21 மார்ச் 2011

தேர்தல் 2011 - அதிமுக கூட்டணி குழறுபடி தொடர்கிறது

என்னுடைய கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்த அதிமுக தொகுதி உடன்பாட்டில் ஏற்பட்ட குழறுபடி இன்னும் தீர்ந்தபாடில்லை.

'மேடம்' தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை வெளியிட, கொதிப்படைந்த அதிமுக தோழமை கட்சிகளில் இடது சாரி கட்சிகள் இரண்டும்தான் முதலில் போர்க்கொடி உயர்த்தின. அவர்களுடன் துக்கடா கட்சிகளான புதிய தமிழகம் போன்ற கட்சி தலைவர்கள் ஒட்டுமொத்தமாக 'கேப்டன்' அலுவலகத்திற்கு படையெடுத்துச் சென்று அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி மூன்றாம் அணியை உருவாக்குவதைப் பற்றி ஆராய அவரை அழைத்தனர். ஆனால் இத்தகைய முடிவு திமுகவுக்கு சாதகமாக அமையும் என்று கருதிய கேப்டன் அவர்களை சமாதானப்படுத்தி ஓரிரு நாட்கள் காத்திருக்கச் செய்தார். ஆயினும் மார்க்சிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் நிரூபர்கள் 'அதிமுகவுடன் சமரசம் செய்துக்கொள்வீர்களா?' என்று கேட்டபோது 'நீங்கள் வேண்டுமானால் முயற்சி செய்யுங்கள், நான் அதை செய்யப்போவதில்லை.' என்றார் காட்டமாக.

அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சை மீண்டும் துவங்குவதற்கு கேப்டன் மூன்று நிபந்தனைகள் முன்வைத்ததாகவும் செய்திகள் வெளியானது.

1. மதிமுகவை மீண்டும் கூட்டணியில் இணைத்துக்கொள்ள வேண்டும்.
2. தேதிமுக விரும்பிய தொகுதிகளை ஒதுக்க வேண்டும்.
3. தேர்தல் பிரச்சாரத்தை தங்களுடன் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும்.

தனக்கு யாரும் நிபந்தனை வைப்பதை எப்போதும் விரும்பாத 'மேடம்' இவற்றை ஏற்றுக்கொண்டதுபோன்ற பாவனையை செய்து தன்னுடைய பிரச்சார கூட்ட சுற்றுப்பயணத்தை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். மதிமுகவை கூட்டணியில் சேர்ப்பதில்லை என்ற தன்னுடைய முந்தைய முடிவை ஒருபோதும் மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என்பதை மேடம் முடிவெடுத்திருந்தாலும் அதை வெளி காட்டிக்கொள்ளாமல், தன்னுடைய 'மூத்த' தலைவர்கள் குழுவை தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் தொடர அனுப்பிவைத்தார்.இடதுசாரிகள், புதிய தமிழகம், சமக மற்றும் இதர சிறு, சிறு கட்சிகளுக்கு அவை விரும்பிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவர்களும் தங்களுடைய மூன்று நிபந்தனைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு தாங்கள் விரும்பிய தொகுதிகள் கிடைத்துவுடன் மேடத்தை சந்தித்து ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். இடதுசாரிகளின் இந்த நடவடிக்கை ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். மதிமுகவை கூட்டணியில் இணைத்தால்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்றதெல்லாம் வெறும் கண்துடைப்பு.

மீதமுள்ள இரு கட்சிகளான தேமுதிக மற்றும் மதிமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் தேமுதிகவுக்கு இருந்த ஓட்டு வங்கியை மனதில் வைத்து அவர்களுடன் தொடர்ந்து மணிக்கணக்காக பேச்சு வார்த்தை நடத்தி ஒருவழியாக அவர்கள் விரும்பிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் மதிமுகவுடன் ஒப்புக்கு பேச்சுவார்த்தை என்ற நாடகம் நடந்து வைகோ எப்படியும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்று தெரிந்தே அவர் கேட்டிருந்த 21 தொகுதிகளுக்கு பதில் 12 தொகுதிகளை ஒதுக்க மேடம் பெரிய மனதுடன் முன்வந்துள்ளார் என்றது அதிமுக குழு. 'கொடுத்தால் 21 இல்லையேல் கூட்டணியிலிருந்து விலகல்' என்றார் வைகோ பிடிவாதமாக. 'சரி சென்று வாருங்கள்' என்றார் மேடம் பதிலுக்கு. 'தேர்தலையே புறக்கணிக்கப்போகிறேன்' என்றார் வைகோ. 'உங்கள் முடிவுக்கு உங்களுடைய அன்பு சகோதரி என்ற பெயரில் வருந்துகிறேன்' என்று கடிதம் ஒன்றை எழுதி இனி பேசி பயனில்லை என்று முற்றுப்புள்ளி வைத்தார் மேடம்.

தாங்கள் முன்வைத்த மூன்று நிபந்தனைகளில் ஒரு நிபந்தனையைக் கூட மேடம் நிச்சயம் ஏற்கப்போவதில்லை என்று கேப்டனுக்கு தெரியாமல் இல்லை. அவர் நினைத்ததுபோன்றே மதிமுக விலகியதையும் அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மதிமுக விலகிய செய்தி வெளியானதும் அவருக்கு வழங்கவிருந்த தொகுதிகளில் தங்களுக்கு சில தொகுதிகளை கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிகிறது. அதாவது எரிகிற வீட்டில் முடிந்தவரை கொள்ளிகளை பிடுங்கலாம் என்ற நினைப்பில். ஆக, மதிமுகவைப் பற்றி இந்த கட்சிகள் பேசியதெல்லாம் வெறும் வெளிவேஷம், வடித்ததெல்லாம் வெறும் முதலைக் கண்ணீர் என்பது வெட்டவெளிச்சமாகிறது.

கேப்டனின் மீதமுள்ள இரு நிபந்தனைகளையும் மேடம் நிச்சயம் ஏற்கப்போவதில்லையென்பது, பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதிமுக ஒதுக்கிய தொகுதிகளில் இப்போதும் தேமுதிக முழு திருப்தியடையவில்லை என்றும் இன்றும் தன்னுடைய பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்களுடன் கேப்டன் இறுதிகட்ட ஆலோசனை நடத்துகிறார் என்றும் வெளியாகியுள்ள செய்தியும் மீண்டும் உறுதிபடுத்துகின்றன.

இதிலிருந்து என்ன தெரிகிறது? நான் ஏற்கனவே கூறியிருந்ததைப் போன்று இந்த கூட்டணி, குறிப்பாக தேமுதிக-அதிமுக கூட்டணி, அற்ப ஆயுளைக் கொண்ட கூட்டணி என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. இவ்விரு கட்சிகளின் தலைவர்களுமே ஒரே குணாதிசயங்களைக் கொண்டவர்கள் என்பதால் இவர்களுக்குள் எந்த ஒரு விஷயத்திலும் ஒற்றுமை ஏற்படப் போவதில்லை என்பதும் தெளிவாகிறது.

தேர்தல் முடிவுகள் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளை புரட்டிப் போடப் போவது என்னவோ உண்மை. திமுக மற்றும் அதிமுக கட்சிகளைத் தவிர கூட்டணியில் அங்கம் வகிக்கும் எந்த கட்சியும் எந்த கூட்டணிக்கும் தாவலாம் என்பதும் உண்மை. ஆனால் ஜெயித்தாலும் உடையக் கூடிய ஒரே கூட்டணி அதிமுக-தேமுதிக கூட்டணிதான்.

அதிமுக 160 இடங்களில் போட்டியிட முடிவு செய்திருப்பதிலிருந்தே மாநிலத்தில் யாருடைய தயவும் இல்லாமல் தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்துடந்தான். சட்டசபையில் சிம்பிள் மெஜாரிட்டி கிடைக்க தேவையான தொகுதிகளை தாங்களாக தனித்து பெற்றுவிடக்கூடிய சூழலில் கேப்டனை தூக்கியெறிய ஒரு நொடி கூட மேடம் தாமதிக்கமாட்டார் என்பதும் உறுதி!

தங்களுடைய நிழலுடனேயே ஒத்துப்போக முடியாதவர்கள் மேடமும், கேப்டனும். ஆகவே இவ்விரு கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி ஒரு சந்தர்ப்பவாதி கூட்டணி என்பதை வாக்களர்கள் உணர வேண்டும்.

ஊழலற்ற ஆட்சி தேவைதான். ஆனால் அரசியல் நிச்சயமற்ற சூழல் தமிழகத்திற்கு தேவைதானா?

தொடரும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக