30 ஜூன் 2010

பணியிலிருந்து ஓய்வு நிறைவுப் பகுதி

நடுத்தர குடும்பத்திலுள்ளவர்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்றபிறகு ஓரளவுக்காகிலும் வசதியுடன் வாழ தங்களுடைய பணிக்காலத்தில் சில வசதிகளை தியாகம் செய்துதான் ஆகவேண்டிய கட்டாயத்திலுள்ளார்கள் என்பதை மறுக்கவியலாது. இன்றைய நாளுக்கு மட்டும் வாழ்ந்தால் போதும் என நினைப்பவர்கள் பலரும் பொருளாதார அடிமட்டம் அல்லது உச்சாணியிலுள்ளவர்களாகத்தான் இருக்க முடியும். சாலையோரத்தில் வசிப்பவனால் எப்படி வேண்டுமானாலும் வாழ முடியும் ஆனால் நடுத்தர மக்கள் அப்படியல்ல. அதுவும் சமுதாயத்தில் ஓரளவுக்கு மதிக்கத்தக்க அந்தஸ்த்துடன் வாழ்ந்து பழகிப்போனவர்கள் அதே அந்தஸ்த்துடன் இறுதிவரை வாழவே விரும்புவர். இதற்கு மிகவும் அத்தியாவசியமானது பொருளாதார சுதந்திரம். இத்தகைய சுதந்திரத்தை முதிர்ந்த வயதிலும் அளிக்கக் கூடியது சேமிப்பு மட்டுமே.


ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் சேமிக்க தேவையில்லை என்கிற மனப்பாண்மை சிலரிடம் இருப்பதை கண்டிருக்கிறேன். அவர்களை நன்றாக படிக்க வைத்து ஒரு வேலையை வாங்கிக் கொடுத்துவிட்டால் போதும் நம்முடைய முதிர்ந்த வயதில் அவர்கள் நம்மை கவனித்துக்கொள்வார்கள் என்பது போன்ற எண்ணம் இவர்களுக்கு. இத்தகைய எண்ணம் சரியா, தவறா என்பது போன்ற வாதத்தில் இறங்குவதை விட அது விரும்பத்தக்க ஒன்றா என்று சிந்திப்பது நல்லது என கருதுகிறேன்.

பொருளாதார சுதந்திரமின்மைதான் முதியவர் பெரும்பாலோரின் மனக்கவலைகளுக்கு அடிப்படைக் காரணம் என்கின்றனர் சமூக ஆய்வாளர்கள். அதாவது முதிர்ந்த வயதில் தங்களுடைய வசதிகளுக்கு பிறரை, குறிப்பாக தங்களுடைய பிள்ளைகளை சார்ந்திருப்பவர்களுக்குத்தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

ஆகவே பெற்றது ஆணாலும் பெண்ணானாலும் பெற்றவர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு எதிர்கால வாழ்வுக்கு சேமித்து வைப்பது மிகவும் அவசியம்.

சேமிப்பு என்றால் தற்போதைய வசதிகளை நிறைவேற்றிக்கொண்ட பிறகு மீதமுள்ள தொகையை சேமிப்பது என்றுதான் நம்மில் பலரும் கருதுகிறோம். இதில் தவறேதும் இல்லை. எதிர்காலத்தில் வசதியுடன் வாழ வேண்டும் என்பதற்காக இன்றைய அடிப்படை தேவைகளையும் தியாகம் செய்வதில் அர்த்தம் இல்லை. நாளை, நாளை என்கிற எண்ணத்துடன் என்றுமே வாழாமல் இருப்பதில் என்ன சுகம் இருக்க முடியும்?

அதே சமயம் இன்றைய அடிப்படை தேவை என்றால் என்ன என்று வரையறுத்துக்கொள்வது அத்தனை எளிதா என்றும் கேட்கலாம். எனக்கு அடிப்படை தேவையாக நான் கருதுவது வேறு சிலருக்கு ஆடம்பரமாக தென்படலாம். இருக்க இடம், உடுத்த உடை, உண்ண உணவு இவை மூன்றும் இருந்தால் போதும் என கருதுபவர்களும் உண்டு. இருக்க இடம் என்றால் குறைந்தபட்சம் இரண்டு படுக்கையறைகள் இருக்க வேண்டும், உடுத்த உடையென்றால் குறைந்தபட்சம் ஐம்பது ஜோடிகள் வேண்டும், உணவு என்றால் தினமும் விருந்து சாப்பாடு வேண்டும் வார இறுதி நாட்களில் வெளியில் சாட், தந்தூரி வகையறா இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா என்று கருதுபவர்களும் உண்டு. அதுபோலவே போக்குவரத்திற்கு தங்கள் வாழ்நாளெல்லாம் பொதுத்துறை பேருந்துகளை மட்டுமே சார்ந்திருப்பவர்களும் உண்டு, குறைந்தபட்சம் மொப்பெட்டாவது இருக்க வேண்டும் என்று கருதுபவர்களும் உண்டு. ஆக அவரவர் தகுதிக்கேற்ப வாழ்க்கைத்தரமும், தேவைகளும் மாறுபடுகின்றன.

சேமிப்பும் அப்படித்தான். அவரவர் வாழ்க்கைத்தரத்தைப் பொருத்தே சேமிப்பும் அமைகின்றன. சேமிப்பின் அளவு வேண்டுமானால் மாறுபடலாம் ஆனால் சேமிப்பு என்பது அனைவருக்கும் தேவை.

சேமிப்பு எவ்வளவு முக்கியமோ அதை எப்படி முதலீடு செய்வது என்பதை தெரிந்துக்கொள்வது அதைவிட முக்கியம். சேமிப்பின் அவசியத்தை உணர்ந்துள்ள நம்மில் பலரும் அவற்றை முதலீடு செய்வதில்தான் தோற்றுப்போகிறோம். சமீப காலங்களில் சரியாக ஆலோசிக்காமல் முதலீடு செய்துவிட்டு ஏமாந்து நிற்பவர்களைப் பற்றிய செய்திகள் வராத நாள் இல்லையே. இத்தகையோருள் பலர் அடிப்படை வசதிகளையும் தியாகம் செய்து சேமித்தவர்கள் என்பதுதான் வேதனையிலும் வேதனை. படிக்காதவர்கள்தான் என்றில்லாமல் சில அரசுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளும் சென்னையில் மிகவும் பிரபலமாகியிருந்த RBF நிறுவனத்திடம் தங்களுடைய சேமிப்பு அனைத்தையும் இழந்து நின்றதை படித்தோமே.

திரும்பும் இடமெல்லாம் வங்கிகள் நூற்றுக்கணக்கில் இயங்கிக்கொண்டிருக்கும் சூழலில் ஏன் பொதுமக்கள் இன்றும் இத்தகைய நிறுவனங்களை நம்பி ஏமாந்துபோகின்றனர்? கேட்டால் அரசுத்துறை வங்கிகள் மிகக் குறைந்த விகிதத்திலேயே வட்டி வழங்குகின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர். ஆரம்பநிலை பொருளாதார பாடம் என்ன சொல்கிறது? வட்டி என்பது சேமிப்பவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை (incentive). அதாவது சேமிப்பே இல்லாத பொருளாதார சந்தையில் சேமிப்பை தூண்ட அளிக்கப்படும் ஊக்கத்தொகைதான் வட்டி. சேமிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க அதற்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகையின் விகிதமும் குறையத்தான் செய்யும். சந்தைக்கு வரும் பொருட்களின் அளவைப் பொருத்துத்தானே அதன் விலையும் அமைகிறது? சரக்கு பற்றாக்குறையாக இருக்கும் காலங்களில் அதன் விலை உயர்வதும் சரக்கு அபிரிதமாக இருக்கும் காலங்களில் அதன் விலை சரிவதும் இயற்கைதானே! Disposable income எனப்படும் தேவைக்கு அதிகமான ஊதியம் அதிக மக்களின் கைவசம் இருக்கும் இன்றைய சூழலில் சேமிப்புக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் குறையவே வாய்ப்புள்ளது. ஆகவே சேமிப்பிற்கு நிதி நிறுவனங்கள் வழங்கும் வட்டி விகிதம் குறைந்து வரும் இன்றைய சூழலில் நம்முடைய அனைத்து சேமிப்பையும் வைப்புநிதிகளில் வைப்பதில் பலனில்லை.

வைப்பு நிதிகளை விட்டால் முதலீடு செய்ய மிகவும் சிறந்ததாக தற்போது கருதப்படும் முதலீடு தங்கம். அதற்கடுத்தபடியாக கருதப்படுவது அசையாசொத்து எனப்படும் வீட்டு மனைகள் (Plots), குடியிருப்பு (Flats). அதற்கடுத்து பங்குகள் (Share Market).


1. தங்கம்

எனக்கேற்பட்ட அனுபவத்தை இங்கு குறிப்பிடலாம் என்று கருதுகிறேன். 2004ம் வருடம். என்னுடைய அலுவலக நண்பர் ஒருவரிடம் ரூ.1.00 லட்சம் இருந்தது. அதை எதில் முதலீடு செய்யலாம் என்று ஆலோசனை கேட்க என்னை அணுகினார். 'Gold coins வாங்கிருங்கன்னு சொல்றாங்க எங்க வீட்டுல.' என்றார். நான் அப்போதுதான் என்னுடைய மூத்த மகளுக்கு திருமணத்தை முடித்திருந்தேன். ஆகவே சுமார் இரண்டாண்டுகளாகவே தங்க நகைகளை வாங்கிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் தங்க நகைகளை வாங்கிவிட்டு வந்த அடுத்த சில வாரங்களில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 வரை விழும், சில தினங்களுக்கு ரூ.20, ரூ.25 ஏறும். இப்படியேதான் இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு முறை தங்கம் வாங்கி முடித்ததும் நிகழ்ந்துக்கொண்டிருந்தது. ஆகவே நான் 'தங்கத்துல முழுசையும் போடாமல் பாதிய NSCல போடுங்க' என்றேன். முதலீட்டுக்கு 6.5% வருடத்திற்கு கிடைக்கும். அத்துடன் முதலாண்டில் முதலீட்டில் 20% வருமானவரி ரிபேட்டும் கிடைக்குமே என்றேன். NSC யில் ஆறாண்டுகளுக்கு முதலீடு செய்தால் ஆறாண்டுகளுக்கு பிறகு ரூ.1.00 லட்ச முதலீடு 1.60 லட்சமாக கிடைக்கும். அத்துடன் முதலாண்டில் கிடைக்கும் 20% ரிபேட்டையும் சேர்த்தால் ரூ.1.00 லட்சம் முதலீட்டிற்கு ரூ.80,000/- கூடுதலாககிடைக்கும் தங்கத்தில் இந்த அளவுக்கு வளர்ச்சி இருக்காது என்று கணக்கிட்டு மொத்த தொகையையும் NSCயில் முதலீடு செய்தார் அவர். அன்று தங்கம் கிராமுக்கு ரூ.585/- முந்தைய இரண்டு ஆண்டுகளில் சுமார் 20% - 25% அளவுக்கே வளர்ச்சியடைந்திருந்த அதன் மதிப்பு அடுத்த ஆறு ஆண்டுகளில் அசுர வளர்ச்சியடைந்து சுமார் 3 1/2 மடங்கு உயர்ந்து இன்று ரூ.1750/- ஆக நிற்கிறது. என்னுடைய நண்பர் அவருடைய மனைவியின் ஆலோசனைப்படி தன்னுடைய ரூ.1.00 லட்சத்தை தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் இன்று அவருடைய முதலீடு ரூ.3.50 லட்சமாக வளர்ந்திருக்கும்! அவருடைய NSC இந்த வருடம் செப்டம்பர் மாதம் ரூ.1.60 லட்சமாக திருப்பிக் கிடைக்கும்! தங்கத்துடன் ஒப்பிட்டால் சுமார் ரூ.1.90 லட்சம் இழப்பு. அடுத்த இரண்டாண்டுகளில் அவர் பணியிலிருந்து ஓய்வுபெற்று சென்றுவிட்டார். ஆனாலும் வருகின்ற செப்டம்பர் மாதம் அவருடைய முதலீடு திருப்பிக் கிடைக்கும்போது என்னை கலந்தாலோசித்தது எத்தனை முட்டாள்தனம் என்று நினைத்துப்பார்ப்பார்.

கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுக்கு 30லிருந்து 35 விழுக்காடு உயர்ந்திருப்பது தங்கத்தின் விலைதான் என்பதில் ஐயமேதும் இல்லை. ஆனால் முதலீடு செய்த தொகையை திருப்பி எடுக்க வேண்டும் என்று கருதுபவர்கள் ஆபரண தங்கத்தில் முதலீடு செய்வதில் பயனில்லை. முதலீட்டிற்கு தங்க காசுகள்தான் சிறந்தவை. இதில் கவனிக்க வேண்டியது. தங்கத்தை வாங்கியபோது கிடைத்த பில்லையும் விற்கும்போது கிடைத்த ரசீதையும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். ஏதாவது ஒரு சூழலில் வருமான வரி பிரச்சினையில் சிக்கிக்கொண்டால் இவை நிச்சயம் தேவைப்படும். மேலும் எந்த கடையில் வாங்குகிறோமோ அதே கடையில் அதை விற்பதுதான் நல்லது.



2. வீட்டு மனைகள்

தங்கத்தை அடுத்து வீட்டு மனைகளில் முதலீடு செய்யலாம். ஆனால் இதன் மதிப்பு வளர்ச்சியடைவது பெரும்பாலும் அது அமைந்திருக்கும் இடத்தைப் பொருத்தே அமைகிறது. 1985ம் வருடம் நான் தூத்துக்குடி கிளையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது என்னுடைய உறவினர் ஒருவர் தூத்துக்குடியில் ஒரு தாக்கு எனப்படும் 2400 ச.அடி வீட்டு மனை ஒன்றை ரூ.20,000/- க்கு வாங்கினார். அதை தன்னுடைய மகளுடைய திருமணத்திற்கென்று 2003ம் வருடம் விற்க நினைத்தபோது அதன் மதிப்பு ரூ.5.00 லட்சமாக உயர்ந்திருந்தது. ஆனால் அவர் நிலத்தை வாங்கிய அதே வருடம் என்னுடைய அலுவலக நண்பர்கள் சிலர் கூட்டாக சென்னையை அடுத்துள்ள சோளிங்கநல்லூர் கிராமத்தில் ஒரு கிரவுண்ட் ரூ.50,000/- என்று பத்து கிரவுண்ட் (24000 ச.அடி) விளைநிலத்தை வாங்கினர். அதன் மதிப்பு எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து சமீபத்தில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு ஒவ்வொருவரும் ஒரு கிரவுண்ட் நிலத்தை ரூ.25 லட்சத்திற்கு விற்றதாக கேள்வி. நான் 1980ல் சென்னை கோடம்பாக்கத்தில் வசித்திருந்தபோது அப்போது பிரபலமாகியிருந்த ஆலாக்ரிட்டி (Alacrity) நிறுவனம் 800 ச.அடி அளவுள்ள குடியிருப்புகளை சுமார் ரூ.2.00 லட்சம் வீதம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இன்று அந்த வட்டாரத்தில் ச.அடி ரூ.8,000/-ல் இருந்து ரூ.10,000/-! ஆகவே என்ன விலைக்கு வாங்குகிறோம் என்பதை விட அது எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பதை கவனித்து வாங்குவது மிகவும் முக்கியம்.

ஆனால் அசையா சொத்துகளில் செய்த முதலீட்டை அத்தனை எளிதில் திருப்பி எடுக்க முடியாது என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். சில சமயங்களில் தேவையற்ற வில்லங்கத்தில் சிக்கிக் கொள்ளவும் வாய்ப்புண்டு.


3. பங்குகள்

இவற்றில் முதலீடு செய்ய மிகுந்த அனுபவம் தேவை. குறுகிய காலத்தில் பெரும் அளவுக்கு லாபம் அடையவும் இயலும் நம்முடைய சேமிப்பு அனைத்தையுமே இழந்துவிடவும் முடியும். ஆனால் இதை முழுவதுமாக ஒதுக்கிவிடுவதும் புத்திசாலித்தனமல்ல.

ஆகவே இந்த மூன்று முதலீட்டு வாய்ப்புகளையும் சரியான விகிதத்தில் பயன்படுத்திக்கொண்டால் அதிக லாபம் கிடைக்கவில்லையென்றாலும் பெரு நஷ்டத்தை தவிர்க்க வாய்ப்புண்டு:

* தங்கத்தில் முதலீடு செய்ய பெருந்தொகை தேவையில்லை. ஒவ்வொரு மாதமும் சேமிக்க முடிந்ததை கொண்டே தங்க காசுகளை கிராம் கணக்கில் வாங்கிவிட முடியும். ஆகவே நம்முடைய மாத சேமிப்பில் அதிகபட்சமாக 50% இதற்கென ஒதுக்கலாம். மாதம் ஒரு கிராம் வீதம் வாங்கினாலும் முப்பது வருடங்களில் 360 கிராம் வாங்கிவிட முடியுமே?

* அசையா சொத்து எனப்படும் வீட்டு மனை, குடியிருப்பில் கையிருப்புடன் வங்கி கடனையும் சேர்த்து முதலீடு செய்வதுதான் புத்திசாலித்தனம். இருபது வருடங்கள் என நீண்ட கால கடனாக இருக்கும் பட்சத்தில் மாதா மாதம் கடனை அடைக்க பெருமளவு தொகை தேவைப்படாது. அத்துடன் கடனுக்குண்டான வட்டிக்கும் வருமான வரியிலிருந்து விலக்கு கிடைக்கிறது. அசையா சொத்துக்களில் முதலீடு செய்ய எண்ணுபவர்கள் தங்களுடைய இளம் வயதிலேயே (30லிருந்து 40 வயதுக்குள்) அதை முடிவு செய்துவிடுவது நல்லது. அப்போதுதான் கடனுக்குண்டான தவணை அவர்களுடைய நிகர வருமானத்தில் 50%க்கு மேல் போகாமல் இருக்கும்.

* முதலிரண்டு வகை முதலீட்டுக்கு தேவையான தொகையை ஒதுக்கிய பிறகு மீதம் இருக்கும் தொகையை, குறிப்பாக ஒவ்வொரு வருடம் கிடைக்கக் கூடிய போனஸ் அல்லது ஓவர் டைம் வருமானத்தை பங்குகளில் முதலீடு செய்யலாம். ஆனால் பங்கு சந்தையில் விலைக்கு வரும் பங்குகளை வாங்காமல் ப்ளூ சிப் நிறுவனங்கள் எனப்படும் சிறந்த நிறுவனங்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தும் பப்ளிக் இஷ்யூக்களில் விண்ணப்பித்து வாங்கலாம். குறுகிய காலத்தில் இத்தகைய பங்குகளின் விலையில் அபிரிதமான ஏற்றம் ஏற்படவில்லையென்றாலும் நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் வழங்கும் டிவிடெண்ட் தொகை நிரந்தர வருமானமாக கிடைக்க வாய்ப்புண்டு.

பொருளாதார சுதந்திரமும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுடைய ஆதரவும் இருக்கும்பட்சத்தில் முதிர்ந்த வயதிலும் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க முடியும் என்பதில் ஐயமில்லை.



நிறைவுபெறுகிறது.

முந்தைய பதிவுகள்

பதிவு 1 பதிவு 2 பதிவு 3 பதிவு 4 பதிவு 5 பதிவு 6 பதிவு 7 பதிவு 8

28 ஜூன் 2010

பணியிலிருந்து ஓய்வு 8

பணியிலிருந்து ஓய்வுபெறுபவர்கள் தங்களை எவ்வளவுதான் உணர்வுபூர்வமாக தயாரித்துக்கொண்டாலும் அவர்கள் பொருளாதார ரீதியாக வலுவான நிலையில் இல்லாதிருக்கும் பட்சத்தில் மனநிம்மதியுடன் மீதமுள்ள நாட்களை செலவழிக்க வாய்ப்பில்லை.

'தாயும் பிள்ளைன்னாலும் வாயும் வயிறும் வேறு' என்கிற காலம் இது!

ஆகவே தங்களுடைய ஓய்வு காலத்திலும் அப்போதுள்ள வாழ்க்கைத்தரம் சற்றும் குறையாமல் தொடர்ந்து இருக்க பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு வெகு காலம் முன்பே முன்யோசனையுடன் ஒரு குறிப்பிட்ட தொகையை அதற்கென ஒதுக்குவது மிகவும் அவசியம். எவ்வளவு ஒதுக்க வேண்டும் என்பது அவரவர் ஊதிய அளவு மற்றும் அப்போதைய குடும்ப செலவு ஆகியவற்றை பொருத்தது.

உதாரணத்திற்கு, நால்வர் அடங்கிய (கணவன்+மனைவி+இரு குழந்தைகள்) நடுத்தர குடும்பத்தில் உள்ள நாற்பது வயதுள்ள ஒருவருடைய தற்போதைய மாத செலவுகள் (வாடகையுடன் சேர்த்து) ரூ.25,000/- என்று வைத்துக்கொள்வோம். அவர் அறுபது வயதில் ஓய்வு பெறும்போது தற்போதைய வாழ்க்கைதரத்தை தொடர்வதற்கு குறைந்தபட்சம் ரூ.60,000/- வேண்டியிருக்கும் என்கிறது தனியார் நிறுவன இணையதளத்திலுள்ள ஒரு மதிப்பீடு. அதாவது ரூ.60,000/- மாதம் ஓய்வூதியமாக (அல்லது வருமானமாக) பெறுவதற்கு இப்போதிருந்தே அதற்கெனவே மாதம் ரூ.20,000/- ப்ரிமியமாக செலுத்த வேண்டுமாம்! அதற்கு தற்போதைய மாத வருமானம் குறைந்தபட்சம் ரூ.45,000/- ஆக இருந்தால்தான் இது சாத்தியமாகும். இது எத்தனை பேருக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறி!

நான் இத்தகைய திட்டங்களில் ஒன்றில் பத்துவருடங்களுக்கு முன்பு இணைந்து வருடத்திற்கு ரூ.10000/- செலுத்தி வந்தேன் (அப்போது அதுதான் அதிகபட்ச ப்ரிமியம் தொகையாக இருந்தது. ஆனால் இப்போது அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை) இந்த வருடத்திலிருந்து மாதம் ரூ.3000/- ஓய்வூதியம் எனக்கு கிடைக்கும். இதன் அடிப்படையில் பார்த்தால் ரூ.60000/- ஓய்வூதியமாக கிடைக்க வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ.2.00 லட்சம் ப்ரிமியமாக செலுத்த வேண்டும். இளம் வயதிலிருந்தே இத்தகைய திட்டங்கள் ஒன்றில் முதலீடு செய்தால் அதற்கேற்ற வகையில் செலுத்த வேண்டிய ப்ரிமியம் குறைய வாய்ப்புள்ளது.

இதுதான் இன்று சந்தையிலுள்ள பல ஓய்வூதிய திட்டங்களின் நிலை.

மேலும் இன்று ஓய்வூதிய திட்டங்களை வழங்கும் பல நிறுவனங்கள் இந்த துறையில் தொடர்ந்து நீடிப்பார்களா என்பதையும் நிச்சயமாக வரையறுக்க முடிவதில்லை. இதே துறையில் சந்தையில் பல ஆண்டுகளாக வணிகம் செய்துவரும் எல்.ஐ.சி அளிக்கும் திட்டங்கள் மற்ற வங்கிகள், நிறுவனங்கள் வழங்கும் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் லாபகரமானதாக தென்படவில்லையெனினும் மிகவும் பாதுகாப்பானவை என்பது மட்டும் உறுதி.

எல்.ஐ.சி வழங்கும் திட்டங்களைப் பற்றி அறிந்துக்கொள்ள இங்கு
செல்லவும். இத்திட்டங்களில் New Jeevan Suraksha I திட்டம் மற்ற திட்டங்களுடன் ஒப்பிடுகையில் சிறந்தது என கருதுகிறேன். இத்திட்டத்தில் செலுத்தப்படும் ப்ரிமியம் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகை வரையிலும் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவன முகவர்களுடன் தொடர்புகொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

அடுத்து இந்திய முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் திட்டங்களைக் கூறலாம். இவையும் மற்ற வங்கிகள் வழங்கும் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவான விகித ஓய்வூதியம் வழங்குகின்றன என்றாலும் இவை பாதுகாப்பானவை. இவர்களுடைய பல திட்டங்களைப் பற்றி அறிந்துகொள்ள இங்கு செல்லவும். இவற்றுள் SBI-Lifelong Pension Plus திட்டம் நல்ல திட்டமாக தென்படுகிறது. திட்டத்தின் முழு விவரங்களையும் தெரிந்துக்கொண்டு முதலீடு செய்யலாம்.

இத்தகைய திட்டங்களுடன் ஒப்பிடுகையில் ஓய்வூதியம் அளிக்கக் கூடிய பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் மிகவும் லாபகரமானது. ஆனால் பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முந்தைய பத்து மாதங்களில் அவர்கள் ஈட்டிய சராசரி அடிப்படை வருமானத்தில் ஐம்பது விழுக்காடு மட்டுமே ஓய்வூதியமாக கிடைக்கிறது. ஆகவே இந்த ஊதியத்தில் வாழ்க்கைத்தரத்தை அப்போதைய நிலையில் தொடர்வது என்பது சாத்தியமில்லாத விஷயம்.

ஆகவே பணியிலிருந்து சேர்ந்த நாளிலிருந்தே ஓய்வுகாலத்தைப் பற்றி சிந்தித்து அதற்கென ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்பது என்பது அத்தியாவசியமாகிறது.

எவ்வாறெல்லாம் சேமிக்கலாம், எதிலெல்லாம் முதலீடு செய்யலாம்?

தொடரும்..

25 ஜூன் 2010

பணியிலிருந்து ஓய்வு 7

நேற்றைய பதிவின் எதிரொலியாக எனக்கு ஒரு தனிமடல் மின்னஞ்சல் வழியாக வந்தது. பிரசுரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் அதன் சாராம்சத்தையும் அதற்குண்டான என்னுடைய பதிலையும் இங்கு கூறுகிறேன்.

மடலில் கூறியிருந்தது: 'உங்களுடைய பதிவின் நோக்கம் முழுவதும் ஏதோ பெண்கள்தான் ஓய்வுபெற்ற ஆண்களை சிரமத்திற்குள்ளாக்குவதுபோல் தொனிக்கிறது. ஆனால் உண்மையில் நடப்பது அதற்கு நேர் எதிர். தங்களை யாரும் பொருட்படுத்துவதில்லை என தாங்களாகவே கற்பனை செய்துக்கொண்டு தங்களுடைய சுடுசொற்கள் மூலம் குடும்பத்திலுள்ள அனைவரையும் மன அழுத்தத்திற்குள்ளாக்குவது பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஆண்கள்தான்.'

என்னுடைய பதில்: என்னுடைய பதிவின் எந்த இடத்திலும் பெண்கள்தான் ஆண்களின் மன அழுத்தத்திற்கு காரணம் என எழுதியாக நினைக்கவில்லை. ஒரு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப்பது எப்படி என்றுதான் எழுதினேனே தவிர இதற்கு யார் காரணம் என்று எழுதவில்லை என்றே கருதுகிறேன். இருப்பினும் அப்படியொரு எண்ணத்தை என்னுடைய எழுத்து ஏற்படுத்தியிருக்குமானால் அதற்கு வருந்துகிறேன்.
இனி ஓய்வுபெற்றவர்கள் தங்களுடைய நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட மேலும் சில யோசனைகள்...

8. பேரக் குழந்தைகளை பராமரித்தல்: வயதான காலத்தில் ஆண்களை மீண்டும் ஒரு தந்தையின் நிலைக்கு உயர்த்த உதவுவது பேரக் குழந்தைகள் என்றால் மிகையாகாது. இளம் வயதில் ஆண்களில் பலராலும் தங்களுடைய குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட முடிவதில்லை. இந்த குற்ற உணர்வு பல ஆண்களிடம் உண்டு, என்னையும் சேர்த்து. இளம் வயதில் பல ஆண்கள் தங்களுடைய உத்தியோக அந்தஸ்த்தையே மிகவும் முக்கியமானதாக கருதுகின்றனர். அலுவலகத்தில் கிடைக்கும் பதவி உயர்வு அளிக்கின்ற அற்ப மகிழ்ச்சியே அவர்களுக்கு வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதொன்றாக தோன்றுகிறது. அலுவலக பதவிகளின் பின்னால் ஓடிக் களைத்து திரும்பிப் பார்க்கும்போது அவர்களுடைய பிள்ளைகள் வளர்ந்து ஆளாகியிருப்பதையும் 'உன்னுடைய உதவி இனி எங்களுக்கு தேவையில்லை' என்கிற மனப்பான்மையுடன் தங்களை நோக்குவதையும் உணரமுடிகிறது. 'When I was desperately in need of your emotional support, you had not time for me Dad.' என்று என்னுடைய நண்பருடைய மகன் ஒருவர் எனக்கு முன்னாலேயே என்னுடைய தந்தையை கேட்டதை இத்தனை வருடங்கள் கழித்தும் என்னால் மறக்க முடியவில்லை. ஒரு ஆணால் தன்னுடைய அலுவலகத்தில் எந்த அளவுக்கு உயர முடியுமோ அந்த அளவுக்கு உயர்ந்தவர் என்னுடைய நண்பர். ஆனால் அவருடைய ஒரே மகன் கல்லூரியை பாதியிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டார். 'ஏன் இப்படி செய்துவிட்டாய் மகனே?' என்று வேதனையுடன் என் நண்பர் கேட்ட கேள்விக்கு கிடைத்த பதில்தான் இது. உண்மைதான். என்னால் என்னுடைய இளம் வயதில் என்னுடைய அலுவலக பணியின் நிமித்தம் இரு மகள்களையும் விட்டு எட்டு வருட காலம் பிரிந்திருக்க நேர்ந்தது. வாரம் ஒருமுறை அவர்களுடன் தொலைபேசியில் பேசும்போது கூட அவர்களுடைய படிப்பை குறித்து மட்டுமே நான் பேசுவதாகவும் அவர்களைப் பற்றி, அவர்களுடைய பிற தேவைகளைப்பற்றி கேட்டு தெரிந்துக்கொள்ள நான் முயல்வதில்லை என்பார் என் மனைவி! பல ஆண்களும் இப்படித்தான். ஒரு தந்தை ஸ்தானத்திலிருந்து தங்களுடைய குழந்தைகளுக்கு தங்களால் என்னவெல்லாம் செய்துதர முடியுமோ என்றுதான் சிந்திக்கின்றார்களே தவிர அவர்களுக்கு தங்களுடைய அருகாமை தேவைப்படுகிறதா என்பதைப்பற்றி சிந்திப்பதே இல்லை. பல குடும்பங்களில் குழந்தைகள் தங்களுடைய தாயை மட்டுமே சார்ந்திருப்பதன் காரணமும் இதுதான். முதிர்ந்த காலத்தில் தந்தையை தங்களுடன் வைத்து பராமரிக்க குழந்தைகள் முன்வராததற்கும் இதுதான் காரணம் என்கின்றனர் பல உளநல மருத்துவர்கள். இளம் வயதில் ஒரு நல்ல தந்தையாக இருக்க முடியாமல் போய்விட்டதே என்ற குற்ற உணர்வால் அவதியுறும் பல ஆண்களுக்கும் அதிலிருந்து விடுபட இறைவன் அவர்களுக்கு அளிக்கும் வாய்ப்புதான் பேரக் குழந்தைகள். தங்களுடைய குழந்தைகளுக்கு செய்ய இயலாமல்போன சேவைகளை பேரக்குழந்தைகளுக்கு செய்வதன் மூலம் மனதளவில் தங்களை விட்டு பிரிந்திருக்கும் மகன், மகளையும் கூட மீண்டும் தங்கள் வசம் ஈர்த்துக்கொள்ள முடியும் என்பதும் உண்மை.

9. செல்ல பிராணிகள்: நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளை பேணுவதும் ஒரு நல்ல பொழுதுபோக்கு. குறிப்பாக பணியிலிருந்து ஒய்வுபெற்ற பின் வீட்டில் தனித்து இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுபவர்களுக்கு செல்லபிராணிகள் ஒரு நல்ல துணையாகவும் உள்ளன. பிராணிகள்தானே என கருதாமல் அவைகளை தங்களுடைய குழந்தைகள் போன்றே கருதுபவர்கள் பலரை நான் கண்டிருக்கிறேன். தங்களுடைய தனிமையின் பாரத்தை குறைக்க செல்ல பிராணிகள் மிகவும் உதவுகின்றன என்கின்றனர் இவர்கள். அலங்கார மீன் வளர்ப்பிலும் ஈடுபடலாம். ஓயாமல் நீந்திக்கொண்டிருக்கும் மீன்களை பார்த்துக்கொண்டிருப்பதும் மன அழுத்தத்தை குறைக்க வெகுவாக உதவுகின்றது என்கின்றன ஆய்வுகள்! இப்போதெல்லாம் குறிப்பிட்ட கட்டணத்திற்கு மாதம் ஒருமுறை நம் வீட்டுக்கே வந்து மீன் தொட்டியை கழுவி சுத்தம் செய்து, நீரை மாற்றவும் செய்கின்றனர். வாரம் ஒருமுறையோ அல்லது நமக்கு வேண்டும்போதெல்லாம் நம் வீட்டிற்கே வந்து செல்ல பிராணிகளை சுத்தம் செய்யவும் அவற்றை நம்முடைய தேவைகளுக்கேற்றவாறு பயிற்றுவிக்கவும் வாடகை ஏஜன்சிகள் பல உள்ளன.

10. பொதுசேவையில் ஈடுபடுதல்: பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்கள்தான் பொதுசேவையில் ஈடுபட வேண்டும் என்றில்லை. இன்று கணினி துறையில் பணியாற்றும் பல இளைஞர்கள் வார இறுதிகளில் பொதுசேவையில் ஈடுபடுவது மிகவும் நல்ல விஷயம். ஆனால் அவர்களால் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் மட்டுமே ஈடுபடுகிற விஷயத்தில் ஓய்வுபெற்றவர்கள் முழுநேர அல்லது பகுதிநேர அலுவலாக ஈடுபடுவதால் நேரமும் பயனுள்ள வகையில் செலவாகிறது மனதுக்கு நிறைவும் அமைதியும் கிடைக்கிறது. பொது சேவையை பெரிய அளவில்தான் செய்ய வேண்டும் என்றில்லை. என்னுடைய நண்பர் ஒருவர் அவருடைய வீட்டுக்கருகாமையிலுள்ள ரிஜிஸ்திரார் அலுவலகத்திற்கு சென்று அங்கு வருகிறவர்களுக்கு அரசாங்க படிவங்களை இலவசமாக நிறப்பித் தருவார். அரசு இலாக்காவிலிருந்து ஓய்வுபெற்ற வேறொரு நண்பர் வீட்டிலிருந்தவாறே அரசு இலாக்காக்களிலிருந்து கிடைக்கக் கூடிய பல்வேறு மான்யங்களை எவ்வாறு பெறுவது என்பதற்கு ஆலோசனை வழங்குவார், அதாவது எவ்வித கட்டணமும் இல்லாமல். இவ்வாறு எத்தனையோ வகையில் அவரவர்க்கு இயன்ற அளவுக்கு தினமும் ஒரு மணி நேரத்தையாவது இதற்கு ஒதுக்கலாம்.

இவ்வாறு தங்களுடைய நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட பல வழிகள் உள்ளன.

பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்கள் அந்த மாறுபட்ட சூழலை சந்திக்க தங்களை எவ்வாறு உணர்வுபூர்வமாக தயாரித்துக்கொள்வது என்பதை பார்த்தோம்.

ஆனால் இத்தகைய தம்பதியர்களிடையில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகளின் மூலகாரணமே பொருளாதார ஸ்திரமின்மைதான். நேற்றுவரை மாதம் முதல் தேதியானால் முழு ஊதியம் வந்துக்கொண்டிருந்தபோதே பற்றாக்குறை பட்டியலை வாசித்துக்கொண்டிருந்த மனைவியை எப்படி சமாளிப்பது என்பதும் மிகவும் முக்கியமான பிரச்சினைதானே?

Organised Sector எனப்படும் அரசு மற்றும் அரசு சார பொது/தனியார் துறை நிறுவனங்களிலிருந்து ஓய்வுபெறுபவர்கள் பொருளாதார ரீதியாக தங்களை எவ்வாறெல்லாம் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை அடுத்த பதிவிலிருந்து பார்க்கலாம்...



தொடரும்...

24 ஜூன் 2010

பணியிலிருந்து ஓய்வு 6

மன அமைதிக்கு இசைக்கு நிகரான மருந்து வேறெதுவும் இல்லையென்றாலும் வெறுமனே இசையை கேட்டுக்கொண்டு அமர்வதும் அத்தனை எளிதல்ல. செவிகள் இசையைக் கேட்டுக்கொண்டிருக்க மனம் அதன் போக்கில் வலம் வர ஆரம்பிக்கும். அதுவும் கடந்த காலத்தில் நாம் அடைந்த தோல்விகளையே நினைவுக்கு கொண்டு வந்து சஞ்சலமடையச் செய்யும். இதுவும் இயற்கைதான். அலைபாயும் மனதை கட்டுப்படுத்த நினைப்பதில் அர்த்தமில்லை. யோகா பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் கூட துவக்கத்தில் அலைபாயும் மனதை அதன் போக்கில் விட்டுவிடுங்கள் என்றுதான் கூறுகின்றனர். கண்களை மூடி மனதை ஒருநிலை படுத்துவது என்பது யோகாவில் தேர்ச்சி பெற்றவர்களால் மட்டுமே சாத்தியமாகிற ஒரு அதிசயம்!



4. பத்திரிகை, புத்தகங்கள் வாசித்தல்: ஆகவே மனதுக்கு பிடித்த இசையை கேட்டுக்கொண்டிருக்கையிலேயே கையில் ஒரு புத்தகமோ அல்லது வார சஞ்சிகையோ இருந்துவிட்டால் கட்டுக்கடங்காமல் அலைபாயும் மனதை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும். பணியில் இருந்த காலத்தில் அலுவலக பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொள்வதில் ஆழ்ந்துபோயிருப்பவர்களால் இசையை ரசிப்பதிலோ புத்தகம் வாசிப்பதிலோ நேரத்தை செலவழிக்க விருப்பம் இருந்தும் இயலாமல் போயிருக்கலாம். இவ்விரு இன்பத்தையும் ஒருசேர அனுபவிக்க கைகூடி வரும் காலத்தில் அதை அனுபவிக்க தடையேதும் இல்லையே. இந்த இசையைத்தான் கேட்க வேண்டும் இந்த புத்தகத்தைத்தான் அல்லது சஞ்சிகையைத்தான் வாசிக்க வேண்டும் என்றில்லை. பணியிலிருந்து ஓய்வுபெற்றதும் நான் செய்த முதல் வேலை சென்னையிலுள்ள ராஜ் வீடியோ விஷன் கடைக்கு சென்று பழைய பாடல்கள் மற்றும் கர்நாடக வாத்திய இசை ஒலிநாடாக்கள் மற்றும் குறுந்தகடுகளை வாங்கியதுதான். ஏனெனில் அங்குதான் பழைய சினிமா பாடல்கள் இப்போதும் கிடைக்கின்றன. அங்கிருந்து சென்னை திருவல்லிக்கேணி, சூளைமேடு, பழைய மூர்மார்க்கெட் பகுதிகளில் உள்ள பழைய புத்தகக் கடைகளில் ஏறி இறங்கி ஆங்கில நாவல்களை வாங்கினேன். 1980 மற்றும் 90களில் வெளிவந்த புத்தகங்கள் பலவும் இத்தகைய கடைகளில் பாதி விலைக்கு கிடைக்கின்றன. குமாஸ்தா மற்றும் கடைநிலை அதிகாரியாக பணியாற்றிய காலங்களில் எனக்கிருந்த ஆங்கில நாவல்கள் வாசிக்கும் பழக்கத்தை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள மட்டுமல்லாமல் பெருமளவு நேரத்தை செலவழிக்கவும் இவை எனக்கு இப்போது மிகவும் உதவுகின்றன. ஆனால் அந்த வயதில் ஒரே நாளில் முழுமூச்சாக, சில சமயங்களில் நள்ளிரவு வரை அமர்ந்து, ஒரு புத்தகத்தை படித்து முடித்துவிடுவேன். இப்போது அது சாத்தியமில்லை. சிறு, சிறு எழுத்துக்களை தொடர்ந்து படிக்க முடிவதில்லை என்பதால் தினம் காலையிலும் மாலையிலும் அதிகபட்சம் ஒரு மணி நேரத்தை இதற்கென ஒதுக்குகிறேன்.



5. வீட்டிற்குள் ஆடக் கூடிய விளையாட்டுகளில் ஈடுபடுவது: இசையுடன் இணைத்து ரசிக்கக் கூடிய மற்றொரு பொழுதுபோக்கு Indoor Games எனப்படும் உள்ளரங்கவிளையாட்டுகள். இவற்றுள் பணியிலிருந்து ஓய்வுபெறுபவர்களால் எளிதில் கற்றுக்கொண்டு விளையாடக் கூடிய விளையாட்டு சதுரங்கம். எனக்கு தெரிந்த வரை இதற்கு மட்டுமே நம்முடன் விளையாட வேறொருவர் வேண்டும் என்பதில்லை. ஒரே இடத்தில் அமர்ந்தவாறே இருவருடைய காய்களையும் நகர்த்தி விளையாட முடியும். நேரம் செல்வதே தெரியாமல் மணிக்கணக்கில் விளையாட முடிகிறது! இதில் நாட்டமில்லாதவர்கள் கேரம், சீட்டுக்கட்டு, ஏன் இந்திய சதுரங்கம் எனப்படும் பரமபதம் போன்ற விளையாட்டுகளிலும் நேரத்தை செலவழிக்கலாம். இதை படிப்பவர்களில் சிலர் என்ன இது சிறுபிள்ளைத்தனமாக தோன்றுகிறதே என நினைக்கலாம். 'When you become old you should return to your childhood stage' என்று எப்போதோ படித்த ஆங்கில வாக்கியம் நினைவுக்கு வருகிறது. உண்மைதான். வயதானவர்களும் குழந்தைகள்போல்தான் என்று நம் வீடுகளில் கூறுவதில்லையா? நாம் மாணவ பருவத்தில் எதையெல்லாம் செய்து நேரத்தை போக்கினோமோ முதிர்ந்த வயதிலும் அதே நிலைக்கு திரும்பிச் செல்லக் கூடியவர்களால் மட்டுமே எவ்வித மன அழுத்தத்திற்கும் உள்ளாகமல் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதில் இணைந்து ஈடுபடக் கூடிய மனப்பாங்கு கணவர்-மனைவி இருவருக்குமே இருக்குமானால் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின் அமையக்கூடிய காலத்தை இனிமையானதொரு காலமாக செலவழிக்க மிகவும் ஏதுவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.



6. வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவுவது: இதற்கு 'தான்' என்கிற அதிகார ஆடைகளை அல்லது வேஷங்களை களைந்து 'நாம்' என்கிற நிஜத்துக்கு இறங்குவது மிகவும் முக்கியம். 'ஆம்பிளைக்கு அடுக்களையில என்ன வேலை?' இது அந்தக் காலம். 'ஆம்பிளைக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு?' இது இந்த காலம். சில தினங்களுக்கு முன்பு இந்து தினத்தாளில் வெளியான ஆங்கிலக் கட்டுரை ஒன்று இந்த தொனியை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. பணியில் இருக்கும் இளம் கணவர்களும் கூட வீட்டு வேலைகளில் குறிப்பாக சமையலறையில் சம பங்கை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என்கிறார் கட்டுரை ஆசிரியை. 'If the wife is attending to her baby the husband should not hesitate to stir the sambar!' என்றிருந்தால் பரவாயில்லை. ஆனால் 'husband should stir the boiling Sambar on the stove when the wife is attending a telephone call!' என்கிறது கட்டுரை. அதாவது மனைவி தன் தோழியுடன் தொலைபேசியில் அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் வேளையிலும் கணவர் அடுப்பில் கொதித்துக்கொண்டிருக்கும் சாம்பாரை கிளறிவிடவேண்டுமாம்! இளம் கணவருக்கே இந்த நிலையென்றால் எந்த வேலையுமில்லாமல் அமர்ந்திருக்கும் ரிட்டையர்ட் ஆன கணவர் என்ன வேலையெல்லாம் செய்ய வேண்டியிருக்கும்! ஆனால் சிந்தித்துப் பார்த்தால் மனைவியும் பணிக்கு சென்று கணவருக்கு இணையாக ஊதியம் ஈட்டும் காலக்கட்டத்தில் இப்படி மனைவி கருதுவதில் தவறேதும் இல்லையென்றே தோன்றுகிறது. இந்த கட்டுரையின் இறுதி வாக்கியம்தான் முத்தாய்ப்பாக அமைகிறது. இளம் கணவர் ஒருவர் இவ்வாறு புலம்புகிறாராம். 'I was taught to be a good son, good father etc. but never a good husband!' ஒரு நல்ல கணவனாக இருக்க எப்படி பயிற்றுவிப்பது அல்லது யார் பயிற்றுவிப்பது? எனக்கென்னவோ நல்ல மகனாக இருக்க முடிந்த எந்த ஒரு ஆணாலும் ஒரு நல்ல கணவனாகவும் இருக்க முடியும் என்றே தோன்றுகிறது. தன்னுடைய தாயை நேசிக்கும் ஒரு ஆனால் மட்டுமே தன்னுடைய மனைவியையும் உண்மையாக நேசிக்க முடியும். மனைவிக்கு உதவுவதில் இளம் வயதிலிருந்தே மனதளவில் தன்னை தயார்படுத்திக்கொள்ளும் ஒரு ஆணால் மட்டுமே தன்னுடைய முதிர்ந்த வயதிலும் எவ்வித பந்தாவும் இல்லாமல் வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவ முடியும் என்பதும் உண்மை. வீட்டு வேலைகளில் ஈடுபடுதால் ஓய்வு நேரத்தை பயனுடன் செலவழிக்க முடிகிறது என்பதுடன் நம்மை ஒரு இடைஞ்சலாக கருதுகிற மனைவியை அந்த எண்ணத்திலிருந்து மாற்றவும் முடிகிறதே என்பதையும் நினைவில் கொள்வது நல்லது.
 
தொடரும்..

22 ஜூன் 2010

பணியிலிருந்து ஓய்வு 5

பணியிலிருந்து ஓய்வுபெறும் ஆண்களை வீட்டிலிருக்கும் மனைவியின் மற்றும் பணிக்கு செல்லும் மனைவியின் கணவர் என இருவிதமாக பிரிக்கலாம் என்று கூறினேன். இதற்கு காரணம் வீட்டிலிருக்கும் காலத்தை எவ்வித மன உளைச்சல்களும் இல்லாமல் செலவழிக்க உணர்வுபூர்வமாக தங்களை தயாரித்துக்கொள்ள வேண்டிய முறைகளிலும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன.

இவர்கள் இருவருள் வீட்டிலிருக்கும் மனைவியின் கணவருக்குத்தான் அதிக மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே இத்தகையோர் அத்தகைய சூழலை தவிர்க்க தங்களை முன்கூட்டியே தயாரித்துக்கொள்ள வேண்டியது மிக, மிக அவசியம்!


இவர்களிலும் இருசாரார் உண்டு. அதிகம் பேசாத மனைவி மற்றும் எப்போதும் பேசிக்கொண்டேயிருக்கும் மனைவி! இவர்களுள் பின்னவரை மனைவியாக கொண்டவர்க்குத்தான் அதிகம் முன் தயாரிப்பு தேவையாம்!

கணவரும் அதிகம் பேசும் சுபாவம் உடையவர் என்றால் அதிகம் பிரச்சினை எழ வாய்ப்பில்லையாம். மாறாக தான் உண்டு, தன் வேலையுண்டு என அமைதியான சுபாவம் உடைய கணவர் என்றால் அவருடைய மனைவியும் அதிகம் பேசாத கூச்ச சுபாவம் உடையவர் மனைவியாக இருந்துவிட்டால் பிழைத்தார். இல்லையென்றால்.....

மனைவி அமைவதென்றால் இறைவன் கொடுத்த வரம் என்று சும்மாவா சொன்னார்கள்!

மேலை நாடுகளில் சமீப காலங்களில் விவாகரத்து செய்யும் தம்பதிகளில் நாற்பது விழுக்காட்டிற்கு மேல் பணியிலிருந்து ஓய்வுபெற்ற தம்பதியர்கள்தாம் என கூறுகின்றன சமீபத்திய ஆய்வுகள்.

ஏனாம்?

கணவன் இல்லாத சூழலில் சுதந்திரமாக நாள் முழுவதும் பொழுதை போக்கிய பெண்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்ற கணவர்கள் தங்களுடைய சுதந்திரத்தை முடக்குவதாக கருதுகின்றனராம். ஆகவே தங்களுடைய அமைதிக்கு பங்கம் விளைந்துவிட்டதாக கருதும் பெரும்பாலான பெண்கள் தங்களுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனித்து வாழவே
விரும்புகின்றனர்.

ஆண்களோ ஓயாமல் பேசும் மனைவியரால் தங்களால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்ற வாதத்தை முன்வைத்து விவாகரத்து கோருகின்றனராம். 'அதிகம் பேசும் மனைவி ஒழுகும் கூரைக்கு சமம்' என்று பைபிளே கூறுகிறது! ஒழுகும் கூரையின் அடியில் எப்படி நிம்மதியாக வாழ்வது?

ஆகவே பணியிலிருந்து ஓய்வுபெறுபவர் மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தினரும் குறிப்பாக அவர்களுடைய வாழ்க்கை துணைவர்களும் (அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்) தங்களை தயாரித்துக்கொள்வது அவசியமாகிறது.

இந்திய நடுத்தர வர்க்கத்தினரைப் பொருத்தவரை பொருளாதார பிரச்சினைகளை விடவும் உணர்வுபூர்வமான பிரச்சினைகளே இத்தகையோருடைய இல்லற வாழ்க்கையை பெரிதும் பாதிக்கின்றன. ஏனெனில் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பெரும்பாலானோர் அரசுதுறை அல்லது அரசைச் சார்ந்த (மான்யம் பெறுகிற) துறைகளில் பணியாற்றுவதால் ஓய்வூதியம் கிடைத்துவிடுகிறது. மேலும் பெரும்பாலான தம்பதியர் பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முன்பே தங்களுடைய பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிவிடுவதால் எஞ்சி நிற்கும் கணவன் - மனைவி என்ற இருநபர் குடும்பத்திற்கு ஓய்வூதியம் போதுமானதாகவே கருதப்படுகிறது.
ஓய்வூதியத்திற்கு தகுதியில்லாதவர்களுக்கும் - அதாவது அரசுத்துறை இலாக்கா,நிறுவனங்களைச் சாராதவர்கள் - ஒரு குறிப்பிட்ட அளவு ஓய்வூதியம் பெற சமீபகாலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டங்கள் கைகொடுக்கின்றன. இவற்றைப் பற்றி வரும் பதிவுகளில் விரிவாக எழுதுகிறேன்.

ஆகவே பொருளாதார ரீதியான பிரச்சினைகளை தவிர்த்து ஏற்படும் பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்பதை தெரிந்துக்கொள்வதுதான் மிக அவசியம்.

முதலில் பணிக்கு செல்லாத மனைவியருடன் ஓய்வு காலத்தை எப்படி பிரச்சினைகள் இல்லாமல் அல்லது முடிந்த அளவுக்கு தவிர்த்து வாழ்வது என்பதை பார்க்கலாம்.

1. கணவன் தன்னுடைய பழைய அந்தஸ்த்திலிருந்து இறங்கிவருவது: பணியிலிருந்த காலத்தில் அலுவலகத்தில் எவ்வளவு ஆதிக்கம் செலுத்த முடியுமோ அவ்வளவு ஆதிக்கத்தை வீட்டிலும் செலுத்திவந்த ஆண்கள் ஓய்வுக்குப் பிறகு தங்களுடைய முந்தைய அந்தஸ்த்திலிருந்து இறங்கி வந்துவிட வேண்டும். அதிகாரம் இல்லாதம் ஆதிக்கம் எத்தனை நாளுக்குத்தான் செல்லும்?

2. காலை நேர முன்னுரிமை: காலையில் எழுந்து காப்பி குடிப்பதிலிருந்து, தினத்தாள் படிப்பது, குளிப்பது என எல்லாவற்றிலும் தனக்குத்தான் முதல் உரிமை என்ற எண்ணத்தை விட்டுவிட்டு பணிக்கு செல்லும் மகன், மகள், மருமகள் ஆகியவர்களுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து விட்டுக்கொடுக்க முன்வரலாம். காலையில் ஆறு மணிக்கே எழுந்துவிடும் பழக்கத்தை முடிந்தால் (அதாவது தனி படுக்கையறை வசதி உள்ளவர்கள்) சற்று தள்ளிப் போடலாம். அது இயலாத பட்சத்தில் மனைவியை தாஜா செய்து (அதிகாரம் செல்லாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்) ஒரு கப் காப்பி வாங்கி குடித்துவிட்டு (என்னைப் போன்று சமையல் தெரிந்த பெரிசுகள் உறங்கும் மனைவியை எழுப்ப தேவையில்லை. தாங்களாகவே காப்பி தயாரித்துக் கொள்வது நல்லது!) வாக்கிங் செல்லலாம். வாக்கிங் செல்லும்போது கவனிக்க வேண்டியது. அதுவரை உடல் எடையை குறைக்க வேக வேகமாக நடந்திருக்கலாம். ஆனால் இப்போதைய தேவை நேரத்தை கடத்துவது. ஆகவே காலாற நடப்பதுதான் முக்கியம். வேக வேகமாக நடந்த காலத்தில் எதிரில் வருபவர்களுக்கு காலை வணக்கம் சொல்லக் கூட நேரம் இருந்திருக்காது. ஆனால் இப்போது நேரம் மிக அதிக அளவில் கையிலிருப்பதால் உங்களை கண்டுக்கொள்ளாமல் செல்பவரையும் தடுத்து நிறுத்தி காலை வணக்கம் சொல்லலாம். சுய அறிமுகம் செய்துக்கொள்ளலாம். அவரும் ஓய்வு பெற்றவர் என்றால் சாவகாசமாக நின்று அங்கலாய்ப்புகளை பகிர்ந்துக்கொள்ளலாம். நீங்கள் வீடு திரும்புவதற்குள் உங்களுடைய குடும்பத்தினர் தங்களுடைய தேவைகளை அநேகமாக பூர்த்திசெய்துக்கொண்டிருப்பார்கள். சலவை செய்ததுபோல் crisp ஆக இருக்கும் தினத்தாளை படித்துத்தான் பழக்கம். குடும்பத்திலுள்ளவர்களால் படித்து குதறப்பட்டு தொய்ந்துபோய் சிதறிக்கிடக்கும் தினத்தாளை எடுத்து முடிந்த அளவுக்கு நீவி சரிசெய்து படிக்கலாம். இதிலேயே குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் செலவிட வேண்டும். அதன் பிறகு குளியலறை காலியாக இருந்தால் குளித்துவிட்டு காலை உணவு மேசையில் ரெடியாக இருக்கும் பட்சத்தில்... இல்லையென்றால் 'உங்களுக்கு இப்ப என்ன அவசரம்.. வேலைக்குப் போறவங்க முதல்ல சாப்டுக்கட்டும்' என்கிற ஓசை வரும். வெளியில் கேட்காதவாறு பல்லைக் கடித்துக்கொண்டு மீண்டும் சென்று படித்த தினத்தாளையே படிக்கலாம். இவை யாவும் துவக்கத்தில் கடினமாக இருந்தாலும் நாளடைவில் சரியாகிவிடும்.

2. இசையை ரசிப்பது: பரபரப்பாக இருந்த காலத்தில் இசையை ரசிப்பதற்குக் கூட பொறுமை இருந்திருக்காது. ஆனால் எந்த வேலையும் செய்யாமல் ஆனால் அதே சமயம் எவ்வித மன உளைச்சலுக்கும் ஆளாகமல் அமைதியாக இருக்க உதவும் அருமருந்து இசை! இசைய ரசிப்பதற்கு பெரிதாக ஞானம் எதுவும் தேவையில்லை. அது சாஸ்த்ரீக இசையாயிருந்தாலும் சரி, நாட்டுப்புற பாடல்களாக ஏன் திரை இசையாக இருந்தாலும் சரி... கேட்பதற்கு செவித்திறனும் ரசிப்பதற்கு ஆர்வமும் இருந்தாலே போதும். ஓய்வு பெற்றவர்களுடைய தேவை மன அமைதி, நேரம் கடத்துவது. அதற்கு இசையை விட்டால் சிறந்த மாற்று இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இதில் ஒரேயொரு சிக்கல். உங்களுடன் வீட்டில் இருப்பவர்களுடைய விருப்பு, வெறுப்பு. குறிப்பாக உங்களுடைய மனைவி. உங்களுடைய செவிகளில் தேனாக ஒழுகும் குன்னக்குடியின் வயலின் இசையும் கூட உங்களுடைய மனைவியின் காதில் நாராசமாக விழலாம். அல்லது அவருக்கு மிகவும் பிடித்த வாய்ப்பாட்டு கூட உங்களுடைய செவிகளில் அர்த்தமில்லாத ஓசையாக விழலாம். உங்களுடைய விருப்பத்திற்கு அவர்களை கொண்டு வர முடியாமல் போகும் பட்சத்தில் அவர்களுடைய விருப்பத்திற்கு உங்களை தயார் செய்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை. வேறு வழியில்லாமல் நீங்கள் கேட்க துவங்கும் இசையும் கூட நாளடைவில் உங்களுக்கு மிகவும் பிடித்த இசையாகிப் போக வாய்ப்புண்டு. மனமிருந்தால் மார்க்கமுண்டே!



தொடரும்..

17 ஜூன் 2010

பணியிலிருந்து ஓய்வு 4

பணியிலிருந்து ஓய்வு பெற்ற துவக்க நாட்களில் (initial post-retirement days) மனம் எதையோ பறிகொடுத்துவிட்டதுபோல் தோன்றுவது மிகவும் இயல்பான விஷயம்.  அதுபோலவே, 'எதற்கு இந்த ஓய்வு, என்னால் இன்னும் குறைந்தபட்சம் ஐந்தாறு வருடங்களுக்காகிலும் இதே திறமையுடன் பணியாற்ற முடியுமே'  என்ற எண்ணம் தோன்றுவதும் மிகவும் இயற்கை. இது ஏதோ நமக்கு மட்டும்தான் ஏற்படுகிற ஒருவித நோய் என்று நினைத்து, நினைத்து மருகுவதை முதலில் தவிர்க்க வேண்டும். இத்தகைய சூழலுக்கு நம்மை நாமே தயாரிப்பதற்கு மிகவும் தேவையான ஒன்று பணியிலிருந்து ஓய்வுபெற்றாக வேண்டும் என்கிற நிதர்சனத்தை மனதளவில் நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான்.

இதில் இன்னொரு கோணமும் உண்டு. பணியிலிருந்து ஓய்வுபெறும் சமயத்தில் ஒரு நிறுவனத்தின் அல்லது ஒரு இலாக்காவின் தலைமை பொறுப்பில் இருக்க நேர்ந்தால் அவர்களுக்கு நாம் இல்லாவிட்டால் அந்த நிறுவனம், இலாக்கா சரிவர இயங்க முடியாது என்கிற எண்ணம் உள்மனதில் பதிந்திருக்கும். அத்தகையோர் ஓய்வு பெற்றபிறகு அந்த நிறுவன/இலாக்காவை சார்ந்தவர்கள் எந்த நிர்வாக அலுவல்கள் சார்பாகவும் அவர்களை தொடர்புகொள்ளவில்லையென்றால் அதுவே அவர்களுக்கு பெரிய அளவில் மன அழுத்தத்தை உண்டாக்கிவிட வாய்ப்புண்டு. இத்தகைய மன அழுத்தத்திற்கு ஒய்வுபெற்ற முதல் இரண்டு, மூன்று வாரங்களுக்கு நானே ஆளாகியிருக்கிறேன். அத்தகைய எண்ணத்தை முழுவதுமாக என் மனதிலிருந்து அகற்றுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.

இத்தகைய மன அழுத்தம் மிகவும் இயல்பான விஷயம்தான் என்பதை ஒப்புக்கொண்டு அதிலிருந்து எப்படி மீள்வது என்பதில்தான் அவர்களுடைய  கவனம் முழுவதும் இருக்க வேண்டும் என்பது முக்கியம். அதை விடுத்து சிலர் தங்களுடைய முன்னாள் சகாக்களை தொலைபேசியில் அழைத்து  'இப்பத்தான் நிம்மதியா எந்த டென்ஷனுமில்லாம சந்தோஷமா இருக்கேன்.' என்று உண்மைக்கு புறம்பாக கூறி தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்வார்கள்.  இது 'அப்பன் குதிருக்குள் இல்லை' என்பதுபோல்தான்.

பணியிலிருந்து ஓய்வுபெறுபவர்களை இத்தகைய துவக்கக்கால மன அழுத்தத்திற்கு (post-retirement anxiety) தயாரிப்பதற்கென்றே இப்போதெல்லாம் பல நிறுவனங்களில் 'Exit Counselling'ஐ நடத்துகின்றனர். இதில் மிகவும் முக்கியமாக இடம் பெறுவது ஓய்வு நேரத்தை எப்படி செலவழிப்பது, உண்மையைக் கூற வேண்டுமென்றால், எப்படி வீணடிப்பது என்பதை கற்பிப்பதுதான். ஆக்கபூர்வமான எந்த ஒரு சிந்தனையுமில்லாமலும் அல்லது எந்த ஒரு வேலையிலும் ஈடுபடாமலும் ஓய்வு நேரத்தை வீணடிப்பதில் தவறேதும் இல்லை என்பதை மிகவும் இயல்பாக உணரவைப்பதும் இதில் அடக்கம்.

ஆமாங்க. நிர்வாக பொறுப்பில் இருக்கும் பலருக்கு நேரத்தை வீணடிப்பது என்பது முற்றிலும் ஒத்துக்கொள்ள முடியாத ஒரு 'குற்றம்'. அத்தகையோரை இந்த 'குற்ற உணர்விலிருந்து' விடுவிப்பதுதான் இத்தகைய ஆலோசனை கூட்டங்களின் மைய நோக்கம். இசையை ரசிப்பது, புத்தகங்கள், பத்திரிகைகள் வாசிப்பது, உள் மற்றும் வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடுவது இவை எதிலும் நாட்டம் இல்லாதவர்களை எவ்வித சிந்தனைகளுமில்லாமல் தொடர்ந்து பல நிமிடங்கள் அமர்ந்திருப்பது என்பதுபோன்ற பல உத்திகளை பயிலவும், சுருக்கமாக கூற வேண்டுமென்றால் பரபரப்பான அலுவலக சூழலிலிருந்து அமைதியான குடும்ப சூழலுக்கு பணியிலிருந்து ஓய்வுபெறுபவர்களை தயாரித்துக்கொள்ளவும் இத்தகைய பயிற்சி வகுப்புகள் வெகுவாக உதவுகின்றன.' Walkingஆ அதுக்கு எங்கங்க நேரம்?' என்பவர்களை   மனம்போன போக்கில் காலாற நடப்பதே மனதை லேசாக வைத்துக்கொள்ள உதவும் ஒரு மருந்து என்பதை உணர்த்துவதும் இதன் நோக்கங்களில் ஒன்று.

பணியிலிருந்து ஓய்வுபெறுபவர்களை பலவிதமாக பிரிக்கலாம். அவற்றில் முக்கியமான இரு பிரிவுகள்: பணிக்கு செல்லாத மனைவியை உடையவர் அல்லது பணிக்கு செல்லும் மனைவியை உடையவர். முதலாமவருக்கு வீட்டிலிருக்கும் மனைவியே ஒரு பிரச்சினை என தோன்றும். மற்றவருக்கு பேச்சு துணைக்குக் கூட ஆளில்லாத தனிமையே ஒரு பெரிய சுமையாக தெரியும். இரண்டிலும் exceptions எனப்படுபவர்களும் உண்டு. அலுவல், அலுவல் என மனைவியை பிரிந்திருந்ததை ஒரு குறையாக நினைத்திருந்தவர்களுக்கு மனைவியின் அருகாமை விவரிக்க முடியாத மகிழ்ச்சியை அளிக்கும். தனிமையே ஒரு அலாதியான விஷயம் என நினைத்து மோனத்தில் ஆழ்ந்துப்போக கிடைத்த சந்தர்ப்பத்தை எண்ணி மகிழ்பவர்களும் உண்டு. என்னுடைய அலுவலக நண்பர்  ஒருவர் தன்னுடைய நாற்பத்தைந்தாவது வயதிலேயே விருப்ப ஓய்வுக்கு எழுதிக்கொடுத்தார். 'என்னங்க இந்த வயசுல ரிட்டையர் ஆகி வீட்ல எப்படி டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க?' என்று கேட்டேன். 'இந்த ஹரிபரியிலருந்து விடுபட்டு தனியா இருக்கணும்னு கொஞ்ச நாளாவே தோனுதுங்க. ஒய்ஃபும் வேலைக்கு போயிருவாங்க. பசங்களும் ஹாஸ்டல்ல இருக்கறதால வீட்ல யார் தொல்லையுமில்லாம இருக்கலாம்.' என்றார். ஆனால் அவர் எந்த நேரத்தில் அப்படி சொன்னாரோ அவர் ஓய்வு பெற்ற இரண்டாண்டுகளுக்குள் சுறுசுறுப்பாக இருந்துவந்த அவருடைய மனைவி ஒருவார ஜுரத்திலேயே யாரும் எதிர்பாராத விதமாக மரித்துப்போனார். அதற்குப் பிறகு அவருடைய இரண்டு ஆண் பிள்ளைகளும் வேலை கிடைத்து வெளிநாடு சென்றுவிட உண்மையிலேயே வாழ்க்கையில் தனித்துதான் போனார்.

வீட்டிலிருக்கும் மனைவியை அனுசரித்து செல்வது மிகவும் சிரமம் என நினைப்பவர்கள் அவர்களும் தங்களைப் பற்றி அப்படித்தான் கருதுகிறார்கள் என்பதை உணர்வதில்லை. அதை உணர்ந்துக்கொண்டு அந்த எண்ணத்தை எப்படி அவர்களுடைய மனதிலிருந்து அகற்றுவது என ஆலோசித்து அந்த முயற்சியில் இறங்கினாலே போதும், தீர்வு கிடைப்பது நிச்சயம். இதற்கு முதலில் பணியிலிருந்து ஓய்வு பெறும் ஆண்கள் அதுவரை வகித்துவந்திருந்த அலுவலக பதவியிலிருந்து இறங்கி வந்துவிட வேண்டும். காலையில் குளிப்பதிலிருந்து எல்லாம் அப்பாவுக்குதான் முன்னுரிமை என்பதும் எந்த டென்ஷனும் இல்லாமல் அவர் அலுவலகம் புறப்பட்டுச் செல்வதற்கு ஏதுவான சூழலை வீட்டில் ஏற்படுத்துவதுதான் குடும்பத்திலுள்ள அனைவருடைய தலையாய கடமை என்பதுபோலவும் பரபரப்புடன் இயங்கும் பல குடும்பங்களை நான் கண்டிருக்கிறேன். அத்தகைய ஆண்கள் தங்களுடைய கற்பனை அதிகார பீடத்திலிருந்து இறங்கி வருவது என்றால் அத்தனை எளிதல்ல. ஆனால் அதை எத்தனை விரைவில் உணர்ந்து இறங்கி வருகிறார்களோ அத்தனை விரைவில் அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களுடைய குடும்பத்திற்கும் நல்லது.

தொடரும்..

பி.கு: பி.எஸ்.என்.எல் இன் குளறுபடியால் கடந்த மூன்று நாட்களாக Internet இணைப்பே இல்லாதிருந்தேன். உலகமே இருண்டதுபோலாகிவிட்டது!

11 ஜூன் 2010

பணியிலிருந்து ஓய்வு 3

நிரந்தர பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு மாற்று பணிக்கு செல்லும் எண்ணம் உள்ளவர்களும் தங்களுடைய எண்ணத்திற்கேற்றாற்போல் ஒரு பணி கிடைக்கும் வரையிலாவது வீட்டில் 'சும்மா' இருந்துதானே ஆகவேண்டும்?

பணியிலிருந்து ஓய்வு பெறுபவர் ஆண் என்ற கோணத்தில் மட்டுமே இதை அணுகுகிறேன் என்பதை நினைவில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் பணியிலிருந்து ஓய்வு பெறும் பெண்கள் பெரும்பாலும் அத்தகைய ஓய்வை வரவேற்கவே செய்கிறார்கள். ஆகவே அலுவலகத்திலிருந்து வீட்டிற்கான இந்த மாற்றத்தை அவர்களால் மிக எளிதாக எதிர்கொள்ள
முடிகிறது என்கின்றன பல ஆய்வுகள்.

ஆனால் ஆண்களுள் பெரும்பாலானோர் அப்படியல்ல. அவர்களைப் பொருத்தவரை அவர்களுடைய உத்தியோகம்தான் வாழ்க்கையின் பிரதானமாக உள்ளது. என்னுடைய உத்தியோகம்தான் என்னுடைய முதல் மனைவி என்று பலரும் பெருமையுடன் கூறிக்கொள்வதைக் கேட்டிருப்பீர்கள். இதற்காகவே முந்தைய தலைமுறை ஆண்கள் பெரும்பாலும் அலுவலகத்திற்கு செல்லாத பெண்களையே விரும்பி திருமணம் செய்துக்கொண்டனர் என்பதும் உண்மை.

இத்தகையோரில் பலருக்கும் அலுவலக பணியைத் தவிர வேறெதிலும் நாட்டமும் இருப்பதில்லை. அதாவது இசையை ரசிப்பதிலோ, அரசியலைப் பற்றி பேசுவதிலோ, அல்லது கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் பங்குகொள்ளாவிட்டாலும் அவற்றை பார்ப்பதிலோ, விமர்சிப்பதிலோ கூட அவர்களுக்கு நாட்டம் இருக்காது. இவ்வாறு சுமார்
முப்பதாண்டுகாலம் அலுவலக பணியே கதியென்று இருந்தவர்கள் சட்டென்று அது இல்லை என்றாகிவிடும் சூழலை சந்திக்கையில் என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நிற்பது இயற்கைதானே!

இத்தகையோர் அத்தகைய சூழலுக்கு எப்படி தங்களை தயார் செய்துக்கொள்வது?

பெரும்பாலான ஆண்கள் வீட்டையும் அலுவலகம் போன்றே கருதுவதாக பரவலானதொரு குற்றச்சாட்டு பெண்கள் மத்தியில் உண்டு. வீடு வீடுதான் அலுவலகம் அலுவலகம்தான் என்பதை ஆண்கள் உணர்வதில்லை. அலுவலகத்தில் நாம் எடுக்கும் பெரும்பாலான முடிவுகள் நம்முடைய பெர்சனல் வாழ்க்கையை அதிகம் பாதிப்பதில்லை. நாம் எடுக்கும் முடிவுகள்
வெற்றிபெறாத சமயங்களில் அதிகபட்சம் அதிகாரிகள் முன்பு தலைகுணிய வேண்டிவரும். நம்முடைய முடிவில் என்ன தவறு இருந்தது, ஏன் வெற்றிபெறவில்லை என்பதை ஆராய்ந்து அவற்றை தவிர்த்தால் தோல்வியை வெற்றியாகவும் மாற்றிவிட முடிகிறது. ஆனால் குடும்பத்தில் நாம் எடுக்கும் சில முடிவுகள் தோல்வியில் முடிந்தால் அவற்றால் நாம் மட்டுமல்ல
நம்மைச் சார்ந்திருக்கும் ஒட்டுமொத்த குடும்பமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. ஒரு சில தவறான முடிவுகள் சரிசெய்யவே முடியாத முடிவுகளாகி வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடுவதை நம்மில் பலரும் அனுபவித்து உணர்ந்திருக்கிறோம்.

அலுவலக வாழ்க்கையில் பெரும் வெற்றிகளைப் பெற்று மிக உயர்ந்த பதவியை பிடிக்க முடிந்த என்னுடைய நண்பர்கள் சிலர் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் தோற்றுப்போனதை என்னுடைய வாழ்க்கையில் கண்டிருக்கிறேன். ஆகவே அலுவலகமும் குடும்பமும் எப்போதும் ஒன்றாகிவிட முடியாது. 'ஏன் எடுத்தத எடுத்த இடத்துல வைக்க மாட்டேங்கறீங்க?' என்றுசிடுசிப்பார் ஓய்வுபெற்ற கணவர். ஏனெனில் முந்தைய நாள் வரை அவருக்கு தேவையான அனைத்தையுமே மனைவிதான் எடுத்து கொடுத்திருப்ப்பார். 'எது எங்க இருக்கும்னு ஒங்களுக்கு தெரிஞ்சாத்தானே. இது ஆஃபீஸ் இல்லை, பிள்ளைங்க இருக்கற வீடு. அதது அங்கங்க இருக்கத்தான் செய்யும். சும்மாத்தான இருக்கீங்க, எடுத்து எங்க வைக்கணுமோ அங்க வைங்க' என்று பதிலடி கொடுப்பார் மனைவி.

மேலும், ஆண்கள் எவ்வாறு அவர்களுடைய அலுவலகத்தில் அவர்கள்தான் ராஜா எனவும் அவர்கள் இல்லையென்றால் எதுவும் நடக்காது என்றும் எண்ணுகிறார்களோ அப்படித்தான் வீட்டுப் பெண்களும். குடும்பத்தைப் பொருத்தவரை அவர்கள்தான் எல்லாம் என்கிற எண்ணம் பெரும்பாலான குடும்பப் பெண்கள் மனதில் வேரூன்றியுள்ளதை ஆண்கள் பெரும்பாலும் கருத்தில் கொள்வதில்லை. அலுவலகம், அலுவலகம் என்று ஆண்கள் அலைந்துக்கொண்டிருந்த வேளையில் குடும்பத்தை திறம்பட நடத்தியது பெண்கள்தானே என்பதை மறந்துவிட்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் குடும்ப விஷயங்களிலும் இனி நாந்தான் ராஜா, இனி நான் சொல்வதுபோலத்தான் எதுவும் நடக்க வேண்டும் என நினைக்க ஆரம்பித்தால் வேறு வினையே வேண்டாம்.

மேலும் கணவர் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றதும் ஏற்படுகிற அமைதியான சூழலை அனுபவித்து பழகிப்போன பெண்கள் பலரும் 'ஐயோ இனி இவர் இருபத்திநாலு மணி நேரமும் வீட்லயா இருக்கப் போறார்? 'சனி, ஞாயிறுல வீட்ல இருந்தாலே மனுஷன் பாடா படுத்துவாரே, இனி கேக்கணுமா? இத நா எப்படி சமாளிக்கப் போறேன், ஈஸ்வரா!' என்ற
எண்ணத்திலேயே மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடுகின்றனர். கணவர் இல்லாத எட்டு மணி நேரத்தில் தங்கள் மனம் போனபடி வீட்டு அலுவல்களை நிதானமாக செய்து பழகிப்போகும் பெண்கள் 'காலை பதினோரு மணிக்கு காப்பி, மதியம் ஒரு மணிக்கு லஞ்ச், பிற்பகல் மூன்று மணிக்கு காப்பி' என தங்களுடைய தனிமை சுதந்திரத்தில் தலையிட வந்துவிடும் கணவர்களை தங்களுடைய சுதந்திரத்திற்கு எதிராக முளைத்த எதிரிகளாகவே வரித்துக்கொள்கின்றனர் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த சுதந்திரத்தை பணியிலிருந்து ஓய்வுபெறும் பெரும்பாலான ஆண்கள் புரிந்துக்கொள்ளாமல் தங்களுடைய மனைவியரின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் குற்றம் காண்பதில் குறியாய் இருப்பதை தவிர்த்தால் நல்லது. 'இவ்வளவு நாளும் நீங்களா இத செஞ்சுக்கிட்டிருந்தீங்க? நீங்க பேசாம அக்காடான்னு இருங்க. எல்லாத்துலயும் மூக்க நீட்டாதீங்க!' இது
பெரும்பாலான வீடுகளில் மனைவியர் கூறும் குற்றச்சாட்டு.


இந்த குற்றச் சாட்டை தவிர்க்க ஆண்கள் செய்ய வேண்டியது என்ன?

அதை அடுத்த பதிவில் கூறுகிறேன்.

தொடரும்

10 ஜூன் 2010

பணியிலிருந்து ஓய்வு - 2

பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பே மீண்டும் பத்திலிருந்து ஐந்து வரை என்கிற ஒரு உத்தியோகத்திற்கு செல்வதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். ஆனால் அதற்காக வீட்டில் 'சும்மா' இருக்காமல் சென்னையிலுள்ள ஏதாவது ஒரு அரசு சாராத தொண்டு நிறுவனத்துடன் எவ்வித ஊதியமும் இல்லாமல் ஒரு பகுதி நேர தொண்டனாக (Volunteer) இணைந்துகொள்ளலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் என்னைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்த என்னுடைய நெருங்கிய நண்பர்கள் என்னுடைய முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். 'உன்னுடைய குணத்துக்கு அதெல்லாம் சரிவராது டிபிஆர். நீ நினைக்கறா மாதிரி தொண்டு என்ற நோக்கத்துடன் மட்டும் எந்த நிறுவனமும் இயங்குவதில்லை. நெருங்கி பார்த்தாத்தான் அவர்களுடைய உண்மை சுயரூபம் தெரியும்.' என்றனர். ஆனால் அவர்களுடைய கருத்துடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை. ஏனெனில் என்னுடைய மனதில் நான் நினைத்திருந்த சமூக நிறுவனங்களைப் பற்றி சென்னைவாசிகள் மத்தியில் நல்ல எண்ணம் இருந்தது.




ஆகவே பணியிலிருந்து ஓய்வு பெற்ற சில வாரங்களில் ஒரு நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் என்னுடைய எண்ணத்தை தெரிவித்து அவர்களுக்கு ஆட்சேபனையில்லையென்றால் அவர்களுடைய அனுதின அலுவலில் ஏதாவது ஒரு நிலையில் என்னை இணைத்துக்கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்தேன். என்னுடைய மின்னஞ்சல் கிடைத்ததுமே அவர்களுடைய மேலாண்மை அதிகாரியிடமிருந்து (நான் எதிர்பார்த்திராத அளவுக்கு இளைஞி அவர்) அழைப்பு வந்தது. நானும் அவர்கள் குறிப்பிட்டிருந்த தினத்தன்று சென்று நேர்காணலில் கலந்துக்கொண்டேன். ஏற்கனவே அவர்களுடைய நிறுவனத்தைப் பற்றி ஊடகங்கள் வாயிலாக நான் அறிந்து வைத்திருந்தவற்றை அந்த அதிகாரி சுருக்கமாக கூறிவிட்டு நிறுவனத்தைப்பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரு சில கோப்புகளுடன் கடந்த ஆண்டின் நிதியறிக்கை நகலையும் அளித்தார். அந்த நிதியறிக்கையை அவர்கள் அச்சடித்திருந்தவிதமே அசத்தலாக இருந்தது. அவர்கள் செயல்படுத்திவந்த சேவை திட்டங்களுக்கென பல பிரபல நிறுவனங்களிடமிருந்து கிடைத்து வந்த பிரத்தியேக நன்கொடைகளின் அளவு என்னை பிரமிக்க வைத்தது. அதுபோன்றே அவர்கள் வங்கிகளில் முதலீடு செய்திருந்த வைப்பு நிதி கணக்குகளின் (Fixed Deposit) அளவும் பிரமிக்க வைத்தது. அதாவது நன்கொடைகள் முழுவதும் அவர்களுடைய திட்டங்களுக்கு செலவிடாமல் வைத்திருந்ததைக் கண்டபோது எதற்காக என்று கேள்வி கேட்க தோன்றியது. இருப்பினும் ஒருவேளை எதிர்கால திட்டங்களுக்கென வைக்கப்பட்டிருக்கலாம் என்று நினைத்தேன்.



நேர்காணலில் என்னால் எந்த விதத்தில் அவர்களுக்கு உதவ முடியும் என்று சுருக்கமாக கூறிவிட்டு fieldworkஐ தவிர எந்த அலுவலானாலும் அதற்கு நான் தயார் என்றேன். சென்னையிலுள்ள சேவை மையங்களுள் ஒன்றின் இயக்கத்தை சீராக்க மேலாண்மை அனுபவம் பெற்ற ஒருவர் அவர்களுக்கு தேவைப்படுவதாகவும் என்னால் அதை ஏற்றுக்கொள்ள இயலுமா என்று கேட்டதும் நான் உடனே சம்மதித்தேன். அந்த மையம் நான் குடியிருந்த வீட்டிற்கு மிகவும் அருகில் இருந்ததும் எனக்கு உதவியாக இருந்தது. அடுத்த சில தினங்களில் என்னை அந்த மையத்திற்கு அழைத்து சென்று அங்குள்ள பணியாளர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி மையத்தின் அலுவல்கள், அதன் நோக்கம் அனைத்தையும் சுருக்கமாக கூறிவிட்டு 'You can suggest the ways to improve the functioning of this centre, Sir.' என்றார் அந்த அதிகாரி.



என்னுடைய முதல் பார்வையிலேயே அந்த மையத்தின் செயல்பாடுகளில் திருப்தியில்லாமல் போயிற்று. அதற்கு முக்கிய காரணம் நான் நேற்றைய பதிவில் கூறியிருந்ததுதான். என்னுடைய இருபதாண்டு மேலாண்மை அனுபவத்தில் எதை எப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் என்னுள் உருவாகியிருந்தது. அந்த எண்ணத்தை குழிதோண்டி புதைத்தது போலிருந்தது அந்த இயக்கத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளும். எதிலும் ஒரு professionalism காணப்படவில்லை. குறிப்பாக ஊழியர்களின் நடவடிக்கைகளில் எதிலும் ஒரு தொண்டு நிறுவனத்தின் சாயல் தென்படவில்லை. மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி அலைந்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு சிகிச்சையளிக்க வெளியிலிருந்து வந்த மருத்துவர்களும் அனுபவமற்றவர்களாகவும் தொண்டு மனப்பான்மையில்லாதவர்களாகவும்யி தென்பட்டனர். இதை நான் அங்கு சென்ற முதல் நாளே வெளிப்படையாக எடுத்துரைக்க அங்கிருந்த ஊழியர்களில் சிலர் என்னை ஒருவித குரோதத்துடன் பார்த்தனர். அவர்கள் பார்வையே, 'நீ யார்யா இத சொல்றதுக்கு?' என்பது போலிருந்தது. என்னை அழைத்து சென்றிருந்த அதிகாரிக்கோ அந்த ஊழியர்களுடைய வயதில் பாதி கூட இல்லை.ஆகவே நிச்சயம் அவரால் இவர்களை கட்டுப்படுத்த முடிந்திருக்காது என்று நினைத்தேன். என் மனதில் பட்டதை அடுத்த சில தினங்களில் ஒரு அறிக்கையாகவே தயாரித்து அனுப்பினேன். அதற்கு சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து எவ்வித Responseம் வரவில்லை. இறுதியில் என் நெருங்கிய நண்பர்கள் கூறியபடியேதான் நடந்தது. அந்த நிறுவனத்தில் மேலும் தொடர்ந்து இருக்க விருப்பமில்லாமல் விலகிக்கொண்டேன். இத்தனைக்கும் அந்த சேவை நிறுவனத்துடன் சென்னையின் பல வர்த்தக நிறுவனங்களின் அதிபர்கள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் டிரஸ்டிகளாக இருந்தனர். இந்த நிறுவனத்தை நிறுவிய மற்றும் டிரஸ்டிகளாக இருந்தவர்களின் நோக்கம் வேண்டுமானால் சேவையாக இருக்கலாம். ஆனால் அது அடிமட்டத்தில் உள்ள பணியாளர்கள் உணரவில்லை என்பதே நான் அங்கு பணியாற்றிய ஒரு சில மாதங்களில் நேரில் அனுபவித்தது. அங்கு சேமித்து வைத்திருந்த சில உணவுப் பொருட்கள், மளிகை சாமான்கள் சந்தையில் விற்கும் முதல் தர பொருட்களின் விலையைக் காட்டிலும் அதிகமான விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டிருந்ததையும் கண்டபோது நல்ல உள்ளங்கள் அளிக்கும் நன்கொடைகளை சில புல்லுருவி ஊழியர்கள் கொள்ளையடிப்பதை உணர முடிந்தது. ஆனால் அவர்களை இனம் கண்டு களையெடுக்கக் கூடிய நெஞ்சுரம் கொண்ட அதிகாரிகள் அங்கு இல்லை என்பதுதான் வேதனை.



இதையெல்லாம் கண்டும் காணாமல் இருக்க முடிந்திருந்தால் அங்கு தொடர்ந்து என்னால் இயன்ற சேவையை செய்ய முடிந்திருக்கலாம். ஆனால் என்னால் முடியவில்லை. இதற்கு என்னுடைய அடிமனதில் ஆழமாய் ஊறிப்போன மேலாண்மை ஸ்டைல்தான் காரணம். அதிலிருந்து அத்தனை எளிதில் வெளிவர முடியாது என்பதால்தான் மேற்கொண்டு வந்த பல அழைப்புகளையும் ஏற்க மனமில்லாமல் மறுத்துவிட்டேன். ஒருவேளை எதிர்காலத்தில் என்னுடைய கொள்கைகளுக்கு ஏற்ற வகையில் இயங்கும் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு ஏற்படலாம்.



இத்தகைய அனுபவங்கள் மூத்த அதிகாரிகளாக பணியாற்றிவிட்டு ஓய்வுபெற்ற பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். மாலை நேரங்களில் அருகிலுள்ள பூங்காவில் நடக்க செல்லும்போது சிமெண்ட் பெஞ்சுகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் முதியவர்கள் சிலருடன் பேசிப் பார்த்ததில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சொல்கிறேன். அறுபது வயதுக்குப் பிறகு சட்டென்று தங்களுடைய அணுகுமுறையை மாற்றிக்கொள்ள முடியாமல்தான் பலரும் வீட்டில் அடைந்து கிடக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். நல்ல படிப்பும், ஞானமும், மேலாண்மைத் திறனும் உள்ள பல முதியவர்களும் இந்த நிலையில்தான் உள்ளனர் என்பதையும் உணர முடிந்தது. ஆகவே பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கவே ஒரு வேலைவாய்ப்பு நிறுவனத்தை துவங்கினாலும் தவறில்லை என்றே கருதுகிறேன்.



இப்படி வேறு வழியில்லாமல் வீட்டில் 'சும்மா' இருக்க வேண்டிய சூழலுக்கு தங்களை முன்கூட்டியே எப்படி தயாரித்துக்கொள்வது?



அடுத்த பதிவில் சொல்கிறேன்...



தொடரும்..

09 ஜூன் 2010

பணியிலிருந்து ஓய்வு - சுய தயாரித்தல் 1

.

நாம் அனைவருமே என்றாவது ஒரு நாள் பணியிலிருந்து ஓய்வுபெற வேண்டியவர்கள்தான். அது பலருக்கு சூப்பர் ஆன்யுவேஷன் எனப்படும் அவர்களுடைய 60வது வயதில் ஏற்படுகிறது. சிலருக்கு விருப்ப ஓய்வு வாயிலாக எந்த வயதிலும் ஏற்படலாம். இப்போதெல்லாம் விருப்பஓய்வுக்கு தகுதிபெற தேவையான குறைந்தபட்ச பணிக்காலம் முடிந்ததுமே பலர்,

குறிப்பாக பெண்கள், ஓய்வுபெறுவதில் குறியாயிருக்கின்றனர். நாற்பது வயதை கடந்ததுமே எப்போதுடா விருப்பஓய்வு வாய்ப்பு வரும் என காத்திருக்கும் நடுத்தர வயதைக் கடந்த பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது என்றால் மிகையல்ல.

இதற்கு என்ன காரணம்? அலுவலகத்தையும் குடும்பத்தையும் பாலன்ஸ் செய்ய இயலாமைதான். முன்பெல்லாம் எந்த அலுவலகத்திலும் பெண்களுக்கென பல சலுகைகள் அளிக்கப்பட்டு வந்தன. என்னுடைய வங்கியிலேயே பெண்கள், குறிப்பாக சிறிய குழந்தைகள் உள்ள பெண்கள் பணிக்கு சற்று தாமதமாக வந்தாலோ அல்லது மாலையில் சற்று முன்னராகவே செல்வதற்கு விரும்பினாலோ அவர்களுடைய ஆண் அதிகாரிகள் கண்டுக்கொள்ள மாட்டார்கள். மேலும் குழந்தைக்கோ, கணவருக்கோ ஏன் மாமனார், மாமியாருக்கோ கூட உடல்நலமில்லை என்ற
காரணம் கூறி விடுப்பு எடுத்துக்கொண்டாலும் பெருந்தன்மையாக விட்டுவிடுவார்கள். ஆனால் இப்போது ஆண், பெண் என்ற எந்தவித பாகுபாடும் இன்றி அலுவலகத்தில் 'டார்ச்சர்' செய்யப்படுவது மிக, மிக சாதாரணமாகிவிட்டது. இதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்று அதிகார வர்க்கத்திற்குள் அடியெடுத்து வைத்திருக்கும் பெண்கள் என்றால் தவறில்லை என கருதுகிறேன். அதுவும் நேரடியாக அதிகாரியாக நிறுவனங்களுக்குள் அடியெடுத்து வைக்கும் இளம் பெண்கள் தங்களுக்கு கீழ் பணியாற்றும் பெண்கள் மீதுதான் அதிக வேலைப்பளுவை சுமத்துகிறார்கள், வீண் அதிகாரம் செய்கிறார்கள் என்பதும் உண்மை. இதை என்னுடைய வங்கியிலேயே பல கிளைகளில் நேரில் கண்டிருக்கிறேன். 'இந்த பொண்ணுங்கக்கிட்ட வேலை
செய்யறதுக்கு பாதி சம்பளம் பென்ஷனா கிடைச்சா போறும்னு போயிரலாம்னு தோனுது சார்.' என பல நடுத்தர வயது பெண் குமாஸ்தாக்கள் புலம்புவதை கேட்டிருக்கிறேன்.

ஆனால் இத்தகையோர் உண்மையிலேயே ஓய்வு பெறுவதற்கு தயாராயிருக்கிறார்களா என்று ஆய்வு செய்தால்  இல்லையென்றே தோன்றுகிறது. இத்தகையோரில் பலர் அலுவலக தொல்லையிலிருந்து விடுபட்டால் போறும் வீட்டில் நிம்மதியாக இருக்கலாம் என்று கருதியே விருப்ப ஓய்வில் செல்கின்றனர். ஆனால் சுமார் இருபதாண்டுகாலம் ஒரு அலுவலகத்தில் சுமார் எட்டு மணி நேரம் ஓய்வில்லாமல் பணியாற்றிவிட்டு வீட்டில் ஒருவேலையும் செய்யாமல் 'சும்மா' இருப்பது அத்தனை எளிதல்ல என்பதை உணரும்போது பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என்கின்றன பல ஆய்வுகள். தமிழ் திரைப்படம் ஒன்றில் வடிவேலு 'சும்மாத்தானடா ஒக்காந்திருக்கே.' என்று தன்னை ஏசும் தந்தையிடம் 'சும்மா
உக்காந்திருக்கறது லேசுன்னு நினைச்சியா? நீ ஒரு வேலையும் செய்யாம ஒரு நாள் முழுக்க சும்மா ஒக்காந்திரு பாப்பம்' என்பார். தோற்றவருக்கு பத்து சாட்டையடி என்றும் பந்தயம் வைப்பார். போட்டி துவங்கிய ஒரு மணி நேரத்திலேயே அவருடைய தந்தையின் 'சும்மா' இருத்தலுக்கு சோதனை மேல் சோதனையாக வந்து சேர அவர் தோல்வியை ஒப்புக்கொண்டு சாட்டையடியை பெற்றுக்கொள்வார்.

உண்மைதான். பணியிலிருந்து ஓய்வுபெற்றதும் ஒரு நாள் முழுக்க ஒரு வேலையும் செய்யாமல் 'சும்மா' அமர்ந்திருப்பது அத்தனை எளிதல்ல. இதில் ஆண், பெண் என வேறுபாடு ஒன்றும் இல்லை.

இந்த சூழலில்தான் ஓய்வு பெறும் ஒவ்வொருவரும் அதற்கு தங்களை தயார் செய்துக்கொள்வது அவசியமாகிறது.

சுய தயாரிப்பை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

1. உணர்வுபூர்வமான தயாரிப்பு.

2. பொருளாதார ரீதியான தயாரிப்பு.

சூப்பர் ஆன்யுவேஷன் எனப்படும் தங்களுடைய அறுபதாவது வயதில் ஓய்வு பெறுபவர்கள் ஓரளவுக்கு உணர்வுபூர்வமாக ஓய்வுக்கு தயாராக இருப்பார்கள். அவர்களிலும் சிலர் 'இந்த வேலையிலிருந்து ரிட்டையர் ஆனதும் இன்னொரு வேலைக்கு எப்படியாச்சும் போயிரணும்.  என்னாலல்லாம் வீட்ல சும்மா ஒக்காந்திருக்க முடியாது' என்கிற மனநிலையில் இருப்பதை கண்டிருக்கிறேன். இதில் தவறில்லைதான். ஏன் நானும் கூட அவ்வாறு நினைத்திருக்கிறேன். ஆனால் அது அத்தனை எளிதல்ல என்பது ஓய்வு பெற்ற பிறகுதான் தெரியவரும். குறிப்பாக ஓரளவுக்கு உயர் பதவியிலிருந்து ஓய்வு பெறுபவர்களால் ஓய்வுக்குப் பிறகும் அதே நிலையிலுள்ள பதவியில் அமர்வது என்பது எளிதல்ல. ஊதியத்தைவிட உயர்பதவியில் அனுபவித்திருந்த Perks எனப்படும் கூடுதல் வசதிகள், சலுகைகள், அதாவது ஓட்டுனருடன் கூடிய அலுவலக வாகனம், விமான பயணம் மற்றும் ஐந்து நட்சத்திர விடுதி வாசம்,
வழியனுப்ப, வரவேற்க வரும் ஊழியர் பட்டாளங்கள் இத்யாதி, இத்யாதிகள் தந்து வந்த சுக அனுபவம் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கிடைக்கும் வேலையிலும் கிடைக்க வேண்டும் என்று கருதுபவர்களுக்கு அது இல்லை என்று தெரியவருகிற சூழல்...அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் அதனுடைய இழப்பு தெரியும்.

இந்த கோணத்தில் இனியும் ஒன்றைப் பற்றி இங்கு தெரிவித்தாக வேண்டும். உயர்பதவியிலிருந்து அனுபவம் பெற்ற பலருக்கும் தங்களுடைய அலுவலகம் இப்படித்தான் இருக்க வேண்டும் அல்லது ஒரு அலுவலை இப்படி செய்தால்தான் அதை வெற்றிகரமாக முடித்திட முடியும் என்றெல்லாம் ஒரு கருத்து இருக்கும். அவர்களுடைய பதவி அளித்திருந்த முடிவெடுக்கும் சுதந்திரம், உரிமை அவர்கள் மனதில் நினைத்ததை அப்படியே செயலில் வடிக்கவும் உதவியிருக்கும். ஆனால் பணியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு அவர்கள் இணையும் நிறுவனத்தில் முடிவெடுக்கக் கூடிய உரிமை அவர்களுக்கு இல்லாமல் போனால்  அதுவே அவர்களை உணர்வுபூர்வமாக மிகவும் பாதித்துவிட வாய்ப்புள்ளது.

ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே அதற்கு என்னை உணர்வுபூர்வமாக தயாரித்திருந்த எனக்கே இப்படியொரு அனுபவம் ஏற்பட்டது. அதைப் பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன்.

தொடரும்...

07 ஜூன் 2010

ஆரோக்கியமான சூழலை உருவாக்குவோம்!

கடந்த சில வாரங்களாக சூடுபிடித்து எரிந்துக்கொண்டிருந்த தமிழ் பதிவுலகம் சற்றே தணிந்து சுமூக சூழல் உருவாகியிருப்பதைக் காணும்போது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இது தொடரவேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் ஆவல்.

பொதுவாகவே உணர்ச்சிவசப்படுபவர்களால்தான் சரளமாக, அழகாக பேசவும் எழுதவும் இயலும் என்பார்கள். அது ஓரளவுக்கு உண்மைதான். மனதில் பட்டதை அப்படியே பேச்சில் கொட்டித் தீர்ப்பதால் உடனடி பகை ஏற்பட்டாலும் அது வெகு விரைவில் மறக்கப்பட்டுவிடும். உணர்ச்சி மேலீட்டால் பேசிவிட்டு வருத்தப்படுபவர்கள் நம்மில் பலர். 'ஆத்திரத்தில பேசிட்டேங்க, மன்னிச்சிருங்க. மனசுல வச்சிக்காதீங்க.' என்று நாம் மன்னிப்பு கோரும்போது பாதிக்கப்பட்டவர் உடனே, 'பரவாயில்லீங்க. அத நா அப்பவே மறந்துட்டேன்.' என்பதோடு மனதில் மண்டியிருந்த மனக்கசப்பு மறைந்துபோகும்.

ஆனால் எழுத்து அப்படியல்ல. ஏனெனில் சூடான பேச்சு பேசுவதை கேட்கக்கூடிய தொலைவில் உள்ளவர்களை மட்டுமே பாதிக்கிறது. ஆனால் லட்சக்கணக்கானோர் வாசிக்கக் கூடிய தமிழ்மணம் போன்ற திரட்டியில் இணைக்கப்படுகிற பதிவுகளில் நாம் எழுதுகின்ற சொற்கள் காலாகாலத்திற்கும் ஏட்டில் நிற்கக் கூடியவை. காலத்தாலும் அழித்துவிட முடியாத சுவடாக நின்றுவிடக்கூடியவை. என்னுடைய பதிவில் ஒருவரை இழித்து எழுதியதுடன் நிற்காமல் அதை அனைவரும் படிக்க வேண்டும் என்ற நினைப்பில் திரட்டியிலும் இணைத்துவிடும்போது அது ஒரு தெருச்சண்டைக்கு சமமாகிவிடுகிறது. எந்த ஒரு தெருச்சண்டையும் முதலில் ஒரு சிலருக்கு இடையில்தான் துவங்கும். ஆனால் அது வெகுவிரைவில் பிரச்சினையில் சிறிதளவும் சம்பந்தமில்லாதவர்களையும் ஈர்த்துவிடுவதைக் கண்டிருக்கிறோம்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் பதிவுலகில் எனக்கிருந்த அனுபவத்தில் இத்தகைய சர்ச்சைகள் பெரும்பாலும் சாதிகளை வைத்தே ஏற்பட்டுள்ளன. சாதி, மொழி, இனம், மதம் என்பவற்றால் மனிதர்களை பிரித்து ஆளும் உத்தி பண்டைய தமிழர்களுக்கிடையில் இருந்ததோ என்னவோ. ஆனால் அது இன்றும் நம்மிடையில் தொடர்வதுதான் வேதனை.

நம்முடைய சாதி, மதம், மொழி ஆகியவற்றை நிர்ணயிக்கும் உரிமை நமக்கு வழங்கப்படவில்லை. அது பிறப்பால் நமக்கு வழங்கப்பட்டது. அதில் எவ்வித பெருமையும் இல்லை சிறுமையும் இல்லை. பிறப்பால் உயர்ந்தவன் என்று எவன் ஒருவன் தன்னைப்பற்றி கருதுவானோ அவன் மூடனிலும் மூடன் என்பதே என் கருத்து. அவன் இந்த முன்னேறிய சமுதாயத்தில் இருந்து விலக்கி வைக்கப்படுபவன். அவனுடைய கருத்துக்களும் அப்படியே. அத்தகைய ஒருவனின் எழுத்தால் ஆத்திரப்பட்டு அதே பாணியில் அவனை திருப்பியடிப்பதால் நானும் அவனைப் போன்றே தரம் தாழ்ந்து போய்விடுகிறேன் என்பதுதான் வேதனையான உண்மை.

மதமும் அப்படியே. இறைவன் ஒருவன் இருக்கிறானா இல்லையா என்பதை விவாதிப்பதில் அர்த்தமிருக்கலாம். ஆனால் இறைவன் சொல்கிறான் என்ற பெயரில் இன்று மதங்கள் போதிக்கும் அனைத்துமே பொய், பித்தலாட்டம் என்பது சத்தியமான உண்மை. மதத்தை பரப்ப நினைக்கும் ஒருசில போதகர்களால்தான் அந்தந்த மதங்களுக்கு இழுக்கு என்பதும் என் கருத்து. இளம் சிறார்களை தன்னுடைய பாலியல் உணர்வுகளுக்காக பாழ்படுத்திய கத்தோலிக்க மதக்குருமார்களால் கத்தோலிக்க மதத்திற்கு இழுக்கு. போலி பிஷப், மற்றும் போதகர்களால் CSI Churchக்கு இழுக்கு, நித்தியானந்தா போன்ற போலி சாமியார்களால் இந்து மதத்திற்கு இழுக்கு, அப்பாவி மக்களை தீவிரவாத கொடுமைக்கு ஆளாக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளால் இஸ்லாம் மதத்திற்கு இழுக்கு.... இவ்வாறு கூறிக்கொண்டே போகலாம்.... ஆக மதங்கள் மக்களை இணைப்பதைவிட பிரிப்பதிலேயே குறியாக இருக்கின்றன...

சமீப காலமாக மொழியும் அப்படித்தான். அண்டை நாட்டில் அவதிக்குள்ளாக்கப்படுபவன் வம்சாவழி இந்தியன் என்று காணாமல் அவன் தமிழந்தானே என்ற அலட்சியத்துடன் நடந்துக்கொள்ளும் மத்திய அரசு தமிழனை கொன்று குவித்தவனுடன் கூட்டு சேர்ந்து வணிகம் செய்வதிலேயே குறியாயிருக்கிறது. சிதிலமடைந்து போயிருக்கும் நகரங்களை மீண்டும் கட்டியெழுப்ப இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைப்பது போய்விடுமே என்கிற எண்ணத்தில் நடந்துக்கொண்டிருக்கும் அக்கிரமங்களை கண்டும் காணாமல் ஒப்புக்கு கண்டனங்களை ஒருபுறம் எழுப்பிக்கொண்டே மறுபுறம் கட்டுமான ஒப்பந்தங்களை பெறுவதில் குறியாய் நிற்கிறது.

இதுதான் இன்றைய நிதர்சனம். இதை உணர்ந்துக்கொள்ளாமல் சாதி சண்டையில் இறங்கி ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைப்பதில் யாருக்கு என்ன லாபம்? வாத, பிரதிவாதங்கள் செய்வதற்கு விஷயமா இல்லை?

ஆகவே இன்றைய தமிழ்பதிவுலகில் மீண்டும் ஒரு சுகாதாரமான சூழல் உருவாக என மனதில் பட்ட சிலவற்றை உங்கள் முன் வைக்கிறேன்.

1. சாதீயத்தை பற்றி எழுதுவதை விட்டுவிடுவோம். அதைப் பற்றி எழுதும் பதிவர்களை கண்டுக்கொள்ளாமல் ஒதுக்குவோம்.

2. ஆங்கில பதிவுகளுக்கு இணையாக பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றி எழுதுவோம், அத்தகைய எழுத்துக்களை ஊக்குவிப்போம்.

3. குழுக்கள் சேர்த்து கும்மியடிப்பதை தவிர்த்து நல்ல பதிவுகளை எழுதும் பதிவர்கள், அவர்கள் யாராயிருந்தாலும், பின்னூட்டங்கள் இட்டு அவர்களுடைய எழுத்தை ஊக்குவிப்போம்.

நல்லதொரு ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதில் முனைப்பாயிருப்போம்.

01 ஜூன் 2010

பதிவுலகத்தின் இழிநிலை...

நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் சில ஆண்டுகளுக்கு முன்பு அவ்வப்போது பதிவுலகில் எழுதிக்கொண்டிருந்ததை மீண்டும் முழு நேர  அலுவலாக மேற்கொண்டால் என்ன நினைத்ததுண்டு.

ஆனால் சில, பல காரணங்களுக்காக அது தள்ளிக்கொண்டே போனது. இருந்தும் தமிழ்மணத்தில் தருமி, துளசி, ஜோ, கண்ணன் போன்ற நண்பர்களின் பதிவுகளை மட்டும் வாசிப்பதற்காக தமிழ்மணத்திற்கு அடிக்கடி வருவதுண்டு.

அப்போதெல்லாம் சில பதிவர்களுடைய பதிவுகளுக்கு மட்டும் அபிரிதமான வரவேற்பு இருப்பதை கண்டிருக்கிறேன். அப்படியென்ன எழுதுகின்றனர் என்பதை ஒருசில சமயங்களில் சென்று படித்துவிட்டு வெறுத்துப் போயிருக்கிறேன்.

சாதி ஒழிய வேண்டும் என்று ஒட்டுமொத்த சமுதாயமே அறைகூவல் இட்டுக்கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் அதையே மையக்கருத்தாக வைத்து ஒரு சாதியைச் சார்ந்த பதிவர்களை அவர்களைச் சாராதோர் இழித்து எழுதுவதும் அதற்கு அவர்களுடைய பாஷையிலேயே மறுமொழி அளிப்பதும்....

ஒருமுறை என்னுடைய பெயரை கூகுளில் இட்டு தேடிக்கொண்டிருக்கையில் 'டிபிஆர்.' தலித் சமூகத்தைச் சார்ந்தவரா என்று தெரியவில்லை' என்று என்னைப் பற்றி ஒரு பதிவர் தன்னுடைய பின்னூட்டங்களில் ஒன்றில் அங்கலாய்த்திருப்பதை காண முடிந்தது.

நான் தலித் சமூகத்தைச் சார்ந்தவனா இல்லையா என்பதை தெரிந்துக்கொள்வதில் அவருக்கென்ன அப்படியொரு ஆவலோ தெரியவில்லை. ஒருவேளை நான் தலித்தாக இருக்கும் பட்சத்தில் நான் தலித் கிறிஸ்துவர்களுக்கு இந்து தலித்துகளுக்கென அளிக்கப்படும் அனைத்து சலுகைகளையும் அளிக்க வேண்டும் என்று வாதிட்டதை என் சொந்த லாபத்திற்காகத்தான் என்று திரித்துக் கூறலாம் என்று நினைத்தாரோ என்னவோ!

என்னுடைய வங்கி மேலாளர் அனுபவத்தில் இப்படியொரு கணிப்புக்கு நான் ஆளாகி பலமுறை அவதிப்பட்டதுண்டு. அப்போதெல்லாம் இது காலப்போக்கில் மறைந்துவிடும் என்று நினைத்து ஆறுதலடைந்ததுண்டு. ஆனால் சுமார் முப்பதாண்டு காலங்களுக்கு பிறகும் இது பதிவுலகிலும் தலைவிரித்தாடுவதை பார்த்துவிட்டு எதற்கு இந்த சாக்கடையில் உழல வேண்டும் என்று கருதியே விலகியிருக்கிறேன்.

அதுவும் கடந்த ஒரு வார காலமாக இரண்டு அணிகளாக பிரிந்து பதிவர்கள் ஒருவர் மற்றவர்களை இழித்துரைப்பதையே எவ்வளவு 'அழகாக' செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை காணும் மனம் வலிக்கிறது.

அழகு தமிழை இப்படியெல்லாம் கூட பயன்படுத்த முடியும் என்பதை மிகத் தெளிவாக நிரூபித்துக்கொண்டிருக்கின்றனர் இன்றைய இளம் எழுத்தாளர்கள். வாழ்த்துக்கள் :((((((((((