18 மே 2011

கலைஞரின் பரிதாப நிலை!


1991ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு கலைஞர் தலைமையிலான திமுக இத்தகைய மாபெரும் தோல்வியை தழுவியதில்லை!

அப்போதும் கூட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை ஏற்படுத்திய அனுதாப அலைதான் ஜெயலலிதா தலைமியிலான கூட்டணி திமுக கூட்டணி வென்ற இரண்டு இடங்களை தவிர அனைத்து சட்டமன்ற இடங்களையும் கைபற்றி சட்டமன்றத்தில் எதிர்கட்சி என்ற ஒரு கட்சியே இல்லாமல் செய்தது.

அதற்கு முன்பும், பின்பும் முதலமைச்சர் அல்லது எதிர்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்த்தை கலைஞர் இழந்ததே இல்லை என்றே கருதுகிறேன்.

கலைஞரின் ஐம்பதாண்டு அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் இப்படியொரு பரிதாப நிலைக்கு அவர் தள்ளப்படவில்லை. அவருடைய ஐம்பதாண்டுகால அரசியல் வாழ்க்கையை நினைவுகூரும் விதமாகத்தான் அவரை ஐம்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற செய்தனர் போலும் அவருடைய சொந்த ஊரைச் சார்ந்த வாக்காள பெருமக்கள்!

கலைஞர் ஏன் இத்தகைய மாபெரும் தோல்விக்கு உள்ளாகி தனிப்பட்ட முறையிலும் கட்சி தலைவர் என்ற முறையிலும் அவமானத்திற்குள்ளானார்?

கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் அவர் வெற்றிபெற்று முதலமைச்சர் பதவியில் அமர்ந்தபோது அவருக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதியிருந்தேன்.

அதில் குடும்ப அரசியலுக்கு இடமளிக்க வேண்டாம் என்றும், ஊழல் பேர்வழிகளுக்குஅமைச்சரவையில் இடமளிக்க வேண்டாம் என்றும், தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் சரியாக மக்களை சென்றடைவதில் கவனம் தேவை என்றெல்லாம் பத்து கோரிக்கைகளை வைத்திருந்தேன்.

நான் எதையெல்லாம் தவிர்த்தால் அவர் தமிழகத்தை வெற்றிப் பாதையில் செலுத்த முடியும் என்று கூறியிருந்தேனோ அதையெல்லாம் அவர் தவிர்க்க தவறியதன் விளைவுதான் இந்த வரலாறு காணாத மாபெரும் தோல்வி என்றால் மிகையாகாது என கருதுகிறேன்.

மேலும் 2001ல் திமுக தோல்வியை தழுவிய போதும் இப்போது 2011ல் தோல்வியை தழுவிய போதும் உள்ள கலைஞரின் போக்கில் நிறைய மாற்றங்களை நம்மால் காண முடிகிறது.
2001ல் ஜெயலலிதா பதவி ஏற்றுக்கொண்ட நாள் முதலே கலைஞர் அண்ணா அறிவாலய அலுவலகத்தில் தினமும் நிரூபர்களை சந்தித்து அன்றைய சட்டமன்றத்தில் நடந்தவற்றைப் பற்றி விமர்சித்து பேசி வந்ததை நாம் கண்டோம். சில சமயங்களில் அது சிறுபிள்ளைத்தனமாக தோன்றினாலும் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை கண்கானிக்க ஒரு வலுவான எதிர்கட்சி இருந்ததை நம்மால் உணர முடிந்தது.

ஆனால் இப்போது?

தேர்தல் முடிவுகள் வெளியாகி சுமார் ஒரு வாரம் ஆகியும் கலைஞரிடமிருந்து எவ்வித அறிக்கையும் இல்லை. 'தமிழக மக்கள் எனக்கு ஓய்வு அளித்துவிட்டனர். வாழ்த்துக்கள்' என்ற சுருக்கமான அறிவிப்பைத் தவிர மவுனம், மவுனம், மவுனம்!!

தமிழக மக்களின் வரிப்பணத்தில் சுமார் ரூ 900 கோடியை வாரி இறைத்து கட்டப்பட்ட புதிய சட்டமன்ற வளாகத்தை ஜெயலலிதா வீம்புக்கு புறக்கணித்துவிட்டு முந்தைய கோட்டை வளாகத்தை புதுப்பிக்க இன்னும் சில கோடிகளை வீணடித்துக்கொண்டிருப்பதை சட்டமன்றத்தில் பிரதிநிதிகளே இல்லாத மதிமுகவும், திகவும் விமர்சிக்க கலைஞரிடம் இருந்து எவ்வித விமர்சனமும் இல்லை!

ஏன் இந்த ஆழ்ந்த மவுனம்?

தமிழக மக்களுக்கு உழைத்தது போதும் அவர்கள் எப்படியோ போகட்டும் என்று நினைத்துவிட்டாரா?

அல்லது தோல்வியின் தாக்கத்திலிருந்து அவர் இன்னும் விடுபடவில்லையா?

அரசியல் வாழ்க்கை போதும் என்று அவர் நினைத்துவிட்டால் அதைப்பற்றியாவது உடனடியாக அவர் அறிக்கையொன்றை வெளியிட வேண்டும். செய்வாரா?

**********