27 செப்டம்பர் 2010

காம்ன்வெல்த் போட்டிகள் நிச்சயம் வெற்றிபெறும்

எதிர்வரும் அக்டோபர் மாதம் 3ம் தியதி துவங்கவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டு 2010 போட்டிகள் நம் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமின்றி நாட்டின் ஆளுமை மற்றும் நிர்வாக திறனுக்கும் ஒரு சவாலாகவும் இருந்தாலும் இறுதியில் முழுமையான வெற்றியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இதை நடத்தும் உரிமையை பெறுவதற்கு இந்தியாவைத் தவிர ஏற்கனவே இந்த போட்டியை நடத்தி அனுபவம் பெற்றுள்ள கனடாவும் போட்டியிட்டது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆயினும் காமன்வெல்த் கூட்டமைப்பின் மொத்த உறுப்பினர்களுள் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் இந்தியாவையே தெரிவு செய்தனர்.

இதன் பின்னணியில் ஏதோ தில்லுமுல்லு இருப்பதாக சமீபத்தில் ஆஸ்திரேலிய பத்திரிகை வெளியிட்டுள்ளதையும் படித்திருப்பீர்கள். இதில் ஒன்றும் ரகசியமில்லை. இந்த போட்டியை நடத்த இந்தியாவுக்கு முன்னுரிமை அளித்ததற்கு இதில் பங்குபெறும் ஒவ்வொரு நாட்டின் விளையாட்டுத்துறைக்கும் 100,000 அமெரிக்க டாலர் மற்றும் இந்தியாவுக்கு வந்து செல்ல விமான சீட்டு
உட்பட அனைத்து செலவினங்களையும் தாங்களே ஏற்றுக்கொள்ள முன்வந்ததும் ஒரு முக்கிய காரணம் (ஆதாரம்:விக்கிபீடியா).

இந்த போட்டியை நடத்தும் உரிமையை 2003ம் ஆண்டே இந்தியா பெற்றது என்றாலும் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க தேவையான செலவினங்களை (சுமார் 43,000/- கோடி!) கணக்கில் கொள்ளும்போது இதன் பிரம்மாண்டத்தையும் அதற்கு தேவைப்படும் கால அவகாசத்தையும் நம்மால் உணர முடிகிறது. இந்த செலவினம் மற்றும் முதலீடுகளின் அளவு கடந்த போட்டிக்கு ஆஸ்திரேலியா செலவிட்டதை விட ஆறு மடங்கு!

எழுபத்திரண்டு நாடுகள் பங்குபெறப் போகும் இந்த போட்டி நம்முடைய நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட அடுத்த சில மாதங்களிலேயே கல்மாடி தலைமையில் ஒரு தலைமை நிர்வாக குழுவும் அதன் கீழ் ஒவ்வொரு துறையையும் சார்ந்த பல குழுக்களும் நியமிக்கப்பட்ட பிறகும் நம் நாட்டுக்கே உரித்தான சம்பந்தப்பட்ட அமைச்சக அதிகாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட உட்பூசல், போட்டி, பொறாமை நம்முடைய நாட்டின் ஆட்டின் நிர்வாக மற்றும் ஆளுமை திறமைகளை பல நாடுகளும் (அவற்றில் கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் வெறும் பொறாமை காரணமாகவும்) சந்தேகப்பட வைத்துவிட்டது என்னவோ உண்மைதான்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் பலவும் இரண்டு நாட்களுக்குள்ளேயே பின்வாங்கப்பட்டு இப்போது நிலைமை சீராகிவிட்டது என்று அவர்களே கூறுவதிலிருந்தே அவர்கள் கண்ட குறைகளின் அளவு எவ்வளவு என்பதை உணர முடிகிறது. படுக்கை விரிப்பு சரியில்லை, பாத்ரூமில் குழாய்கள் ஒழுகுகிறது, வாஷ் பேசின் சுத்தமாக இல்லை என்பதுதான் அவர்கள் கூறிய
'சுகாதாரமின்மை'. இவை யாவுமே ஆங்கிலத்தில் கூறும் 'last minute things to do' அலுவல்கள்தான் என்பதும் விளையாட்டு வீரர்கள் வருவதற்கு முந்தைய இரண்டு, மூன்று தினங்களில் செய்து முடிக்க வேண்டியவையே என்பதும் புலனாகிறது. இத்தகைய குறைகள் நம் நாடு அல்ல எந்த நாட்டிலும்
இருந்திருக்கும். ஆனால் அவற்றை சம்பந்தப்பட்ட நாட்டின் பத்திரிகைகளே வெளிச்சம் போட்டு காட்டியதில்லை. சீனா போன்ற நாடுகளில் நிலவும் இரும்புத்திரை இல்லாத பத்திரிகை சுதந்திரம் நம் நாட்டில் இருப்பதும் அதை தவறாக பயன்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள் நம்மவர்கள் என்பதுதான் இவை
யாவும் வெளிச்சத்திற்கு வர காரணம். இதற்கு வேறு ஒரு கோணமும் உண்டு கல்மாடி துவக்கமுதலே பத்திரிகைத் துறையை சரியாக 'கவனிக்க' தவறிவிட்டார். ஆகவே அந்த கோபத்தில் சகட்டுமேனிக்கு சிறிய விஷயங்களைக் கூட பூதாகரமாக எழுதி பழிதீர்த்துக்கொள்கிறது இந்தத்துறை. இடையில் நாட்டின் மானம் கப்பலேறுவதைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை?




எழுபது நாடுகள். சுமார் 2000 தடகள வீரர்கள், 500க்கும் மேற்பட்ட நடுவர்கள், அதிகாரிகள். இவர்களை தங்க வைக்க சுமார் 2000 குடியிருப்புகளைக் கொண்ட வின்னைத் தொடும் கட்டிடங்கள். இவர்களுக்கு
அவரவர் விரும்பும் உணவு வழங்க சமையற்கூடம். பொழுதுபோக்கு மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்த கூடங்கள், பயிற்சி மையங்கள், மருத்துவக் கூடம்.... இவை அனைத்தும் ஒன்றுமில்லா பாலைவனம் போன்ற இடத்திலிருந்து from scratch என்பார்களே அதுபோன்று உருவாக்க வேண்டும். அதிகபட்சம் ஆறு அறைகளைக் கொண்ட ஒரு இரண்டு மாடி வீட்டைக் கட்டி முடிக்கவே ஓராண்டுகாலம் தேவைப்படுகிறதே.. அதையும் கட்டி முடித்து குடியேறுவதற்குள் எத்தனை மன உளைச்சலுக்கு ஆளோகிறோம். நம்மில்
எத்தனை பேர் கட்டுமானப் பணிகளை பாதியிலேயே விட்டுவிடுகிறோம். இதை அனுபவித்து பார்த்தவர்களுக்கே இதன் சிரமமும் வேதனையும் புரியும்.



சுமார் 2000 குடியிருப்புகள் (10000 அறைகள்!) கொண்ட விளையாட்டு கிராமத்தில் ஒரு அறையில் பாம்பாம், சில அறைகள் இன்னும் சுத்தப்படுத்தப்படவில்லையாம், சில அறைகளில் படுக்கை விரிப்பில் நாய்கள் ஏறி அழுக்காகிவிட்டனவாம்.... இன்னும் என்னவெல்லாம் கூப்பாடுகள்! என்னைக் கேட்டால் பாலம் இடிந்து விழுந்ததை தவிர வேறு எந்த குறைபாடும் இத்தனை பெரிதுபடுத்தப்பட தேவையில்லை.

இடிந்து விழுந்த பாலத்திற்கும் ஊழலுக்கும் தொடர்பு உண்டா, 'கமிஷன்' பெற்றுக்கொண்டு தரமற்ற நிறுவனத்திற்கு இந்த பணியை ஒப்புவித்ததால்தான் பாலம் இடிந்து விழுந்ததா என்பது விசாரனையில்தான் தெரிய வரும். மற்றபடி அரங்கத்தின் கூரையே பெயர்ந்து விழுந்துவிட்டது என்றெல்லாம் சில ஆங்கில தொலைக்காட்சி சானல்கள் பேசி தீர்த்ததே அது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள். உண்மையில் விழுந்தது அரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்து 'False ceiling'கின் ஒரு சிறிய பகுதியே. அரை நாளி சரி செய்துவிடக் கூடிய குறை! ஒன்றுமில்லாத விஷயத்தையெல்லாம் 'Just Now' என்ற நாடாவில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி தங்களுடைய 'பிழைப்பை' ஓட்டும் இத்தகைய சானல்கள் தங்களுடைய நாட்டின் மதிப்பையே கெடுக்கிறோமே என்று ஒரு சில நொடிகளாவது சிந்தித்துப் பார்த்தால் நல்லது.

இந்த போட்டி சம்பந்தப்பட்ட கட்டுமான ஏற்பாடுகளைத் தவிர தில்லி மாநகரத்தை அழகுபடுத்தவும் போக்குவரத்தை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் அவற்றை உரிய நேரத்தில் முடிக்க
விடாமல் விடாது கொட்டி தீர்த்த மழையின் தீவிரத்தையும் கருத்தில்கொள்ளும்போது பத்திரிகைகள் வெளிச்சம் போட்டு காட்டிய குறைகள் ஒன்றும் பெரிதல்ல. ஆயினும் நாட்டின் ஆளுமை மற்றும் நிர்வாக திறனை வெளிநாடுகள் பலவும் குறைத்து மதிப்பிட வேண்டிய சூழலுக்கு உள்ளாக்கிவிட்டீர்களே என்ற ஆதங்கத்தில்தான் நம்முடைய பிரதமர் சம்பந்தப்பட்ட அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சாடியிருக்கிறார். ஆனால் இதை சில மாதங்களுக்கு முன்னரே அவர் செய்திருக்கலாமோ என்ற எண்ணம் எழத்தான் செய்கிறது.

சில வெளிநாடுகள் கூறும் இன்னுமொரு குற்றச்சாட்டு பாதுகாப்பு. இதில் முன்னால் நிற்பது ஆஸ்திரேலியா. தங்களுடைய நாட்டில் சில ஆண்டுகள் தங்கி படிக்க வரும் ஒரு சில மாணவர்களையே தங்களுடைய நாட்டின் 'வன்முறை கும்பல்களிலிருந்து' பாதுகாக்க வக்கில்லாத நாடு அது! அதற்கு சில பொறுப்பற்ற தீவிரவாதி நாடுகளின் தூண்டுதலால் நம் நாட்டில் ஏற்படும் ஒருசில தீவிரவாத செயல்களை சுட்டிக்காட்டி நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்ட என்ன தகுதி உள்ளது? அந்த நாட்டிலிருந்து வந்த
கிரிக்கெட் அணி கேப்டனே என்னைப் பொருத்தவரை பாதுகாப்பு திருப்திகரமாக உள்ளது என்று அறிக்கை வெளியிட்டுள்ளபோது தங்களுடைய தடகள வீரர்களை தில்லிக்கு வர நிர்பந்திக்கமாட்டோம் என்று
அறிக்கை விட்டால் அது உள்நோக்கம் கொண்டது என்று கூறுவதைத் தவிர வேறென்ன கூறுவது? எங்கே நம் நாட்டில் நடைபெறவிருக்கும் போட்டி அவர்கள் 2006ம் ஆண்டு நடத்திய போட்டிகளைவிட சிறப்பாக மைந்துவிடுமோ என்கிற பொறாமையும்தான் காரணமாக இருக்க முடியும். கனடாவுக்கு இது நம்முடைய நாட்டுக்கு கிடைத்திருக்க வேண்டிய போட்டியாயிற்றே என்கிற பொறாமை!

எத்தனை இடர்கள் வந்தாலும் எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் போட்டியை நடத்தியே தீருவோம் என்கிற உறுதியுடன் பிரதமரும் அவருடைய சகாக்களும் இறுதிகட்ட ஏற்பாடுகளை முனைப்புடன் ஈடுபடும் இந்த வேளையில் 'மேதாவித்தனமாக' இது இப்படித்தான் முடியும் என்று எனக்கு தெரியும் என்கிற தொனியில் பேசிவரும் மணிசங்கர் ஐயர் போன்றவர்களை புறக்கணிப்போம், எந்தவித தடங்கலும் இன்றி போட்டி வெற்றிகரமாக நடந்து முடிய வாழ்த்துவோம்.

என் வீடு, என் குடும்பம் என்பதில் பெருமை கொள்ளும் நான் என் குடும்பத்தார் என்ன செய்தாலும் மற்றவர்கள் முன்பு அவர்களை விட்டுக்கொடுக்க முன்வருவேனா? அதுபோன்றுதான் நம் நாடும். நான்
இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன். என்னுடைய நாட்டைப் பற்றி நானே தேவையில்லாமல் குறை கூறமாட்டேன். நிச்சயமாக பிற நாடுகள் குறை கூறுவதை அனுமதிக்கவே மாட்டேன் என்று நாம் ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.

நாட்டில் கோடானுகோடி மக்கள் பட்டினியில் வாடும் இன்றைய சூழலில் இத்தனை பொருட்செலவில் இப்படியொரு பிரம்மாண்ட போட்டி தேவைதானா என்ற கேள்வியும் எழுப்பபடுகின்றது. நிச்சயம் தேவைதான். இந்தியா இன்னும் வளர்ந்து வரும் ஒரு நாடாகவே பல நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன.  ஆகவே இத்தகைய போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக்காட்டுவது அவசியமாகிறது. அத்தகைய முயற்சியில் இடையில் ஏற்படும் சிறு,சிறு தவறுகளை, குறைபாடுகளை வெளிச்சம் போட்டு காட்டி நம்முடைய முயற்சிகளை, சாதனைகளை நாமே குறை கூற புறப்பட்டுவிடக்கூடாது.

***

4 கருத்துகள்:

  1. உங்களுடைய பதிவுகளை தொடர்ந்து படிக்கின்ற பலருள் நானும் ஒருவன் சார். ஆனால் இதுவரை பின்னூட்டம் ஏதும் இட்டதில்லை. சோம்ப்பல்தான்.

    ஆனால் சென்ற ஒரு வாரத்தில் காமன்வெல்த் போட்டிகளைப் பற்றி வந்த பல நெகட்டிவ் பதிவுகளுக்கிடையில் உங்களுடைய இந்த பாசிட்டிவான பதிவு இந்தியன் என்கின்ற முறையில் எனக்கு மிகவும் உற்சாகத்தத தந்தது.

    இரு தினங்களுக்கு முன்பு வந்த 'களவானி கலமாடி' என்ற மிகவும் அபத்தமான பதிவுக்கு வந்திருந்த பல அபத்தமான பின்னூட்டங்களை வாசித்துவிட்டு க்ஒதித்துப் போயிருந்தேன். கெட்ட கேட்டுக்கு அதை பலரும் பரிந்துரை செய்திருந்தார்கள். ஆனால் இந்த ஆக்கபூர்வமான ப்திவுக்கு ஒரு பின்னூட்டம் கூட இல்லை

    தமிழ் பதிவுலகத்தின் இந்த கேட்டிற்கு என்ன காரணம்? ஆகவேதான் நானும் பல மாதங்களாக பதிவுகள் எழுதாமல் உங்களளப் போன்றவர்களின் பதிவுகளை மட்டும் வாசித்துக்கொண்டிருக்கீறேன்.

    தொடர்ந்து எழுதுங்கள். நான் மட்டுமல்லாமல் என்னுடைய அலுவலக நண்பர்களையும் உங்களுடைய பதிவுகளுக்கு பின்னூட்டமும் பரிந்துரையும் செய்ய வைப்பேன்.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா12:30 PM

    ஆனால் இந்த ஆக்கபூர்வமான ப்திவுக்கு ஒரு பின்னூட்டம் கூட இல்லை
    //

    பின்னூட்டம் போடாதவங்க பட்டியல்ல நானும் இருக்கேம்பா. அதுக்கு வேறொரு காரணம் இருக்குது. டிபிஆர் யாரோட பதிவுலயும் பின்னூட்டம் போட்டு நா பாத்ததில்லை. இங்க எல்லாமே தினீக்கி தானிதான். நீ என் பதிவுல பின்னூட்டம் போட்டா நானும் உன் பதிவுல பின்னூட்டம் போடுவேன். குத்தும் குத்துவேன். இல்லன்னா படிச்சிட்டு போயிருவேன். அம்புடுதேன் :)

    பதிலளிநீக்கு
  3. வாங்க வசந்தன்,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    நான் என்றுமே பின்னூட்டங்களூக்காக எழுதியதில்லை. ஆகவே அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை.

    உங்களைப் போன்ற பதிவர்கள் வாசிக்கின்றீர்களே அதுவே போதும்.

    பதிலளிநீக்கு