23 மார்ச் 2011

தேர்தல் 2011 - இலவச திட்டங்களும் ஒருவகையில் லஞ்சம்தான்!

ஓட்டுக்கு பணம், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை தடுக்கும் முகமாக தேர்தல் கமிஷன் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கையில் அரசு
திட்டங்கள் என்ற பெயரில் வீட்டு உபயோக பொருட்களை இலவசமாக வாரி வழங்குவதாக தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிடுவது எந்த வகையில் நியாயம்?

கடந்த முறை திமுக அறிவித்திருந்த இலவச திட்டங்கள் மூலமாக தொலைக்காட்சி பெட்டி, எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு என அவற்றிற்கு
தகுதியற்ற பலரும் பயனடைந்திருக்கின்றனர் என்பதுதான் உண்மை. என்னுடைய குடியிருப்புக்கு அருகாமையில் குடும்ப அடையாள அட்டை
வைத்திருப்போருக்கு தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டபோது நாற்சக்கர வாகனங்களில் வந்து அவற்றை பெற்றுக்கொண்டு சென்றவர்களையும் காண முடிந்தது!

அரசின் நலத்திட்டங்கள் அவற்றை பெற தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும் என்பது அடிப்படை நியதி. மக்களின் வரிப்பணத்திலிருந்து செயல்படுத்தப்படும் இத்தகைய திட்டங்களை குடும்ப அடையாள அட்டைதாரர்கள் அனைவருக்கும் செயல்படுத்துவது முட்டாள்தனம். குடும்ப அட்டை வழங்கப்படுகின்ற சமயங்களில் நிரந்தர வருமானம் உள்ள பல அரசு ஊழியர்களும் கூட தங்களுடைய நிஜ வருமானத்தை மறைத்து அல்லது குறைத்து குறிப்பிட்டு குடும்ப அட்டைகளை பெற்றுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆகவே குடும்ப அட்டைதாரர்கள் என்ற அடிப்படையில் மட்டும் அரசு வழங்கும் இலவச பொருட்களை வினியோகிப்பது அரசு பணத்தை வீணடிப்பதற்கு சமம்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வாக்களித்திருந்த அனைத்து இலவச திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுவிட்டது என பெருமை அடித்துக்கொள்ளும் தற்போதைய அரசு அதனால் அரசுக்கு மொத்தமாக எத்தனை கோடிகள் செலவிடப்பட்டன அவற்றை அரசு எவ்வாறு அல்லது
எங்கிருந்து திரட்டியது (Mobilised) என்பதையும் வெளியிடுவது அவசியம். மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஐந்தாண்டு திட்டங்களுக்கென
ஒதுக்கப்படும் நிதி இத்தகைய திட்டங்களுக்கு புறம்பான செலவினங்களாக (Non-Plan expenditure) வீணடிக்கப்படுகின்றனவா என்பதையும் மாநில
அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

தேர்தல் சமயங்களில் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் ஆகியவை வழங்கப்படுவது சட்டவிரோதம் என்று கூறும் தேர்தல் கமிஷன் இத்தகைய இலவச திட்டங்களை எப்படி தடைசெய்யப் போகிறது? இவை இரண்டிலும் உள்ள வேறுபாடு என்ன? வேட்பாளர் வழங்கும் பணம் அல்லது பொருட்களுக்கு தேவைப்படும் பணம் அவர்களுடைய சொந்த அல்லது கட்சிப்பணமாக இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே அவற்றை தனிநபர்
செலவினங்கள் என்று விட்டுவிடலாம். ஆனால் எங்களுடைய கட்சி அரசமைக்க வாக்களித்தால் இவற்றை இலவசமாக வழங்குகிறோம் என்று ஒரு
அரசியல் கட்சி வாக்குறுதியளிக்கும்போது அது அரசு கஜானாவையே அல்லவா பாதிக்கிறது? முந்தையது சட்டவிரோத செயல் என்றால் பின்னது?

அதைவிட மோசமாயிற்றே?

சமீபத்தில் வெளியிடப்பட்ட திமுகவின் தேர்தல் அறிக்கையில் பட்டியலிடப்பட்ட இலவசங்கள், சலுகைகள் என்பவற்றை நீக்கிவிட்டு பார்த்தால்
உருப்படியாக எந்த நலத்திட்டங்களும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. போனால் போகிறது என்று 'மின் உற்பத்தியை பெருக்க மேலும் பல மின்
அணு நிலையங்களை நிறுவுவோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சரி, கடந்த ஐந்தாண்டுகளில் ஏன் இவற்றை செயல்படுத்தவில்லை?

ஸ்ரீரங்கநாதசாமியின் பாதத்தில் வைத்து பூஜசெய்துவிட்டு வெளியிடப்படப்போகும் அதிமுக அறிக்கையிலும் இத்தகைய இலவச திட்டங்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதில் ஐயமில்லை. இடதுசாரி கட்சிகளின் அறிக்கையை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் (அவர்கள் எப்படியும் ஆட்சிக்கு வரப்போவதேயில்லை என்பது வேறு விஷயம்!) மற்ற அனைத்துக் கட்சிகளின் அறிக்கைகளுமே இதே பாணியில்தான் இருக்கப்போகிறது என்பதில் ஐயம் இல்லை.

இத்தகைய குறிக்கோளற்ற, கொள்கைகளற்ற அறிக்கைகளால் நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ எவ்வித நீண்ட கால பயனும் கிடைக்கப்போவதில்லை. இலவசம் என்ற பெயரில் மக்களின் இன்றைய தேவைகளை மட்டும் நிறைவேற்றினால் போதும் என்ற நினைப்பில் அரசியல் கட்சிகள் செயல்படுகின்ற வரையில் நிலைமை இப்படித்தான் நீடிக்கும்.

இதுதான் தமிழக மக்களின் தலையெழுத்து!

தொடரும்..

2 கருத்துகள்:

  1. மேற்கு வங்கத்தில் மம்தாவின் தேர்தல் அறிக்கை பாருங்கள்... அருமை..


    நேரமிருந்தால்...
    http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_23.html
    வாங்க..

    பதிலளிநீக்கு
  2. இலவசங்கள் கொடுப்பதாக தேர்தல் வாக்குறுதி தருவது சட்டப்படிதான் என்று தேர்தல் கமிசனர் இன்று கூறி இருக்கிறார்.

    எல்லாம் விதி..

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு