05 டிசம்பர் 2011

சிறு வணிகத்தில் அன்னிய முதலீடு.

கடந்த சில வாரங்களாக இந்திய நாடாளுமன்ற கூட்டத்தை சுமுகமாக நடத்த முடியாமல் மத்திய அரசு படும் அவஸ்தைக்கு சிறு வணிகத்தில் 51 விழுக்காடு வரை அன்னிய முதலீட்டை அனுமதிக்க மத்திய
அமைச்சரவை எடுத்த முடிவுதான் முக்கிய காரணம்.

மத்திய அமைச்சரவை முடிவை பின்வாங்க போவதில்லை என காங்கிரசும் இந்த முடிவால் இந்தியாவிலுள்ள பல சிறு வணிகர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அதை பின்வாங்கும் வரை நாடாளுமன்ற கூட்டத்தை நடத்த விடப்போவதில்லை என எதிர்க்கட்சிகளும் பிடிவாதம் பிடிக்கும் இச்சூழலில் ஒரு நடுநிலையான நுகர்வோன் என்ற கோணத்திலிருந்து இந்த அன்னிய முதலீட்டால் ஒரு சராசரி நுகர்வோனுக்கு கிடைக்கவிருக்கும் பலன்களையும் ஏன் எவரும் எண்ணிப் பார்க்க மறுக்கின்றனர் என்ற ஆதங்கத்துடன் அலச முடிவெடுத்ததன் விளைவே இந்த கட்டுரை.

கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இதே சில்லறை வணிகத்தில் பெரிய முதலீட்டாளர்களை, அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் எனப்படும் ரிலையன்ஸ், டாட்டா நிறுவனங்களை அனுமதிப்பது சரியா என்ற கேள்வி எழுந்தபோது அதில் தவறேதும் இல்லை என்ற கோணத்தில் நான் எழுதிய கட்டுரைக்கு சாதகமானஓரிரண்டு கருத்துக்களை விட எதிர்த்து வந்த கருத்துக்களே மிக அதிகம் என்பதும் என் நினைவுக்கு வருகிறது.

அப்போது ரிலையன்ஸ் நிறுவனம் தன்னுடைய 'ரிலையன்ஸ் ஃப்ரெஷ்' கிளைகளை தமிழகமெங்கும் நிறுவ முற்பட்டிருந்தது. அதை எதிர்த்து பல எதிர்க்கட்சிகள், குறிப்பாக பா.ம.க., பல சாலை போராட்டங்களை டத்தியது. இத்தகைய நிறுவனங்கள் சில்லறை மற்றும் சிறு வணிகர்களுடைய பிழைப்பில் மண்ணைப் போட்டுவிடும் என்றெல்லாம் வாதிட்டார்கள். அப்போது இந்தியா போன்ற பல தரப்பு வருமானமுள்ள
நுகர்வோர் (Income Groups) உள்ள நாட்டில் எத்தனை பெரிய நிறுவனங்கள் வந்தாலும் அவற்றால் மற்ற சிறு வணிகர்களூக்கு பாதிப்பு ஏற்படாது என்று வாதிட்டேன். கடந்த சில ஆண்டுகளில் நான் கூறியதுதான் சரி என்பது எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபணமாகியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்லாமல் பல கார்ப்பரேட் மற்றும் தனியார் நிறுவனங்கள் இன்று சென்னையில் சில்லறை வணிகத்தை மட்டுமே நம்பி மிகப்பெரிய
அளவில் வணிக வளாகங்களை திறந்துள்ளபோதும் சிறு வணிகர்கள் எனப்படும் தெருமுனை கடைகள் எதுவும் மூடப்பட்டுவிடவில்லை. ஒவ்வொரு பகுதியிலுமுள்ள காய், கறி மார்கெட்டுகளும் முன்பை விட
சிறப்பாகவே நடக்கின்றன என்பதை மறுக்கமுடியாது.

அப்போது இந்தியாவிலுள்ள தெருமுனை கடைகளுக்கு முதல் எதிரியாக கருதப்பட்டவை இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள். ஆனால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அல்லது விளையும் பொருட்களை பெரிய அளவில் விற்பனை செய்யும் இத்தகைய நிறுவனங்களாலேயே சிறு வணிகர்களுடைய சந்தை பங்கை (market share) பாதிக்க முடியவில்லை என்றால் உலக சந்தையில் மிகப் பெரிய சில்லறை வியாபாரிகள் எனப்படும் நிறுவனங்கள் நுழைவதால் ஏற்படப் போவதில்லை என்பது நிதர்சனம்.

அதே சமயம் மத்திய அரசின் இந்த முடிவை ஏன் எதிர்க்கட்சிகளும் சிறு வணிகர்களும் எதிர்க்கின்றன என்பதையும் ஆராய வேண்டும் அல்லவா?

அன்று நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அமைச்சரவை அன்னிய முதலீட்டை அனுமதிக்கலாம் என்று முடிவு எடுத்தபோது அதனால் நேரடியாக பாதிக்கப்பட்ட பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களான டாட்டா,
பிர்லா நிறுவனங்கள் இதை பல வகைகளிலும் எதிர்த்ததை பார்த்தோம். உற்பத்தி துறையிலும், எலக்ட்ரானிக் மற்றும் தொலைதொடர்பு துறைகளிலும் கடந்த பத்தாண்டுகளில் நம் நாடு அடைந்த அசுர வளர்ச்சிக்கும் உலக சந்தையில் மிக சகஜமாக கிடைக்கும் பல நுகர்வோர் பொருட்களும் (consumer items) சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டவுடனேயே ஏறக்குறைய அதே விலையில் இந்தியாவிலும் கிடைப்பதற்கும் அன்னிய முதலீட்டை இத்தகைய துறைகளில் அனுமதித்ததுதான் முக்கிய காரணம் என்பதை மறந்துவிட முடியாதே!

மேலும் கணினி துறையில் மட்டுமல்லாமல் தொலை தொடர்பு, எலக்ட்ரானிக், வாகன தயாரிப்பு போன்ற துறைகளில் நம் நாடு கண்ட அசுர வளர்ச்சியின் நேரடி விளைவாக கருதப்படுவது இந்தியர்கள் கையில்
உள்ள உபரி வருமானம் (disposable income). கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவிலுள்ள நடுத்தர மற்றும் நடுத்தரத்திற்கு சற்று மேலேயுள்ளவர்களுடைய (middle and above middle income groups) மக்கள் தொகை 25% விழுக்காட்டிற்கு மேல் உயர்ந்துள்ளது என்கிறது சமீபத்திய கணிப்பு.

இத்தகைய உபரி வருமானத்தை செலவிட சந்தையில் வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட வேண்டுமல்லவா? எவ்வளவு காலத்திற்குத்தான் எதிர்காலத்திற்கு தேவை, தேவை என்று சேமித்து வைப்பது? செலவழிக்க
வழியில்லாமல் அனைவருமே தங்கத்தில் முதலீடு செய்ய முறப்பட்டதும் இன்று வானளவுக்கு உயர்ந்துள்ள தங்கத்தின் விலைக்கு காரணம்.

கடந்த சில ஆண்டுகளில், அதாவது 2005-06 முதல் 2008-09 ஆண்டுடன் முடிந்த காலத்தில் இந்திய நுகர்வோர் செலவிட்ட தொகையின் வளர்ச்சி விகிதமும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே சென்றுள்ளதை


கீழ்காணும் பட்டியலை பார்த்தால் விளங்கும்:

                                                                  2005-06 06-07 07-08 08-09 (விழுக்காடு வளர்ச்சி)

1. உணவு மற்றும் உணவு பொருட்கள் :11.7 11.1 13.0 14.4

2. ஆடை மற்றும் காலணி :                   18.0 25.0 27.7 22.0

3. வீட்டு உபயோக பொருட்கள் :             18.0 22.0 19.4 11.0

4. இதர செலவினங்கள் :                                  12.0 14.8 14.1 14.2



இதர செலவினங்கள் வகையில் பெரும்பாலான விழுக்காடு பொழுதுபோக்கு, சுற்றுலா செலவினங்களே!

இதன் நேரடி விளைவுதான் இன்று சென்னை மற்றும் பெருநகரங்களில் எங்கு பார்த்தாலும் முளைத்துள்ள பலமாடி வணிக வளாகங்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் மலேஷியா சென்றபோது அங்கு நான்
பார்த்து மலைத்துப்போன வணிக வளாகங்களை என்று இந்தியாவில் காணப்போகிறோம் என்ற என்னுடைய கனவு இத்தனை விரைவில் நனவாகும் என்று நான் நினைக்கவில்லை. அதே சமயம் பல ஆண்டுகளாக நடந்துவந்துள்ள பல சிறிய சில்லறை வணிகர்களுடைய கடைகளும் இன்று வரையிலும் திறந்துதான் உள்ளன என்பதையும் பார்க்கும்போது சமீபத்திய முடிவால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படப் போவதில்லை என்றுதான் நினைக்கிறேன்..


இருப்பினும், பாதிப்பே இல்லை என்றும் கூறிவிட முடியாது...



தொடரும்...






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக