09 டிசம்பர் 2011

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு (நிறைவு)

சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம் உள்நாட்டு சிறு வணிகர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்னும் வாதம் ஒரு மாயை.


இந்தியா போன்று வளரும் நாடுகள் இன்னும் அதி வேகத்துடன் வளர்வதற்கு உதவுவது அன்னிய முதலீடு மட்டுமே. கடந்த பத்தாண்டுகளில் இதைஏற்றுக்கொண்டு வளர்ந்த நாடுகளான சீனா, தைவான், இலங்கை போன்ற நாடுகள்தான் நமக்கு முன்னுதாரணம். இந்தியாவை விடவும் பிந்தங்கியிருந்த பல நாடுகள் கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முன்னேறி இருப்பதற்கு மூல காரணம் அந்நாட்டில் தடையில்லா அன்னிய முதலீட்டை அனுமதித்ததுதான்.

நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் இதற்கு வித்திட்டாலும் அதை தொடர்ந்து வந்த மத்திய, மாநில அரசுகள் அதை முழு மூச்சுடன் நடைமுறைபடுத்தியிருந்தால் நாம் எங்கோ சென்றிருப்போம். இந்தியா போன்ற நாடுகள்தான் இனி எதிர்வரும் காலத்தில் நம்முடைய முதலீட்டிற்கு
ஏற்ற நாடுகள் என மேற்கத்திய நாடுகள் கருதுவதன் நோக்கம் நம்முடைய மிக அதிக அளவிலான நடுத்தர மற்றும் அதற்கு மேலுள்ள நுகர்வோர் எண்ணிக்கையும் அவர்கள் கைவசமிருக்கும் செலவழிக்கக் கூடிய வருமானமும்தான் (disposable income).


ஒரு நாடு வேகமாக வளர்வதற்கு முதலீடு (Investment) எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதன் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை நாட்டு மக்கள் வாங்கி பயன்படுத்துவது (consumption). நாட்டு மக்கள் ஈட்டிய வருமானத்தில் ஒரு கணிசமான தொகையை செலவு செய்தால்தான் சந்தையிலுள்ள பொருட்கள் விற்பனையாகும், அதன் தயாரிப்பாளர்கள்/வணிகர்களுக்கு அதிக விற்பனையின் மூலம் கிடைக்கும் லாபம் அவர்களை மேலும், மேலும் அத்தகைய பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் அறிமுகப்படுத்த ஊக்கப்படுத்தும். இதைத்தான் பொருளாதார நிபுணர்கள் 'Demand spurs more supply , increased supply creates more consumption and increased consumption creates more demand' என்கிறார்கள்.  இது ஒரு முடிவில்லா சுழற்சி. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த தொடர்ந்த ஓட்டம் மிகவும் அவசியம்.

ஒரு வளர்ந்து வரும் நாட்டின் சந்தையில் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் மட்டும் இருந்தால் போதாது. ஒரு ஆரோக்கியமான சந்தை வளர்ச்சிக்கு ஒருசில பெரிய மற்றும் மிகப் பெரிய வணிகர்களும் மிக அவசியம். அது அந்த நாட்டைச் சார்ந்ததா அல்லது அயல்நாட்டைச் சார்ந்ததா
என்பதல்ல முக்கியம். அனைவரும் சந்தையில் வாணிகம் செய்ய சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் (level playing ground) என்பதுதான் முக்கியம்.


அன்னிய நாட்டிலிருந்து வரும் சிந்தனைகள், யுக்திகள், முன்னேற்றங்கள் நமக்கு உகந்ததுதான் என்றால் அவற்றை கற்றுக்கொண்டு நாமும் நம்முடைய வணிகத்தில் செயல்படுத்தி முன்னேற முயல வேண்டுமே தவிர அவர்கள் நம்மை விடவும் தேர்ந்தவர்கள் அல்லது அதை நம்மால்
கற்றுக்கொள்ள முடியாது என்று அச்சத்துடன் அவர்களை வரவே விடாமல் தடுக்க முயல்பவர்கள் தன் தலையை நிலத்தில் புதைத்துக்கொள்ளும் நெருப்புக்கோழிக்கு சமம்.

எந்த கொம்பன் வந்தாலும் என்னால் சரியான போட்டியை அவனுக்கு கொடுக்க முடியும் என்கிற திமிர் இந்தியனுக்கு இருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் நம் தமிழகத்தில் நுழைந்த பெரிய மற்றும் மிகப் பெரிய வட நாட்டு அல்லது பன்னாட்டு நிறுவனங்களால் எந்த தமிழக நிறுவனம்
திவாலானது அல்லது நொடித்துப் போனது? ரிலையன்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் தன்னுடைய காய்கறி கடைகளை திறந்தபோது எத்தனை கூப்பாடு போட்டார்கள்? தெருமுனை காய்கறி கடைகள் எல்லாம் மூடப்பட்டுவிடும் என்றார்களே? அதுவா நடந்தது? இல்லை. நம்முடைய நாட்டில் 
ஒவ்வொரு வணிகருக்கும் அதற்கென்ற பிரத்தியேக வாடிக்கையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ரிலையன்ஸ் வந்தது அதை தொடர்ந்து மோர், ஃபுட்வேர்ல்ட் என எத்தனை கடைகள் வந்துள்ளன? இருப்பினும் அனைத்திலும் லாபகரமான வணிகம் நடப்பதால்தான் இன்றும் அவை தொடர்ந்து இயங்கி வருகின்றன. அதுதான் இந்தியாவின் தனித்தன்மை. அண்டை மாநிலமானாலும் சரி அண்டை நாடானாலும் சரி. யார் வேண்டுமானாலும் இங்கு வந்து வணிகம் அல்லது தொழில் செய்யலாம். அதனால் உள் நாட்டு வணிகர்கள் பாதிக்கப்படப் போவதில்லை.

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தாலும் அப்படித்தான். அப்படியே ஒருவேளை பாதிப்பு ஏற்பட்டாலும் அதனால் பாதிக்கப்படப் போகிறவர்கள் தெருமுனை சிறு வணிகர்கள் அல்ல. சமீப காலமாக புற்றீசல் போன்று ஊரெங்கும் பெரிய அளவில் வணிக வளாகங்களை திறந்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள்தான். இத்தகையோருடைய எதிர்கால வளர்ச்சி விகிதம் ஒருவேளை பாதிக்கப்படலாம். வலிமையான பொருளாதாரம், சிறந்த வியாபார யுக்தி, நிர்வாகத் திறன் உள்ள நிறுவனங்கள் நிலைத்து நிற்கும். மற்றவை பன்னாட்டு நிறுவனங்களால் விழுங்கப்படும்.

ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுடைய வருகையினால் கிடைக்கவிருக்கும் நன்மைகள் என்ன?

1. பன்னாட்டு நிறுவனங்களுடைய நேரடி கொள்முதல் விவசாயிகளை தங்களுடைய விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்க உதவும்.

2. இடைத்தரகர்களுடைய ஆதிக்கம் குறையும் அல்லது நாளடைவில் அடியோடு ஒழிக்கப்படும்.

3. விலைவாசி, முக்கியமாக உணவுப் பொருட்களுடைய விலையில் ஒரு ஸ்திரத்தன்மை ஏற்படும்.

4. பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையில் ஏற்படும் வியாபார போட்டி பொருட்களின் விலையை நிச்சயம் குறைக்கும்.

5. தரமான, சுத்தமான, கலப்படமில்லாத உணவுப் பொருட்கள் கிடைக்கும் (இப்போது உணவுப் பொருட்களில் கலப்பதற்கென்றே இயங்கிவரும் நிறுவனங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும்).

6. மேலைநாடுகளிலிருந்து தருவிக்கப்படும் பொருட்களால் விரயமாகும் அன்னிய செலவாணி மிச்சமாகும்.

7. அன்னிய முதலீட்டின் வருகையால் நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு மேலும் அதிகரிக்கும்.

ஆகவே சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை 51 விழுக்காடு வரை அனுமத்திப்பது என்ற மத்திய அமைச்சரவையின் முடிவு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.

ஆனால் நாட்டின் வணிக சூழலில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இத்தகைய முடிவை சம்பந்தப்பட்ட அனைவரையும் முக்கியமாக எதிர்க்கட்சியினரையும் மாநில அரசுகளையும் கலந்தாலோசிக்காமல் இது ஒரு அதிகார முடிவுதான் (executive decision) என்று கருதி அவசர, அவசரமாக மத்திய அமைச்சரவை முடிவு எடுத்ததுதான் இத்தனை குழப்பங்களுக்கும் காரணம்.

ஒரு நல்ல நேர்மையான, திறமையுள்ள, பொருளாதார நிபுணத்துவமுள்ள பிரதமராக இருந்தால் மட்டும் போதாது, விவேகமுள்ள முக்கியமாக அரசியல் சாணக்கியம் தெரிந்த பிரதமராக இருப்பதும் அவசியம்  என்பதை எப்போதுதான் மன்மோகன்சிங் உணர்ந்துக்கொள்ளப் போகிறாரோ தெரியவில்லை.



***********

1 கருத்து: