06 டிசம்பர் 2011

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு - 2

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு பாதிப்பை நிச்சயம் ஏற்படுத்தத்தான் செய்யும். நம்முடைய நாட்டின் மொத்த உற்பத்தித் திறன் எனப்படும் GDPயில் 44 விழுக்காடு, அதாவது ரூ.11 இலட்சம் கோடி சில்லறை வணிகத்தின் பங்கு என்கிறபோது அதில் அன்னிய முதலீடு நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்யும், மறுப்பதற்கில்லை. அதுவும் அன்னிய முதலீடு இல்லாமலேயே சில்லறை வணிகத்தின் வளர்ச்சி வருடத்திற்கு சுமார் 12 முதல் 15 விழுக்காடு வரையில் வளர்ந்துக்கொண்டே செல்கிறது என்றால் அன்னிய முதலீடும் இதை தீனி போட்டு வளர்க்க ஆரம்பித்தால் அதன் வளர்ச்சி எத்தனை அசுரத்தனமாக இருக்கும்!

சமீபத்திய கணிப்பின்படி இப்போது சுமார் 100 நபர்களுக்கு ஒரு சில்லறை கடை என்ற அடிப்படையில் நாட்டின் சில்லறை வணிகத்தை சார்ந்து மட்டும் சுமார் நான்கு கோடி தொழிலாளர்கள் இருக்கின்றனராம்! அதில் கார்ப்பரேட் மற்றும் தனிநபர்கள் நடத்தும் பெரிய வணிக நிறுவனங்களின் பங்கு மிகவும் சிறியதே.

ஆக, தெரு முனை துணி, மளிகை மற்றும் இதர கடைகள் (இதில் டீக்கடை உள்ளிட்ட உணவு விடுதிகள், பேக்கரி, ஃபேன்சி ஸ்டோர் மற்றும் குறிப்பிட முடியாத பொருட்களை விற்பனை செய்யும் நடைபாதை கடைகள்) ஆகியவை சுமார் நான்கு கோடி ஊழியர்களின் வாழ்வாதாரமாக உள்ளது! இது நாட்டின் மொத்த தொழிலாளர்களில் வெறும் 8 விழுக்காடுதான் என்றாலும் நான்கு கோடி ஊழியர்கள் என்பது கணிசமான எண்ணிக்கையல்லவா? அதுவும் இத்தகையோர் பெரும்பாலும் பொருளாதார அடிமட்டத்திலிருந்து வருபவர்கள் என்ற கோணத்தில் இருந்து பார்த்தால் அன்னிய முதலீட்டால் இவர்களுடைய வேலை பறிபோக வாய்ப்புள்ளது என்று இடதுசாரிகள் கூக்குரலிடுவது தவறில்லையே!

ஆனால் அன்னிய முதலீட்டின் நம் நாட்டிற்குள் நுழையவிருக்கும் நிறுவனங்கள் எவை, அவை என்னென்னவ்பொருட்களை விற்பனை செய்யவிருக்கின்றன என்பது இதை ஒட்டுமொத்தமாக தடுக்க வேண்டும் என்ற வாதிடும் சில்லறை வணிகர்களுக்கு தெரியுமா?

அன்னிய முதலீடு வழியாக நாட்டிற்குள் நுழைய விரும்பும் உலகின் பெரு வணிக நிறுவனங்களில் சில வால் மார்ட், டெஸ்கோ, மெட்ரோ. இத்தகைய வணிக நிறுவனங்கள் கையாளும் பொருட்களுக்கும் நம்முடைய சில்லறை வணிகர்கள் (அதாவது தெருமுனை கடைகளுக்கும்) எவ்வித சம்பந்தமும் இருக்கப் போவதில்லை. இப்போதும் கூட நம்முடைய நாட்டின் பெரு வணிக நிறுவனங்களான ரிலையன்ஸ், டாட்டா, பிர்லா, நிறுவனங்கள் நடத்து ஹைப்பர் ஸ்டோர்ஸ் எனப்படும் சூப்பர் மார்க்கெட் கடைகள் கையாளும் பொருட்கள் பலவும் தெருக்கடை வணிகர்கள் கையாளும் பொருட்களிலிருந்து வெகுவாக மாறுபட்டவை. அவை எதிர்நோக்கும் நுகர்வோர்களும் (targeted consumers) தெருக்கடைகளை சார்ந்திருக்கும் நுகர்வோர்கள் அல்ல. ஆகவே இத்தகைய வணிக நிறுவனங்களின் வருகையால் தெருக்கடை வணிகர்கள் நிச்சயம் நேரடியாக பாதிக்கப்படப் போவதில்லை.

அப்படியென்றால் இத்தகைய மேலை நாட்டு நிறுவனங்களின் வருகையை ஏன் சில்லறை வணிகர்கள் எதிர்க்கின்றனர்? இதனால் உண்மையில் நஷ்டமடையப் போவது இத்தகைய வணிகர்களா அல்லது நம்மைப்
போன்ற நுகர்வோரா?



தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக