31 மார்ச் 2010

திருமணமாகாமல் இணைந்து வாழ்வது....

இதைப்பற்றி திரைப்பட நடிகை குஷ்பு கடந்த வருடம் பத்திரிகை ஒன்றில் தெரிவித்திருந்த கருத்துக்களுக்காக அவர் மீது தொடரப்பட்ட பல வழக்குகள் நாட்டின் உச்ச நீதிமன்றத்தை அடைய அவருடைய முறையீட்டின் (petition) மீதான விசாரணையின்போது உச்ச நீதிமன்ற நடுவர்களுள் ஒருவர் தெரிவித்திருந்த கருத்துக்கள் இப்போது சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன. ஆதரவாகவும், எதிர்த்தும் பல்வேறு விதமான கருத்துக்கள் ஹிந்து நாளிதழில் வெளியாகியிருந்ததைக் காண நேர்ந்த எனக்கும் இதைப்பற்றி எழுதினால் என்ன தோன்றியது.

திருமணமாகாமலே இணைந்து வாழும் பெரும்பாலான ஜோடிகள் மும்பை, தில்லி, பெங்களூரு போன்ற பெரும் நகரப்பகுதிகளில்தான் வசிக்கின்றனர் என்றாலும் சமீப காலங்களில் conservative cities என்று கருதப்படும் சென்னை, கொல்கொத்தா, ஹைதராபாத் போன்ற நகரங்களிலும் பரவி வருகிறது என்கிறது வட இந்திய தொலைக்காட்சி ஒன்றின் கருத்துக்கணிப்பு. உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களைப் பற்றிய நிகழ்ச்சி ஒன்றில் அத்தொலைக்காட்சி இத்தகைய உறவுகளில் பல ஆண்டுகளாக எவ்வித பிரச்சினையும் இல்லாமல் இணைந்து வாழும் சில ஜோடிகளையும் பேட்டி கண்டு ஒளிபரப்பியது.

Live in relationship எனப்படும் திருமணமாகாமலே ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது சரியா தவறா என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் எண்ணம் துளியும் எனக்கு இல்லை. அது சம்பந்தப்பட்ட இருவரின் தனிப் பிரச்சினை. ஆகவே அதில் தலையிட்டு கருத்து கூறுவது எனக்கு மட்டுமல்ல எவருக்கும் உரிமையில்லை என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு.

இத்தகைய உறவுகள் நாட்டின் எந்த சட்டத்திற்கும் முரணானதல்ல என்பது உச்ச நீதிமன்றத்தின் பார்வை. குஷ்புவின் முறையீட்டின் மீதான வழக்கின் தீர்ப்பு இனியும் வெளிவரவில்லையென்றாலும் நடுவர் ஒருவரின் 'இதில் என்ன தவறு' என்பது போன்ற வெளிப்படையான வினாக்கள் அதன் எண்ண ஓட்டத்தை மிகத் தெளிவாக பிரதிபலித்து காட்டிவிட்டன என்றுதான் கருதுகிறேன்.

ஆனால் அது ஏன் தேவைப்படுகிறது அல்லது அத்தகைய உறவை ஏன் இன்றைய இளைய தலைமுறை தேவை என கருதுகிறது என்பதை நடுநிலைமையுடன் ஆராய்ந்தால் என்ன என்று தோன்றியது. அதுவும், இத்தகைய உறவை சந்தேகக் கண் கொண்டு நோக்கும் போலித்தனமான இந்திய சூழலில் இந்த உறவு தேவைதானா!

உலகின் எந்த நாட்டில் இது தேவையோ இல்லையோ என்னைக் கேட்டால் நம் நாட்டில்தான் இது மிக, மிக தேவையாகிறது என்பேன்.

சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் ஒரு ஆணையும் பெண்ணையும் இணைய விடாமல் தடுக்கும், வரதட்சணை என்ற பெயரால் ஏழை பெண்களின் வாழ்க்கையை சூரையாட நினைக்கும் கொடூர மாமியார்கள், மாமனார்கள் நிறைந்த இந்திய சமுதாயத்தில் இத்தகைய உறவுகள் நிச்சயம் தேவை. முன்பின் தெரியாத ஒருவனை ஒருத்தியுடன் அல்லது ஒருத்தியை ஒருவனுடன் திருமணம் என்கிற பந்தத்தில் அன்பை தவிர்த்து மற்ற பல்வேறு காரணங்களை முன்நிறுத்தி இணைத்து வைக்கும் போலித்தனமான இந்திய சூழலில் இத்தகைய உறவுகள் நிச்சயம் தேவை.

இருவர் - அவர்கள் ஆணோ, பெண்ணோ, அதுவல்ல முக்கியம் - இணைவதற்கும், நீண்ட காலம் இணைந்து வாழ்வதற்கும் அவர்களுக்கிடையில் எல்லாவற்றிலும் ஒருமித்த கருத்து அவசியம். படிப்பால், சிந்தனைகளால், பழக்க வழக்கங்களால் எல்லாவற்றிற்கும் மேல் சிநேகத்தால், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான, நெஞ்சார்ந்த அன்பால் ஒரு ஆணும் பெண்ணும் இணைந்தால் மட்டுமே இது சாத்தியமாகிறது.


திருமணமானவர்களும் பல்லாண்டுகள் இணைந்து வாழ்வதில்லையா என கேட்கலாம்.

உண்மைதான். ஆனால் எத்தனை தம்பதியர் இணைந்து வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்ற நிர்பந்தம் இல்லாமல் அந்த பந்தத்தில் தொடர்ந்து வாழ்கின்றனர் என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது? 'வேற வழியில்லாமத்தான் உங்களோட குப்பைய கொட்டிக்கிட்டிருக்கேன்', 'எல்லாத்தையும் விட்டெறிஞ்சிட்டு ஒரேயடியா போயிரணும்னுதான் தோனறது... ஆனா போக்கிடம் இல்லையே?' 'பிள்ளைங்களுக்காகத்தான் பாக்கேன்.. இல்லன்னா மனுசன் இருப்பானா உங்கூட?' இதெல்லாம் நாம் அன்றாடம் கேட்கும் புலம்பல்கள், ஏறத்தாழ அனைத்து குடும்பங்களிலும்.

இதுதான் இன்றைய பெரும்பாலான திருமண உறவுகளின் அவலநிலை. அப்படியில்லை, என்னுடைய குடும்பத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்பவர் பொய்யர்கள். எல்லாரும் இல்லையென்றாலும் பெரும்பாலானவர்கள் திருமண உறவை அறுத்தெறிந்துவிட்டு செல்ல முடியாமல் கடமை என்கிற சங்கிலியால் பிணைக்கப்பட்டு ஆயுள் கைதிகளாகிப் போனவர்களே.

இத்தகைய அவல நிலைக்குள்ளாகிப் போன கணவன் - மனைவி என்கிற போலி உறவுகளின் வாரிசுகளான இன்றைய தலைமுறை ஏன் இந்த அவலநிலை என மாற்றி சிந்தித்தன் விளைவே Live-in relationship. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத, ஒத்துப்போகவில்லையா பிரிந்து போய்விடுவோம் என்கிற சுதந்திரமான உறவு! இத்தகைய உறவு தோன்றவே மூல காரணமாயிருந்த நம் நாட்டின் முந்தைய தலைமுறைக்கு இந்த உறவை பழித்துக் கூற எவ்வித உரிமையுமில்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

ஒரு ஆணும் பெண்ணும் இணைவதே பிள்ளைக் குட்டிகளை பெறத்தான் என்கிற முந்தைய தலைமுறையின் சிந்தனையிலிருந்து மாறுபடுவதும் இத்தகைய உறவுகளுக்கு ஒரு காரணம். மனித இணத்தை பெருக்க மட்டுமே ஆண் பெண் உடல் பூர்வமான உறவு என நம்முடைய வேதங்கள் கூறுகின்றன என்று ஆண்-பெண் உறவுக்கு வேதங்களை காரணம் காட்டும் முந்தைய தலைமுறைக்கு இன்றைய தலைமுறையினரின் வாதம் இதுதான்: ஆண்-பெண் இருவரின் பசி, தாகம் போன்ற உடல் பூர்வமான தேவைகளுள் ஒன்றுதான் உடலுறவும். இதற்கு மட்டும் எப்படி மதம் தடையாக இருக்க முடியும்? This is nothing but a simple biological need of two people? What has religion got to do with this? என்பது இவர்களுடைய வாதம். நியாயம்தானே!

ஆனால் இத்தகைய உறவுகளுக்கு நாட்டின் சட்டம் அங்கீகாரம் அளிக்கவில்லையென்பதையும் எத்தனை ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தாலும் சட்டம் இருவரையும் தனித்தனி நபர்களாக மட்டுமே காண்கிறது என்பதையும் இணைந்து வாழும் பெரும்பாலான ஜோடிகள் உணர்ந்துதான் இருக்கின்றனர் என்பது அவர்களுடைய பேட்டியிலிருந்தே தெரிகிறது. இத்தகைய உறவுகளின் மூலமாக பிறந்த குழந்தைகளுக்கு சட்டம் எத்தகைய உரிமையும் வழங்கவில்லையென்பதும் அவர்களுக்கு தெரிந்துதானிருக்கிறது. இருந்தும் இத்தகைய உறவுகளை தொடர்வதிலிருந்தே இதை ஒரு பெரிய பிரச்சினையாகவே அவர்கள் கருதவில்லை என்றுதான் தெரிகிறது. சட்டத்தின் உதவியை நான் நாடாத வரையிலும் அதன் அங்கீகாரம் தேவையில்லையே. இருபது ஆண்டுகள் இணைந்து வாழ்ந்துவிட்டு பிரிகின்ற நிலையிலும் கணவனின் ஊதியத்திலிருந்து ஜீவனாம்சம் கேட்க சட்டத்தின் உதவியை நாடும் உங்களுடைய திருமணம் எங்களுக்கு தேவையில்லை என்கிறது இன்றைய தலைமுறை!

தேவையில்லையென்றால் எளிதாக பிரிந்துவிட முடிகிறது என பல ஜோடிகள் தெரிவித்தாலும் அத்தகைய பிரிவுகள் சுமுகமான சூழலில் நடைபெறுவதில்லை என்பதையும் மறுக்கவில்லை இவர்கள். பெரும்பாலான பிரிவுகள் ஒரு நிரந்தர விரிசலையே ஏற்படுத்திவிடுகிறது என்பதும் தெரிகிறது. 'It is mainly due to people coming together in haste based on so many things but love.' என்கிறது ஒரு ஜோடி.

உண்மைதான், இத்தகைய உறவுகளுக்கு அடிப்படை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பாக இருந்தால் மட்டுமே இது நிலைத்து நிற்க முடியும். அந்த அன்பு இல்லாமல்தானே பல திருமணங்கள் இன்று ஒரு போலியான, வெளியுலகுக்கு மட்டுமே உள்ள உறவுகளாய் முடிந்து நிற்கின்றன?

எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட திருமணம் என்கிற பந்தமே இன்னும் ஸ்திரப்படவில்லை என்பதை எண்ணிப்பார்க்கும்போது நேற்று தோன்றிய இத்தகைய உறவுகளில் அத்தகைய உறுதியான நிலையை எப்படி எதிர்பார்க்க முடியும்?
......

இதற்கு ஆதரவாக, எதிராக கருத்துக்கள் இங்கே

வட இந்திய தொலைக்காட்சி பேட்டி கண்ட ஜோடியின் கருத்துக்கள் இங்கே

17 மார்ச் 2010

என் பதின்ம வயது நினைவுகள்...

பதின்ம வயது நினைவுகள்...

முதலில் என்னை அழைத்த நண்பர் தருமிக்கு நன்றி.

கடந்தகால நிகழ்வுகளை அசைபோடுவதே ஒரு அலாதியான விஷயம். அதுவும் பள்ளிப் பருவத்தில் நடந்தவற்றை முழுமையாக அல்லாவிடினும் அரைகுறையாக, கனவுகளில் வந்து கரைந்துபோகுமே அதுபோல், அசைபோடுவதென்றால் ஆனந்தம்தான்.

நண்பர் தருமியின் மின்னஞ்சலை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

என்னுடைய 'என்னுலகம்' வலைத்தளத்தில் நான் தொடர்ந்து எழுத முடியாமல் போய் சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் மட்டுமல்லாமல் 2007-08 ஆண்டில் தினம் ஒரு பதிவு என தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த பலரும் - நண்பர் தருமி உட்பட - இப்போது மாதம் ஒரு பதிவு எழுதுவதே அதிகம் என சுருங்கிப்போயுள்ளதை நான் உணர்ந்ததால் பணியிலிருந்து ஓய்வு பெற்றும் தொடர்ந்து எழுத மனமில்லாமல் இருந்தேன். அத்துடன் பணி ஓய்வு பெற்று வங்கி அளித்திருந்த குடியிருப்பில் இருந்து மாறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட 
பல அலுவல்கள், வீட்டுக்கு ஒரு தொலைபேசி, இண்டெர்நெட் இணைப்பு, ரேஷன் கார்டு, பால் கார்டு இத்யாதி, இத்யாதி என கடந்த ஒரு மாத காலமாக ஓய்வில்லாத அலைச்சல் வேறு. 

இந்த சூழலில் நண்பர் தருமியின்  கிடைத்ததும் சரி இதையே ஒரு வாய்ப்பாக கருதி மீண்டும் எழுதினால் என்ற ஒரு உந்துதலில்....

சுமார் ஐம்பதாண்டு காலம் பின்னோக்கி சென்று என்னுடைய பதின்மவயதில் நான் எப்படி இருந்தேன் என எண்ணிப் பார்க்கிறேன். 

அப்போது நான் படுபயங்கர வாலாக, சண்டித்தனம் செய்பவனாக இருந்தேன். பள்ளியிலும் நான் குடியிருந்த இடத்திலும் நண்பர்களை விடவும் எதிரிகளே அதிகம் இருந்தனர்.

அப்போது நான் அப்பா, அம்மா நான்கு சகோதரர்கள்,  தாத்தா, அம்மாச்சி (தாயாரின் அம்மா), மாமா, சித்தி, சித்தப்பா,  ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக இருந்ததும் நினைவிருக்கிறது.  

சென்னையில் இப்போதெல்லாம் அப்படியொரு வீட்டைக் காண்பது மிகவும் அரிது. நாங்கள் அன்று வசித்த வீடு இருந்த இடத்தில் இப்போது சுமார் அறுபது குடியிருப்புக்களைக் கொண்ட எட்டு மாடிக் கட்டிடமாக உயர்ந்து நிற்கிறது. 

தெருவில் இருந்து சுமார் நூறடி சந்து..அதன் இறுதியில் இருபுறமும் நீண்ட திண்ணைகள் - இதுதான் தாத்தாவின் நிரந்தர குடியிருப்பு. காற்று, மழை, வெயில், குளிர் எதுவானாலும் திண்ணையில்தான் உறக்கம் - கொண்ட ஓட்டு வீடு. திண்ணையைச் சுற்றிலும்  கூரை சட்டத்திலிருந்து திண்ணை விளிம்பு வரை ஒரு நீண்ட திரை (screen) தொங்கும். தினமும் காலையில் அதை அப்படியே சுருட்டி விட்டத்திலிருந்து ஆணிகளில் மாட்டுவதுதான் குடும்பத்திலிருந்த என்னைப் போன்ற சிறுவர்களின் முதல் வேலை. கூட்டுக் குடும்பத்தில் என்னையும் சேர்த்து எட்டு சிறுவ, சிறுமிகள் - ஒன்றிலிருந்து ஒன்றரை வயது வித்தியாசத்தில். 

வீட்டுக்கு நடுவில் வாணம் பார்த்த நீள்-சதுர வடிவத்தில் முற்றம் - தோராயமாக முப்பது அடி நீளமும் இருபது அடி அகலமுமாய் விசாலமாய் கடப்பா கல் வேயப்பட்ட தரை - அதைச் 

சுற்றிலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியாக அறைகள் - அவற்றை இதற்குத்தான் என்றில்லாமல் இப்போதுள்ள பாஷையில் Multi-purpose அறைகள் என்று படுக்க, படிக்க, சாப்பிட என அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ள. எல்லா குடும்பத்திற்கும் பொதுவாக ஒரு பெரிய ஹால் - இங்குதான் குடும்ப விசேஷங்கள் அனைத்தும் நடைபெறும் - மஞ்சள் நீராட்டிலிருந்து, இரண்டு சித்திமார்களின் நிச்சயதார்த்தங்கள், ஒரு திருமணம் - தாத்தா இறந்துபோன போதும் அவரது சடலமும் இங்குதான் கிடத்தியிருந்தார்கள் - அவர் கிடத்தப்பட்டிருந்த மரப்பெஞ்ச்சை சுற்றிலும் கையில் எரியும் மெழுகு திரியுடன் பாதிரியாருடன் சேர்ந்து அழுதவாறே ஜெபித்தது இதோ இப்போதும் கண் முன்னே விரிகிறது.

முற்றத்தில் குளியல். குளியல் என்றால் ஜலகிரீடைப் போலத்தான். முற்றத்தின் நெட்டில் ஒரு நீண்ட தொட்டி இருந்தது. அதையொட்டியிருந்த கிணற்றில் இருந்து குடும்பத்து ஆண்கள் - அப்பா, சித்தப்பா, இரண்டு மாமன்மார்கள் - நால்வரும் அதிகாலையில் எழுந்ததும் மாறி, மாறி இறைத்து ஊற்றி வைத்துவிடுவார்கள். அதுதான் நாள் முழுவதும் செலவுக்கு. குளியல், துணி துவைத்தல் - இது அம்மா மற்றும் மூன்று சித்திமார்கள் வேலை - எல்லாம். கூட்டுக்குடும்பம் போலவே குளியலும் கூட்டுக் குளியல்தான். என்னுடைய மூத்த சகோதரரைத் தவிர - அப்போது அவருக்கு பதினெட்டு வயதிருக்கும் - மீதமுள்ள சிறுவர்கள் அனைவர் மீதும் அப்பா தொட்டியிலிருந்து தண்ணீரை குவளையில் அள்ளி வீசுவார். முதலில் உடலையும்,  தலையையும் நனைத்துக்கொள்ள - பிறகு இறுதியில் தலைமுதல் கால்வரை உள்ள சோப்பை கழுவ - இதற்கு இரண்டுக்கும் இடைபட்ட வேளை ஒரு நிமிடம் இருக்குமா என்பது சந்தேகமே - அதற்குள் சோப்பை உடல் முழுவதும் தேய்த்து முடித்திருக்க வேண்டும் - கடைக்குட்டிகளுக்கு மட்டும் கடைக்குட்டி சித்தி தலையை தேய்த்து விடுவார் - மொத்த குளியலும் இரண்டு நிமிடத்திற்குள் முடித்துவிட வேண்டும். 

இந்த முற்றம் இதற்கு மட்டுமல்லாமல் எங்களை தண்டிக்கும் சிறைக்கூடமாகவும் பயன்படும். இதில் மிக அதிகமாக சித்திரவதைப் பட்டவன் அடியேந்தான். ஒவ்வொரு சண்டித்தனத்தின் வீரியத்தைப் பொருத்து தண்டனையின் வீரியமும் இருக்கும். மிக அதிக தண்டனை உச்சி வெயிலில் நெருப்பென சுடும் கடப்பா தரையில் கல் உப்பை பரப்பி அதன் மீது முட்டியில் நிற்பது. ஒரு நிமிடம் முட்டியில் நின்றால் இரண்டு முட்டியும் கொப்பளித்துப் போய் ஆறுவதற்கே ஒரு வாரம் ஆகிவிடும். அதற்கிடையில் மீண்டும் ஏதாவது வம்பில் சிக்கிக்கொண்டால் முட்டிப்புண் ஆறியதும் மீண்டும் தண்டனைதான்... 'எதுக்குடா கரியா முட்டாத்தனமா செஞ்ச தப்பையே செஞ்சிட்டு இப்படி வந்து நிக்கே..' என்று அங்கலாய்ப்பார் அம்மாச்சி. 'ஐயோ எம் மவனெ போட்டு இப்படி அப்பா கொடுமை படுத்தறாங்களே.. நீங்க போய் கேட்டா என்ன?' கண்ணீர் வடித்தவாறே அம்மா அழுவது இப்போதும் தெரிகிறது. அப்பா என் தாத்தாவின் மூத்த சகோதரியின் மகன் - மாமாக்கிட்ட போய் சண்டைக்கு நிக்க என்னால முடியாதுடி' என்று ஒதுங்கிவிடுவார். தாத்தாவிடம் என்னுடைய கடைக்குட்டி சித்தியைத் தவிர யாருக்கும் போய் பேசவே துணிவிருக்காது.  தாத்தாவுக்கு தன்னுடைய கடைசி மகள் - என் சித்தி - கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தடுமாறுவதை காணும்போது குடும்பத்து சிறுவர்களுக்கு வேடிக்கையாக இருக்கும். 'நீங்க என்ன ஹெட்மாஸ்டராப்பா? இது வீடா ஸ்கூலான்னே தெரியல.' என்பார் பதினோராம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சித்தி - என்னை விட ஆறு வயது பெரியவர்- என்னுடைய மூத்த அண்ணாவைவிட இரண்டு வயது இளையவர் - தாயும் மகளும் ஒரே நேரத்தில் பிரசவிப்பதும் - பேரன், பேத்தி பிறந்த பிறகும் பிரசவிப்பதும் அந்த காலத்தில் மிகவும் சகஜம் - தாத்தாவால் நேரடியாக பதில் சொல்ல முடியாது. தடுமாறுவார். கடைக்குட்டி என்பதால் அப்படியொரு செல்லம். படிப்பிலும் அவர் படுச்சுட்டி என்பதால் அவர் என்ன கேட்டாலும் உடனே கிடைத்துவிடும். எங்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த தாத்தாவுக்கு சித்தி ஒரு சொம்ம சிப்பனம் என்றால் மிகையல்ல. அவர் பின்னாளில் சென்னையிலேயே ஒரு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு தலைமையாசிரியையாக ஓய்வு பெற்றார். இதைத்தான் விளையும் பயின் முளையிலேயே தெரியும் என்பார்கள் போலிருக்கிறது. 

அந்த வயதில் என்னுடைய சித்திக்கு மஞ்சள் நீராட்டு சம்பவம் நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் நடந்ததுதான் இப்போதும் நினைவில் நிற்கும் முக்கியமான நிகழ்வுகள். 

அப்போதுதான் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் வெளியாகியிருந்தது. நடிகர் திலகமும் (கட்டபொம்மன்) ஜாவர் சீத்தாராமும் (ஜாக்சன் துரை) ஆவேசமாக மோதிக்கொள்ளும் (வார்த்தைகளில்தான்) வசனம் அப்போது மிகவும் பிரசித்தம். சித்திக்கி சடங்கெல்லாம் முடிந்து உறவினர் புடைசூழ ஹாலிலும் முற்றத்திலும் அமர்ந்திருக்க நானும் என்னுடைய இளைய சகோதரரும் - என்னைவிட ஒரு வருடம் இளையவர் - அந்த வசனத்தை பேசி நடித்ததை மறக்க முடியவில்லை. நான் அப்போதெல்லாம் பள்ளி நாடகங்களில் பங்கேற்று நடிப்பவன் என்பதை ஏற்கனவே என்னுடைய கடந்து வந்த பாதை என்கிற தொடரில் 'செல்வராணி டீச்சர்' என்ற பதிவில் எழுதியுள்ளேன்.

தாத்தாவுக்கு இரவு நேர உணவு நாலு இட்டிலி. அதுவும் அவருக்கு பிடித்த ஓட்டலில் இருந்துதான் வாங்க வேண்டும். 'நீ சுடற இட்லிய மனுசன் திம்பானா?' என்று எரிந்து விழுவார் என் அம்மாச்சியிடம்! எங்க வீட்டில் தாத்தா ஆட்சிதான். அம்மாச்சி பாவம் வாயில்லா பூச்சி. இருவருக்கும் இடையில் பத்து வயது வித்தியாசம் இருந்ததும் ஒரு காரணம். தாத்தா இருந்த திசைக்கே திரும்பமாட்டார். தாத்தா வீட்டு வாசலிலிருந்த திண்ணையென்றால் அம்மாச்சி வீட்டு புழக்கடையிலிருந்த சமையல்கட்டில் - ச்சாய்ப்பு என்பார்கள் - இருவரும் அருகருகில் அமர்ந்து பேசி நான் பார்த்த நினைவேயில்லை. 

இரவு ஏழு மணி அடித்ததும், 'எலேய் ஓடு. இப்ப போனாத்தான் முதல் ஈடு இட்டிலி கிடைக்கும்.' என்பார். அவருக்கு இத்தகைய வேலை என்றால் என் பெயர்தான் உடனே நாக்கில் வரும். 'நீதாம்ல நல்லா தின்னு கொழுத்துப் போயிருக்கே. ஓடு' என்பார். 'மொளகு பொடி எண்ணெய் ஊத்தி, மறந்தே பழுவடியும் நீதான் ஓடணும் சொல்லிட்டேன்' என்ற எச்சரிக்கையுடந்தான் அனுப்புவார். வீட்டிலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் இருக்கும் உடுப்பி ஓட்டல் வரை அதையே சொல்லிக்கொண்டு ஓடுவேன். என்னுடன் அதே தெருவில் வசித்த நண்பன் ஒருவனும் தவறாமல் என்னுடன் வருவான் - இவனைப் பற்றியும் எழுதியிருக்கிறேன் 'அப்பளப்பூ அண்ணாசாமிதான் இவன் என்னை விடவும் சற்று மூத்தவன். சில தினங்களில் பேச்சு சுவாரஸ்யத்தில் தாத்தா சொன்னதை மறந்துபோய் எண்ணெய் ஊற்றாத மிளகுப் பொடியுடன் வந்து நிற்பேன். அப்படியே மடித்து என் கையில் திணித்து, 'எத்தனை தரம் சொன்னேன். கரிப்பயலே பழுவடியும் ஓடு.' என்ற ஏச்சுடன் தலையுடன் பலமாய் ஒரு குட்டும் இடியாய் இறங்கும். ''வீட்லருக்கற எண்ணெய ஊத்துனா வாய்க்குள்ள இறங்காதாக்கும். எதுக்குத்தான் இவனெ இப்படி பாடா படுத்தறாகளோ தெரியலயே' என்று அம்மாச்சி அவருக்கு பின்னால் புலம்பியவாறே என்னுடைய தலையை தடவி விட்டதையும் மறக்க முடியவில்லை. அம்மாவால் என்னை ஆறுதலாய அணைத்துக்கொள்ளத்தான் முடியுமே தவிர தாத்தாவை எதிர்த்து கேட்டால் சமயங்களில் அவருடைய கன்னத்தையே பதம் பார்த்துவிடுவார் தாத்தா. அவரைப் பொருத்தவரை மகளும் பேரனும்  ஒன்றுதான். எங்களுக்கு முன்னாலேயே சித்திமார்களை கன்னத்தில் அறைந்ததை பலமுறை பார்த்திருக்கிறேன்.

வாரம் ஒருமுறை சனிக்கிழமைகள் நடக்கும் எண்ணெய் குளியலை மறக்க முடியுமா. தாத்தாவும் பேரன்களும் தலைமுதல் எண்ணெய் தேய்த்து கால் மணி நேரம் அப்படியே அமர்ந்திருந்துவிட்டுத்தான் தலையில் தண்ணீர் ஊற்ற வேண்டும். கண்கள் இரண்டும் திகு, திகுவென எரியும். ஆனால் வாய் திறக்க முடியாது. 

இதே எண்ணெய் குளியல்தான் என்னுடைய பதின்ம வயதின் இறுதியில் தாத்தாவின் உயிரையும் குடித்தது. தாத்தா உடம்புக்கு முடியாமல் படுத்து நாங்கள் பார்த்ததேயில்லை. எந்த குளிரிலும் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளிக்கும் பழக்கம் உள்ளவர் யாரும் எதிர்பாரா விதமாக ஒரு வார ஜுரத்தில் விழுந்தார். அதிலிருந்து முழுவதுமாக விடுபடும் முன்னரே எத்தனை எச்சரித்தும் கேளாமல் அடுத்த ஞாயிறு வழக்கம்போல் எண்ணெய் குளியல் செய்ய அன்றிரவே ஜன்னி ஜூரம் பிடித்து அதிலிருந்து விடுபடாமலே அவ்வார இறுதியிலேயே மரித்துப்போனார் தாத்தா. 

இப்போதும் என்னுடைய அம்மா, சித்தி எல்லாரும் 'நீ இப்ப பாக்கறதுக்கு தாத்தா மாதிரியே இருக்கேடா' என்று கூறும்போது தாத்தா நடு ஹாலில் மரபெஞ்சில் உயிரற்ற உடலாய் கிடந்ததுதான் நினைவில் வருகிறது.. என்னையும்றியாமல் கண்கள் கலங்கிப் போகின்றன....

எத்தனை தண்டித்தாலும் தாத்தா, தாத்தாதான் என்று நினைவு கூர்கிறேன்...

பேத்தியை வாரம் ஒருநாள் வெப் கேமரா மூலம் மட்டுமே பார்க்க கொடுத்து வைத்த இந்த தாத்தா..

இந்த சுகமான நினைவுகளை மீண்டும் ஒருமுறை அசைபோட வைத்த நண்பர் தருமி அவர்களுக்கு மீண்டும் ஒரு நன்றி...