17 மார்ச் 2011

தேர்தல் 2011 - இன்று ஆலோசனை நாள்!

ஆலோசனை, ஆலோசனை, ஆலோசனை!!

சன் செய்தி தொலைக்காட்சியில் தினமும் காலை 11.00 மணிக்கு ஆலோசனை நேரம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவது வழக்கம். அதாவது மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி இது.

இன்று இந்த ஆலோசனை நேரம் ஒளிபரப்படுகின்ற நேரத்தில் திரையின் கீழ்ப்பகுதியில் அதிமுக தோழமை கட்சிகளான இடதுசாரிகள், விஜயகாந்தின் தேதிமுக ஆகிய கட்சிகள் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக நாடா செய்திகள் ஓடிக்கொண்டே இருப்பதால் மருத்துவ ஆலோசனை இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஏன் இந்த அவசர ஆலோசனை?

எல்லாம் அம்மா நேற்று அதிரடியாக வெளியிட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல்தான் காரணம்.

ஏழு மாவட்டங்களில் ஒரு தொகுதி கூட கூட்டணி கட்சிகளுக்கு அளிக்கப்படவில்லை. தோழமை கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள பல மாவட்டங்களில் தோழமை கட்சிகளுக்கு போனால் போகிறது என்று தலா ஒரு தொகுதி.

இதில் ஏறத்தாழ அம்மாவின் அனைத்து தோழமை கட்சிகளுமே பாதிக்கப்பட்டுள்ளதால் அனைவரும் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனவாம்!

அதாவது கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பதுபோல்தான் இருக்கிறது இந்த ஆலோசனை!

மதிமுகவின் நிலையோ அதைவிடவும் பரிதாபம். நேற்று காலை கூட அம்மா அவர்கள் பெருந்தன்மையுடன் 9 தொகுதிகளை தர முன்வந்துள்ளார், மறுபேச்சில்லாமல் ஒப்புக்கொண்டு கையெழுத்திடுங்கள் என்று தூது அனுப்பிவிட்டு அவருக்கு ஆலோசிக்கக் கூட சமயம் அளிக்காமல் அவருக்கு அளிப்பதாக கூறியிருந்த தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது வைகோவின் முகத்தில் அடிப்பதற்கு சமம். இனியும் பொறுமையுடன் சனிக்கிழமை வரை காத்திருங்கள் என்கிறார் அவர்!

முதல் முறையாய் அமைத்த கூட்டணியில் இத்தகைய குழப்பம் ஏற்பட்டுவிட்டதே என்று வருத்தம் அடைந்துள்ளாராம் விஜயகாந்த்! ஆகவே தன்னுடைய கட்சியின் மூத்த தலைவர்களுடன் அவசர ஆலோசனையில் இன்று காலை ஈடுபட்டுள்ளாராம். அந்த கூட்டத்தில் பண்ருட்டியாரை அனுமதிக்காமல் இருந்தால் சுயகவுரவத்தை தக்கவைத்துக்கொள்ளும் அளவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கலாம். இல்லையென்றால் பாரத பிரதமரைப் போல கூட்டணி தர்மத்திற்காக அவமானத்தை சகித்துக்கொண்டு அம்மா தூக்கியெறியும் தொகுதிகளில் போட்டியிட்டு மண்ணைக் கவ்வ வேண்டியதுதான்.

இடது சாரிகளும் இன்று ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால் பெரிதாக ஒன்றும் நடைபெறப்போவதில்லை என்பது உறுதி. அவர்களுக்கு என்றைக்கு மானம், ரோஷம் இருந்திருக்கிறது? கூட்ட முடிவில் ஏதாவது சமாதானம் கூறிக்கொண்டு கூட்டணியில் தொடர்வார்கள்.

இதற்கிடையில் 'மாபெரும் நடிகர்-தலைவர்' கார்த்திக் வைகோவுக்கு அதிமுகவை உதறிவிட்டு வாருங்கள் நாம் இருவரும் இணைந்து போட்டியிடலாம் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். ஒருவேளை வைகோ பாஜகவுடன் இணைந்து போட்டியிடலாம் என்ற செய்தியும் வருகிறது. நடிகர் சரத்குமார் திருச்செந்தூர், தூத்துக்குடி தங்களுக்கு கிடைக்கும் என்று கருதியிருந்தார் போலும். அவரும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்.

இப்படி தன்னுடைய அனைத்து தோழமை கட்சிகளையும் விரோதித்துக்கொள்ள அம்மா எப்படி துணிந்தார்? வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைப்பதுபோன்ற வேலையில் ஏன் இறங்கியுள்ளார்?

அவருடைய ஆஸ்தான சோதிடர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக நீங்கள்தான் அமோக வெற்றிபெற்று முதல்வராக வருவீர்கள் என்று கூறியுள்ளனராம். அத்துடன் தென் இந்திய மற்றும் வட இந்திய பத்திரிகைகள் சிலவும் அதிமுகவின் அமோக வெற்றியை Predict செய்திருக்கிறார்களாம். ஆகவேதான் எதற்கு தேவையற்ற luggage என்று நினைத்து தோழமை கட்சிகளை கழற்றிவிட தீர்மானித்துவிட்டார் போலிருக்கிறது.

இனியாவது பாதிக்கப்பட்ட கட்சிகள் தங்களுடைய தவறுகளை உணர்ந்து கூட்டணியிலிருந்து விலகினால் தேர்தலில் தோற்றாலும் தன்மானத்துடன் அரசியலில் நிலைத்திருக்க முடியும். இல்லையென்றால் ஓரிரு இடங்களில் வெற்றிபெற்றாலும் போதும் என்று நினைத்து தன்மானத்தை விலைக்கு விற்க முன்வந்தால் எதிர் வரும் தேர்தல்களில் இருக்கும் இடம் தெரியாமல் போக வேண்டியதுதான்.

தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக