தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரு சிறந்த மைல்கல்தான். இந்த நூற்றாண்டின் சிறந்து நூறு படங்களில் வர தகுதியானதுதான். அதில் சந்தேகமேயில்லை. ஆனால் அதற்கு தான் மட்டுமே முக்கிய காரணம் என்பதுபோல் கமல் எழுதியுள்ளது சரியல்ல என்பதுதான் என் கருத்து.

நானும் கமலின் தீவிர ரசிகன்தான். ஆனால் அவர் என்ன சொன்னாலும், எழுதினாலும் சரி என்று கூறும் அளவுக்கு ஒரு கண்மூடித்தனமான ரசிகன் அல்ல.

***********



13 செப்டம்பர் 2012

கூடங்குளம் - என்னதான் முடிவு?

ஏறத்தாழ ஓராண்டு காலமாக நடைபெற்று வரும் கூடங்குளம் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது எனலாம்.  கூடங்குளத்தில் எரிபொருள் நிரப்ப தடையேதும் இல்லை என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட்டக் குழு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு காத்திராமல் அவசர, அவசரமாக மத்திய அரசு எரிபொருள் நிரப்பும் முயற்சியில் இறங்கியுள்ளதை எதிர்த்து இடிந்தகரை மக்கள் உச்சக்கட்டப் போராட்டத்தில்  இறங்கியிருப்பது முற்றிலும் நியாயமே.
 
வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் விசாரனையில் உள்ளபோதே எரிபொருள் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டதும் அதை உயர்நீதிமன்றமே குறை கூறியதும் நினைவுக்கு வருகிறது. மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை மட்டும்தான் நீதிமன்றம் என்று கருதுகிறதா என்றும் கூட உயர்நீதிமன்றம் வினவியது.
 
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சார்ந்துதான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் இருக்க வாய்ப்புள்ளது என்று மத்திய அரசே தீர்மானித்து செயலில் இறங்குவது எந்த வகையில் நியாயம் என்றுதான் போராட்டக் குழு தலைவர்
உதயகுமார் கேட்கிறார். இதில் என்ன தவறு?

இந்திய அணு ஒழுங்குமுறை ஆணையத்தால் அமைக்கப்பட்ட குழு முன்வைத்த பரிந்துரைகளில் இன்னும் 17 பரிந்துரைகளை  கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் முழுவதுமாக நிறைவேற்றாத நிலையில் எரிபொருளை நிரப்ப அனுமதிக்கலாகாது என்று வேறொரு மனுவும் உச்ச நீதிமன்றத்தில் விசாரனைக்கு வரவுள்ள நிலையில் மத்திய அரசின் இந்த எதேச்சாதிகார போக்கு நிச்சயம் கண்டனத்திற்குரியதே. கூடங்குளம் திட்ட பொறுப்பாளர்களே மீதமுள்ள பரிந்துரைகளை முற்றிலும் நிரைவேற்ற இன்னும் இரண்டாண்டு காலம் தேவைப்படும் என்று கூறியுள்ள நிலையில் எரிபொருளை நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அனுமதி செல்லாது எனவும் இந்த மனுவில் வாதிக்கப்பட்டுள்ளதால் இதை உச்சநீதிமன்றம் புறக்கணிக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. மேலும் மனுதாரர் தரப்பில் நாட்டின் பிரபல வழக்கறிஞர்களுள் ஒருவரான திரு. ஷாந்தி பூஷனே வாதிட இருப்பதால் அத்தனை எளிதில் மத்திய அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வர வாய்ப்பில்லை. இதை எதிர்பார்த்துத்தான் மத்திய அரசு எரிபொருள் நிரப்புவதில் தேவைக்கு அதிகமான அவசரம் காட்டுகிறது என்று கூட கூறலாம்.
 
இந்தச் சூழலில் எரிபொருள் நிரப்புவதை  நிறுத்திவைக்கக் கோரி போராட்டம் நடத்த போராட்டக் குழுவினருக்கு தார்மீக உரிமை உண்டு என்பதை சற்றும் உணராத மத்திய, மாநில அரசுகள் காவல்துறையை ஏவிவிட்டு கண்ணீர் புகை
குண்டுகளை வீசுவதும் அதையும் மீறி கலைந்து செல்ல மறுத்தவர்களை பெண்கள், குழந்தைகள் என்றும் பாராமல் தடியடி நடத்தியதும் துப்பாக்கி சூடு நடத்தி அப்பாவி மீனவர் ஒருவரை கொன்றதும் எந்த வகையிலும் நியாயம்
இல்லை. உங்களுடைய எதிர்வாதங்களை உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கூறுவதை விட்டுவிட்டு சட்டவிரோதமான இத்தகைய போராட்டத்தில் ஈடுபடவேண்டாம் என்று போராட்டக்காரர்களுக்கு அறிவுரை கூறும் காவல்துறை உயரதிகாரிகள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை ஏன் காத்திருக்க முன்வரவில்லை? ஒருவேளை இந்திய அணு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகள் அனைத்தையும் முழுவதுமாக கடைபிடித்தபிறகே எரிபொருள் நிரப்பலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்குமானால் அப்போது மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யும்?
 
திமுக தலைவரும் மற்ற எதிர்கட்சித்தலைவர்களும் கூறுவதுபோன்று தமிழக முதல்வர் போராட்டக் குழுவினரை சந்தித்துப் பேசுவதால் மட்டும் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படப்போவதில்லை என்றே தோன்றகிறது.. ஏனெனில் அணு உலையை மூடுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் சம்மதிக்கப்போவதில்லை என்று போராட்டக் குழு தலைவரே கூறிவிட்ட நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மட்டுமே இதற்கு முடிவாக அமைய வாய்ப்புள்ளது.
 
அதுவரை எரிபொருள் நிரப்பும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஒத்திவைப்பது மட்டுமே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரமுடியும். அதை விட்டுவிட்டு போராட்டக் குழு தலைவரையும் அவருடைய சகாக்களையும் கைது செய்யும் முயற்சியில் இறங்குவது போராட்டத்தை கூடங்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமல்லாமல் தமிழக கடற்கரையில் வாழும் அனைத்து மீனவ பகுதிகளுக்கும் பரவ வாய்ப்பளித்துவிடும் என்பதை மாநில அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
***********

04 செப்டம்பர் 2012

ஶ்ரீலங்கா Vs தமிழ்நாடு!

 
சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் இலங்கையைச் சார்ந்த இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கலாகாது என்று தமிழகத்தைச் சார்ந்த அனைத்து கட்சி தலைவர்களும் (இந்த விஷயத்தில் மட்டும்தான் இவர்களுக்குள் ஒற்றுமை!) ,மத்திய அரசிடம் வற்புறுத்தினர். இதே இராணுவம்தான் இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்ததுடன் தமிழக மீனவர்களையும் காரணமில்லாமல் துன்புறுத்தி வந்ததுள்ளது என்பதால் அந்த கோரிக்கையில் நியாயம் இருந்தது. ஆனால் மத்திய அரசோ இலங்கை நட்பு நாடு என்பதால் பயிற்சி அளிப்பதை தடுத்து நிறுத்த முடியாது என்று கைவிரித்து விட்டது. .
 
ஆனால் சமீபத்தில்  இலங்கை பள்ளி மாணவர்கள் அடங்கிய கால்பந்து அணி ஒன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் சென்னை சுங்கத்துறை அணியினருடன் விளையாட அனுமதித்ததற்காக அரங்கின் அதிகாரி ஒருவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டதும், சென்னை பள்ளி அணி ஒன்றுடன் விளையாட வந்திருந்த வேறொரு இலங்கை பள்ளி ஒன்றின் கால்பந்தாட்ட அணியை முதலமைச்சரின் உத்தரவின் பேரில் திருப்பி அனுப்பியதும் முட்டாள்தனம் என்றே தோன்றிகிறது.
 
காலங்காலமாக நம்மை விரோதியாக பாவித்து வந்துள்ள பாகிஸ்தானியரையே சென்னை இரு கரம் விரித்து வரவேற்கிறது. மருத்துவ சிகிச்சைக்கென அந்த நாட்டிலிருந்து எத்தனை பேர் வேண்டுமானாலும் வரலாமாம், வேண்டிய காலம் மட்டும் தங்கலாமாம். ஏனெனில் இன்றும் பாகிஸ்தான் சிறைகளில் வருடக் கணக்கில் அடைக்கப்பட்டிருக்கும் பல இந்தியர்கள் வடநாட்டினர்தானே அதனால் நமக்கென்ன என்ற மனநிலை நமக்கு! ஆனால் இலங்கை விஷயத்தில் அப்படியல்ல. இலங்கை இராணுவம் செய்துவரும் அக்கிரமங்களுக்கு அப்பாவி இலங்கை மாணவர்கள்  (இலங்கையில் இருந்து வருபவர்கள் எல்லாருமே சிங்களர்கள் என்பது பொருளல்ல. ஏனெனில் கால்பந்தாட்ட அணியில் தமிழ் மாணவர்களும் இருக்க வாய்ப்புண்டு!) எந்த வகையில் பொறுப்பாவார்கள் என்பது அம்மையாருக்கே வெளிச்சம்! ஒருவேளை நம்மை முந்திக்கொண்டு கலைஞர் எங்கே எதிர்ப்பு குரல் கொடுத்துவிடுவாரோ என்கிற அச்சம் காரணமாக இருக்கலாம். இதை ஒரு மட்டமான oneupmanship politics என்றுதான் கூறவேண்டும்.
 
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாய வேண்டாமா? இரண்டு தினங்களுக்கு முன்பு தஞ்சையை அடுத்த திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள பூண்டி மாதா கோவிலுக்கு வந்திருந்த இலங்கையரை (சிங்களர்கள் என்று பத்திரிகைகளில் குறிப்பிட்டிருந்தாலும் இலங்கையில் கிறிஸ்துவ மதத்தை சார்ந்திருப்பவர்களுள் பெரும்பாலானோர் தமிழர்களே) எதிர்த்து அதிமுகவினரும் வேறு சில துக்கடா கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்களாம்.
 
சில வாரங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து சில இசைச் கலைஞர்கள் யாழ்ப்பாணத்திற்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு வந்தார்களே, அப்போது ஏன் எதுவும் கூறாமல் மவுனம் சாதித்தன இக்கட்சிகள்? அதாவது இங்கிருந்து யார் வேண்டுமானாலும் இலங்கைக்குச் செல்லலாம் (இந்திய கிரிக்கெட் அணி உட்பட), ஆனால் அங்கிருந்து யாரும் இங்கு வரக்கூடாது! இது என்ன நியாயமோ? இலங்கை அதிபர் இந்தியா வந்தால் எதிர்ப்போம். அல்லது அவருடைய அமைச்சரவை சகாக்கள் வந்தால் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். ஆனால் அந்த நாட்டு மக்கள் எவர் வந்தாலும் எதிர்ப்போம் என்றால்......
 
இப்படியே போனால் எதிர் வரும் காலங்களில் சென்னை விமான நிலையத்தின் வாயிலில் நிரந்தரமாக ஒரு கூடாரம் அடித்து இந்த கட்சிகள் இலங்கையிலிருந்து வரும் எவரையும் சென்னைக்குள் விடமாட்டோம் என்று போராட்டம் நடத்தினாலும் வியப்பில்லை!
*******
 
 

13 ஆகஸ்ட் 2012

496. அரசு பதவி உயர்வில் எஸ்.சி/எஸ்.டிக்கு ஒதுக்கீடு!


அரசு அலுவலகங்களில் அளிக்கப்படும் பதவி உயர்வில் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு தனி ஒதுக்கீடு வழங்க உதவும் உத்தரபிரதேச அரசின் உத்தரவை இந்திய அரசியல் சாஸனத்திற்கு எதிரானது என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தன் விளைவாக சட்டத் திருத்தம் கொண்டு வர நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே மசோதா தாக்கப்படும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.

இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எந்த கட்சியும் இதுவரை குரல் கொடுக்க துணியவில்லையென்றாலும் இந்த செய்தியை வெளியிட்ட அனைத்து பத்திரிகைகளின் வாசகர் பகுதிகளிலும் இதற்கு எதிர்மறையான கருத்துக்களே குவிந்தவண்ணம் உள்ளன. அல்லது அத்தகைய கருத்துக்கள் மட்டுமே பத்திரிகைகளால் பிரசுரிக்கப்படுகின்றன என்றும் கூறலாம்.

அரசு துறைகளில் பணி வழங்கப்படும் கட்டத்தில் அளிக்கப்படும் ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்ட மக்கள் பதவி உயர்வு அளிக்கப்படும் கட்டத்திலும் அதே மாதிரியான ஒதுக்கீடு வழங்கப்படுவதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. அப்படியானால் இத்தகைய ஒதுக்கீட்டின் கீழ் அரசு பணியில் நுழையும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரையிலும் அதே பதவியில்தான் இருக்க வேண்டும் என்பதுதான் இவர்களுடைய கருத்தா?

அரசு துறைகளில் பணி வழங்கப்படும் கட்டத்தில் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்களுக்கு அடிப்படை வயது, கல்வித் தகுதி (மதிப்பெண் விகிதம்) ஆகியவற்றில் சலுகை வழங்கப்படுவதன் நோக்கம் என்ன? அவர்கள் சார்ந்திருக்கும் சமுதாயம் அவர்களுடைய மூதாதையர்களுக்கு அவர்களுடைய சாதியை காட்டியே கல்வித்துறையில் சம வாய்ப்புகளை அளிக்க மறுத்ததன் விளைவுதானே, கல்வியிலும் பொருளாதாரத்திலும் அவர்களில் பலரும் இன்றுவரை பின்தங்கியிருப்பதற்குக் காரணம்? அதனால்தானே அவர்களுக்கு இன்னமும் சலுகை அளிக்கப்பட்டு வருகின்றது?

எத்தனை காலம்தான் இத்தகைய சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று மேல்சாதியினருடைய முறையீட்டில் ஓரளவுக்கு நியாயம் இருப்பினும் நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் சாதியின் அடிப்படையில் மக்கள் பிரிவு படுத்தப்பட்டு இழிவு படுத்தப்படுவதும் நடந்துக்கொண்டுதானே இருக்கிறது? சுதந்திர இந்தியாவில்  நியாயமாக கிடைத்திருக்க வேண்டிய பல வாய்ப்புகள் அவர்களுக்கு அவர்களுடைய சாதியின் அடிப்படையில் மறுக்கப்பட்டு வந்ததன் விளைவாகத்தானே அவர்களில் பலரும் இன்றும் பொருளாதாரத்திலும் தாழ்த்தப்பட்டவர்களாகவே இருக்கின்றனர்?

ஆகவே இத்தகையோர் சமுதாயத்தில் மற்றவர்களைப்போன்றே அவர்களும்  சமமாக கருதப்படும் வரையிலும் - அதாவது சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் மட்டுமல்லாமல் இந்தியாவின் கடைக்கோடியிலுள்ள கிராமத்திலும் சாதியின் அடிப்படையில் மக்கள் இழிவு படுத்தப்படுவது ஒழியும் வரையிலும் - அவர்களுக்கென அரசு செய்துவரும் ஒதுக்கீடும் தொடரத்தான் வேண்டும்.

இந்த அடிப்படையில் அரசு அலுவலகங்களில் பணியிலுள்ள எஸ்.சி மற்றும் எஸ்.டி பணியாளர்களுக்கு பதவி உயர்விலும் தனி ஒதுக்கீடு மிகவும் அவசியமே.  பத்து இடங்கள் காலியாக இருக்கும்பட்சத்தில் இத்தகைய ஒதுக்கீட்டின் மூலம் எஸ்.சி/எஸ்.டி வகுப்பைச் சார்ந்த இருவர் அல்லது மூவர் மட்டுமே பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது. ஆகவே இத்தகைய ஒதுக்கீட்டில் பதவி உயர்வு பெறும் எஸ்.சி/எஸ்.டி அதிகாரிகளில் ஒருசிலர் திறமையற்றவர்களாகவோ நேர்மையற்றவர்களாகவோ இருக்க வாய்ப்பிருந்தாலும் அதனால் ஒன்றும் அரசு நிர்வாகம் சீர்கெட்டுப்போய்விடாது. இதனால் பதவி உயர்வு பெறும் வாய்ப்பை பல தகுதியுள்ள மேல்சாதி பணியாளர்கள் இழந்துவிடுவதால் அவர்கள் மனச்சோர்வுக்குள்ளாகி தங்கள் பணியில் அக்கறை செலுத்த மாட்டார்கள் என்ற குற்றச்சாட்டிலும் எவ்வித நியாயமும் இல்லை. இப்போதும் கூட பதவி உயர்வுக்கு தகுதியுள்ள அனைவருக்குமே பதவி உயர்வு கிடைத்துவிடுவதில்லை என்பதுதான் உண்மை! 

**********

04 ஆகஸ்ட் 2012

நாமக்கல் மாவட்டத்தில் 77 தலைமையாசிரியர்கள் ஊழல்!


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக (scholarship) ஆண்டொன்றுக்கு ரூ.1850/- வீதம் (இதுவே மிகவும் குறைவுதான்) அரசு வழங்குகிறது. இத்தொகையை அரசின் ஆதி திராவிடர் நலத்துறையிலிருந்து காசோலையாக  பெற்று அதை மாணவர்களுக்கு வழங்கவேண்டியது அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களின் பொறுப்பு.

தங்களுடைய பள்ளியில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை அரசு இலாக்காவிலிருந்து பெறவே பள்ளிகள இலாக்கா அதிகாரிகளுக்கு கப்பம் கட்டவேண்டியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அதை பெற்று தருவதற்கென்றே தரகர்களை அந்த இலாக்கா - எந்த இலாக்காவில்தான் இத்தகைய தரகர்கள் இல்லை? வாகன உரிமம் வழங்கும் இலாக்காவிலிருந்து ஓய்வூதியத்தை வழங்கும் மத்திய/மாநில இலாக்காவரையிலும் இத்தகைய தரகர்களின் ஆதிக்கம்தானே? - இலைமறைவு காய்மறைவாக நியமித்துள்ளன என்பதும் அனைவரும் அறிந்ததே. சாதாரணமாக இத்தகைய தரகர்களுக்கு கட்ட வேண்டிய கப்பத்தை உதவித்தொகையிலிருந்து பிடித்ததுபோக மீதியை மாணவர்களுக்கு வழங்குவது வழக்கம். இதுதான் காலங்காலமாக நடந்துவருகிறது.

ஆனால் அரசிடமிருந்து பெறும் மொத்த தொகையையுமே போலிக் கையொப்பங்களை இட்டு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களே கபளீகரம் செய்வது என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்றுதான். அதுவும் நாமக்கல்  போன்ற ஒரு சிறிய மாவட்டத்தில் 77 பள்ளி தலைமையாசிரியர்கள் இத்தகைய ஊழலை செய்து தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தி உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கக் கூடிய செய்திதான்.

நன்னெறி கதைகள் கூறி மாணவ செல்வங்களை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பிலுள்ள பள்ளி ஆசிரியர்களே கொள்ளை அடிப்பதை தொழிலாக வைத்திருப்பது வேலியே பயிரை மேய்ந்த கதைதான்.

இத்தகைய ஊழல் நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழகமெங்குமே நடந்திருக்க வாய்ப்புள்ளது என்பதையும் அரசு கவனத்தில் கொண்டு மாநில மற்றும் மாவட்ட கல்வி இயக்குனர் அலுவலகத்தை தங்கள் அதிகார வட்டதிலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆய்வு நடத்த வேண்டுமென உத்தரவிடவேண்டும்.

இத்தகைய ஊழலை தடுக்க அரசு மாற்று வழி ஒன்றை வகுக்க வேண்டியதும் அவசியமாகிறது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் பெயரிலேயே வங்கிகளில் கணக்குகளை துவக்கி அதில் நேரடியாக அரசே உதவித்தொகையை செலுத்தலாம். அல்லது காசோலைகளை மாணவர்கள் பெயரிலேயே வழங்கலாம்.

தாற்காலிக பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மீது பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற நாமக்கல் மாவட்ட காவல்துரை எஸ்.பி. அறிவித்துள்ளதை கருத்தில்கொண்டு பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுடைய பெற்றோர்களும் காலதாமதம் இல்லாமல் புகார் அளிப்பதும் அவசியம்.

இதில் அதிசயம் என்னவென்றால் இத்தகைய ஊழலுக்கு துணை சென்ற ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் எவரும் பணியிடை நீக்கப்பட்டதாக செய்தி இல்லை! அப்படிப்பார்த்தால் எந்த துறை அதிகாரிகள்தான் ஊழலில் ஈடுபடவில்லை? அவர்களை எல்லாம் பணியிடை நீக்கம் செய்ய துவங்கினால் அரசே ஸ்தம்பித்துப் போய்விடுமே? அவர்களை எல்லாம் கைது செய்தால் தமிழகத்திலுள்ள அனைத்து சிறைகளுமே நிரம்பி வழியுமே என்பதால் விட்டுவிட்டார்களோ என்னவோ!!

ஊழல் மேல் மட்டத்திலிருந்து ஒழிக்கப்படுவதை விட இத்தகைய கீழ்மட்ட பணியாளர்களிடமிருந்து ஒழிக்கப்பட வேண்டும். கடந்த பதினெட்டு மாதங்களாக என் வீட்டு கட்டுமான பணியை சரிவர முடிக்க எத்தனை அரசு அதிகாரிகளுக்கு கப்பம் கட்ட வேண்டியிருந்தது? எத்தனை பேரிடம் கை கட்டி நிற்க வேண்டியிருந்தது? 1985 மற்றும் 1992லும் தூத்துக்குடியில் வீடு கட்டினேன். அப்போது இந்த அளவு சிரமப்பட்டதில்லை. நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துள்ளதோ இல்லையோ கையூட்டு பெறும் அதிகாரிகளின் எண்ணிக்கை மிகவும் கணிசமாகவே வளர்ந்துள்ளது!

வாழ்க பாரதம், வாழ்க ஜனநாயகம்!

***********

03 ஆகஸ்ட் 2012

இந்திய அரசியல் சாக்கடையில் மூழ்குகிறார் அன்னா ஹசாரே!

அன்னா ஹசாரேவும் அவருடைய குழுவினரும் தங்களுடைய உண்னாவிரதத்தை முடித்துக்கொண்டு முழுநேர அரசியலில் குதிக்கவிருப்பதாகவும் எதிர்வரும் தேசீய பொதுத் தேர்தலில் போட்டியிடவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வரவேற்கத்தக்க முடிவு.

இன்று நாட்டில் பரவி நிற்கும் ஊழலுக்கு முக்கிய காரணமே இந்திய அரசியல்வாதிகள்தான் என இதுவரை கூறிவந்த அன்னாவும் அவருடைய குழுவினரும் தனிக்கட்சி ஒன்றை துவக்கி தற்போது தேசீய அரசியலில் உள்ள எந்த தேசிய /பிராந்திய கட்சிகளுடனும் கூட்டு வைத்துக்கொள்ளாமால் தேர்தலை தனித்து எதிர்கொண்டு வெற்றி பெறுவது சாத்தியம்தானா என்பதையும் எண்ணிப் பார்த்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

கடந்த ஆண்டு, நாட்டிலுள்ள ஊழலை எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவர் துவக்கியபோது மக்கள், குறிப்பாக படித்த, நடுத்தர மக்களிடமிருந்து அவருக்கு அபிரிதமான ஆதரவு இருந்தது உண்மைதான். ஏனெனில் அவருடைய போராட்டம் எந்த தனிப்பட்ட அரசியல்வாதிக்கோ கட்சிக்கோ எதிராக இல்லாமல் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமே முன்வைத்து நடத்தப்பட்டது.

அவருடைய கோரிக்கை நியாயமானதோ இல்லையோ அல்லது வெறும் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டால் மட்டுமே நாட்டிலுள்ள ஊழலை ஒழித்துவிட முடியும் என்ற வாதம் சரியோ இல்லையோ இதற்கு ஒரு துவக்கத்தையாவது ஏற்படுத்த லோக்பால் மசோதா உதவும் என்ற எண்ணம் நடுத்தர மக்களிடம் இருந்ததுதான் அவருடைய முயற்சிக்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் ஆதரவு கிடைக்க காரணம்.

ஆனால் ஊழலை எதிர்த்து போராட்டத்தை துவக்கிய அன்னாவும் அவருடைய குழுவினரும் நாளடைவில் நாட்டை தற்போது ஆளும் மத்திய அமைச்சர்கள் பலரையும், ஏன் பிரதமரையும் குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பிரணாப்பையும் தகுந்த ஆதாரம் இல்லாமல் குற்றஞ்சாட்ட முனைந்ததுதான் அவரை அதுவரை ஆதரித்து வந்த பலரையும் பின்வாங்க வைத்தது.

அன்னாவும் அவருடைய குழுவினரும் ஒரு பொறுப்பற்ற, தாங்கள் கூறுவதுதான் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது என்று பிடிவாதம் பிடிக்கும் ஒரு கூட்டம் என்பதுதான் இன்று பலருடைய கருத்தும் என்றால் மிகையாகாது. ஆகவேதான் இம்முறை அவர் மீண்டும் உண்ணாவிரதத்தை அறிவித்தபோது முன்பு இருந்த அளவுக்கு கூட்டம் சேராமல் போனது. மேலும் தற்போதுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுமே ஊழல் பேர்வழிகள்தான் என்பதுபோன்ற பொறுப்பற்ற  பேச்சும் பா.ஜ.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் அவருடைய இயக்கத்தை புறக்கணிக்க வைத்தன.

இதே நிலை நீடித்தால் தன்னுடைய போராட்டம் வலுவிழந்துபோய்விடுமோ என்ற அச்சம்தான் அவரை உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்குத் தள்ளியிருக்க வேண்டும். இப்போதுமட்டுமல்லாமல் இனி எப்போதும் இதுபோன்ற போராட்டத்திற்கு மக்களுடைய வரவேற்பு முன்பிருந்ததுபோல் இருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த அவருடைய நெருங்கிய ஆதரவாளர்கள் - இவர்களில் பலருக்கு இதுவேதான் இப்போதைய முக்கிய தொழில் என்பது வேறுவிஷயம் - ஒரு புதிய அரசியல் கட்சியை துவக்கி தேர்தலை சந்திக்கலாம் என்ற யோசனையை அன்னாவின் மனதில் தெளித்திருக்க வேண்டும்.

ஒரு அரசியல் கட்சியை, அதுவும் தேசிய அளவில், துவக்கி நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது என்பது அத்தனை எளிதா என்ன? இந்த முயற்சியில் ஒருசில பிராந்திய கட்சிகள்  மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளன என்பது உண்மைதான். ஆனால் தேசிய அளவில் அது நிச்சயம் சாத்தியமில்லை என்பது அன்னா ஹசாரேவுக்கு தெரியுமோ என்னவோ அவருடைய குழுவிலுள்ள 'அறிவுஜீவிகளுக்கு' நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் அவர்களுக்கு பொழுதுபோக வேண்டுமே? தேர்தலில் வெற்றி பெற்றால் அது தங்களுடைய சொந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் தோற்றால் ஊழலுக்கு கிடைத்த வெற்றி  என்றும் - கேப்டன் பாணியில் - ஒரு அறிக்கை விட்டுவிட்டுலாமே என்று நினைத்திருக்கலாம்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நடந்து முடிந்த 10 மாநில தேர்தல்கள் பல பிராந்திய கட்சிகளுக்கே வலு கூட்டியுள்ளன என்பதையும் கருத்தில்கொண்டால் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவும் கூட கடந்த தேர்தலில் கிடைத்த இடங்களை தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்பதே சந்தேகம்தான். இந்த லட்சணத்தில் அரசியலுக்கு அறிமுகமே இல்லாத அறிவுஜீவிகளை களத்தில் இறக்கிவிடப் போகும் அன்னாவின் கட்சியின் நிலை என்னவாக இருக்கும்?
***********

24 ஜூலை 2012

தலைக்கனம் பிடித்த தலைவர்கள்!

உலக அரசியலில் மிக அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்களுள் பலர் குறிப்பாக, முசோலினி, ஸ்டாலின், ஹிட்லர்,சதாம் ஹுசைன் ஆகியோர் தலைக்கனம் பிடித்த தலைவர்களாக இருந்தனர். மகாத்மாவை 'அரை நிர்வாண பக்கிரி' என்று வர்ணித்த மற்றும்  இந்திய சுதந்திரத்திற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக இருந்த சர்ச்சிலும் தலைக்கனம் பிடித்தவர் என்பது பிரசித்தம்.

இந்த வரிசையில் முக்கிய இடம் பெறக் கூடிய அளவிற்கு தலைக்கனம் பிடித்த தலைவர்கள் பலரும் நம் நாட்டிலும் உள்ளனர் என்றால் மிகையாகாது, தமிழகத்தையும் சேர்த்து. இவர்களுக்கு தங்களை விட்டால் இந்த நாட்டையோ மாநிலத்தையோ ஆள ஆளில்லை என்கிற நினைப்பு! தங்களைத் தவிர மற்ற அனைவருமே, அவர்கள் தங்களுடைய கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் அல்லது எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருப்பினும் முட்டாள்கள் என்கிறை நினைப்பு வேறு.

இன்று மாநிலங்களில் சிலவற்றையும் மத்தியில் சில அமைச்சகங்களையும் தலைமையேற்று நடத்தும் தலைவர்கள் அடிக்கின்ற சில்லறைத்தனமான கொட்டங்களால் நாடே சிரிப்புக்குள்ளாகி வருவதைப் பார்க்கிறோம். ஏன் மத்திய அரசை எப்போதும் குறை கூறி வரும் மத்திய எதிர்க்கட்சி தலைவியும் இந்த வரிசையில் குறிப்பிட தகுதியுள்ளவர்தான்!

அதிலும் குறிப்பாக சில நாட்களாக மத்திய அமைச்சரவையில் எனக்குத்தான் முதலிடம், எனக்குத்தான் இரண்டாம் இடம் என்று சில மூத்த அமைச்சர்கள் போடும் ஆட்டம் தாங்க முடியவில்லை.

நேற்று குடியரசு தலைவரை வழியனுப்பும் விழாவில் கலந்துக்கொண்ட நாட்டின் இரு முக்கிய பெண் தலைவர்களுக்கிடையிலும் எங்கள் தலைவருக்கு இரண்டாம் இடம் அளிக்கவில்லையென்பதால் மத்திய அமைச்சரவியில் இருந்து விலகுவதாக அறிவித்த கட்சியின் ப்ரஃபுல் பட்டேலுக்கும் இடையில் நடந்த உரையாடலை மிகவும் வேடிக்கையாக வெளியிட்டுள்ளது ஒரு வட இந்திய ஊடகம்.

ஆளுங்கட்சித் தலைவி பட்டேலிடம் 'இந்த பிரச்சினையை தீர்க்க எதையாவது செய்யூங்களேன்' ('please do something') என்றாராம். உடனே அருகில் நின்றிருந்த எதிர்க்கட்சித் தலைவி,'ஒன்றும் செய்யாதீர்கள்' ('Don't do anything') என்றாராம்! பட்டேல் என்ன மறுமொழி கூறுவதென தெரியாமல் திகைத்து நின்றாராம்.

ஒருவேளை இது வேடிக்கையாக நடைபெற்ற உரையாடலாக இருக்கலாம். ஆனால் இதுதான் இன்றைய சூழ்நிலை. கடந்த சில நாட்களாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுக்கு இடையில் நடைபெற்றுவரும் பனிப்போர் தீர்ந்தபாடில்லை. இதனால் ஆட்சி சரிவர நடைபெறவில்லை, பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் ஏழை எளிய மக்கள் மேலும் நலிவடைகின்றனர் என்று வெளியில் ஒப்பாரி வைக்கும் எதிர்க்கட்சித் தலைவி எதையாவது செய்து இந்த சிக்கலைத் தீர்த்து விடுவார்களோ என்ற அச்சத்தில் 'ஒன்றும் செய்யாதீர்கள்' என்கிறார் திரை மறைவில். என்ன நாடகம் இது?

இந்த தலைக்கனம் பிடித்த தலைவர்களுக்கிடையில் சிக்கிக்கொண்டு தவிப்பது நம்முடைய 'under achiever'  பிரதமர். சில்லறை விஷயங்களுக்காக இவ்வாறெல்லாம் ஆட்டிப்படைக்கும் சகாக்களைக் கட்டி மேய்க்கவே அவருக்கு நேரம் சரியாக இருக்கும்போது அவரால் எப்படி சாதிக்க முடியும்!

இதற்கெல்லாம் தீர்வு வேண்டுமென்றால் எதிர்வரும் பொதுத்தேர்தலில் 'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்ற முட்டாள்தனமான கூச்சலை அடியோடு ஒதுக்கிவிட்டு மத்தியில் ஒரே கட்சி ஆட்சியை கொண்டுவர வேண்டும். அது காங்கிரசோ அல்லது பி.ஜே.பியோ, தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை அமைக்கும் வகையில் வாக்களிப்பது மிகவும் முக்கியம். ஆனால் அதே சமயம் எந்த கட்சியும் அசுர பலம் (நம் தமிழகம் அதற்கு முக்கிய உதாரணம்: அம்மையார் இப்போது போடும் ஆட்டத்திற்கு இந்த அசுர பலம்தான் காரணம்) பெற்றுவிடக் கூடாது. இடது சாரி கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் போக வேண்டும். மாநில கட்சிகளுக்கு பெருத்த வாய்ப்பு அளிக்கக் கூடாது. குறைந்தபட்சம் ஐந்து மாநிலங்களிலாவது ஆட்சியிலிருக்கும் தேசிய கட்சிகளுக்கு மட்டுமே மத்தியில் ஆள வாய்ப்பளிக்க வேண்டும். குறிப்பாக கிடைத்த வரைக்கும் லாபம் என்ற அளவுக்கு கொள்ளையடிப்பதிலேயே குறியாயிருக்கும் திராவிட கட்சிகளுக்கு நிச்சயம் வாய்ப்பளிக்கவே கூடாது.
**********

15 ஜூன் 2012

ஜனாதிபதி பதவியும் மூன்று பெண்களின் ஈகோவும்..

நம் நாட்டின் மிக உயர்ந்த பதவி என கருதப்படுவது ஜனாதிபதி பதவி. ஆனால்
அந்த பதவிக்கு இதுவரை, அதாவது டாக்டர் ராதாகிரிஷ்ணனுக்குப் பிறகு, பொருத்தமானவர் தெரிவு செய்யப்பட்டுள்ளாரா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஏன், கலாம் தகுதியானவராக உங்களுக்கு தெரியவில்லையா என்றால் இல்லை என்றுதான் கூறுவேன். நடிகர் விவேக்கை தனக்கு மிகவும் பிடித்தமான ஏற்றுக்கொள்வது என்ற சிரமம்தான். மேலும் அவர் நாட்டின் சிறந்த அணு விஞ்ஞானியாக வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம். அல்லது மாணவ சமுதாயத்தின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ளவ தலைவராக வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பதவிக்காலம் முடிந்தபிறகும் அதிலேயே மேலும் ஒட்டிக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் செயல்பட்ட ஒருவரை அந்த பதவிக்கு தகுதியானவராக என்னால் கருத முடியவில்லை.

சாதாரணமாக ஜனாதிபதி பதவிக்கு நாட்டின் அனைத்து கட்சிகளும் கருத்தொருமித்து தெரிவு செய்வதுதான் சிறந்தது என்ற கருத்து இருந்தது. நாடாளுமன்றத்தில் ஆட்சியிலிருக்கும் கட்சி ஓரிருவரை முன்மொழிவதும் வர்களுள் ஒருவரை அதாவது  அனைத்து கட்சிகளுடனும் ஆலோசித்து  அனைவருக்கும் உகந்தவராக கருதப்படுபவரை தெரிவு செய்வது மரபாக இருந்தது.  ஆனால் வி.வி. கிரி காலத்திலிருந்து அந்த எண்ணம் தகர்த்தெறியப்பட்டு நாட்டின் உயர் பதவிக்கும் போட்டி என்ற நிலை ஏற்பட்டது. அதற்கு முழு காரணம் இந்திரா காந்தி அம்மையார்தான்.

அன்று முதல் இன்றுவரை ஜனாதிபதிக்கு போட்டி என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஆனால் இம்முறை நம் நாட்டின் அரசியலில் மும்மூர்த்திகளாகிவிட்ட மூன்று பெண் அரசியல்வாதிகள் (அவர்கள் பெயர் தேவையில்லாத ஒன்று என்று கருதுகிறேன்.) தங்களுடைய சுய கவுரவத்திற்காக, ஏன் தாந்தோன்றித்தனமாக என்றும் கூறலாம், மூன்று நான்கு தலைவர்களின் பெயர்களை -அவர்களை கலந்தாலோசித்துதான் நடக்கிறதா என்று கூட தெரியவில்லை - அறிவித்துக்கொண்டிருப்பது இதுவரை இல்லாத ஒன்று.

அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருப்பது மிகவும் சகஜம். ஆனால் அதை தனிப்பட்ட கருத்து வேறுபாடாக கருதி 'நீ சொல்வதை நான் கேட்க மாட்டேன், நான் சொல்வதை நீ கேள்' என்ற போக்கில் ஆளுக்கொரு பெயரை அறிவித்துக்கொண்டிருப்பது நாட்டிற்குள் மட்டுமல்லாமல் நாட்டிற்கு வெளியிலும் அவப்பெயர் ஏற்படுவதை ஏன் இந்த பெண் தலைவர்கள் உணர்ந்துக்கொள்வதில்லை?

இந்த பெண் தலைவர்களுக்குப் பின்னால் சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேல் அரசியல் மற்றும் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ள அரசியல் தலைவர்களும் ஓடுவதை பார்த்தால் வேதனையாகத்தான் இருக்கிறது.

இந்த சிக்கல் எப்போது முடிந்து யார்த்தான் அடுத்த ஜனாதிபதி நாற்காலியில் அமரப் போகிறாரோ தெரியவில்லை. ஆனால் ஒன்று, அதில் யார் அமர்ந்தாலும் மத்தியிலுள்ள ஆளுங்கட்சியின் கைப்பாவையாகத்தான் செயல்படப் போகிறார் என்பது மட்டும் உண்மை.
********

27 மார்ச் 2012

படிக்காவிட்டால் பிச்சைதான் எடுக்கணும்!

         இது சாதாரணமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளூக்கு கூறும் அறிவுரை. ஆனால், கர்நாடகா மாநிலத்தில் ஒருவர் இதை வெறும் அறிவுரையாக மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. தன்னுடைய மகளுடைய கையில் ஒரு தட்டைக் கொடுத்து கோவில் வாசலில் பிச்சை எடுக்க வைத்தாராம்!

பள்ளிச் சீருடையில் கோவில் வாசலில் மற்ற பிச்சைக்காரர்களுடன் அமர்ந்திருந்த சிறுமியைக் கண்ட பொது மக்கள்  விசாரிக்க சாலையின் மறுபுறம் காரில் அமர்ந்திருந்த தந்தையைச் சுட்டிக்காட்டி அவர்தான் தன்னை இவ்வாறு தண்டித்ததாக கூறினாராம். கொதிப்படைந்த பொதுமக்கள் தந்தையையும் அவருடன் காரில் அமர்ந்திருந்த பெண் ஒருவரையும் (சிறுமியின் தாய் இறந்துவிட்டாராம்) திட்டியதுடன் காவல்துறைக்கும் தகவல் அளித்தனராம்.

காவல்துறை விசாரனையில் சரியாக படிக்காவிட்டால் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று வாழ்க்கையின் நிதர்சனத்தை மகளுக்கு உணர்த்தவே இப்படி செய்தேன் என்றாராம் தந்தை!

என்ன கொடுமை பாருங்கள்! இந்த லட்சணத்தில் அவர் ஒரு தாசில்தாருடைய மகனாம்.
வாழ்க்கையில் வெற்றியடைய படிப்பு அவசியம்தான். ஆனால் படித்தவர்கள் அனைவருமே வாழ்க்கையில் வெற்றியடைந்து விடுவதில்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதுபோலவே படிக்காதவர்கள் அனைவருமே தெருவில் பிச்சை எடுத்துத்தான் பிழைப்பு நடத்தவேண்டி வரும் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்தான்.
இதை எப்போதுதான் பெற்றோர்கள் புரிந்துக் கொள்ளப் போகிறார்களோ?





 

 

 

 

 

 

23 மார்ச் 2012

உதயகுமார் என்ன தீவிரவாதியா?

உண்மைக்கு புறம்பாக செய்திகளை வெளியிட்டே தமிழகத்தில் பிரபலமடைந்த மேல்சாதி வெறி பிடித்த தமிழ் நாழிதழ் ஒன்று கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு தலைவர் உதயகுமார் மீனவர் வேடமிட்டு கடல் வழியே நாட்டை விட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக மீண்டும் ஒரு அப்பட்டமான பொய் செய்தியை வெளியிட்டுள்ளது.

உதயகுமாரை தேசீய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாகவும் அவருடைய ஆதரவாளர்களே அவரை மிக விரைவில் காட்டிக்கொடுத்துவிடுவார்கள் என்றெல்லாம் செய்தி வெளியிட்டு மகிழ்வடைகிறது இந்த வெட்கங்கெட்ட பத்திரிகை.
ஏற்கனவே ஒரு பிரிவினரைப் பற்றி கேவலமாக எழுதி தமிழகமெங்குமுள்ள நீதிமன்றங்களில் வழக்குகளை சந்தித்துக்கொண்டிருக்கும் இந்த பத்திரிகை இப்படிப்பட்ட பொய்யான செய்திகளை வெளியிட்டு மதக்கலவரத்தையும் தூண்டிவிட முயல்கிறது என்றால் மிகையல்ல.


உதயகுமார்,  அவருடைய போராட்டக் குழுவினர் மற்றும் அவர் போராட்டம் நடத்த இடம் அளித்த பாதிரிமார்கள் ஆகியோர் மீது இதுவரை சுமார் 250க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என பட்டியலிடும் இந்த பத்திரிகை உதயகுமார் இவற்றிலிருந்து மீளவே முடியாதென்றும் அவர் குறைந்தபட்சம் ஏழாண்டுகளாவது சிறையில் இருந்தே ஆகவேண்டும் என்றும் கொக்கரிக்கிறது.

உதயகுமார் என்ன தீவிரவாதியா அல்லது கொள்ளைக் கூட்டத் தலைவனா?

இலட்சம் கோடிகைளை வாரி விழுங்கி ஏப்பம் விட்ட அரசியல்வாதிகளும் அவர்களுடைய அடிவருடிகளான அதிகாரிகளும் பேருக்கு சில நாட்கள் சிறையில் ராஜபோக வாழ்க்கையை அனுபவித்துவிட்டு பிணையில் வெளி வந்து அரசியல் பேசிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டில் பொதுநலனுக்காக ஒரு அறப்போராட்டத்தை எவ்வித வன்முறையிலும் ஈடுபடாமல் தலைமையேற்று நடத்திக்கொண்டிருக்கும் ஒரு சாமான்ய மனிதரை ஒரு தீவிரவாதியைப் போல் சித்தரித்து அவரை தேசீய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று செய்தி வெளியிடுகிறவர்களுக்கு என்ன தண்டனை அளிப்பது?

வாருங்கள், வந்து உதயகுமாரை மட்டுமல்லாமல் அவருடன் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் எங்கள் அனைவரையும் கைது செய்து சிறையிலடையுங்கள், இலங்கையில் உள்ள தமிழர்களைப் போன்றே எங்களையும் சுட்டு வீழ்த்துங்கள் என்று மன உறுதியுடன் கண்ணீர் மல்க பேட்டியளிக்கும் அந்த அப்பாவி பெண்களையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுங்களேன். இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் கூச்சலிடும் அரசியல்வாதிகள்  உள் நாட்டிலேயே ஒரு குக்கிராமத்தில் வாழும் மக்களை அவர்களுடைய அடிப்படை தேவைகளான உணவு, குடிநீர், மின்சாரம் ஆகியவற்றை பெற முடியாமல் 144 தடையுத்தரவு என்கிற பெயரில் சிறைபிடித்து வைத்திருப்பதற்கு என்ன பொருள்? இலங்கைத் தமிழர்களுக்கு குய்யோ முறையோ என்று மார்பில் அடித்துக்கொண்டு புலம்பிய தமிழ் பதிவாளர்கள் ஏன் இதில் எவ்வித அக்கறையும் இல்லாமல் இருக்கின்றீர்கள்?

இது ஒரு சிறிய மதத்தைச் சார்ந்த ஏழை மீனவர்களின் பிரச்சினைதானே என்றுதானே இந்த மவுனம்?

 எங்கோ வசிக்கும் தமிழனுக்கு ஏற்பட்ட கொடுமைகளை விலாவரியாக பக்கம், பக்கமாய் எழுதிக் குவித்த பதிவாளர்கள் எங்கே போனார்கள்? இடிந்தகரையில் காவல்துறையும் ராணுவமும் சுற்றிவளைத்து மக்களை சிறைபிடித்து வைத்துள்ளதற்கு எங்கே உங்கள் எதிர்ப்பு? எத்தனை நாளைக்கு தொடரப்போகிறது இந்த கொடுமை?


************

22 மார்ச் 2012

சிறுபான்மையினரை சிறுமைபடுத்தும் மத்திய அரசு

சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் சிறப்பு மிக்க முறையில் பணியாற்றி வந்தவர்கள் கிறிஸ்துவ பாதிரியார் மற்றும் கன்னியர்கள். அவர்களால் நடத்தப்பட்டு வரும் கல்வி நிறுவனங்களில் பயின்று இன்று உலகெங்கும் பணிபுரிபவர்களுள் பெரும்பாலோனோர் கிறிஸ்துவர் அல்லாதோரர் என்றால் மிகையல்ல. அதுபோன்று இலவச அல்லது குறைந்த செலவில் சேவை மனப்பான்மையுடன் அவர்களால் வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகளால் காப்பாற்றப்பட்ட உயிர்களுள் பெரும்பாலோனோர் கிறிஸ்துவர் அல்லாதோரே.

ஆயினும் தன்னை ஒரு மதச் சார்பற்ற நாடாக பறைசாற்றிக்கொள்ளும் இந்தியாவில் அன்று முதல் இன்று வரை சிறுபான்மை மக்களை உதாசீனப்படுத்துவது மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளில் ஒன்றாகவே இருந்து வருகிறது என்பதை அரசின் (அது எந்த கட்சியால் ஆளப்பட்டாலும்) செயல்பாடுகள் பல சமயங்களில் எடுத்துக்காட்டியுள்ளன. தேர்தல் காலத்தில் காலைப் பிடிப்பதும் அது முடிந்ததும் காலை வாரிவிடுவதும் நாட்டை இதுவரை ஆண்ட அனைத்துக்கட்சிகளும் கடைபிடித்துவந்த எழுதா கொள்கை என்றும் கூறலாம்.

இதுவரை நாட்டை ஆண்ட கட்சிகளுள் காங்கிரஸ் மட்டுமே சிறுபான்மை சமூகத்தை, அவர்கள் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டை அங்கீகரித்து
, ஆதரித்து வந்த கட்சி என்பது சிறுபான்மையினரிடையே பரவலாக நிலவி வந்த கருத்து. ஆனால் சமீப காலமாக, அதாவது கூட்டணி என்ற பெயரில் நாட்டிலுள்ள சந்தர்ப்பவாத கட்சிகளையெல்லாம் இணைத்துக்கொண்டு ஆட்சி என்ற பெயரில் நாட்டையே கேலிக்குரியதாக்கி வரும் காங்கிரஸ் தலைமையிலான இந்த ஆட்சி சிறுபான்மையினரை சமீப காலமாக சிறுமைப்படுத்தி வருவதை காணமுடிகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறப்பதனால் ஏற்படக்கூடிய பாதகங்களினால் நேரடியாக பாதிக்கப்படவிருக்கும் இடிந்தகரை கிராமத்தின் மொத்த ஜனத்தொகையில் 80 விழுக்காடுக்கும் மேலுள்ளவர்கள் மீனவர்கள். அவர்களுள் பெரும்பான்மையினர் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள். ஆகவே அவர்கள் வழிபடச் செல்லும் தேவாலயங்களை நிர்வகிக்கும் பாதிரியார்களும் அவர்களுடைய இந்த போராட்டத்திற்கு ஆதரவளித்தே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானவர்கள். அத்தகைய பாதிரியார்களுக்கு மறை மாவட்ட அளவில் தலைவராக இருக்கக் கூடிய தூத்துக்குடி ஆயர் அவர்களும் இந்த போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு அளிக்க வேண்டிய சூழல்.
எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்துயமத்திய அரசுக்கு எதிராக கத்தோலிக்க பாதிரியார்களும்
, ஆயர்களும் இத்தகைய மாபெரும் மக்கள் போராட்டத்திற்கு துணிந்து ஆதரவு அளிக்க முன்வந்ததில்லை. இந்து மதத்திலிருந்து மதம் மாறிய ஒரே காரணத்திற்காக அதுவரை வழங்கப்பட்டிருந்த சலுகைகள் தலித் கிறிஸ்துவ மக்களுக்கு மறுக்கப்பட்டபோதும் உலகளவில் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய போராட்டத்தை அவர்கள் முன் நின்று நடத்தியதில்லை.

னெனில் இடிந்தகரை மக்கள் தற்போது நடத்திவரும் போராட்டம் அவர்களுடைய வாழ்வாதாரத்தை  மட்டுமல்லாமல் அவர்கள் உயிர் வாழ்வதையே பாதிக்கக் கூடும் என்கிற அச்சத்தால் - வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், உயிர் பயத்தால் - ஏற்பட்ட தன்னிச்சையான போராட்டம் என்பதால்தான் அவர்களுடைய ஞான மேய்ப்பர்களான பாதிரிமார்கள் ஆதரவு அளிக்க முன்வந்தனர். ஆனால் இந்த போராட்டத்தில் கத்தோலிக்க கிறீஸ்த்துவர்கள் மட்டுமே பங்கு கொள்வதுபோலவும் இடிந்தகரை கிராமத்திலும் அதைச் சுற்றிலுமுள்ள கிராமங்களில் வசிக்கும் மற்ற மதத்தினர் எவரும் இதில் கலந்துக்கொள்ளாமல் இருப்பதுபோலவும் சில நாளேடுகளும் ஊடகங்களும் சித்தரிப்பது விஷமத்தனமானது. இந்த போராட்டக் குழுவை முன்நின்று நடத்துபவரே கிறீஸ்துவரல்ல என்பதை மறந்துவிட்டன இந்த பத்திரிகைகள்!

இது கிறிஸ்துவர்களால் கிறிஸ்துவர்களுக்காக நடத்தப்படும் போராட்டம் என்பதாகவும் ஆகவே சில கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நன்கொடைகளை இந்த போராட்டக் குழுவின் தலைவர் நடத்துகின்ற தொண்டு நிறுவனத்திற்கு மாற்றியதுபோலவும் கற்பனையாக ஒரு குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் என்ற பதவிக்கே களங்கம் வருவித்துக்கொண்டிருக்கும் ஒரு இணை அமைச்சர் பகிரங்க புகார் வைத்தார்.
 ஆனால் அதை முழுமையாக நிரூபிக்க முடியாமல் போகவே தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயரின் தலைமையில் செயல்பட்டு வரும் தூத்துக்குடி பல்நோக்கு சேவை மையத்தின் பெயரில் வழங்கப்பட்டிருந்த வெளிநாட்டு நன்கொடை உரிமத்தை (FCRA A/c)யும் அந்த தொண்டு நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளையும் முடக்கி வைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

FCRA விதிகளின்படி ஒரு திட்டத்திற்காக பெறப்பட்ட நன்கொடையை வேறொரு திட்டத்திற்காக பயன்படுத்தலாகாது என்பது உண்மைதான். ஆனால் அதன் உள்நோக்கம் என்னவென்று பார்த்தால் சேவை நோக்கத்துடன் ஒரு திட்டத்தை தயாரித்து அதற்கென நன்கொடையை பெற்று பிறகு அந்த நிதியை லாப நோக்கத்துடன் செயல்படவிருக்கும் வேறொரு திட்டத்திற்காக பயன்படுத்தக்கூடாது என்பதுதான். உதாரணத்திற்கு சமூகக் கூடம் ஒன்றை கட்டுவதற்காக ஒரு திட்டத்தை தயாரித்து அதற்கென வெளிநாடுகளிலிருந்து பெற்ற நன்கொடையை வியாபார நோக்குடன் ஒரு திருமண மண்டபமோ அல்லது கேளிக்கை விடுதியோ கட்ட பயன்படுத்தக் கூடாது என்ற நோக்கில்தான் இத்தகைய விதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


நான் தூத்துக்குடியில் கிளை மேலாளராக பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் இதே தூத்துக்குடி தொண்டு நிறுவனம் கண்கானிப்பில் செயல்படுத்தப்பட்டு வந்த பல மக்கள் நல திட்டங்களில் பங்குக்கொண்டு அவர்கள் பரிந்துரைத்த மக்களுக்கு சலுகைக் கடன்கள் வழங்கியிருக்கிறேன். மற்ற அரசு இலாக்காக்களைப் போலல்லாமல் கடன் பெற தகுதியானவர்களை இனங்கண்டு பரிந்துரைப்பதுடன் நின்றுவிடாமல் வங்கிகள் வழங்கும் கடன் தொகையை முழுவதுமாக வசூலிக்கவும் இந்த தொண்டு நிறுவனம் உதவியுள்ளது.

இன்றும் அந்த தொண்டு நிறுவனம் பெறும் நன்கொடைகளை நம்பி தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயரின் கண்கானிப்பில்  230 கல்வி நிறுவனங்கள், 3 மருத்துவமனைகள், 18 சுகாதார மையங்கள் மற்றும் 1200 அனாதை குழந்தைகள், ஊனமுற்றோர், முதியோர், மனநலம் குன்றியோர், கைவிடப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் இல்லங்கள் இயங்கிவருகின்றன. இவை அனைத்தும் மத்திய அரசின் இந்த அடாவடி நடவடிக்கையால் முடங்கிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த தொண்டு நிறுவனத்தின் ஆண்டு கணக்குகளை தணிக்கை செய்து வரும் தணிக்கை நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கை கூடங்குளம் போராட்டக் குழுவினருக்கு எவ்வித நன்கொடையும் திருப்பிவிடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய பிறகும் வேண்டுமென்றே ஏதோ ஒரு நலத்திட்டத்திற்காக பெற்ற நன்கொடையை வேறொரு நலத்திட்டத்திற்காக பயன்படுத்தியுள்ளது என்பதை குற்றமாக கற்பித்து ஒரு சிறுபான்மையினரால் கால் நூற்றாண்டுக்கும் மேல் திருப்திகரமாக செயல்பட்டு வந்த ஒரு தொண்டு நிறுவனத்தின் வங்கி கணக்கை முடக்கி அதை சார்ந்திருக்கும் பல ஏழை எளியவர்களின் வாழ்க்கையில் விளையாடும் மத்திய அரசின் போக்கு வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இத்தகைய அடாவடிச் செயலுக்கு காரணம் காங்கிரஸ் என்று ஒட்டுமொத்தமாக குறைகூற முடியாது. ஆனால் மனமுதிர்வில்லாத ஒருசில மத்திய அமைச்சர்களே இதற்குக் காரணம். அவர்களை அடக்கி ஆள திராணியில்லாத சாதுவான ஒரு பிரதமர் அமைச்சரவைக்கு தலைவராக இருப்பதும் ஒரு காரணம்.


*********

20 மார்ச் 2012

கூடங்குளம் அணு உலையும் தமிழக அரசும்


அனைவரும் எதிர்பார்த்தபடி தமிழக அரசு குறிப்பாக, அதன் முதல்வர், தன்னுடய முந்தைய எதிர்ப்பைமறந்துவிட்டு கூடங்குளம் அணு உலையை திறக்க அனுமதித்துள்ளார்.


இதுவரை 'உள்ளூர் மக்களின் அச்சத்தை போக்கும்வரை அணு உலை பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்' என்று மத்திய அரசிற்கு கடிதங்கள் எழுதி வந்த முதல்வர் இப்போது மத்திய அரசும் தன்னுடைய அரசும் அமைத்த வல்லுனர் குழுவினர் சமர்ப்பித்த அறிக்கைகள் தமக்கு திருப்தியளிப்பதாக இருப்பதாக கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது.

ஏனெனில் கூடங்குளம் அணு உலை கட்டுமான பணிகள் இன்றோ, நேற்றோ துவக்கப்பட்டவை அல்ல. அடிப்படை ஆய்வு பணிகள் துவக்கப்பட்டதோ 1988ம் ஆண்டு. அதன் பிறகு அம்மையாரே இரு முறை முதல்வராக இருந்துள்ளார். அப்போதெல்லாம் அணு உலை கட்டுமானப் பணிகள் தொடர்வதற்கு எவ்வித மறுப்பும் கூறாமல் இருந்தவர் ஆயத்த பணிகள் அனைத்தும் முடிந்து மின் உற்பத்தி துவங்கவிருக்கும் சூழலில் திடீரென்று அதற்கு முட்டுக்கட்டையாக நின்றது சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை மனதில் வைத்துத்தானே தவிர அணு உலையைச் சுற்றிலும் வாழும் ஏழை மக்கள் மீதுள்ள அக்கறையால் அல்ல. அத்துடன் பிரதமருடன் நீயா, நானா என்று அவர் நடத்திய தன்மான போராட்டமும் ஒரு காரணம். அணு உலை அமைந்துள்ள மாநிலத்தின் முதல்வர் நான் இருக்க என்னை கலந்தாலோசிக்காமல் மின் உற்பத்தி தியதியை தன்னிச்சையாக மத்திய அரசு எப்படி தீர்மானிக்கலாம் என்கிற ஆணவமும் முதலில் இதை எதிர்த்ததற்கு ஒரு காரணம்.

ஆனால் அதே அணு உலைக்கு ஆதரவாக பா..கவின் போக்கு உள்ளது என்பதை அம்மையார் உணர்ந்தபோதுதான் மாநில அளவில் ஒரு வல்லுனர் குழுவை நியமித்து அணு உலை பாதுகாப்பானதுதான் என்பது போன்ற அறிக்கையை பெற்று இந்த சிக்கலில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தார். பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல் அம்மையாரின் உள் எண்ணத்தை உணர்ந்த அவருடைய ஜன்ம எதிரியான கலைஞர் உடனே 'இது உள்ளூர் மக்களை ஏமாற்றும் வேலையே தவிர வேறொன்றுமில்லை' என்று அறிக்கை விட்டார். பிறகு அவரே சங்கரன்கோவில் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு திடீரென்று தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள 'இனியும் தாமதிப்பதில் பயனில்லை' என்ற ஞானோதயம் அம்மையாருக்கும் வந்துவிட்டது.

இத்தகைய சூழலில் அம்மையாரின் உள்நோக்கத்தை அறியாமல் நியாயம் கிடைக்காதா என்று அவரிடமே முறையிட சென்ற உதயகுமாரை என்னவென்று சொல்வது? அவருடைய முறையீட்டை தான் கண்டுக்கொள்ளவே போவதில்லை என்பதை முழுவதும் உணர்ந்திருந்த அம்மையார் வேண்டுமென்றே ஒப்புக்கு அவரை சந்திக்க சம்மதித்து மறுப்பேதும் பேசாமல் அவர் கூறியதையெல்லாம் கேட்டிருந்துவிட்டு அனுப்பி வைக்க அவர் 'முதல்வர் எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்ற நம்புகிறோம்' என்று அப்பாவித்தனமாக ஒரு அறிக்கையையும் விட்டார். இப்போது நாங்கள் வஞ்சிக்கப்பட்டுவிட்டோம் என்று சாகும்வரை உண்ணாவிரதம் என்கிறார். இவர் என்ன அன்னா ஹசாரேவா இவருடைய உயிரை காப்பாற்ற எதிர்க்கட்சிகளும், அறிவியல் வல்லுனர்களும் இவருடன் கைகோர்க்க?

அணு உலை எதிர்ப்பு என்கிற தங்களுடைய போராட்டம் இனியும் வெற்றிபெறும் என்ற போக்கில் உதயகுமாரும் அவரை நம்பியிருக்கும் உள்ளூர் மக்களும் செல்வார்களேயானால் அது விபரீதமாகவே முடியும் என்பதை அவர்கள் உணர வேண்டும். அதற்கு, அவர்களுடைய உண்ணாவிரத போராட்டம் நடத்த இடமளித்து ஆதரிக்கும் கத்தோலிக்க தேவாலய அமைப்பாளர்களும் தகுந்த ஆலோசனையை வழங்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. அவர்களுடைய போராட்டம் உள்ளூர் தேவாலய வளாகத்தில் நடப்பதால்தான் காவல்துறை அதை தடுத்து நிறுத்த முடியாமல் திணறுகிறது. அவர்களுடைய போராட்டம் வன்முறையாக மாறாமல் அமைதி வழியில் அதே வளாகத்தினுள் இருந்து தொடருமானால் காவல்துறையால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இத்தகைய பயனற்ற போராட்டத்திற்கு இனியும் உடன் செல்வது சரிதானா என்பதை உள்ளூர் தேவாலய நிர்வாகிகள் சிந்தித்து போராட்டக்காரர்களை சமாதானம் செய்து இதை ஒரு சுமுக முடிவுக்கு கொண்டு வருவது நல்லது.

கூடங்குளம் பிரச்சினையை குறித்து நான் எழுதிய முந்தைய பதிவில் இது மேலும் ஒரு பரமக்குடியாக முடியக் கூடாது என்று எழுதியிருந்தேன். உதயகுமார் தலைமையிலான அறப்போராட்டம் இனியும் தொடருமானால் ஒரு சந்தர்ப்பத்தில் அது எல்லையைக் கடந்து அதன் விளைவாக காவல்துறையின் அத்துமீறலுக்கு உள்ளாகி இனியும் ஒரு பரமக்குடி என்ற நிலை உருவாக வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது.



**********

ழ்

16 மார்ச் 2012

சடுதியாய் மீண்டும் ஒரு மரணம்


என்னுடைய வாழ்வில் நான் சந்தித்த நண்பர்கள் சிலரின் சடுதி மரணத்தைப் பற்றி அவ்வப்போது எழுதியிருக்கிறேன்..

ஆனால் இந்த வாரம் நிகழ்ந்த ஒரு மரணம் சடுதியானதும் அகாலமானதுமட்டுமல்ல அவலமானதும் கூட..
நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் என்னுடைய சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்த நான் என்னுடைய புதல்வியர்களின் விருப்பத்திற்கேற்ப சென்னையிலேயே தொடர்ந்து வசிப்பதென தீர்மானித்தேன்.

ஆனால் சென்னையில் எனக்கென்று சொந்த வீடு இல்லை. பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தொடர்ந்து பதினைந்தாயிரம் வாடகைக்கு கொடுத்து இருப்பது என்பது நடைமுறைக்கு ஒத்துவராத விஷயம் என்பதால் ஒரு வீடு அல்லது குடியிருப்பை தேடி அலைய ஆரம்பித்தேன். ஒரு வருடம் முயன்றும் சென்னை நகராட்சிக்குள் என்னுடைய பட்ஜெட்டுக்குள் கிடைக்கவில்லை.
ஆகவே சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் என்னுடைய உறவினர்கள் சிலருடைய உதவியுடன் சென்னையிலிருந்து சுமார்
25 கி.மீ. தூரத்திலுள்ள ஆவடியில் ஒரு வீட்டு மனையை விலைக்கு வாங்கினேன். ஆனால் அப்பகுதியில் சி.எம்.டி.. அப்ரூவல் இல்லாத, அதாவது பரம்பரை பட்டா உள்ள மனைகளே அதிகம் இருந்தன. என்னுடைய அதிர்ஷ்டம் ஒரு சிறிய மனை அப்ரூவலுடன் இருப்பதாக நான் சந்தித்த தரகர் கூறவே அதை போய் பார்த்தேன். பிடித்திருந்தது. ஆனாலும் ஆவடி நகராட்சி அளித்த ஒப்புதல் சான்றிதழின் ஃபோட்டோ நகல் மட்டுமே தரகரிடம் இருந்தது. அதில் நகராட்சி ஒப்புதலின் எண் தெளிவாக இல்லாததால் யாரை விசாரிப்பது என்று குழம்பியிருந்தபோதுதான் மனைக்கு மிக அருகாமையிலேயே வசித்த, இந்த முன்பின் பரிச்சயமில்லாத, நண்பரின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய நிலமும் நான் பார்த்த மனையின் நிலமும் ஒரே லே-அவுட்டுக்குள் அடங்கியிப்பதாக தரகர் கூறியதால் அவரை அணுகி அவருடைய மனையில் ஒப்புதல் சான்றிதழை காண்பிக்க முடியுமா என்று தயக்கத்துடன் கேட்டேன்.
ஆனால் அவர் மட்டுமல்லாமல் அவருடைய இளம் மனைவியும் என்னையும் என்னுடைய மனைவியையும் புன்சிரிப்புடன் வரவேற்று அவர்கள் வசம் இருந்த அனைத்து ஆவணங்களையும் எனக்கு காண்பித்து தயங்காமல் வாங்குங்கள் என்றனர்.

முன்பின் பரிச்சயமில்லாத இருவரை வீட்டுக்குள் அழைத்து முகம் மலர எங்களுடைய அனைத்து ஐயங்களையும் நிவர்த்தி செய்த அவ்விருவரின் நேர்த்தியை இன்னும் என்னால் மறக்க முடியவில்லைஅத்துடன் நில்லாமல்
'நாங்க வீடு கட்டறப்போ என்னல்லாம் மிஸ்டேக் பண்ணமோ அத எல்லாம் உங்களுக்கு சொல்றேன் சார். நீங்க அத எல்லாம் அவாய்ட் பண்ணீங்கன்னாவே போறும், ஈசியா கட்டி முடிச்சிரலாம்.' என்றார். அன்று சுமார் அரை மணி நேரம் தன்னுடைய அனுபவத்தை விலாவாரியாக பகிர்ந்துக்கொண்ட அவருடைய பெருந்தன்மை மறக்க முடியாத ஒன்று. அதுமட்டுமல்லாமல் திருமணமாகி பத்து வருடம் குழந்தை இல்லாமல் பல முயற்சிகள் செய்தும் பலனளிக்காமல் இருந்த சமயத்தில்தான் ஒரு மனையை வாங்கி வீடு கட்டினாலாவது குழந்தை இல்லாத சோகத்தை மறக்க முடியும் என்று கருதி வீடு கட்டுவதை துவங்கியதாகவும் வீட்டைக் கட்டி முடித்த அடுத்த மாதமே தன்னுடைய மனைவி கற்பமானதாகவும் கூறினார். நான் அவருடைய வீட்டுக்குச் சென்றபோது அவருடைய மனைவி நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார்.
அதற்குப் பிறகு என்னால் உடனே வீட்டை கட்ட முடியாமல் பல
தடங்கல்கள் ஏற்பட்டு இரண்டாண்டுகள் இழுத்துக்கொண்டே போனது. நமக்கு நேரம் வரும்போது கட்டிக்கொள்ளலாம் என்று நானும் இருந்தேன். அவருடனான தொடர்பும் நான் என்னுடைய மனையை காண செல்லும்போது ஏற்பட்ட ஒருசில நிமிட சந்திப்புகளுடன் நின்றுபோனது.
ஆறுமாதங்களுக்கு முன்பு வீட்டு கட்டுவதை துவங்குவதென தீர்மானித்து ஒரு ஒப்பந்தக்காரரை அணுகி அவரை அழைத்துக்கொண்டு மனைக்குச் சென்றபோது அவருக்கும் இந்த நண்பரை நன்கு தெரிந்திருந்தது.
அவருடன் ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாம் என்று நண்பரும் பரிந்துரைக்கவே ஒப்பந்தம் செய்து பணியை துவக்கவிருந்தபோது ஆழ்கிணறு தோண்ட நான் கேட்காமலேயே தண்ணீர் கொடுத்து என்னுடைய பூமி பூஜையிலும் கலந்துக்கொண்டு எனக்காக தன் நண்பரான ஒப்பந்தக்காரரிடம் பரிந்துரைத்து உதவினார். என்னுடைய மனைக்கு பின்னால் அமைந்திருந்த ஒரு புதிய குடியிருப்பின் உரிமையாளரும் அவருடைய நண்பர் என்பதால் அதிலேயே ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்து கட்டட வேலையை துவக்கினேன். நான் எதிர்பார்த்ததை விடவும் வேகமாக கட்டடம் வளர்ந்து நிற்கிறது....
ஆனால் அதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த நண்பர் இப்போது இல்லை
....
  
ஏன் இந்த மரணம் சடுதியாய் வந்து மிகவும் நல்ல ஒரு மனிதரை அதுவும் நாற்பது வயதும் கூட நிறைவுபெறாத ஒருவரை அழைத்துச் சென்றுவிட்டது என்பதை எப்படி சொல்வது....
பத்து ஆண்டுகள் தவமிருந்து பெற்ற ஒரே மகளை ..

இரண்டே வயதிலும் வாய் ஓயாமல் பேசும் அந்த இளம் சிட்டை விட்டுவிட்டுச் செல்ல எப்படி அந்த மனிதருக்கு மனம் வந்தது...
'கணவன், மனைவி இருவருமே வாய் ஓயாமல் இப்படி பேசுகிறீர்களே உங்கள் மகளும் அப்படியே பேசுவதில் என்ன வியப்பிருக்கிறது' என்று நானே கேலியாக அவர்களிடமே கூறியிருக்கிறேன். அப்படி பேசுவார்கள் இருவரும்.... யாரிடமும் அவ்வளவு நெருங்கி பழகாமல் எட்டியே இருந்த நானும் என் மனைவியும் அவர்களுடைய அபிரிதமான பேச்சில் மயங்கி மாதம் ஒருமுறையாவது அவர்களுடைய இல்லத்திற்கு சென்று மணிக்கணக்கில் அவர்கள் இருவர் மட்டுமல்லாமல் அவர்களுடைய குட்டிப் பெண்ணின் மழலையும் ரசித்திருப்போம்....
அப்படிப்பட்ட குடும்பத்தை எப்படி அவரால் கைவிட்டுச் செல்ல முடிந்தது?

இரண்டு நாட்களுக்கு முன்னர் ....

நான் மாலை நடைக்குச் சென்று விட்டு வரும் வழியில் இருந்த ரயில்வே லெவல் கிராசிங் அருகில் ஒரு பெரிய கூட்டம் நின்று இருந்ததை பார்த்தேன்.
ஆனால் பாதுகாப்பற்ற அந்த கிராசிங்கில் கவனக்குறைவாக ரயில் பாதையை கடக்க முயன்று அதிவேகமாக நெடுந்தூர ரயில்களில் அடிபட்டு மரிப்பது சகஜம் என்பதால் நான் கண்டுக்கொள்ளவில்லை...
ஆனால் வீடு திரும்பியதும்தான் தெரிந்தது அன்று அடிபட்டு மரித்தவர் மிகக் குறைந்த காலத்தில் எங்களை கவர்ந்துவிட்ட நண்பர்தான் என்பது...

தவறி விழுந்திருப்பார் என்று நானும் என்னுடைய மனைவியும் நினைத்திருந்ததற்கு மாறாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அவரேதான் வேண்டுமென்று விழுந்துவிட்டார் என்று கூறியதாக கூறி
'ஏன் இப்படி செஞ்சார்னு தெரியலையே சார்.... உங்க கிட்டக் கூட ரெண்டு நாளைக்கு முன்னால பேசிக்கிட்டிருந்தாரே....' என்று அவருடைய மனைவி கதறியபோது என்னால் ஒன்றும் கூற முடியவில்லை...
உண்மைதான்..
இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் நானும் அவரும் என்னுடைய வீட்டுக்கு வெளியில் நின்று கட்டுமான விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்... 'உங்க வீட்டு வேல முடிஞ்சதும் நான் சின்னதா ரெண்டு ரூம் மாடியில போடலாம்னு இருக்கேன் சார்....' என்றாரே என்று என்னுடைய மனது அடித்துக்கொள்கிறது....
இரண்டு நாட்களுக்குள் ஏன் இந்த முடிவுக்கு வந்தார்..

இருவருமே பணிபுரிபவர்கள்... கை நிறைய வருமானம் .... பின் என்னதான் பிரச்சினை? எப்படி விசாரிப்பது.... யாரிடம் விசாரிப்பது...
இறுதிச்சடங்கிற்கு வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலக நண்பர்களும் இதைத்தான் சொல்லிச் சொல்லி மாய்ந்தனர்..
இரண்டு நாட்களாக கண்ணை மூடினாலும் உறக்கம் வராமல் அந்த புன்னகை நிறைந்த முகமும்.... இறுதிச் சடங்கில் தூக்கக் கலக்கத்துடன் தன் ஒரேஅத்தையின் இடுப்பில் அமர்ந்து உடலை சுற்றி வந்து கும்பிட்ட இரண்டு வயதே நிறம்பிய என்ன நடக்கிறது என்றே தெரியாமல் விழித்த அந்த சிட்டின் முகமும்..... பாடாய் படுத்துகிறது...
***********