13 ஜூன் 2011

சமச்சீர் கல்வியும் ஜெயலலிதாவும்.

சமச்சீர் கல்வி என்ற தத்துவம் ஜெயலலிதா போன்ற மேல்குடி மக்களுக்கு நிச்சயம் ஒவ்வாது என்பது தெரிந்ததே. சேரியில் வசிக்கும் குப்பனுக்கும் மாளிகையில் வசிக்கும் குமாருக்கும் ஒரே தரத்திலான கல்வியா என கேட்கத் தோன்றும்.  மேலும் இவர் 
மூதாதை ராஜாஜி வழிவந்த வம்சத்தை சார்ந்தவராயிற்றே. வண்ணான் மகன் வண்ணானாகவும் தோட்டி மகன் தோட்டியாகவும் நாவிதன் மகன் நாவிதனாகவும்தான் வரவேண்டும் என்று குலத்தொழிலின் மகத்துவத்தை எடுத்துரைத்தவரை சார்ந்தவர்களால் வேறு எப்படி சிந்திக்க முடியும்?

பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுனர்களைக் கொண்ட குழுக்களை அமைத்து தமிழகத்தை மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலுள்ள கல்வி நிலையங்களில் பயன்பாட்டிலுள்ள பாடத்திட்டங்களை அலசி, ஆராய்ந்து வடிவமைக்கப்பட்டு பிறகு மாணவ மற்றும் ஆசிரிய சமுதாயங்களுடைய ஒப்புதல் உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களின் ஒப்புதல் என அனைத்தையும் கடந்து தமிழக அமைச்சரவையின் ஒப்புதலுடன் கடந்த ஆண்டு முதலாம் மற்றும் ஆறாம் வகுப்புகளில் அறிமுகப்படுத்தப்பட்டு அனைத்து தரப்பினருடைய ஏகோபித்த (சாதி, சமூக மற்றும் பணத்தாசை போன்ற வெறிகளுக்கு ஆளான ஒரு சில பள்ளி நிர்வாகங்கள், அறிவுஜீவிகளேன் தங்களை வரித்துக்கொண்ட சில ஆசிரியர்களை தவிர்த்து)ஆதரவையும் பெற்ற சமச்சீர் கல்வி திட்டத்தை எவ்வித குழுக்களின் அடிப்படை ஆய்வும் இல்லாமல் ஒரே நாளில் புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சரவை ஒத்திவைக்கிறோம் என்ற சாக்கில் மறுத்திருக்கிறது.
பாடத்திட்டங்கள் உலகதரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் ஆகவே ஓராண்டுக்கு ஒத்தி வைக்கிறோம் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பே. அப்படியானால் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் இத்திட்டத்தை ஒட்டுமொத்தமாக குறை கூறி வாதிட்டதை என்ன சொல்வது? அவருடைய வாதத்தை கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகளும் கூட எதிர்த்தனவே. இருப்பினும் சமச்சீர் கல்வியை ஆதரித்து முழக்கமிட்டு வந்த நடிகர் வாய் மூடி இருக்க காரணம் வேறு. அவரை விட்டுத்தள்ளுவோம்.

முந்தைய தமிழக அரசு முடிவு செய்த பாடத்திட்டங்களில் என்ன குறைபாடுகள் இருப்பினும் அவற்றை இயன்றவரையிலும் சரிசெய்து அறிமுகப்படுத்துவதை விட்டுவிட்டு தரமே இல்லை என ஒட்டுமொத்தமாக ஒதுக்குவது நியாயமான காரணமாக தென்படவில்லை, இதற்கு உண்மையான காரணம் என்ன என்று உயர்நீதிமன்றம் கேட்டதே அதற்கு மேடத்தின் பதில் என்ன?

அப்படியானால் முந்தைய அரசு நியமித்த குழுக்கள் அனைத்துமே தரமற்றவைகளா? அவர்கள் முடிவு செய்த பாடத்திட்டங்களில் இன்னின்ன குறைபாடுகள் உள்ளன என உயர்நீதி மன்றத்தில் நீங்கள் பட்டியலிட்டிருந்தால் ஒருவேளை அதை ஏற்று நீதிமன்றம் உங்களுடைய முடிவுக்கு பச்சைக் கொடி காட்டியிருக்குமே? அதை ஏன் உங்களால் செய்ய முடியவில்லை?

ஏனெனில் அதுவல்ல காரணம். திமுகவையும் கலைஞரையும் புகழ்பாடி ஒரு சில பாடங்கள் சேர்க்கப்பட்டிருந்தால் அதையும் நீக்கிவிட உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளீர்கள்.

உங்களுடைய மனுவை அனுமதிக்காமல் தள்ளுபடி செய்துவிடும் என எதிர்பார்த்தேன்... ஏனோ தெரியவில்லை உச்சநீதிமன்றம் அதை விசாரனைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. ஆனால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடையுத்தரவு பிறப்பிக்காமல் இருந்தால் நல்லது. ஒருவேளை மனுவை விசாரிக்கும் சாக்கில் உங்களுடைய அரசு எடுத்த முடிவை குறுக்கு விசாரணை என்ற பெயரில் கடுமையாக விமர்சிக்க உத்தேசித்துள்ளதோ என்னவோ.. இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

ஆனால் என்னைப் போன்றோர்கள் மனதில் சமச்சீர் கல்வி என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் பாடத்திட்டங்கள் மாநகராட்சி மற்றும் அரசு/அரசின் உதவியுடன் நடத்தப்படும் பெரும்பாலான பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தரத்தை எந்த அளவுக்கு உயர்த்த முடியும் என்ற ஐயப்பாடு இருந்ததென்னவோ உண்மைதான். நானே அறிமுக நிலையில் இந்த திட்டத்தை எதிர்த்து பதிவுகள் எழுதியுள்ளேன். ஏனெனில் அடிமட்ட மாணவனுடைய தரத்தை உயர்த்துகிறோம் என்று கூறிவிட்டு இன்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுடைய தரத்தை குறைத்துவிடுவார்களோ என்று அச்சம் இத்தகைய பள்ளிகளில் பயிலும் மாணவர்களுடைய பெற்றோர்கள் மனதில் இல்லாமல் இல்லை. ஆனால் சமச்சீர் கல்வியின் திட்டத்தின் அடிப்படை நோக்கம் எல்லோருக்கும் கல்வி என்பது மட்டுமல்லாமல் எல்லோருக்கும் ஒரே கல்வி என்பதால் இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது தமிழகத்தில் பயிலும் அனைத்து மாணவர்களுடைய தரமும் ஒரே சீராக இருக்குமே என்ற எண்ணத்தில்தான் நானும் இந்த திட்டத்தை அறிமுக நிலையில் எதிர்த்தவர்களும் எங்களுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டோம்.

எனக்கு தெரிந்தவரை சிபிஎஸ்சி பாடத்திட்டத்தோடு மெட்றிக்குலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டங்கள் அமுலில் இருப்பது தமிழகத்தில் மட்டும்தான். கர்நாடகா, ஆந்திரா,கேரளா ஏன் மஹாராஷ்டிராவிலும் கூட சிபிஎஸ்சியை விட்டால் மற்ற அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம்தான் அமுலில் உள்ளன. ஆனால் இந்த பாடத்திட்டங்கள் சிபிஎஸ்சி, மெட்றிக் மற்றும் ஆங்கிலோ இந்திய பள்ளிகளில் அமுலில் உள்ள பாடத்திட்டங்களை விட பல வகைகளில் சற்று தரம் குறைந்தவையே என்பதும் உண்மை. ஆனால் இந்த குறைபாட்டை  நாளடைவில் சரிசெய்து அனைத்து மாணவர்களும் கல்வியில் ஒரே தரம் உள்ளவர்களாக உருவாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக இத்தகைய சமச்சீர் கல்வி திட்டத்தை பின்பற்றுவது அவசியமாகிறது. இது தமிழகத்தில் மட்டுமல்லாமல் நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் அமுல்படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்.

ஆகவே அறிமுக நிலையிலுள்ள இந்த திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒத்திப்போடுவது பிறகு முழுவதுமாக கைவிடுவது என்கிற பாணியில் சிந்திக்காமல் உச்சநீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வந்தாலும் இத்திட்டத்தை இவ்வாண்டிலேயே அனைத்து வகுப்புகளிலும் அமுல்படுத்துவதுதான் மேடத்திற்கு அழகு சேர்ப்பதாக இருக்கும். அதை விட்டுவிட்டு நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்தான் என்ற வீம்பில் திட்டத்தை அமுல்படுத்த தவறினால் மேடம் இனியும் மாறவே இல்லை என்று சிலர் கூறுவது உண்மைதான் என்றாகிவிடும்.

2 கருத்துகள்:

  1. கல்வியையும் அரசியல் சாக்கடையில் எதற்காகத் தோய்த்து எடுக்கணுமோ .. தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
  2. வாங்க தருமி,

    ரொம்ப நாளாச்சு பார்த்து:))

    சமுதாயத்தில் ஒரு அந்தஸ்த்தை வழங்குவதே கல்விதானே. அதை அனைத்து குலத்தவருக்கும் சமமாக வழங்கிவிட்டால் பிற்காலத்தில் அனைத்து குலத்தவரும் சமம் என்றாகிவிடாதா, அதுதான் இவர்களுடைய கவலை!

    பதிலளிநீக்கு