16 ஜூலை 2010

ஒருமுறை குழந்தையாக மாறித்தான் பாருங்களேன்!!

பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5

3. மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நேரத்தை ஒதுக்குவது

குடும்பத்தில் நம்மைச் சார்ந்திருக்கும் மனைவி, குழந்தைகள் ஜடப் பொருட்கள் அல்ல அவர்களுக்கும் உணர்வுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் உண்டு. 'நம்மைச் சார்ந்திருப்பவர்கள்' என்ற வாக்கிலேயே அவர்களுக்கு நம்முடைய வழிகாட்டுதலை எதிர்நோக்கியிருப்பவர்கள் என்பதும் தெளிவாகிறதே. 'குழந்தைகள் விஷயத்த எங்கிட்ட சொல்லாதே அத நீயே பாத்துக்கோ' என்று மனைவியிடம் வேண்டுமானால் விட்டுவிடலாம் ஆனால் மனைவியின் குறைகளை நம்மை விட்டால் யாரால் தீர்க்க முடியும் என்பதை ஆண்கள் நினைத்துப்பார்ப்பதில்லை.

ஒருநாளில் பத்து மணி நேரம் அலுவலகத்திற்கு ஒதுக்குவதில் ஆண்கள் யாரும் முறையிடுவதில்லை. ஆனால் ஒரு மணி நேரம் மனைவி, குழந்தைகளுக்கு ஒதுக்குவதென்றால் அவர்களுக்கு நேரம் இல்லை. 'ஏங்க சனி, ஞாயிறுலயாவது பசங்க என்ன படிக்கிறாங்க, எப்படி படிக்கிறாங்க, அவங்களுக்கு என்ன வேணும்னு ஏதாச்சும் கேக்கறீங்களா?' இந்த முறையீடு இல்லாத வீடுகள் இன்று உண்டா என்று கேட்கும் அளவுக்கு சனி, ஞாயிறிலும் அலுவலகத்தை தஞ்சம் அடைவது அல்லது அலுவலக நண்பர்களுடன் வெளியில் செல்வது ஆண்களின் வழக்கமாகி வருகிறது.

பணிக்கு செல்லும் பெண்களுள்ள குடும்பங்களிலும் அலுவலக பணிகளுடன் வீட்டை நிர்வகிப்பது, குழந்தைகளுடைய தேவைகளை கவனித்துக்கொள்வது பெண்களின் கடமையாகிவிடுகிற அவல நிலை இன்று பல குடும்பங்களில் காணப்படுகிறது என்றால் மிகையல்ல.

ஆண்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். அலுவலகத்தில் நீங்கள் என்னதான் வெற்றியடைந்தாலும் மாலையில் நீங்கள் திரும்புவது மனைவியிடம்தான். இதை ஒருபோதும் மறக்கலாகாது. அலுவலகத்தில் நீங்கள் அடையும் வெற்றியை உண்மையான மகிழ்ச்சியுடன், பெருமையுடன் கொண்டாடி மகிழ்வது உங்களுடைய மனைவி மற்றும் குழந்தைகள்தான். அவர்களுடைய தேவைகளை, மனத்தாங்கல்களை கண்டும் காணாததுபோல் இருக்கும் ஆண்களின் அலுவலக வெற்றிகள் காணல் நீர் போன்றவையே.

இளம் வயதில் நேரமின்மையை காரணம் காட்டி குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற மறக்கும் குடும்பத்தலைவனை அவனுடைய முதிய வயதில் குடும்பத்தினரும் மறந்துவிடக் கூடிய சூழல் உருவாகலாம்,ஜாக்கிரதை!

இங்கு குடும்பத்தினரின் 'தேவைகள்' என்பது அவர்களுடைய பொருளாதார தேவைகளை மட்டும் குறிப்பிடவில்லை. அன்பு, பாசம், பராமரிப்பு எனப்படும் உணர்வுபூர்வமான தேவைகள் எங்கு வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் அளிக்கக்கூடிய பொருளாதார தேவைகளை விடவும் முக்கியமானவை. ஒரு கணவன் அல்லது தகப்பனிடம் இருந்து மட்டுமே கிடைக்கக் கூடிய இத்தகைய தேவைகளை மனைவியோ மக்களோ வேறொரு ஆணிடமிருந்து பெற முடியுமா என்ன?

ஆங்கிலத்தில் Quality time என்பார்கள். அதாவது இவ்வளவு நேரத்தை என் குழந்தைகளுக்கென தினமும் ஒதுக்குகிறேன் என்றால் போதாது. எவ்வளவு நேரம் குழந்தைகளுடன் செலவிட்டேன் என்பதை விட அதை எப்படி செலவிட்டீர்கள் என்பதுதான் முக்கியம். Quality என்பதை 'தரமுள்ள' என புரிந்துக்கொள்வதை விட 'பயனுள்ள' என புரிந்துக்கொள்வது நலம் என கருதுகிறேன். தந்தை என்ற நிலையிலிருந்து குழந்தைகளின் நண்பன் என்கிற நிலைக்கு இறங்கி வந்தால் மட்டுமே, அதாவது நம் குழந்தைகளுடன் குழந்தையாக மாறினால் மட்டுமே, அவர்களுடன் நாம் செலவிடும் நேரம் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒருமுறை குழந்தையாக மாறித்தான் பாருங்களேன், உங்களுக்கும் அது எத்தனை புத்துணர்ச்சியை அளிக்கிறது என்பதை உணர்வீர்கள்! பெண்களும் தங்களுடைய தாய் அந்தஸ்த்திலிருந்து இறங்கி வந்து குழந்தைகளின் தோழியாக மாறினால் மட்டுமே அவர்களுடைய செலவிட்ட நேரத்தின் உண்மை பொருளை உணர முடியும்.

கணவன் தன் மனைவிக்காக ஒதுக்கும் நேரமும் அப்படித்தான். கணவன் என்கிற நிலையிலிருந்து காதலன் என்கிற நிலைக்கு இறங்கி வந்தால் மட்டுமே மனைவியுடன் செலவிடும் நேரம் பயனுள்ளதாகவும் புத்தணர்ச்சியளிப்பதாகவும் இருக்கும். இது மனைவிக்கும் இது பொருந்தும்.

மனைவி, குழந்தைகளுக்கென நேரத்தை ஒதுக்கி அவர்களுடைய உணர்வுபூர்வமான தேவைகளை நிறைவேற்றும் கணவர்களால் மட்டுமே வீட்டு நிர்வாகத்தில் வெற்றி காண முடியும் என்பதும் அவர்களால் மட்டுமே அலுவலக நிர்வாகத்திலும் வெற்றியடைய முடியும் என்பது உறுதி!

4. பணிக்கு செல்லும் பெண்கள்

மேற்கூறிய அனைத்தும் பணிக்கு செல்லும் பெண்களுக்கும் பொருந்தும். ஏனெனில் அதிகார ஏணியில் இன்று பல பெண்கள் இருபது வருடங்களுக்கு முன்பு சற்றும் எதிர்பாராத நிலைகளில் அமர்ந்துள்ளனர். ஆகவே நிர்வாக பொறுப்பிலுள்ள ஆண்கள் உள்ளாகும் அனைத்து மனப்பதட்டங்களுக்கும் இத்தகைய பெண்களும் உள்ளாக வாய்ப்புண்டு.

அதிகார வர்க்கத்தில் ஆண்களுக்கு நிகரான நிலையிலுள்ள பெண்களுக்கு ஆண்களுக்கு இல்லாத பொறுப்புகளும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. அலுவலகத்தை நிர்வகிக்கும் பெரும்பாலான ஆண்களுக்கு வீட்டு நிர்வாகத்தில் அதே அளவுக்கு பங்கு இல்லை என்பதும் உண்மை. குறிப்பாக, பெண்கள் பணிக்கு செல்லாத காலத்தில் இருந்துவந்த குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இன்றும் அவர்கள் தலையில் சுமையாக உள்ளது.

குடும்பத்திற்கு தேவையானவற்றை (சமையல் சாமான்கள் எனப்படும் மளிகை, காய்கறி ஆகியவற்றிலிருந்து டாய்லெட்றி எனப்படும் சில்லறை பொருட்கள் என பட்டியல் நீண்டுக்கொண்டே போவதுண்டு) கொள்முதல் செய்வது, சமைப்பது, குழந்தைகளுடைய வீட்டுப் பாடம் உட்பட அவர்களுக்கு தேவையானவற்றை கவனித்துக்கொள்வது , இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியராக/பேராசிரியராக பணிபுரியும் பெண்களுக்கு அடுத்த நாள் எடுக்க வேண்டிய பாடங்களுக்கு தயார் செய்வது, தேர்வுத்தாள்களை திருத்துவது ஆகியவை வெறுப்பையளித்தாலும் தவிர்க்க முடியாத சில அலுவல்களில் சில.

எனவே ஆண்களை விடவும் அதிகமான அளவு மன உளைச்சலுக்கு பெண்கள் ஆளாகின்றனர் என்றால் மறுப்பதற்கில்லை.

இதை எப்படி எதிர்கொள்வது?

அ) குடும்ப நிர்வாகத்தில் ஆண்களை ஈடுபடுத்துவது

புருஷ லட்சணம் சம்பாதிப்பது மட்டுமே என்பதுபோன்ற பண்டைகாலத்து நிலைப்பாட்டை முழுமையாக கைவிடுவது. சமையலில் இருந்து குழந்தைகளை குளிக்க வைத்து, உடை மாற்றி, உறங்க வைப்பது வரை ஆண்களையும் துவக்கத்திலிருந்து (அதாவது திருமணம் ஆன நாளிலிருந்தே) ஈடுபடுத்துவது. குடும்பத்தில் ஆண்கள் செய்யத்தகாத வேலை என்று ஒன்றுமே இல்லை என்பதை பெண்கள் உணர வேண்டும். வீட்டு அலுவல்களுக்கென பல்வேறு இயந்திரங்கள் பயன்பாட்டிலுள்ள இன்றைய சூழலில் எந்த அலுவலையும் எவ்வித கவுரவு இழப்பும் இல்லாமல் ஆண்களாலும் திறம்பட செய்ய முடியும் என்பதை ஆண்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

பெண்களால் ஆகாதது ஒன்றும் இல்லை என்பார்கள். அவற்றுள் கணவனை தன்வயப்படுத்தி குடும்ப அலுவல்களில் தனக்கு உதவியாய் இருக்கச் செய்வதும் ஒன்று. ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும் பாடுகிற மாட்டை பாடி கறக்க வேண்டும் என்பதுபோன்று ஆண்களை அவர்கள் வழியிலேயே சென்று குடும்ப அலுவல்களில் சரிபாதியை அவர்கள் தலையில் சுமத்துங்கள். உங்களுடைய சுமை வெகுவாக குறைந்துபோகும்!

ஆ) குழந்தைகளுக்கு அவர்களுடைய பொறுப்பை உணர்த்துவது

குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் தேவை என்பது உண்மைதான். ஆனால் அதற்காக அவர்களை சுயமாக சிந்திக்க விடாமல் அவர்களுடைய அனைத்து விஷயங்களிலும் உதவி செய்ய முயல்வது தேவையற்றது. ஆங்கிலத்தில் இதைத்தான் Spoon feeding என்பார்கள். உண்ணும் உணவிலிருந்து, உடுத்துவது, படிப்பது என எல்லாவற்றிலும் அவர்களுக்கு உதவ முயலாதீர்கள். இப்போதெல்லாம் குடும்பத் தலைவிகளின் பெரும்பாலான நேரம் இதற்காகவே செலவிடப்படுவதை காண முடிகிறது. குழந்தைகளுக்கு தேர்வு என்றால் அது குடும்பத்தலைவிகளுக்கே தேர்வு என்பதுபோலாகிவிட்டது. ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு தேர்வு என்று தொடங்குகிறது என்பது கூட தெரிவதில்லை. இத்தகைய குழந்தைகள் தேர்வுகளில் வேண்டுமானால் முதலிடம் பிடிக்க முடியும் ஆனால் வாழ்க்கையில் முழுமையாக வெற்றிபெறுகிறார்களா என்பது சந்தேகமே. வாழ்க்கையின் வெற்றி என்பது நல்ல வேலையில் அமர்வதும் கைநிறைய ஈட்டுவதும்தான் என்றால் ஒருவேளை அது இத்தகைய குழந்தைகளுக்கு சாத்தியமாகலாம். ஆனால் வீட்டையும் அலுவலகத்தையும் திறம்பட நிர்வகிக்கக் கூடிய நல்ல நிர்வாக திறனுள்ளவர்களாக உருவாக சுயமாக சிந்தித்து முடிவெடுக்கக் கூடிய திறன் மிகவும் அவசியம். அதை குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களுக்கு உணர்த்துவது மிக மிக அவசியம். இதனால் தங்களின் பாரமும் பாதியாக குறைய வாய்ப்புள்ளது என்பதையும் பெண்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இ) வீட்டில் முதியவர்களின் வழிகாட்டுதல்

சமீப காலங்களில் nuclear family எனப்படும் நான், என் கணவர், என் குழந்தைகள் என யாரையும் குறிப்பாக கணவனின் குடும்பத்தினரை சார்ந்திராத குடும்பங்களின் எண்ணிக்கை பெருகிவருவதை காண முடிகிறது.

வீட்டில் உடன் வசிக்கும் முதியவர்களால் தங்களுடைய சுதந்திரம் பாதிக்கப்படுவதாக உணரும் பெண்கள் தாங்களும் அந்த நிலையை அடையப் போகிறவர்கள்தான் என்பதை கவனத்தில் கொள்வதில்லை. Generation gap எனப்படும் இரண்டு தலைமுறைகளுக்கிடையில் அபிப்பிராய பேதம் ஏற்படுவது மிகவும் சகஜம். ஆனால் இத்தகைய முரண்பாடுகள் நிறைந்ததுதான் வாழ்க்கை. சச்சரவும் சல்லாபமும் கலந்ததுதான் தாம்பத்தியம் என்பார்கள். கட்டியவனுடன் சல்லாபமும் அவனுடைய குடும்பத்தாருடன் சச்சரவும் என்பதைத்தான் முன்னோர்கள் இப்படி நாசூக்காக கூறி வைத்துள்ளனரோ என்னவோ.

ஒரு குடும்பத்தில் ஏற்படும் பல்வேறு கருத்து பேதங்களுக்கும் அதனால் ஏற்படும் சச்சரவுகளுக்கும் முதியோர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் கூட பல சமயங்களில் காரணங்களாகிவிடுகின்றன. குறிப்பாக கணவன் - மனைவி இருவரும் பணிக்குச் செல்பவர்களாக இருந்துவிட்டால் குழந்தைகளை பேணுவதற்கு வீட்டில் முதியவர்கள் மிகவும் அவசியம். பள்ளியிலிருந்து வீடுதிரும்பும் குழந்தைகளுக்கு யாரும் இல்லாத வீடு ஒரு பெரிய வெற்றிடத்தை அவர்களுடைய மனதில் ஏற்படுத்துவதுதான் அவர்களால் ஏற்படும் பல சச்சரவுகளுக்கு காரணிகளாக அமைகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த வெற்றிடத்தை போக்க வீட்டிலிருக்கும் தாத்தா, பாட்டியால் நிச்சயம் முடியும் என்பதை பெண்கள் உணர வேண்டும். மேலும் குடும்பம் மற்றும் அலுவலகம் ஆகிய இருவேறு சுமைகளை ஏற்கனவே சுமந்துக்கொண்டிருக்கும் பெண்கள் குழந்தைகளை பேணுவது என்ற பாரத்தையும் தனியே சுமக்க வேண்டுமா என்ன?

வீடு - அலுவலகம். இரண்டும் வெவ்வேறுதான் என்றாலும் இவை இரண்டுமே நம்முடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. ஒன்றில் நாம் எந்த அளவுக்கு வெற்றிபெறுகிறோமோ அந்த அளவுக்குத்தான் மற்றதிலும் வெற்றிபெற முடியும் என்பதில் ஐயமில்லை.

நிறைவுபெறுகிறது.

15 ஜூலை 2010

போதும் என்ற மனம்!

உ) போதும் என்கிற மனப்பாண்மை

'உலகிலுள்ள அனைத்தையும் நீ சம்பாதித்தாலும் உன் ஆன்மாவை (நிம்மதியை) இழந்துவிட்டால் அதனால் என்ன பயன்?' இது ஒரு கிறிஸ்துவ பாதிரியார் தன்னைத்தானே கேட்டுக்கொண்ட கேள்வி. அவர் ஒரு பெரிய செல்வந்த குடும்பத்திலிருந்து வந்தவர். பிறந்த வயதிலிருந்தே 'தேவைகள்' என்றால் என்னவென்றே தெரியாத அளவுக்கு சகலத்தையும் கிடைக்கப் பெற்றவர். குழந்தை மற்றும் மாணவ பருவத்தில் அவருக்கு மகிழ்ச்சியை அளித்து வந்த வசதி வாய்ப்புகள் வாலிப பருவத்தில் ஒரு சுமையாகவே தெரிந்தன. ஆகவே நாளடைவில் தன்னுடைய மனநிம்மதியை இழக்கலானார். எதற்காக இந்த வாழ்க்கை என்ற தோன்றவே அனைத்தையும் துறந்து ஆன்மீகவாதியானார்.

'People have become so materialistic these days' என்கிறார் ஒரு பிரபல மேலாண்மை ஆய்வாளர். இன்றல்ல, மனிதன் உலகில் தோன்றிய நாள் முதலே அவன் உலகத்திலுள்ள அனைத்தையும் தனதாக்கிக்கொள்ளத்தான் விரும்பினான்.

நான் வங்கியில் குமாஸ்தாவாக நுழைந்தபோது எப்படியாவது ஒரு அதிகாரியாகிவிட வேண்டும் என்று நினைத்தேன். பணிக்கு சேர்ந்த ஆறு ஆண்டுகளில் அது சாத்தியமாகிற்று. அதற்குப் பிறகு திருமணமாவதற்குள் ஒரு கிளைக்கு மேலாளராகிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இரண்டும் நிகழ்ந்தும் ஆசை அத்துடன் அடங்கவில்லை. மாநிலம் விட்டு மாநிலம் சென்று பணியாற்றினால்தான் மேலும் பதவி உயர்வு கிடைக்கும் என்று நினைத்து மாணவ பருவத்திலிருந்த மகள்களை மனைவியுடன் சென்னையில் விட்டுவிட்டு மும்பை சென்றேன். பதவி உயர்ந்தது. ஆனாலும் அத்துடன் திருப்திகொள்ள முடியவில்லை. எனக்கு பதவி உயர்வே தேவை என்பதைவிட என்னுடன் பணிக்கு சேர்ந்தவர்கள் என்னைவிட உயர்ந்த பதவிக்கு சென்றுவிடக் கூடாதே என்கிற எண்ணத்தில் என் பயணம் தொடர்ந்தது. எட்ட நினைத்த பதவிகளை அடைந்து முடித்து திரும்பிப் பார்த்தபோது வாலிபம் என்னை கடந்துபோயிருந்தது. மகள்கள் இருவரும் தோளுக்கு மேல் வளர்ந்து நின்றனர். பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு இதனால் எனக்கு என்ன பெரிதாக கிடைத்துவிட்டது என்று எண்ணிப் பார்க்கிறேன். 'வசதிகள் இருந்தும் வாய்ப்புகள் இருந்தும்... No peace of mind' நடிகர் திலகம் திரைப்படம் ஒன்றில் (ஞானஒளி என நினைக்கிறேன்) உதிர்க்கும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது:

இதுதான் வாழ்க்கையின் நிதர்சனம். 'போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து' என்பது எத்தனை சத்தியமான உண்மை! இளம் வயதில் நம்மில் பலருக்கும் இந்த தத்துவம் ஒரு வறட்டு தத்துவமாகவே தோன்றுகிறது. வாணமே எல்லை என்று உயர, உயர பறந்துபோய் யாரும், நம் குடும்பத்தினர் கூட எட்ட முடியாத உயரத்தை அடைந்துவிடுகிறோம். அமெரிக்காவில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவிட்டு இப்போது தாயகம் திரும்புவதா, திரும்பினால் அந்த சூழலுக்கு நம்மால் இறங்கிவர முடியுமா? என்று கடந்த ஆறு மாத காலமாக ஒரு முடிவுக்கு வர முடியாமல் திணறுகிறார் என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர். அவருடைய மனைவிக்கு தாயகம் திரும்பினால் போதும் என்ற மனநிலை. பிள்ளைகள் இருவருக்கும் அந்த எண்ணமே கசப்பை தருகிறது. ஒருகாலத்தில் சுவர்க்கமாய் தெரிந்த அமெரிக்கா இப்போது தன்னுடைய மகன்கள் இருவரையும் தன்னிடமிருந்து பிரித்துவிடுமோ என்ற மனக்கலக்கத்தில் என் உறவினர். இத்தகைய மனக்கலக்கத்தில் பல மேற்கத்திய நாடுகளில் பணிக்கு சென்று நிரந்தரவாசிகளாகிப்போன பலர் உள்ளனர்.

அலுவலக வாழ்க்கையில் எத்தனைதான் சாதித்தாலும் அந்த வெற்றிக்காக இழந்தவைகளை கணக்கிடும்போதுதான் நம்மில் பலருக்கும் புரிகிறது... எத்தனை விலைகொடுத்து பெற்ற வெற்றி இது என்பது! அலுவலக வேஷங்களை களைந்துவிட்டு வீடு திரும்பும்போது குடும்பத் தலைவனாகவும், தலைவியாகவும் எளிதில் மாறிவிட முடிகிறவர்களால் மட்டுமே வீட்டையும் அலுவலகத்தையும் சரிவர நிர்வகிக்க முடியும் என்பது உறுதி!

2. அலுவலகமும் வீடும் ஒன்றல்ல

மேற்கூறிய மனப்பாண்மைகளை முற்றிலுமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு களைந்தாலும் வீடு வீடுதான் அலுவலகம் அலுவலகம்தான் என்பதை முழுமையாக உணரும் வரையிலும் இரண்டையும் முழுமையாக நிர்வகிப்பது எளிதல்ல.

அலுவலகம் என்பது நாம் மட்டுமல்லாமல் நம்மைப் போன்ற பல நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஒன்றுசேரும் இடம். ஆகவே அதற்கென்றே பல சட்ட திட்டங்கள், ஒழுங்குமுறைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அதன்படி நடக்க வேண்டியது நம்முடைய கடமையாகிறது. அவற்றில் சிலவற்றுடன் நமக்கு உடன்பாடில்லை என்றாலும் அவற்றை கடைபிடிக்க வேண்டிய நிர்பந்தம் நமக்கு. அதுபோன்றே நம்முடன் பணியாற்றும் சிலருடன் நம்மால் ஒத்துப்போக முடியாமல் போகலாம். அவர்களுடைய சில பழக்கங்கள், பேச்சு, செயல்பாடு ஆகியவற்றுடன் நமக்கு உடன்பாடில்லாமல் போகவும் வாய்ப்புண்டு. ஆனால் அத்தகையோருடன் ஒத்துப்போய்த்தான் தீர வேண்டிய கட்டாயத்தில் நாம் இல்லை. நம்முடைய எண்ணங்களுக்கு ஒத்துப்போகாத சக ஊழியர்களை விட்டு விலகிச் செல்கிறோம். நாம் உண்டு நம் வேலையுண்டு என இருந்துவிடுகிறோம்.

ஆனால் நம் வீடு அப்படியல்ல. நம்முடன் வீட்டில் உடன் வசிக்கும் அனைவரும் நம் சொந்தங்கள், ஒரே இரத்தம். ஆகவே அவர்களை அவர்களுடைய நிறை குறைகளோடு ஏற்றுக்கொள்வது அவசியமாகிறது. அலுவலகத்திலுள்ளதைப் போன்ற சட்ட திட்டங்களையோ அல்லது ஒழுங்குமுறைகளையோ வீட்டிலும் நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்பதையும் நாம் உணரவேண்டும். பல குடும்பங்களில் குடும்ப தலைவன் வைத்ததுதான் எழுதா சட்டம். இதை குடும்பத் தலைவியிலிருந்து குடும்பத்திலுள்ள அனைவரும் மறுபேச்சில்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குடும்பத்திலுள்ளவர்களை நிர்பந்திக்க எண்ணுவது காலங்கடந்த செயல் என்பதை ஆண்கள் பலரும் உணர்வதில்லை. இதை என்றைக்கு உணர்கிறார்களோ அன்றுதான் வீடு வீடாக இருக்கும்.

அலுவலகத்தின் செயல்பாடுகள் நமக்கு பிடிக்கவில்லையென்றால் வேலையை உதறிவிட்டு சென்றுவிட முடியும். ஏனெனில் நம்முடைய நோக்கம் ஊதியம் மட்டுமே. மாறாக நாம் பணியாற்றும் நிறுவனத்தை மேம்படுத்துவதல்ல. எந்த நிறுவனம் நமக்கு அதிக ஊதியம் அளிக்க முன்வருகிறதோ அதற்கு நம்முடைய உழைப்பை அளிக்க முன்வருகிறோம்.

இப்போதெல்லாம் குடும்பத்திலுள்ளவர்களுடன் ஒத்துப்போக முடியாமல் போகும் சூழலில் விவாகரத்து செய்துவிட்டு சென்றுவிடலாம் என்கிற மனப்பாங்கு சிலரிடம் உள்ளது என்பது உண்மைதான். ஆனால் பெரும்பான்மையோருக்கு அது இன்றும் அத்தனை எளிதல்ல. சொந்தங்களை உதறிவிட்டு செல்வது எளிதல்ல என்பதை உணர்ந்தே இருக்கின்றனர். நம் நாட்டை பொருத்தவரை இன்றும் திருமணம் ஒரு ஒப்பந்தம் மட்டுமே என்கிற மனப்பாங்கு வெகு சிலரிடமே காணப்படுகிறது.

இதில் வேறொரு உண்மையும் உண்டு. 'என்னுடைய ஆஃபீஸ் பிரச்சினைய சால்வ் பண்றதுக்கே எனக்கு நேரம் போற மாட்டேங்குது இதுல வீட்டு பிரச்சினைகள வேற எங்கிட்ட ஏன் சொல்லி என் டென்ஷன் பண்றே?' இது பல ஆண்கள் தங்களுடைய மனைவியிடம் கூறும் முறையீடு. ஏதோ வீட்டு பிரச்சினை பெண்களின் பிரச்சினை என்பதுபோல. Charity begins at home என்பதுபோன்று வீட்டு பிரச்சினை தீராமல் அலுவலக பிரச்சினை தீரப்போவதில்லை என்பதை நம்மில் பலரும் உணர்வதில்லை. வீடு வீடாக இருக்கும் வரைதான் அலுவலகத்தில் நாம் திறம்பட பணியாற்ற முடியும். அலுவலக தோல்விகளில் சிலவற்றிற்கு வீட்டிலுள்ள சுமுகமற்ற சூழலும் கூட காரணிகளாக இருக்கலாம். அதுபோன்றே குடும்பத்தில் ஏற்படும் சில சச்சரவுகளுக்கு அலுவலக தோல்விகளும் காரணிகளாக அமையலாம்.

ஆகவே வீடும் அலுவலகமும் வெவ்வேறு என்றாலும் இரண்டையும் சரிவர நிர்வகிப்பது நம்முடைய வெற்றிக்கு மட்டுமல்லாமல் மனநிம்மதிக்கும் மிக, மிக அவசியம்.

நாளை நிறைவுபெறும்.

14 ஜூலை 2010

சார் லீவ் வேணும்!

இ) அவ்வப்போது விடுப்பில் செல்வது

அலுவலக அலுவல்களில் சரிவர கவனம் செலுத்த முடியாமல் திணறுகிறீர்களா? அப்படியென்றால் நிச்சயம் உங்களுக்கு ஓய்வு தேவை.

சில பள்ளிகளில் மாணவர்களுக்கு நூற்றுக்கு நூறு அட்டெண்டன்ஸ் என்ற விருது அளிக்கப்படுவதை கண்டிருக்கிறோம். என்னுடைய நண்பர் ஒருவர் தன்னுடைய மகளுக்கு அவருடைய பள்ளியில் 'hundred percent attendance' விருது கிடைத்ததென்று பெருமையுடன் அலுவலக நண்பர்களுக்கு ஒரு விருந்தே அளித்து கொண்டாடியது நினைவுக்கு வருகிறது. அவரும் அப்படித்தான். வருடத்தில் ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் அலுவலகத்திற்கு வருவதில் குறியாயிருப்பார். இதைத்தான் gene கோளாறு என்கிறோம். அதாவது வம்சாவழி குணநலன்கள். இத்தகையோருக்கு தான் இல்லாவிட்டால் அலுவலகம் ஸ்தம்பித்துவிடும் என்று நினைப்பு. எப்போதாவது உடல்நலக் குறைவினால் விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் வீட்டிலிருந்தவாறே மணிக்கொரு முறை தொலைபேசியில் தொடர்புகொண்டு remote control செய்ய முயலுவார்கள். இத்தகையோர் தங்களுடைய அலுவல்களில் உண்மையுள்ளவராக இருக்கிறார்கள் என்று பொருளாகாது. இவர்களுடைய நடவடிக்கைகளில் ஏதோ மர்மம் இருப்பதுபோலவும் தோன்றும். எங்கே நாம் செய்கிற தவறுகளை நாம் இல்லாத சமயத்தில் வேறு எவரேனும் கண்டுபிடித்துவிடுவார்களோ என்கிற ஒருவித அச்சம் இருப்பது போலவும் தோன்றும். ஆகவே எங்களுடைய வங்கியில் கிளை மேலாளர்கள் வருடத்தில் இரண்டு வாரங்கள் விடுப்பில் செல்ல வேண்டும் அல்லது வேறொரு அலுவலகத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்ற நியதியை அறிமுகப்படுத்தியது.

அலுவலக சூழல்களிலிருந்து மட்டுமல்லாமல் வீட்டு சூழல்களிலிருந்தும் அவ்வப்போது மாற்றம் தேவை. இல்லையென்றால் ஒருவித சலிப்பு மனதில் குடிகொள்ள வாய்ப்புள்ளது. வருடம் ஒருமுறையாவது குடும்பத்துடன் வெளியூர் சென்றுவருவது உடலுக்கு மட்டுமல்லாமல் மனதுக்கும் ஒரு புத்துணர்ச்சியை அளிக்கும் என்றால் மிகையல்ல. பெரும் பொருட்செலவுடன் நீண்ட தூரப் பயணம் சென்று வரவேண்டும் என்றில்லை. எவ்வளவு தொலைவு அல்லது எங்கு செல்கிறோம் என்பதல்ல முக்கியம். ஆனால் வெளியூர் செல்கிறேன் என்று அலுவலக நண்பர்கள் அனைவரிடமும் 'don't worry I will always be available in my cell phone' என்று கூறிவிட்டு செல்வதில் எவ்வித பயனும் இல்லை. சம்பந்தப்பட்டவர் மட்டுமல்லாமல் அவருடன் வெளியூர் செல்லும் அனைவருக்குமே அவர் ஒரு தொல்லையாகவே இருப்பார் என்பதில் ஐயமில்லை. 'விடுப்பு' என்ற சொல்லிலேயே அன்றாட சூழலில் இருந்து 'விலகி' இருப்பது என்கிற பொருள் இருப்பதை கவனத்தில் கொண்டு இயன்றவரை விலகியிருந்தால் விடுப்பின் முழு பலனை அனுபவிக்க முடியும். மீண்டும் புத்துணர்ச்சி பெற்று திரும்பி தங்களுடைய அலுவல்களை கவனிக்கவும் முடியும்.

ஈ) 'முடியாது', 'இல்லை' என்பதை தெளிவாக சொல்வது


இறைவன் ஒருவரால் மட்டுமே எதைக் கேட்டாலும் செய்ய முடியும் (அதாவது அப்படியொருவர் உள்ளார் என்பதை நம்புபவர்களுக்கு!). நம்மில் பலருடைய மன அழுத்தத்திற்கு மூல காரணமே நம்மால் செய்ய இயலாதவற்றையும் சரி என்று ஏற்றுக்கொள்வதுதான் என்றால் மிகையல்ல. 'என்னால் முடியாது' என்கிற சொல்லே என்னுடைய அகராதியில் இல்லை என்று கூறிக்கொள்வதை ஒருவித பெருமையாக கருதுபவர்களையும் நாம் கண்டிருக்கிறோம்.

வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி, நம்மால் சிலவற்றைத்தான் முழுமையாக செய்து முடிக்க முடியும். இதற்கு நம்முடைய செயல்திறன் (physical ability) மட்டுமல்ல மனத்திறனும் (Mental ability) ஒரு காரணம். உடல் வலிமையால் இயலாதவற்றை மனவலிமையால் சாதித்துவிடலாம் என கருதுபவர்களும் உண்டும். ஆனால் அது அனைவருக்கும் சாத்தியமாகாது. நூற்றில், ஆயிரத்தில் ஒருவருக்கு ஒருவேளை சாத்தியமாகலாம். சராசரி மனிதன் ஒவ்வொருவனுக்கும் அவனால் செய்யவியலாத காரியங்கள் பல உண்டு. அதை செய்கிறேன் என ஏற்றுக்கொண்டு அதை சரிவர செய்து முடிக்கவியலாமல் போகும்போதுதான் தேவையற்ற மன அழுத்தத்திற்குள்ளாகிறான்.

வானத்தை ஆடையாக கேட்கும் மனைவியையோ 'மலையையே போய் விற்றுவிட்டு வா' என்கிற உயர் அதிகாரியையும் திருப்திப்படுத்த முயன்றால் தோல்வி நிச்சயம்தானே!

'How to say NO' என்கிற தலைப்பில் பல மேலாண்மை ஆய்வாளர்கள் தங்களுடைய ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளதை இணையதளங்களில் காணலாம். ஏனெனில் இது மிக அவசியமான மேலாண்மை தகுதிகளில் ஒன்று என்கின்றனர் பல வெற்றிபெற்ற சாதனையாளர்கள்.

தங்களால் இயலாதவற்றை மிக சாதுரியமாக, நாசூக்காக கேட்பவர் மனம் புண்படாதவாறு கூறக்கூடியவர்களே மேலாண்மை அல்லது அதிகார ஏணியில் மிக உயர்ந்த படியை அல்லது நிலையை எட்டக் கூடியவர்கள் என்றாலும் மிகையாகாது.

அலுவலகத்திலும் வீட்டிலும் ஒரு சுமுகமான சூழலை உருவாக்க இந்த திறமை மிகவும் உதவுகிறது. 'உங்களால நான் கேட்டத வாங்கித்தர முடியலன்னா அப்பவே சொல்லியிருக்கலாமில்ல.. எதுக்கு இத்தன நாள் இழுத்தடிச்சிட்டு இப்ப ஏமாத்தறீங்க?' என்றுதான் பல குடும்பங்களில் வாக்குவாதம் துவங்கும். 'எங்கப்பா முடியாதுன்னா முடியாதுன்னு சொல்லிருவார் உங்கப்பா மாதிரி இழுத்தடிச்சிட்டு கடைசியில ஏமாத்த மாட்டார்.' இத்தகைய தந்தைகளின் பிள்ளைகளும் வாழ்க்கையில் எது தங்களால் முடியும் எது முடியாது என்பதை சிறுவயதிலிருந்தே கற்றுக்கொள்வர். முடியாது என்று கூறுகையில் ஏற்படுகின்ற ஏமாற்றம் ஓரிரு தினங்களில் மறைந்துவிடக் கூடும். மாறாக இன்று கிடைக்கும், நாளை கிடக்கும் என காத்திருத்தலால் ஏற்படும் ஏமாற்றம் அத்தனை எளிதில் மறைவதில்லை.

எட்டிப்பிடிக்க முடியாத வர்த்தக இலக்குகளை (Business Budgets) மறுபேச்சில்லாமல் ஏற்றுக்கொண்டு அதை எட்ட முடியாமல் தோற்று நின்ற பல கிளை மேலாளர்களை நான் கண்டிருக்கிறேன். அதே சமயம் தங்களால் எட்ட முடியாது என கூறிவிட்டு பிறகு அதை மிகவும் சிரமப்பட்டு எட்டி முடித்து சாதித்த மேலாளர்களையும் நான் கண்டிருக்கிறேன். முன்னவர்களை விடவும் பின்னவர்களுக்கே உயர் அதிகாரிகள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் இருக்கும் என்பது உறுதி.

தொடரும்..

12 ஜூலை 2010

என்னால்தான் இதை நன்றாக செய்ய முடியும்!

அலுவலக பிரச்சினைகளை அலுவலகத்திலும் வீட்டுப் பிரச்சினைகளை வீட்டிலும் விட்டுவிட்டு வருவது நல்லது என்று மேம்போக்காக சொல்லிவிட்டு செல்வதுதான் பல மேலாண்மை எழுத்தாளர்களுடைய வழக்கம். அதை அன்றாட வாழ்வில் செயல்படுத்துவது எத்தனை கடினம் என்பதை அத்தகைய சூழலில் இருப்பவர்களால் மட்டுமே உணர முடிகிறது.

அப்படியென்றால் இது சாத்தியமே இல்லையா?

சாத்தியம்.

ஆனால் இதற்கு 'Instant Solution' எனப்படும் உடனடி தீர்வு ஏதும் இல்லை. ஏனெனில் இதற்கு 'personality' அல்லது 'traits' எனப்படும் ஒவ்வொருவரின் பிரத்தியேக குணநலங்களும் காரணம். இதற்கு அவருடைய 'gene'தான் காரணம் என்று கூற கேட்டதில்லையா? சிலர் பரம்பரை, பரம்பரையாகவே எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். வேறு சிலர் மலையே பெயர்ந்தாலும் அசரமாட்டார்கள். நம்முடைய பல பிரச்சினைகளுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

இருப்பினும் இத்தகைய 'எல்லைகளை வரையறுத்து'க்கொள்ள இயலாமைக்கு காரணமாக அமைவது என்னென்ன என்பதை இணம் கண்டுக்கொண்டு அவற்றை விலக்க முயற்சி செய்தால் இதற்கு தீர்வு நிச்சயம்.

அ) என்னால்தான் இதை நன்றாக செய்ய முடியும்!

'நான் மட்டுமே' அல்லது 'என்னால் மட்டுமே' என்பது போன்ற மனப்பாங்குள்ளவர்கள் அலுவலகத்தில் மட்டுமல்லாமல் வீட்டிலும் சுமை சுமக்கும் சுமைதாங்கிகளாகவே இறுதிவரையிலும் இருக்கின்றனர். எந்த ஒரு அலுவலையும் அது எத்தனை எளிதானதாக அல்லது சிறிதானதாக இருந்தாலும் தன்னால்தான் முழுமையாக செய்து முடிக்க முடியும் என எண்ணுபவர்கள் இவர்கள். தங்களால் இயலாத காரியத்தையும் தன் தலைமேல் ஏற்றுக்கொண்டு செய்து முடிக்க முடியாமல் திணறுவார்கள். குறிப்பாக மேற்பார்வையாளர் பதவியில் அமர்ந்திருப்பவர்கள் தங்களுக்கு கீழே பணியாற்றுபவர்களுடைய அலுவல்களை சரிபார்க்கும் பொருப்பை மறந்துவிட்டு அவர்கள் செய்துமுடிக்க வேண்டிய அலுவல்களையும் தங்களாகவே முன்வந்து ஏற்றுக்கொண்டுவிடுவார்கள். விளைவு? தங்களுடைய முதன்மை அலுவலான மேற்பார்வையை (supervisory) சரிவர ஆற்றாமல் உயர் அதிகாரிகளின் ஏச்சுக்கு ஆளாவார்கள். இத்தகைய ஏச்சிலிருந்து தப்பிக்க இரவு நேரம் வெகு நேரம் அலுவலகத்தில் அமர்ந்து தங்களுடைய அலுவல்களை செய்வார்கள். என்னுடைய வங்கி கிளைகள் பலவற்றில் இத்தகைய மேலாளர்களைக் கண்டிருக்கிறேன். அன்றாட அலுவல்களை முடிப்பதிலேயே குறியாயிருக்கும் இவர்களால் தங்களுடைய மேலாளர் முதன்மை பணியான கிளையின் வர்த்தக மேம்பாட்டை கோட்டை விட்டுவிடுவார்கள்.

இத்தகைய மனப்பாங்கிலிருந்து விடுபடுவது அத்தனை எளிதல்ல. ஆனால் தங்களால் இயன்றவரை இத்தகைய போக்கிலிருந்து விடுபட முயலவேண்டும். Delegation என்கிற அலுவல்களை அவரவருடைய பதவி அல்லது அந்தஸ்த்திற்கு ஏற்றார்போல் பகிர்ந்தளிக்கும் உத்தியை பயன்படுத்த வேண்டும். இது அலுவலகத்திற்கு மட்டுமல்லாமல் வீட்டிற்கும் பொருந்தும். மனைவி மற்றும் குழந்தைகளால் செய்து முடிக்கக் கூடிய அலுவலை அவர்களிடமே விட்டுவிட வேண்டும். இதற்கு முக முக்கியமாக தேவைப்படுவது 'என்னால் செய்து முடிக்க முடிந்த எந்த அலுவலையும் மற்றவர்களாலும் செய்ய முடியும்' என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்வது. ஒரு அதிகாரியின் வெற்றியே அவருடைய பணியாளர்களையும் அவரைப்போன்றே திறமையுள்ளவராய் மாற்றுவதில்தான் அமைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இது வீட்டிற்கும் பொருந்தும். ஒரு குடும்பத் தலைவனின் வெற்றி குடும்பத்திலுள்ள அனைவரையும் பொறுப்புள்ளவர்களாக மாற்றுவதில்தான் உள்ளது.

இத்தகைய 'என்னால் மட்டுமே முடியும்' என்ற மனப்பான்மையால் ஏற்றுக்கொண்ட அலுவல்களை முடிக்க முடியாமல் அலுவலக வேலைகளை வீட்டுக்கு கொண்டு செல்வதும் அலுவலக நேரத்தில் வீட்டில் முடிக்க முடியாமல் போன அலுவல்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பதும் தொடரத்தான் செய்யும்.

ஆ) நேரத்தின் அவசியத்தை உணர்வது.

அலுவலகங்களில் ஒரு தவறான கருத்து நிலவுவதை கண்டிருக்கிறேன். யார் அலுவலகத்திற்குள் முதலில் நுழைந்து இறுதியில் வெளியேறுகிறாரோ அவர்தான் மிகவும் உண்மையான ஊழியர் (Sincere worker) என்று கருதுவது. இது பல நேரங்களில் உண்மைக்கு நேர்மாறானதாக இருக்கும். ஒரு ஊழியர் தன்னுடைய அலுவல்களில் உண்மையானவராகவோ (sincere) அல்லது தன்னை அர்ப்பணித்துக்கொண்டவராகவோ (dedicated) இருப்பதைவிட அதை செய்துமுடிக்க தேவையான திறமை வாய்ந்தவராக (talented) அல்லது தகுதியுள்ளவராக (suitable) இருப்பதுதான் மிகவும் அவசியம். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில் செய்து முடிக்கக் கூடிய ஒரு அலுவலை அதிகாலையிலேயே அலுவலகத்திற்குள் நுழைந்து நாள் முழுவதும் அமர்ந்தும் அதை சரிவர செய்து முடிக்கவியலாத 'உண்மையான' ஊழியரை விட குறித்த நேரத்தில் அலுவலகத்திற்கு வந்து தனக்கு அளித்த அலுவல்களை குறித்த நேரத்திற்குள்ளாகவே செய்து முடித்துவிட்டு குறித்த நேரத்தில் அலுவலகத்தைவிட்டு வெளியேறுபவர் எவ்வளவோ மேல். அலுவலக வேலையை வீட்டிற்கு கொண்டு செல்வதும் அல்லது அலுவலக நேரத்தில் தங்களுடைய சொந்த அலுவல்களை செய்பவர்களும் நேரத்தின் முக்கியத்துவத்தை உணராதவர்களே. 'ஒரு நாளைக்கு முப்பத்தாறு மணி நேரம் இருந்தாக் கூட எனக்கு போறாது போலருக்கு' என்பது இப்போதெல்லாம் ஒரு கவுரவமாக போய்விட்டது.

இதிலிருந்து விடுபடுவதும் உடனடியாக இயலாது என்றாலும் நாளடைவில் விடுபட முயல வேண்டும். ஒரு அலுவலை செய்து முடிக்க அலுவலகத்திலுள்ள திறமைவாய்ந்த சக ஊழியர்கள் எவ்வளவு அவகாசம் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை கவனித்து தாங்களும் அதை பின்பற்ற முயல வேண்டும். துவக்கத்தில் சற்று கடினமாக தோன்றினாலும் காலப்போக்கில் அந்த கலை கைவந்துவிடும். துவக்க நாட்களில் அலுவலகத்தில் சற்று கூடுதல் நேரம் அமர்ந்திருக்க வேண்டிவந்தாலும் அலுவலக வேலைகளை அலுவலகத்திலேயே முடித்துவிட்டு செல்ல வேண்டும். அதை விடுத்து மீதமுள்ள அலுவல்களை வீட்டிற்கு கொண்டு செல்ல முயலக்கூடாது.

சமீப காலங்களில் சில நிறுவனங்கள், குறிப்பாக கணினித்துறையில், தங்களுடைய மூத்த அலுவலர்களை அவர்களுடைய வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்கின்றன. 'I work from my home' என்று கூறிக்கொள்வது ஒரு பெருமையாகக் கூட கருதுகின்றனர் சிலர். ஆனால் காலப் போக்கில் இது தங்களுடைய குடும்ப வாழ்க்கையையே சீர்குலைத்துவிடும் என்பதை இவர்கள் மறந்துபோகின்றனர். காலை ஒன்பதிலிருந்து மாலை ஆறு மணி வரை என்கிற அலுவலக நேரம் நாளடைவில் மறைந்து இருபத்திநாலு மணி நேரமும் அலுவல் என்றாகிவிடும்போது அதிலிருந்து மீள முடியாமல் திணறுவார்கள். வீடு வீடாக இருக்கும்வரைதான் குடும்பமும் குடும்பமாக இருக்கும் என்பதை ஒருபோதும் மறக்கலாகாது.

தொடரும்..

09 ஜூலை 2010

வீடும் அலுவலகமும் 2

இதை எப்படி தவிர்க்கலாம் அல்லது சாமர்த்தியமாக கையாளலாம்?

தொடரும்..

1. அலுவலகம் - வீடு எல்லைகளை வரையறுத்துக்கொள்தல்

சமீப காலங்களில் தொலைதொடர்பு தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள அசுர வளர்ச்சியின் காரணமாக வீடு, அலுவலகம் என்கிற பாகுபாடில்லாமல் போய்விட்டது என்றால் மிகையல்ல. முன்பெல்லாம் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுவிட்டால் அடுத்த வேலை நாள் அன்று அலுவலகம் திரும்பும்வரை அலுவலக விஷயங்களுக்காக நம்மை தொடர்புகொள்ள வழியில்லாமல் இருந்தது. இது ஒரு வகையில் சிலருக்கு, குறிப்பாக அதிகாரிகளுக்கு, குறையாக இருந்தாலும் அதிகாரத்திற்குட்பட்ட பலருக்கும் இது ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருந்தது.

ஆனால் கைத்தொலைபேசி புழக்கத்திற்கு வந்த நாளிலிருந்து அலுவலக நேரம் என்பதே நம்மில் பலருக்கும் இல்லாமல் போய்விட்டது. ஏன் அலுவலக நாட்கள், விடுமுறை நாட்கள் என்ற பாகுபாடுகூட இல்லாமல் போய்விட்டது என்றாலும் மிகையல்ல.

இந்த சூழலில் அலுவலகம், வீடு என்று தீர்க்கமான எல்லைகளை வரையறுத்துக்கொள்ளுங்கள் என்பது சொல்வதற்கு வேண்டுமானால் எளிதாக தோன்றலாம். நாம் வாசிக்கின்ற பல மேலாண்மை தத்துவங்கள் தொலைதொடர்பு தொழில்நுட்பம் இன்றைய அளவுக்கு வளர்ச்சிபெறாத சூழல்களை மையமாக வைத்து எழுதப்பட்டவை என்பதை நினைவில் கொள்வது நல்லது. ஆகவே அத்தகைய தத்துவங்கள் காலாவதியாகிப்போன வெற்று போதனைகளே!

கைத்தொலைபேசியை அணைத்து செயலிழக்க செய்துவிட்டால் போதாதா என்றால் அழைத்தவர் ஒருவேளை நம்முடைய உயர் அதிகாரியாய் இருந்து அவர் அழைத்த நோக்கம் தலைபோகிற அவசரமாக இருந்துவிட்டால் என்னாவது என்கிற அச்சத்தாலேயே ஏற்படுகிற மன அழுத்தம் முந்தைய மன அழுத்தத்தை விட அபாயகரமானது. இதற்கு மாற்றாக கைத்தொலைபேசியை நிசப்தநிலையில் (Silent Mode) வைத்துவிட்டால் தீர்ந்தது பிரச்சினை என்று எண்ணுபவர்களும் உண்டு. அழைத்தவர் யார் என்பதை அறிந்துக்கொண்டு தேவைப்பட்டால் எடுத்து பதிலளிப்பது, இல்லையென்றால் தவிர்த்துவிடலாமே. இதிலும் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. நம்மை அழைத்தவர் நமக்கு அறிமுகமான அதிகாரியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லையே! அது மட்டும் போதாதே, அவருடைய தொலைபேசி எண்ணும் நம்முடைய கைத்தொலைபேசி எண் பட்டியலில் சேமிக்கப்பட்டிருக்க வேண்டுமே!

ஆக எல்லைகளை வரையறுத்துக்கொள்வது அத்தனை எளிதல்ல.

எனக்கு மிகவும் நெருக்கமான அலுவலக நண்பர் வீட்டிலேயே அலுவலக கோப்புகளை மனைவி மற்றும் குழந்தைகளுடைய இடையூறு இல்லாமல் பார்வையிட அதற்கென ஒரு அறையையே ஒதுக்கியிருப்பார். அலுவலகத்திலிருந்து சரியாக ஏழு மணிக்கு கைப்பெட்டியுடன் கிளம்பும் அவரை அவருடைய சக அதிகாரிகள் பொறாமையுடன் பார்ப்பதை கவனித்திருக்கிறேன். ஆனால் அவருடைய கைப்பெட்டியில் அன்றைய கோப்புகள் இருந்தது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லையே.

இன்னொரு நண்பர் காலை எட்டு மணிக்கே அலுவலகத்திற்கு வந்துவிடுவார். இரவு பத்து மணிக்கு மேல்தான் புறப்படுவார். காலை பத்து மணிக்குக் கூட வரமுடியாமல் ஆனால் மாலை ஏழு மணிக்குள்ளாக புறப்பட எண்ணும் என்னைப் போன்றவர்களுக்கு எங்களுடைய இலாக்கா அதிகாரியின் மண்டையிடியை பெற்றுத் தருவதில் அவருக்கு அப்படியொரு ஆனந்தம். பிறகுதான் தெரிந்தது அவருடைய குடும்பப் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளத்தான் அலுவலகத்தை தஞ்சம் அடைகிறார் என்கிற விஷயம். Escapism எனப்படும் இத்தகைய அணுகுமுறையும் எல்லைகளை வரையறுத்துக்கொள்ள இயலாமையின் வெளிப்பாடுதான்.

வேறு சிலர் வீட்டுப் பிரச்சினைகளை அலுவலகத்திற்கு கொண்டு சென்று நண்பர்கள் அனைவரிடமும் அதையே நாள் முழுவதும் கூறி சுயபச்சாதாபத்தை தேடிக்கொள்ள முயல்வார்கள். ஆனால் இத்தகைய புலம்பல்களால் அவரை சுற்றியுள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. அதிகபட்சம் அலுவலக நண்பர்களின் அன்றைய அலுவல்கள் பாதிக்கப்படலாம். ஆனால் அவருடைய பிரச்சினைகளுக்காக யாரும் பெரிதாக கவலைப்பட்டு தங்களுடைய மனநிம்மதியை கெடுத்துக்கொள்ள போவதில்லை.

இன்னும் சிலர் அலுவலக தோல்விகளை வீட்டுக்குள் கொண்டு சென்று குடும்பத்திலுள்ள அனைவரையும் குறை கூறுவார்கள். இத்தகையோருடைய மனப்பாங்கு அவர்களை மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தினரையும் தேவையற்ற மன அழுத்தத்திற்கு உள்ளாக்குவதை இவர்கள் உணர்வதில்லை.

இத்தகையவர்களுக்குத்தான் இந்த 'எல்லைகள் வரையறுத்துக்கொள்க' என்கிற அறிவுரை பொருந்தும்!

அலுவலக பிரச்சினைகளை அலுவலகத்திலும் வீட்டுப் பிரச்சினைகளை வீட்டிலும் விட்டுவிட்டு வருவது நல்லது என்று மேம்போக்காக சொல்லிவிட்டு செல்வதுதான் பல மேலாண்மை எழுத்தாளர்களுடைய வழக்கம். அதை அன்றாட வாழ்வில் செயல்படுத்துவது எத்தனை கடினம் என்பதை அத்தகைய சூழலில் இருப்பவர்களால் மட்டுமே உணர முடிகிறது.

அப்படியென்றால் இது சாத்தியமே இல்லையா?

சாத்தியம்.

ஆனால் இதற்கு 'Instant Solution' எனப்படும் உடனடி தீர்வு ஏதும் இல்லை. ஏனெனில் இதற்கு 'personality' அல்லது 'traits' எனப்படும் ஒவ்வொருவரின் பிரத்தியேக குணநலங்களும் காரணம். இதற்கு அவருடைய 'gene'தான் காரணம் என்று கூற கேட்டதில்லையா? சிலர் பரம்பரை, பரம்பரையாகவே எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். வேறு சிலர் மலையே பெயர்ந்தாலும் அசரமாட்டார்கள். நம்முடைய பல பிரச்சினைகளுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

இருப்பினும் இத்தகைய 'எல்லைகளை வரையறுத்து'க்கொள்ள இயலாமைக்கு காரணமாக அமைவது என்னென்ன என்பதை இணம் கண்டுக்கொண்டு அவற்றை விலக்க முயற்சி செய்தால் இதற்கு தீர்வு நிச்சயம்.

தொடரும்..

08 ஜூலை 2010

வீடும் அலுவலகமும் 1

கடந்த வாரம் நான் எழுதிய 'பணியிலிருந்து ஓய்வு - சுயதயாரிப்பு' தொடரை வாசித்த நண்பர் ஒருவர் உங்களுடைய அனுபவத்திலிருந்து பணியிலிருப்பவர்கள் அலுவலக பளுவையும் குடும்ப பளுவையும் ஒருசேர எப்படி சுமப்பது அல்லது சமாளிப்பது என்பதைப் பற்றியும் எழுதுங்களேன் என்று மின்னஞ்சல் வழியாக கேட்டுக்கொண்டார்.

அதன் விளைவே இத்தொடர்.

என்னுடைய நண்பர் 'பளு' என குறிப்பிட்டது பொறுப்புகளின் (Responsibilities arising out of Positions) விளைவாக ஏற்படுகின்ற சுமை (Burdens or Obligations) என்று கருதுகிறேன்.

நான் 'பொறுப்புகள்' என குறிப்பிடுகையில் எல்லா பதவி நிலைகளையும் ஒருமித்து குறிப்பிடவே 'Authority' என்று கூறாமல் 'Positions' என்று கூறியுள்ளேன். கடமைகள் சுமைகளாக தோன்றுவது அதிகார நிலையிலுள்ளவர்களுக்கு (Authorities) மட்டுமல்லாமல் அதிகாரத்திற்குட்படும் அடிமட்ட ஊழியர்களுக்கும் கூட அவரவர்களுடைய நிலைகளுக்குட்பட்ட சுமைகளுக்கு உள்ளாகின்றனர் என்பதை மறுக்கவியலாது. ஆகவே 'சுமை'யின் பாரத்தை அனைவருமே ஏதாவது ஒரு காலத்தில் உணரவே செய்கின்றனர்.

குடும்பங்களிலும் அப்படித்தான். தலைவர் எனப்படும் கணவன் மட்டுமேதான் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர் என்றில்லை. அவருடைய அதிகாரத்திற்கு ஆளாகும் மனைவி மற்றும் குழந்தைகளும் கூட மன அழுத்தத்திற்குள்ளாகின்றனர்.

'டென்ஷன்' என்ற ஆங்கில சொல்லை 'மன அழுத்தம்' அல்லது 'மன இறுக்கம்' என எதிர்மறைப் பொருள்பட (Negative sense) பல தமிழ் எழுத்தாளர்கள் குறிப்பிடுகின்றனர். எனக்கென்னவோ 'டென்ஷன்' என்றால் 'மனப் பதட்டம்' என்பதே பொருத்தமாக இருக்கும் என படுகின்றது. 'மன அழுத்தம்' அல்லது 'மன இறுக்கம்' என குறிப்பிடுகையில் Positive Anxiety எனப்படும் 'நேர்மறை மனப்பதட்டம்' என்கிற மனநிலை வெளிவருவதில்லை. அதாவது நல்ல அலுவல் ஒன்றை குறிப்பிட்ட நேரத்தில், வெற்றிகரமாக முடித்தாக வேண்டுமே என்கின்ற ஒரு மனநிலையைத்தான் 'நேர்மறை மனப் பதட்டம்' என குறிப்பிடுகிறேன்.

உதாரணமாக என்னுடைய மகளின் திருமணத்தை நிச்சயித்த தியதியிலிருந்து ஒருவாரத்திற்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறேன் என வைத்துக்கொள்வோம். 'இதை நான் எப்படி செய்து முடிக்கப் போகிறேன்' என்று என் மனதுக்குள் ஒருவிதமான பதற்றம் ஏற்படுகிறதே அதுவும் ஒருவகையில் 'டென்ஷன்' தான். அல்லது அடுத்து வருகின்ற தேர்வுக்காக மாணவர்கள் மத்தியில் ஏற்படும் டென்ஷன். இவை நல்ல விஷயங்களுக்காக ஏற்படுகின்ற பதற்றம்.

இத்தகைய பதட்டத்தை 'மன இறுக்கம்' என குறிப்பிட முடியாது. இதை 'Positive Tension or Anxiety' என கூறலாம்.

இத்தகைய 'நேர்மறை மனப் பதட்டம்' அவசியமானதும் கூட. நம்முடைய அன்றாட அலுவல்களை சரிவர செய்து முடிக்க - அது அலுவலகமானாலும் வீடானாலும் - இந்த மனநிலை ஒரு உந்துகோலாக நிச்சயம் அமைகிறது. எவ்வித மனப்பதட்டத்திற்கும் உள்ளாகாமல் ஒரு மனிதனால் எதிலும் வெற்றிபெற முடியாது.

'எதிர்மறை மனப் பதட்டம்' அதாவது தேவையற்ற அச்சங்களால் ஏற்படும் மன சஞ்சலங்களைத்தான் 'மன இறுக்கம்' அல்லது 'மன அழுத்தம்' என கூறலாம். இந்த மன சஞ்சலங்கள்தான் பல சமயங்களிலும் நம்மை எவ்வித முடிவுக்கும் வர முடியாமல் அலைக்கழிக்கின்றன. தேவையற்ற பரபரப்பை நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுத்துகின்றன. இத்தகைய சஞ்சலங்கள் நம்முடைய உள்ளத்துக்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் கேடு விளைவிக்கின்றன. பசியின்மை, உறக்கமின்மை, உற்சாகமின்மை இவை அனைத்திற்குமே இத்தகைய சஞ்சலங்கள்தான் காரணம் என்றால் மிகையல்ல.

பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இத்தகைய மன இறுக்கத்தை எப்படி கையாள்வது என்பதை என்னுடைய அனுபவத்தில் நான் அறிந்துக்கொண்டவற்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதே இத்தொடரின் நோக்கம். அத்துடன் நான் என்னுடைய வங்கியின் பயிற்சிக் கல்லூரியில் முதல்வராக சில ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில் அங்கிருந்த நூலகத்தில் இருந்த பல மேலாண்மை புத்தகங்களை படித்து வகுப்புகள் எடுக்க நான் குறித்து வைத்திருந்தவற்றையும் கையாளலாம் என்று எண்ணியுள்ளேன்.

'மன இறுக்கம்' என்பது ஒரு அலுவலை சரிவர செய்துமுடிக்க வேண்டுமே என்கிற நேர்மறை மனப் பதட்டத்தை கடந்து அந்த அலுவலை சரிவர முடிக்காமல் போய்விடப் போகிறது அல்லது அதை என்னால் நிச்சயம் சரிவர செய்ய முடியாது என்கிற எதிர்மறை மனசஞ்சலத்திற்கு ஆட்பட்ட மனநிலை என்றும் கூறலாம்.

தோல்வியை சந்திக்க தயாராக இல்லாத மனநிலையைக் கொண்டவர்களே பெரும்பாலும் இத்தகைய மனநிலைக்கு ஆளாகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள். நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையானாலும் அலுவலக வாழ்க்கையானாலும் தோல்விகள் நிச்சயம். தோல்விகளை சந்திக்காத மனிதர்களே இல்லை. தோல்விகள் மிகவும் சகஜம். இதுதான் வாழ்க்கையின் நிதர்சனம். இதை உணர்ந்துக்கொள்ளாமல் நான் வெற்றிபெற்றுத்தான் தீருவேன், என்னுடைய அகராதியில் தோல்வி என்ற வார்த்தையே இல்லை என்ற தேவையற்ற தீர்மானங்களை உள்ளத்தில் உரம் இட்டு வளர்ப்பவர்களே மன இறுக்கத்திற்குள்ளாகின்றனர்.

இதை எப்படி தவிர்க்கலாம் அல்லது சாமர்த்தியமாக கையாளலாம்?

தொடரும்..